20.4.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 16 நெல்லைத்தமிழன்

 

நாம் இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி கோயில் சிற்பங்களைக் கண்டுவருகிறோம்ஆனால் வரலாறோஅவனுடைய கொள்ளுப் பாட்டன் குலோத்துங்கச் சோழனிடம் நிற்கிறது.

குலோத்துங்கச் சோழன் சிறந்த சிவபக்தன். (சோழ மன்னர்கள் அனைவரும் சிவ பக்தர்கள். அதுவும் தில்லையம்பலத்திற்கு நிறைய செய்திருக்கிறார்கள். அதனால்தான் தற்போது சோழ வாரிசுகள் என்று கருதப்படுபவர்களுக்கு தில்லை கோயிலில் சிறப்பு செய்யப்படுகிறது. புதிய வாரிசு தலைமைப் பொறுப்பு ஏற்கும்போது-தலைமைக்கு அவர்களுக்கு நிலம் இல்லாதபோதும், மன்னர்கள் என்ற கௌரவம், தில்லையம்பலத்தில்தான் பட்டம் கட்டப்படுகிறது, தற்போதும்). ஆனாலும் பிற சமயங்களையும் மதித்தான். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலை எடுப்பித்தவன் இவனே. அது அப்போது குலோத்துங்கச் சோழ விண்ணகரமாக இருந்தது. (ஆழ்வார்கள் காலத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதனால்தான் மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி கோயில் மிகப் பெரியதாக இருந்த போதும், வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக அது இல்லை)

இங்கு வைணவக் கோயில்களும் எடுப்பித்தான், பிற சமயங்களையும் மதித்தான் என்று எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், இவனுடைய பேரன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான், தில்லையில் இருந்த கோவிந்தராஜப் பெருமாள் மூர்த்தம் கடலில் போடப்பட்ட தும் (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.. பாடல் மற்றும் நிகழ்வு நினைவுக்கு வருகிறதா?), சைவ சமயத்தின் மீதிருந்த தீராத பற்றின் காரணமாக இராமானுஜரை அரசவைக்கு வரவழைத்து சிவனே முழு முதற் கடவுள் என்று ஒப்புக்கொள்ளவைக்கவேண்டும், ஒப்புக்கொள்ளாவிட்டால் அவரைத் தண்டிக்கவேண்டும் என்று முயன்றது

ஏற்கனவே எழுதியிருந்ததுபோல, வரலாறு என்பதே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள், பட்டயங்கள் இவற்றை வைத்தும், அந்த அந்த காலகட்ட இலக்கியங்களில் குறிப்பிடப்படுபவைகளை வைத்தும் ஓரளவு அறுதியிடுகின்றனர். பின்பு வேறு கல்வெட்டுகளோ இல்லை பட்டய ஆதாரங்களோ கிடைக்கும்போது, சிலவற்றை மாற்றிப் புரிந்துகொள்கின்றனர். இதனால்தான் ஒரு அரசன் மிகவும் கெட்டவன், இந்தச் சமூகத்தை வெறுத்தான் என்று கூறப்படுவதற்குக் காரணமாக ஆதாரங்கள் இருப்பதுபோல, அப்படிப்பட்டவன் இல்லை என்பதற்கும் வேறு கல்வெட்டுகள், ஆதாரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதுபோலவே, ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் (உதாரணமாக, பல்லவர்கள், சாளுக்கியர்கள் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் போர் புரிந்திருக்கின்றனர். சில போர்களில் சாளுக்கியர்கள் வென்றிருக்கின்றனர். அதனால் சாளுக்கியக் கல்வெட்டுகளில் அவன் பெற்ற வெற்றிகள் குறிப்பிடப்படும்-ரொம்ப விவரமாக அல்ல, பல்லவர்களைப் புறமுதுகிட்ட சாளுக்கிய அரசன் என்பது போன்று. இதுபோலவே பல்லவ அரசனின் கல்வெட்டுகளிலும் அவனது வெற்றி குறிப்பிடப்படும். சில நேரங்களில் அந்த அந்த தேசத்து இலக்கியங்களும் பொய்யுரை கொண்டிருக்கும். இது புலவர்களின் வேலை. அதனால் அவைகளை வைத்து மாத்திரம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது) இதனைப் பிற்பாடு ஒரு பொருத்தமான சந்தர்ப்பத்தில் காண்போம்.

