ஞாயிறு, 3 டிசம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 23

 

வைரமுடி யாத்திரை மேல்கோட்டையிலிருந்து பெங்களூர் நோக்கி பகுதி 23

மேல்கோட்டையிலிருந்து 7 ½ க்குக் கிளம்பி, மத்தூரு என்ற இடத்திற்கு 9 ¼ க்கு வந்துவிட்டோம். இங்கு மிகப் புராதானமான உக்ர நரசிம்மர் கோவிலும், அதன் அருகிலேயே வரதராஜஸ்வாமி கோவிலும் உள்ளன.

மத்தூர்-Maddur உக்ரநரசிம்ஹர் கோவில்

மஹாபாரதப் போருக்குப் பின், அர்ஜுனன், தன் உறவினர்களெல்லாம் மடிந்ததை நினைத்து நிலைகுலைந்து போயிருந்தான். அந்தச் சமயத்தில் அர்ஜுன் கிருஷ்ணரிடம், தனக்கு நரசிம்மர் அவதாரத்தைக் காட்ட முடியுமா எனக் கேட்க, தன்னுடைய உக்கிரமான நரசிம்மர் அவதாரத்தைத் தாங்கக்கூடிய சக்தி அர்ஜுனனிடம் இல்லை என்று உணர்ந்த கிருஷ்ணர், உக்ர நரசிம்ம அவதாரத்தை ஒரு சிலை வடிவில் வணங்கமுடியும், நேரிடையாக காட்சி தந்தால் அந்த உக்ரத்தைத் தாங்கும் சக்தி உன் கண்களுக்கு இல்லை என்று கூறினார். கிருஷ்ணரின் வேண்டுகோளின் பேரில் பிரம்மாவினால் வடிவமைக்கப்பட்ட உக்ர நரசிம்மர் சிலையை அர்ஜுனன் தரிசித்தான். அந்தச் சிலா ரூபமே மத்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த உக்ர நரசிம்மர் எட்டுக் கைகளுடனும் மூன்று கண்களுடனும் காட்சி தருகிறார். இரண்டு கைகள் தன் மடியில் இருக்கும் ஹிரண்யகசிபுவைப் பிய்க்கும் கோலத்திலும், இரண்டு கைகளால் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளும் விதத்திலும் மற்ற நான்கு கைகளில், சங்கு, சக்ர, பாச, அங்குசத்தை வைத்துக்கொண்டும் காட்சி தருகிறார்.  பெருமாளின் வலது பக்கம் பிரகலாதனும், இது பக்கத்தில் கருடனும் பெருமாளை நோக்கிப் ப்ரார்த்திக்கும் விதத்திலும் உள்ளது.

இந்த உக்ர நரசிம்மர், பெயருக்கு ஏற்றவாறு உக்ர வடிவத்தைக் கொண்டுள்ளார். பெருமாளின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில், பூதேவி ஸ்ரீதேவி இருவரும், சௌம்யநாயகி மற்றும் நரசிம்ஹ நாயகி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர். கோவிலில் ஆழ்வார் ஆச்சார்யார் சந்நிதிகளும் உண்டு.

கர்பக்ரஹத்தின் வெளியே வலது புறத்தில் யசோதை குழந்தை கிருஷ்ணருக்கு பாலூட்டுவது போன்ற (இந்த மாதிரி சந்நிதி இங்கு மட்டும்தான் பார்த்திருக்கிறேன்) சந்நிதியும் அதிலேயே ஸ்ரீநிவாஸர் திருவுருவமும் அமைந்துள்ளன. இது தவிர இராமர் சந்நிதியும் உண்டு. கடம்ப மகரிஷி இந்த க்ஷேத்திரத்தில் வசித்ததால், இது கடம்ப க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் மிகப் புராதானமானதாம். ஹொய்சாள அரசர்களால் சீரமைக்கப்பட்டது.

