திங்கள், 2 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை - மனோகரம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 திருநெவேலிக்காரங்களுக்கு மிகவும் பரிச்சயமானது இந்த ஸ்வீட்.  சென்னையில் இருந்தபோது நான் ஆர்டர் செய்து கொரியரில் வரவழைத்துக்கொள்வேன். பெங்களூருக்கு வந்த பிறகு நானே பண்ண ஆரம்பித்துவிட்டேன்.

இதை மூன்று வழிகளில் செய்வேன்.  அதில் ஒன்று நகரத்தார் செய்முறை (ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறையைப் பார்த்து முயற்சித்தது).  இந்த ஊர்ல உறவினர்களுக்கு இதனைச் செய்துகொடுப்பேன். அவங்களும் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்வாங்க. என் பெண், அடிக்கடி ஒரே ஸ்வீட் செய்யாதீங்க என்று சொல்லிட்டா.  இதன் செய்முறையை எழுதணும் என்று ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருந்தேன்.  எப்போதுமே எல்லாவற்றிர்க்கும் படங்கள் எடுத்து வைத்துக்கொண்டாலும், செய்த அன்றே சூட்டோடு சூட்டாக எழுதி அனுப்புவதுதான் எளிது.  

நான் பருப்புத் தேங்காய் செய்முறை எங்கள் பிளாக்கில் எழுதணும் என்று நினைத்திருந்தேன். அதற்கு முதல் படியான மனோகரம் செய்முறையை எழுதிடுவோம் என்று நினைத்து இந்த வாரத்திற்கு எழுதுகிறேன்.


இப்போ இதன் செய்முறை.


தேவையானவை

 

மெதட் 1 

கடலை மாவு 1 கப் (குவித்து அளக்கணும்)

அரிசி மாவு 1 மேசைக் கரண்டி

வெல்லம் 1 கப்

சிறிது உப்பு

பொரிக்கத் தேவையான எண்ணெய்


மெதட் 2 

அரிசி (தோசைப்பச்சரிசி) 1 கிலோ, உளுத்தம் பருப்பு 1/4 கிலோ 

இரண்டையும் கலந்து மெஷினில் கொடுத்து மாவாக்கிக்கொள்ணும்.


செய்முறை


1. கடலை மாவு, அரிசி மாவு, துளி உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் சூடான எண்ணெய் 1 மேசைக்கரண்டி சேர்க்கணும். கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசைந்துகொள்ளணும்.  இது முருக்கு பிழியும் பதத்தில் இருக்கணும்.


2. அடுப்பில் எண்ணெயைக் காய வைக்கவும். 


3. மனோகரம் பிழியும் அச்சில் (அதில் 3 பெரிய கண்கள் இருக்கும். அப்போதான் மனோகரம் தடிமனாக வரும்) காய்ந்திருக்கும் எண்ணெயில் பிழியணும். அடுப்பை SIMல் வைத்து வேக விடணும்.


4. பிழியும்போது முருக்கு மாதிரி சுத்திச் சுத்தி பிழியாமல் ஓரளவு நெடுக இருக்கும்படி பிழியணும்.  இதைப் பிறகு 2-3 இஞ்ச் அளவிற்கு உடைக்கப்போகிறோம் என்பதை மறந்துடாதீங்க.


5. கொஞ்சம் ஆறின பிறகு பிழிந்ததை, 2-3 இஞ்ச் அளவிற்கு உடைத்துக்கொள்ளுங்கள்.


6. இப்போ கடாயில் வெல்லம் போட்டு சூடுபடுத்தி, வெல்லப்பாகை டங்கு பதத்திற்குக் கொண்டுவரவும்.  இதனை உடைத்திருந்த மனோகரத்துல சேர்த்துக் கலக்கவும். 


7. இப்போ மனோகரம் கலவை கொஞ்சம் சூடா இருக்கும், பாகின் சூட்டினால். கையில் அரிசி மாவைத் தொட்டுக்கொண்டு, அதனை உருண்டையா பிடிக்கலாம்.  இல்லைனா, நெய்யைத் தொட்டுக்கொண்டு உருண்டை பிடிக்கலாம்.



இரண்டாவ்து முறையில், மெதட் 2ல் உள்ளமாதிரி மிஷினில் மாவை நைஸாக திரித்துக்கொள்ளவும்.  ஸ்டெப் 1ல் குறிப்பிட்ட மாதிரி, துளி உப்பு, சூடான எண்ணெய் கொஞ்சம், கொஞ்சம் சூடான தண்ணீர் சேர்த்து மனோகரம் பிழிவதற்கு மாவைப் பிசைந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.







பொதுவா பிராமணர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மனோகரம் செய்வார்கள். இதனையே சீனியை உபயோகப்படுத்தி, சீனிச் சேவு என்று திருநெல்வேலி லாலா கடைகளிலும், கிராமத்து திருவிழா கடைகளிலும் விற்பார்கள்.  நகரத்தார் பகுதிகளில் மனகோலம் என்று செய்வார்கள். அதற்கு பாசிப்பருப்பு, தேங்காய்லாம் உபயோகிப்பார்கள்.


திருநெவேலி மனோகரம் என்று மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்வாகத் இனிப்பு கடையில் விற்கிறார்கள். அதனை ஜீனி, வெல்லம் கலந்த முறுக்குப் பாகில் செய்வதால் எனக்கு அவ்வளவு பிடித்தமில்லை. நல்ல மனோகரம் வாங்கணும் என்றால் என் மனதுக்குத் தோன்றுவது இரண்டு கடைகள்தான். ஒன்று பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருக்கும் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ்.  இன்னொன்று, ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ், கல்லிடைக் குறிச்சி. முன்பெல்லாம் நான் அவர்களிடம் ஆர்டர் செய்து கொரியரில் பெற்றுக்கொள்வேன். அப்புறம் தொழில் கற்றுக்கொண்டபின் (ஹாஹா), நானே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.


அடுத்த செய்முறை பருப்புத் தேங்காய். அதற்கான base ஆக நான் எடுத்துக்கொண்டது மனோகரம். 


குறிப்பு:  வெல்லத்தோடு சிறிது ஜீனியும் சேர்த்துக் கொதிக்கவைத்து, பாகை தக்காளி பதத்துக்குக் கொண்டுவந்தால், மனோகரத்தைத் தனித் தனியாக உடைக்க முடியும். நான் உருண்டையா பண்ணிட்டா, கொடுப்பது சுலபம் என்று நினைப்பேன்.

