30.1.26

காந்தாரி திரௌபதி யசோதரை ஊர்மிளை யாருக்கு துன்பம் அதிகம்?

சென்ற வாரம் JKC அலுவலகத்தில் முதல் இரவு அனுபவம் எழுதி இருந்தார்.  என்னுடைய அனுபவம் ஒன்று..  

தணிக்கைக் குழு வரப்போகும் நாட்கள் பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஒரு  ATP அனுப்பி விடுவார்கள்.  எந்தெந்த அலுவலகத்துக்கு அவர்கள் செல்வதாக இருக்கிறார்களோ அந்தந்த அலுவலகங்களுக்கு மட்டும் ஒரு காபி தபால் போகும்.  

அப்படி எங்களுக்கும் தபால் வந்தது.  எப்போதுமே அரசுத் துறை என்ன செய்யும் என்றால், 'இருபத்தைந்தாம் தேதி  மாலைக்குள் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும்' என்று கெடு விதித்து அனுப்பும் தபால் நமக்கு ஐந்தாறு நாட்கள் தாண்டி முப்பதாம் தேதிதான் கிடைக்கும்.  சமயங்களில் பதிலளிக்க வேண்டிய தபால் வரும் முன்னர், 'ஏன் பதில் வரவில்லை, உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?'  என்று கேட்டிருக்கும் கேள்வித் தபால் முதலில் வந்து விடும்.  தணிக்கைக்கு என்று சொல்லவில்லை.  அதற்கு பதில் எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள்.  பொதுவான அரசு நடைமுறைத் தபால்கள், அல்லது பழைய தணிக்கைக்கான பதில்கள்.  நாம் சிண்டைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்!  

இதைச் சொல்லும்போது எங்கள் வீட்டில் நடந்ததாக சொல்லப்படும் தாத்தா பற்றிய ஒரு பழைய நிகழ்வு ஞாபகத்துக்கு வருகிறது.  நான் பிறந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன்.  வருடம் தேவையில்லை..  ஹிஹிஹி...  செங்கல்பட்டில் இருந்தோம்.  அங்கே ஒருமுறை தாத்தா வந்திருந்தார்.  அப்போது நடந்த ஒரு கூத்து பற்றி KGG நினைவு வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.  அதாவது, ஏதோ  Food  Allergy ஆகி, வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, அது வீர்யம் பெற, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நிலைமை கொஞ்சம் மோசமாகவே ஊருக்கு தந்தி அடித்திருக்கிறார்கள்.  ஆனால் அன்று அப்புறம் அவர் நார்மலுக்கு திரும்ப, மறுநாள் சரியாகி விட்டார். அதற்கும் இப்போது சரியாகி விட்டார் என்று தந்தி கொடுத்திருக்கிறார்கள்.  இரண்டாவது தந்தி முதலிலும், முதலாவது தந்தி இரண்டாவதாகவும் சென்று சம்பந்தப்பட்ட மக்களைக் குழப்பி இருக்கிறது!

இந்த மாற்றி வரும் மெஸேஜ் சம்பந்தமாக ஒரு ATM சம்பவம் கூட முன்னர் எழுதி இருந்தேன்.  யாருக்காவது நினைவில் இருக்கிறதா?!!

எனவே அரசு இயந்திரத்தின் இந்த சுறுசுறுப்பு இயக்கத்தில், சுமார் 45 நாட்களுக்கு முன்னால் கையெழுத்தான தணிக்கைக் குழுவின் ATP தபால் எங்களுக்கு அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்னர் கிடைத்தது.  சமயங்களில் தணிக்கைக் குழு திடீரென காலை எங்கள் முன் தோன்றி அதிர்ச்சி அளிப்பார்கள்.  நாங்கள் அதிர்ச்சியுடன் பார்க்கும்போது "தபால் வரவில்லை?" என்பார்கள்.  "ரெண்டு மாசத்துக்கு முன்னாலேயே அனுப்பினோமே" என்பார் செயற்கையான கோபம் ப்ளஸ் இகழ்ச்சியுடன் கண்காணிப்பாளர்.  அதில், 'இவ்வளவு கேவலமாவா நீங்கள் வேலை பார்க்கிறீர்கள்?' என்கிற த்வனி இருக்கும்.  உடனே உதவியாளர் "அந்தத் தபால் புக்கை எடுங்க...  சரியா மெயின்டெயின் பண்றீங்கதானே?' என்று கடமையில் கண்ணாகி முதல் பீதி அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்.  என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.  ஒருமுறை  அவர்கள் வந்தபிறகு - சில சமயம் அவர்கள் தணிக்கை முடிந்து கிளம்பும் சமயம் - அவர்கள் குறிப்பிட்ட தபால் வந்து சேர்ந்திருக்கிறது!  அப்போது மட்டும் அவர்கள் அதை பெரிதாக சொல்லாததற்கு காரணம் அது அவர்கள் சார்ந்திருக்கும் தலைமை அலுவலகத்தின் தவறு.

இந்த ஆடிட் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  ஆடிட் என்பது வேலைகளை ஒழுங்கு படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.  சில தவறுகளையும், சில அலட்சியங்களையும், தாமதங்களையும் சுட்டிக்காட்ட, கண்டு பிடித்திருக்கலாம்.  ஆனால் காலப்போக்கில் தணிக்கைக்கு வரும் அலுவலர்களின் மனோபாவம் இருக்கிறது பாருங்கள்..  மக்களுக்காக சட்டமா, சட்டத்துக்காக மக்களா கேள்வி போலதான் இதுவும்.  அவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது.  தணிக்கையில் அரசுக்கு லாபம் தரும் வகையில் ஏதாவது பணவரவு அபராதம் இருக்க வேண்டும்.  குற்றம் கண்டு பிடித்தால்தான் இவர்கள் கொஞ்சமாவது வேலை பார்த்திருக்கிறார்கள் என்று தெரியும்!  பயன்பப்டி, அதற்கான கூடுதல் டி ஏ எல்லாம் கிளெய்ம் செய்வார்களே..   அது மட்டுமல்லாது எப்போதும் வெளியூர்களில் முகாமிடும் தணிக்கைக்குழு,  சரியாக தீபாவளி பொங்கல் சமயங்களில் சென்னையில் முகாம் அமைத்து கொண்டாடுவார்கள்.  எங்கள் பாடுதான் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் என்று இருக்கும்.  வரும் கோபத்தையும் எரிச்சலையும், வெறுப்பையும் கடைசிவரை காட்டவே முடியாது.  செலவுக்கும் ஒன்றும் குறைவிருக்காது.  இதில் விதிவிலக்காளர்கள் உண்டு என்றாலும் மிகச்சொற்பம்.  நம் காசில்தான் மஞ்சள் குளிப்பார்கள்.  கடைசியில் நம்மைப் பற்றியே எழுதி வைத்து விட்டும் செல்வார்கள்!  

ஒரு தணிக்கைக்குழுவின் தலைவர் இருபத்தொரு நாட்கள் தணிக்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ ஹோட்டலிலிருந்து உணவு வாங்கித்தரச் சொல்லி யோசனை சொல்லி சாப்பிட்டார்கள்.  கடைசி நாளுக்கு முதல்நாள் அந்தத் தலைவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்... "இதோ பாருங்க ஸ்ரீ...  நீங்க கோழி வாங்கி கொடுத்தீங்க..  மட்டன் வாங்கிக் கொடுத்தீங்கன்னு எதுவும் எழுதாமல் விடமாட்டோம்..  நீங்கள் ஏதோ அன்பில் வாங்கி கொடுத்தீர்கள்..  புரியுதா?' என்று தூத்துக்குடி பாஷையில் கேட்டார்.  அன்பிலா?  நீங்கள் என்ன என் மாமனா, மச்சானா?!!  நான் சுருக்கமாக என் கடுப்பை வெளிப்படுத்தினேன்..  "இதை நீங்கள் முதல் நாளே சொல்லி இருக்க வேண்டும் ஸார்"

இதில் ஒரு வெளியூர்க்கார குமாஸ்தா ஆபீஸிலேயே தங்கினார்.  இரவு வரை வீட்டுக்கு விடாமல் படுத்துவார்.  தினசரி அவருக்கு வில்ஸ சிகரெட் ஒரு பாக்கெட்டும், குவார்ட்டரும் வாங்கி கொடுக்க வேண்டும்!  அதை அவர்கள் டிமாண்ட் செய்யும் முறை வித்தியாசமாக இருக்கும்.  வெளிப்படையாக இருக்காது!

'நீங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இந்தப் பிரச்னை எல்லாம் வருமா?' என்று கேட்கலாம்.  நிறைய விஷயங்களை வெளியே எழுத முடியாது!  இதுவே அதிகம்!

இரவுப்பணி பற்றி சொல்ல வந்தேன்.  விஷயம் எங்கெங்கோ தாவிக் கொண்டிருக்கிறது - வழக்கம்போல..  இதற்கு மேலேயும் அது தேவைதானா என்று தோன்றுகிறதா?  சரி என்றால் பின்னர் தொடர்கிறேன்!  இன்று இது போதும்!!

=================================================================================================

சென்ற வாரம் ஜவஹர்லால் நேரு பற்றி 'அந்த நாளில்' என்று தலைப்பிட்ட  பகுதியில் பார்த்தோம்.  இந்த 'அந்த நாள்' விகடனில்  வாராவாரம் தொடர் போலவே வெளிவந்திருக்கிறது.  என்னிடமுள்ள கலெக்ஷனில் (பாதி புத்தகம் ஏடு ஏடாக காணாமல் போய்விட, பாக்கி இருக்கும் புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை கரையான் படித்திருக்க, கிடைத்தவரை எடுத்து பகிர்கிறேன்! ) இதில் அடுத்து இருப்பது கப்பலோட்டிய தமிழர் பற்றி...  அது இந்த வாரம்.  

இப்படி சுருக்கமாக இருப்பவையும் இருக்கிறது. இரண்டு மூன்று பக்கங்கள் வருபவையும் இருக்கிறது!

இப்போது எனக்குள் ஒரு கேள்வி..  "ஆமாம், இந்த "அருண்" யாராயிருக்கும்?"


இங்கே மீசையுடன் காணப்படும் வாலிபர், கட்டபொம்மனின் பாஞ்சால நகருக்குப் பக்கத்தில் பரம்பரை வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். 

