செவ்வாய், 11 ஜூலை, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள். டி என் முரளிதரன் - சீதை12




     சீதா ராமன் மன்னிப்புத் தொடரில் இந்த வாரம் மூங்கில் காற்று திரு டி என் முரளிதரன் படைப்பு வெளியாகிறது.




==================================================================




ஸ்ரீராம் அவர்களுக்கு,

     சமீப காலமாக அதிகமாக எழுத முடிவதில்லை. தங்களின் தந்தையார்  கொடுத்த  ஈற்றடியை வைத்து   கதை எழுத அழைப்பு விடுத்ததன் காரணமாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஒரு பக்க அளவிற்கே எழுத நினைத்தேன்.ஆனால் இவ்வளவு நீளமாகக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. இக்கதை எனது கற்பனையே. இதில் குறைகளும்  தவறுகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். பிழை திருத்தம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.


     வெளியிடுவதற்கு முன்பாக தங்கள் கருத்தை மின்னஞ்சலில் முடிந்தால் தெரிவிக்கவும்


அன்புடன் 
டி.என்.முரளிதரன் 
வலைப்பதிவு
மூங்கில் காற்று



=======================================================================

    சீதை ராமனை மன்னித்தாள் 
           டி.என்.முரளிதரன்


பட்டாபிஷேகம் முடிந்தது.அயோத்தி ஆனந்ததத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தது. முடிசூட்டிகொண்ட ஸ்ரீராமபிரானுக்கு  பக்கத்தில்  சீதா பிராட்டியும்  அயோத்தி அரியணையில்  அமர்ந்த காட்சியைக் கண்ட அயோத்தி மக்கள் பரவச நிலையில் கிடந்தனர். குறையிலா அழகு கொண்ட இருவரும் எவ்வளவு பொருத்தம் என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். தேவர்களைப் போல கண்ணை இமைக்காத சக்தி இருக்கக் கூடாதா என்று  ஏங்கினர். 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் விண்ணை நிறைத்தது.  சீதாப்பிராட்டியின் சௌந்தர ரூபம் விவாகத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. அட1 அந்த ராவணன் மயங்கியதில் தவறு ஏதுமில்லை என்றே பேசிக் கொண்டனர்.


   ரிஷிகள், ஆன்றோர் சான்றோர் சக தேசத்து மன்னர்கள்  வந்து வாழ்த்திக் கொண்டிருந்தனர்.  அனைவரும்  மனமின்றி  கலைந்து சென்றனர் 


       அடுத்த நாள்  காலை அரண்மனை  நந்தவனத்தில்   வாயு மைந்தன்  மண்டியிட்டுக் கண்மூடி  நேற்றைய பட்டாபிஷேகக் காட்சியை  கண்ணாரக் கண்டு கொண்டிருந்தான். அவனது திருவாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தது.எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா என்று மனம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது 


"ஆஞ்ச நேயா!" குரல் கேட்டு கண் திறந்தான் ஹனுமான்
எதிரே லட்சுமணன் நின்று கொண்டிருந்தான்.

" தாங்களா  என்னை அழைத்தீர்கள்?. தங்கள் திருமுகத்தில் ஏதோ விசனம்  உள்ளதாகத் தெரிகிறதே. "

"ஆம், மாருதி. மனம் சஞ்சலமாக உள்ளது. என் சஞ்சலம் நீக்க இருவரால் மட்டுமே முடியும். ஒன்று சீதாப் பிராட்டியார். இன்னொருவர் நீ. சீதம்மையிடம் கேட்க என் தன்மானம் இடம் தரவில்லை . அப்படிக் கேட்பது எனது அண்ணாவுக்கு அவப் பெயராகி விடுமோ என்றும் அஞ்சினேன். அதனால் சொல்லின் செல்வனே! உன்னிடம் வந்தேன். "

    "என் நெஞ்சில் குடியிருக்கும் எம்பெருமானின் சாயலை ஒத்தவரே!தங்களின் ஐயத்தை நான் எப்படித் தீர்க்க முடியும். நான் சாதாரண ராமதாசன் தானே! என்னால் செய்ய முடிந்தது ஏதேனும் இருப்பின் ஆணையிட்டுச் சொல்லுங்கள்! என் சிரம் கொடுத்தேனும் செய்ய சித்தமாய் இருக்கிறேன் "

       நேற்று பட்டாபிஷேகம் முடிந்ததும் நான்  மாறுவேடமிட்டு நகர்வலம் வந்தேன். எங்கு நோக்கினும் மக்களின் பேச்சு சீதா,ராமரைப் பற்றியே இருந்தது.ராமபிரானின் மாண்பை  விட  என் அன்னைக்கு நிகரான  சீதாப் பிராட்டியின் பெருமை  பற்றியே இரவு முழுவதும் பேசித்தீர்த்தனர்  அப்போது  ஒரு  பெண்மணி சொன்னதுதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது...."