109 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாட்களும்
    நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் மனோகரத்துக்கும் , முரளிக்கும்
    நன்றி. இரண்டாவது, டங்கு பதம், தக்காளி பதம்
    புரியவில்லை.:)
    சொல்லவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பி பதம் என்று சொல்வார்களே.. அதுவோ!

      நீக்கு
    2. கம்பி பதமா. இல்லாட்டா உருண்டை பதமா?

      நீக்கு
    3. கம்பி பதம் கடந்து, உருண்டை பதம் வருவதற்கு முன் கைகளினால் உருட்டி பார்க்கும் போது,கைகளில் ஒட்டாமல் உருண்டையாக வருவது தக்காளி பதம். அதை கொஞ்சத்தில் கடந்து செல்லும் போது முழுமையான டங்கு பதம் வந்து விடும். ஆர்வத்தில் அவசர குடுகையாக வந்து விளக்கமளிக்கிறேன். சகோதரர் நெ. தமிழர் வந்து அவர் பக்குவத்தில் என்ன பதில் சொல்கிறாரோ பார்க்கலாம்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...

      ஶ்ரீராம்... கம்பிப் பதம் ஜீனிக்குத்தான். பாகை இரு விரல்களால் எடுத்துப் பார்க்க முடியும். வெல்லப் பாகிற்கு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அதில் விட்டுத்தான் பார்க்க முடியும்.

      நீக்கு
    5. கமலா ஹரிஹரன் ஜி. (மேடம்னு எழுதுவதைவிட இது சுலபம்..தில்லிக் கார்ரிடமிருந்து கற்றது) எழுதியிருப்பது சரிதான். நன்றி

      நீக்கு
    6. டங்கு பதம் பிரயோகம் இப்போது புன்னகைக்க வைக்கிறது!​

      நீக்கு
    7. ஜலத்துல துளி பாகை விட்டு, அது உடனே கட்டியா உருட்டும் பதம். அதனை, தட்டில் டக்னு போட்டா டங்க் என்று சத்தம் வரும். அதான் டங்குப் பதம்.

      நீக்கு
    8. தப்பாப்போய் சொய்ங் என்று கரைந்து விட்டால் அது சொய்ங் பதமோ?!

      நீக்கு
    9. அட? நான் வந்து சொல்ல நினைச்சேன். கமலாவும், நெல்லையும் முந்திக் கொண்டாங்க. என் மாமியார் நெல்லையின் இரண்டாவது வழியில் தான் பண்ணுவார். நாங்க (மதுரைக்காரங்களாக்கும்!) வறுத்த கொண்டைக்கடலையைத் தோல் உரித்துப் புடைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் அரிசியும் கொஞ்சம் போல் வறுத்த உளுந்தும் சேர்த்து மிஷினில் கொடுத்து நல்ல மாவாக்கிக் கொண்டு அதில் பிழிவோம். பின்னர் வெல்லப் பாகை நெல்லை சொன்ன "டங்க்" பதத்தில் வைத்துத் தேங்காய்க் கீற்றுக்களையும், ஏலக்காயையும் உடைத்த தேன்குழல்களோடு சேர்த்துப் பாகை ஊற்றிக் கலக்கி உருண்டைகளாய்ப் பிடிப்போம். இப்போல்லாம் பண்ண முடியறதில்லை. ஆனால் எங்க சமையல் மாமி பண்ணுகிறார். எங்களுக்குக் கால் கிலோ எடுத்து வைத்துடுவார். வெல்லம் போதாது என்பதோடு பானுமதி சொல்கிறாப்போல் பாகு கசிய இருக்காது. கொஞ்சம் கெட்டியாகவே இருக்கும். என்றாலும் சாப்பிடுகிறோம். இதாவது கிடைக்கிறதே என்று தான்! :)))))))

      நீக்கு
    10. / தப்பாப்போய் சொய்ங் என்று கரைந்து விட்டால் அது சொய்ங் பதமோ?!/

      ஹா ஹா ஹா. அது மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கும் வெல்லக் கரைசல் பதம். அதனுடைய பெயரும் நன்றாக உள்ளது.

      நீக்கு
    11. வாங்க கீதா சாம்பசிவம் சகோதரி.

      வணக்கம். நலமா? உங்களைத்தான் எதிர் பார்த்திருந்தேன். உங்கள் சமையல் அனுபவங்களையும் உங்கள் முறையில் சொல்லும் போது எப்போதுமே அதன் சுவைகள் கூடி விடும். கொண்டைக்கடலையும் இந்த அரிசி உளுந்து தேன் குழலோடு (தேன்குழல் மனோகரம்) சேர்ப்பார்களா ? வித்தியாசமான சேர்க்கைதான். வெறும் தேன்குழலுக்கும் இதன் சுவை நன்றாக வருமா? சிலர் க.பருப்புக்கு பதில், எல்லாவற்றுக்கும் உடைத்த கடலை (பொட்டுக்கடலை) சேர்த்துக் கொள்வார்கள்.உங்கள் பயனுள்ள தகவலுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. மற்றபடி இரண்டு செய்முறையும் மிக அற்புதம்.
    அரிசி, உளுத்தம்பருப்பு முறைதான் புக்ககத்துப்
    பாட்டி செய்வார்.
    கடலைமாவு,அரிசிமாவு யார் செய்வார்கள் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசி உளுத்தம்பருப்ப - சுலபம். ஒரே மாவில் தேன்குழல், மனோகரம் செய்துவிடலாம். கடலைமாவு டிரெடிஷனல் மெதட்.

      நீக்கு
    2. நெல்லை சொல்வது சரி. கடலைமாவு போட்டுப் பண்ணுவதெல்லாம் தெற்கத்தி மக்களுக்கே உரியது.

      நீக்கு
  4. மஹா பொறுமை வேண்டும் இந்த மனோஹரம் செய்ய.
    மிகுந்த திறமைசாலியான நெல்லைத் தமிழன் முரளிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
    வாழ்த்துகள்.
    பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் மிக மிக நன்றி.//

      அவர் அனுப்பியதைப் பதிவிட்டதைத் தவிர நான் என்ன செய்தேன்!!

      நீக்கு
    2. இதுக்காகவே "பெண்"களூர் வரணும். ஆனால் நெல்லையிடம்முன் கூட்டிச் சொல்லிட்டால் அவர் எங்கேயானும் போய் ஒளிஞ்சுண்டுடுவாரோ? :))))))

      நீக்கு
    3. "பெண்"களூர் "பெண்"களூர்னு எழுதி, எங்க ஊர் பெயரைக் கெடுத்துடுவீங்க போலிருக்கே.....