'நீச்சல், சிலம்பம், குஸ்தி, குதிரை சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டு ஆனந்தமாகக் காலம் தள்ளி வந்திருக்கிறார், சிறுவயதிலே ஆனால் 14-வது வயதில் வாழ்க்கையில் அவருக்கு விரக்தி ஏற்பட்டு சந்நியாசமும் கொண்டார் காரணம், இவர் செய்யாத ஒரு குற்றத்திற்காகத் தகப்பனார் இவரை அடித்து விட்டதுதான். 

தலையை மொட்டை அடித்துக் கொண்டார். கெளபீனத்துடன் கால் நடையாகவே மதுரை நகர் போய்ச் சேர்ந்தார். பெற்றோர் பதறினார்கள்; தேடினார்கள். பயன் இல்லை. சில நாட்களில், சாமியார் வாழ்வு சுலப வாழ்வு அல்ல என்பது வாலிபருக்குத் தெரிந்தது. ஆனால் நேரே வீட்டுக்கு வருவதை கௌரவம் தடுத்தது ! நண்பர் ஒருவருக்கு எழுதினார். அவர் இவரது பெற்றோருக்கு விஷயத்தைச் சொல்லவே, அவர்கள் மதுரை சென்று, பிள்ளையை ஊருக்கு அழைத்துப் போயினர்.

சென்னையில் அத்தையின் வீட்டுக்கு வந்தபோது தான். இவரது வாழ்க்கையி லேயே புரட்சி உண்டாக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. விவேகானந்தரின் மடத்தைச் சேர்ந்த ராம் கிருஷ்ணானந்தரை இவர் சந்தித்தபோது,"நம் நாட்டுக் கைத்தொழிலை வளர்க்க என்ன செய்தாய் நீ ? சுதேசியமே சுகம் தரும்" என்ற உபதேசம் கிடைத்தது.  சம்பவம் வாலிபர் ஊர் திரும்பி குடிசைத் தொழில் வளர் சங்கம்துவக்கினார். 

கஷ்டமான காலத்திலும் ஹாஸ்யமாகப் பேசும் சுபாவம் உடையவர். விடுதலைக் கிளர்ச்சியில் இவர் சிறையில் அடைக்கப் பட்டபோது, 'வார்டர்' கொடுத்த சட்டைகளைப் பார்த்து.இது என்ன ஐயா, கை இல்லாத கைச் சட்டை ! கால் இல்லாத கால் சட்டை!' என்று வர்ணித்து, ஏளனமாகச் சிரித்தார். பக்கத்தி லிருந்த அதிகாரிகளும் சேர்ந்து சிரித்தனர்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களே இவர். படத்தில் பக்கத்தில் ஆம்; சுதேசக் கப்பல் விட்டு, விதேசிகளை நடுங்க வைத்த இருப்பவர் அருமைப் பத்தினியார் மீனாக்ஷி அம்மாள் அவர்கள்.

-"அருண்"

========================================================================================​

வேலைகள் நிறைய இருந்தாலும், ஒருநாள் கிடைத்த அவகாசத்தில் இணையத்தில் AI யுடன் ஒரு பேட்டி நடத்தியபோது...!  பள்ளிப்பருவத்தில் தமிழ் துணைப்பாடத்தில் 'இதை இப்படி என்று இத்தனை வரிகளுக்கு மிகாமல் எழுதி நிறுவுக' என்று 15 மதிப்பெண் கேள்விகள் வருமே..  அப்படியான கேள்விக்கு பதில் சொல்வது போல AI நான் கேட்ட சிறு கேள்விகளுக்கு இபப்டியான புள்ளி விவரக் கட்டுரை எழுதி நிறுவ முயன்றது.  


ஸ்ரீராம்  : காந்தாரி திரௌபதி யசோதரை ஊர்மிளை யாருக்கு துன்பம் அதிகம்?

AI  : ராமாயண மற்றும் மகாபாரத இதிகாசங்களிலும், வரலாற்றிலும் இந்த நான்கு பெண்களுமே பெரும் துயரங்களைச் சந்தித்தவர்கள். ஆனால், யாருடைய துன்பம் அதிகம் என்று பார்க்கும்போது, அது அவர்கள் சந்தித்த இழப்புகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்:
1. காந்தாரி (மிகப் பெரிய இழப்பு):
இவர்கள் நால்வரில் காந்தாரியின் துயரம் மிகவும் கொடூரமானது. தனது 100 பிள்ளைகளையும் போர்க்களத்தில் இழந்து, ஒட்டுமொத்த வம்சமே அழிவதைக் கண்முன்னே பார்த்தவர். 100 மகன்களுக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டிய துரதிர்ஷ்டவசமான தாய் அவர். எனவே, இழப்பின் அடிப்படையில் காந்தாரியின் துயரம் முதன்மையானது.
2. திரௌபதி (மிகப் பெரிய அவமானம்):
திரௌபதியின் துன்பம் 'மானுட அறத்திற்கு' எதிரானது. ஒரு பேரரசியாக இருந்தும், சபையினரின் முன்னிலையில் துகிலுரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். தனது ஐந்து மகன்களையும் (உபபாண்டவர்கள்) போரின் இறுதியில் அஸ்வத்தாமாவால் பறி கொடுத்தார். சமூக மற்றும் மானசீக சித்திரவதையின் அடிப்படையில் திரௌபதியின் துயரம் மிக அதிகம்.
3. ஊர்மிளை (நீண்ட கால தனிமை):
ஊர்மிளாவின் துயரம் 'தனிமை' சார்ந்தது. எந்தத் தவறும் செய்யாமல், திருமணமான சில காலத்திலேயே கணவனை 14 ஆண்டுகள் பிரிந்து, அரண்மனைச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தவர். சீதைக்கு ராமரின் துணை இருந்தது, ஆனால் ஊர்மிளைக்கு யாருமில்லை. மௌனமான தியாகத்தில் ஊர்மிளை முதலிடம் பிடிக்கிறார்.
4. யசோதரை (ஏமாற்றம் மற்றும் தேடல்):
தன்னையும் குழந்தையையும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பிரிந்து சென்ற கணவனை எண்ணி வருந்தியவர். ஒரு இளவரசியாக இருந்துவிட்டு, கணவன் சென்ற பிறகு துறவறக் கோலம் பூண்டு வாழ்ந்தவர். ஆனால், இறுதியில் தனது கணவன் 'புத்தராக' மாறி உலகிற்கே வழிகாட்டியது அவருக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது.
முடிவு:
  • உயிரிழப்பு மற்றும் வம்ச அழிவால் வாடிய காந்தாரிக்கும், சபையில் நேர்ந்த அவமானத்தால் சிதைந்த திரௌபதிக்கும் ஏற்பட்ட துன்பங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுக்கள்.
ஒப்பீட்டளவில், ஊர்மிளை மற்றும் யசோதரையின் துன்பங்கள் 'பிரிவு' சார்ந்தது. ஆனால் காந்தாரி மற்றும் திரௌபதியின் துன்பங்கள் 'மரணம் மற்றும் அவமானம்' சார்ந்தது என்பதால், காந்தாரி மற்றும் திரௌபதியின் நிலையே அதிகக் கொடுமையானது எனக் கருதலாம்.
ஸ்ரீராம்  :  கணவர் புத்தராக மாறி உலகிற்கு வழிகாட்டியது யசோதனைக்கு ஆறுதலாக அமைந்தது என்பது என்ன நிச்சயம் யார் அப்படி சொல்லி இருப்பது?!
AI   :  பௌத்த இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின்படி, யசோதரைக்கு அது ஆறுதலாக அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் அவரது பிற்காலச் செயல்களிலேயே காணப்படுகின்றன. இது குறித்துப் பின்வரும் குறிப்புகள் முக்கியமானவை:
1. பாலி இலக்கியங்கள் (Therigatha):
பௌத்த நூல்களான 'தேரிகாதா' மற்றும் 'அபதானா' ஆகியவற்றில், யசோதரை (பௌத்தத்தில் 'பத்தா கச்சானா' என்று அறியப்படுகிறார்) பிற்காலத்தில் ஒரு பிட்சுணியாக (துறவி) மாறி 'அர்ஹந்த்' நிலையை (முழுமையான ஞானம்) அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஒருவேளை தன் கணவர் மீது வெறுப்பிலோ அல்லது தீராத துயரத்திலோ இருந்திருந்தால், அவர் காட்டிய அதே வழியில் பயணித்துத் துறவறம் பூண்டிருக்க வாய்ப்பில்லை.
2. புத்தரும் யசோதரையும் சந்திப்பு:
புத்தர் ஞானம் பெற்ற பிறகு கபிலவஸ்துவுக்குத் திரும்பியபோது, யசோதரை அவரைச் சந்திக்க மறுக்கவில்லை. மாறாக, புத்தர் அவரிடம் வந்து பேசியபோது, யசோதரை அவரது காலடியில் விழுந்து வணங்கினார். அப்போது புத்தர், "யசோதரை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, பல பிறவிகளாக எனது தேடலுக்குத் துணையாக இருந்தவர்" என்று அவரைப் பாராட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.
3. யசோதரையின் துறவற வாழ்க்கை:
யசோதரை வெறும் துறவியாக மட்டும் மாறவில்லை, பெண்களுக்கான பௌத்த சங்கத்தில் ஒரு முக்கியத் தலைவராகவும் திகழ்ந்தார். அவர் தனது கணவர் கண்டறிந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் தனது துயரங்களிலிருந்து விடுபட்டதாகவே பௌத்த சரித்திரங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராம்  :  யார் அப்படிச் சொன்னது?
  • பௌத்த அறிஞர்கள்: அஸ்வகோஷர் எழுதிய 'புத்தசரிதம்' போன்ற காவியங்கள் மற்றும் நவீன கால பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் (எ.கா. கரேன் ஆம்ஸ்ட்ராங்), யசோதரை தனது கணவரின் ஞானம் மூலம் தனது தனிப்பட்ட துயரத்தைக் கடந்தார் என்று குறிப்பிடுகின்றனர்.
  • அசோகவதனா: போன்ற நூல்களும் யசோதரை மற்றும் ராகுலனின் ஆன்மீக விடுதலையை ஒரு வெற்றியாகவே சித்திரிக்கின்றன.
ஸ்ரீராம்  :   நிச்சயமாகச் சொல்ல முடியுமா?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இது ஒருவரின் 'மனநிலை' சார்ந்தது. ஒரு மனைவியாக அவருக்குப் பிரிவுத் துயரம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் புத்தரின் சீடராக மாறியது, அவர் தனது கணவரின் செயலில் இருந்த 'பெரிய நோக்கத்தைப்' புரிந்துகொண்டார் என்பதையே காட்டுகிறது.
எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளவோ அல்லது வாழ்நாள் முழுவதும் தன் கணவனைச் சபித்துக்கொண்டோ இருக்கவில்லை; மாறாக, அவர் காட்டிய வழியிலேயே சென்று அமைதி பெற்றார் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் வரலாற்றுப் பதிவு.
மேற்கோள்கள்:
  1. தேரிகாதா - பௌத்த பெண்களின் பாடல்கள்
  2. பௌத்த அகராதி - யசோதரை பற்றிய குறிப்புகள்
  3. புத்தரின் கபிலவஸ்து வருகை - ஜாதகக் கதைகள்
  4. புத்தசரிதம் - அஸ்வகோஷர்
  5. ========================================================================================
  6. 2016, பேஸ்புக்கில் பகிர்ந்ததை இங்கு பகிர்கிறேன்.  தளத்தில் பகிர்ந்தேனா என்று நினைவில்லை.  இருந்தாலும் சுவாரஸ்யமான, அதிசயிக்கத்தக்க, நெகிழ்வூட்டும் சம்பவம்.  உங்களுக்கும் நினைவிருக்கிறதா?
அதிசயம் ஆனால் உண்மை.
கர்நாடகாவில் ஒரு தாய்ப் பசு தன் கன்றுடன் ஜன சந்தடிமிக்க அந்த பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த சமயம் KSRTC பஸ் ஒன்று சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த கன்றின் மீது மோதியதில் பசு கன்று பேருந்தின் முன் அடிப்பக்கத்தில் சிக்கி இறந்துவிட்டது
அந்த கன்றை அப்புறப்படுத்தி விட்டனர்.
ஆனால் அன்று முதல் அந்த தாய்ப்பசு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட பஸ் வரும்போதெல்லாம் இன்னும் தன் கன்று அந்த பஸ்ஸின் அடியில் இருப்பதாக நினைத்து சுற்றி சுற்றி வருவதும் அந்த பஸ்ஸின் முன் அடிப்பக்கத்தில் தேடுவதுமாக இருக்கிறது.
KSRTC அதிகாரிகள் பஸ்ஸின் நிறத்தை மாற்றி பார்த்தனர்', சில நாட்கள் சர்வீஸ் ரத்து செய்தனர். ஒன்றும் பலனளிக்கவில்லை.
இன்றுவரை அந்த குறிப்பிட்ட பஸ் வரும் போது அந்த தாய்ப் பசுவின் தேடல் தொடர்கிறது .

