திங்கள், 25 டிசம்பர், 2023

"திங்க"க்கிழமை : "என்ன மெனு?"

 வீட்டில்தான் திடீரென விருந்தினர் வந்தால் ரவா உப்புமா செய்வோம் என்றால், முந்தா நாள் சனிக்கிழமை கும்பகோணம் செல்ல காரில் அதிகாலை கிளம்பினால், ரோடெல்லாம் வாகன வெள்ளம்.  கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் கொண்டாட்டங்களுக்காக மக்கள் சென்னையை விட்டு அவரவர் ஊருக்கு உற்சாகமாக சென்று கொண்டிருந்தார்கள். 

டிஃபன் சாப்பிடும் நேரம் ஹோட்டலெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்.  நாங்கள் சென்ற ஓட்டலில் சரக்குகள் தீர்ந்து விட்டன போலும்.  இருக்கும் மாவில் காசு பார்க்க, தோசை மட்டும் போட்டு, அதனுடன் ரவா கிச்சடி - அதாங்க ரவா உப்புமா - போட்டு காசு பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

எங்கள் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயம் நாங்கள் வித்தியாசமாய் செய்ய முயற்சிப்போம்.  அவ்வப்போது ஹோட்டலில் கொடுக்கும் 'தாலி' உணவு வகை போல மதிய சாப்பாடு தயார் செய்திருக்கிறோம்.

மாமனாரின் தம்பி குடும்பம் வந்த ஒரு நாளில் இரவு சிற்றுண்டியாக நாங்கள் செய்தது இன்று பதிவாக...   

இது புதிது, நீங்கள் செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை.  நாங்கள் இதைச் செய்தோம் என்று பகிர்கிறேன்.  அவ்வளவுதான்.  செய்த ஐட்டங்கள் வழக்கமானவை என்றாலும் தீம் (ஓரளவு அல்லது எங்களுக்கு) புதிது என்று நினைக்கிறேன்!!!

ஹோட்டலுக்கு சென்று வெவ்வேறு ஐட்டங்கள் ஆர்டர் செய்வது போல...

முதலில் பாஸ் ஸ்விக்கியில் போட்டு விடலாம் என்றுதான் சொன்னார்.  மாவு கொஞ்சம் இருப்பதாக சொன்னார்.  காலை அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் செய்த சப்பாத்தி மாவு மிச்சம் இருந்தது.

மெனு தயார் செய்தேன், சொன்னேன்.  ஆளுக்கு இரண்டு இட்லி, இரண்டு ஊத்தப்பம் - ஒன்று ஆனியன், ஒன்று பிளெயின் - இரண்டு சப்பாத்தி என்று!


- இதில் இட்லியை வித்தியாசமாக்க முடிவு செய்தேன்.  இட்லியில் கலர் வேண்டுமென்றால் ஒரே வழிதான்.  பீட்ரூட்!  மாவு அளந்து எடுத்துக் கொண்டு அதில் ஒரு தோல் சீவிய பீட்ரூட்டையும் மூன்று பச்சை மிளகாயையும் மிக்சியில் அடித்து சேர்த்துக் கலந்தோம்.  பீட்ரூட்டின் தித்திப்பை சமாளிக்க பச்சை மிளகாய்.


இரண்டு குடை மிளகாய், இரண்டு வெங்காயம், ஒரு கேரட் எடுத்து பொடியாக நறுக்கி அளவாக உப்பு சேர்த்து அரை வதக்கல் வதக்கி கலந்த கலர் மாவில் போட்டுக் கலந்தோம்.  இட்லியாக ஊற்றினோம்.  ஒரு தேங்காய் சட்னி துணை அதற்கு.

- இரண்டு கரண்டி மாவு மிஞ்ச, அதை தோசையாய் ஊற்றி மகிழ்ந்தோம்!!

- சப்பாத்தி சதுரம், முக்கோணம் என்று (வரும்) டிசைன்களில் இட்டு  பரிமாறினோம்.  குருமா துணை அதற்கு.  அதில், அதாவது சப்பாத்தியில்  ஸ்டப்ட் முயற்சிக்கவில்லை. வேலை லொள்ளு.