      எங்கே செல்லும் இந்தப் பாதை....யாரோ யாரோ அறிவார்? என்று சொல்லத் தோன்றுகிறது

      நீக்கு
    4. பெண்களூர் என்று எழுதுவது அம்பி மற்றும் அவர் தம்பி ஸ்டைல்!

      நீக்கு
  5. மனோஹரம் பார்த்தது முதல்
    மனம் அல்லாடுகிறது. இத்தனை இனிமையான
    பட்சணம் செய்பவர் பெங்களோஓரில் அல்லவா இருக்கிறார்.

    சட்டுனு போய் சாப்பிட முடியாதே
    என்று ஒரே சோகம்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா... உறவினரின் சஷ்டியப்தபூர்த்திக்குப் பண்ணினேன். மற்ற உறவினர்களுக்கும் (மனைவிவழி.. பெங்களூரில்) பண்ணியதில், திரும்பவும் பண்ணித்தரச் சொன்னார்கள்.

      என் பெண், ஒரே இனிப்பையே இனிமேல் பண்ணாதீங்கோன்னு சொல்லிட்டா.

      அவ கொஞ்சம் ஹைகிளாஸ் ஸவீட்ஸ் (எனக்குச் செலவிழுக்கும். ஹாஹா.. காஜுகத்லா, கேஷ்ஷு கேக்னு) அவளுக்கு மனமிருக்கும்போது பண்ணுவா... ஒரே ஃபங்க்‌ஷனுக்கு நான் பருப்புத் தேங்காயும், அவ முந்திரி ஸ்வீட்டும் பண்ணி... அவளோடது ரொம்ப சூப்பர்னு எல்லோரும் சொல்லி... எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்னு மனதில் வந்துபோனது. ஹாஹா

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் ஜி... உடனே என்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். நான் சமையல் செய்தால் (அல்லது எந்த பட்சணம் செய்தாலும்), டக் டக் என்று பாத்திரங்களைச் சுத்தம் செய்துடுவேன். நேரமாகும் பாத்திரங்களை மட்டும் தண்ணீர் நிரப்பி ஊறவைத்துவிடுவேன் (பாகு வைத்தது, பால் காய்ச்சியது போன்று). மிக்சில அரைத்த உடனேயே சுத்தம் செய்துவிடுவேன்.

      இதெல்லாம் என் பெண் இனிமேல்தான், அவளே செய்யும்போது, அவள் கிச்சனில் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஹாஹா.

      நீக்கு
  6. அளவுகளும், பதம் சொல்லி இருப்பதும்,
    படங்களும் அற்புதம் , அற்புதம் அற்புதம்.
    இதில் பருப்புத் தேங்காய் வேறயா!!!!!!!
    முந்திரிப் பருப்புத் தேங்காய் சொன்னால் இன்னும் சந்தோஷம்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முந்திரிப் பருப்புத் தேங்காய் சொன்னால் இன்னும் சந்தோஷம்.:)//

      ஆஹா... எனக்கும்! இது கிடைத்ததே இல்லை எனக்கு!!!

      நீக்கு
    2. விடாதீர்கள் ஸ்ரீராம். செய்து தரச் சொல்லுங்கள்:)

      நீக்கு
    3. ஹா...  ஹா..  ஹா...    யாரிடம் சொல்ல?  நெல்லையிடமா?  இல்லை என் பாஸிடமா?

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. சகோதரர் நெல்லை தமிழரின் கணக்கில் இப்போது ஒரு உணவு வந்து விட்டது.:)

      நீக்கு
    5. பஹ்ரைனில் இருந்தபோது எனக்கு செலவைப் பற்றிய எண்ணமே வந்ததில்லை.. எல்லாம் சல்லிசு விலை. 5தினார் ஒரு கிலோ சூப்பர் முந்திரிப் பருப்புனா ஒன்றுமேயில்லை. (ஆனா தமிழக விலை 900 ரூ).

      இங்க, முந்திரிப் பருப்புத் தேங்காய் பண்ணினா...சாப்பிட உறவினர்கள்தான். எனக்கு ஒத்துக்காது.. இப்போ தோணுது, மாமனார் இருந்தால் செய்துகொடுத்திருக்கலாம்.

      நீக்கு
    6. ஸ்ரீராம் எனக்கு பிரேமா விலாஸ் முந்திரி அல்வா தரவேண்டியிருக்கு. அவரை மீட் பண்ண, அவர் வீட்டில் விசேஷம் சீக்கிரம் வரணும் என்று நினைத்துக்கொள்கிறேன்.

      அப்புறம் அவருக்கு மனோகரம் பருப்புத் தேங்காய்தான் கொடுப்பேன்.

      நீக்கு
    7. பிரேமாவிலாஸ் மதுரையில் அல்லவா கிடைக்கும்!

      நீக்கு
    8. அதைப்பற்றி எழுதி, உங்க வீட்டுக்கு வந்தது, உங்கள் அண்ணன் கொடுத்தார் என்றெல்லாம் சிலாகித்து எழுதியது நீங்கள் அல்லவா? அதனால் மதுரைக் காரன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்களல்லவா எனக்கு வாங்கிப் பரிசளிக்கணும்?

      நாங்க 2019 இறுதியில் பாண்டிய நாடு, சேர நாடு திவ்யதேச யாத்திரை சென்றிருந்தபோது, மதுரையில் கூடலழகர்(?) கோவிலுக்கு மதுரைத் தெரு வழியாகச் சென்றபோது, பிரேமாவிலாஸ் கடையைப் பார்த்தேன். உடனே எனக்கு முந்திரி அல்வாவும், உங்கள் நினைவும் வந்தது. ஹாஹா.

      நீக்கு
    9. எனக்கு இந்தப் பிரேமவிலாஸ் கடையும் முந்திரி அல்வாவும் ஶ்ரீராம் சொல்லித் தான் தெரியும். நாங்களும் இன்னமும் சாப்பிட்டதில்லை. ஶ்ரீராம் பிள்ளை கல்யாணத்தில் ஜானவாசத்திற்கு டிஃபனில் இதான் ஸ்வீட் போடச் சொல்லணும்.

      நீக்கு
    10. மதுரையில் முந்திரி அல்வா பேமஸ்.  அது வேறு.  ஹேப்பிமேன் என்கிற கடை.  அதுவும் அதே வரிசையிலேயே ஆலாலசுந்தரர் கோவில் அருகே உள்ளது.  ஏராள முந்திரிகளுக்கு நடுவில் கொஞ்சம் அல்வாவும்  கிடைக்கும்.  