தாய்மையின் மகத்துமே மெய்சிலிர்க்க வைக்கிறது.
==============================
வாட்ஸப்பில் வந்ததை அப்படியே பகிர்கிறேன். அந்தத் தாயைப் பார்க்க மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.  - 5-1-2016


========================================================================================

இப்போதும் இப்படி வழிகாட்டுன்றனவா என்று தெரியவில்லை!  சிம்பன்ஸி இருக்கும் காடுகள் எங்கே இருக்கு AI?!!
வனத்தில் வழிதவறினால் சிம்பன்ஸி வழிகாட்டும் :
அடர்ந்த காட்டுக்குள் வழி தவறிவிட்டால், வழியைக் கண்டுபிடிக்க சிம்பன்ஸியிடம் உதவி கோரலாம். சிம்பன்ஸிகள் எளிதில் வழியைக் கண்டுபிடிப்பதுடன், உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன் ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக முயன்று அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றும் முடியவில்லை. ஆனால், சிம்பன்ஸிகள் இருந்த இடத்தில் இருந்த மனிதர், அவற்றின் உதவியை சைகை மூலம் கோரவே, அவை உணவு இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்துக் கொடுத்தன.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் அண்ணா ராபர்ட்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வு முடிவு மொழிகள் எப்படி உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
ஸ்டெர்லிங் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா ஜான் விக் கூறுகையில், இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்சிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டின. தற்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத் திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது” என்றார் அவர்.
[தி இந்து] 2014

128 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

    அலுவலக அனுபவங்கள்..... இப்படித்தான். அப்படி வருபவர்களுடன் மல்லுக்கட்டுவது பெரிய சவால்.

    மற்ற விஷயங்களும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். வணக்கம். ஆடிட்களில் பெரும்பாலும் நான் மெயினாக உட்கார வேண்டி இருக்கும். அது ஒரு பெரிய தொல்லை. உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா?

      நீக்கு
  2. இன்றைய பதிவு வெகு சுவாரசியம். ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.

    வ.உ.சி படத்தைப் போட்டுவிட்டு பாஞ்சாலங்குறிச்சினு சொல்றாங்களேன்னு தோன்றியது, கடைசியில் பெயரைப் பார்க்கும்வரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... பதிவை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  3. ஆடிட். வெங்கட் நாகராஜ் பாஷையில் தேவையில்லாத ஆணி.

    எங்கள் ஃபேக்டரியிலும், அரசு அலுவலர்கள் பல்வேறு ஆடிட்டுக்கு (தனியார் தொழிற்சாலை), காசு என்னவோ நல்லா வாங்கிக்கிட்டு, அதிகாரத் த்வனியுடன் சத்தம் போடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். தொழிலாளர் பிரச்சனை வரும்போது, பத்திரிகை நிறுபர்கள் கவர் வாங்கிக்கொண்டு செய்தியை மேனேஜ்மென்டுக்குப் பாதகமில்லாமல் எழுதும் கூத்தும் நடந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் அலுவலகங்களுக்கு அரசு அலுவலர்கள் ஆடிட்டுக்கு வருவார்களா? எப்படி? ஆடிட் என்பதே ஒரு பெரிய தொல்லை! உங்கள் தோளுக்கு அருகில், உங்கள் தோளில் முகம் வைத்து இன்னொருவர் நீங்கள் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அந்த வேலையை எப்படி செய்வது!!

      நீக்கு
    2. ஃபேக்டரி சம்பந்தமான, Safety அலுவலர்கள், கெமிக்கல் இன்ஸ்பெக்‌ஷன், கழிவுகள் ஆற்றில் கலக்கிறதா என்பதற்கான அலுவலர்கள் எனப் பல நடைமுறைகள்.

      நீக்கு
    3. அது மாதிரி அனுபவங்களை - எழுதக் கூடியவற்றை - எழுதி அனுப்பினால் வெளியிடலாமே   JKC ஸார் பகிர்ந்த 'ஹையோ..  அப்புறம் என்ன ஆச்சு'விலும் யாரும் எதுவும் அனுப்பவில்லை.  'அ அ' விலும் யாரும் எதுவும் அனுப்பப்வில்லை.  எனவே நானே ஒன்று இட்டு நிரப்பினேன்!!

      நீக்கு
    4. பழைய பல்லவிதான். நவம்பரிலிருந்து ரொம்பவே பயணங்கள். அப்புறம் நான் இழுத்துவிட்டுக்கொண்ட யோகா, நீச்சல் என காலை முழுவதும் ஓடிவிடுகிறது. மதியம் மற்ற வேலைகள். நான்குமுறை கணிணியில் உட்கார்ந்தும் சனி, ஞாயிறு பகுதிக்கு எழுதலை.

      விடாமல் செல்லும் தில்லி வெங்கட், துரை செல்வராஜு சார், என் கீதா ரங்கன் அக்கா, கோமதி அரசு மேடம், கீதா சாம்பசிவம் மேடம் தளங்களுக்கே உடனுக்குடன் செல்வதில்லை.

      எழுத சில விஷயங்கள் இருக்கு. எழுதணும், ஆனால் முன்னுரிமை, சனி ஞாயிறுக்கு பத்து பதிவுகளாவது எழுதி அனுப்பிடணும். இதோ இப்போது மதுரை பிறகு திருப்புல்லாணி, இராமேஸ்வரம், பிறகு ஶ்ரீரங்கம் என ஐந்து நாட்கள் பயணம்.

      நீக்கு
    5. நல்ல பிஸியாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நேரம் அமைத்துக் கொள்ளுதல் சிரமம்தான்.  நானும் வேறு வகையில் அவதியுறுகிறேன்.

      நீக்கு
  4. எனக்கென்னவோ, காந்தாரி, ஊர்மிளை இவர்கள் துன்பம்தான் முதன்மையாக இருக்கு. ஊர்மிளைக்கு, கணவன் லட்சுமணன் கடமையை முன்னிட்டு இராமனுடன் செல்வதால் ஏற்படும் தனிமை, பாதிப்பு. பிற்காலத்தில், அதாவது கஷ்டங்கள் முடிந்தபின் தீர்வு வருகிறது. ஆனால் பெற்ற பிள்ளைகள் தாய் சொல்லைக் கேட்காமல் அநீதிகளில் ஈடுபட்டு, அதனால் அவர்கள் வாழ்வில் அழிவை நோக்கிச் செல்வது, கணவனின் தவறுகள் இவற்றைத் தன் வாழ்வில் சுமந்த சுமைதாங்கியான காந்தாரியின் கஷ்டமே பெரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ்...  உங்கள் தரப்பு வாதத்திலும் நியாயம் இருக்கிறது.

      நீக்கு
  5. வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும், உழைக்கத் துடிக்கும், உழைக்கும் கணவனால் வீட்டைக் கவனிக்க இயலாது. குழந்தைகளின் மீதான கடமைகளில் கணவனை முழுவதும் கவனிக்க மனைவியால் இயலாது, ஏமாற்றத் தருணங்கள் நிறைய இருக்கும். பிற்காலத்தில் கணவனைவிட குழந்தைகள் பக்கமே மனைவி சாய்வாள். இதெல்லாம் வாழ்வின் நடைமுறை. அதுபோல துறவறம் என்பது இறைவனின் கட்டளையாக மனதில் தோன்றுவதால் அந்தச் சுமை மனைவியிடம் விடியும். இவை வாழ்வின் நிதர்சனங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவியின் கர்மவினையும் அதற்கு காரணம் என்று சொல்வீர்களோ...