     சற்று நிறுத்திய  லட்சுமணனை உற்று நோக்கிய ஆஞ்சநேயன் அமைதியையே கடை பிடித்தான் .
       
    லட்சுமணன் தொடர்ந்தான்  "சொக்கத் தங்கமாகிய ஜானகியை தீக்குளிக்க வைத்து விட்டாரே தசரத மைந்தன். எப்படி கோபம் கொள்ளாமல் சீதை ராமனை மன்னித்தாள் என்றார். ஸ்ரீராமனின் செயல் அவ்வளவு எளிதில் மன்னிக்கக் கூடியதா? என்று அந்தப் பெண்மணி கேட்ட கேள்விதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது.

      "யுத்தம் முடிந்து இராவணன் வீழ்ந்தான்.     அப்போது நீ, நான் எல்லோரும் அருகில் தானே  இருந்தோம். அசோக வனத்தில்  இருந்து  ஆவலோடு வந்த சீதா தேவியின் முகத்தைக் கூடப் பாராமல்   ராமன் சிந்திய  மொழிகள் எனக்கே சினத்தை ஏற்படுத்தியது.  தன்னை நிருபிக்க என்னை அழைத்து விறகு கொண்டு வந்து தீமூட்ட ஆணையிட்டார் பிராட்டி. ஆனால்  அண்ணனோ கிஞ்சித்தும் கருணை காட்டவில்லை. நான் மூட்டிய தீ அந்தக்  பதிவிரதையை ஒன்றும் செய்யவில்லை. ராமன் சீதையை ஏற்றுக் கொண்டு சொன்னது உனக்கு  இருக்கிறதா ?"

"நன்றாக நினைவிருக்கிறது ஐயனே! நான் பரிட்சை வைத்தது எனக்காக அல்ல. உன் புனிதத்தை உலகறியச் செய்யவே " என்றாரே கோதண்டராமன். பின்னர்  சீதாப் பிராட்டியுடன் மகிழ்ச்சியோடு  ஒன்று  சேர்ந்ததை இப்பூவுலகமே அறியுமே!"

    "ஆம்!. ஆஞ்சநேயா! நானும் அண்ணன் மீது கொண்ட கோபத்தை மறந்து சமாதானம் ஆனேன். ஆனால்  இப்போது அயோத்திப் பெண்மணி ஒருத்தி பேசியதைக் கேட்டதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பேரமைதி தவழும் பிரகாசமான  சீதாப் பிராட்டியின் முகம் அகத்தில் உள்ள கோபத்தை வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். உண்மையில் என்அண்ணன்  ராமனை சீதா தேவியார் மன்னித்திருப்பாரா? நீதான்கூற வேண்டும்"
   .
  "ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் அன்பிற்குரிய சகோதரரே! தாங்கள் அனைத்தும் உணர்ந்தவர். தங்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய அளவுக்கு என்னிடம் ஞானம் ஏதுமில்லை. ராமநாமம் தவிர வேறேதும் அறியாத  மூடன் நான். என்றாலும் சொல்கிறேன்.

   "இராவணன் கடத்திச் சென்ற சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கை சென்றேன்.அழகான அசோக வனத்தில் அவரைக் கண்டேன்.நானே தங்களை ராமனிடம் சேர்த்து விடுகிறேன். என் தோளில் அமருங்கள் என்றேன். அது என் ராமனுக்குப் பெருமை சேர்க்காது என்றார்.