      பிரேமாவிலாஸ் என்பது ரயில்வே ஸ்டேஷன் எதிரே டவுன் ஹால் ரோடுக்குள் நுழையும்போது இருப்பது.  அங்கு மாலை வேளைகளில் நல்ல பிரவுன் நிறத்தில் சுடச்சுட வழுக்கென்று அல்வா செய்வார்கள்.  வாழை இலையில் வைத்து சுடச்சுட தருவார்கள். சமயங்களில் மேலே காராபூந்தி தூவித் தருவார்கள்.

      நீக்கு
    11. அப்புறம், ஸ்ரீராம்... இந்த தவசுப்பிள்ளை, சொதப்பிட்டார்.. பிரேமாவிலாஸ் முந்திரி அல்வா இதைவிட நல்லாயிருக்கும்னு சாக்குச் சொல்றதுக்கா? அவர் அண்ணனிடம் சொல்லி எனக்கு எப்படியும் வாங்கித்தர வைத்துவிடுவேன். ஹாஹா

      நீக்கு
    12. இப்போ புரிந்துவிட்டது ஸ்ரீராம்... அப்போ, ஹேப்பிமேன் முந்திரி அல்வாவை எப்போ வாங்கித் தந்து என்னை ஹேப்பிமேனாக ஆக்கப்போறீங்க? ஹாஹா

      நீக்கு


  7. என்னடா ஏதோ ஏலியனின் சமையல் குறிப்பு மாதிரி இருக்கிறதே என்று ஆரம்பத்தில் நினைத்தேன் கடையில் சீனி சேவைத்தான் இப்படி மனோகரம் என்று பெயர் சூட்டி இருக்கின்றீர்கள் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது... சீனி சேவையா? அது ஜீனில பண்ணுவாங்க சுவை குறைவு.

      மனோகரம் ஆஹா ஓஹோன்னு இருக்கும். பெரும்பாலும் கடைகள்ல கிடைக்காது.

      நீக்கு

  8. திமுகவினர் மத்திய அரசை ஒன்றியம் என்று அழைப்பது போல நீங்களும் சீனிச்சேவை மனோகரம் என்று அழைக்கின்றீர்களோ நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லல்லோ.... வெல்ம் வேறு சீனி வேறுன்னு உங்களுக்குப் பாடமெடுக்க வைக்கிறீங்களே....

      சில மாதங்கள் முன்பு வெல்ல தேங்காய் பர்பி வாங்கிச் சாப்பிட்டேன். சுவை சூப்பர்.

      முதன் முறையாக ஜனவரி 2ம் தேதி, பெங்களூரில் உறவினர்கள் எல்லோரையும் ஒரு வீட்டிற்கு அழைத்து, ஆண்கள் மூன்றுபேர் சமையல், இரண்டுபேர் எடுபிடின்னு முப்பது பேருக்கு லஞ்ச் கொடுத்தோம்.

      அதற்கு நான் தேங்காய் பர்பி (மனைவியின் கசின், சும்பா சின்னத் துண்டுகள் கூடாது, நல்லா பெரிசா இருக்கணும்) எல்லோருக்கும் செய்திருந்தேன். அரிசி கடலைப் பருப்பு பாயசமும் நான்மான். இரண்டையும் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டனர். இனிப்புன்னா...இவர்ட்டதான் பண்ணச் சொல்லணும்னு எல்லோரும் சொன்னாங்க. (ஆனா இதில் ரகசியம்... பத்து தடவைக்கு மூன்னு நாலு தடவை சொதப்பிடும், நான் ஃப்ரைஃபஷனல் இல்லை என்பதால்)

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. //என் பெண், அடிக்கடி ஒரே ஸ்வீட் செய்யாதீங்க என்று சொல்லிட்டா. //

    அப்ப வேற வேற ஸ்வீட் செய்து தரவேண்டியதுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளுக்கு இல்லை. வெளில யாருக்கும் கொடுப்பதற்கும் ஒரே வகையான ஸ்வீட் செய்துதந்தால் அப்புறம் அந்தப் பேரே நிலைத்துவிடும் என்பது அவள் எண்ணம்.

      என் பசங்க, இனிப்பு பக்கமே வர மாட்டாங்க. தேங்காய் சீயன் அல்லது போளி செய்தால் என் பையன் ஒன்றிரண்டு ஆர்வமா சாப்பிடுவான்னு நினைக்கறேன். என் பெண், சிறிய பீஸ் ஒன்று எடுத்துக்கொள்வாள், அப்புறம் சாப்பிடமாட்டாள்.

      அவள் இரு நாட்களுக்கு முன்பு ஒரு சாக்லேட் செய்திருக்கிறாள் (நான் அப்போ வீட்டில் இல்லை. நேற்று ஃப்ரீசரில் பார்த்தேன்). சூப்பரோ சூப்பர். உங்களுக்கு இதை எழுதும்போதுதான், அந்தப் படத்தை எபி வாட்சப் குழுமத்தில் இப்போ பகிர்ந்துகொள்ளணும்னு எண்ணம் வருகிறது.

      நீக்கு
  11. // (குவித்து அளக்கணும்)//

    அரிசை மாவை குவித்து வைத்துவிட்டு அளக்கனுமா? அல்லது கப்பில் குவித்து அளக்கனுமா சரியாக சொல்லுங்க இல்லைன்னா நானும் உங்க செய்முறையை படித்து அதாவது செஞ்சு காரஜில் வைக்கும் நிலமை ஏற்பட்டுவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கிட்ட எங்க அச்சு இருக்கப்போவுது? அதுவும் தவிர, நீங்கள்லாம் உடல் வெயிட் போடக்கூடாதுன்னு நினைக்கறவங்க. எங்க நீங்கள்லாம் முனைஞ்சு இந்த இனிப்பைச் செய்துபார்க்கப் போறீங்க? வேணும்னா, அடுத்த தடவை மோர்க்குழம்பு, பருப்புசிலி ரெசிப்பி எழுதறேன். ஹாஹா

      நீக்கு
  12. ///பொரிக்கத் தேவையான எண்ணெய்//

    என்ன எண்ணெய் கடலை எண்ணெயா நல்லெண்னையா, தேங்காய் எண்ணெய்யா விளக்கமாக் சொல்லுங்க இல்லைன்னா இதை பார்த்துவிட்டு அதிரா செய்ய ஆர்ம்பிச்சாங்கன்னா மண்ணென்னைய் வைத்து செய்து யூடியுப்பில் போட்டுடுடப் போறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலமாக சமையல் எண்ணெய் என்ற ஒன்றைத் தான் குழாய்க் காணொளிகளில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்..