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனை பண்ணிவிட்டு, பதிவைப் பற்றிய கருத்தை எழுத ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதைப் பார்த்தால், சாமி கும்பிட்டுவிட்டு (அதாவது விசேஷ நாட்களில் வீட்டில் குடும்பத்தோடு), உடனே பிரசாதம் இறைவனுக்குப் படைத்த பட்சணங்கள் சாப்பிட்ட பிறகுதான் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வது நினைவுக்கு வருது. காபி சாப்பிடச் சென்றிருப்பாரோ கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    3. // காபி சாப்பிடச் சென்றிருப்பாரோ கமலா ஹரிஹரன் மேடம்? //

      இன்னும் பால் குக்கர் விசில் சத்தம் வரவில்லையே...  கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார் போல..!!

      நீக்கு
    4. /கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார் போல..!!/

      ஹா ஹா ஹா சரியாக சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள். உங்களுக்கு காமிரா கண்கள் போலும்.! காலை காபியெல்லாம் எட்டுக்கு பின்னர்தான். பின் எப்படி பால் குக்கர் சத்தம் அங்கு எட்டும்.:))

      நீக்கு
    5. ஹா. ஹா..  ஹா..  நிஜமாவா?  கோலம்தான் போட்டுக் கொண்டிருந்தீர்களா?  பார்றா...   ஸ்ரீராம் சஞ்சயன் மாதிரி ஆயிட்டேன்!

      நீக்கு
    6. வணக்கம் நெல்லைத்தமிழர சகோதரரே

      /பிரார்த்தனை பண்ணிவிட்டு, பதிவைப் பற்றிய கருத்தை எழுத ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதைப் பார்த்தால்..... /

      ஹா ஹா ஹா. எழுந்தவுடன் முதலில் பதிவுக்கு வருவது "உள்ளேன் ஐயா" ரகம். பின் வீட்டின் கடமைகளையும், தேவைகளையும் பார்த்தபடி, பதிவுக்கு வருவது "நான் இருக்கிறேன் ஐயா" ரகம். சாவகாசமாக மாலை வரை பதிவுகளுக்கு வருவது" நான் மறக்கவில்லை..எப்போதும் இங்குதான் இருப்பேன்" என்ற ரகம். "அப்படியும் சில பொழுதுகள் வராமல், வர முடியாமல் போவது நான் வலுக்கட்டாயமாக விடுமுறைகள் எடுத்து விட்ட ரகம்."

      நா(னே)மே இப்படி ரகவாரியாக தினமும் உலா வரும் போது, புராண பெண்மணிகள் (காந்தாரி, ஊர்மிளா) அதிலும் கட்டுப்பாடுகள் கைகளை கட்டிய நிலையிலிருக்கும் சூழல்களில் சிக்கிக் கொண்ட பெண்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களின் பெருமைகளை அந்தந்த நாட்டு மக்களே உணர்வார்கள்.( பதிவை சுமாராக, இதுவரை ஒரு மேலோட்டமாக படித்துள்ளேன் என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். :)) இப்போது கைகளை கட்டியிருக்கும் ஃபோனை விடுவித்து விட்டு பால் காய்ச்சப் போகிறேன். நன்கு படித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. /பார்றா... ஸ்ரீராம் சஞ்சயன் மாதிரி ஆயிட்டேன்!/

      ஹா ஹா ஹா. வாழ்த்துகள்.

      நீக்கு
    8. எட்டு மணிக்குத் தான் முதல் காஃபியா? கடவுளே! இந்தியாவில் இருந்தால் எங்களுக்கு இரண்டாவது காஃபி நேரம் அது. :)))) இங்கேயும் நான் ஐந்தரைக்குள் காஃபி வேலையை முடித்துக்கொண்டு சமையலறையை விட்டு வெளியேறிடுவேன். பின்னர் ஏழு, ஏழேகாலுக்கு மதிய உணவுக்கான ஆயத்தங்கள். காய் நறுக்கிக் கொண்டு தக்காளியைக் கொதிக்க வைத்து எடுத்து வைத்துவிட்டு அரிசியை ஊறப் போட்டு வைச்சுட்டு வந்துடுவேன். பின்னர் கணினியில். அதன் பின்னர் பத்து/பத்தேகாலுக்குப் போய்ச் சமைத்துக் கொள்வேன். பத்தரை/பத்தே முக்காலுக்கு முடிஞ்சதும் உடனடியாக உம்மாச்சியிடம் சொல்லிட்டுச் சாப்பாடு. பின்னர் பதினொன்றரைக்கு இங்கே அறைக்குள் வந்தால் மூன்றரை/நான்கு வரை கணினி. நடுவில் ஒரு ஒரு மணி அரைமணி படுத்துப்பேன். நான்கு மணிக்கு ஒரு அரை தம்பளர் காஃபி குடித்ததும் மீண்டும் அறைக்கு வந்துட்டேனானால் ஆறரை வரை இங்கே. ஆறரைக்குப் பெண்ணிடம் பேசிட்டு சர்க்கரைக்கான மாத்திரை எடுத்துக்கொண்டேனானால் அன்றைய இரவுக்கு என்ன உணவோ அது. தோசை எனில் இரு தோசைகள் வார்த்துப்பேன். சப்பாத்தி எனில் இரு சப்பாத்திகள் மருமகள் இட்டுக் கொடுக்கப் போட்டு எடுத்துப்பேன். வேறே உப்புமா, பொங்கல் எனில் பண்ணி வைச்சுடுவா. எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு வந்தால் எட்டு/எட்டரை வரை கணினியில் உட்கார்ந்துட்டுப் பின்னர் படுக்கை. மறுநாள் வழக்கம் போல் நாலரைக்கு எழுந்துப்பேன். இது தினசரி நடைமுறை. ராத்திரி நல்ல தூக்கம் எல்லாம் இருக்காது. என்றாலும் முழிச்சுண்டேயானும் படுத்திருப்பேன்.

      நீக்கு
    9. வாங்க கீதா அக்கா...  இந்த நடைமுறை அங்கும் தொடர்கிறதா?  நான் கூட பெரும்பாலும் ஐந்து ஐந்தேகாலுக்கு முதல் காபி.  அப்புறம் பதினோரு மணிவாக்கில் ஒரு டீ.  காலை எட்டரை மணி சுமாருக்கு மூன்று தோசை, மதியம் ஒரு மணிக்கு சாப்பாடு.  மூன்றரைக்கு காப்பி.  ஏழு மணிக்கு டின்னர்.

      நீக்கு
    10. அட... உங்கள் எல்லோரையும் அலார்ம் க்ளாக் எழுப்புவதில்லையா? காபி ஆசைதான் அலார்மா? எனக்கு 4 மணி அலார்ம், 4 3/4க்கு எழுந்தவுடன் கொஞ்சம் சூடா 400 மிலி தண்ணீர். அப்புறம் என் வேலைகள் எல்லாம் முடிந்து குளித்துவிட்டுவர 11 மணி. அதற்குப் பிறகு, சில நேரங்களில் 12க்குப் பிறகுதான் உணவே.

      நீக்கு
    11. அலார்ம் வைத்துக் கொண்டாலும் அது அடிபபதற்கு முன்னாலேயே விழிப்பு வந்து விடும்.  எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டிருப்பதுண்டு.  சமயங்களில் ஆஃப் செய்துவிட்டு எழுந்து விடுவதும் உண்டு.

      நீக்கு
  7. திரௌபதி துரியோதன்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தது உண்மை நிகழ்வா என்பதை கீதா சாம்பசிவம் மேடம் வந்து எழுதினால், நமக்கு நடந்த நிகழ்வின் காரணம் புரியும். போரில் சூழ்ச்சியால் மகன்களை இழப்பது சாதாரண நிகழ்வு. அதைப் பெரிய துன்பம் எனச் சொல்ல இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தரின் மகன் ராகுலன்  என்ன ஆனான் என்றும் ஒரு கேள்வி கேட்டு அதற்கும் ஒரு கட்டுரை கிடைக்கப் பெற்றேன்.  ஆனால் அதை சேமிக்க விட்டு விட்டேன் போல!

      நீக்கு
    2. அது உண்மை நிகழ்வா என்று கீதா அக்கா மட்டும் எப்படி சொல்ல முடியும்?  துரியோ, திரௌபதியோ கனவிலாவது வந்து சொன்னால்தான் உண்டு!  

      நீக்கு
    3. அவங்க நிறைய புத்தகங்கள் மகாபாரதம் சம்பந்தமா படிச்சருப்பாங்க இல்லையா?

      நீக்கு
    4. //https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section49.html//
      இது கிஷாரி மோஹன் கங்குலியால் எழுதப்பட்ட முழு மஹாபாரத்தையும் திரு அரசன் அவர்கள் மொழிபெயர்த்து எழுதி இருப்பதிலிருந்து எடுக்கப்பட்டது. துரியோதனனைச் சூதாட்டம் ஆட வேண்டாம் என்று திருதராஷ்டிரன் கேட்டுக் கொள்கையில் பதிலளித்த துரியோதனன், பாண்டவரின் புது மாளிகையில் தான் பட்ட அவமானங்களைச் சொல்லும்போது அர்ஜுனன், பீமன், சஹாதேவன் ஆகியோர் தன்னைப் பார்த்துச் சிரிக்கையில் அங்கே தன் சேடிப்பெண்டிருடன் வந்த திரௌபதியும் சிரித்ததையும் தன் மனம் வேதனைப் பட்டதையும் தகப்பனிடம் சொல்லுகிறான்.

      நீக்கு
    5. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் அப்போது நானும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.  திரௌபதி சிரித்தாள் என்று நானும் படித்திருக்கிறேன்தான்.  இந்த நுண்ணிய விவரங்கள் எல்லாம் எந்த அளவு உண்மையாக இருக்கும் என்று தோன்றும்!