- வெங்காயம், பச்சை  மிளகாய், கொத்துமல்லி பொடியாய் நறுக்கிவைத்துக்கொண்டு,  மாவை தோசைக் கல்லில் கனமாக ஊற்றி, அளவாகப் பரப்பி, வெங்காயத்தை மேலே தூவி, எண்ணெய் விட்டு, தட்டால் மூடி, அடுப்பை சிம்மில் வைத்து, போதுமான நேரம் கழித்து, தட்டை எடுத்து, ஊத்தப்பத்தைத் திருப்பாமல் அப்படியே எடுத்து தட்டில் விட்டோம்!  அதே போல அடுத்த ஊத்தப்பத்திற்கு வெங்காயம் போடாமல்!  இப்படி தட்டு போட்டு மூடி தோசையோ, ஊத்தப்பமோ ஊற்றுவது நான் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டது.  அம்மா எண்ணெய் செலவில்லாமல் இருக்க இந்த வழியைக் கையாளுவார்.  நான் அப்படியும் எண்ணெய் விடுவதில் குறை வைக்கவில்லை!

"ஏன் அத்திம்பேர் நடுவில் ஓட்டை போடுகிறீர்கள்?" என்றான் மைத்துனன்.  "அப்போதுதானே அதில் எண்ணெய் விட்டு நடுவில் பொன்னிறமாக்க முடியும்? என்றேன்.  "ஏன், நீங்கள் எல்லாம் தோசை நடுவில் ஓட்டை போடமாட்டீர்களா?"  என்றேன்.  "இல்லை" என்றான்.  சிலருக்கு வழக்கமில்லை போலும்!  நாங்கள் சமயங்களில் நடுவில் இடும் துளையோடு, நான்கு பக்கங்களிலும் கூட துளையிட்டு எண்ணெய் விடுவதுண்டு!  மொறுமொறுவென்று கண்ணையும் மனதையும் கவரும்!  சரி, இப்போது ஊத்தப்பங்கள் ரெடி.

மிளகாய்ப்பொடி, மதியான சாம்பார், கொஞ்சம் சட்னி துணை அதற்கு!

வயிறு நிறைந்தது.  இதுவே அதிகம் என்றனர்.  வித்தியாசமாய் இருந்தது என்றனர்.

சந்தோஷம்!


கிறிஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.

35 கருத்துகள்:

  1. ​புதுமை சரி. ஆனால் கடமையே என்று செய்தது போல் உள்ளது. ஒரு ஆர்வம், ஒரு ஈடுபாடு இல்லாமல் செய்தது போல் தெரிகிறது. பீட்ரூட் வதக்காமல் சேர்க்கும்போது பீட்ரூட் வாசனை சில சமயம் பிடிக்காமல் இருக்கும்.

    இதற்கு பதிலாக இந்தியா இட்லி செய்திருக்கலாம். கொஞ்சம் கொத்தமல்லி புதினா பச்சை சட்னி எடுத்து கொள்ளவும். கொஞ்சம் மாவில் பச்சை கலர் சேர்த்துக்கொள்ளவும். கொஞ்சம் சிவப்பு பீட்ரூட் மாவு, அதன் மேல் வெள்ளை மாவு, அதன் மேல் பச்சை மாவு என்று மூன்று கலர் இட்லி செய்யலாம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரைக்கப்பட்ட மாவுடன் சேர்ந்து 12 நிமிடங்களுக்கு மேல் ஆவியில் இருப்பதால் வெந்து விடும். மோசமாக தெரியவில்லை. பாதிக்கவில்லை.

      // இதற்கு பதிலாக இந்தியா இட்லி செய்திருக்கலாம் //

      விதம் விதமாக முயற்சிப்பது வழக்கம். இதையும் செய்து விடலாம்!

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. கிறிஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகளை நானும் சொல்கிறேன்.

    இன்று கிறிஸ்மஸ் விருந்து போல அமைந்து விட்டது.
    கண்ணைகவரும் படங்களின் தொகுப்பு மிக அருமை.

    அடைக்கு நடுவில் ஓட்டை போடுவோம் அப்போதுதான் நன்கு முறுகும். தோசை சுடும் போதே சிறு சிறு ஓட்டைகள் ஏற்பட்டு விடுமே அதனால் தனியாக துளையிடுவது இல்லை.
    ஊத்தப்பம் அருமை.

    //மெனு தயார் செய்தேன், சொன்னேன். ஆளுக்கு இரண்டு இட்லி, இரண்டு ஊத்தப்பம் - ஒன்று ஆனியன், ஒன்று பிளெயின் - இரண்டு சப்பாத்தி என்று//

    சப்பாத்தியை தேடினேன் காணவில்லையே!