      கேட்பவர்களுக்கு விவரம் தெரிந்தால் தானே!..

      நீக்கு
    2. சூர்யகாந்தி வகையறா எண்ணெய்தான் இப்போ சமையல் எண்ணெய்னு எல்லார் வீட்டிலும் ஓடிக்கிட்டிருக்கு. பாமாயில் நம்ம ஊர்ல வந்தபோது (78ஆ?), என் மாமா, யார் வீட்டிலும் அதனை உபயோகிக்கக்கூடாது, உடல் பிரச்சனைகள் வரும் என்று சொல்லிவிட்டார். அப்போல்லாம் கார பட்சண வகைகளுக்கு கடலை எண்ணெயும் (ச்ரார்த்தத்தின்போது நல்லெண்ணெய்), இனிப்புக்கு டால்டா, நெய் உபயோகிப்பாங்க. பிறகு டால்டா பிரச்சனை என்று அதை உபயோகிப்பதில்லை.

      தேங்காய் எண்ணெய், நேந்திரம் போன்ற சிப்ஸ் பொரிக்க நன்றாக இருக்கும். ஒரு தடவை ஆர்வக்கோளாறில், கடலெண்ணெய் 1/4 கப், நெய் 3/4 கப் என்று சேர்த்து மைசூர்பாக் பண்ணி என் அம்மாவிடம் கொடுத்தேன். அவ்வளவு அருமையா சாஃப்டா இருந்தது. அம்மா சாப்பிடுவதற்கு முன், நான் சாப்பிடக்கூடாதுன்னு டேஸ்ட் பண்ணிப் பார்க்கலை. வீட்டுக்கு வந்து டேஸ்ட் பண்ணிலால் ஒரே கடலை எண்ணெய் வாசனை, நான் போட்ட நெய் வாசனையை மறைத்துவிட்டது. ரொம்ப வருத்தப்பட்டேன்... அம்மா, நான் கடலை எண்ணெயில் செய்து தந்தேன்னு நினைத்துக்கொள்வார்களே என்று. போன் செய்து என் தவறைச் சொன்னேன். அதுக்கு அப்புறம் கடலை எண்ணெய் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

      நீக்கு
    3. கடலை எண்ணெய் பஜ்ஜி, பகோடா, வடை, போண்டா போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். நாங்க மனோஹரம் செய்தால் கூடத் தே.எ. தான் பயன்பாட்டில். நல்லெண்ணெய் சமையல். நெய் தான் டால்டாவெல்லாம் வாங்குவதே இல்லை. ராணுவக் குடியிருப்புக்களில் இருந்தப்போ ராணுவ ரேஷனில் இந்த டால்டா தான் கொடுப்பாங்க. இதிலேயே வடை, போண்டா, பஜ்ஜி, பகோடா என எல்லாமும் பண்ணுவாங்க. எண்ணெய் குடித்தது இல்லை. ஆனாலும் எங்களுக்குப் பிடிக்கவில்லை. வடக்கே எல்லாம் இம்மாதிரிக் காரமான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் "இங்கே சுத்தமான கடலை எண்ணெயால் தயாரிக்கப்பட்ட பக்ஷண வகைகள் கிடைக்கும்." என்று போர்ட் போட்டிருப்பார்கள்.

      நீக்கு
    4. மனோகரம் தேங்காய் எண்ணையில் செய்தால்தான் நன்றாக இருக்கும். தே.எண்ணை வாசனை பிடிக்காதவர்கள் தவிட்டு எண்ணை(rice bran oil) உபயோகிக்கலாம்.  பட்சணங்கள் செய்வதற்கு சூரியகாந்தி எண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது. அது அடர்த்தி குறைவானது என்பதால் சிவந்து விடும். கடலை எண்ணை சிக்கு வாடை வந்து விடும். 

      நீக்கு
    5. இப்போ எனக்கு, ஒரிஜினலாக நெல்லையில் எந்த எண்ணெய் முன்பு உபயோகித்திருப்பார்கள் என்ற சந்தேகம் வந்துவிட்டது. கடலை எண்ணெய், இனிப்புகளுக்குச் சரிப்படாது. ஒருவேளை அந்தக் கால டால்டாவோ?

      நீக்கு
  13. ///டங்கு பதத்திற்குக் கொண்டுவரவும்//

    அது என்ன டங்கு பதம் இதுவரை கேள்விப்படாத பதமாக இருக்கிறேதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டங்கு பதமென்றால் உருண்டை பதம். பாகை கொஞ்சம் தண்ணீரில் விட்டு பதம் பார்க்கும் போது எடுத்து உருட்டி போட்டால் தண்ணீர் பாத்திரத்தில் டங்கென்ற சப்தம் வருமென பொருளில் சொல்வது. அதுதான் கரெக்டான உருண்டை பதம். எனக்கு தெரிந்து அப்படித்தான்.. சகோதரர் நெ. தமிழர் வந்து என்ன சொல்வாரோ..

      நீக்கு
    2. பார்த்தீங்களா துரை.. கமலா ஹரிஹரன் ஜி, டக்குனு சரியா சொல்லிட்டாங்க. என்ன ஒண்ணு... அவங்க செய்யறதெல்லாம் படங்களாப் போடறாங்களே தவிர உள்ளூர்க்காரனான எனக்கு ஒன்றும் தருவதில்லை. ஹாஹா

      நீக்கு
    3. ஹா ஹா. டங்கு என்ற சொல்லைப் படித்ததும் டக்குனு சொல்ல வந்து விட்டது.:) நீங்கள் இப்போதெல்லாம் வரிசையாக எ. பியில் இனிப்பாக செய்து அமர்க்களப்படுத்தி வருகிறீர்கள். அதே உள்ளூர்காரிதான் நானும்..:)

      நீக்கு
    4. நீங்க என்னா சொல்ல வர்றீங்க? பெரியவங்களைத்தான் முதலில் இனிப்போடு பார்க்கச் செல்லவேண்டும் என்கிறீர்களா? நாங்க, சின்னவங்களுக்குத்தான் பெரியவங்க ஆசையுடன் இனிப்பு செய்து தருவாங்க என்று நம்பறோம். (நானும் திருநெவேலிதான்.. எங்கிட்டயேவா? ஹாஹா)

      நீக்கு
  14. படங்கள் ஆசையை தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.... நன்றி... என்ன என்னவோ நினைவுகளை உங்கள் ஒரு வரி, கொடுக்கிறது

      நீக்கு
  15. மனோகரம் கேள்விப்பட்டதுண்டு..
    இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.. மறுமுறை திருநெல்வேலி பக்கம் செல்லும்போது பார்க்கலாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பா வாங்கிச் சாப்பிடுங்க துரை செல்வராஜு சார்.... எங்கள் வீட்டு விசேஷங்கள்ல மனோகரம் கண்டிப்பா உண்டு (கிராமங்களில் இருந்த வரை)

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் இனிமையான இனிப்பின் செய்முறையை அழகாக சொல்லியுள்ளேனே..! கண்டிப்பாக இந்த நாள் இனிமையானதுதானே கமலா ஹரிஹரன் மேடம் என்று சகோ நெ. தமிழர் வந்து சொல்லும் முன் நானே சொல்கிறேன்.

