8.4.14

அலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்



80 களின் பிற்பகுதி.

மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பியபோது தொலைபேசி சிணுங்கியது. மகன் பதட்டமாகப் பேசினான். அவன் அப்போதுதான் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கணக்கு முடிக்கும் நேரம் 10,000 குறைவதாகவும், அதை மாலை அலுவலகம் முடியும் நேரத்துக்குள் கட்டச் சொல்லி மேனேஜர் சொல்வதாகவும் சொன்னான்.

'கவலைப்படாதே, பதறாதே' என்று அவனுக்குச் சொல்லி விட்டு அலுவலகம் வந்து கோவிந்தனுக்கு தொலைபேசினான் ஈஸ்வரன்.

கோவிந்தன் இவன் நெருங்கிய நண்பன். கைகொடுக்கும் தெய்வம். இந்த சமயமும் உடனே கைகொடுத்தான்.

பணத்தை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலிருந்து ஒருமணி நேரப் பயணத்தில் இருந்த மகன் ஊர்
சென்று, வங்கியில் கட்டச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

ஒரு வாரத்தில் பணம் திரட்டி கோவிந்தன்
வீட்டுக்கு வந்தபோது அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டான்.

கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கோவிந்தன் கிளம்பிச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் கோவிந்த
னிடமிருந்து ஃபோன் வந்தது. பணத்தைக் காணோம் என்றும், கிளம்பும்போது வீட்டு வாசலில் விழுந்திருக்கலாம் என்றும், பணம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று வாசலில் சென்று பார்க்கச் சொன்னான். மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்ட பணம் காணோமாம். 

ஈஸ்வரனும் வாசல் பக்கம் போய் நன்றாகத் தேடித் பார்த்தான். 

ஊஹூம்.

மறுநாள் அலுவலகம் முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து வழக்கமாக் கூடும் இன்னொரு நண்பனின் கடையில் குழுமி பேசிக்கொண்டிருந்தபோது இதை அவர்களிடம் சொன்னான் ஈஸ்வரன்.
 
குழுவில் இருந்த கோபால் என்னும் இன்னொரு நண்பன் மிகவும் ஆச்சர்யப்பட்டு போய், அன்று சம்பளக் கணக்கு அலுவலகம் சென்றுவந்தபோது தானும் 10,000 ரூபாயைத் தொலைத்து விட்டதாகவும், மனைவியின் நகையை வைத்து 10,000 ரூபாய் ஏற்பாடு செய்ததாகவும் கூறினான்.
நண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

அப்புறம் நண்பர்கள் அவரவர்கள் அவ்வப்போது பணம், நகை தொலைத்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கலைந்து அவரவர் வீடு சென்றார்கள்.

மறுநாள் காலை அந்த கடைக்கார நண்பன் ஃபோன் செய்தான். "ஈஸ்வரா... கடைல திருட்டு போயிருக்குடா... சுவத்தை உடைச்சு கல்லாப்பெட்டியை உடைச்சிருக்காங்க... திருட்டுப்போன பணம் எவ்வளவு தெரியுமா? 10,000! நானும் நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ந்துட்டேண்டா..."
குரலில் கவலையை விட உற்சாகம்தான் தெரிந்தது!

திருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல!

7.4.14

திங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு இருநூறு கிராம்.

நெய் இருநூறு மிலி

சர்க்கரை நானூறு கிராம்.

பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, பருப்புகளை மிக்சியில் இட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் தேவையான அளவு (நூற்றைம்பது மி லி) தண்ணீர் விட்டு, காய்ச்சி, அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, பாகாகக் காய்ச்ச வேண்டும்.

பாகு இளம் கம்பிப் பதமாக வந்ததும், (எச்சரிக்கை - பாகு முறிந்துவிடக் கூடாது, பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்கவேண்டியது அவசியம். பாகு முற்றிவிட்டால், பர்பியை உடைக்க ஸ்லெட்ஜ் ஹாமர் தேவைப்படும்!)  அரைத்த பாதாம் பருப்பை பாகுடன் கலந்து, கிளற வேண்டும்.

பாகும் பருப்பும் நன்றாகக் கலந்ததும், நெய்யை விட்டுக் கிளறவேண்டும்.

கலவை கெட்டியானதும், ஏலக்காய் மற்றும் பாதாம் எசென்ஸ் நான்கு துளிகள் விட்டுக் கிளற வேண்டும்.