இரண்டாம் குலோத்துங்கன் காலம் (முதலாம் குலோத்துங்கனின் பேரன்) 1133-1150.  இவன் காலத்தில்தான் இவனது அதீத சைவ சமயச் சார்பு காரணமாக தில்லை நடராஜர் ஆலத்தில் மூலஸ்தானத்திற்கு அருகில் இருந்த சயன கோலத்தில் இருந்த கோவிந்தராஜப் பெருமாள் மூர்த்தம் கடலில் போடப்பட்டது. குரு பரம்பரைப் பிரபாவம் என்ற நூலில், இராமானுஜரின் வரலாறு குறிப்பிடப்படும்போது, அவரைத் தன் அரசவைக்கு அழைத்து சிவனே முழுமுதற் கடவுள்என்று ஓலையில் கையெழுத்திட்டு ஒப்புக்கொள்ளவேண்டும், அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அவரைத் தண்டிக்கவேண்டும் என்று எண்ணி, அவரை இரண்டாம் குலோத்துங்க சோழன், தன் அரசவைக்கு அழைக்கிறான். நல்லோரின் வற்புறுத்துதலால், இராமானுஜர் (அப்போது அவருக்குக் கிட்டத்தட்ட ஐம்பது-அறுபது பிராயம் இருக்கலாம்.) கர்நாடகாவை நோக்கிச் சென்றுவிடுகிறார் (ஹொய்சாள தேசம். அதுதான் சோழ தேசத்தின் எதிரியாக அப்போது இருந்தது). அவர் கர்நாடகாவில்/ஹொய்சாள தேசத்தில் சமார் 30 வருடங்கள் இருந்தாராம். அதில் 12 வருடங்கள் மேல்கோட்டையில் வாழ்ந்தார்

தொண்டனூரில் பிட்டிக விஷ்ணு வர்தனை, ஜைன சமயத்திலிருந்து வைணவ சமயத்திற்கு மாற்றினார். இந்த பிட்டிக விஷ்ணு வர்தன் காலம் கிபி 1100-1152 என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து பிறகு திருவரங்கம் திரும்பி, 1137 வரை வாழ்ந்தார் என்று வைணவ சம்ப்ரதாயத்தில் சொல்கின்றனர்-குருபரம்பரை. இதற்கிடையில் இரண்டாம் குலோத்துங்கன் இராமானுஜர் என்று வேடமிட்டு வந்த கூரத்தாழ்வானையும் மகாபூரணர் என்று அழைக்கப்படும் பெரிய நம்பியையும் (இவர் ராமானுஜரின் தாய்மாமன், ராமானுஜருக்கு ஆசிரியரும் ஆவார்) சைவமே பெரிது என்று ஒப்புக்கொள்ள முயற்சிக்க, அவர்கள் வைணவமே பெரிது என்று சொல்லவும், இருவரின் கண்களையும் பிடுங்கிவிடுகிறான். பிறகு சிறிது காலத்தில் கழுத்தில் கிருமி வந்து குலோத்துங்கன் கஷ்டப்பட்டு மரணத்தை அடைகிறான். இவனை கிருமி கண்ட சோழன், கண்டத்தில்-கழுத்தில் கிருமி கண்டவன் என்று வரலாறு அழைக்கிறது.   இந்த வரலாற்றை அதற்குரிய சந்தர்ப்பத்தில் விவரித்து எழுதுகிறேன்.

