செவ்வாய், 11 டிசம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - அழகே உன் பெயரென்ன - துளசிதரன்




அழகே உன் பெயரென்ன 
துளசிதரன் 

மின்சாரம் வந்த அந்த நேரத்தில் எல்லோரும் டிவியின் முன்னால். 


“அம்மா வா! ஜெய்சலுக்கு மந்திரி பொன்னாடை அணிவிக்கறத பாக்கலாம்” என்று மகள் வீணா சொன்னதும் தரையைத் துடைத்துக் கொண்டிருந்த நான் ஓடினேன். டிவியில் சிரித்த முகத்துடன் ஜெய்சல். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், வீர இளைஞர்கள் இவர்களுடன் மீனவ சேனையினரும் இறங்கி இரவு பகல் பாராது தொண்டாற்றிய போது, மீட்க வந்த படகில் ஏற முடியாது தவித்த பெண்களுக்குத் தன் உடலைப் படியாக்கிய கோர்மேன் கடற்கரைக்காரைவாசியான ஜெய்சல். சாதி, மதம், இனம், மொழி, பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் 3314 கேம்ப்களில் தங்கியிருக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் மக்கள்-----ஹெலிகாப்டர்லிருந்து இடப்படும் உணவு, உடை மற்றும் நீருக்கு மொட்டை மாடிகளில் காத்திருக்கும் மனிதர்கள்-----படகுகளில் செல்வோர் எறியும் ரொட்டிக்கும், தண்ணீர் பாட்டிலுக்கும் பாதி முங்கிய வீடுகளில் கூரைகளிலும், மாடிகளிலும் காத்திருக்கும் மனிதர்கள்.

டிவியில் காண்பிக்கப்படும் இக்காட்சிகளுக்கு இடையே ஒரு முகம்! கழுத்தில் லைஃபாய் இட்டு, கயிற்றைப் பிடித்தபடி போலீசார் உதவியுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து படகில் ஏறுவது யார்?! சுனில்?!......ஆம் சுனிலேதான்!......ஐம்பதை தாண்டினாலும் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்ததாலும் முப்பதாண்டுகளில் உடலில் வந்த மாற்றங்கள் சுனிலை மொத்தமாக மாற்றியிருந்தது. என்றாலும் சுனிலுடனான 8 மாதக் கால உறவு அவ்வளவு வலுவானது. சுனிலை மரணம் வரை மறக்கவே முடியாது. கண்மட்டுமல்ல மனதும் இதயமும், ஆத்மாவும். திடீரெனத் தோன்றி மறைந்த அந்த ஒரு நொடியில் சுனிலை அடையாளம் கண்டு கொண்டன. சிலையாய் நின்ற எனக்கு டிவியில் தோன்றுவது மட்டுமல்ல கணவரும், மகளும், மருமகனும், மகனும், மருமகளும், பேரனும் பேத்தியும் பேசியது கூடக் கேட்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்னால் எர்ணாகுளம் கச்சேரிப்படி சார்ட்டார்ட் அக்கவுண்டண்ட் வர்கீஸ் சார் ஆஃபீசில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் தனியே ஆஃபீஸில் அமர்ந்திருந்த போது உள்ளே வந்த சுனில் “என்ன? யார்” என்கின்ற தொனியில் தலையை மேலும் கீழும் ஆட்டியதும், எழுந்து

“என் பேர் சுமதி. நேத்துத்தான் ஜாய்ன் பண்ணினேன்” என்றேன்.

“ஓ! ஓகே ஓகே” என்றபடி சிரித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்த, முன்னால் இரண்டு செயர்களைக் கொண்ட கொஞ்சம் பெரிய டேபிளைக் கொண்ட செயரில் அமர்ந்த அந்த சுனிலை பார்த்ததுமே ஏதோ உள்ளுக்குள் எனக்கு நீண்டகால உறவு உள்ளது போல் தோன்றியது. இடையிடையே பார்த்த போதெல்லாம் சுனிலும் என்னைப் பார்த்ததால் நான் தடுமாறுவதைக் கண்ட சுனிலின் சிரிப்பு இப்போதும் மனதில் பசுமையாய் நிற்கிறது.

மதியம் சாப்பிட்ட பின் வருட வாரியாக டெபிட் மற்றும் க்ரெடிட் கௌண்டர் ஃபாய்ல் அடங்கிய புக்கை அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென சுனில் என்னருகே வந்ததும் பதறிப் போனேன். ஒரு கேஷ் புக்கையும் ஒரு பண்டில் ரெசிப்ட்டுகளையும் தந்து கௌண்டர் செக் செய்யச் சொன்னார். ஒரு பென்சிலால் கேஷ் புக்கில் ‘டிக்’ இடவும் சொன்னார். வேலையைத் தொடங்கினேன். ரசீதுகளில் இனி மூன்று மட்டும் பாக்கி. அதில் மூன்றாவது ரசீதைக் கண்ட நான் திடுக்கிட்டேன். அதில் “அழகே உன் பெயர் என்ன” என்று எழுதியிருந்தது. பதற்றத்துடனும் பயத்துடனும் சுனிலை பார்த்தேன். சுனில் சிரித்தபடி தலையை ஆட்டி “கம் ஆன்” என்றார். நான் சிறிதாக சுமதி என்று எழுதி வெட்டினேன். பதற்றத்தில் ரொம்ப நேரம் குழம்பி செய்வதறியாது திணறினேன்.

“என்ன கம்ப்ளீட் பண்ணலையா”

“இல்ல முடிஞ்சுச்சு” என்று இரண்டையும் கொடுத்தேன்.

