செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - மூங்கில் பாலம் - துரை செல்வராஜூ


மூங்கில் பாலம்...


துரை செல்வராஜூ

== == == == == ==

அமைதியான கிராமம்...

பச்சைப் பசேல் - ன்னு, வயற்காடு...
ஊர் முழுக்க வயக்காட்டுக்குள்ள இருந்தது...

எந்தப் பக்கம் பார்த்தாலும் -
மா, இலுப்பை, தென்னை, பனை, வேம்பு...ன்னு மரக்கூட்டம்...

இதுக்கெல்லாம் காரணம் யாரு...ன்னா -

அரசலாறு... அந்த ஆறு தான் காரணம்...

கிராமம் சின்னது தான்... ஆனாலும்
சிவன் கோயில் ரொம்பப் பெரிசு.....

வருஷாந்திர திருவிழா ரொம்ப விசேஷமா நடக்கும்..
சாமியும் அம்பாளும் பொண்ணு மாப்பிள்ளையா வருவாங்க...

கல்யாணக் கோலம் கலையாம பெரிய தேர்ல - ஆகா!.....
அந்த காளை மாடும் கூடவே வரும்...

மாப்பிள்ளை சாமி.... ன்னு
எல்லா ஊர் ஜனங்களும் வந்து தேர் இழுப்பாங்க!...

அந்தக் காலத்துல -
அப்பர் சாமியும் சம்பந்தர் சாமியும் இங்கே இருந்து
இந்த ஊருக்கு நல்லதெல்லாம் செஞ்சிருக்காங்க..

இப்போ இந்த ஊர்ல -
ஜனங்க வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம்...
ஆனாலும், பேச்சு வழக்குல சின்ன ஆஸ்பத்திரி...

ராவு பகல் எந்நேரமானாலும் கவனிச்சு பார்க்கிறதுக்கு
டாக்டர் ஐயா, நர்ஸம்மா, கம்பவுண்டர்....

இருந்தாலும் -
வயசுப் பொண்ணுங்க பேச கொள்ள -
டாக்டரம்மா வேணும்... - ன்னு, மனு போட்டு வெச்சிருக்கு...

பெரிய கேஸ்..... ன்னா -
கும்மோணம் கொண்டு போறதுக்கு வெள்ளை நிறத்தில ஜீப்பு...

இதெல்லாம் இருந்தாலும் - ஊருக்குள்ள ஒரு பள்ளிக்கூடம்..
எட்டாப்பு வரைக்கும் .. சின்ன பள்ளிக்கூடம்.. ன்னு பேரு..

பெரிய பள்ளிக் கூடம் ஆற்றுக்கு அப்பால...
அக்கரைக்குத் தான் போகணும்... கொஞ்சம் தொந்தரவு தான்..

இதுனாலேயே பெரும்பாலான பொண்ணு புள்ளைங்க
மேலே படிக்காம வீட்டுக்குள்ளேயே முடங்கி
வெளியூர்ல விளக்கேற்றி வைக்கிற மாதிரி ஆச்சு..

ஆஸ்பத்திரிக்குத் தெற்கால வண்டிச் சுவடு...
செம்மண் புழுதி... காலுக்கு மெது..மெது..ன்னு இருக்கும்....

இருந்தாலும் -
சுவடு ஓரத்துல நெருஞ்சி முள்ளும் கண்டங்கத்திரியும் பூத்துக் கிடக்கும்

இந்த வண்டிச் சுவடு தான் ஊருக்குள் வருவதற்கும் போவதற்கும்...

அந்த வண்டிச் சுவட்டின் செம்புழுதியை
வெற்றுக் கால்களால் அளைந்தபடியே
விறுவிறு.. - என, பள்ளிக்கு நடந்து கொண்டிருந்தான் - அவன்...

அந்த ஊரில் குடியிருக்கும் ஈசனின் திருப்பெயர் வீழிநாத ஸ்வாமி..
அதனால, ஊர் வழக்கப்படி தெருவில் நாலு பேருக்கு சாமி பெயர்...

அந்த வகையில் இவன் பெயர் - வீழிநாதன்..

பள்ளிக்கூடத்தின் மணி அடிக்க இன்னும் கொஞ்ச நேரம் தான்...
எனவே தான் நடையில் விறுவிறுப்பு...

இப்படியே நடந்து மேற்காக திரும்பினால் அரசலாறு...
அரசலாற்றின் அக்கரையில் பள்ளிக்கூடம்...

ஆற்றின் கரை தரை மட்டத்திலிருந்து பத்தடி உயரம்...

குடுகுடு... - என, ஓடி ஏறினால் ஐந்து விநாடியில் ஆற்றங்கரைமேடு...

சிலுசிலு... - என, எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்
அரசலாறு தான் அன்றும் இன்றும் மக்களுக்குக் காவல் தெய்வம்...

கடுங்கோடையிலும் அரசலாறு நீரின்றிக் கிடந்ததை பார்த்தவர் யாரும் இல்லை...

அப்படியே வடகரையிலும் தென்கரையிலுமாக இரண்டடி ஆழத்துக்கு வெள்ளியை
உருக்கி ஊற்றியதைப் போல தண்ணி சலசலத்துக்கிட்டுருக்கும்...

அந்தத் தண்ணிக்குள்ளே இப்படியும் அப்படியுமா
அயிரை மீனுங்க மினுக்கிக்கிட்டு ஓடுறதை பார்த்துக்கிட்டே இருக்கலாம்...

ஆற்றோட நடுத்திட்டுகள்...ல அஞ்சடி அகலம்
ரெண்டடி ஆழத்துக்கு ஊத்தாங்குழி தோண்டியிருப்பார்கள்...

ஊத்தாங்குழி... அப்படின்னா ஆற்றுக்குள்ளே இருக்கும் ஊற்று...

வயசுப் பெண்ணுங்க தண்ணீர் எடுக்குறதுக்கு பித்தளைக் குடம் பானைகளோட
சேந்தாமட்டையையும் சேர்த்து எடுத்துக்கிட்டு வருவாங்க..

சேந்தாமட்டை என்பது உள்ளங்கை மாதிரி அகலமான பித்தளைத் தகடு..
ஊற்றுத் தண்ணீரை அள்ளுவதற்கு ஏதுவாக சற்றே குழிவாக இருக்கும்...

ஊற்றுத் தண்ணீர் அள்ளுவதை சேந்துவது என்பார்கள்...

ரெண்டு தடவை சேந்துனா ஒரு சொம்பு நிறையும்
ரெண்டு சொம்பு நெறைஞ்சா ஒரு தோண்டி...
ஆறு தோண்டி நெறைஞ்சா ஒரு குடம் ஆச்சு...

கீழே இருந்து சொம்பிலும் தோண்டியிலும் தண்ணீரைச் சேந்திக் கொடுக்க
மேலே ஊற்றுக் கரையில் குடத்தை வைத்து நிறைத்துக் கொள்வார்கள்..

ஊற்றுக் குழிக்குள் இறங்கி தண்ணீ ர் எடுப்பதே ஒருகலை...

கரையை உடைத்து விடாமல் ஊற்றுக் குழிக்குள் இறங்கி
ஊறி இருக்கும் நீரைக் கலக்காமல் ஏந்தி எடுக்க வேண்டும்...

தண்ணீரைச் சேந்தச் சேந்த ஊறிக் கொண்டே இருக்கும்..

வள்ளுவர் சொல்லி வைத்தாரே மணற்கேணி - அதுதான் இது!..