முதலாம் குலோத்துங்கச் சோழனின் அரசு பரந்து விரிந்திருந்தது. அவனிடம் கனோஜி அரசன் (கன்யாகுப்ஜ என்றும் சொல்லப்படுகிறது. இந்த அரசு உத்திரப்பிரதேசத்தில் காசியின் வட பகுதியில் அமைந்திருந்தது) கோவிந்த சந்திர தேவன், நட்பு பூண்டிருந்தான். கன்னோஜி அரசன் சோழதேசத்திற்கு வந்திருந்தான், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிவந்தங்கள் கொடுத்திருக்கிறான் என்பதை கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கல்வெட்டு முற்றுப்பெறாதது தெரிவிக்கிறது. (இதை வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடிப்பதே பெரிய புதிர். இந்தக் கல்வெட்டில் உள்ள வடமொழிச் சொற்கள், சுலோகங்களே, கன்னோஜி ஆண்ட அரசனின் செப்பேடுகளில் காணப்படுவதால், அந்த அரசன் இந்த நிவந்தங்களை அளித்திருக்கவேண்டும் என்று ஊகிக்கின்றனர்). இந்த கன்னோஜி அரசர்கள் சூரியனை வழிபடும் குலம். சூரியனுக்கு தனிக் கோயில் எடுத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள். அதனால் கனோஜி அரசனின் நட்பைப் போற்றும் குலோத்துங்கச் சோழன், ஆடுதுறையை அடுத்து ஒரு ஊரில், சூரியனுக்கு ஒரு ஆலயம் எடுப்பித்து அதற்கு குலோத்துங்கச் சோழ  மார்த்தாண்டாலயம் என்று பெயரிட்டான். அதுவே இப்போது பிரபலமாகியிருக்கும் சூரியனார் கோயில். அந்தக் கோயிலில் காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி மூர்த்தங்கள் உள்ளதே, குலோத்துங்கச் சோழனும் கனோஜி அரசனும் நட்புரிமை பூண்டிருந்ததற்குச் சாட்சி.

தில்லை நடராஜர் ஆலயத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டு, காம்போஜ நாட்டிலிருந்து குலோத்துங்கன் கொண்டுவந்திருந்த விலையுயர்ந்த கல்லை, ஆலயத்தின் சுவற்றில் பதிக்கச் செய்தான் என்று சொல்கிறது. (காம்போஜ நாடு-கம்போடியா). குலோத்துங்கன் எப்போது போனான், கடார (காம்போஜ) மன்ன னுக்கு உதவச் சென்றானா, எந்தச் சந்தப்பர்த்தில் அவனுக்கு இந்தக் கல் காம்போஜ அரசனால்(?) கொடுக்கப்பட்ட து என்பதற்கெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் கிடையாது.

ஆனால் இத்தகைய செய்திகளிலிருந்து சோழப் பேரரசு, காம்போஜ நாட்டுடனும் நட்புரிமை பூண்டிருந்தது என்று அறியலாம்.

சீன வரலாறு, சோழ அரசிடமிருந்து 72 பேர் அடங்கிய தூதுக்குழு  1077ல் வந்திருந்தது என்றும், அவர்கள், அரசனுக்கு, கற்பூரம், காண்டாமிருக கொம்புகள், யானைத் தந்தங்கள், கண்ணாடிச் சாமான்கள், வாசனைத் திரவியங்கள் பன்னீர் போன்ற விலையுயர்ந்த பொருகளைக் கொடுத்த தாகவும், அதற்குப் பதில் மரியாதையாக சீன அரசன், அந்த நாட்டு செப்புக் காசுகள் 81,800 கொடுத்த தாகவும் தெரிவிக்கிறது. இந்தக் காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது அது முதலாம் குலோத்துங்கச் சோழன் காலமாக இருக்கவேண்டும் என்றும், அதனால் இரண்டு அரசுகளுக்கும் நட்புறவு இருந்ததும் தெரிகிறது.