    //வயிறு நிறைந்தது. இதுவே அதிகம் என்றனர். வித்தியாசமாய் இருந்தது என்றனர்.

    சந்தோஷம்!//

    இருப்பதை வைத்து நிறைவாய் செய்தால் ஆனந்தம் தான்.
    வயிறு நிறைந்தது மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே மாதிரி செய்வதைவிட வித்தியாசமாய் இருந்தால் எதுவுமே நன்றாயிருக்கும் என்னும் கான்செப்ட்தான்!  நன்றி கோமதி அக்கா.  சப்பாத்தி படமெடுக்க மறந்து விட்டது!

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. /// இது புதிது, நீங்கள் செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. ///

    இது சரி..

    நன்றாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

    இருக்கும் கொஞ்சூண்டு தோசை/இட்லி மாவில் கலக்கிட்டீங்க ஸ்ரீராம்! நீங்க வித்தியாசமாக ஏதேனும் செய்வதை விரும்புவீங்கன்னு தெரியும். அதனாலதான் திங்கவில் உங்களை எழுதச் சொன்னேன். சூப்பர்.

    நானும் அப்படித்தான். வித்தியாசமாகச் செய்வது ரொம்பப் பிடிக்கும். சமையலில் ஒரு monotony இல்லாமல் ஆர்வமாக் இருக்கும். சமையலில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...  நன்றி.  எபப்டியோ திங்களை ஒப்பேத்தியாச்சு பாருங்க...  நேற்றிரவு ஒன்பது மணிக்குமேல்தான் திங்கள் காலியாக இருப்பதை கவனித்தேன்!

      நீக்கு
  7. கரண்டிகளில் எத்தனையோ இருக்கலாம். ஆனால் தோசையும் அதற்கென்றே 'வாக்கப்பட்ட' தோசைக் கரண்டியும் புருஷனும் பெண்சாதியும் மாதிரி.
    வார்த்து எடுக்க வாகாகவும், தோசை, அடையாக பரிமளிக்கும் போது
    நடுவில் சின்னதாக துளை என்ற பெயரில் லேசாகத் தீற்றி அதன் நடுவில் எண்ணை வார்த்து பொட்டிடவும்
    பெண்சாதி கரண்டி ஒட்டி உறவாடி செயல்படும் அழகே, அழகு!...
    இன்னா சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார் என்ன...செய்முறையை விட்டுவிட்டு ரொமான்டிக் மூடுக்குப் போயிட்டாரு காலையிலேயே என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. நல்ல ஒப்பீடுதான்.  தோசை திருப்பியால் கீறமாட்டேன்.  எண்ணெய் விடும் குமிழியாலேயே கீறி விட்டு விடுவேன்! 

      //ஜீவி சார் என்ன...செய்முறையை விட்டுவிட்டு ரொமான்டிக் மூடுக்குப் போயிட்டாரு காலையிலேயே என்று நினைத்தேன்.//

      நெல்லை அதுவும் ஒரு பதிவுக்கு கைகொடுக்கும்!

      நீக்கு
  8. கரண்டிகளில் எத்தனையோ இருக்கலாம். ஆனால் தோசையும் அதற்கென்றே 'வாக்கப்பட்ட' தோசைக் கரண்டியும் புருஷனும் பெண்சாதியும் மாதிரி.
    வார்த்து எடுக்க வாகாகவும், தோசை, அடையாக பரிமளிக்கும் போது
    நடுவில் சின்னதாக துளை என்ற பெயரில் லேசாகத் தீற்றி அதன் நடுவில் எண்ணை வார்த்து பொட்டிடவும்
    பெண்சாதி கரண்டி ஒட்டி உறவாடி செயல்படும் அழகே, அழகு!...
    இன்னா சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  9. செய்முறையைவிட எழுத்து என்னைக் கவர்ந்தது.

    மிக வித்தியாசமாக, விருந்தினர்களைக் கவரும் வண்ணம் செஞ்சிருக்கீங்க. படங்களும் மனதைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  10. ஒருவேளை, இன்னும் ஏதாவது இருக்கா என்ற கேள்வி வந்திருந்தால் எப்படிச் சமாளித்திருப்பீர்கள்?