ஐந்து மணிக்குக் கிளம்பிய சுனில் என்னருகே வந்து,

“சுமதி, அஞ்சு மணி வரைதான் ஆஃபீஸ். இனி நாளைக்கு. ஓகே?” என்று சிரித்தபடி சென்றார். என் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சிரித்தபடி பேசிய அந்த நொடியில், எப்படியோ ஏனோ அந்தக் கண்களும் முகமும் மனதில் பதிந்துவிட்டது. வீடு செல்லும் வழியிலும், சென்ற பின்பும் மனம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள், நான் கண்ணாடி முன் நின்று உடையை சரி செய்த போது என் தம்பி சுரேஷ்,

“என்ன இன்னிக்கு எப்பபாரு கண்ணாடி முன்னாடியே நின்னு அழகு பாத்திட்டிருக்க?” என்றதும்தான், என் செயல்கள் அன்று மற்றவர்களுக்கு வித்தியாசமாகப் படுவதைப் பற்றி உணர்ந்தேன். பார்த்ததும் ஏன் அப்படி அவர் என் மனதில் புகுந்தார்? அந்த வயதில் என் மனதில் அப்படித் தோன்ற என்ன காரணம் என்று தெரியவில்லை. சுனிலின் கவர்ச்சிப் புன்னகையா? காந்தக் கண்களா? நெற்றியில் விழுந்து கிடக்கும் ஒற்றைக் கற்றைத் தலை முடியா? அல்லது இவை எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமான கவர்ச்சியா? தெரியவில்லை. என் மனதிடம் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டேன். ஏன் என் மனம் இப்படி அலைகிறது? சுனிலைப் பற்றி நினைக்கிறது? இதுதான் இதுவரை என்னுள் தோன்றாதிருந்த காதலா? சுனிலை பற்றி ஒன்றும் அறியாததால் இப்படி எண்ணங்களைத் தான்தோன்றித்தனமாய் அலைய விடுவது சரியல்ல என்று என் அறிவு அவ்வப்போது எச்சரித்தாலும் மனம் சுனிலையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஆஃபீஸுக்குச் செல்லும் வழியிலெல்லாம் கண்களும் மனதும் சுனிலைத் தேடியது. சுனிலின் சீட் காலியாக இருந்தால் மனது பதறியது. இன்று லீவாக இருக்குமோ? கொஞ்சம் லேட்டாக வந்த சுனிலைக் கண்டதும் ஹப்பாடா என்றிருந்தது. அடுத்த ஐந்தே நிமிடத்தில் சுனில் என் முன் முந்தைய நாள் செய்தது போல் ஒரு கேஷ் புக்கையும், ஒரு கட்டு ரசீதுகளையும் தந்து

“நேத்து செய்ததோட கண்டினியுவேஷன். ஒகே?” என்று சிரித்துச் சென்றதும் மனதுக்கு இதமாய் இருந்தது. சந்தேகித்தது போல் ரசீதுகளுக்கிடையில் எட்டாய் மடித்து வைக்கப்பட்ட பேப்பர். நடுங்கும் கைகளுடன் அதை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்த பின், குனிந்து இடது கால் பாதத்திற்கும், செருப்பிற்கும் இடையில் திணித்தேன். மனது வேலையில் ஈடுபட முடியாமல் தவித்தது. இடையே சுனிலை பார்த்தேன். சிரித்து தலையை ஆட்டி.

“கம் ஆன்” என்றார். பதினைந்து நிமிடத்திற்குப் பின் மெதுவாக பாத்ரூம் சென்று கடிதத்தை எடுத்து வாசித்தேன். என் மனதில் என்னென்ன சிந்தனைகளோ அது சுனிலின் மனதிலும் இருக்கிறது என்பது கடிதத்தை வாசித்ததும் விளங்கியது. நான் காந்தம் போல் இழுக்கிறேனாம்.. சுனிலுக்கும் தூக்கமில்லையாம். நிறைய பேச வேண்டுமாம். மாலை ஆஃபீஸ் முடிந்ததும் எம் ஜி ரோடு வழியாக மெதுவாக நடந்து போகவேண்டும் என்பதை வாசித்ததும் பதற்றத்துடன் வெளியே வந்ததும் பாத்ரூமுக்கு வெளியே சுனில். உள்ளே நுழையும் முன் மெதுவாக “ஈவ்னிங்க். ஓகே?” என்று சொன்னதும் உடல் நடுங்கியது.

அன்று நான்கைந்து முறை கேஷ் புக்கும், ரசீது கட்டுகளும் சுனில் தந்தார். ஒவ்வொரு முறையும் எங்கள் விரல்கள் தாராளமாக உரசிக் கொண்டதால் பரவசப்பட்டுக் கொண்டிருந்தோம். மாலை பத்மா தியேட்டர் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். ஒரு ஆட்டோ அருகில் வந்து நின்றது. உள்ளே சுனில்.

“வா! சுமதி. ஏறிக்கோ” என்றதும் ஏறினேன். சௌத் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோ நின்றது. எனக்கு மனசு படபடத்தது. சுனில் ஏன் என்னை ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்? குழம்பினேன். ஸ்டேஷன் நோக்கி நடந்த போது,

“ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போகணும்” என்றேன்.

“ஒரு ஹாஃப் அன் ஹவர் ஃப்ரீயா ப்ளாட்ஃபார்ம்ல உக்காந்து பேசுவோம்” என்று சொல்லி இரண்டு ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் எடுத்த பின் ஆளில்லாத ஒரு ப்ளாட்ஃபார்ம் பெஞ்சில் அமர்ந்து பேசினோம்………………..