அதுபோல ஸ்ரீவிஜய நாட்டிற்கும் (அதுதான் சுமத்ரா ஜாவா தீவுகள், தற்போதைய இந்தோநேஷியா) சோழப்பேரசிற்கும்  நல்ல நட்புறவு இருந்தது, அங்கிருந்து சோழப் பேரரசிற்கு திறை வந்தது என்றும் வரலாறு சொல்கிறது.

அதனால் முதலாம் குலோத்துங்கச் சோழன், சோழப்பேரரசை ஒருங்கிணைத்து நல்லாட்சி புரிந்தான், தேவையில்லாத, நாடு பிடிக்கும் ஆசையுடனான போர்களில் ஈடுபடவில்லை என்பதை அறியலாம்.

இன்னும் குலோத்துங்கச் சோழன் வரலாறே முடியவில்லை. அதற்குள் தாராசுரம் கோயிலை விட்டே சென்றுவிடுவோமோ? தெரியவில்லைஅதனால் என்ன? தாரசுரம் என்பதே முன்னர் சோழர் தலைநகரமாக இருந்த பழையாறையின் ஒரு பகுதிதானே. சோழப் பிரதேசங்களின் பிற கோயில்களைப் பார்க்கும்போது வரலாறு தொடரக் கூடாதா?


கருவறையின் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.

மிகச் சிறிய இட த்தில் மிக அழகிய சிற்பம் பூதகணங்களும் எருதும்.



யானைக்குட்டியை சிங்கம் அடித்துக்கொல்ல முயலும் காட்சி

கோவில் வெளிப்பிராகாரத் தளம் அழகாகவே இருந்தது. 


தெய்வநாயகி அம்மையின் கருணை தவழும் திருமுகம். 

துவாரபாலகிகள்

என்னைச் சரணடை…. என் அருள் உனக்கு உண்டு. ஆமாம்.. இந்த முத்திரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒருவன் சரணடைகிறான் என்றாலே, தாள் பணிகிறான் என்றே அர்த்தம், அதாவது காலில் விழுதல். அதனால்தான் என்னைச் சரணடை என்ற முத்திரை, திருப்பாதங்களைக் காட்டியவாறே இருக்கும்.

கோயில் அர்த்த மண்டபம், அழகிய தூண்களோடு.. கருவறை தெரிகிறதா?

நான் எப்போது இங்கு வந்தேன் என்பதெல்லாம் உங்களால் கண்டுபிடிக்க முடியாதுஅது சரிதெய்வச் சிற்பங்கள் அனைத்தும் உடையுடன் அமைக்கப்பட்டவை. அதன் மீது உடையணிவித்திருப்பார்கள். உடையன்றி தன் முழு உருவத்தைக் காண்பிப்பதுபோல தெய்வ உருவை நீங்கள் தரிசித்திருக்க இயலாது. இதைப்பற்றிய ஒரு சம்பவத்தையும், என் அனுபவத்தையும் நேரம் கூடிவரும்போது எழுதுகிறேன்.




தெய்வநாயகி அம்மன் கோயிலை தரிசனம் செய்துவிட்டு நாங்கள் வெளியே வந்தோம். இந்த இரண்டு ஆலயங்களுமே (ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி அம்மை) பெரும் இடத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. சுற்றிலும் பரந்த புல்வெளி. ஆலயத்தின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் (ஐராவதீஸ்வரர்) பல்வேறு சிற்பங்களைக் கண்டபோது, அவை எல்லாமே இந்தப் பரந்த வெளியில் இருந்த சிறு சிறு கோயில்களில் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. இதன் காரணம் என்ன என்பதை அடுத்த வாரம் காணலாம்

(தொடரும்) 

44 கருத்துகள்:

  1. வழக்கம் போல்பதிவு சிறப்பு. சில படங்கள் ஒரே சிற்பத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் எடுத்தனவாக உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். முடிந்தவரை ஒரே புகைப்படம் வரக்கூடாது என்று பார்க்கிறேன்

      நீக்கு
  2. நெல்லை, டக்குனு கண்ணில் பட்டது கடைசிப்படமும் அதன் மேலே இருக்கும் படமும். கடைசிப்படத்தின் மேலே இருக்கும் படம் செமையா இருக்கு. இருபுறம் தூண்கள் நேரே சன்னதி தூரத்தில்....இப்படியான ஷாட்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. இன்று காமாக்யா கோவில் மற்றும் சில கோயில்கள் தரிசனம் கௌஹாத்தி அசாமில்.

      நேற்றைக்கு முந்தைய நாள் வாழ்க்கையில் முதல் முறையாக பனி படர்ந்த மலையில் இந்தியா சீனா பார்டர் அருகில்

      நீக்கு
    2. ஆஹா உங்க நெடு நாள் ஆசை!!!! நெல்லை. பூர்த்தியடைந்ததா!!!

      அப்படியே சீனாக்கு ஒரு எச்சரிக்கை விட்டீங்களா?!

      கீதா

      நீக்கு
    3. ஆசை இன்னும் ஆசையைத் தூண்டிவிட்டிருக்கிறது. திரும்பவும் அடுத்த வருடம் காங்டாக் கிற்கும் காஷ்மீருக்கும் செல்ல நினைத்துள்ளேன்

      நீக்கு
  3. படங்கள் தெளிவாக இருக்கின்றன. சரித்திர தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். மிக்க நன்றி

      நீக்கு
  4. காக்க காக்க
    கனகவேல் காக்க

    பதிலளிநீக்கு
  5. முதல் இரு படங்களும் அட்டகாசம். கலை அப்படியே மனதை ஈர்க்கின்றது.

    வலப்பக்கம் ஆஞ்சு , இடப்பக்கம் சிங்கமா? இப்படங்களை பெரிசா போட்டிருக்கலாமோ? அழகான சிற்பங்கள் வடிவங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய படங்களை க்ளோசப்பில் போட ஆசை

      கும்பகோணம் ராமசாமி கோவில் பெண் சிற்பங்களை பகிர்வதற்காக க்ளோசப்பில் எடுத்திருக்கிறேன்

      நீக்கு
  6. அபிஷேகத் தீர்த்தம் வரும் அந்த முக அமைப்பு சூப்பர். இப்பலாம் இதை பார்த்து பெரும்பான்மையான வாட்டர் வேர்ல்டுகளில் வைக்கிறாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குக் கீழ நீங்களும் கொடுத்திருக்கீங்க அதைப் பார்க்கறதுக்கு முன்னரே வந்திருச்சு

      கீதா

      நீக்கு
    2. எதிலும் ஒரு கலைநயத்தோடு அமைத்திருப்பதைப் பார்த்தீர்களா?

      நீக்கு
  7. பூதகணங்களும் எருதும்...சின்ன இடத்துல செதுக்கறது எல்லாம் எப்படி னு தோன்ற வைப்பவை.

    கீழ அந்த இரண்டும் முழுசா கொடுத்திருக்கலாமோ? ஏன்னா கொஞ்சம் நுணுக்கமானவை.

    யானைக்குட்டியை சிங்கம் பிடிப்பது எல்லாம் ....கோவிலில் எல்லா வகை வாழ்வியல் முறைகளும் சித்தரிக்கப்பட்டிருக்கு, புராணங்கள், மக்களில் இருந்து விலங்குகள் வரை....இவை எல்லாமே எதிர்காலத்திற்குச் சொல்லும் விஷயங்கள் அப்போதைய அந்த ஆண்டுகளில் இருந்த வாழ்க்கை...எல்லாம்..இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்கள் சமூகத்தின் வாழ்வியலையும் புராணங்களையும் நம் கலாச்சாரத்தையும் சித்தரிப்பவை

      நீக்கு
  8. தெய்வனாயகியும் அருகில் தூண்கள் பிராகாரம் வாவ்!!!

