வியாழன், 10 நவம்பர், 2016

அவர் சொன்ன அந்தப் பொய்..



     அஞ்சு பொண்ணு பெத்தவன் அரசனே ஆனாலும் ஆண்டியாவான் என்று முன்னெல்லாம் சொல்வார்கள் தெரியுமோ?   இப்பல்லாம் அப்படி இல்லைங்க..  பொண்ணு கிடைக்கிறதே ரொம்பக் கஷ்டமா இருக்கு.  ஒவ்வொருத்தர் வீட்டிலும் குதிர் குதிரா பசங்கதான் கல்யாணத்துக்குக் காத்துக்கிட்டிருக்காங்க...

     ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம்!  அப்போ பெண்களை பூனை என்கிறீர்களா என்று யாரும் சண்டைக்கு வர மாட்டீர்கள்தானே?

     மேட்ரிமோனி ஆகட்டும்,  மற்ற இடங்கள் ஆகட்டும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகைக் கஷ்டம்.  இப்பல்லாம் ஆண்கள் கிட்ட வரதட்சணை கேட்காததுதான் பாக்கி..  இல்ல, அதுவும் எங்கேயாவது கேட்டுட்டாங்களோ என்னவோ...   ஆனா அப்படிக் கேட்டாக் கூட நல்லதுதாங்க...  அப்படியாவது ஒரு பொண்ணு கிடைக்கும் பாருங்க..   கிடைக்கற விலையில் வாங்கிடலாம்! அப்படி ஆயிப்போச்சுங்க நெலம..

     வருடமலர் முதல் வாரமலர் வரை, சங்கங்கள் முதல் நண்பர்கள் வரை எல்லோரையும் குடைந்தெடுத்து விசாரித்து ஒரு அலைபேசி எண்ணை வாங்கி அதற்கு பேசுவோம்.  இப்பல்லாம் பொண்ணு வீட்டுலேருந்து தொடர்பு கொள்வதே இல்லை.  பிள்ளை வீட்டிலிருந்துதான் முதல் முயற்சி முதல் தொடர் முயற்சி வரை எடுக்கணும்..  நாம் ஒவ்வொரு விவரமாகச் சொல்லக் சொல்ல விவரமாக கேட்டுப்பாங்க..  அப்புறம் அவங்க பதில் இப்படியெல்லாம் இருக்கும்..

-     "ஏங்க..  அங்க சரியாய் படிச்சீங்களா?  நாங்கள் B E, B tech தான் பார்க்கறோம்..  B Com லாம் வேண்டாம்..." (அங்கே அதைப் போட்டிருந்தால் நாங்க ஏன் ஃபோன் போட்டு காசை வேஸ்ட் பண்றோம்?)

-      "உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?  இத்தனை வருஷமா சென்னைல இருக்கேன்ங்கறீங்க..  அது கூட இல்லாம எப்படி?  எங்களுக்கு விருப்பமில்லை"

-      "ம்....  பீ காமா.. இவ்வளவு சம்பளமா?  ... நட்சத்திரமா?  என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சேங்க... "  (அதை ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டியதுதானே...அல்லது அந்தப் புத்தகத்தில் அப்டேட் செய்திருக்க வேண்டாமா?)

-       "பையனுக்கு பேங்க் பாலன்ஸ் எவ்வளவு?  சொந்த வீடு இருக்கோ?  கூடப் பொறந்தவா இருக்காளா?  அவங்க வேலை பார்க்கறாங்களா?  என்ன வேலை?"

      இப்படிக் கேள்விகள் ஒரு பக்கம்..  மேட்ரிமோனி பக்கத்துல பொண்ணுங்க சிலபேர் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லியிருப்பதைப் படித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.  என்னன்னு சொல்ல மாட்டேன்.  "ஏன்..  இதை எல்லாம் ஆம்பளைங்க செஞ்சா சரியா?"  ன்னு என்மேல பாய்ஞ்சுடுவீங்க..   அதே போல அவர்கள் போடும் நிபந்தனைகளைப்....  வேண்டாம்.  இவை இங்கு தேவை இல்லை!  ஸோ, 'பரவாயில்லையே, வெளிப்படையா இருக்காங்களே' ன்னு பாராட்டிட்டு அடுத்த விஷயத்துக்கு வந்துடறேன்.