 அப்போது இராவணன் சொன்னதை என்னிடம் சொன்னார் ஜானகிதேவி 

    ."மாருதி! அந்த பாதகன் இராவணன் என்ன சொன்னான் தெரியுமா? அவன் மிகவும் நல்லவனாம். அவன் நல்லவனாக இருப்பதால்தான் என் சம்மதம் கேட்டு என்னை உரிமையாக்கிக் கொள்ள தன் நிலை இறங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறானாம். ராமன் வந்து உன்னை மீட்டுச் செல்ல வாய்ப்பே இல்லை . என்னைக் கொன்ற பிறகே அது நடக்கும். அகில உலகத்தில் என்னை வெற்றி கொள்ள யாராலும் இயலாது என்று உனக்குத் தெரியாதா .மூடப் பெண்ணே! அப்படியே அவன் என்னை வென்று உன்னை மீட்டாலும் உன்னை மனமார ஏற்றுக் கொள்வான் என்றா நினைக்கிறாய்? அன்னியர் தேசத்தில் கண்காணாது இருந்த மனையாளை ஏற்றுக் கொள்ளும் உயர் குணம் எந்த மானிடனுக்கும்  இருக்காது. நீ வேண்டுமானால் பார்." என்று பரிகசித்ததை என்னிடம் சொன்னார்.

 ஆனால்  ஜானகியைக் கண்ட சந்தோஷத்தில் இது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. ஸ்ரீதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியின் கணையாழியை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியில்   இச் செய்தியை நான் ஸ்ரீ ராமபிரானிடம் தெரிவிக்கவில்லை .

      யுத்தம்  முடிந்து ராமச்சந்திர மூர்த்தி   சீதையை சந்தித்தபோது நெருப்பு வாத்தைகளை வீச,   தாங்களோ தீ மூட்டினீர் . அப்போது சீதாப் பிராட்டியார் என்னைப் பார்த்தார் . அந்தப் பார்வை என்னைக் கலங்க வைத்தது. ராவணன் சொன்னதை உன் இஷ்ட தெய்வம்   உண்மையாக்கி விட்டாரே! இதை நீ சொல்லவில்லையா     என்பது போல் இருந்தது. என் நாயகனுக்கு நான் எப்படி அறிவுரை சொல்ல முடியும். ஆனால் தீங்கு ஏதும் விளையாது என்று மட்டும் நம்பினேன். அப்படியே நடந்தது. ஆயினும்  இப்போது தங்களுக்கு  ஏற்பட்ட சந்தேகம் எனக்கு அப்போதே ஏற்பட்டது 

   ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை சீதையிடம் கோரினேன் . " தாயே! தங்களின் பொருள் பொதிந்த பார்வை என்னை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராமபிரான் தங்களை சோதனைக்கு உட்படுத்தியதை   நானும் விரும்பவில்லை. மகா பதிவிரதையான தங்களின் கோபம் என் ஸ்ரீ ராமனை பாதித்துவிடக் கூடாது. எனவே தாங்கள் என் இதயராமனை மன்னித்தீரா என்பதை தெளிவிக்க வேண்டுகிறேன்" .

  அப்போது அவர் கூறினார்  "எல்லோரையும் மன்னிக்கும் தயாள  குணம் கொண்ட அவதார புருஷன் அல்லவா என் ஸ்ரீராமன். தன்னை வனவாசம் செய்யும் சூழ்நிலையை உருவக்கிய தசரதனை மன்னித்தவர் அவர். பரதனுக்கு முடி சூட்ட விரும்பி ராமனைக் காட்டுக்கு அனுப்ப தசரதனை நிர்பந்தித்தத கைகேயியும் மன்னிக்கத் தயங்கவில்லை என் ராமன். அவளுக்கு துர்போதனை செய்த மந்தரையையும் சங்கடமின்றி  க்ஷமித்தவன் கோசல ராமன். அகலிகைக்கு  சாப விமோசனம்  தந்தவன் என் ராமன் .அவரது தயாள குணமும் கருணையும் அன்பும்  பூலோகப் பிரசித்தி பெற்றவைதானே! எனக்கு பாதுப்பாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தை கொண்டு இவ்விடம் விட்டு செல்லலாகாது   என்று ஆணையை, என் நிந்தனையை பொறுக்காது வேறு வழியின்றி மீறி    என்னை   தனியாக விட்டு சென்ற லட்சுமணனையும் ராமன் மன்னித்தார்,  ஆனால் என் பிராண நாதர்  மன்னிக்கப் படும்  சூழ்நிலை ஏற்கனவே ஒரு முறை  உருவாகி விட்டதே.!