      கஸ்டங்கள், சிரமங்கள் ஏதுமின்றி, நம்மை கடக்கும் ஒரு நாளின் இனிமை மனதிற்கு புரியும். இன்றைய மனோகரத்தின் இனிமை கண்கள் வழி நாவின் ருசிக்கு அருமையாக உள்ளது. சாப்பிட்ட திருப்தியை உண்டாக்கியது. மிகவும் அழகாக இனிப்பை பக்குவமாய் செய்து காட்டிய சகோதரர் நெ. தமிழர் சகோதரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.

      நீக்கு
    2. நன்றி கமலா ஹரிஹரன் ஜி. போளி, மைதா ஸ்வீட்னு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன் செய்ய... ஆனால் இப்போல்லாம் கொஞ்சம் பக்தில மனதைச் செலுத்துவதால் நேரம் கிடைப்பதில்லை.

      நீக்கு
  17. பதில்கள்
    1. இல்லை அப்பாதுரை சார்... ஆர்வத்தோட செய்யும்போது வேலை தெரிவதில்லை. பண்ணப் பண்ண இன்னும் செம்மையாக வருகிறது.

      நீக்கு
  18. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    இன்றைய திங்களில், அருமையான முறையில், இரண்டு தினுசான பக்குவத்திலும் மனோகரத்தை செய்முறையாக விளக்கியிருக்கிறீரகள். படங்களும் பார்க்கும் போதே "எடுத்து சாப்பிடு" எனச் சொல்கிறது.
    நாங்கள் (அம்மா வீட்டில்) எந்த ஒரு விஷேடங்களுக்கும் கல்யாணம் வளை காப்பு, வருட முதல் பிறந்த நாள் என்பதற்கு மனோகரம் பருப்பு தேங்காய் கண்டிப்பாக செய்வோம். வேர்கடலை, பொட்டுக்கடலை ப. தே. பூந்தி ப. தே எனவும் உண்டு. என் திருமணத்திற்கு எங்கள் அம்மா,பாட்டி, மற்றும் என் மன்னியின் அம்மா என அனைவரும் சேர்ந்து வீட்டிலேயேதான் எல்லா பட்சணங்களும் (முழு சீர்) செய்தார்கள். எல்லா விஷேடங்களுக்கும் வீட்டில்தான் தயாரிப்பு. அந்த நாட்களை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். நன்றி.

    இனிப்பு சேவையும் (சீனி சேர்த்தது) திருநெல்வேலிக்கு சென்று வரும் போது கடைகளில் வாங்கி சாப்பிடாத நாட்கள் இல்லை.

    உங்கள் மனோகர இனிப்பு நன்றாக உள்ளது. விரைவில் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது. அந்த ஆர்வத்தின் மிகைபாடில்தான், உங்களுக்கும் முன் வந்து அனைவருக்கும் நானும் ஏதோ எனக்குத் தெரிந்த என் பக்குவ கருத்துகளை சொல்லி விட்டேன்.:) உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் ஜி... எங்க ஊர்க்காரரான உங்கள் வருகையும், கருத்துகளும் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

      மிகுதியை பருப்புத் தேங்காய் இடுகையில் சொல்கிறேன்.

      எனக்குத் தீராத வருத்தம்... என் அப்பாவிற்கு நான் சமையல் செய்து போடலையே, இனிப்புகள் செய்துகொடுக்கலையே என்று. என் அப்பாவின்மீது அவ்வளவு அன்பு எனக்கு. என்ன அன்பு இருந்தென்ன...அவருக்கு ஒன்றுமே நான் செய்யவில்லை.

      இன்று என் அப்பா இருந்திருந்தால், காலம் எனக்குக் கத்துக்கொடுத்திருக்கும் குறைந்த அளவு சமையல் திறத்தில், எதைப் பண்ணிக்கொடுத்தாலும் என் அப்பா மகிழ்ந்திருப்பார். அவரை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. சீனிச் சேவு... பஹ்ரைனில் இருந்தபோது, கேரளாவிலிருந்து பாக்கெட்டுகளில் வரும். நெல்லையில் இருந்த வரை, என்னிடம் பைசா கிடையாது, வெளியில் சாப்பிடவும் அனுமதி கிடையாது (அடுத்த வீட்டில்கூட தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது மாதிரியான ஸ்டிரிக்ட் சூழல் என் பெரியப்பா இல்லத்தில்).

      எனக்கென்னவோ..சீனிச் சேவை விட மனோகரம் ரொம்பவே பிடிக்கும்.

      நீக்கு
    3. மதுரையில் இந்தச் சர்க்கரைச் சேவு நாங்கல்லாம் அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். அப்போல்லாம் ஓரணாவுக்கு ஒரு பாக்கெட். அப்பா கொடுக்கும் நாலணாவில் ஓரணாவுக்கு இதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மிச்சப் பைசாவைச் சேமித்து வைத்திருக்கோம். பின்னால் அப்பாவே வாங்கிக் கொண்டு விடுவார் என்பது வேறு விஷயம்! :))))))

      நீக்கு
    4. எங்கப்பால்லாம் எனக்கு பைசா தந்ததில்லை. எனக்கு பூநூல் திருப்பதியில் போடும்போது, அத்தையிடம் என் அப்பா கேட்டார் என்று பத்துப் பைசா வாங்கி (எல்லாம் ஏதேனும் வாங்கலாம் என்ற ஆசையில்), பெரியப்பாவிடம் அடி வாங்கியதுதான் நினைவுக்கு வருது.

      நீக்கு
    5. உண்மைதான்..! சீனிச் சேவு கடைகளில் வாங்குவது சமயங்களில் கொஞ்சம் கடுக்கென்று இருக்கும்.வீட்டில் இதுவரை செய்ததில்லை. வெல்லத்தில் செய்த மனோகரம் எப்போதுமே கூடுதல் சுவைதான்.