      அதே போல இந்த மேட்ரிமோனி செய்யும் வியாபாரம் இருக்கே..   சில மேட்ரிமோனிகளில் ஒரு வருடத்துக்கே 700 ரூபாய், 800 ரூபாய்தான்!  நான் பதிவு செய்திருக்கும் ஒரு மேட்ரிமோனி மூன்று மாதத்துக்கு 3,700 ரூபாய்!  அப்புறமும் அங்கு, "உங்கள் பெயரை முதல் பக்கத்தில் தெரிய வைக்க வேண்டுமா?  கட்டு 650 ரூபாய்.  chat செய்ய வேண்டுமா?  கட்டு 1,000 ரூபாய்" என்றெல்லாம் பாப் அப் செய்திகள் வந்து கொண்டே இருக்கும்!


     இப்போது எங்கள் நண்பர்கள் வட்டம் இதனாலேயே பெருகி விட்டது.  'உங்கள் ரிலேஷன்ல பொண்ணு யாராவது இருந்தா சொல்லுங்க... நீங்க பார்க்கும் இடங்கள்ல பொருத்தமா பொண்ணு இருந்தா சொல்லுங்க...   இப்படிச் சொல்லி நம்பர் வாங்கி வாட்சாப்பில கூட நிறைய நண்பர்கள்!  நிரம்பி வழிகிறது!

     அவங்களும் ஆத்மார்த்தமா உதவறாங்கதான்..  ஆனா நமக்கு அமையணுமே..

    சமீபத்தில் ஒரு நண்பர் கோவிலில் யதேச்சையாகப் பார்த்த ஒரு வரன் பற்றிச் சொல்லி நம்பர் கொடுத்தார்.

     "நான் விசாரிச்ச வரைக்கும் எல்லாம் ஓகே..  படிப்பும் சரி, சம்பளமும் சரி... ஓகே.  மிடில் க்ளாஸ் ஃபேமிலிதான்.. நட்சத்திரமும் பொருந்தறது...  கோத்ரமும் வேறுதான்..  பேசிப் பாருங்க" என்றார்.

     அலைபேசி எண் வாங்கி கொண்டு சற்று ஒழிந்த நேரத்தில் பேசினேன்.


     எங்கள் அனுபவத்தில் இப்பல்லாம் ஃபோன் போட்டால் நாங்களே சில விவரங்களை கடகடவென்று, அதே சமயம் சொல்லும் கிரமத்தில் சொல்லி விடும் வழக்கம் வந்திருந்தது. 

     பேசியவர் பெண்ணின் அப்பா போலும்.  பேசிய விவரங்களைக் கேட்டுக் கொண்டவர்..

     "அடடா..  நல்ல வரனா இருக்கு..  ஆனா ஒரே கோத்ரமாப் போச்சே..  கவலைப் படாதீங்க..  எங்களுக்குக் கொடுத்து வைக்கலை.  உங்களுக்கு சீக்கிரமே வேறு நல்ல இடமா அமையும்" என்றார். 

     அவர் அணுகிய விதமும், பேச்சின் மென்மையும், 'இந்த வரன் வேண்டாம்' என்பதை நாசூக்காக மறுக்க கோத்ரம் பற்றி...... 

     அவர் சொன்ன அந்தப் பொய் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.  


     அநேகமாக அவருக்கும் கல்யாண வயசில் ஒரு பையன் இருக்க வேண்டும்.  



     அவர் பெண்ணுக்கும் எங்கள் பையனை விட அவர் விரும்பும் வண்ணம் நல்ல வரன் சீக்கிரம் அமைய வாழ்த்தி ஃபோனை வைத்தேன்.