ஏய்.. மரப்பாச்சி... நீ எறங்கி சேந்துடி!...

அடியே... வெண்ணைத் தாழீ!..
இன்னைக்கு நான் எறங்கக் கூடாதுடி!..

எத்தனை நாளைக்குத் தான்..டி.. நீ இதயே சொல்லிக்கிட்டு இருப்பே!...
ஏய்.. செங்கொரங்கு... நீ... எறங்கி நாலு கொடம் சேந்துடி!..

போடீ.. கருங்கொரங்கு!...
நாலு கொடம்.. அடேங்கப்பா!.. என்னால முடியாது!..

என்னடி இவ... புள்ள பெத்தவளாட்டம் அலுத்துக்குறா!..

ஏ.. ஆத்தா... காளி ஆயீ!... கண்ணாலங் கட்ட வர்றவன்
கும்மோணம் மாயவரம் பக்கமா இருந்து வரணும்!...

 ஏன்?... கும்மோணத்தானுக்கு என்ன விசேஷம்?..

அங்க தான் குழாய்..ல தண்ணி வருதாம்!...

வர்றவன் வீட்டுல குழாய் இல்லேன்ன என்னாடி செய்வே?..

கைகாரி இவ!... விட்டுடுவாளா!?...

வாய மூடுங்க... கோட்டானுங்களா!...
எப்ப பார்த்தாலும் இதே பேச்சு!..

ஏன்...டீ!... கல்யாணம்..ன்னா இனிக்குது!..
கட்டுறவன் பேச்சு..ன்னா கசக்குதா?...

இளசுகளின் கூச்சலும் கும்மாளமும்
ஆற்றங்கரை முழுதும் ஆனந்தமாய் களைகட்டும்..

அந்த ஆனந்தத்திலேயே அரசலாற்றின் ஊற்று நீர்
இளநீர் என, தித்தித்துக் கிடக்கும்..

தவிரவும், ஆற்றுக்குள் கரையை ஒட்டினாற்போல
ஆங்காங்கே சற்று ஆழமான பள்ளங்கள்...

இவற்றை மடு என்பார்கள்.. கிடங்கு என்றும் சொல்வார்கள்..
கோடையிலும் நீர் நிறைந்து கிடக்கும்...

நீர் நிறைந்திருந்தாலும் மடு மிகவும் ஆபத்தானது...
பூ மணலாக பொசு...பொசு என்றிருக்கும்...
திடீர் திடீர் - என, உள்வாங்கிக் கொள்ளும்..

ஆடு மாடுகளோ மனிதர்களோ நிதானமின்றி
காலை வைத்து விட்டால் உயிருடன் மீள்வது மிகவும் கஷ்டம்...

இந்த மடுவில் சவுக்குக் கால் ஊன்றி
குறுக்காக கல் மூங்கிலைப் போட்டு
ஏற்றம் கட்டி இறவைப் பாசனம் செய்வார்கள்...

கோடையில் நாள் குறித்து ஆற்றங்கரை மராமத்து நடக்கும்..

தென்கரை வடகரை கிராமங்கள் இரண்டும்
சாதி பாகுபாடின்றி வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும்...

நீர்ப் பந்தலும் மோர்ப் பந்தலும் பொது விருந்துமாக ஊர் கலகலத்து இருக்கும்...

காட்டுக் கோரைகள் களையப்படும்...
கரடு முரடுகள் நிரவப்படும்....
படித்துறைகள் செப்பனிடப்படும்..
ஆற்றங்கரைகள் பலப்படுத்தப்படும்..

கரை பலமின்றி தென்பட்டால் அழுத்தமான சவுக்குக் கட்டைகளும் மூங்கில்களும்
முளையாக அடித்து இறக்கப்படும்..

அரசலாற்றின் கரை இறுக்கி வைக்கப்படும்..

படித்துறையிலிருந்து ஆற்றங்கரை மேட்டில்
கிழக்காக ஒன்னரை மைல் போனால் ரோட்டுப் பாலம்...

பெரிய ஜல்லி... முண்டும் முரடுமாத் தான் இருக்கும்.. ஆனாலும்,
நல்ல மனுசங்க போட்டுக் கொடுத்த நல்ல சாலை..

அந்தப் பக்கம் கும்மோணம்... இந்தப் பக்கம் திருவாளூர்...

மணிக்கு ஒரு தரம் எஸ்.ஆர்.வி.எஸ்... இல்லே....ன்னா
ராமன் (ட்) ராமன் இங்கே வந்து நிற்கும்....

சத்தி விலாஸ் காலை..ல ஒருதரம்... சாயங்காலத்தி...ல ஒருதரம்...

சவாரி வண்டிகளுக்கும் பார வண்டிகளுக்கும் ரோட்டுப் பாலம் தான் தோது...

ஆனா, சுமை தாங்கி நடக்கிறவங்களுக்கும் அக்கரை ஸ்கூலுக்குப் போற
பசங்களுக்கும் அவ்வளவு தூரம் சரிப்படாது..

ஆற்றைக் குறுக்காலக் கடந்து போறது தான் சுளுவு....

ஆனி மத்தியில இருந்து மாசி கடைசி வரைக்கும்
தண்ணி தளதளத்து ஓடுறப்போ ஆற்றுக்குக் குறுக்கால நடப்பது சரிப்படுமா!..

அதுக்காகத் தான் -
படித்துறையில இருந்து மேற்கால கண்ணு மறையற தூரத்துல -
மூங்கில் அடிச்சி பாலம் போட்டு வைத்தார்கள்...

அது என்ன - கண்ணு மறையற தூரம்!?..

அதாவது -
பொண்ணு புள்ளைங்க குளிக்கிறது சட்டுனு தெரியாத தொலைவு...

பகல் பொழுதுல படித்துறை முழுக்க கிழங்கட்டைகள் தான்...

அழுக்குத் துணிகளோட ஊர் வம்பும் அலசப்படும்..
அடித்துத் துவைத்து காய வைத்து அடுக்கப்படும்..

ஒரு பயலும் படித்துறைப் பக்கம் வரமாட்டான்...

சின்னஞ்சிறுசுங்க எல்லாம் பளபள...ன்னு விடியறதுக்கு
முன்னாலயே குளிச்சு முடிச்சிடுவாங்க..
இல்லே..ன்னா பொழுது போனதும் தான் குளியல்!...

இதெல்லாம் ஒரு நாகரிகம்... பாதுகாப்பு!...

அப்படி இருந்தும் அங்கே இங்கே நின்னுக்கிட்டு
படித்துறைய வேடிக்கை பார்த்த பசங்களுக்கு
முதுகுத் தோல் பிஞ்சு போயிருக்கு!...

இந்த மூங்கில் பாலத்தையும் வருடாந்திரம் பிரித்துக் கட்டுவார்கள்...
போனது வந்தது - என, பிளாச்சுகளைப் பிய்த்துப் போட்டு விட்டு
புதுசா மூங்கில் நறுக்கி தச்சு வேலை நடக்கும்...

ரொம்பவும் சேதாரம் என்றால் அப்படியே பிடுங்கிப் போட்டு விட்டு
புதுப் பாலத்துக்கு பூசை போடுவார்கள்...

பாலம் வேலை முடிஞ்சதும் நடுராத்திரியில முனீஸ்வரனுக்கு படையல்..

ராத்திரியோ பகலோ வெயிலோ மழையோ
ஆடோ மாடோ ஆணோ பொண்ணோ
இந்தப் பாலத்துல சேதாரம் இல்லாம காப்பாத்துவேன்!..