      /அப்போல்லாம் ஓரணாவுக்கு ஒரு பாக்கெட். அப்பா கொடுக்கும் நாலணாவில் ஓரணாவுக்கு இதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மிச்சப் பைசாவைச் சேமித்து வைத்திருக்கோம். பின்னால் அப்பாவே வாங்கிக் கொண்டு விடுவார் என்பது வேறு விஷயம்! :))))))/

      உங்கள் சிறுவயது அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கொடுத்தப் பணம் திரும்பி உங்கள் அப்பாவிடமே சென்று சேர்ந்து விடுவது நல்ல நகைச்சுவைதான். பணம் எப்போதுமே ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பதுதானே..!

      நானே இன்று அதிசயமாக மனோகரத்தின் மேலுள்ள ஈடுபாடில்,பல கருத்துக்கள் எ.பிக்கு வந்து தந்து விட்டேன். இதற்கு மேல் தாங்காது என யாராவது (அந்த மனோகரமே) புகார் சொல்லும் முன் ஓடி விடுகிறேன். ஹா.ஹா.ஹா.

      நீக்கு
    6. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

      ஒன்றை மட்டும் மீண்டும் வந்து சொல்கிறேன். உங்கள் அம்மா, அப்பாவுக்கு நீங்கள் செய்த/செய்ய விரும்பிய சமையல் பதார்த்தங்களை சொல்லி வருத்தப்பட்டிருப்பது எனக்கும் மனது கஸ்டமாக இருந்தது. ஏனென்றால் நானும் இதுபோல் அவர்களுக்கு நிறைய வகைகள் செய்ய தவறியவளாகி இருக்கிறேன். இப்போது அதை செய்து சாப்பிடும் போதெல்லாம் அவர்கள் நினைவு வர தவறுவதில்லை. என்ன செய்வது..? :((

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. கமலா ஹரிஹரன் மேடம்.... நாம் சின்ன வயசுல மெச்சூரிட்டி இல்லாமல் இருப்போம். அது ஒரு குணம். திருமணம் ஆனபின், மனைவி பக்கம் முழுக் கவனமும் இருக்கும். அது ஒரு நேரம். அப்புறம் நம்ம பசங்களின் மீதே நம் நேரம் செல்லும். பெற்றோரைப் பார்க்கும்போதும், நம் attention பசங்க, மனைவி, பெற்றோர் என்று பகிர்ந்து போகும். அப்புறம் 40+ ஆகும்போது அப்பாவிற்கு நம் முன்னேற்றம், வாழ்வியல் நடப்புகளைப் பகிர்ந்துகொள்வோம், 50க்கு மேல் இன்னமுமே நம் அப்பா அம்மாவிடம் கவனம் இருக்கும். பல நேரங்களில் அந்த வயதில் அப்பா இல்லையென்றால் கஷ்டம்தான்.

      நமக்கு மாத்திரம் வித்தியாசமாகவா நடக்கப்போகிறது?

      நீக்கு
  19. மனோகரம் மிகவும் பிடித்த பட்சணம். தேங்காய் பல்லு பல்லாக கீறிப்போடவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போடவில்லை பானுமதி வெங்கடேச்வரன் ஜி... ட்ரெடிஷனல் மனோகரத்தில் எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸும் கிடையாது.

      நீக்கு
    2. //போடவில்லை பானுமதி வெங்கடேச்வரன் ஜி...//ஏன் பா.வெ. என்று டைப் செய்வது கஷ்டமாக இருக்கிறதா? பானுமதி வெங்கடேஸ்வரனோடு ஒரு ஜி வேறு, பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் எதை குறிக்கின்றன?

      நீக்கு
    3. இன்றைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்க போலிருக்கு. தட்டச்சும்போது குறைவாக எழுதும்போது ஒரு நிறைவு கிடைப்பதில்லை. பா.வெ. கீசா. க.ஹ என்றெல்லாம். மேடம் என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ரொம்பவே வயதான மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். அதனால் இனிமேல் 'ஜி' தான்... எல்லாம் தில்லி வெங்கட் உபயம்.. ஹாஹா.

      கூட ஒரு புள்ளி போட்டிருந்தால் GREAT என்று சமாளித்திருக்கலாம்.

      நீக்கு
  20. கடலை மாவு மனோகரன் குண்டாக இருக்கும். அரிசி, உளுந்து தேன்குழலில் செய்யும் மனோகரம் மெல்லியதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாரம்பர்யச் செய்முறை, கடலைமாவில்தான்.

      நகரத்தார் செய்முறையில் பொட்டுக்கடலை எள் என்று பலவற்றைச் சேர்க்கிறார்கள்.

      நீக்கு
  21. இதைத்தான் இனிப்பு சேவு என்று கூறுவார்களோ? கும்பகோணத்தில் முராரி ஸ்வீட்ஸ் கடையில் இளமைக்காலத்தில் நாங்கள் விரும்பிச்சாப்பிட்ட அந்த இனிப்புச்சேவு போல இது உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முராரி ஸ்வீட்ஸில் (பெரிய கடைத்தெரு, கும்பகோணம்) நான் மனோகரம் பார்த்த நினைவு இல்லை. ஜீனியில் பண்ணினதைப் பார்த்திருக்கிறேன். அதைவிட அங்கு கிடைத்த பூந்தி மிகவும் பிடித்தமானது (இனிப்பு பூந்தி). அதற்கு அருகிலேயே இன்னொரு சின்னக் கடை உள்ளது. அங்கு கிடைக்கும் இனிப்பு கார வகைகளும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. திருநெவேலி மனோகரம் செய்முறைக்குறிப்பும், படங்களும் மிக அருமை.

    பொறுமையாக படங்கள் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.எங்கள் வீடுகளில் முன்பு (பெரும்பாலும்) தீபாவளிக்கு எல்லா வீடுகளிலும் உண்டு, வளைகாப்பு, சீமந்தம், மற்றும் மறுவீட்டு கல்யாணபலகாரம் கொடுக்க என்றும் செய்வார்கள் எங்கள் வீடுகளில். நீங்கள் சொல்வது போல் இரண்டு முறையிலும் செய்யும் வழக்கம் உண்டு. குழந்தைகளுக்கு இரண்டாவது முறைதான் நல்லது என்பார்கள். கல்யாணம் முடிந்த மறுநாள் நாத்தானார் பலகாரம், மற்றும் பலகார பந்தி என்று காலை இலையில் இந்த மனோகரம் இடம்பெறும் இலையில் நிறைய பலகாரம் வைக்கப்படும், அதனால் உருண்டை முழுதாக சாப்பிட முடியாது என்று உதிர்த்து போடுவார்கள். உருண்டையாக பிடிக்காமல் படி கணக்கில் அளந்தும் விற்பார்கள் சில வீடுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... நீங்கள் திருநெவேலி அனுபவத்தைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். இல்லையா? எந்த ஊர்ல அப்படி அளந்து விற்கிறார்கள்? எனக்கு அப்படி வீடுகளில் செய்பவர்கள் இருந்தால், அங்கு செல்லும்போது வாங்க ஆசை.