      நீக்கு
    6. உண்மையில் திருதராஷ்டிரன் தன் மகனுக்கு எத்தனையோ நல்லுபதேசங்கள் செய்தும் அவன் கேட்காமல் போனதால் கடைசியில் பெற்ற மகனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால் அவன் பக்கம் இருக்கிறான்/இருந்தான் என்பதே உண்மை. பீஷ்மரும் செஞ்சோற்றுக்கடனுக்காக இருந்தார் எனலாம். கும்பகோணம் பதிப்பிலும் நகுல,சஹாதேவர்கள் சிரித்தாலும் துரியோதனனைக் கட்டி அணைத்து ஆசுவாசம் செய்து சரியான வாயிலைக் காட்டிச் செல்ல உதவினார்கள் என்றும், பீமனும் அவ்வாறே செய்ததாகவும் குறிப்பிடுகிறது. எல்லோருமே (யுதிஷ்டிரர் தவிர்த்து) சிரித்தது என்னமோ உண்மை தான். திரௌபதியும் சேர்ந்து தான். துரியோதனனுக்கு அதுத் தாங்கொணா அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாளிகையை அலங்கரித்த ரத்தினங்கலும், மற்ற ஆபரண வகைகளும் துரியோதனன் அதுவரை கண்டிராத மாதிரி இருந்திருக்கின்றன. அதனாலும் அவன் அசூயை அதிகம் ஆகி இருந்திருக்கிறது.

      நீக்கு
    7. ​நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  8. கன்றோ.. குரங்குக் குட்டியோ இல்லை வேறெதுவோ. அதன் தாயின் தவிப்பு நம் மனதை நெகிழ்த்திவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடங்கள் கழிந்தும் அதன் தவிப்பு, என்ன நிறம் மாற்றினாலும் அந்த ஊர்தியைக் கண்டு கொள்ளும் அதன் திறமை...  கடவுளே..

      நீக்கு
  9. காட்டில் நாம் வழி தவறப் போவதில்லை. நாட்டில், நம் வாழ்க்கையில் தவறும்கோது நமக்கு வழிகாட்டி நல்ல பாதையில் திருப்பிய சிம்பன்சிகளை நினைவுகூர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து.  மருந்து சாப்பிடும்போதுதான் நினைவுகூரக்கூடாது!!

      நீக்கு
  10. முதல் பகுதி - எனக்கு அனுபவம் இல்லையே!

    அனுபவம் கிடைத்திருக்க நான் 1987ல் தில்லிக்குச் சென்றிருந்திருக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்த ஆடிட் தொல்லை படுத்தியிருக்கலாம்! எல்லாமே லாம் தான். திசை மாறிய வாழ்க்கை. முடிவெடுக்கத் தவறவிட்ட தருணம். இப்போதும் அது என்னை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    இப்போது நம்ம வீட்டவர் அலுவலகத்திலும் ஆடிட் பீரியட். ஆனால் விஷயம் எதுவும் வராது என்பதால் சொல்ல முடியவில்லை.

    ஆனா, உங்க அனுபவங்கள் தெரியுமே. எவ்வளவு கஷ்டமான நேரங்கள் என்று...டென்ஷன். முன்னர் மறைமுகமாகப் பதிவில் சொல்லியிருக்கீங்க.....அதில் நடக்கும் சில விஷயங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  உங்கள் வருத்தம் புரிகிறது.  விடுங்கள்..  

      இப்போ உங்கள் பதிவுகளில் ஓரிருவர் வந்து வரிவரியாக ஆராய்ந்து இங்கு ஸ்பேஸ் அதிகம், இந்த வார்த்தை தப்பு, இந்தக் அக்கருத்து குற்றம் என்றெல்லாம் சொன்னால் எப்படி இருக்கும்!!!  நமக்கு வரும் கமெண்ட்டுகள் வேறு.  நான் சொல்வது உங்கள் எழுத்துகளை தணிக்கை செய்வது...  பாருங்க ஜனநாயகன் படாதபாடு படுகிறது!

      அந்த உங்கள் ஐடி என்னாச்சு?!!

      நீக்கு
    2. ஹாஹா புரியுது ஸ்ரீராம். தணிக்கை பற்றி...நேரடி அனுபவம் இல்லைனாலும், நம்ம வீட்டிலும் பணிபுரிந்தவர்கள் இருக்காங்களே... அவங்க அனுபவங்களும்.....உங்களின் அனுபவங்களும் தெரியுமே.,

      கீதா

      நீக்கு
    3. முதலில் இந்த புது ஐடி வர மாட்டேங்குது. பழைய ஐடி ஓப்பன் பண்ணி அதிலிருந்து கொடுத்துவிட்டு அதை சிங் செய்தால் புதுசு வர தாமதமும் ஆகிறது...என்னவோ போங்க,,,,

      கீதா

      நீக்கு
    4. //திசை மாறிய வாழ்க்கை. முடிவெடுக்கத் தவறவிட்ட தருணம். இப்போதும் அது என்னை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.// எனக்கும் இப்படி ஒரு அரிய சந்தர்ப்பத்தைத் தவற விட்ட முட்டாள்தனமான முடிவு இன்றளவும் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் நினைவு வந்துவிட்டால் அன்னிக்கு சிவராத்திரி தான். :(

      நீக்கு
  11. நிலைமை கொஞ்சம் மோசமாகவே ஊருக்கு தந்தி அடித்திருக்கிறார்கள். ஆனால் அன்று அப்புறம் அவர் நார்மலுக்கு திரும்ப, மறுநாள் சரியாகி விட்டார். அதற்கும் இப்போது சரியாகி விட்டார் என்று தந்தி கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது தந்தி முதலிலும், முதலாவது தந்தி இரண்டாவதாகவும் சென்று சம்பந்தப்பட்ட மக்களைக் குழப்பி இருக்கிறது!//

    தந்திகள் குழப்பியதுண்டு நிறைய.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  தபால்துறையின் சுறுசுறுப்பு!  என் ATM நினைவுப் பகிர்வு நினைவிருக்கிறதா?!

      நீக்கு
  12. இந்த மாற்றி வரும் மெஸேஜ் சம்பந்தமாக ஒரு ATM சம்பவம் கூட முன்னர் எழுதி இருந்தேன். யாருக்காவது நினைவில் இருக்கிறதா?!!//

    யெஸ்ஸு - ரூபாய் கழிக்கப்பட்டதுன்னு மெசேஜ் வந்து ....பின்னர் வங்கியில் செக் செய்தப்ப....இருந்தது...அதுதானே??

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தணிக்கைக் குழு அதிகாரிகளைக் "கவனிக்க" வேண்டிய விஷயம் ரொம்பவே உறுத்துகிறது இல்லையா? அப்படி என்றால் எதற்கு ஆடிட்டிங்? இப்படித்தான் ஊழல்கள் பெருகுகின்றன இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அந்தத்தவறுகள் அவர்களுக்கும் தெரிந்தே அதே அந்த தலைமை அலுவலகத்தாலேயே கூட நிகழ்த்தப்படும். இவர்கள் நம்மை பயமுறுத்துவார்கள்.

      நீக்கு
    2. நடுவில் மாட்டிக் கொள்ளும் அப்பாவிகள்!!

      கீதா

      நீக்கு
    3. தணிக்கை அனுபவம்னு நேரடியாக இல்லாவிட்டாலும் நம்மவருக்கு அலுவலகத்தில் தணிக்கை நடக்கும் நேரங்கள் நினைவில் வருகின்றன. டெஸ்ட் ஆடிட் என்னும் அலுவலகம், மீரட்டில் இருந்து வருவாங்க குடும்பத்தோடு. சுமார் பத்துப் பேர். ஐந்து பேராவது, மனைவியுடன் வந்திருப்பார்கள். அத்தனை பேரையும் இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் தங்க வைத்தாலும் காலை உணவு, மதிய உணவு நம்ம வீட்டில் தான். அங்கே போன முதல் வருஷம் பெண் மட்டும் தான் 2 வயதுக் குழந்தை. டிசம்பர் மாதக் குளிர். ஜீரோ டிகிரிக்குக் கீழே ஒன்றிரண்டு போகும். அவங்க கேட்பது இட்லி, மசால் தோசை, உ.வடை போன்றவை. டிசம்பர் பதினைந்தாம் தேதிக்கு மாவு ரெடியாகப் பத்து, அல்லது பதினோரு தேதிகளிலேயே அரைச்சு வைக்கணும். இல்லைனா குளிருக்குப் புளிக்காது. கொஞ்சமாயெல்லாம் சாப்பிட மாட்டாங்க. நிறையப் பண்ணணும். அரிசி மட்டும் 3 தரம், உளுந்து இரண்டு தரம்னு கல்லுரலில் (அப்போல்லாம் கல்லுரல் தான்) போட்டு அரைக்கணும். அழும் குழந்தையை மடியில் போட்டுக்கொண்டே அரைப்பேன். குழந்தையைப் பார்த்துக்க யாரும் கிடையாது. குழந்தைக்குப் பசித்தால் நடுவில் எழுந்து கொண்டு சாப்பாடு கொடுத்துப் படுக்க வைக்கணும். சமையலறையிலேயே உட்கார்ந்து எல்லாமும் செய்துட்டு கனத்த கம்பளிகளைப் போட்டுத் தூங்கும் குழந்தையை அங்கெயே படுக்க வைத்துவிட்டு அரைக்கணும்.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. ஹா..  ஹா..  ஹா..   உங்க ஆபீஸ் ஆடிட்டுக்கு நான் ஏன் சமைக்கணும்னு கேட்டிருக்க மாட்டீங்க...  நாங்களும் தினசரி ஹோட்டலில் வாங்காமல் ஒவ்வொருநாள் ஒவ்வொரு வீட்டிலிருந்து என்று சமைத்துக் கொண்டு வந்து சமாளித்திருக்கிறோம்.  காஃபி தினமும் எங்கள் வீட்டிலிருந்து.  ஃபில்ட்டர் காஃபி என்பதால்!

      நீக்கு
  14. தினசரி அவருக்கு வில்ஸ சிகரெட் ஒரு பாக்கெட்டும், குவார்ட்டரும் வாங்கி கொடுக்க வேண்டும்! அதை அவர்கள் டிமாண்ட் செய்யும் முறை வித்தியாசமாக இருக்கும். வெளிப்படையாக இருக்காது!//

    வெளியிலிருந்து, "இதென்ன கூத்து" என்று எளிதாகச் சொல்லிவிடலாம் ஆனால் அந்த இடத்தில் இதைச் சரிக்கட்ட இருப்பவர்களுக்குத்தான் தெரியும் இந்தக் கஷ்டங்கள்.