42 கருத்துகள்:

  1. 'பையனை வைத்திருப்பவர்கள் நல்ல பெண் தன் குடும்பத்திற்கு ஏற்றவள் எனத் தெரிந்தால், திருமண செலவையும் தானே ஏற்று, வரதட்சணையும் தந்து ஏற்கும் பழக்கம் கிராம புறங்களில் இருந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. 'பையனை வைத்திருப்பவர்கள் நல்ல பெண் தன் குடும்பத்திற்கு ஏற்றவள் எனத் தெரிந்தால், திருமண செலவையும் தானே ஏற்று, வரதட்சணையும் தந்து ஏற்கும் பழக்கம் கிராம புறங்களில் இருந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  3. என்ன செய்வது நண்பரே
    முன்பெல்லாம் உறவினர்களே உதவுவார்கள்
    இன்று மேட்ரிமோனியலை நம்ப வேண்டிஇருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. முதலிலேயே மறுக்க கோத்ரம்,பிறகு மறுக்க ஜாதகம் :)

    பதிலளிநீக்கு
  5. பொண்ணும், முதல் வேலையும் கொஞ்சம் ஒளிஞ்சுக்கிட்டு போக்குக் காட்டும், சரியான சமயம் வரும்வரை. கவலை கொள்ளாதீர்கள்.

    இன்னும் சில ஜெனெரேஷனிலேயே, பையன், பெண் வீட்டுக்குக் குடிபெயர்வது (இது இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலும் உண்டு) நடக்க ஆரம்பித்துவிடும். பெற்றோருக்குப் பெண்பிள்ளை இல்லைனா தனியாத்தான் இருக்கணும் இன்னும் கொஞ்ச ஜெனெரேஷனில்.

    எங்கள் பிளாக் வாசகர்கள் எல்லோரையும் திருமணவைபவத்துக்கு அழைப்பது என்று நினைத்துக்கொள்ளுங்கள். (அதுக்காகத்தான் பழைய 500 ரூக்களைப் பத்திரமா வச்சுருக்கேன்) கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும்.

    பதிலளிநீக்கு
  6. //உங்களுக்கு சீக்கிரமே வேறு நல்ல இடமா அமையும்" என்றார். //

    அவர் வாக்கு பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வாழ்த்தும் பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. கோமதிம்மா வாக்குப் பலிக்கட்டும் :).

    பதிலளிநீக்கு
  9. இதுவரை இருந்த பேட்ரியார்கியல் சொசைட்டி இப்போது மாட்ரியார்கியல் சொசைட்டியாக மாறுவதன் அறிகுறியே இது

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே வியாபாரமாகி விட்டது இனி வரும் காலங்களில் அரபு நாடுகளைப்போல ஆண்கள்தான் வரதட்சினை கொடுக்க வேண்டியது வரும்.

    பதிலளிநீக்கு
  11. இது இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகத்தான் உள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது.

    எங்கள் உறவிலும் 3 நல்ல பையன்கள் உள்ளனர். எல்லோருமே B.E., படித்து, நல்ல சம்பளத்தில் தான் உள்ளனர். இதில் இருவருக்கு இப்போது 30+ வயதாகி விட்டது. 2-3 வருடங்களாகவே பொருத்தமான பெண் கிடைக்க முயற்சித்து வருகிறார்கள். ஒன்றும் சரிவர அமையாமல் உள்ளது.

    அதில் ஒருவனுக்கு சென்னையில் புத்தம்புதிய சொந்த அடுக்குமாடி வீடும் உள்ளது. கல்யாணம் ஆனதும் நேரிடையாக தனிக்குடுத்தனம் இருக்க வேண்டியதுதான். அவனுக்கு ஒரேயொரு தம்பி மட்டுமே. அவனும் சென்னையில் வேறொரு கம்பெனியில் வேலையில் இருக்கிறான். அவன் இவனுடன் சேர்ந்து இல்லாமல் தனியாகவே வசித்து வருகிறான். அப்பா அம்மா இருவரும் வசதியாக திருச்சி அருகே சொந்த கிராமத்தில் சொந்த வீட்டில் உள்ளனர். அப்பா சமீபத்தில் இரயில்வே ரிடையர்ட். பென்ஷன் உண்டு. ஒருவித வில்லங்கமும் இல்லை. எந்த டிமாண்டுகள் வைப்பதாக இல்லை. பெண் படித்திருந்தால் போதும். வேலை பார்க்கணும் என்ற நிர்பந்தம் கூடக்கிடையாது. மனதுக்குப் பிடித்திருந்தால் போதும். ஜாதகப்பொருத்தம் கூட இனி பார்ப்பதாக இல்லை. கல்யாணச் செலவுகளில் பெரும்பாலும் பிள்ளை வீட்டினரே ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே உள்ளனர்.

    எப்போது பெண் அமையுமோ? எப்போது கல்யாணம் நடக்குமோ?