    துவாரபாலகிகளூக்கு உடை கம்மியாக இருப்பதற்குக் காரணம் டக்குனு சண்டை போட உதவியாக இருக்கும்னோ? புராணங்களில் எல்லாம் இப்படித்தான் சித்தரிக்கிறாங்க.

    ஆனா அரசர்கள் சிப்பாய்கள் எல்லாம் நல்ல பாதுகாப்பான எடை கூடிய உடை அணிந்து கர்ண கவசத்தோடு எப்படி வாளையும் பிடித்துக் கொண்டு சண்டை போட்டாங்களோ? அப்ப என்னா தெம்பு இருந்திருக்கணும்!?

    சரணடைதல்தானே highest form. எவ்வளவு கஷ்டமான ஒன்று!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி பத்தி அப்பதான் பிரசங்கம் கேட்டிருப்பார்கள் மக்கள்....இல்லைனா படிச்சிருப்பார்கள்....ஆஹா என்ன அழகான ஒன்று என்று சிலாகித்தல்..இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்னு நினைச்சு...இறைவா நீயே எல்லாம் பாத்துக்கப்பா..உன்னை சரணடைகிறேன்னு சொல்லிட்டு...அடுத்த அரை மணி நேரத்தில் ஏதாச்சும் ஒரு பிரச்சனை அலல்து கலக்கம்....ஜோசியரைப் பார்க்கலாமான்னு யோசித்தல்!!! மனுஷ மனம்!

      கீதா

      நீக்கு
    2. சரணடைதல் கஷ்டமான ஒன்று. வீரம் உள்ளவர்களுக்கு.

      நீக்கு
    3. நான் லண்டனில் பார்த்த அரச உடைகள் கவசங்கள் பற்றி ஒருநாள் பகருவேன். கவசம் கடினமான ஒன்று. அந்த வாள்களைத் தூக்கத் தனி பலம் வேண்டும்

      நீக்கு
  9. அர்த்த மண்டபம் செம அழகு...கருவறை லேசா தெரிகிறது. பரவால்ல நெல்லை கண்ணுக்குத் தெரியலைனாலும் அகக்கண்ணில் பார்த்துக்கலாம்!!

    தூண்கள் ரொம்ப அழகா இருக்கு. நுணுக்கமான கலைவடிவங்களுடன்.

    உடையன்றி தன் முழு உருவத்தைக் காண்பிப்பதுபோல தெய்வ உருவை நீங்கள் தரிசித்திருக்க இயலாது. //

    இதை மேலே சொன்ன கருத்தோடு கேட்க நினைத்தேன் இங்கு வந்துவிட்டது.

    தெய்வ உருவங்களை அப்படிச் செதுக்கியவர்கள், ஏன் சாதாரண பெண் உருவங்களை அப்படிச் செதுக்கவில்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை. எல்லாப் பெண்கள் சிற்பங்களையும் ஒரே மாதிரித்தான் அமைத்துள்ளனர்

      உங்கள் கேள்வி மேலாடை பற்றியது என்றால் மாறிய இந்தக் காலக் கண்ணோட்டம் உங்களுடையது

      மேலை நாடுகளில் மேலாடை ஏன் கீழாடைகளும் இல்லாமல்தான் சிற்பங்கள் உண்டு.