- அப்படின்னு வாக்கு கொடுத்துட்டு சாமி மலையேறும்....

இப்படிப்பட்ட மூங்கில் பாலத்தில
அடுத்து நடக்கப் போறது என்ன...ன்னு தெரியாம
விறுவிறு....ன்னு நடந்து கரையில ஏறி மேற்காக திரும்பினான் வீழிநாதன்..

அதோ.. கூப்பிடு தூரத்தில் மேகலா....
இவனும் அவளும் அக்கரை பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பு...

குனிந்த தலை நிமிரமாட்டாள்... ஏழை வீட்டுப் பெண்...
தாய் வீரம்மா மட்டும் தான்... கடும் உழைப்பாளி..
கூடப் பொறந்தது....ன்னு யாரும் இல்லை..

தென்னை மட்டைகளை விலைக்கு வாங்கி
ஆற்றுத் தண்ணீரில் ஊறப்போட்டு ரெண்டாகக் கிழித்து
பக்குவமாக முடைந்து இருபது இருபதா அடுக்கிக் கட்டி
கும்மோணம் பாலக்கரை சந்தையில விற்றுப் போட்டு வருவது...

ஒரு நடைக்கு ஐநூறும் ஏத்துவாங்க.. அறுநூறும் ஏத்துவாங்க..
மட்டைக்கு எட்டணா லாபம் கிடைத்தாலே அதிகம்..
அந்த வருமானத்தில் தான் வண்டிச் சத்தம் கொடுக்கணும்..

மிச்ச மீதியில் வயிற்றைக் காயப் போடாமல் காப்பாற்ற வேணும்...
மேகலாவைப் படிக்க வைத்து வாத்தியாரம்மா ஆக்க வேணும்...

அடை மழைக்கு முன்னாலேயே சுறுசுறுப்பா வேலை செஞ்சா
கையில நாலு காசு பார்க்கலாம்... கார் காலம் கொஞ்சம் கஷ்டம் தான்..

தை பொறந்ததும் கதிரறுப்பு... களத்து மேடு...

சித்திரை வைகாசியில - வேலைக்கு பஞ்சம் இருக்காது...
உளுந்து பறிக்கிறது.... பயறு தட்டறது... புளி குத்தறது....ன்னு பொழுது ஓடும்..

மகளுக்கு கால் பவுன்..ல மூக்குப் பொட்டு...
ஒன்றரை பவுனுக்குள்ள மாங்கா தோடும் ஜிமிக்கியும்...
கழுத்துக்கு ரெண்டு பவுன்...ல சங்கிலி...

காலுக்கு அழகா ஒரு சோடிக் கொலுசு...
அரை அரை பவுன்..ல பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மோதிரம்...

கைக்கு வளையல்?... கண்ணாடி....யில போட்டுக்கலாம்..
அது தான் கலகல..ன்னு பேசிக்கிட்டு இருக்கும்...

இதுக்கு மேல என்ன செய்ய!..
பின்னால பேறு காலம்..ன்னு இருக்குல்ல!...

நல்லதா நாலு சேலை.. டிரங்குப் பெட்டி, பாய் படுக்கை, பண்ட பாத்திரம்...
என்று கணக்குப் போட்டு ஏதோ சேர்த்து வைத்திருக்கிறாள் வீரம்மாள்...

இதற்கிடையில் வீரம்மாளுக்கும் பார்வை கொஞ்சம் மங்கலானது..

இப்போதெல்லாம் ஓலை முடையும் போது
ஈர்க்குகளால் விரல் நுனிகளில் ரத்தம் கசிகின்றது...

கூட நானும் முடையிறேன்!... - என்று மேகலா துணைக்கு வந்தால் -
கூடையும் வேணாம்.. மொறமும் வேணாம்!.. நீ போய் படி... - என்று, விரட்டி விடுவாள்...

ஏழை படும் பாடு சொல்லி முடியாது..
என்றாலும் மகளை குற்றங்குறை இல்லாமல் வளர்த்தாள் - வீரம்மா..

மேகலா தலை குனிந்து வந்தாலும்
அவளுக்கு எதிரில் வீழிநாதன் வருவது தெரிந்தது..

நடையின் வேகத்தை சற்று குறைத்தாள்.....
வீழிநாதன் பாலத்தில் முன்னால் போகட்டும்!... - என்று...

மேகலாவின் செய்கை வீழிநாதனுக்கும் புரிந்தது...
ஏனென்றால், இதுதான் எப்பவும் வழக்கம்....

வேகமாக எட்டு வைத்து மூங்கில் பாலத்தை மிதித்து நடந்தான்..

பதினேழு வயது விடலைப் பையனின் கால்களுக்குக் கீழாக
நறநற.... - என்றன மூங்கில் பிளாச்சுகள்...

பத்தடிகள் கூட நடந்திருக்க மாட்டான்..

பின்னால் - அம்மா!.. - என்ற சத்தம்.. மேகலா தான்...

திடுக்கிட்டுத் திரும்பினான்...
மூங்கில் பாலத்தின் முகப்பிலேயே
வலது காலைப் புரட்டிக் கொண்டு
உட்கார்ந்திருந்தாள் மேகலா..

கண்களில் நீர் வழிவது நன்றாகத் தெரிந்தது..

வீழிநாதனுக்குத் தயக்கம்..

என்னா..ன்னு போய் பார்ப்போமா...
நமக்கெதுக்கு.. பொண்ணுங்க சங்கதி... அப்புறம் சங்கடமாப் போயிடும்!..

திரும்பி நடக்க நினைத்தபோது -
ஆதரவற்றவளாக மேகலாவின் விம்மல்...

அவ்வளவு தான்...
வீழிநாதனின் மனம் கூழாகிப் போனது... அருகில் ஓடினான்..

என்ன ஆச்சு?...

கால்...ல ஆணி குத்திடுச்சி!... - விம்மினாள்...

மெதுவா எடு!..

முடியலை.. நல்லா குத்தியிருக்கு... - அழுதாள்...

பாவமாக இருந்தது... மெதுவாக குனிந்து பார்த்தான் வீழி...

முன் பாதத்தில் அழுத்தமாக ஆணி பதிந்திருக்கின்றது...

என்ன செய்யலாம்?.. ஆணி துரு பிடித்து இருக்குமே!..
- உள்ளுக்குள் சிந்தனை ஓடியது...

நான் எடுத்து விடவா!?..

ம்..... ..... .....

பல்லைக் கடிச்சுக்க!... - கால் சட்டைப் பையில் இருந்து கைக் குட்டையை
எடுத்துக் கொண்டான்...

மேகலாவின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்..
மூங்கில் பட்டையைக் கால் கட்டை விரலால் அழுத்திக் கொண்டான்...

சாமீ... முனீஸ்வரா!... -

விருட்டென இழுக்க - ஆணியும் காலும் வேறுபட்டுப் போயின...

அத்துடன் ரத்தமும் பெருக்கெடுத்தது...
கையிலிருந்த கைக் குட்டையை வைத்து இறுகக் கட்டினான்...

பாலத்தில் பழுதாகி இருந்த மூங்கில் பட்டையைப் பிடுங்கி எடுத்தான்..
வீசினான்... அது கரையோர பிரம்மந்தண்டு புதருக்குள்ளே போய் விழுந்தது

பள்ளிக் கூடத்தில் முதல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது...

சரி...  மெதுவா எந்திரிச்சு நட.. ஆஸ்பத்திரிக்குப் போகலாம்!...