மூலவர் மிக மிக அழகாக இருக்கிறார் (சிலா ரூபம்). மஞ்சள் மற்றும் குங்குமத்தால் திருமஞ்சனம் செய்யும்போது, உக்ரம் வெளிப்படுகிறது.









மத்தூரு உக்ர நரசிம்மர்

கோவில் வெளிப்புறத் தூணில், மூலவர் போன்றே சிற்பம் செதுக்கியுள்ளனர். 

மஞ்சள் குங்கும திருமஞ்சனத்தின்போது, மூலவரின் உக்ரம் வெளிப்படுகிறது. 

மத்தூர்-Maddur வரதராஜஸ்வாமி கோவில்

மத்தூர் வரதராஜப் பெருமாள் கோவில் தோற்றம் (25 படிகள் ஏறினால் வரதராஜஸ்வாமி திருவுருவம் பிரம்மாண்டமாக உள்ளது). 

விஷ்ணுவர்தனா என்ற அரசன் இந்தக் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினானாம். இந்தக் கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளனவாம். விஷ்ணுவர்தனாவின் தாயின் கண் பார்வை பாதிக்கப்பட்ட தாம். இராமானுஜர், விஷ்ணுவர்தன னின் கனவில் வந்து, தாயாரை காஞ்சீபுரம் வரதராஜர் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு செல்லும்படியும், அங்கு ப்ரார்த்தித்துக்கொண்டால் கண்பார்வை திரும்பும் என்று சொன்னார். தாயாரோ மிகவும் வயதானவர். அரசன், என்ன செய்வது என்று யோசித்து, காஞ்சீபுரத்திலிருந்து சிற்பிகளைத் தருவித்து, அந்த வரதராஜர் போலவே இங்கு சிலை செய்யச்சொன்னானாம். சிலையைப் பிரதிஷ்டை செய்த பிறகு ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்தானாம். 48வது நாளில் தாயார், வரதராஜரை தரிசனம் செய்தபோது அவரது பார்வை திரும்பிவிட்தாம். அதனால் இந்த ஸ்வாமிக்கு நேத்ர நாராயணர் என்றொரு பெயரும் உண்டு.

இங்கு இப்போதும் கண் பார்வை திரும்ப 48 நாட்கள் பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. கோவில் என்று சொல்லக்கூடியது போல, ராஜகோபுரம்லாம் இல்லை. ஆனால் காஞ்சீபுரத்தில் இருப்பதுபோலவே 25 படிகள் ஏறி மூலவரை தரிசனம் செய்யவேண்டும். இந்தக் கோவில், மத்தூர் உக்ர நரசிம்மர் கோவிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அருகிலேயே இருக்கிறது.



தமிழ் கல்வெட்டு. கோவில் நுழைவாயில்

நேத்ர நாராயணர் என்று பெயருடைய வரதராஜர் மூலவர். 

வரதராஜரை தரிசனம் செய்த பிறகுதான் நாங்கள் உக்ர நரசிம்மர் கோவிலுக்குச் சென்றோம். தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு, அந்தக் கோவில் வளாகத்திலேயே எங்களுக்கு யாத்திரை நடத்துபவர் உணவு வழங்கினார் (மேல்கோட்டை க்ஷீரான்னம் பிரசாதம்பூந்தி, கதம்ப சாதம், வற்றல் மற்றும் தயிர் சாதம்).  நான் மாத்திரம் மெஜெஸ்டிக் இரயில் நிலையத்துக்கு முன்பே இறங்கிவிடுவேன் என்பதால் (பேருந்து எங்கள் வளாகத்தின் வழியாகச் செல்லும்), என் லக்கேஜை பேருந்தின் உள்ளே என் இடத்தில் கொண்டுபோய் வைத்தேன். நான் வரதராஜர் கோவிலுக்குச் சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன் (கூட்டம் இருக்கும்போது எடுத்தால், எல்லோரும் புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருந்திருப்பார்கள் என்பதால்).