    உங்கள் ஸ்டான்டர்ட் குருமா ரெசிப்பி என்ன? (திப்பிசங்கள் இல்லாமல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குமேல் தேவை எதுவும் இருக்காது.  இதிலேயே ஒரு ஊத்தப்பத்தை ஸ்கிப் செய்தார்கள்.  குருமா?   யாரும் எதுவும் அனுப்பாத பிறிதொரு திங்களுக்கு உதவும்!

      நீக்கு
  11. கிறிஸ்துமஸ் என்றதும் எனக்கு ஏஞ்சலினும் மதுரைத் தமிழனும் நினைவுக்கு வருகின்றனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அத்தனை வருடங்கள் வேலை பார்த்திருந்தும், கடைசி ஓரிரு வருடங்களில் மாத்திரம் தெரிந்துகொண்டு சுவைத்த பிளம் கேக்கின் ருசியும் மனதில் வந்துபோகிறது.

    அதிராவும் ஏஞ்சலினும் நம் திருச்சி வை கோபாலகிருஷ்ணன் சார் மாதிரி, சட் என பிளாக்கை மறந்துவிட்டார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்ரீத், ரம்ஜானுக்குதான் மதுரைத்தமிழன் நினைவு வரவேண்டும்!  ஏஞ்சலின் ஓகே.  ஏஞ்சலீனுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!  (என்னவோ அவர் வந்து படிப்பார் என்று நினைப்பு!!)

      நீக்கு
  12. பீட் ரூட் இட்லி அதில் குமி வெ எல்லாம் போட்டு அருமை போங்க. ஊத்தப்பம் நானும் உங்க அம்மா செய்வது போல எண்ணை அதிகம் விடாமல் இப்படித்தான் அது போல தோசை மெலிதாகச் சுட்டாலும் மூடி போட்டு வேக வைத்து எண்ணை அதிகம் இல்லா ரோஸ்ட் செய்வதுண்டு. ஊத்தப்பம் திருப்பிப் போட்டுச் செய்யும் சுவையும் தனி வெங்காயம் சேர்க்கும் போது அது கொஞ்சம் சிவந்து வருமே அந்தச் கசுவை.

    படங்கள் எல்லாம் செம. சப்பாத்தி எங்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்பாத்திக்கு எடுத்த படங்கள் மகன் செல்லில் மாட்டிக்கொண்டன.  நானே இந்தப் பதிவை அவசரமாக இரவு தாமதமாக தயாரித்தேன்.  ஸோ, விட்டுப்போச்!

      நீக்கு
  13. கேரட், குடை மிளகாய், கோஸ் அல்லது சீஸ் போட்டு சும்மாநாலும் கொடி தோசைன்னு புதுப் பெயர் போட்டு மகனின் சின்ன வயதில் அவனுக்கு ஆர்வம் ஏற்பட வைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த க்ரூப்பில் வந்திருந்த என் பெரிய மச்சினன் நான் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு விடுமுறைக்கு வீடு வந்தபோது செய்து போட்ட தோசை வகைகளை இன்னும் சொல்வார்!

      நீக்கு
  14. இந்த ஊர்ல இங்கு வந்த புதிதில், மஹாலக்ஷ்மி லேஅவுட்ல கோயில் திரும்பும் முக்கில் வலப்பக்கம் ஒரு உணவகம் பழைய உணவகம் உண்டு. அங்கு ஒரே ஒரு முறை சாப்பிட்டதுண்டு. ஆனியன் தோசா என்று சொன்னாங்க. நமக்குத்தான் ஆனியன் ரொம்பப் பிடிக்குமே ஸோ மெலிய ரோஸ்ட் தோசையில் நடுவில் ஆனியன் பரப்பித் தருவாங்கன்னு நினைச்சு தெரியாம வடையும் சொல்லிவிட்டேன்.

    வடையை முதலில் கொடுத்தாங்க. ஓகே அடுத்தாப்ல வெங்காய தோசை ஆஆஆஆ பயந்துவிட்டேன் பெரிய தடியான ஊத்தப்பம்!!!!! அதில் வெங்காயம் விரவி இருந்தது மாவில் கலந்து. யம்மாடியோவ் இதை எப்படிச் சாப்பிடுவது ஏற்கனவே வயிறு பாதி நிறைந்து.....