காலை வைக்க முடியலை வீழி!... - மேகலாவின் கண்களில் நீர் வழிந்தது...

காலைத் தத்திக் கொண்டே மெதுவாக எழுந்து நின்றாள் மேகலா..

சரி.. - என்ற வீழிநாதன் - சட்டென,
அவளது இடுப்புக்குக் கீழாக கையைக் கொடுத்துத் தூக்கினான்...

இடது தோளில் போட்டுக் கொண்டான்...

இதை எதிர்பார்க்காத மேகலா திடுக்கிட்டுப் போனாள்...
வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை...

ஆனாலும், வேறு வழியில்லை...
வீழிநாதனின் தோளில் கிடந்து தான் ஆகவேண்டும்..

விறுவிறு.. - என்று பாலத்தில் காலை ஊன்றி நடந்தான் வீழிநாதன்..

மீண்டும்,  நறநற .. - என்று பல்லைக் கடித்தது மூங்கில் பாலம்..

அப்படியே கள்ளிச் செடிகளைக் கடந்து திரும்பிய போது
எதிரில் மேகலாவின் தாய் மாமன் - வேலு...
சைக்கிளில் வைத்து சுண்ணாம்பு வியாபாரம்...

ஏஏ!.. என்ன ஆச்சு?.. - சைக்கிளைப் போட்டு விட்டு பதற்றத்துடன் ஓடி வந்தார்..

ஒன்னுமில்லை... மூங்கி பாலத்துல ஆணி குத்திடிச்சி..
நீங்க மேகலாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க...
நான் ஸ்கூலுக்குப் போயி லீவு சொல்றேன்!...

மாமனைக் கண்டதும் மேகலாவுக்கு அழுகை பீறிட்டு வந்தது...

ஒன்னும் இல்லடா... ஒன்னும் இல்லை..
இதுக்கெல்லாமா அழுவுறது!...

வேலு மேகலாவைச் சமாதானப்படுத்த -
வேலுவின் கையில் மேகலாவை ஒப்படைத்து விட்டு
திரும்பிப் பார்க்காமல் ஓடினான் வீழிநாதன்...
***

அன்று மாலை குடிசையின் வாசலில்
புலம்பலுடன் கீற்று முடைந்து கொண்டிருந்தாள் வீரம்மா...

அந்தப் பக்கம் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி வேலு...

நல்லா இருக்குற பொண்ணுங்களையே
அங்க மச்சம்.. இங்க ஒச்சம்...ன்னு
ஆயிரங் கோளாறு சொல்லிக்கிட்டு திரியறானுங்க...
எப்படி...டா புள்ளைங்களை கரையேத்துவோம்..ன்னு இருக்கு..

இவ என்னா..னா காலை கோணிக்கிட்டு வந்துருக்கா..
பார்த்து பதுவுசா நடக்கணும்.. ஒரு வயசுப் பொண்ணுக்கு இதெல்லாமா ..

அக்கா... நீ எதுக்கு நை... நை..ன்னுக்கிட்டு இருக்கே!..
அதான் பயப்பட வேணாம்...ன்னு சொல்லிட்டாங்கள்ள..
இன்னும் ரெண்டு நாளையில புண்ணு ஆறிடப் போகுது!...

நல்ல மாத்திரை எல்லாம் கொடுத்து ஊசி போட்டுருக்காங்க....
காலை தண்ணியில நனைக்காம வெச்சுக்க வேண்டியது தான்...

அந்தப் புள்ளைக்கு தைரியம் சொல்லுவியா!...
அதை விட்டுட்டு சும்மா பொலம்பிக்கிட்டு இருக்கே!....

ஆனாலும், அந்தப் பையன் செஞ்ச ஒதவி..
என்னைக்கும் மறக்கக் கூடாது!..

அந்தப் பையன் யாரு.... ன்னு சொன்னே!.. - வீரம்மா மீண்டும் விசாரித்தாள்...

அதான் அந்த வாத்தியார் வீட்டுப் பையன்...

வாத்தியார்... ன்னா குஸ்தி வாத்தியாரா?..

இல்லே.. பள்ளிக் கூடத்தில கைத்தறி வாத்தியார்...
கோரைப் பாய் கட்டில் நாடா இதெல்லாம்
பின்றது எப்படி...ன்னு ... சொல்லித் தர்றவர்..
நம்ம மாதிரி ஏழை பாழைங்க தான்...

ஒரு கல்மிஷமும் இல்லாம மேகலாவை
தோள்...ல தூக்கியாந்ததைப் பார்த்ததும்
நான் அப்படியே ஆடிப் போய்ட்டேன் அக்கா!...

இந்த மாதிரிப் பசங்களைப் பெத்தவங்க புண்ணியவாளனுங்க...
இந்தப் பையன் எல்லாம் கட்டுனவளத் தங்கம் மாதிரி வெச்சிக்குவான்!..

வேலு வெள்ளந்தியாகப் பேசினார்...

ம்.. யாருக்குக் கொடுத்து வைச்சிருக்கோ!...

வீரம்மா முணுமுணுத்துக் கொள்ள -

அந்தப் பக்கம் செம்பருத்திச் செடியின் அருகாக
காலை நீட்டியடி உட்கார்ந்திருந்த மேகலா
தனக்குள் சொல்லிக் கொண்டாள்..

ம்.. யாருக்குக் கொடுத்து வைச்சிருக்கோ!...

சிரிப்பு வந்தது அவளுக்கு...

மாமனுக்கும் பெற்றவளுக்கும் தெரியாமல்
புன்னகைத்துக் கொண்டாள்..
***

அவ்வளவு தானா!...

ஆமா!.. ஏன்?.. வேறென்ன வேணும்?..

கதையில கல்யாணம்..காட்சி..ன்னு.. ஒன்னும் வரலையே!?...

கதையா!?.. சரியாப் போச்சு!..
இது உண்மையில நடந்தது..ங்க..
அதுவும் ஆச்சு அம்பது வருசம்!...

*** 

86 கருத்துகள்:

  1. இன்றைக்கு தஞ்சாவூர் டிகிரி காஃபி!....

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு தடவைக்கும் மேலாக
      இன்று மீண்டும் எனது கதையை வாசித்தேன்...

      இதனைப் பதிப்பித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. தஞ்சையம்பதியின் எழுத்தே தனி
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்தினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம்.
    இனிமையான கதை. 50 வருடங்களுக்கு முன்னாலயா. ஆஹா.
    அரசலாறுன்னுதும் தஞ்சைக் காற்று அடித்தது.
    என்ன ஒரு தன்மை பெண்ணுக்கும் பையனுக்கும்.
    சிலுசிலுவென்று கதை ஓடியது.

    அழகு நிறைந்து,குணம் நிறைந்து எங்கள் காலக் கதையாய்க் கொடுத்தற்கு மிக நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நமது காலத்தின் கதை...
      தங்கள் வருகிக்கு மகிழ்ச்சி...
      நன்றி...

      நீக்கு
  6. பாலத்தில் பழுதாகி இருந்த மூங்கில் பட்டையைப் பிடுங்கி எடுத்தான்..
    வீசினான்... அது கரையோர பிரம்மந்தண்டு புதருக்குள்ளே போய் விழுந்தத///////இது அந்தக் கால ஆண்மை. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னியரும் காளையரும் ஓரக்கண்ணால ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் சந்தோஷம் இருக்கிறதே.... அடடா...

      இந்தத் தலைமுறைக்கு அதெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை....