பிறகு எல்லோரும் கோவிலுக்கு வெளியே கூடினோம். யாத்திரையைப் பற்றி, என்ன என்ன இடங்களுக்குச் சென்றோம், என்ன என்ன தரிசனம் செய்தோம்/பார்த்தோம் என்று குழுத் தலைவர் பத்து நிமிடங்கள் விலாவாரியாகப் பேசினார். பிறகு யாத்திரை நடத்தும் குழுவில் உள்ளவர்களுக்கு (ஓட்டுநர், க்ளீனர், சமையல் செய்தவர்கள், பரிமாறியவர்கள் என்று அனைவருக்கும்) நினைவுப் பரிசாக பணம் வழங்கினார்.

இரயிலில் பயணிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் டப்பாவில் புளியோதரையும் ஒரு வடையும் இரயிலிலேயே வழங்கிவிடுவார்கள். நான் முன்னமே இறங்கிக்கொள்ளப் போவதால் எனக்கு வீட்டிற்கு எடுத்துப் போகச் சொல்லி கொடுத்தார்கள்மனைவி, இரவு சாப்பிட்டுப் பார்த்து ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னாள்.

பிறகு எல்லோரும் பேருந்தில் அமர்ந்த பிறகு 11 ½ க்கு பெங்களூர் நோக்கிச் சென்றோம். 1 மணிக்கு என் வளாகம் அருகே பேருந்து வந்தபோது டிரைவர் பேருந்தை நிறுத்தினார். நான் அங்கேயே ஒரு ஆட்டோ பிடித்து 30 ரூபாய் கொடுத்து எங்கள் டவரில் இறங்கிக்கொண்டேன். (பெங்களூரில் ஆட்டோக்கள் மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க. மினிமம் சார்ஜ் 30).  மத்தவங்களும் மெஜெஸ்டிக்கை அடுத்த ஐந்து நிமிடங்களில் அடைந்துவிட்டார்கள்.

இப்படியாக, நான் இந்த வருடமும் சென்ற வைரமுடி யாத்திரை மிகவும் நல்லபடியாக நடந்து நிறைவுபெற்றது. இந்த யாத்திரை பற்றிய பதிவுகளுக்கு என்னுடன் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு யாத்திரை பற்றிய பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்.

 ** வைரமுடி யாத்திரை நிறைவு பெற்றது ** 

= = = = = = = = = = =

36 கருத்துகள்:

  1. உக்ர நரசிம்மர் பற்றி வாசித்து வரலாறு அறிந்தேன். மூலவரை தரிசித்து மனதில் வணங்கினேன்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்து மத்தூர் வரதராஜ சுவாமி கோயில். நேத்ர நாராயணர் சரிதம் அறிந்தேன்.
    காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுடனான தொடர்பும் தெரிய வந்தது. மத்தூர் வரதராஜ பெருமாளை
    தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு பகுதியிலும் வெளியிட்ட படங்கள் எங்கள் மன தரிசனத்திற்கும் பெரிய அளவு துணையாக இருந்தது. கட்டுரைத் தொடர் நிறைவடைந்தது போலவே மனசுக்கும் வைரமுடி யாத்திரை வாசிப்பு அலாதியான நிறைவைத் தந்திருக்கிறது.
    மிக்க நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். ஒரு தடவைதான் எழுதப் போகிறோம் என்பதால் முடிந்த அளவு படங்களைக் கோர்த்திருந்தேன். பகுதிகளை வாசித்து மகிழ்ந்தது நிறைவாக இருக்கிறது.