"பிராட்டியே! என்ன சொல்கிறீர்கள்?

  "மாவீரன் வாலியை மறைந்து  நின்று கொன்றார் என்று நீ தானே சொன்னாய்.  யுத்த தர்மத்திற்கு எதிராக ராமன் நடந்து கொண்டதால் வாலியின் மன்னிப்பு ஸ்ரீ ராமனுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இப்போது என் கோபமும் வருத்தம் காரணமாக  இன்னொரு  பாவமும்   என்   ராமனை சூழ விடுவேனா? அது மட்டுமல்ல பகவான் ஸ்ரீராமனையே மன்னிக்கும் பேறு   கிட்டியது என்  பாக்கியம் அல்லவா? வேறு யாருக்கு இது வாய்க்கும்." என்று சீதாப் பிராட்டி சொன்னதை லட்சுமணனுக்கு கூறிய ஹனுமான் 


"ஐயனே! ஐயம் வேண்டாம்! தாங்கள் நிம்மதியாகச் செல்வீர். மேற்சொன்ன காரணங்களால்தான் "சீதை ராமனை மன்னித்தாள்"

.
************************************************


ஸ்ரீராம் சார்! இத்துடன்  கதையை முடித்துக் கொள்ளலாம் என்றாலும் சற்று தொடர அனுமதி வேண்டுகிறேன்,.




****************************************************** 


...ஐயனே! ஐயம் வேண்டாம்! தாங்கள் நிம்மதியாகச் செல்வீர். மேற்சொன்ன காரணங்களால்தான் "சீதை ராமனை மன்னித்தாள்"

  லட்சுமணன் சஞ்சலம் நீங்கி."அஞ்சனை மைந்தனே! நற்சொல் கூறினாய். என் தாய்க்கு நிகரான சீதா தேவியின் கோபம் அகத்துள் இருந்துவிடக் கூடாது என்றே அஞ்சினேன்.இப்போது தெளிந்தேன். ஜானகி தேவியாரின் நெஞ்சில் கோபம் இல்லை.  இனி ஸ்ரீராமனுக்கு அபவாதம் ஏற்படாது என நிம்மதி  கொள்வேன் " என்று உருகினான் 

"கருணா மூர்த்தியை தமையனாகக் கொண்டவனே! சீதாதேவி தாயார் ராமனை மன்னித்து விட்டார். ஆனால் ..."

"என்ன ஆனால்...." பதறினான் லட்சுமணன் 

"மன்னிப்பு கிடைக்க வேண்டியவர் இன்னொருவரும் உண்டு.""
"யார் அது? உனது சொல்லின் அர்த்தம் விளங்க வில்லையே. யார் அந்த அபாக்கிய சாலி யார்?  யாரால் மன்னிக்கப் படவேண்டும் "

"ஸ்ரீராமன் தண்டகாருண்யம்  செல்லும்போது தாங்களும்  சீதா தேவியும் பிடிவாதமாகக் கூட சென்றீர்கள்.அதற்கு தாங்கள் அனுமதி பெற்றீர்களா"

"ஏன் இந்த சந்தேகம்? என் தந்தையிடமும்  ஸ்ரீராமனிடமும் அனுமதி பெற்றுத்தானே சென்றேன்!

"யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவரிடம் பெற்றீர்களா? அவர் எண்ணத்தை அறிந்தீர்களா? நீங்கள் தண்டகாருண்யம் சென்றீர்கள் ஆனால் 14 ஆண்டுகாலம்  தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? அதற்கு தங்களுக்கு  உரிமை இருக்கிறதா?

"மாருதி நீ என்ன சொல்கிறாய்....."

"ஐயனே! நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்கள்  சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு உங்களுக்கு  கிடைத்ததா என்று எண்ணிப் பார்த்தீர்களா?  தெரிந்து வருவீர் ஐயனே!"  என்று சொல்லி விட்டு மீண்டும் கண்ணை மூடி ராமநாமம்  ஜபிக்கத் தொடங்க 

லட்சுமணன் திகைத்து நின்றான்.





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்...
.