மகன் வினோத் என்னிடம், “அம்மா! என்ன நான் சொன்னது காதில் விழலையா? சுரேந்திரன் சார் வீட்டில் வாலண்டியர்ஸ் க்ளீனிங்க் முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்குத்தான் வருவாங்க. கிச்சன்ல இருந்து எல்லாத்தையும் மாத்தியாச்சா?”

“…ம்ம் எல்லாம் ஆச்சுடா” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தேன்.

களமசேரி பெரிங்கழாவில் 17 ஆம் தேதி இரவு வயல்களுக்கு அருகிலிருந்த வீடுகளில் மழை நீர் ஏறத் தொடங்கி சிறிது சிறிதாக நீர்மட்டம் உயரத் தொடங்கியது. சரிவான சிறு குன்றில் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தாழ்வாக இருந்த சுரேந்திரன் சாரது வீட்டிற்குள் 18 ஆம்தேதி இரவு வெள்ளம் ஏறியதும் வீணாவின் காக்கநாடு விட்டுக்கு எல்லா பொருட்களையும் கட்டில் மேலும், மேசை மேலும் மாடியிலும் வைத்த பின் போய்விட்டோம். இன்று காலைதான் வீட்டை அடைந்தோம். நாளை, 24.08.2018 ஆம் தேதி ஓணம் என்பதால் இன்று வீட்டைக் கழுவி சுத்தமாக்கும் வேலையில் இருந்தோம். ஓரளவு முடியும் தருவாயில் மின்சாம் வர கேபிளும் வந்தது. எல்லோரும் டிவியின் முன். நான் மீண்டும் சமையலறை தரையைத் துடைக்கும் வேலையைத் தொடங்கினேன்.

மனம் மீண்டும் சுனிலைப் பற்றிய எண்ணங்களில் உழன்றது. அன்றைய முதல் சந்திப்பிற்குப் பின் எத்தனையோ சந்திப்புகள், எட்டுமாதக்காலங்களில். ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன சுனிலுக்கு என்னை மணமுடிக்க உண்மையிலேயே ஆசை இருக்கத்தான் செய்தது. அப்பாவையும் அம்மாவையும் பார்த்துப் பேச நான் அழைத்த போது வீட்டுக்கு வந்த சுனிலிடம் பேசிய போது வேறு சாதி என்பது தெரிந்தும் இருவரும் அப்போது பிரச்சனைகளேதும் பண்ணவில்லை. அம்மா சுனிலிடம்,

“இவ அக்காக்கள் ரெண்டு பேருக்கும் 15 பவுன் நகைதான் போட்டோம். இவளுக்கும் எங்களால அவ்வளவுதான் செய்ய முடியும்” என்று கூடச் சொன்னார். ஆனால் என் மூத்த அக்கா சுனிதா மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்தாள். “வேறு சாதி பையன் வேண்டாம்”. அந்த எதிர்ப்பு சிறிது சிறிதாகப் படர்ந்து எல்லோரையும் பற்றிக் கொண்டது. இதனிடையே நானும் சுனிலும், கொச்சின் யுனிவர்சிட்டி, ஹெச் எம் டி என்று பல இடங்களில் சுனிலின் ஸ்கூட்டரில் சுற்றினோம். சுபாஷ் பார்க்கில் சந்தித்தோம். “வரவேற்பு”, “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்க்” படங்களுக்குக் காலைக்காட்சி சென்று காதல் காட்சிகளின் போது கைகளில் முத்தமிட்டுக் கொண்டோம்.

என் மூத்த அக்கா சுனிதா அவளது கணவரின் தூரத்து உறவான ஒரு மிலிட்டரிக்காரனை என் கணவராக்க எடுத்த முயற்சி வெற்றி காணும் தருவாயில் இருந்ததால், என் பெற்றோர் டிசம்பர் மாதம் முதல் வேலைக்குப் போக வேண்டாம் என முடிவு செய்துவிட்டனர். என்னைக் காணாமல் சுனில் வீட்டிற்கு ஃபோன் செய்த போது அக்கா சுனிதா,

“இந்தக் கல்யாணம் நடக்காது. எங்க சாதிப்பையனுக்குத்தான் சுமதியைக் கொடுப்போம்” என்று சொல்லிவிட்டாள். மீண்டும் பல முறை சுனில் ஃபோன் செய்த போதெல்லாம் “சுமதி இல்லை” என்ற பதில்தான். இடையே விரிவாக நான் ஒரு கடிதம் சுனிலுக்கு எழுதினேன். ஏதாவது சாக்கு சொல்லி இடையே சுனிலை ஓரிரு முறை சந்திக்கவும் செய்தேன்.

ஒரு முறை சுனிலை சந்தித்து பிரியும் போது சுனில் என் பீரியட்ஸ் பற்றி கேட்டதும். “போன மாதம் 27…ஏன்?” என்றதும்

“வர்ற 21 ஆம் தேதி வியாழன் ஆலுவா மணப்புறம் கோவிலுக்குப் போவோம்” என்றதும் “சரி” என்றேன்.

“அன்னிக்கு சாரி போதும். வேற ட்ரெஸ் வேண்டாம்” என்று சுனில் சொல்ல சரி என்றேன்.