    வேலை செய்யும் பெண்களுக்கு ஒருவிதப் பிரச்சனைகள் என்றால், ஆண்களுக்கும் இப்படியான பிரச்சனைகள் நெருக்கடிகள் உண்டுதான். தப்பு செய்யாவிட்டாலும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  மற்ற ஊழியர்களுக்கும் சேர்த்தே சரிக்கட்ட வேண்டும்.  எல்லோரிடமும் ஒரு  அமௌன்ட் கலெக்ட் செய்வோம்.  அது போதாது!

      நீக்கு
  15. 'நீங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இந்தப் பிரச்னை எல்லாம் வருமா?' என்று கேட்கலாம். நிறைய விஷயங்களை வெளியே எழுத முடியாது! இதுவே அதிகம்!//

    புரிந்து கொள்ள முடியும் ஸ்ரீராம்.

    நம்ம வீட்டவருக்கு வேறு விதமான பிரச்சனைகள் கல்லூரியில் வந்திருக்கு. ஆனால் இதைப் பற்றி இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாதே!!!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  வெளிப்படையாக சொல்ல முடியாது என்கிற அந்த தைரியம்தான் அவர்களுக்கும்!

      நீக்கு
  16. வ உ சி பற்றிய வாழ்க்கை விவரங்கள் சுவாரசியம். அவரது வழித் தோன்றல்களின் அதாவது எள்ளுப் பேரன், பேத்தி? யுட்யூபில் பார்த்திருக்கிறேன். முன்னாளில் வசதியான குடும்பம் என்றும் சில பல ஆவணங்கள், வ உ சி பற்றிய தகவல்கள் இருப்பதையும் காட்டிப் பேசினார்கள். சாதாரணக் குடும்பமாகத்தான் இருக்கிறார்கள்.

    அவர்கள் வீட்டிற்குச் சென்று பேட்டி எடுத்தவரின் கேள்விகள் சரியாக இல்லை. ஆங்காங்கே ஆடியோவும் சரியாக இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுசரி, காந்தி கணக்கு என்றால் என்ன என்று விளக்கம் கொடுப்பார்கள் என்று படித்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. ஆமாம்...அதிலேயே சொல்றா ங்க.....அந்த இடத்தில் ஆடியோ கட் ஆகி ஓவர்லாப் ஆகும்.!!!!!.

      கீதா

      நீக்கு
  17. அருண், யாராக இருக்கும் என்று நானும் சும்மா தேடிப் பார்த்தேன் இப்போதைக்குக் கிடைக்கவில்லை.

    நானும் ஏ ஐ யிடம் கேட்டேன். அது பல அருண்களைச் சொல்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் AI க்கு தெரிய வாய்ப்பில்லையே...

      நீக்கு
  18. ஸ்ரீராம் நானும் இடையிடையே இப்படி ஏ ஐ யிடம் சில கேள்விகள் கேட்பதுண்டு. கொஞ்சம் எடுத்தும் வைத்திருக்கிறேன்......ஒன்று Chatgpt இல்லைனா ஜெமினி.

    கதை எல்லாம் கூட எழுதுகிறது. சமீபத்திய குமுதம் சிறுகதைப் போட்டிக்கு ஒருவர் 48 கதைகள் அனுப்பியிருந்தார்.... நான் பிரமித்துவிட்டேன்! இது என்ன ஏடிஎம் மெஷின் போல! என்று தோன்றியது. அதற்குக் கூட இத்தனை அமௌன்ட் என்று வரையறை உண்டே!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. காந்தாரி திரௌபதி யசோதரை ஊர்மிளை யாருக்கு துன்பம் அதிகம்?//

    என் வரிசையில் - முதலில் யசோதரை
    நானும் ராஹுலனை (இப்போதையவர் அல்ல கேட்டேளா) தேடினேன். அது ஒரு விஷயத்திற்காக....

    ஏற்கனவே ஒரு கதையில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறேன்.

    அடுத்தது - ஊர்மிளை

    அடுத்தது - காந்தாரி

    கடைசியில் திரௌபதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா இல்லாத அந்தப் பையனை, - தெய்வமகனை - நினைத்தாலே அழுகை வருகிறது கீதா!

      நீக்கு
    2. ஆறுதலாக அமைந்தது என்பது என்ன நிச்சயம் யார் அப்படி சொல்லி இருப்பது?!///

      இதேதான் என் கேள்வியும்.

      நிறைய விஷயங்கள் நமக்குச் சரியாகத் தெரியாது....இணையத்தில் புத்தகங்களில் கிடைப்பதை வைத்துத்தான் நாம் அறிகிறேஓம் இப்படித்தான் என்று அறுதியிட்டுச் சொல்வது கடினம். நேரடி அனுபவம் இல்லையே வழி வழியாய் வருபவைதானே ஏன் நம் மூதாதையர் உட்பட.

      இரண்டாவது நமக்குச் சொல்பவரின் perception, அவருக்குச் சொன்னவரின் perception என்று மாறும். இது passing on secret போலதான்

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம். நாம் மன ரீதியாக ஆராய்ந்தால் நிறைய சொல்லலாம் இந்த நான்கு பேரின் வாழ்க்கை குறித்தும்.

      ஆனால் நான் எழுதுவதில்லை ஸ்ரீராம். நிறைய விஷயங்கள் இருந்தாலும்...

      கீதா

      நீக்கு
    4. அண்மையில் ஒரு ரீல்ஸ் பார்த்தேன்.  ஒரு பெண் ஸ்ட்ராபெர்ரி வார்த்தையில் எத்தனை R இருக்கிறது என்று AI இடம் கேட்கிறார்.  அது இரண்டு என்கிறது.  ஸ்பெல் செய்யச் சொல்கிறார்.  அதுவும் ஸ்பெல் செய்து மூன்று R சொல்கிறது.  மறுபடியும் அதே கேள்வி.  மறுபடியும் இரண்டு என்று அதே பதில்!  இதுதான் இந்த AI க்களின் லட்சணம்.  ஸ்ரீதர் வேம்பு இவைகளை நம்ப வேண்டாம் என்று சரியாகத்தான் சொல்கிறார்.

      நீக்கு
    5. ஏ ஐ க்களை நம்பவே முடியாது ஸ்ரீராம். அதன் உதவியை எடுத்துக் கொள்ளலாம் ஆனால் நாம் நம் மூளையை உபயோகித்துத்தான் அறிய முற்பட வேண்டும். சுந்தர்பிச்சையே சொல்கிறாரே! ஏஐ நம்பாதீங்கன்னு!!!

      மக்கள் கொடுக்கும் இன்புட்டைத்தானே அது துப்புகிறது! அதற்கென்று இல்லையே, ஸ்ரீராம், சரிதானே!!?

      கீதா

      நீக்கு
  20. என்று அவரைப் பாராட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.//

    இந்த Jataka கதைகள் கிட்டத்தட்ட பஞ்சதந்திர கதைகள் வகையைச் சேர்ந்தவைதானே. மகனுக்கு வாசிக்கக் கொடுத்த போது அவன் கேட்ட கேள்விகள் நிறைய யோசிக்க வைத்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. தாய்ப்பசு - கண்களில் நீர் நிறைந்துவிட்டது ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,  நம் மீது பஸ்ஸை ஏற்றி விடுவார்களோ..  அவர்கள் நினைத்தால் அப்படியும் செய்யலாமே என்று பயம் துளியும் இல்லாமல், தாண்டிச் செல்லச் செல்ல ஓடி ஓடி வந்து முன் சக்கரங்களை பார்க்கிறது. 

      பசுவின் உரிமையாளர் என்னதான் செய்து கொண்டிருந்தாரோ.....

      நீக்கு
    2. ஆமாம்....அது சரி உரிமையாளர் இருப்பார்ன்றீங்களா.....இருக்கலாம். இருந்திருந்தால் சண்டைக்குப் போயிருக்கமாட்டாரோ? ஈடு கேட்டிருப்பார் இல்லையா? எனக்கு இருந்திருப்பார் என்று தோறவில்லை அதான். இல்லை பாவப்பட்ட உரிமையாளரோ என்னவோ? கன்றுகுட்டி இப்படிச் செத்தது கூடத் தெரியாமல்...

      கீதா

      நீக்கு
    3. உரிமையாளர் இல்லாமல் எப்படி?  அதிகாரிகளும் தலையிடவில்லை போல 

      நீக்கு
  22. //தினசரி அவருக்கு வில்ஸ சிகரெட் ஒரு பாக்கெட்டும், குவார்ட்டரும் வாங்கி கொடுக்க வேண்டும்! // இதைப் படித்ததும் ஜெயமோகனின் கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. இப்படி ஆடிட்டுக்கு வரும் மேலதிகாரிகள் சிலருக்கு மேற்படி சங்கதிகள் சப்ளை செய்யப்பட வேண்டுமாம், அதை செய்து விடுவார்களாம். இன்னும் சிலர் "இரவில் தனியாக தூங்குவது கஷ்டமாக இருக்கிறது" என்பார்களாம், "நாங்கள் அதை ஏற்பாடு செய்வதில்லை" என்று எழுதியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் அந்த டயலாக்ஸ் உண்டு.  ஆனால் எங்கள் அலுவலகம் சின்னது.  பெரிய அலுவலகங்களில் சில இடங்களில் சிலேபேர் கேட்பார்கள்.  அது.  நடந்தும் இருக்கிறது.  ஏற்பாடு செய்த என் நண்பரையும் அறிவேன்!

      வாங்க பானு அக்கா.

      நீக்கு
  23. ​வர வர ரொம்ப கன்பூசியஸ் ---- கண்பியூஷன் ஆக இருக்கிறது. திங்கள், புதன், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் எங்கள் பிளாக் பக்கத்தைத் திறந்தால் நாட்காட்டியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

    கட்டுரைக்கு ஆடி(ட்) திருவிழா என்று பெயர் வைத்திருக்கலாம். ஆமாம் ATP என்றால்? தெரியாமல் தான் கேட்கிறேன்.

    மொத்தத்தில் ஆடிட் பார்ட்டிகள் JKC யின் மறு பதிப்புகள்... குற்றம் கண்டுபிடிப்பதில். ஹி ஹி ஹி .