      நீக்கு
  7. ம்.. யாருக்குக் கொடுத்து வைச்சிருக்கோ!...

    சிரிப்பு வந்தது அவளுக்கு...

    மாமனுக்கும் பெற்றவளுக்கும் தெரியாமல்
    புன்னகைத்துக் கொண்டாள்..///// அடி கள்ளப் பெண்ணே ,சொல்லலாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடி வைத்த முல்லை மொட்டுகளைப் போல.....

      அதெல்லாம் அந்தக் காலம்!...

      நீக்கு
  8. படிக்க ஆரம்பிச்சதுமே நான் முதல் முதலாக அரசலாற்றைப் பார்த்த நினைவலைகள். அந்த வைகாசி மாசம் வெண்மணலாகக் காட்சி அளித்த அரசலாற்றில் முதல் முதல் கால் பதிக்கையில் குறுகுறுப்பு! மூங்கில் பாலத்தில் ஏறிப் போயிருக்கலாம் தான்! எனக்குப் பழக்கம் இல்லையா! பயம்! அதான் ஆற்றில் இறங்கி அக்கரைக்குப் போனோம். மூங்கில் பாலம் நடக்கும்போது கிடுகிடுவென ஆட, நான் கத்திவிட்டேன். :)

    பதிலளிநீக்கு
  9. மாப்பிள்ளைச் சாமி என்றதுமே, தேர்த்திருவிழா வர்ணனையைப் படிச்சதுமே திருவீழிமிழலை என்பது புரிந்தது. எங்க புக்ககத்து ஊரான கருவிலியில் இருந்து கோபுரம் தெரியும். ஆனாலும் நான் அந்தக் கோயிலுக்குப் போனது பத்து வருடங்கள் முன்னே தான்!

    பதிலளிநீக்கு
  10. கண்டங்கத்திரிக்காயில் பொரிச்ச குழம்பு செய்து சாப்பிட்டால்! ஆஹா! ஓஹோ!

    பதிலளிநீக்கு
  11. //கோடையில் நாள் குறித்து ஆற்றங்கரை மராமத்து நடக்கும்.// ஊர் மராமத்தும் நடக்குமே! இப்போதெல்லாம் அந்த அந்த ஊர்ப் பகுதி மக்கள் தங்கள் பக்கத்து ஆற்றின் மராமத்தைக் கூடச் செய்வதில்லை! மனம் பதறுகிறது. சும்மாவானும் காவிரியில் நீர் விடணும்னு சொன்னால் போதுமா! அதைத் தாங்கும் அளவுக்கு ஆறுகளில் சக்தி இருக்கிறதா? சுரண்டியாச்சு மொத்தமும்! இப்போ அரசலாற்றைப் பார்த்தால் கண்ணீர் முட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  12. நான் திருமணம் ஆகி வந்த வருஷம் தான் ராமன் அன்ட் ராமன் கும்பகோணம்--கூந்தலூருக்கு முதல் பேருந்து சேவை ஆரம்பித்தார்கள். நாலாம் எண் பேருந்து!

    பதிலளிநீக்கு
  13. Kathai chithiramaaga malarndhu ninaivile mannin manathodu nilaithadhu!!

    பதிலளிநீக்கு
  14. அந்தக் கதை நிகழ்வை, சூழ்நிலையை அப்படியே எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள். நான் ஊத்துத் தண்ணீர் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் உள்ளே இறங்கி தண்ணீர் மொண்டு எடுப்பதைப் பார்த்ததில்லை. சரட்டை அல்லது சரட்டை வைக்கப்பட்ட கரண்டியை உபயோகப்படுத்தி தண்ணீர் எடுப்பார்கள் (வைகை, தாமிரவருணியில்.. பெரும்பாலும் வைகையில்).

    அந்த ஊர் கடவுள், இயல்பான நடை - மிக அருமை துரை செல்வராஜு சார். என்ன... முடிவைக் கற்பனை செய்யவிட்டுட்டீங்க.

    பதிலளிநீக்கு
  15. ஆவ்வ்வ்வ்வ் மூங்கில் பாலம்.. துரை அண்ணன் ஸ்ரோறி... ஹையோ வாசிக்க வாசிக்க அருமை... அப்படியே நாமும் கிராமத்தில் வாழ்வதுபோல இருந்துது, எனக்கும் அங்கு ஒரு தடவை போய் அந்த ஆற்றில் குதிச்சு சே..சே.. குளிச்சு.. மூங்கில் பாலத்தில் நடக்கோணும் எனும் ஆசை வந்திட்டுது..

    அழகிய கதை.. அப்படியே அந்தக் கிராமத்தவர் பேசுவதுபோலவே.. ஆனா இது 60 வருடத்துக்கு முந்தியது எனச் சொல்லிட்டீங்க... இப்பவும் அப்படியே இருக்காது.. இப்போ ரவுண்போல ஆகியிருக்குமே.

    பதிலளிநீக்கு
  16. வீரம்மாளின் மகளுக்கான சீதனம் சேர்ப்பு மிக அருமை.. கிராமங்களில் களவுகள்கூட இருக்காதே. கஸ்டத்தின்போதுதான் நகை பணம் உணவு இனிமையாகும்.. அந்த இனிமையை எப்பவும் அனுபவிப்போர் கிராமத்து மக்களே.

    வீழி - மேகலா... காதல் ... மைனராகம்:).

    ஆனா மேகலா வீட்ட்டாருக்கு மட்டும் பிடிச்சா போதுமோ.. வீழியின் பெற்றோரும் விரும்போணுமே:).. அங்குதானே பிரச்சனை ஆரம்பமாகும்.. இப்பவே இபூடிப் பயப்பிடும் வீழி, காதல் மனதில் இருந்தாலும் வீட்டில் சொல்ல மாட்டாரே... ஆனாலும் சில கிராமங்களில் உள்ளுக்குள் எனில் தடை இருக்காது.. ஓகே பண்ணியிருப்பார்கள் என்றே நம்புறேன்:).

    பதிலளிநீக்கு
  17. இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்.. துரை அண்ணன் மெலிஞ்சிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முன்பு கொஞ்சம் குண்டூஊ:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  18. //வீழி - மேகலா... காதல் ... மைனராகம்:).//
    அது மெளனராகம்:))..

    பதிலளிநீக்கு
  19. கதையில் கல்யாணம் காட்சின்னு வரலியா? எதுக்கு? இதுதான் உண்மைக்கதை ஆயிற்றே! நாம் படித்துக்கொண்டு,மனதால் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே! அந்தக்கால இளைஞர்களுக்கு மரியாதையான அன்பும்,நேசமும் இருந்தது. கொஞ்ஜம் இது நடக்குமோ நடக்காதோ என்ற பயத்தில் நிதானமும் இருந்தது. சற்று அசடாக இருந்தால் கதை வேறு. காதல்,துணிவு,பயம் எல்லாம் எக்காலத்திலும் இருந்தது. அழகான ஸம்பவங்கள் பின்னப்பட்டு கதையை மனது திரும்பத்திரும்ப அசைபோட வைத்துவிட்டது. நாகரீகமான இளவயதுக் காதல். பாராட்டுகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. ஒரு சின்ன கதையில் எவ்வளவு விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்!! ஆற்றை கடக்க வேண்டும் என்பதால் பெண்கள் படிப்பை பாதியில் விடுவது, மணற்கேணி, அதில் நீர் சேந்தும் விதம்,வீழிநாதன் பெயர் காரணம். அசத்தல்!!����

    பதிலளிநீக்கு
  21. ஒரு சின்ன கதையில் எவ்வளவு விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்!! ஆற்றை கடக்க வேண்டும் என்பதால் பெண்கள் படிப்பை பாதியில் விடுவது, மணற்கேணி, அதில் நீர் சேந்தும் விதம்,வீழிநாதன் பெயர் காரணம். அசத்தல்!!����

    பதிலளிநீக்கு
  22. துரை ராஜின் கதை நடை பளிச்சிடுகிறதுஇப்போது இதெல்லாம் கற்பனையாகத்தானே இருக்கும் அசத்தலான கதையும் கதாபாத்திரங்களும் எனக்கு எங்கள் கிராமத்திலோடும் ஆற்றில் குளித்தது நினைவுக்கு வருகிறது கோடையில் ஆற்றில் நீர் வற்றி முழுகமுடியாது அப்போது கையால் மணலைத் தோண்டி பள்ளம்செய்து அதில்முன்கிக் குளித்ததுநினவில் பாராட்டுக்சள் துரை சார்

    பதிலளிநீக்கு
  23. அன்பின் ஜி
    தங்களது கிராமிய மணம் மனதை கவ்விக்கொண்டது. அருமை.

    பதிலளிநீக்கு
  24. பெண்களுக்கான படித்துறை, மூங்கில் பாலம், கிராமப் பழக்கவழக்கங்கள், ஒழுக்க மதிப்பீடுகள், பருவ வயது ஆண்-பெண் தூரத்தில் வரும்போதே கண்களைத் தாழ்த்திக்கொள்ளல், அல்லது வேறெங்கோ பார்த்தல், நேசங்களின், உறவுகளின் மரியாதை கலந்த அன்பு - எல்லாம் ஒரு கனவுலகத்தைக் காட்டுகிறது. ஒருகாலத்தில் நமக்குச் சொந்தமாக இருந்த உலகம்..

    பதிலளிநீக்கு
  25. எந்தப் பக்கம் பார்த்தாலும் -
    மா, இலுப்பை, தென்னை, பனை, வேம்பு...ன்னு மரக்கூட்டம்...

    இதுக்கெல்லாம் காரணம் யாரு...ன்னா -

    அரசலாறு... அந்த ஆறு தான் காரணம்...//

    கண் முன் காட்சி விரியிது. அரசலாறு பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும்.

    ரெண்டு தடவை சேந்துனா ஒரு சொம்பு நிறையும்
    ரெண்டு சொம்பு நெறைஞ்சா ஒரு தோண்டி...
    ஆறு தோண்டி நெறைஞ்சா ஒரு குடம் ஆச்சு...//

    ஊற்று நீர் மிகவும் ருசியாக இருக்கும் என்பார்கள்.

    எவ்வளவு விஷ்யங்கள் கிராமத்து காட்சிகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
    எழுத்து நடை அற்புதம்.

    தொலைக்காட்சியில் ஊற்றுதண்ணீர் எடுப்பதை பார்த்தேன், ராமநாதபுரம் என்று நினைக்கிறேன் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊற்று நீர் எடுக்கிறார்கள். நெலைத்தமிழன் சொல்வது போல் சிறட்டை கரண்டியில் (கைபிடி நல்ல நீட்டம்) அதில் தண்ணீர் ஊற ஊற காத்திருந்து எடுக்கிறார்கள்.

    //ராத்திரியோ பகலோ வெயிலோ மழையோ
    ஆடோ மாடோ ஆணோ பொண்ணோ
    இந்தப் பாலத்துல சேதாரம் இல்லாம காப்பாத்துவேன்!..//

    காவல்தெய்வங்கள் பற்றி சொன்னது கிராம மக்களின் ந்ம்பிக்கை அற்புதம்.



    இந்த மாதிரிப் பசங்களைப் பெத்தவங்க புண்ணியவாளனுங்க...
    இந்தப் பையன் எல்லாம் கட்டுனவளத் தங்கம் மாதிரி வெச்சிக்குவான்!.//

    கேட்கவே மகிழ்ச்சி தருகிறது.
    மேகலா நல்லா இருக்கட்டும். வாழ்க வளமுடன்.
    வீழிநாதன் தங்கம் மாதிரி வெச்சி இருப்பார் என்று நம்புவோம்.


    கிராமிய கதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  26. இந்த மாதிரிப் பசங்களைப் பெத்தவங்க புண்ணியவாளனுங்க...
    இந்தப் பையன் எல்லாம் கட்டுனவளத் தங்கம் மாதிரி வெச்சிக்குவான்!..

    வேலு வெள்ளந்தியாகப் பேசினார்..//.

    வீழிநாதன் யாரை கல்யாணம் செய்து கொண்டு இருந்தாலும் வேலு மாமா சொன்னது போல் இருப்பார் என்று நம்புவோம் என்று சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. படிக்கும் போதே நாமும் அங்கேயே இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கியது. கிராமிய நடை. அழகான பேச்சுகள். அந்த ஊரை, இடத்தை, இடத்தின் சூழலை, பேச்சு வழக்கங்களை வர்ணிப்பதென்பது அனைவருக்கும் கை வந்த கலையாக வருவதில்லை. சகோதரர் துரை செல்வராஜ் அருமையாக வர்ணித்து கதையை நகர்த்திச் சென்றுள்ளார். கதையின் முடிவையும், சுலபமாக நாம் அனுமானித்து கொள்ளும்படிக்கு சொன்னது மிக அருமை..உண்மை கதையென்றால், வீழிநாதனும், மேகலாவும் வாழ்க பல்லாண்டுகள். அருமையான கதை (உண்மை கதை) யை தந்த துரை சகோதரருக்கு பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. வாவ்.... உண்மையிலேயே கிராமத்தில் இருந்தது போன்ற உணர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  29. என்ன இது மதுரைக்கு வந்த சோதனை! நேற்றைய பதிவுக்கே மாடரேஷன்?

    பதிலளிநீக்கு
  30. பு.பு. கூட வரலையே???????????????????????????? அப்புறம் ஏன் மாடரேஷன்?

    பதிலளிநீக்கு
  31. பதில்கள்
    1. ருமா அப்பவே வந்துட்டாங்க...
      ராதா அப்பறமா வருவாங்க...

      !?....

      நீக்கு
  32. கேஜிஜி சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  33. mmmmm, அதானே! கொஞ்சம் அசந்தா அம்புடுதேன்! காஃபி இன்னிக்கு ஐந்தரைக்கே ஆத்தியாச்சு! :)

    பதிலளிநீக்கு
  34. நேத்து வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் திருக்கடவூர் தரிசனம்...

    அசதி.... இன்னும் காஃபி ஆத்தவில்லை..

    மாடு அறுத்துக்கிட்டு ஓடிப் போனதா கேள்வி!?..

    பதிலளிநீக்கு
  35. அருமையான கதை பகிர்வுக்கு நன்றி. கதாசிரியருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  36. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  37. கவிதைநடையில் கதை பின்னி இருக்கிறீர்கள் அருமை...அந்தக்கால கிராமத்துமக்கள் நீர்நிலைகளை எப்படியெல்லாம் காபந்து பண்ணி இருக்கிறார்கள், கதை நன்று.

    பதிலளிநீக்கு
  38. கவிதைநடையில் கதை பின்னி இருக்கிறீர்கள் அருமை...அந்தக்கால கிராமத்துமக்கள் நீர்நிலைகளை எப்படியெல்லாம் காபந்து பண்ணி இருக்கிறார்கள், கதை நன்று.