    இன்று பிள்ளையைப் பெற்றவர்கள், தங்களின் பிள்ளைக்கு வயது ஏற ஏற மிகவும் கவலைப்பட்டு வருகின்றனர்.

    “இவனைச் சீக்கரமாக ஒருத்தி கையில் பிடித்து ஒப்படைத்து விட்டால் போதும், நமக்கு விட்டது விஜாரம்” என நினைத்து புலம்பி வருகிறார்கள்.

    அந்த அளவுக்குக் காலம் மாறிப்போய்விட்டது. இன்று தங்கள் கைவசம் பெண்களைப் பெற்று வைத்துள்ளவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    பதிலளிநீக்கு
  12. ஆயிரம்பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணுவது அந்தக் காலம் ஒரே பொய் சொல்லிகல்யாணத்தை மறுப்பது ஒந்தக் காலம்

    பதிலளிநீக்கு
  13. பெரும்பாலும் காதல் கல்யாணங்களே அமுலில் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு குலம் கோத்திரம் எல்லாமில்லை. தெரிந்தவர்களும் வரன் விஷயங்கள் சொல்லப் பயப்படுகிரார்கள். படித்து வேலைக்குப் போவதால் டிமாண்டுகள் அதிகமாகிவிட்டது. பிள்ளைகளுக்குத்தான் நல்ல காலம் பிறக்க வேண்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. யப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே. ஒரெயொரு பையனை வச்சுக்கிட்டு பயமாயிருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  15. அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. கவலைப் படாதீர்கள், விரைவில் நல்ல மருமகள் அமைவாள்!

    பதிலளிநீக்கு
  16. வாங்க பாரதி.. பழைய கதைகளை விட்டு விடுவோம்! நடப்பு உண்மை சிரமம்.. அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆண் பெண் விகிதாச்சார கணக்கைப் பார்த்தால் கூட பெண் அளவு குறைவான விகிதத்தில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. நன்றி பகவான்ஜி.. ஜாதகம் இரண்டு பக்கமும் பார்க்கும்போது கோத்ரம் தெரிந்து விடும். ஜாதகத்தில் எத்தனை பொருத்தங்கள் என்றும் இரண்டு பக்கத்துக்குமே தெரிந்து விடும்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி நெல்லைத் தமிழன். இது சொந்த அனுபவம்தான். ஆனால் ஓரளவு சொந்தம் அல்ல!!!

    பதிலளிநீக்கு
  20. நன்றி கோமதி அரசு மேடம்... உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜி எம் பி ஸார். உண்மைதான். அமையும்வரை பிரச்னைதான். இந்த பதிலை நான் வெளியிடும் இந்த நாள் உங்கள் பிறந்த நாள். வாழ்த்துகள் ஸார்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க கில்லர்ஜி... ஆண்கள் வரதட்சிணை தரும் நிலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வைகோ சார்...

    //இது இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகத்தான் உள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது//

    ஆமாம்... இங்கும் அதே அனுபவம்தான்.


    //எங்கள் உறவிலும் 3 நல்ல பையன்கள் உள்ளனர். எல்லோருமே B.E., படித்து, நல்ல சம்பளத்தில் தான் உள்ளனர். இதில் இருவருக்கு இப்போது 30+ வயதாகி விட்டது. 2-3 வருடங்களாகவே பொருத்தமான பெண் கிடைக்க முயற்சித்து வருகிறார்கள். ஒன்றும் சரிவர அமையாமல் உள்ளது.//

    சீக்கிரமே நல்ல இடம் அமைய வாழ்த்துகள் ஸார்.