    தோசை செம சூடு ஆனா இந்த ஊரில் இப்படித் தடியா வர தோசை பல சமயங்களில் நடுவில் வெந்திருப்பதில்லை. இத்தனைக்கும் நிறைய நேரம் இரு புறமும் போட்டு இரண்டு மூன்று முறை போட்டும் எடுக்கறாங்க. ஆனாலும் நடுவில் வெந்திருக்கவில்லை.

    தடி தோசையைப் பாதியாகப் பிய்த்து, எப்பவுமே நானும் மகனும் உணவு அதிகம் என்றால் முதலிலேயே அதில் பகுதியை எடுத்து எங்க வீட்டு அனாதரட்சகன் தட்டில் கொடுத்துவிடுவதுண்டு என்பதால் அப்படிக் கொடுத்துவிட்டு மீதி பாதி தோசையையும் கஷ்டப்பட்டுச் சாப்பிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு வயறு நிறைந்த உணர்வில்...எதிர்த்து வரும் போல் இருந்தது. இத்தனைக்கும் நல்ல பசி.

    அதுலருந்து வெளியில் சாப்பிடுவது என்றால் அதுவும் வெங்காய தோசைனா அங்க எப்படிப் போடுவாங்கன்னு தெரிந்து கொண்டுதான் ஆர்டர் செய்வதுண்டு.

    இந்த உணவகத்தில் சாம்பார் தித்திப்பாக இல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ..  ரசனையில்லாத வியாபாரிகள்.  அபப்டி தடிமனாக தோசை சாப்பிட்டால் எப்படியோ இருக்கும்!

      நீக்கு
  15. உன் சமையலறையில் நான் இட்லியா தோசையா//

    ஹாஹாஹாஹாஹா......சர்வமும்! தோசை, இட்லி மாஸ்டர் நான் இருக்க, நாங்க கலர் கலரா மேக்கப் கூட போட்டுவிட்டிருவோமாக்கும்!

    பீட் ரூட் இட்லி நீங்க சாப்பிட்டீங்களா ஸ்ரீராம்!!!? உங்களுக்கு நிறைய அவுட் உண்டே!!!

    வந்தவங்களை கினி பிக் ஆக்கினாலும் அவங்க சந்தோஷமா சாப்பிட்டு அதுவும் வயிறார சாப்பிட்டுப் பாராட்டிச் சென்றது மகிழ்வான விஷயம்.

    வீட்டின் கிச்சன் டைரக்டர், உணவுக்கலை டைரக்டர் ஸ்ரீராம் வாழ்க!

    படங்கள் எல்லாம் சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அந்த வார்த்தைகளை படிக்க முடிந்ததா?  யாரும் பார்க்கவிலையே என்று நினைத்தேன்! நன்றி கீதா.  நான் இந்த இட்லி முன்னரே சுவைத்திருக்கிறேன்.  கொரோனா காலத்திலும் செய்திருக்கிறேன்.

      நீக்கு
    2. பெரும்பாலும் கண்ணில் தப்பாது ஸ்ரீராம். படங்களைப் பெரிசு பண்ண வருதே! அப்படிப் படிக்க முடிந்தது. அப்படித்தான் சப்பாத்தி இல்லை என்பதும் கண்ணில் பட்டது!!!

      ஓ முன்னரே செய்ததா....சூப்பர். எனக்குப் பிடிக்கும் பீட் ரூட் தோசை, இட்லி.

      பீட் ரூட் பிடிக்கும் என்றால் பூண்டு போட்டுக் காரத்துக்கு வற்றல் மிளகாய் கொஞ்சம் வறுத்துக் கொர கொரன்னு பொடித்துப்போட்டு, பச்சை மிளகாயும் போட்டு சின்ன வெங்காயமும் கொஞ்சம் வதக்கிப் போட்டுக் கீரை கடைவது போலக் கடைஞ்சு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்க...தேங்காய் எண்ணைதான் பயன்படுத்த வேண்டும். செம டேஸ்ட்....

      கீதா

      நீக்கு
    3. நீங்கள் சுவைத்துப் பார்க்கவில்லையா என்று கேட்டதற்கு முன்னரும் செய்திருக்கிறேன், சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னேன்.  இது மிகச் சமீபத்தில் செய்ததுதான்.  இப்பவும் சுவைத்தேன்.  நன்றாக இருந்தது.  jkc சார் சொல்லி இருப்பது போல பச்சையாக இல்லை!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!