21.9.1989, காலை 9 மணி. தோழியைக் காணப் போகிறேன் என்று பொய் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறினேன். சுனிலுக்காக நார்த் பஸ்டாண்டில் காத்திருந்த போது சுனில் ஸ்கூட்டரில் ஒரு சூட்கேஸோடு வந்தார். ஆலுவா ரயில்வே ஸ்டேஷனில் பார்க் செய்தபின் அருகிலிருந்த கடையிலிருந்து 75 ரூபாய்க்கு ஒரு லேடிஸ் பேக் வாங்கித் தந்தார். உன்னோட ஏதாவது ஒரு ஃப்ரென்ட் கொடுத்த கிஃப்ட்நு வீட்டில சொல்லிக்க என்றபடி கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்ட் அருகே உள்ள ஆரியபவனுக்குள் நுழைய நானும் பின் தொடர்ந்தேன். கேபினுள் அமர்ந்து உளுந்து வடை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,

“சுமதி! இதுக்கு மேல அரோமா லாட்ஜ் இருக்கு. ஒரு ரூம் எடுத்து ஃப்ரீயா பேசுவோம். ஒரே வெயில்” என்றார்.

“ஐயோ லாட்ஜுக்கா?!... அப்ப கோயில்?....ஐயோ முடியாது. இல்ல…. வேண்டாம்”

உடனே, சுனில், என் கைகளைப் பிடித்து, “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சத் தொடங்கினார்.

“ரிசப்ஷன்ல டென்ஷன் இல்லாம கூலா நிக்கணும். ஹஸ்பண்ட் வைஃப் மாதிரி. ஓகே?” என்றபடி நடந்த சுனிலை நான் பின் தொடர்ந்தேன். பயப்பட ஒன்றுமில்லை. சுனிலுடன் தானே’ என்று நினைத்துக் கொண்டேன்.

“மெட்ராஸ் மெயிலுக்குப் போனும். எய்ட் ஹவர்ஸ் மேல இருக்கு அதான். ரூம் ரொம்ப மேல வேண்டாம்” என்று சுனில் நடிக்க, நானும் யாரையும் கவனிக்காமல் சுவற்றில் மாட்டியிருந்த ஈஃபில் டவர் படத்தைப் பார்த்தபடி நின்றேன். ரூம்பாய் அறையைத் திறந்து விட்டுப் போனதும், சுனில் சூட்கேஸிலிருந்து கைலி மற்றும் துண்டை எடுத்து ஆடை மாற்றி பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

கதவு தட்டும் சப்தம்! பயந்தபடி கதவைத் திறந்தேன். ரூம்பாய். ஜக்கில் தண்ணீருடன்.

“ஜூஸ், ட்ரிங்க்ஸ் ஏதாவது வேணுமா?”

“அவர் பாத்ரூமில இருக்கார். வந்ததும் சொல்றேன்” என்றேன் பதற்றமில்லாமல்.. வெளியே வந்த சுனில்,

“நீ ரிஃப்ரெஷ் பண்ணனுமா?”

“இல்ல வேண்டாம். அப்புறம்….. அந்த ரூம் பாய் ஜூஸ் வேணுமானு கேட்டாரு”

“உனக்கு வேணுமா?”

“வேண்டாம்”

சுனில் சட்டையை அவிழ்த்து கதவின் ஹாண்டிலில் தொங்கவிட்டார். நான் ஏன் என்பது போல் பார்த்ததும்,

“அதில் ஒரு துவாரம் இருக்கு. நம்ப முடியாது. ஒளிஞ்சு பார்ப்பானுங்க” என்றபடி அருகே வந்து கைகளைப் பிடித்து கட்டியணைத்தார். முகமெங்கும் முத்தமழை. திடீரென கதவு தட்டப்படும் சத்தம். கதவைத் திறந்ததும்

“சார் ஏதாவது குடிக்க ட்ரிங்க்ஸ்?” மீண்டும் ரூம்பாய்.

“வேண்டாம்” என்றபடி கதவைச் சாத்திய பின் சுனில்,

“சுமதி காட்டன் சாரி கசங்கிடும். அவிழ்த்து அந்தச் செயர்ல வை” என்றதும் தயங்கிய என்னிடம் கெஞ்சி அவிழ்க்க வைத்துவிட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பயமும் விலக, இவருடன் தானே வாழப் போகிறோம் என்ற எண்ணமும் வர, எதிர்ப்பேதும் சொல்லாமல் அடுத்த இரண்டு மணி நேரம் எதிர்காலத்தைப் பற்றி பேசியபடி இரு முறை இணைந்தோம். 12 மணிக்கு இருவரும் ஷவரில் ஒன்றாய் குளித்தோம். ஆரியபவனில் சாப்பிட்டபின் கேஎஸ்ஆர்டிசி ஸ்டாண்டிலிருந்து எர்ணாகுளம் ஃபாஸ்ட் பாசஞ்சரில் என்னை ஏற்றிவிட்டார்.

சுனில் அதன் பின் என்னை கூப்பிடவே இல்லை. அடுத்து வந்த நாட்களில் ஆஃபீஸுக்குக் கூப்பிட்ட போதெல்லாம் சுனில் இல்லை என்ற பதில். புழுவாய்த் துடித்தேன். சுனில் என்னை ஏமாற்றிவிடுவாரோ? வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரமாக இருந்ததால் நான் எடுத்தேன்.