    //அதில் ஒருவனுக்கு சென்னையில் புத்தம்புதிய சொந்த அடுக்குமாடி வீடும் உள்ளது. கல்யாணம் ஆனதும் நேரிடையாக தனிக்குடுத்தனம் இருக்க வேண்டியதுதான். அவனுக்கு ஒரேயொரு தம்பி மட்டுமே. அவனும் சென்னையில் வேறொரு கம்பெனியில் வேலையில் இருக்கிறான். அவன் இவனுடன் சேர்ந்து இல்லாமல் தனியாகவே வசித்து வருகிறான். அப்பா அம்மா இருவரும் வசதியாக திருச்சி அருகே சொந்த கிராமத்தில் சொந்த வீட்டில் உள்ளனர். அப்பா சமீபத்தில் இரயில்வே ரிடையர்ட். பென்ஷன் உண்டு. ஒருவித வில்லங்கமும் இல்லை. எந்த டிமாண்டுகள் வைப்பதாக இல்லை. பெண் படித்திருந்தால் போதும். வேலை பார்க்கணும் என்ற நிர்பந்தம் கூடக்கிடையாது. மனதுக்குப் பிடித்திருந்தால் போதும். ஜாதகப்பொருத்தம் கூட இனி பார்ப்பதாக இல்லை. கல்யாணச் செலவுகளில் பெரும்பாலும் பிள்ளை வீட்டினரே ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே உள்ளனர்.

    எப்போது பெண் அமையுமோ? எப்போது கல்யாணம் நடக்குமோ?//

    இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலுமா அமையாமல் இழுத்தடிக்கிறது? சீக்கிரமே நல்ல இடம் அமையும் ஸார்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க வைகோ சார்...

    //இன்று பிள்ளையைப் பெற்றவர்கள், தங்களின் பிள்ளைக்கு வயது ஏற ஏற மிகவும் கவலைப்பட்டு வருகின்றனர்.

    “இவனைச் சீக்கரமாக ஒருத்தி கையில் பிடித்து ஒப்படைத்து விட்டால் போதும், நமக்கு விட்டது விஜாரம்” என நினைத்து புலம்பி வருகிறார்கள். //

    ஆமாம்.. எங்கள் அலுவலகத்தில் இதே போன்ற ஒருசமத்துவம். அவரின் தம்பிக்கு 40 வயதாகிறது. இன்னும் அவருக்கு திருமணம் நடக்காததால் அவர் தாய் படுத்த படுக்கை ஆகி விட்டார்.

    //அந்த அளவுக்குக் காலம் மாறிப்போய்விட்டது. இன்று தங்கள் கைவசம் பெண்களைப் பெற்று வைத்துள்ளவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். //

    ஆமாம் ஸார். எனக்கு இரண்டும் பையன்கள். இந்தக் காரணத்தால் இல்லாமல் ஏற்கெனவே எனக்கு பெண் குழந்தை இல்லையே என்கிற வருத்தம் உண்டு.

    பதிலளிநீக்கு
  25. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி எம் பி ஸார்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க காமாட்சி அம்மா.. காதல் கல்யாணங்கள் பண்ணிக்க கொள்கிறவர்கள் அதிருஷ்டசாலிகள்தான். சீக்கிரம் ஜோடி தேடி விடுகின்றனர் பாருங்கள்! வாழ்த்துக்கு நன்றிமா.

    பதிலளிநீக்கு
  27. வாங்க சிவகுமாரன். நலம்தானே? நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..

    பதிலளிநீக்கு
  29. //அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. கவலைப் படாதீர்கள், விரைவில் நல்ல மருமகள் அமைவாள்! //

    நன்றி பானுமதி மேம்.. உங்களுக்குத் தெரியாதா, இது முழுவதும் சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் எனபதில்லையே! ஆனாலும் அனுபவம்தான்!

    கொஞ்சம் குழப்பமாக இருக்கோ!

    பதிலளிநீக்கு
  30. நாசூக்காய் மறுத்திருக்கிறார்....
    நாம் இப்போது ஆண் வாரிசு மட்டும் போதும் என பெண் குழந்தைகளை இழந்து வருவதால்தான் பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது.
    பெரும்பாலும் பசங்க மட்டுமே இருக்கும் சொந்தங்கள் அதிகம் இருப்பதைப் எங்களிலும் பார்க்க முடிகிறது...

    இறைவன் எனக்கு ஒரு தேவதையும் கொடுத்திருக்கிறான்....

    அனுபவமோ... அல்லது கற்பனையோ இதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  31. நன்றி குமார். நீங்கள் சொல்வது உண்மைதான்.

    //இறைவன் எனக்கு ஒரு தேவதையும் கொடுத்திருக்கிறான்....//

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. இப்போதெல்லாம் இப்படித்தான் பல வீடுகளிலும் திருமணம் ஆகாமல் ஆண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.....

    பெண்கள் இடும் கட்டளைகள் பிரமிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!