28 கருத்துகள்:

  1. ஆஹா. அம்மா சீதா உன,கருணையே கரணை. அநுமன் நாம்ம் என்றும் வாழ்க. திரு முரளிதனுக்கு மனப் பூர்வ நன்றி. மிக நன்றி ஶ்ரீராம். முத்தான கற்பனை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம் கடைசியில் ஊர்மிளையிடம் வந்து முடித்து விட்டார். என்றாலும் அற்புதமான எழுத்தாற்றல். நல்ல கூர்ந்த நோக்கு! புராணங்களை எப்படிப் படிக்க வேண்டும் என்ற கோணத்தை நன்றாகப் புரிந்து கொண்டு படித்திருக்கிறார். வாழ்த்துகள். எளிமை, அதே சமயம் இனிமை.

    பதிலளிநீக்கு
  3. முரளிதரன் கதை அருமை.
    லட்சுமணன் , அனுமன் உரையாடல் அருமை.
    லட்சுமணனுக்கு ஆறுதலும் அளித்து, அடுத்து புயலையும் உருவாக்கி விட்டார் அனுமன்.
    நல்ல கேள்வி !

    ஊர்மிளாவின் எண்ணங்களை ரேடியோ மிர்ச்சியில் வைத்தார்கள்.
    லடசுமணன் ஊர்மிளா உரையாடல் நன்றாக இருக்கும்.
    முரளிதரன் ஊர்மிளாவை வைத்து ஒரு கதை எழுத கேட்டுக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  4. அருமை நண்பரே வாழ்த்துகள்
    வெளியிட்ட ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. கடைசியில் கேட்ட கேள்வி நல்ல கேள்வி!

    பதிலளிநீக்கு
  6. கைகேயி வாங்கிய வரத்தால் ஊர்மிளாவும் ஸ்ருதிகீர்த்தியும் மாண்டவியும் கூட சுக போகங்களை இழந்தார்கள்..

    நானும் உடன் வருகின்றேன்!.. - என்று புறப்பட்ட ஊர்மிளாவின் அன்பு புறக்கணிக்கப்பட்டது..

    அண்ணனின் பணிக்கு அடுத்தொரு பணி ஏதும் இல்லை.. - என்று நடந்த லக்ஷ்மணப் பெருமாளை எண்ணி ஊர்மிளையின் மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடிக் கிடந்தனவோ!..

    இராமாயணம் தந்த முத்துக்களுள் ஊர்மிளா தனிச் சிறப்புடையவள்..

    வாழ்க ஊர்மிளா!..

    ஊர்மிளாவைக் களத்தில் நிறுத்தி கதை வடித்த திருமிகு முரளிதரன் அவர்கள் வாழ்க..
    தளத்தில் வழங்கிய ஸ்ரீராம் அவர்களும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. கதையின் தொடர்ச்சி பிடித்திருந்தது!!

    பதிலளிநீக்கு
  8. ஊர்மிளையோடு கதையை முடித்தது சிறப்பாக இருந்தது. ராமாயணத்து நிகழ்ச்சிகளிலேயே கதையைக் கொண்டுபோயுள்ளதையும் நல்ல உரையாடல்களையும் ரசித்தேன். த ம +1

    பதிலளிநீக்கு
  9. கதை தொடர்ந்தது "வாவ்...!" வாழ்த்துகள் நண்பர் முரளிதரன் அவர்களுக்கு...

    பதிலளிநீக்கு
  10. நன்றி முரளி அருமை! நண்பர் இராமுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. http://sivamgss.blogspot.in/2006/12/blog-post_11.html ஊர்மிளையின் விரகம் குறித்து மைதிலி ஷரண்குப்தாவின் சாகேத் ராமாயணக் கவிதையிலிருந்து சில பகுதிகளைப் பதிவு எழுத ஆரம்பித்தபோது பகிர்ந்திருந்தேன். சிநேகிதி ஒருவரின் வேண்டுகோளுக்காக. அதன் சுட்டி இங்கே இணைத்திருக்கிறேன். ஹிஹிஹி! எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! :))))

    பதிலளிநீக்கு
  12. மிக மிக அற்புதமான கதை...

    படிப்பவருக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தையும்...

    மன்னிப்பதில் சீதையின் எண்ணங்களும் ஆஹா அருமை...

    பதிலளிநீக்கு
  13. Concise and compact from the Classic. வேகமாகச் சென்று ஊர்மிளையில் போய்நின்றது நன்று.
    ராமாயணத்தில் கவனிக்கப்படவேண்டிய பாத்திரங்களுள் ஒன்று லக்ஷ்மணனின் மனைவி.
    பாராட்டுக்கள் ஆசிரியருக்கு.