“நான் பயந்தே போனேன். ரெண்டு நாள் டிலே! நான் வேண்டாத கோயில்கள் இல்ல. உறக்கமும் இல்ல. இன்னிக்குத்தான் ஆச்சு. இப்பத்தான் உயிர் வந்துச்சு. எங்க போயிட்டீங்க? ஏன் என்ன கூப்பிடலை. சொல்லிருந்தேனே பகல் 11-12 மணிக்கு இடையில கூப்பிடுங்கனு…இப்ப கூப்பிட்ட மாதிரி…”

“எனக்கு உன்னைப் போல பயமெல்லாம் இல்லவே இல்லை சுமதி. 21 ஆம் தேதி எல்லாம் சேஃப் பீரியட்தான்…”

என் முகத்தில் பளார் என்று அறை விழுந்தது போல் இருந்தது. சுனில் திடீரென என் முன் ஒரு வில்லன் ஆவது போல் தோன்றியது. சுனில் ஏதேதோ சொல்ல, நான் பதிலேதும் சொல்லாமல் ரிசீவரைப் பிடித்துக் கொண்டு நின்றேன். சுனில் நான் நினைத்தது போல் அல்ல. கண்ணிங்க் அண்ட் ஹிப்போக்ரைட்.

அம்மா எப்போதும் சொல்லும் வார்த்தைகள் என் காதில் முழங்கியது. “நீ நினைக்கற மாதிரி இல்ல சுனில் எல்லாம். உன்ன கல்யாணம் பண்ண மாட்டான். நம்பாதே! உன்ன ஏமாத்திருவான். அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இரு. பெண்கள் இலை போல. ஆண்கள் முள்ளு மாதிரி. இலை முள்ளு மேல் பட்டாலும் முள்ளு இலை மேல் விழுந்தாலும் இலைக்குத்தான் சேதம்.”

“சுமதி! என்ன மௌனம்? அடுத்த மாசம் 18 ஆம் தேதி வியாழக் கிழமை சோட்டாணிக்கரை போவோம் ஓகே? எனக்கு எப்பவும் உன் நினைவுதான். சரி நான் நாளைக்குக் கூப்பிடறேன் இதே டைம் ஓகே?”

ஆண்கள் ஆண்கள்தான் பெண்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு போக வஸ்துதான். மனைவியாகும் முன் பெண்கள் ஆண்களுக்கு அடி பணியவே கூடாது. அதன் பின் ஓரிருமுறை சுனில் கூப்பிட்ட போது, சுனிலின் மனதை அறிய நான் கல்யாணப் பேச்சை எடுத்த போதெல்லாம், “நான் ரெடி ஆனா உங்க அக்கா சம்மதிக்கணுமே!” என்று சொல்லி உடனே அடுத்த சந்திப்புக்குத் தாவிடுவது வழக்கமாகியது.

நான் ஜாக்கிரதையானேன். சுனிலிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும். சுனிலின் ஃபோன் வந்த போது வேண்டுமென்றே எடுக்காமல், அம்மா, தம்பி, அக்கா இப்படி யாரையாவது எடுக்கச் சொன்னேன். ஒரு முறை அக்காவிடம் சுனில் சிக்கியதும்,

“யார் பேசுறீங்கனு தெரியும். இனி கூப்பிட்டா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவோம். அவளுக்கு வேற கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணப் போறோம். புரியுதா?” என்ற பின் சுனிலின் ஃபோன் வரவே இல்லை.

அதன் பின் நான் எதிர்ப்பு சொல்லாததால் எல்லோரது விருப்பப்படி மிலிட்டரிக்காரரான தினேஷ் என் கணவரானார். என் வாழ்வில் நிகழ்ந்த அந்தத் தவறு ஒரு பெரிய விபத்துதான். அதற்கு நானும் பொறுப்பாளியே! என்பதற்காக, சுனிலின் வாழ்வை அத்தவறு ஒரு விதத்திலும் பாதிக்காமலிருக்கும் போது, ஏன் நான் எல்லோரிடமும் சொல்லி என் தலையில் நானே மண்ணை வாரி இட்டுக் கொள்வது போல் என் வாழ்வை இருட்டாக்கிக் கொள்ள வேண்டும்?

என் கணவருக்கு எப்படியோ சுனில் விஷயம் தெரிந்து நான் வீணாவை வயிற்றில் சுமந்திருந்த போது,

“உனக்கும் அவனுக்கும் அத்து மீறிய தொடர்பு இல்லேனு உன் வயித்துல வளர்ற குழந்தை மேல சத்தியம் பண்ணிக் கொடு என்றதும் சத்தியமும் செய்தேன். எனக்குத் தெரியும். இறைவன் இந்தப் பொய் சத்தியத்திற்காக என்னைத் தண்டிக்க மாட்டார் என்று. அப்போது நான் சத்தியம் செய்யத் தயங்கியிருந்தால் என் இல்லறக் கதை இல்லாமற் போயிருக்கும். நான் நடத்தை கெட்டவளாக முத்திரை குத்தப்பட்டிருப்பேன். என் குழந்தை நடத்தை கெட்டவளின் குழந்தையாக வளர வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். எத்தனையோ பெரிய பெரிய பாவங்களை செய்தவர்களூம், செய்பவர்களும் ஒன்றுமே செய்யாதது போல வாழும் போது, இப்படி நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளான ஒரு பெண்ணான நான் மட்டும் ஏன் என் வாழ்வை நாசம் செய்து கொள்ள வேண்டும்? முடியாது. கூடாது என்று முடிவு எடுத்தேன்.