    வ உ சி சிறு வயதில் ஓடிப்போனார் என்பது அறியாத தகவல். பொக்கிஷப் பகிர்வு நன்று.

    A I பதில்கள் அருமை. சாதாரண மனிதர்களைக் காட்டிலும் நிறைய விவரங்கள் தருகிறது. ஆனால் இப்பதில்கள் யாவும் உண்மை, கற்பனை அல்ல என்று எப்படி கண்டுபிடிப்பது?

    சிம்பன்சி தரை வழி காட்டுமா? அல்லது கிளைகள் வழியே போகும் வழியை காட்டுமா? எல்லோரும் டார்சான் அல்லவே!

    வியாழன் வெ(ள்)ளியானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..   பழைய மாத்திகிரி கிழமைக்கு தக்கவாறு இருப்பதையே விரும்புகிறீர்களா?  அப்படியே மாறச் சொல்கிறீர்களா?

      ATP என்றால் அட்வான்ஸ் டூர் ப்ரோக்ராம்!

      வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால் ஆடிட் என்னும் சித்தாந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரல் கொடுப்பேன் நான்.  அங்கிருப்போரை வதை செய்வதும், தான் அறிவாளி என்று காட்டிக் கொள்வதும்தான் நடக்கிறது.  ஒரு உயர்ந்த மனப்பான்மை 

      சிறு வயதில் ஓடிப்போனவர் எல்லோரும் பெரிய மனிதர்கள் ஆவதில்லை என்பதற்கு நான் ஒரு உதாரணம்.

      AI இணையத்தில் இருப்பதை நொடியில் காந்தம் போல இழுத்து நமக்குத் தருகிறது.  ஏற்கனவே Feed செய்யப்பட்ட விவரங்களைதானே அது தரமுடியும்!

      மனித சக்தி அறிந்து அதற்குத் தக்கவாறு வழி காட்டுமோ என்னவோ..  நான் காட்டுக்கே போனதில்லை.  பார்த்ததுமில்லை.  அப்புறம் அல்லவா தொலைந்துபோய் வழிதேடி அனுபவம் பெற!!!  
       

      நீக்கு
    2. நீங்க சின்ன வயசில் ஓடிப்போனீங்களா? தெரியாதே? அது எப்போ? என்ன ஆச்சு? எங்கே இருந்தீங்க? எப்போ மறுபடி வீட்டுக்கு வந்தீங்க?

      நீக்கு
  24. தாமதமாக வரும் தபால்கள் பற்றி படித்ததும், ஒன்று நினைவுக்கு வருகிறது, முன்பெல்லாம் ரெஜிஸ்டர் தபால் அனுப்பும் பொழுது, acknowledgement card என்று ஒன்றை இணைத்து அனுப்புவோம். அது சில சமயங்களில் திரும்பி வராது, சில சமயங்களில் மிகவும் தாமதமாக வரும். இப்போதெல்லாம் ஸ்பீட் போஸ்ட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவுக்கவ்வளவு கொரியர் சர்விஸ் மோசமாக போய் விட்டது.  பெரிய நிறுவனங்கள் இன்டர்வியூ செய்யும் நிறுவனங்கள் அந்த அக். கார்டை மதிப்பதில்லை.  பிய்த்து தூர எறிந்து விடுவார்களாயிருக்கும்!

      நீக்கு
    2. தபால் துறை உண்மையில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது பிரம்மானந்த ரெட்டி அமைச்சராக வந்து தபால்களைப் பிரித்தெடுக்கும் சுலபமான வழியை அழித்தொழிக்கும் வரை. சார்டிங் எனப்படும் அந்த முறையை முற்றிலும் ரத்து செய்தார் பிரம்மானந்த ரெட்டி. அதன் பின்னர் தபால் துறைக்கு இறங்கு முகம் தான். முன்னெல்லாம் சென்னையில் முதல் நாள் போட்ட தபால் மறு நாள் மதியமே மதுரை/கருவிலி வந்து அடைந்து விடும். எக்ஸ்ப்ரஸ் டெலிவெரினு ஒண்ணு இருந்தது. விலாசத்துக்கு மேல் அதைக் குறிப்பிட்டால் காலை ரயில் வந்து தபால்கள் பிரிக்கப்பட்டதுமே எக்ஸ்ப்ரஸ் டெலிவரிகள் உடனடியாக விநியோகம் செய்யப்பட்டு விடும். காலை எட்டு மணிக்குள் கிடைச்சுடும்.

      நீக்கு
    3. மணி ஆர்டர் ரசீது கூட ஒழுங்காக வரும்.. வந்து கொண்டிருந்தன. நாங்க இப்போவும் வெளிநாட்டுக்குப் பார்சல் அனுப்பவதெனில் தபால் துறை மூலமே அனுப்பிக் கொண்டிருந்தோம். திருச்சி தலைமைத் தபால் துறை அலுவலகத்தில் இதுக்கென இருக்கும் செக்ஷனில் அனைவரும் மிக அருமையாக ஒத்துழைத்துப் பாக்கிங் செய்யத் தெரியாதவங்களுக்குப் பாக்கிங்கும் செய்து கொடுத்து இன்ஷூர் பண்ணி அதற்கான அத்தாட்சியையும் ஒட்டி விலாசத்தைக் கணினியில் பெரிதாக எழுதி ப்ரின்ட் அவுட் எடுத்து அனுப்பப் போகும் தபாலில் இரண்டு பக்கங்களில் பார்க்கும்படியாக் ஒட்டிட்டுப் பின்னர் போக வேண்டிய பார்சல்களோடு சேர்த்து விடுகிறார்கள். குழந்தைகளின் முதல் பிறந்த நாளைக்கான பட்டுப்பாவாடை/சட்டை எல்லாம் தைத்துத் தபால் மூலம் அனுப்புவோம். சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும். எனக்குத் தெரிந்து சிலர் அண்டா, குண்டான், பாத்திரங்கள், தவலை, குடமெல்லாம் அனுப்பினார்கள். இந்தியத் தபால் துறையையும், ரயில்வே துறையையும் மிஞ்சும் அளவுக்கு இன்னொன்று இல்லை என்பேன். இப்போவும் கூரியரில் அனுப்பாமல் விரைவுத் தபாலில் அனுப்பினால் சரியாகப் போயிடும். அதே போல் ஆதார் இணைப்பில் உள்ள மாற்றங்களையும் தபால் துறை மூலம் விண்ணப்பித்தால் 2,3 மாதங்களில் கிடைத்து விடும். நான் தபால் துறையில் சிறு சேமிப்புக்களின் ஏஜென்டாகச் சில வருஷங்கள் பணி புரிந்தேன். கமிஷனெல்லாம் உடனுக்குடன் கொடுத்துடுவாங்க.

      நீக்கு
    4. ஆன்லைனில் கோ ஆப்டெக்ஸ், நாயுடு ஹாலில் இருந்து துணிகள் வரவழைத்தால் தபால் மூலமே சரியாக நான்கு நாட்களுக்குள்ளாக வந்து சேர்ந்து விடும். கால் சரியில்லாமல் போனதிலிருந்து துணிக்கடைகள் என்ன? கடைகளுக்கே போகவில்லை சுமார் ஐந்தாறு வருடங்களாக. எல்லாமும் ஆன்லைன் வர்த்தகம் தான்.

      நீக்கு
    5. ஆம்.  இந்த அனுபவம் எனக்கும் உண்டு.  ,வெறும் மணியார்டர் ரசீது மட்டும் தபாலில் வரும்போது கொஞ்சம்  ஏமாற்றமாகக் கூட இருக்கும்!

      நீக்கு
    6. அப்போல்லாம் காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும்போது முதல் தபால் வந்துடும். தபால்காரர் வாசலிலேயே பார்த்துக் கொடுப்பார். வாங்கிப் படித்துக் கொண்டே அலுவலகம் போவோம்.

      நீக்கு
  25. வியாழனையும், வெள்ளியையும் இடம் மாற்றி விட்டீர்களோ? கொஞ்சம் கூட சினிமா செய்திகள் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.
    வ.உ.சி.யின் தியாகம் பெரிதாக பாராட்டப்படாததற்கு என்ன காரணம்? சிலர் காந்தி என்கிறார்கள்.
    சிம்பன்ஸி வழிகாட்டுமா? interesting.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆச்சர்யக் கேள்விகள் வாரம் தோறும் மாறுகின்றன.  மேலும் சில கேள்விகள் கீதா அக்கா கேட்பார்!

      நீக்கு
    2. வியா(வெ)ள்ளிக் கிழமைகள் மாறி விட்டன என்றாலும் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கு. இன்னிக்குச் சிறப்பு விருந்தாளி யாரும் இல்லையா? நீங்களே ஏகபோக விநியோகம் போல! நான் ஒண்ணும் கேட்கலை. :)))

      நீக்கு
  26. நாங்கள் திருவண்ணாமலையில் இருந்த பொழுது நடந்த சம்பவம்: அங்கெல்லாம் அடுத்து அடுத்து வீடு இருக்கும். இடைவெளி மிகவும் குறைச்சல். ஒரு நாள் பின்னால் வீட்டு மொட்டை மாடியிலிருந்து அதற்கு பக்கத்து வீட்டு மொட்டை மாடியின் இடுக்கில் குதித்து விட்டது ஒரு பூனை குட்டி. மேலே போகும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தது. ஒரு குட்டிச் சுவரில் ஏறினால் அங்கிருந்து பெரிய சுவருக்கு தாவி விட முடியும். என் மகள் அந்த பூனைக் குட்டிக்கு குட்டி சுவரை சுட்டிக் காட்ட, அதன் மீது தாவி, அங்கிருந்து பெரிய சுவருக்கு தாவிய பூனைக் குட்டிக்கு வழி தெரிந்து விட்டது, அங்கு தாவும் முன் என் மகளை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு

    பதிலளிநீக்கு
  27. தாவியது அந்த பூனைக்குட்டி.
    கருத்தை முடிக்கும் முன் மு.கொ.தனமாக என் விரல் எதன் மீதோ பட பப்ளிஷ் ஆகி விட்டது. (திட்டமிடாமல் நடந்த அதுக்கு அப்புறம்..?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'இவர்கள் தனக்கு அபாயம் விளைவிப்பர்கள்', 'இவர்கள் நமக்கு அபாயம் விளைவிக்க மாட்டார்கள்' என்பதை ஐந்தறிவு ஜீவன்கள் புரிந்து கொள்கின்றன.  அவற்றை ஐந்தறிவு என்று மனிதன் தவறாக கணக்கிட்டிருக்கிறான்!