      நீக்கு
  10. கடைசி வரைக்கும் படங்கள் எல்லாமே சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்ததற்கு நன்றிக்கா

      நீக்கு
    2. ///நெல்லைத் தமிழன்20/4/25 12:13 PM
      படங்களை ரசித்ததற்கு நன்றிக்கா///
      ஆஆஆஆ கீதா ஓடிக் கமோன்ன்ன்ன்ன்ன்:)..ஆரம்பத்தில சொல்லாமல் கொமெண்ட்ஸ் எல்லாம் போட்டு முடியட்டும் எனப் பொறுத்திருந்து முடிவில சொல்லிட்டார்ர்.. பாருங்கோ எவ்ளோ சார்ப்பூ..ஊஊஊஊஊ ஹா ஹா ஹா

      நீக்கு
    3. அதிரா.. கீதா ரங்கன் க்கா உருவத்தில் என்னைவிடச் சிறியவங்க. ஆனால் வயதில் அறிவில் மனிதர்களுடனான அனுபவத்தில் பொறுமையில் மற்றும் பல திறமைகளில் என்னைவிடப் பெரியவங்க

      நீக்கு
  11. யானைக்குட்டியை சிங்கம் அடித்துக்கொல்லும் சிற்பத்தில் சிங்கம் வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டு மீசை வைத்திருப்பது போல இல்லை?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். நீங்க எழுதினதைப் படித்தபிறகு அங்கு சிங்கம் என் கண்ணுக்குத் தெரியவில்லை

      நீக்கு
  12. ​அந்த கண்ணாடி போட்ட சிங்கத் சிற்பத்துக்கு முன்னர் இருக்கும் இரண்டு புகைப்படங்களிலும் படத்தை மொத்தமாக பார்க்கும்போது ஒரு ரிஷி கைகளை விரித்து அமர்ந்திருப்பது போல இல்லை?

    பதிலளிநீக்கு
  13. நீண்டநாட்களின் பின் திரந்திருக்கிறேன் சண்டே.. ஹையோ இது வேற சண்டே போஸ்ட்டை:).. புத்தகம் அச்சிடலாம் போல இருக்கே வரலாறு பார்க்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிசய அதிரடி அதிரா. நீங்க பொன்னியின் செல்வன் நாவல் படிச்சிட்டீங்களா? அந்த வரலாறும் வரும்

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. வரலாறு வரட்டும் முத்ஹல்ல:))).. நான் மறந்தாலும் விடமாட்டார்போல:))

      நீக்கு
    3. அதிரா... இலங்கை அதனுடனான தமிழ் உறவு, பாண்டிய அரசுக்கும் ஈழத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பு போன்ற வரலாற்றுச் செய்திகளைப் படிக்கும்போது உங்களையும் நினைத்துக்கொள்வேன். பொலனருவாதான் பலகாலம் தலைநகரமாக இருந்தது

      நீக்கு
  14. கோயில் பழசென்றாலும் பளிச்சென இருக்குது அழகாக. சிற்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கு, கோயில் ஏரியா சூப்பராக மெயிண்டைன் பண்ணுகிறார்கள்.

    அந்த கர்ப்பக்கிரகத்து அபிசேக நீர் வெளியேறும் பாதைக்கு சிங்க முகம்[சரிதானே] அமைத்திருப்பது... புதுமையாக இருக்குது, முதல் தடவையாக இப்படிப் பார்க்கிறேன்.
    ஊரில கோயிலைச் சுற்றிவரும்போது, இந்தப் பாதையில் வடியும் தீர்த்தம் எடுத்து தலையிலும் நாக்கிலும் பூசுவதுண்டு... ஆனா இப்போ பல கோயில்களிலும் காய்ஞ்சுபோய், தண்ணீர்கூட வடியாமல் இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருவறையில் அபிஷேகம் நடக்கும்போது நீரைத் தலையில் தெளித்துக்கொள்ளலாம். இல்லைனா சுத்தமா இருக்காது

      இதற்கு பதிலளிக்கும்போது மேகாலயா மாநிலம் ஷில்லாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ் ஷிலோங் போறீங்களோ? அங்கு என்ன இருக்குது?.. மலைகள் நிறைந்த குளிர்ப்பிரதேசம் என அறிஞ்சிருக்கிறேன்.. ஹனிமூனுக்குத்தான் போவார்களாமே அங்கு:))) ஹா ஹா ஹா சரி சரி ஏதோ இப்பத்தான் ஹனிமூன் போறவர்போல நினைப்பில் இருக்காமல்... நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டு வாங்கோ:)))

      நீக்கு
    3. சின்னப் பையனிடம் ஹனிமூன் அது இது என்றால் என்ன புரியும்? சிமியோன் ரீச்சர்டதான் நான் கேட்கப் போகிறேன்.