க்ளீனிங்க் வாலண்டியர்ஸ் இருபது பேர் வந்து வீடு, கிணறு மற்றும் வீட்டைச் சுற்றிய இடங்களை எல்லாம் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக் கொண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் நின்ற நான்,

“இந்த வெள்ளப் பெருக்கும் ஒரு விபத்து. இயற்கையின் சீற்றத்தால் விளைந்தது. வீட்டில் சேறு படிந்ததால் வீட்டை வேண்டாம் என்று சொல்லி வேறிடம் செல்லாமல் இதை இயன்ற மட்டும் சுத்தம் செய்து மீண்டும் இந்த வீட்டில் வாழவேண்டும். அதைத்தானே எல்லோரும் அவரவர் வீடுகளில் இப்போது செய்கிறார்கள். இது போல் தான் முப்பது வருடங்களுக்கு முன் சுனில் எனும் சேறு என்னுள் படிந்தது. நல்ல காலம் அதனால் வேறு விளைவுகள் இல்லை. இறையருளால் அதிலிருந்து மீண்டு நான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினேன். நாம் கவனமாக வாழாவிட்டால் இப்படிப்பட்ட மாசுகள் நம் வாழ்வில் படிந்துவிட வாய்ப்புண்டு. அப்படி மாசு படியும் நிலை வந்தால் அவற்றைத் தள்ளிவிட்டு நம் வாழ்வை மரணம் வரை தொடரத்தான் வேண்டும். நமக்கு அதற்கான மனமிருந்தால் போதும். நம் தவறை உணர்ந்து மீண்டும் தொடராமல் இறைவனிடம் மன்னிப்பு கோரினால் இறைவன் அதற்கான மார்கங்களை நமக்குக் காட்டுவார்” என்று சிந்தித்துக் கொண்டே வேலையில் இறங்கிய போது,

“பாட்டி எங்கருக்க” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்த என் பிஞ்சுப் பேரனின் குரலில் மயங்கி மகிழ்வில் திளைத்து அவனை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டேன்.

------துளசிதரன்

43 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. அழகே உன் பெயரென்ன ?

    கில்லர்ஜிதான்.

    பதிலளிநீக்கு
  3. கதைக்களம் மிகவும் கனமானது...

    அழகான முடிவு....
    ஆனாலும் மனதில் நெருடல் இல்லாமல் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா தங்களின் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  4. எனக்கு இணையம் இல்லாததால் மொபைல் வழியாக....

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. கேரளத்து வெள்ளத்தோடு மனித மனங்களின் சலனங்களையும் அலசிக் கழுவி விட்டது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்.

      மனித மனங்களின் சஞ்சலத்தை நான் என் சுற்றுவட்டாரத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

      துளசிதரன்

      நீக்கு
  6. கிட்டத்தட்ட அக்னி பிரவேசம் தான். பெண்கள் எப்படி சுலபமாக ஏமாறுகிறார்கள்.
    இப்போது பாட்டியான பிறகும் அந்த மனிதன் நினைவு எப்படி அலைக்கழிக்கிறது சுமதியை.
    நல்ல நீதிதான். வாழ்த்துகள் துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் கருத்திற்கு

      மனதில் பல நிகழ்வுகள் ஆழமாகப் பதியும் போது அவை நீரு பூத்த நெருப்பு போலத்தான் இருக்கும் என்று மன நலம் பற்றி பேசும் மருத்துவர்களும் சொல்கின்றார்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  7. தவறு என்பது தவறி செய்வது...
    தப்பு என்பது தெரிந்து செய்வது...

    தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்...
    தப்பு செய்தவன் வருந்தியாகணும்...

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

      துளசிதரன்

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  10. பருவ மயக்கம் தவறுகளுக்கு காரணமாகிறது

    செய்த தவறுக்கு உண்மையாக வருந்தும்போது அது பாவமாகாது.

    மனம் கனத்து விட்டது நண்பரே...

    உண்மைச் சம்பவத்தின் புணையலோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.

      உங்கள் கருத்திற்கான பதில் பொதுவாகக் கொடுத்துள்ள பதில் கருத்தில் இருக்கிறது கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  11. ரொம்பவும் நெருடலான கதை. நல்ல ஃப்ளோ... எதில் நம்பிக்கை வைப்பது என்று பெண்களுக்குத் தெரிவதில்லை... ஊரில் நடக்கும் கதைதான்

    கதையை ரசித்தேன்... பதட்டத்தோடு. (ஹப்பாவில் கீதா ரங்கனின் எழுத்து தெரிந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கதையை டைப்பினது நான்தானே! அதான் அவர் அப்பாடா என்று எழுதியிருந்ததை நான் டைப்பும் போது என் வார்த்தை வந்துருச்சு...எல்லாம் பழக்க தோஷம்தேன்!!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லை தமிழன்.

      பெண்கள் தாங்கள் அன்பு செய்யும் ஆண்களை எளிதில் நம்பிவிடுகிறார்கள். கொஞ்சம் விழிப்புடன் இருப்பவர்களைக் கூட இப்படியான மனம் நிலை குலைய வைத்துவிடுகிறது.

      துளசிதரன்

      நீக்கு
  12. இன்று வேலை மும்முரத்தில் காலை வணக்கம் வைக்கவே மறந்து விட்டேன். தாமதமான காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. கணமான கதைக்கரு. வெகு சரளமான நடை, ப்ரோஃபஷனல் டச்சோடு நல்ல கதை. ஆனாலும் மனதில் ஒரு நெருடல் வரத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்.

      ப்ரொஃபஷனல் டச்// இப்படியான வார்த்தை, கருத்து என்னை வியப்படைய வைத்தது! மிக்க மகிழ்ச்சி சகோதரி. ஊக்கம் தரும் வார்த்தை.

      துளசிதரன்

      நீக்கு
  14. கதை மனதை கஷ்டபடுத்தி விட்டது.
    கவனமாய் இருக்க சொல்லும் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      பெண்கள் கவனமாய் இருக்க வேண்டும். மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

      துளசிதரன்

      நீக்கு
  15. சாரி ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ் அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ் நட்பூஸ் எல்லாருக்கும்....தாமதமான காலைவணக்கம்.