    ஹிந்தி கவிஞர் மைதிலி ஷரன் குப்தாவின் கவிதைப்படைப்பான ‘சாகேத்’ ராமாயணத்தின் அதிகம் பார்க்கப்படாத ஒரு பகுதியான ஊர்மிளையின் வாழ்வைக் கோடிட்டுச்செல்கிறது. இதனைப்பற்றி கீதாஜி தன் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. நன்றி முரளி வாழ்த்துகளுடன் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  15. அழகான தமிழ் நடையில் அசாத்தியமான அட்டகாசமான கதை முரளி சார்..முடிவும் அருமை......

    கீதா: என் மனதில் அடிக்கடி எழும் ஓர் எண்ணம் சீதையைத் தீக்குளிக்க வைத்தது, மற்றும் ஊர்மிளையின் மனம்.... உங்கள் முடிவாகியிருப்பது....அருமை சகோ. லக்ஷ்மணனும் மாருதியும் பேசத் தொடங்கிய போது நான் நினைத்தேன்...அட ஊர்மிளா லக்ஷ்மணனை மன்னிப்பது பற்றி என்று நினைத்தேன்...இரண்டையும் கலந்து கட்டி அழகிய தமிழில் சொல்லிவிட்டீர்கள்....மிக மிக ரசித்தேன் உரையாடல்களை....பாராட்டுகள், வாழ்த்துகள்...சகோ

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு. இலட்சுமணனின் கேள்வியும், ஹனுமனின் பதிலும். வரிக்குவரி ரஸித்துப் படிக்கும்படி இருக்கிறது.கதாசிரியருக்கும்,ஸ்ரீராமிற்கும் பாராட்டுகள். எத்தெத்தனை மன்னிப்புகள். இன்று கேள்வி ஊர்மிளைக்கும். வாழ்த்துகள். அன்புடன்.

    பதிலளிநீக்கு
  17. எதிர்பாராத திருப்பம். சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  18. வித்தியாசமான கோணத்தில்,தெளிவான நடையில், அழகான கதை.

    பதிலளிநீக்கு
  19. கதையை ரசித்தேன். மூங்கில் காற்று திரு முரளீதரனுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. #ஆனால் 14 ஆண்டுகாலம் தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? #
    சபாஷ் சரியான கேள்வி முரளிதரன் ஜி ,பழி ஓரிடம் ,பாவம் ஓரிடமா :)

    பதிலளிநீக்கு
  21. மனதைத் தொட்டது கதை. எல்லாக் கதைகளும் சீதையைப் பற்றிச் சொல்ல, முரளிதரன் எல்லோருடைய கவனத்தையும் ஊர்மிளை பக்கம் திருப்பிவிட்டார். புராணக் கதைகளை எழுதுவது மிகவும் கடினமான காரியம். மிகவும் அனாயாசமாக அதைச் செய்திருக்கிறார், முரளி.
    கதையை படித்து முடித்துவிட்டு, கீதாவின் தளத்திற்கும் சென்று படித்துவிட்டு வந்தேன். 'சாகேத்' ராமாயணத்தில் ஊர்மிளையின் நிலை வெகு சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீமைதிலி சரண் குப்தாவின் கவிதை வரிகளில், கீதாவின் மொழிபெயர்ப்பில் ஊர்மிளை நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளுகிறாள்.
    அருமையான கதையைப் பின்னிய முரளிக்கும், ஊர்மிளையை பற்றிய கவிதையைப் பகிர்ந்து கொண்ட கீதாவிற்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  23. ராமயணக் கதையில் சில பகுதிகளை உரையாடலாக எழுதி சிறு கதை வடிவம் கொடுத்த முரளிக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  24. அருமையான கதை. பாகம் இரண்டு மிகச் சிறப்பு. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஸ்ரீராம் சார்.தாமதத்திற்கு மன்னிக்கவும் ஏப்ரல் மாதம் அனுப்பியது.கிட்டத் தட்ட மறந்தே போய் விட்டேன். பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.இது போன்ற கதையை எழுதியது இதுவே முதன் முறை.கருத்தும் பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும்
    தனித்தனியாக மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!