ஒரு எவர்சில்வர் தட்டில், நெய் தடவி, அதன் மீது இந்தக் கலவையைக் கொட்டிப் பரத்த வேண்டும். சூடாக இருக்கும்பொழுதே, ஒரு கத்தியால், துண்டு துண்டாக வெட்ட வேண்டும்.

ஆறிய பிறகு, பாதாம் பர்பி சுவைத்து சாப்பிடலாம். ரொம்ப கெட்டியாகி விட்டால், அடிக்கடி வருகின்ற விருந்தாளிகளுக்குக் கொடுக்கலாம்!
     




6.4.14

ஞாயிறு 248:: சொல்லுங்க !



ஒளிந்து கொண்டிருப்பது வெட்கத்திலா, யாரும் கவனிப்பாரற்ற வேதனையிலா?


(நிற்க. இன்றைய பதிவில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அதை சரியாகக் கண்டு பிடிப்பவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு பாயிண்டுகள் உண்டு!)  
             

5.4.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) முயற்சியுடையார் ...... பிரவீணா 
 


 
2) "நீங்கள் போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டீர்கள் என்பது உங்களை பின் தொடர்பவர்களுக்குத் தெரியாது." அமிர்தா மித்ரா 
 
 
 
3) கர்நாடக இசை குறிப்புகளை, 'பிரெய்லி' மொழி யில் உருவாக்கியதுடன், 'பத்மஸ்ரீ' விருது பெற்ற, முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி, காயத்ரி
 
 

 
4) ஆசிரியை ஹேமா பற்றி லயன் ரமணி ஸார் ப்ளாக்கில்...
 
 

 
5) சகலகலாவல்லி நீலா சத்யாநாராயணா 
 
 
 
6) வீட்டு கழிவுகளை புதிய முறையில் மறுசுழற்சி செய்து, சமையல் கேஸ் தயாரிக்கும் அனிதா
 


7) மெட்ரோ பைலட் காவ்யஸ்ரீ.


2.4.14

நாலுமுழ நாக்கின் ருசி..



ஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தபோதிலும் எத்தனை நாள் ஹோட்டலில் சாப்பிட முடியும்? 'எப்படா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவோம்' என்ற ஏக்கம் வந்துவிடும். அதுமாதிரி சமயங்களில் வீட்டில் சாப்பிடும் ஒரு மோர் சாதத்துக்கும் நார்த்தங்காய் ஊறுகாய்க்கும் ஈடு இணை எது? அல்லது பழைய சாதத்துக்கு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய்க் கடித்துக் கொண்டு சாப்பிடுவது போலத்தான் வருமா?

         

ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த உறவினர் வீட்டுப் பையன் ஒருவன் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து தங்குவான். வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கி இருக்கும் அவன் நாவுக்கு நாங்கள் கொஞ்சம் ஆறுதலளித்தாலும் அவன் சொந்த ஊர் செல்லும்போது ஒரு விசேஷத்துக்காக நாங்களும் கூடச் சென்றோம். சாப்பிடும் நேரம் "நம்ம வீட்டுச் சாப்பாடு நம்ம வீட்டுச் சாப்பாடுதான்மா...இந்த ருசி வேற எங்கயுமே கிடைக்கல" என்றவனை அவன் அம்மா அடக்கினார். நாங்கள் தவறாக எடுத்துக் கொள்வோமோ என்று!

அவன் சொன்னதில் என்ன தவறு?


ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சுவை இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வீட்டுச் சமையலிலும் ஒரு தனி ருசி! ஒரு சிறு சுவை வேறுபாடு! அவரவர்கள் வீட்டுச் சமையலில் அவர்கள் பரம்பரையின் வழிவழி வந்த ஏதோ ஒரு அம்சம் இருக்கிறது! 


 

தாங்கள் தங்கள் இளமையில் தங்கள் வீடுகளில் சுவைத்த சுவையை இங்கும் சமையலில் தொடர்கிறார்கள்.

நமக்கு நம் வீட்டுச் சமையல்தான் மனதில் நிற்கும், பிடிக்கும்! ஆனாலும்,  சில உணவு வகைகள் அவர்களின் பிரத்தியேகமான பாணியில் ரசிக்க வைக்கும்.  நாம் இவற்றை நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது அனுபவிக்கலாம்.