    உறவினர் வருகை...பணிச் சுமை...தளம் வர முடியாலி. நாளை சென்னை பயணம் காலையிலேயே மீண்டும் சனிக்கிழமை மதியம் தான் வருகை அதன் பின் தளம் வருவேன்..

    ஓ இன்று துளசியின் கதை மறந்தே போச்சு ஸ்ரீராம். அவருக்கும் சொல்லனும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சந்தர்ப்பம் கிடைத்தால் அநேகமாக எல்லா ஆண்களுமே சுன்ல் மாதிரிதான் பெண்கள்சூதனமாக இருத்தல் அவசியம் ஆனல் சுனில் ப்ளான்செய்துசந்தர்ப்பம் ஏற்படுத்துகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  17. முதலில் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு, ஸ்ரீராம் ஜி க்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

    எனது கதையையும் இங்கு வெளியிட்டமைக்கு. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

    நம்மைச் சுற்றி நடப்பவைகளும், சுற்றத்தில் நடப்பவைகளும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் போது அவை கதைகளாக வந்துவிடுகிறது. சில மனிதர்கள் அவர்களது செயல்கள் இவ்வுலகிற்கு முரண்பட்டு நம்மை வியக்க வைத்து இப்படியும் நடக்குமா? இப்படியும் மனிதர்களா என்று எண்ண வைக்கும், சில சமயங்களில் மனம் ஏற்க மறுக்கும் அப்புறம் இப்படியும் நடக்கலாம் தான் எனும் போது அவற்றை கலந்து கதைகளாகப் புனைய வைக்கிறது. அப்படி உருவான ஒன்றுதான் இது. அதுவும் சமீபத்து வெள்ளத்தின் போது ஆசிரியர்கள் அறையில் ஒருவர் தன் நண்பர் ஒருவரை பல வருடங்கள் கழித்து டிவியில் இப்படிக் கண்டதாகச் சொல்லவும், அவர் தன் பழைய நாட்களைச் சொல்லவும் நான் அறிந்த நிகழ்வும் இணைத்து கதையானது.

    நெருடல் என்பதைக் கண்ட போது என் மனதில் தோன்றிய வார்த்தை catharsis-the process of releasing, and thereby providing relief from, strong or repressed emotions. மற்றும் Story of Macbeth.
    இந்த catharsis ஒரு சிலருக்கு பாட்டு வடிவில், சிலருக்கு கவிதை வடிவில், ஒரு சிலருக்கு கட்டுரை, கதைகள் வடிவில் வெளிவரலாம். (the process of releasing strong emotions through a particular activity or experience, such as writing or theatre, in a way that helps you to understand those emotions)

    இப்படியான கதைகளில், நிகழ்வுகளில் இந்த வார்த்தை வரும் தான்.

    மீண்டும் மிக்க நன்றி அனைவருக்கும். என் கதையும் இப்படி எங்கள் ப்ளாகில் வெளியாகியதில் மிகுந்த சந்தோஷம் ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் துளசி தனிதனியாகவும் பதில் தருகிறார் அவை எல்லாம் வந்ததும் ராத்திரி அப்புறம் வந்து போடுகிறேன்.

    விட்ட பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கேன், அப்புறம் நாளை பயண ஏற்பாடுகள் வேறு இருக்கு...ஸோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் ஜி! மீண்டும் மிக்க நன்றி நான் எழுதிய கதையையும் இங்கு வெளியிட்டு சிறப்பித்தமைக்கு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. இரு நாட்களுக்கு முன்பே கதை படிச்சேன் துளசி அண்ணன், இப்போதான் கொமெண்ட் போட முடியுது.

    மிக அழகாக சில இங்கிலிஸ் படம் பார்ப்பதைப்போன்ற விறுவிறுப்பாகச் சென்றது கதை.. என்னாகுமோ என ஒரே திகிலாக இருந்து முடிவில் கவிட்டுப்போட்டார் சுனில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    கிட்டத்தட்ட விதிப்படத்தில் மோகன் கரெக்ட்டரை நினைவு படுத்தியது சுனில் கரெக்டர்.

    சுமதிக்கு திருமணம் நிட்சயமாகிறது என்றபோது, சுனில் அவசரமாக லொட்சுக்கு அழைச்சுப் போனதை சத்தியமாக நான் கொஞ்சம்கூட தப்பாகவே எண்ணவில்லை... மிக நல்ல எண்ணத்திலதான் அழைத்துப் போகிறார், அதாவது எப்படியாவது சுமதியைப் பிரக்னெண்ட் ஆக்கிட்டால், அக்கல்யாணம் நின்றுவிடும், பின், தானும் சுமதியும் சேர்ந்து வாழலாம் எனும் நல்லெண்ணத்தோடுதான் விளக்கம் கேட்டு அழைச்சுப் போகிறார் என நினைச்சேன்...

    என்னைப் பொறுத்து சுமதி செய்ததில் தப்புச் சொல்லவும் முடியவில்லை, ஏனெனில் சுமதி இடத்தில் இருந்தால், முக்கால்வாசிப் பெண்களும் சுனில் போன்றோரை நம்பத்தான் செய்வார்கள்.. மனதார விரும்பும் ஒருவர் எனும் போது, அவர் எப்பவும் நமக்கு நன்மைதானே செய்வார் எனத்தான் மனம் எண்ணும்... இப்படி ஏமாற்றுவார் என்பது நினைச்சுப்பார்க்க முடியாத ஒன்றுதான்..