      நீக்கு
    2. மனோகரம், சுண்டுவிரல் தண்டிக்கு இருந்தால்தான் சுவைக்கும். சில சமயங்களில் பாகு டங்கு பதத்தைத் சிறிது தாண்டிய பிறகு செய்ததால், கடித்துச் சாப்பிட முடியாதபடி ரொம்பவே கடினமாக ஆயிருக்கிறது. இப்போ உதிர் உதிரா செய்யத் தெரிந்துவிட்டது.

      நீக்கு
  24. எ பி இல் வாசகர்கள் பலரும் 50 வயதைத் தாண்டியவர். முக்கால் வாசி பேருக்கு டயபெடீஸ் உண்டு. ஆனால் இந்த நெல்லைத்தமிழன் நிறைய இனிப்பு சமாச்சாரங்களின் செய்முறையை விவரித்து கடுப்பேத்தறார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்.... எனக்கும் டயபடீஸ் வரும் என்ற பயம் ரொம்பவே இருக்கிறது. நான் சாப்பிடும் இனிப்புகளுக்கு அளவே இல்லை. எதுவும் இல்லைனா, டக்குனு போய், தோசைப்பச்சரிசி 3/4 கப், 1/4 கப் பாசிப்பருப்பு, 1 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு... இவற்றை குக்கரில் வைத்து நன்றாக வேகவைப்பேன். பிறகு மனைவியிடம் இதனை பாயசமாகச் செய்துதரச் சொல்லிடுவேன் (பால் விடவேண்டாம் என்றும் சொல்லுவேன்). கடந்த சில (8-10) வருடங்களாகத்தான் எண்ணெய் சேர்த்த இனிப்புகள் பிடிப்பதில்லை. இனிப்பைத் தொட்டால் கையில் எண்ணெய் ஒட்டினால், சாப்பிடவே மாட்டேன். இந்த காம்பினேஷன் ரொம்பவே டேஞ்சர்.

      நீக்கு
  25. திருநெல்வேலியில் பேச்சு வழக்கில் மனோலம் என்றும் சொல்வோம். அருமையான செய்முறைக் குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி ஜி... நகரத்தார்கள் இதனை மனகோலம் என்று குறிப்பிடுகின்றனர். எங்கள் அகத்தில் மனோரம். நன்றி

      நீக்கு
  26. மனோகரம் ஆகிய மனோகரம்..

    பதிவுக்கான கருத்துக்களினூடே நெல்லை அவர்கள் தமது தாய் தந்தையரை நினைவு கூர்ந்திருப்பது நெஞ்சை கனக்கச் செய்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம்தான் அந்த நினைவுகள். அப்பா நல்லா இருந்தபோது விசா வாங்காமல், விசா வாங்கியவுடன், அப்பாவுக்கு நிறைய நேரம் விமானப் பயணம் முடியாது என்று சொல்லிட்டார். அம்மாவைத்தான் பஹ்ரைனுக்கு 4 முறை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவங்களை பஹ்ரைனில் மூலை முடுக்கு எல்லாவற்றிர்க்கும் கூட்டிக்கொண்டு சென்றேன்.

      வாழ்க்கையில் செய்யத் தவறியது, அப்பாவை வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்லாதது, காரில் பல இடங்களில் சுற்றாதது, நானே சமையல் பண்ணி அவருக்குக் கொடுக்காதது. இதையெல்லாம் என் வெளிநாட்டு வாழ்க்கையால் நான் இழந்தேன்.

      நீக்கு
    2. இதற்கு மேல் ஏதும் சொல்லாதீர்கள் நெல்லை.. இப்படியெல்லாம் நானும் எண்ணியவற்றில் நிறைவேறாமல் போனவற்றினால் மனம் உடைந்து தவிக்கின்றேன்...

      நடப்பது எதுவோ அதுதான் நமக்கு விதிக்கப்பட்டவை..

      நீக்கு
  27. விளக்கெண்ணெயைத் தடவிக் கொண்டு வீதியில் புரண்டாலும் உடம்பில் ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும்.. - என்று பழைய காலத்துச் சொல் வழக்கு ஒன்று உண்டு...

    பதிலளிநீக்கு
  28. அருமை
    படங்களே சுவைக்கத் தூண்டுகின்றன

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் முகம் மலர இனிய மாலை வணக்கங்கள். மக்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. மனோகரம் ரெசிபி அருமை! இதன் பெயரிலேயே எத்தனை இனிமை! எங்கள் பாரம்பரிய மனோகரத்தில் தேங்காய் சிறு துண்டுகளாய் நறுக்கி சூடான பாகில் சேர்த்து செய்வர். அதன் சுவையே அலாதி தான். நல்லதொரு ரெசிபிக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் பல்லும் சுவை சேர்க்கும் வானம்பாடி. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  31. //கொஞ்சம் ஆறின பிறகு பிழிந்ததை, 2-3 இஞ்ச் அளவிற்கு உடைத்துக்கொள்ளுங்கள்.// அளவு கச்சிதமாக சொல்ல வேண்டியதுதான், அதற்காக 2-3 இஞ்ச் என்றெல்லாம் சொல்வது டூ மச்! புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்கள் இஞ்ச் டேப்பை தேடப் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நீளத்துக்கு உடைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 2-3 இஞ்ச் என்று எழுதினேன்.... வரலாற்றில் நக்கீரன் மட்டுமே உண்டு என்று நினைத்தால்...இது என்ன புதுசாக..ஹாஹா

      அடுத்த முறை உங்களுக்காகவாவது 2.75 செ.மீட்டர் அளவுக்கு உடைத்துக்கொள்ளுங்கள் என்று எழுதிவிடுகிறேன்.

      நீக்கு
  32. எனக்கும் இந்த மனோகரம் பிடித்தமானது. சுவையானதும் கூட.

    செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. படித்தாலும் நான் செய்யப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நீங்க இதையெல்லாம் செய்வீங்கன்னு எனக்குத் தோன்றியதில்லை. வட இந்திய இனிப்பு வகைகளையாவது முயற்சித்திருக்கீங்களா இல்லை, இனிப்பு பக்கமே ஒதுங்குவதில்லையா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!