    பதிலளிநீக்கு
  39. கதை மிக மிக நன்றாக அமைதியான தெளிந்த ஆற்றின் நீர் போல தெளிவாக பல அருமையான தகவல்களையும் உள்ளடக்கி, அரும்பிய காதலைச் சொல்லியது. காதல் சுபமா? அல்லது கதை தொடருமோ? என்றும் தோன்றியது. அருமை.
    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. துரை அண்ணா என்றாலே கதையில் இயற்கை முதலில் விளையாடும். அடுத்து அன்பு இழையோடும்.
    மூங்கில்பாலம் ஒரு செய்தி முன்பு வாசித்த நினைவு., தஞ்சாவூர் பகுதியில் உள்ள கிராமம் அரசலாறு என்று நினைவு…சரியாக நினைவில்லை ஆனால் ஒருகிராமத்துக் குழந்தைகள் படிக்கச் செல்ல வேண்டுமென்றால் மழைக்காலத்தில் ஆற்றை நீந்தித்தான் செல்ல வேண்டும். யூனிஃபார்ம் துணிகளை புத்தகப் பையில் வைத்துக் கொண்டு தலையில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்த பின் துணிகளைப் போட்டுக் கொள்வார்கள். இது பசங்களால் முடியும் ஆனால் பெண்களால் முடியாது என்று பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று ஆற்றின் குறுக்கால் பாலம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்தது வரை தெரியும் அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை…அண்ணாவின் கதை அதை நினைவு படுத்தியது…
    கீதா

    பதிலளிநீக்கு
  41. நாங்கள் எங்கள் ஊர்ப்பக்கம் குடம் என்றும் சொல்லுவோம் தோண்டி என்றும் சொல்லுவோம். தோண்டி சின்ன சைஸ் குடம்…தோண்டியை இடுப்பிலும் வைத்துக் கொண்டு வருவோம். கிணற்றில் நீர் இறைக்கவும் பயன்படுத்துவோம்.
    கீதா

    பதிலளிநீக்கு
  42. கதை ரொம்ப அழகாக அந்த ஆற்றைப் போலவே செல்கிறது. ஆற்றங்கரை என்றாலே காதல் விரியும் அல்லது வளரும், தொடரும் இடம் தானே….கடைசி வரிகள் எதையோ சொல்லாமல் சொல்லுதே!! அண்ணாவின் கதை போல இருக்கே!! ருக்கே!! க்கே!! கே!!! ஹா ஹா ஹா ஹா…
    கீதா

    பதிலளிநீக்கு
  43. கதையை ரொம்பவே கிராமத்தை மனதில் கொண்டு வந்து ரசித்தேன் அண்ணா. …
    கீதா

    பதிலளிநீக்கு
  44. @ கரந்தை ஜெயக்குமார் said...

    /// தஞ்சையம்பதியின் எழுத்தே தனி... ///

    அன்பின் கரந்தை JK அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  45. @ வல்லிசிம்ஹன்
    /// இனிமையான கதை.. 50 வருடங்களுக்கு முன்னாலயா..
    ஆஹா... அரசலாறு..ன்னதும் தஞ்சைக் காற்று அடித்தது..
    என்ன ஒரு தன்மை பெண்ணுக்கும் பையனுக்கும்
    சிலுசிலுவென்று ஓடியது கதை... ///

    இந்தக் காலத்தில் -
    அரசலாறு முற்றாகக் கெட்டுப்போய்க் கிடக்கின்றது...
    கும்பகோணத்திலேயே அதன் நிலை விளங்கும்...

    தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  46. @ வல்லிசிம்ஹன் said...

    /// பாலத்தில் பழுதாகி இருந்த மூங்கில் பட்டையைப் பிடுங்கி எடுத்தான்..
    வீசினான்... அது கரையோர பிரம்மந்தண்டு புதருக்குள்ளே போய் விழுந்தது..
    இது அந்தக் கால ஆண்மை. வாழ்த்துகள்... ///

    தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  47. @ வல்லிசிம்ஹன் said...
    ம்.. யாருக்குக் கொடுத்து வைச்சிருக்கோ!...

    சிரிப்பு வந்தது அவளுக்கு...

    மாமனுக்கும் பெற்றவளுக்கும் தெரியாமல்
    புன்னகைத்துக் கொண்டாள்../////

    அடி கள்ளப் பெண்ணே ,சொல்லலாமா...

    காலம் வரும் போது கண்டிப்பாக சொல்லுவாள்..

    பதிலளிநீக்கு
  48. @ Geetha Sambasivam said...
    /// படிக்க ஆரம்பிச்சதுமே நான் முதல் முதலாக அரசலாற்றைப் பார்த்த நினைவலைகள். அந்த வைகாசி மாசம் வெண்மணலாகக் காட்சி அளித்த அரசலாற்றில் முதல் முதல் கால் பதிக்கையில் குறுகுறுப்பு! ///

    அந்த அழகெல்லாம் அரசலாற்றில் இப்போது இல்லை...

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  49. @ Geetha Sambasivam said...
    /// மாப்பிள்ளைச் சாமி என்றதுமே, தேர்த்திருவிழா வர்ணனையைப் படிச்சதுமே திருவீழிமிழலை என்பது புரிந்தது....

    திருவீழிமிழலை மருத்துவமனையில் என் தந்தை பணிபுரிந்தார்...
    அரசலாற்றைக் கடந்து தான் அக்கரையில்
    எரவாஞ்சேரிக்குப் போக முடியும்..
    அந்த நினைவுகளுடன் எழுதிய கதை இது...

    தாங்கள் இந்த ஊரை அடையாளம் கண்டு கொள்வீர்கள்
    என்பது எனக்குத் தெரியும்...
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  50. @ Geetha Sambasivam said...
    /// கண்டங்கத்திரிக்காயில் பொரிச்ச குழம்பு செய்து சாப்பிட்டால்! ///

    கண்டங்கத்திரி மருத்துவ குணங்களுடையது அல்லவா...

    பதிலளிநீக்கு
  51. @ Geetha Sambasivam said...
    //கோடையில் நாள் குறித்து ஆற்றங்கரை மராமத்து நடக்கும்.///

    ///ஊர் மராமத்தும் நடக்குமே! இப்போதெல்லாம் அந்த அந்த ஊர்ப் பகுதி மக்கள் தங்கள் பக்கத்து ஆற்றின் மராமத்தைக் கூடச் செய்வதில்லை! மனம் பதறுகிறது.///

    உண்மைதான்.. இனிமேல் நிறைய தண்ணீர் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தி ஆற்றுக்கு உண்டா என்பது தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  52. @ Geetha Sambasivam said...
    /// நான் திருமணம் ஆகி வந்த வருஷம் தான் ராமன் அன்ட் ராமன் கும்பகோணம்--கூந்தலூருக்கு முதல் பேருந்து சேவை ஆரம்பித்தார்கள். நாலாம் எண் பேருந்து!///

    நிறைய தகவல்கள தங்களது கருத்துரைகளின் மூலமாக..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  53. @ middleclassmadhavi said...
    /// Kathai chithiramaaga malarndhu ninaivile mannin manathodu nilaithadhu! ///

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  54. @ நெ.த. said...