      நீக்கு
  4. யாத்திரை தொடர் படங்களுடன், நிறைவாக இருந்தது. ஒரு booklet ஆக வெளியிட்டு இனி வரும் யாத்ரைகளில் பங்கேற்பவர்களுக்கு கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். யாத்திரை நடத்துபவர் இந்த இந்த இடங்களுக்குப் போகிறோம் என்று மாத்திரம் தெரிவிப்பார். இறை தரிசனம் நம் கையில் இல்லை. ஒரு சில இடங்கள் விட்டுப் போகலாம், இல்லை நினைத்த மாதிரி தரிசனம் கிடைக்காமலிருக்கலாம் இல்லை அற்புதமாக அந்தத் தலத்திலேயே தர்ப்பணமோ இல்லை பல மணி நேரங்கள் செலவழித்து விழாவில் கலந்துகொள்ளும் பாக்கியமோ கிடைக்கலாம். இதுபற்றிப் பிறகு எழுதுகிறேன்.

      நீக்கு
  5. நேத்ர நாராயணர் கோவிலில் பழைமை தெரிந்தாலும் உக்ரநரசிம்மர் கோவில் வரலாற்றைக் கேட்கும்போது அது எவ்வளவு பழைமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ அதற்கு மாறாக புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.  புதிப்பிக்கிறேன் என்று கெடுத்து விட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல கோவில்கள் வரலாற்றால் பழைமையானவை. சிதிலங்களாலோ இல்லை இடிபாடுகளாலோ புதுப்பிக்கும்போது பெயின்ட் உபயோகப்படுத்துவது கலர் கலர் பொம்மைகள் நிறுவுவது, வர்ணச் சித்திரங்கள் இவற்றால் கோவிலின் புராதானம் அடிபட்டுப் போகிறது.

      நீக்கு
  6. நேற்று சோளிங்கர் சென்று வந்தோம் நானும் பாஸும்.  இன்று இங்கு உக்ர நரசிம்மர் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். நீங்க எழுதியதைப் படித்த பிறகுதான், கார்த்திகை மாத்த்தில் தொடர் முடிந்துள்ளதும், உக்ர நரசிம்மரின் படம் வந்துள்ளதும் நினைத்தேன். நரசிம்மர் நமக்கு நலம் புரிவாராகுக.

      நீக்கு
    2. சோளிங்கர் மூன்றுமுறை சென்றிருக்கிறேன். நிறைவான தரிசனம் கிடைத்தது. ஒரு நாழிகைப்கோது, 24 நிமிடங்கள், கோயில் வளாகத்தில் இருந்தீர்கள் அல்லவா?

      நீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. மிகவும் பயனுள்ள செய்தி..
    வயதாகின்ற காலத்தில் அனைவருக்கும் நேத்திர வரதராஜரின் துணை அவசியமாகின்றது..

    இந்தப் பதிவினைப் படிக்கின்ற நேரத்தில் - சீதாப்பழம் கண் பார்வைக்கு நல்லது என்றொரு செய்தியும் கிடைக்கின்றது..

    காலைப் பொழுதில் பதிவு இப்படித்தான் இருக்க வேண்டும்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதாக ஆக, பலவும் மங்குவது சகஜம்தான்.

      எனக்கு சீதாப்பழம் பிடிக்காது. சென்ற வாரத்திலிருந்துதான் சீசன்.

      இறைச் சிந்தனையும் அவசியம்தான். உலக விஷயங்களும் நம் பொழுதைப் கோக்கத் துணை இருக்கும்.

      நீக்கு
  9. கலைப் பொக்கிஷங்களான சிறப்பு மிக்க ஆலயங்களை தங்களால் தரிசிக்க நேர்ந்தது..

    நெல்லை அவர்களுக்கு வணக்கமும் நெஞ்சார்ந்த நன்றியும்..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மத்தூர்-Maddur உக்ரநரசிம்ஹர் கோவில் படங்களும் வரலாறும் அருமை.
    அர்ச்சுனன் தரிசித்த உக்ர நரசிம்மரை தரிசனம் செய்து கொண்டேன்.

    //மஞ்சள் குங்கும திருமஞ்சனத்தின்போது, மூலவரின் உக்ரம் வெளிப்படுகிறது.//

    நன்கு தெரிகிறது.