      வாழ்நாள் அனுபவம் பனிச்சிகரங்களில் எனக்கு. விரைவில் படங்களுடன்

      நீக்கு
  15. சரித்திரம் அருமையாக போகிறது. பதிவு எழுத நிறைய படித்து இருக்கிறீர்கள்.

    தெய்வநாயகி அம்மன் கோயிலை தரிசனம் செய்து கொண்டேன்.

    அம்மன் படம் மிக அழகாய் இருக்கிறது.

    பல தடவை பார்த்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தை மீண்டும் நேரில் போய் தரிசனம் செய்ய முடியுமா தெரியவில்லை உங்கள் பதிவு மூலம் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்கிறேன்.

    இரண்டு வாரங்களாய் ஸ்ரீராமும் தாராசுரம் கோயில் படங்கள் போட்டு வருகிறார்.

    மேகாலயா பயணம் சிறப்பாக நடக்கட்டும்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். ஷில்லாங் வந்து சேர்ந்தாகிவிட்டது.

      ஸ்ரீராம் படங்கள் பகிர்வதும் நல்லதுதானே

      காலையில் காமாக்யா தரிசனம் கிடைத்தது

      நீக்கு
  16. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    தங்கள் வட நாட்டுப் பிரயாணம் நன்றாக இனிதாக உள்ளதா? செல்லும் ஒவ்வொரு ஊர்களையும் குறிப்பிடுகிறீர்கள். சிறப்பான பனிப் பொழிவு காட்சிகள், மற்றும் தெய்வ தரிசனங்கள் அனைத்தையும் கண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. அங்கெல்லாம் பனிப் பொழிவு உள்ளதென நினைக்கிறேன். பல மலைகளின் அழகை கண்டு ரசித்ததிருப்பீர்கள் என நம்புகிறேன்.

    இன்றைய பதிவு அருமை. சரித்திரம் குறித்த வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். சைவத்தை மட்டும் போற்றும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் வரலாறுதான் ஒரு கமல் படமாக வந்ததோ? ஒரு சந்தேகம் அதனால் கேட்கிறேன்.

    தெய்வநாயகி அம்மனை தரிசித்துக் கொண்டேன். அங்குள்ள சிற்பங்கள், அன்னைத்தும் அற்புதமாக இருக்கிறது. அபிஷேக நீர் வரும் மனித வாய் போன்ற அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. எல்லா கோவில்களிலும் மிருகத்தின் அமைப்பைதான் வைப்பார்கள். எல்லா சிற்பங்களை யும் ரசித்துப் பார்த்தேன். தூண்களில் அமைப்பை அழகாக கோணங்களில் எடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படங்களும் வித்தியாசமாக மிக அழகுடன் எடுத்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள். அடுத்து வரும் பகுதியையும் காண ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படிக்கும்போது கௌஹாத்தியிலிருந்து பெங்களூர் செல்லும் விமானத்தில் இருக்கிறேன்

      நீங்கள் எழுதியுள்ளது சரி கமலா ஹரிஹரன் மேடம். அதுதான் தசாவதாரம் படத்தின் ஆரம்பக் காட்சிகள். கல்ஃப் தேஞங்களில் திரையிட்டபோது அந்தப் பகுதியை நீக்கி விட்டார்கள்

      நீக்கு
    2. உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

      தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!