    ///அந்தக் கதை நிகழ்வை, சூழ்நிலையை அப்படியே எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள். நான் ஊத்துத் தண்ணீர் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் உள்ளே இறங்கி தண்ணீர் மொண்டு எடுப்பதைப் பார்த்ததில்லை. சரட்டை அல்லது சரட்டை வைக்கப்பட்ட கரண்டியை உபயோகப்படுத்தி தண்ணீர் எடுப்பார்கள்..///

    அந்த காலத்தில் ஊற்றுகளில் இறங்கி எடுப்பதையே நான் பார்த்துள்ளேன்...

    தாங்கள் சொல்வது போல நீளமான சிரட்டைக் கழி மூலம்
    வைகையில் நீர் எடுப்பதையும் பார்த்திருக்கிறேன்...

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  55. @ athira said...
    /// ஆவ்வ்வ்வ்வ் மூங்கில் பாலம்.. துரை அண்ணன் ஸ்ரோறி...///

    ஆதிரா அவர்களின் கலகலப்பான வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  56. @ athira said...
    /// வீரம்மாளின் மகளுக்கான சீதனம் சேர்ப்பு மிக அருமை.. ///

    ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை...

    பதிலளிநீக்கு
  57. @athira said...
    //வீழி - மேகலா... காதல் ...அது மெளனராகம்:///

    மௌனராகமா.. ஆனந்த ராகமா!...

    பதிலளிநீக்கு
  58. @ காமாட்சி said...
    //// அழகான ஸம்பவங்கள் பின்னப்பட்டு கதையை மனது திரும்பத்திரும்ப அசைபோட வைத்துவிட்டது. நாகரீகமான இளவயதுக் காதல். பாராட்டுகள்.அன்புடன்.. ///

    தங்கள் வருகையும் பாராட்டுகளும் மகிழ்ச்சி அம்மா.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  59. @ Bhanumathy Venkateswaran said..

    >>> ஒரு சின்ன கதையில் எவ்வளவு விஷயங்களைச் சொல்லீயிருக்கிறீர்கள்!..
    ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதால் பெண்கள் பாதியில் படிப்பை விடுவது.. <<<

    என்னுடன் படித்த பெண்பிள்ளைகள் பலரும் பதினொன்றாம் வகுப்பை நெருங்குவதற்கு முன்னரே படிப்பை நிறுத்தினர் - பல காரணங்களுக்காக..
    அவற்றுள் ஆற்றைக் கடப்பது தலையாய காரணம்..

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  60. @ G.M Balasubramaniam said...

    /// அசத்தலான கதையும் கதாபாத்திரங்களும் எனக்கு எங்கள் கிராமத்திலோடும் ஆற்றில் குளித்தது நினைவுக்கு வருகிறது.. ///

    அன்பின் ஐயா..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  61. @ KILLERGEE Devakottai said...

    ///அன்பின் ஜி
    தங்களது கிராமிய மணம் மனதை கவ்விக்கொண்டது. அருமை..///

    அன்பின் ஜி... தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  62. @ ஏகாந்தன் Aekaanthan ! said...

    //// பெண்களுக்கான படித்துறை, மூங்கில் பாலம், கிராமப் பழக்கவழக்கங்கள், ஒழுக்க மதிப்பீடுகள், பருவ வயது ஆண்-பெண் தூரத்தில் வரும்போதே கண்களைத் தாழ்த்திக்கொள்ளல், அல்லது வேறெங்கோ பார்த்தல்.. ////

    அதெல்லாம் கனவு தேசத்தின் கற்பனைகளாகி விட்டன..

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  63. @ கோமதி அரசு said...

    /// கேட்கவே மகிழ்ச்சி தருகிறது.
    மேகலா நல்லா இருக்கட்டும். வாழ்க வளமுடன்.
    வீழிநாதன் தங்கம் மாதிரி வெச்சி இருப்பார் என்று நம்புவோம்.
    கிராமிய கதை அருமை.வாழ்த்துக்கள்..///

    தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  64. @ கோமதி அரசு said...

    இந்த மாதிரிப் பசங்களைப் பெத்தவங்க புண்ணியவாளனுங்க...
    இந்தப் பையன் எல்லாம் கட்டுனவளத் தங்கம் மாதிரி வெச்சிக்குவான்!..

    வேலு வெள்ளந்தியாகப் பேசினார்..//.

    வீழிநாதன் யாரை கல்யாணம் செய்து கொண்டு இருந்தாலும் வேலு மாமா சொன்னது போல் இருப்பார் என்று நம்புவோம் ///

    உண்மையில் வீழி நாதனுக்கும் மேகலாவுக்கும் கல்யாணம் நடந்தேறி விட்டது..
    அது ஒரு தனிக்கதை...

    பதிலளிநீக்கு
  65. @ Kamala Hariharan said...
    வணக்கம் சகோதரரே

    /// அருமையான கதை. படிக்கும் போதே நாமும் அங்கேயே இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கியது. கிராமிய நடை. அழகான பேச்சுகள்.///

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  66. @ வெங்கட் நாகராஜ் said...

    /// உண்மையிலேயே கிராமத்தில் இருந்தது போன்ற உணர்வு. பாராட்டுகள்..///

    அன்பின் வெங்கட்... தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  67. @ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...
    /// அருமையான கதை பகிர்வுக்கு நன்றி. கதாசிரியருக்கு பாராட்டுகள்...///

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  68. @ Asokan Kuppusamy said...
    /// மிகவும் நன்று பாராட்டுகள்..///

    தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  69. @ ilavalhariharan said...
    ///கவிதைநடையில் கதை பின்னி இருக்கிறீர்கள் அருமை.///

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  70. @ Thulasidharan V Thillaiakathu said...

    ///கதை மிக மிக நன்றாக அமைதியான தெளிந்த ஆற்றின் நீர் போல தெளிவாக பல அருமையான தகவல்களையும் உள்ளடக்கி, அரும்பிய காதலைச் சொல்லியது.

    காதல் சுபமா? அல்லது கதை தொடருமோ? என்றும் தோன்றியது..///

    சமயத்தில் தங்களுக்குத் தோன்றுவது எல்லாம்
    உண்மையாகவே இருக்கின்றது..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  71. @ Thulasidharan V Thillaiakathu said...
    /// துரை அண்ணா என்றாலே கதையில் இயற்கை முதலில் விளையாடும். அடுத்து அன்பு இழையோடும்..///

    அவை இரண்டும் தானே வாழ்வின் அம்சங்கங்கள்..

    பதிலளிநீக்கு
  72. @ Thulasidharan V Thillaiakathu said...

    /// நாங்கள் எங்கள் ஊர்ப்பக்கம் குடம் என்றும் சொல்லுவோம் தோண்டி என்றும் சொல்லுவோம். தோண்டி சின்ன சைஸ் குடம்…தோண்டியை இடுப்பிலும் வைத்துக் கொண்டு வருவோம். கிணற்றில் நீர் இறைக்கவும் பயன்படுத்துவோம்..//

    உண்மைதான்.. எங்கள் ஊர் பக்கமும் இப்படித்தான்...

    பதிலளிநீக்கு
  73. @ Thulasidharan V Thillaiakathu said...

    // கடைசி வரிகள் எதையோ சொல்லாமல் சொல்லுதே! அண்ணாவின் கதைபோல இருக்கே!...//

    ஆகா.. வீட்டுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்...

    பதிலளிநீக்கு
  74. @ Thulasidharan V Thillaiakathu said...
    /// கதையை ரொம்பவே கிராமத்தை மனதில் கொண்டு வந்து ரசித்தேன் அண்ணா. … கீதா.. ///

    தங்கள் வருகையும் அடுத்தடுத்த கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!