    நேத்ர நாராயணர் என்று பெயருடைய வரதராஜர் மூலவர் தோற்றம் கண்ணை நிறைக்கிறது. அழகான நெடியோன்.
    நேத்ர நாராயணர் வரலாறு அருமை.

    தமிழ் கல்வெட்டில் என்ன எழுதி இருக்கிறது?

    தூண் சிற்பங்கள், மற்றும் அனைத்து படங்களும் மிக அருமை.நேரில் பார்த்தது போல உணர்வை கொடுத்தது.

    வைரமுடி சேவை யாத்திரை நிறைவு பெற்று விட்டதே! என்று இருக்கிறது. அடுத்த யாத்திரை காண ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      அடுத்த யாத்திரைப் பதிவு எழுத ஆரம்பிக்கணும். இடையில் வேறு டாபிக்குகளில் எழுதலாமா என்று யோசிக்கிறேன். பல்வேறு இடங்களுக்குச் சென்றது நினைவில் வருகிறது.

      நீக்கு
    2. நேத்ர நாராயணர் பெரிய தோற்றம். உக்ர நரசிம்ஹர் கோபத் தோற்றம். இரண்டுமே அழகு.

      தமிழ் கல்வெட்டில் என்ன இருக்கிறது என்று படிக்கவில்லை. விரைவில் படித்துப் பகிர்கிறேன்.

      நீக்கு
  12. உக்ரநரஹிம்ஹர் , வரதராஜப் பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    நரஹிம்ஹர் பெயருக்கு ஏற்றபடி உக்ரம்.

    வைரமுடி யாத்திரை தொடர் விரிவாக சிறப்பான படங்களுடன் கண்டு களித்தோம் .நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. தொடர் முழுமைக்கும் பயணித்ததற்கு நன்றி

      நீக்கு
  13. உக்ரநரஹிம்ஹர் , வரதராஜப் பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    நரஹிம்ஹர் பெயருக்கு ஏற்றபடி உக்ரம்.

    வைரமுடி யாத்திரை தொடர் விரிவாக சிறப்பான படங்களுடன் கண்டு களித்தோம் .நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நரசிம்ம தரிசனம்..

    /// மூலவர் மிக மிக அழகாக இருக்கிறார் (சிலா ரூபம்). மஞ்சள் மற்றும் குங்குமத்தால் திருமஞ்சனம் செய்யும்போது, உக்ரம் வெளிப்படுகிறது. ///

    இதெல்லாம் விவரிக்க இயலாத அற்புதங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே தரிசனம் செய்யும்போது நம் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் அவை. அந்த உணர்வை எழுத்தில் கொண்டுவர முடியாது.

      நீக்கு
  15. கோவில் படங்களும், அதன் தகவல்களும் அருமை...

    நிறைவான யாத்திரை... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தமிழரே...
    படங்களும், தகவல்களும் சிறப்பாக சென்றது நாங்களும் தங்களுடன் பயணித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி...... கொஞ்சம் செட்டில் ஆயிட்டீங்களா? குபூஸ் போன்றவை உணவுப் பழக்கத்தில் வந்துவிட்டதா?

      நீக்கு
  17. மிக சிறப்பான தொடர் சார் ..அறியாத பல தகவல்களும், புதிய சில கோவில்களும் என போற்ற வேண்டிய அற்புத தொடர்..

    மின்னூல் ஆக பதிவிட்டிர்கள் என்றால் மிக உபயோகமாக இருக்கும், இங்கு தளத்தில் இருக்கும் பொழுது பல பதிவுகளுடன் அடியில் சென்று விடுகிறது. தேடி எடுத்து வாசிப்பது கடினமே.

    தொடர்ந்து வாசித்து கருத்துரை இட இயலவில்லை எனினும் நிறைவான தொடர். மிக மகிழ்ச்சியும், வணக்கங்களும் சார் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!