    அடுத்து தன் கணவரிடம் இக்கதையை மறைத்தது... அதுவும் சரி என்றே மனம் எண்ணுது, திருமணத்துக்கு முன்பான வாழ்க்கை அது, அதை சொல்லப்போய் பிற்காலம் முழுவதும் வீணாகும் வாய்ப்பும் உண்டு.. அது கணவன்மார்களின் மனநிலையைப் பொறுத்தது, சிலர் அதை கைவிடு அது முடிஞ்சுபோய் விட்டதுதானே என்பினம்.. சிலரோ சாகும்வரை அதை வச்சே சண்டை போட்டு நரகம் ஆக்கிடுவினம் வாழ்வை.

    திருமணத்தின் பின் கணவருக்கு எவ்வளவு உத்தமியாக இருக்கிறா என்பதே முக்கியம், ஒளிச்சு ஒளிச்சு மீண்டும் சுனிலுடன் தொடர்பில் இருந்திருந்தால்தான் அது மன்னிக்க முடியாத தப்பு...

    அழகாக எழுதப்பட்ட கதை.. கீதாவின் பேச்சுவழக்கும் வந்து கலந்து போகிறது ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா உங்கள் கருத்து அருமையாக உள்ளது. கதையின் கதாபாத்திரங்களை அழகாக நீங்கள் ஸ்டடி செய்திருக்கிறீர்கள். நான் எழுதும் போது என் மனதில் என்ன தோன்றியதோ அதை நீங்கள் இங்கு சொல்லியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கதாபாத்திரத்திற்குச் சொல்லியிருப்பது சரியான பாயின்ட்ஸ்.

      பொதுவாகவே உங்கள் கருத்துகள் மிகவும் பக்குவப்பட்ட அனைத்து தரப்பிலிருந்தும் யோசிக்கும் கருத்தாக, ஒளிவு மறைவு இன்றி நேரடியாகப் பல சமயங்களில் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டாலும் அதில் கருத்து இருப்பதாகவே நான் கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் பல பதிவுகளுக்கும் சரி, கருத்துகளுக்கும் சரி பதில் கொடுக்க முடியாமல் போகிறது. அல்லது தாமதமாகத்தான் கொடுக்க முடிகிறது.

      கீதாவின் பேச்சு வழக்கு, நான் எப்போதுமே ஒரு பேப்பரில்தான் எழுதுவது வழக்கம். அப்படி எழுதியதை அவருக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பிவிடுவேன். என் கையெழுத்து அவருக்கு மிகவும் பரிச்சயம் என்றாலும் கூட நான் வெட்டி எழுதியது புரியாமல் போகும் பல சமயம் அவரே புரிந்து கொண்டு தட்டச்சு செய்யும் போது கலந்திருக்கும். அவர் தட்டச்சியபின் ஒரு முறைதான் என்னால் வாசித்து திருத்தம் செய்ய முடிந்தது. மாற்றப்பட்டவை என் அனுமதியுடன் தான்.

      துளசிதரன்

      நீக்கு
    2. //நான் கொஞ்சம்கூட தப்பாகவே எண்ணவில்லை... மிக நல்ல எண்ணத்திலதான் அழைத்துப் போகிறார், அதாவது எப்படியாவது சுமதியைப் பிரக்னெண்ட் ஆக்கிட்டால், அக்கல்யாணம் நின்றுவிடும், பின், தானும் சுமதியும் சேர்ந்து வாழலாம் எனும் //

      grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
      https://j.gifs.com/Lg0vmw.gif

      நீக்கு
    3. வாவ் !! சூப்பர்ப் .வித்யாசமான கதைக்கருவை எடுத்து எழுதியிருக்கீங்க ..வாழ்த்துக்கள் துளசி அண்ணா .
      பெரும்பாலான பெண்கள் எளிதில் சுனில் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் நம்பிக்கை வைத்து உணர்ச்சிவசப்படுவாதேலேயே சுனில் போன்றோருக்கு அதீத தைரியம் ..

      முதலில் ஏமாந்தாலும் பிறகு சுனிலின் தீய எண்ணத்தை புரிந்து தன்னை காத்துக்கொண்ட சுமதியை பாராட்ட வேண்டும் .ஒரு தவற்றால் வாழ்க்கையே முடிந்து போகக்கூடாது ..

      //மனைவியாகும் முன் பெண்கள் ஆண்களுக்கு அடி பணியவே கூடாது. // மிகவும் உண்மை
      ஒரு பெண்ணின் monthly பெர்சனல் விஷயங்களை அவளது தாய் அல்லது சகோதரி ஆலோசிக்கலாம் ஒரு சில மாதமே நட்பு கொண்ட ஆண் பேசுவது தவறு அவனது இன்டென்க்ஷன்ஸ் வேறு என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும் .

      //

      எத்தனையோ பெரிய பெரிய பாவங்களை செய்தவர்களூம், செய்பவர்களும் ஒன்றுமே செய்யாதது போல வாழும் போது, இப்படி நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளான ஒரு பெண்ணான நான் மட்டும் ஏன் என் வாழ்வை நாசம் செய்து கொள்ள வேண்டும்? முடியாது. கூடாது என்று முடிவு எடுத்தேன்.//
      அதே அதே செம வரிகள் மீண்டும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் படிப்பினை தரும் நல்லதொரு கதையை தந்ததற்கு ..

      சில இடங்களில் கீதா எழுதினாரோ என்று கொஞ்சம் குழம்பினேன் :)

      நீக்கு
  21. பெண்களுக்கு இரு கண்கள் போதா. மூன்றாம் கண் வேண்டும் என்பதைச் சொல்லும் உங்கள் கதை மிக அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!