நம் வீட்டில் அம்மாவின் சமையலை தொடக்கம் முதல் ரசித்த நா அதற்குப் பழகி அதுதான் சிறந்த ருசி என்றாகி விடுவதற்கு உப்புப் புளி காரத்தோடு அம்மாவின் அன்பும் கலந்து பரிமாறப் படுவதுதானே...

எங்கள் ஒரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் ஏன் கூட்டில் கூட புளிப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும்.எங்கள் வீட்டில் சரியான அளவில் இதே சுவைகள் இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் வீட்டின் புளிப்புத் தூக்கல் சுவை ரசிக்குமளவு இது அவ்வளவு ருசிப்பதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன்.
 

       

இன்னொரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கும். மற்ற வீடுகளில் 'சப்'பென்று இருப்பதாகவும் தங்கள் வீட்டில்தான் சரியாக இருப்பதாகவும் சொல்வார்கள். சுகுமார் கூட உப்பு ஒரு அரைக்கல் அதிகமோ என்ற அளவில்தான் உப்புப் போடுவார். சொன்னால், 'உன் அம்மா செய்வது போல இல்லை,  அதானே?' என்பார்.

உண்மைதானே? ஆனாலும் அவருக்கும் அந்த அரைக்கல் அதிக உப்பு அளவுதான் சரி என்பது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரையிலும் கூட!


அப்புறம் கைப்பக்குவம் என்று ஒன்று.  சிலர் எத்தனைமுறை அதே உணவை சமைத்தாலும் ஒரே மாதிரி சுவை மாறாமல் சமைக்கிறார்கள். சாதாரணமாக் செய்யும் உணவுகள் கூட சுவைக்கும். சிலர் சமைத்தாலோ, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை!


எனக்குக் காபி சாப்பிடப் பிடிக்கும். என் மனைவிக்குப் பாயசம், அதாவது காபியைப் பாயசம் மாதிரி சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிடப் பிடிக்கும். சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை (என் நண்பன் ஒருவன்) , சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் சர்க்கரை கம்மி, சிலருக்கு டிகாக்ஷன் லைட்டாக விட்டு.... என் ஒரு மகனுக்கு இன்றளவும் காபி பிடிக்கவில்லை! இன்னொரு மகன் காபிதான் குடிக்கிறான்! எங்கள் வீட்டில் கத்தரிக்காய் என்னைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. வாழைப்பூவும், வாழைத்தண்டும் அங்ஙனமே! பீன்ஸ் என்னைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.  

 

எல்லோருக்கும் பிடித்த உ.ருளைக் கிழங்கு எனக்குப் பிடிப்பதேயில்லை. என் நண்பர்கள் நிறைய பேர்கள் ரசமே சாப்பிடுவதில்லை. ரசம் சாப்பிட்டால் உடனே மறுபடி பசி வந்துவிடும் என்று சொல்வான் ஒரு நண்பன்.  


 

ரவா உப்புமா சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி வந்துவிடும் என்பான் (ரவா சீக்கிரம் ஜீரணமாகிவிடுமாம்!). புரட்டாசியில் கூட அசைவத்தைத் தள்ளிவைக்க முடியாத என் நண்பர்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் என்னதான் இருக்கிறதோ, ட்ரீட் என்று வந்தாலே பிரியாணிதான் கேட்கிறார்கள்.



என் மனைவி வீட்டுப் பழக்கம், சப்பாத்திக்கு பழைய குழம்பு, சட்னி என்று எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார். எனக்கு, சப்பாத்தி என்று செய்தால், குருமா வேண்டும்! குறைந்தபட்சம் சின்ன வெங்காயம் சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு பிழியப்பட்ட பருப்புக் கடைசலாவது!
 
   

இந்தக் காலத்தில் வீட்டுச் சமையலில் துவையல் என்ற அம்சமே தொலைந்துகொண்டு வருகிறது. ரசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். சமீபத்தில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் அடம்பிடித்து செய்யச் சொல்லிச் சாப்பிட்டேன். ஆனால் இப்பவும் கத்தரிக்காய் பொடிதூவிக் கறியும், வெண்பொங்கலுக்கு கத்தரிக்காய்க் கொத்சுவும் டியூ!
அவ்வப்போது நண்பி ஒருவர் தயவால் பிரண்டைத் துவையலும் கிடைக்கிறது!


இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் வக்கணையாக தினமும் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று சமைக்கும் வழக்கம் இல்லை. குழம்பு மட்டும் பொரியலோடு என்று அவசரக் கோலத்தில் சமைத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் வீடுகளில் வெஜ். பிரியாணி, ஃபிரைட் ரைஸ் என்று பொழுது ஓடி விடுகிறது. அலுவலக அவசரங்கள்!
இன்னும் சில வீடுகளில் வீட்டில் வந்து டெலிவரி செய்யும் கேடரிங் மெஸ் போன்று நடத்துபவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். மும்பை டப்பாவாலாக்கள் போல அவர்கள் ஏகப்பட்ட டிபன் கேரியர் பாத்திரங்களுடன் தெருவெங்கும் விரைகிறார்கள்.

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் இருவர் பேசிக் கொண்டது, சமையல் புத்தகங்கள் போடுபவர்கள் நஷ்டம் என்று கையைச் சுட்டுக் கொண்டதே இல்லையாம்.


தோசைக்கு மிளகாய்ப்பொடி மட்டுமே தொட்டுக் கொண்டு எத்தனை நாள்தான் சாப்பிடுவது? இருங்கள், தோசை பற்றி மெதுவாகச் சொல்கிறேன். அதற்காக ஆரம்பித்த பதிவுதான் இது. முன்னுரை நீளமாகி விட்டது. எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்...!

1.4.14

மன்னார்குடி

                           
  
                    
மன்னார்குடியை அடைந்தபோது இரவு மணி 7.30. பயணக் களைப்பு பாதி. பயணத்தில் சாப்பிடக் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் காலாவதியாகுமுன்பு வீண் செய்யாமல் சாப்பிடவேண்டுமே என்ற கவலை பாதி.     
      
  
சப்பாத்திகளையும், உருளைக்கிழங்கு மசாலாவையும் மீள்சூடு செய்து சாப்பிட்டு முடித்தபோது இரவு மணி எட்டைத் தொட்டிருந்தது.  
     
ராஜகோபால ஸ்வாமி கோவில் ஒருநடை சென்று வந்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோமே தவிர, பேச்சிலேயே நேரம் சென்று விட, போலேரோவில் உட்கார்ந்து பயணம் செய்த களைப்பில் பாதிபேர் படுத்துவிட, கோவில் செல்வது காலை அதிகாலை என்று முடிவானது!  
          
இரவு பதினொன்றரை மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுப்பபட்டோம். "பெருமாள் வீதி உலா வருகிறார்... கோவிலுக்குத்தான் போகலை.. வந்து பாருங்க"   
                                     
                                                                                     
அங்கு வராததற்கு மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தரிசித்தோம்.          
              
    
பெருமாள் புன்னகையுடன் பல்லக்கில் கடந்து சென்றார். தெருவெல்லாம் அவரை வரவேற்று புதிய கோலங்கள் தெருவை அடைத்து போடப்பட்டிருந்தன.    
     
     
          
மறுநாள் காலை எழுந்து குளித்து கோவில் கிளம்புவதற்குள் ஆனை உம்மாச்சியுடன் ராஜகோபாலன் மறுபடி வீதியுலா வந்து காட்சி தந்தார். கோவில் புறப்பட்டோம்.    
     
              
    
செருப்புகள் வைக்க ஸ்டேன்ட் இல்லையோ என்று எங்களுக்குள் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே சென்றதற்கு காதில் விழுந்து கோவில் வாசலில் ஓரமாக உட்கார்ந்திருந்தவர் "தைரியமா அப்படியே போட்டுட்டுப் போங்க... எந்த பயமும் வேண்டாம் .". என்றார்!
                   
பெரிய கோவில்.
              
                 
விறுவிறுவென பெருமாள் சன்னதியை அடைந்தோம். உற்சவரை உலா அனுப்பிவிட்டு  தாயார்களுடன் ஏகாந்தமாய் இருந்தார்.  
        
யாருமே இல்லாமல் மிக அருகில் தரிசனம். கை நீட்டினால் நம் கையைப் பற்றி குலுக்கி விடுவாரோ, அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்வாரோ என்று எண்ணும் அளவு அருகில். பட்டாச்சார்யார் சரித்திரம் சொல்லி கற்பூரம் காட்டி, இரண்டு மாலைகளை பெருமாளின் திருமேனியிலிருந்து உருவி எங்களிடம் தந்து மகிழ வைத்தார். (தட்டில் 20 ரூபாய்)     
                   
கோவிலை அவசரச் சுற்றுச் சுற்றிக் கிளம்பினோம்!