      நீக்கு
  28. சின்பன்ஸி, மற்றும் போனோபோஸ் இரண்டு வகைகளும் மனிதனுக்கு மிக நெருக்கமானவர்கள் எவல்யூஷன் பற்றியதில் மரபணு ரீதியாக. ஏப் வகையினர்.

    அசாத்திய புத்திசாலித்தனம், சோசியல் பிஹேவியர், நம்மைப் போன்று உபகரணங்களைப் பயன்படுத்தல் இவற்றில் எல்லாம் அசாத்தியமானவர்கள். பார்த்தீங்கனா கடினமான கணக்குகளைக் கூடப் போடுவாங்களாம் அந்த அளவு மூளைத் திறன் உள்ளவங்க. பல 40 வருடங்கள் முன் ரீடர்ஸ் டைஜஸ்டில் வாசித்திருக்கிறேன்.

    சமீபத்தில் கூடப் பார்த்திருப்பீங்க ஸ்ரீராம். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளுக்குக் குரங்குகளைப் பயன்படுத்துவதை. தேங்காய் பறித்து அடுக்கி, வண்டியில் ஏற்றிக் கொண்டு போவதை...இவை சாதாரண வகையினர். இவங்களை விட, சிம்பன்ஸி. போனோபோஸ் (ஏப்) சிக்கலான விஷயங்களுக்குக் கூடத் தீர்வு காணும் வல்லமை கொண்ட மூளை கொண்டதுங்க. இவர்களையும் பயிற்சி கொடுத்துப் பயன்படுத்தறாங்க. உடல் உழைப்புக்கு இல்லை, மூளை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இது மாதிரி விவரங்கள் ரொம்பவும் சுவாரஸ்யமானவை.

      நீக்கு
  29. ஓ! முடித்துவிட்டேனா? இன்னமும் இருக்கா என்று பார்த்தால் அட! சிம்பன்ஸி எக்ஸிட் வழியைக் காட்டிவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..  அம்மாடி...  இந்த வாரம் பதிவு நீளம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்!  இல்லை?! 
      இன்றைய கடமையை முடிச்சிட்டோம்னு உங்களுக்கே ஒரு நிமமதிப் பெட்ருமூச்சு!!! 

      நீக்கு
  30. வேள்வியிலிருந்து வந்தவள், எப்படிப்பட்ட தந்தை? எப்படிப்பட்ட உடன்பிறப்பு? எப்பேற்பட்ட கணவன்மார்கள்? இத்தனை சிறப்புகள் இருந்தும் எவ்வளவு மோசமான அவமானங்களை அவள் சந்தித்தாள்? சபையில் பட்ட அவமானத்தை தாண்டி வனவாசத்தில் ஜயத்ரதன் அவளிடம் தவறாக நட்ந்து கொண்டு கடத்திச் செல்ல முற்படுகிறான், அஞ்ஞாத வாசத்தில் கீசகனால் தொந்திரவு, மஹாராணியாக இருந்தவள் சேடியாக வாழ வேண்டிய நிர்பந்தம், என்னவொரு அவலமான வாழ்க்கை?
    யுத்தம் முடிந்த பிறகு அவளுடைய ஐந்து புத்திரர்களும் கொல்லப்படுகிறார்கள், இத்தனை அழிவிற்கும் அவள்தான் காரணம் என்று குந்தி அவளை சபிக்கிறாள். என்ன சுகம் அந்த பெண்ணிற்கு?

    தனிப்பட்ட முறையில் அவள் நல்லவள்தான், கணவனும், குழந்தைகளும் சரியில்லாததால் சோகத்தை சுமக்க வேண்டி வருகிறது காந்தாரிக்கு. யாருக்கு மிகப்பெரிய துக்கங்களை தன் மக்கள் செய்தார்களோ அவர்கள் வீட்டிலேயே கடைசி காலத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் இறந்து போன தன் குழந்தைகளை நினைத்து கண்ணீர் கூட சிந்த முடியாது. அங்கு சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் நிம்மதியாகவா உள்ளே சென்றிருக்கும்? இதைத்தான் விதுரர் "உங்கள் குழந்தைகள் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளுக்கு அளவேயில்லை, அத்தனையையும் மீறி பாண்டவர்கள் வீட்டிலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று விதுரர் திருதிராஷ்டிரனிடமும், காந்தாரியிடமும் கேட்டு அவர்களை கானகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவர்களோடு குந்தியும் செல்வது அவளுடைய பெருந்தன்மை!. கடைசியில் அநாதையாக காட்டுத்தீக்கு இரையாகிறார்கள். காந்தாரிக்கு சோகம் உண்டு, அதைவிட அதிக சோகம் குந்தியின் சோகம்.

    ஊர்மிளையின் சோகம் அவள் தேர்வு. சீதையைப் போல அவள் ஏன் கணவனோடு செல்லவில்லை? மேலும் பதினான்கு வருடங்கள் கணவனுடைய தூக்கத்தையும் சேர்த்து அவள் தூங்குகிறாள். எங்கே கஷ்டப்பட்டாள்? பரதன் காட்டிற்குச் செல்லவில்லை, ஆனால் பதினான்கு
    வருடங்கள் தவ வாழ்க்கைதானே மேற்கொண்டான்? எனவே மாண்டவிக்கும் எந்த சுகமும் கிடைக்கவில்லை. ஊர்மிளாவாவது தூங்கி விட்டாள்.

    யசோதரா எப்போது புத்த பிட்ட்சுவானாளோ அப்போதே அவளுக்கு பெருமை கிடைத்து விட்டதே?

    ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா பானுக்கா.. 

      கீசகன் தொந்தரவு நினைவில்லை. 
      குந்தி பாஞ்சாலியை சபித்தது படித்ததில்லை! 
      காந்தாரி, திருதராஷ்டிரன் கடைசி காலத்தில் வனவாசம் செல்கின்றனர்.  குந்தியும் அவர்களுடன் செல்கிறாள் என்று படித்திருக்கிறேன்.  அதற்கு இப்படி ஒரு முன்கதையை படித்ததில்லை.  போர் முடிந்த  உடனேயே இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்ததும் உடனே செல்வதாகத்தான் படித்த நினைவு. 
      ஊர்மிளையின் சோகம் அவள் தேர்வல்ல.  லக்ஷ்மணன் கட்டளை அல்லது வேண்டுகோள்.  தூக்கம் சுகமா என்ன..  வாழ்வின் பெரும்பகுதி தூக்கத்தில் சென்று விடுவதும், அவள் விழித்த நேரம் லக்ஷ்மணன் தூக்கத்துக்குச் செல்வதும்..

      ஆனால் உங்கள் வாதங்கள் நன்றாய்த்தான் இருக்கின்றன!

      நீக்கு
    2. ​பாணுக்காவின் ரியல் இன்டெலிஜென்ஸ்.

      Jayakumar

      நீக்கு
    3. பீமன் வந்து "கீசக வதம்" பண்ணுவான். இந்த நாடகம் ரொம்பவே பிரபலம் ஆச்சே ஸ்ரீராம்?

      நீக்கு
  31. தபாலும் தணிக்கையும்....

    ஆகா...

    பதிலளிநீக்கு
  32. செக்கு இழுத்த செம்மலுக்கு துரோகம் செய்து
    விட்டது - தமிழ்நாடு...

    பதிலளிநீக்கு
  33. யாருடைய துன்பம் அதிகம் என்று மனம்
    அல்லாடுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லாட்டம் நின்ற உடன் தெளிவு கிடைக்கட்டும்.

      நீக்கு
  34. வ. உ. சி. அவர்களை சென்னையில்
    சீம எண்ணெய் விற்க விட்டது தானே
    தமிழகத்து தமிழ்ச் சமுதாயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே.. காசிருப்பவர்கள்தான் கண்ணில் தெரிவார்கள்.

      நீக்கு
  35. காந்தாரி திரௌபதி
    யசோதரை ஊர்மிளை
    யாருக்கு துன்பம் அதிகம்?

    அவரவர் நிலையில் தாங்கிக் கொண்டனர்

    அதனால் தான் பெண்கள்
    தெய்வத்திற்கு நிகராகின்றனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்.  துன்பம் துன்பம்தான்.  இதில் அளவீடு என்ன! 

      நீக்கு
  36. யாருக்குத் துன்பம் அதிகம்?..

    குருவிக்கேற்ற பாரம் !

    பதிலளிநீக்கு
  37. வ. உ. சி. விஷயத்தில்
    மகாகவி பாடியதே சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
      நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
      மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
      நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
      எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி
      இரு கண்ணற்ற சேய் போல்
      கலங்குவதும் காண்கிலையோ

      நீக்கு
  38. மாடு கன்றைத் தேடும் செய்தி குறித்த காணொளி சில ஆண்டுகள் முன்னரே வந்திருக்கு. திரௌப்தி, யசோதரா, காந்தாரி, ஊர்மிளை பற்றி பானுமதி நிறையச் சொல்லிட்டார். ஊர்மிளையின் விரகம் என்னும் கவிதைத் தொகுப்பு இந்தியில் உண்டு. மைதிலி சரண் குப்தா எழுதினதோனு நினைவு. விஷாரதிலோ/ப்ரவீனிலோ பாடமாக வந்திருக்கு. யசோதரா கவிதைத் தொகுப்பும் வந்திருக்கு. அசோகர் (சக்கரவர்த்தி) கொன்ற அவர் சொந்த மூத்த சகோதரன் பற்றிப் படித்தால் நெஞ்செல்லாம் பதறும் அண்ணனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை அண்ணனைக் கொன்று விட்டு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டு அரசனானான் அசோகச் சக்கரவர்த்தி! எத்தனை பேர் நம்புவார்கள்? நமக்குத் தெரிந்ததெல்லாம் அசோகர் சாலைகள் போட்டார்; கிணறுகள் வெட்டினார். கலிங்கப் போருக்குப் பின்னர் புத்தமதத்தைத் தழுவினார் என்பது தான். அதன் பின்னணி?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!