1.12.25

"திங்கக்கிழமை  :  ரசரவா உப்புமா   -  ஸ்ரீராம் 

முதல் முறை ரசத்தை வைத்து சோதித்ததால் இதற்கு ரசரவா என்றே தலைப்பிட்டு விடுகிறேன்.  ரசமான ரவா என்று எடுத்துக் கொள்ளுங்கள்!

ரசரவா உப்புமா செய்து சுவைத்ததும்,  எதையும் காரசாரமாக எதிர்பார்க்கும் என்  நாக்குக்கு அவ்வளவு மென்மையான சுவை திருப்தியைத் தரவில்லை.  சரி வெந்தயக்குழம்போ, வத்தக் குழம்போ வைக்கும் ஒரு நாளில் இருக்கு கச்சேரி என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வியாழனன்று மணத்தக்காளி வத்தக்குழம்பு வைக்கப்பட. அதுவும் தேவையான அளவு சரியாக மிஞ்ச..  அதை மறுநாள் காலை சோதனைக்கு எடுத்துக் கொண்டேன்.








அப்புறம் என்ன, ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்று இருப்பதில் இருக்கும் வத்தக்குழம்பைக் கொட்டி குறைவதற்கு தண்ணீர் சேர்த்துக் கொண்டோம்.  பாஸ் தான் செய்தார்.  ஒவ்வொன்றையும் போட்டோ எடுக்கும்போது அலுத்துக் கொண்டார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர் செய்த ஒரு புது டிஷ் விரைவில் அரங்கேறும் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!

நான் வெங்காயம் மட்டும் சேர்த்தேன்.  பெருங்காயமும்தான்.  சாப்பிடும்போது கேரட், பீன்ஸ் கூட  கூட சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது. முந்திரிப்பருப்பும் சேர்க்கலாம்.  உப்பு சேர்க்கும்போது கவனம் தேவை.  ஏற்கனவே குழம்பில் உப்பு இருக்கும்.  கொஞ்சம் புளியோதரை ஞாபகம் / வாசனை வரலாம்.  ஆனால் மகன்களும், மருமகளும் அப்படி வரவில்லை என்று சொன்னார்கள்.  

அடுப்பிலிருந்து இறக்கும்போது நான் நெய் இரண்டு ஸ்பூன் விட்டேன்.  தேங்காய் எண்ணெய் விட்டாலும் நன்றாய் இருக்கும்.

குடும்பக் குழுமத்தில் படத்தை மட்டும் பகிர்ந்து, 'இது என்ன என்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு ரூபாய் பரிசு' என்று சொல்லி இருந்தேன்.  ஓரளவுக்கு உடனே கண்டு பிடித்து விட்டார்கள் என்றாலும் சரியாக இன்னதுதான் என்று யூகிக்க முடியவில்லை.  அப்படி யூகிக்க முடியாது என்றுதான் படம் காண்பித்தேன்!  தொண்ணூறு சதவிகிதம் சரியாகச் சொல்லி மாமா பெண் ஒரு ரூபாய்க்கு தகுதியானார்.  இன்னும் அவர் தன் ஜி பே நம்பர் தரவில்லை என்பதால் பரிசு அவரை சென்றடையவில்லை!  அதேபோல எங்கள்பிளாக் குழுமத்திலும் அப்பாதுரை சரியான விடை கிட்டத்தட்ட சரியாகச் சொல்லி இருந்தார்.  கீதா ரெங்கன் கிட்டத்தட்ட விடைக்கு அருகில் வந்து விட்டாலும், யாராலும் வழிமுறையை யூகிக்க முடியவில்லை! அவனில் வைக்கவேண்டும் என்றெல்லாம் கீதா சொல்லி இருந்தார்.  எவனிலும் வைக்க வேணாம், அடுப்பில் வைத்தால் போதும்!  ஹிஹிஹி...

==============



முதலில் செய்த ரசரவா உப்புமா.   காத்திரமான நிறம், சுவை இல்லை என்பதால்தான் வத்தக்குழம்பு.  மென்மையான சுவையே போதும் என்று நினைப்பவர்கள் ரசம் வைத்தே செய்யலாம்!  ("இது வேற"
 என்கிறீர்களா?!)  அடுத்த தபா சாம்பாரை வைத்து செய்து பார்க்க வேண்டும்..   இருங்க..  இருங்க...  எங்க ஓடறீங்க...   




17 கருத்துகள்:

  1. சபாஷ்! ஆராய்ச்சி பலமாக இருக்கிறதே!
    ஐஐடி ப்ரொஃபெசர் ஒருவர் க்ரிஸ்ப்பி தோசைக்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்திருந்ததைப் பார்த்தீர்களா? https://economictimes.indiatimes.com/news/new-updates/iit-madras-professor-reveals-the-18th-century-german-phenomenon-behind-perfect-crispy-dosa/articleshow/125634463.cms?from=mdr
    பி.கு: அடுத்த வாரம் தயிர்ரவா உப்புமா ரெசிப்பி (மோர்கழி மாதிரி இருக்குமோ?) எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா... அது ஏற்கனவே போட்டாச்சே...!! நீங்க சொல்லும் க்ரிஸ்பி தோசை ஆராய்ச்சி பார்த்து விட்டேன்.. JKC Sir அனுப்பியிருந்தார்.

      நீக்கு
  2. இன்று ஒரு நாள் பயணம். காரில் படிக்க முடியலை. பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   grrrrr.... மொபைலில் வாசிக்கலாமே...   சரி...  அப்புறமாய் வாருங்கள். நல்லதொரு சுவையை தவற விடுகிறீர்கள்!!! ஹிஹிஹி...

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகள்.

      நீக்கு
  4. நாங்கள் ஒன்று சொல்லுவோம். கிழவிக்கு மேக்கப் போடுவதுபோல. ரவா உப்புமா சாப்பிடுவதற்கே ஆளைத் தேடணும். இதுல அலங்காரமா?

    செய்ய யோசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. முரட்டு சிங்கமாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  6. இப்போதெல்லாம் ரவா உப்புமா தான் ஒத்துக்
    கொள்கின்றது...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவாக வந்த தங்களின் ரசரவா, வத்தாதரவா உப்புமாக்கள் இரண்டுமே படங்களுடன் செய்முறை விளக்கமாக நன்றாக உள்ளது.

    புதுவித முயற்சிகளில்
    ரசமான ரசனைகள் பெருகட்டும்.
    ரவையை ஒதுக்குபவர்களின்
    ரசனையில்லா கற்பனை
    நினைப்பெல்லாம் நீங்கட்டும்.
    அவலை வைத்து காரம் இனிப்பென
    அமிர்தமாக செய்யும் போது
    ரவைக்கு மட்டும் இதுவரை
    இள(ங்)க்காரமா? இனி
    இக்காரங்களின் வித்தியாசமான
    சுவையுடன் நாங்களும் துப்பாக்கி
    ரவையென சீறிப்பாய்ந்து
    வந்திடுவோம். சுவையில் ஒரு
    குறைவில்லையென
    வரவேற்பீர்கள் எனவும்
    நம்புகிறோம்.

    மாறுபட்ட அசத்தலான சுவைகளுடன் வந்த திங்கப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ரவா உப்புமா சாப்பிடுவதற்கே ஆளைத் தேடணும்.

    இது சிறப்பு...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் ரவைக்கு வ(வைத்த) ந்த சோதனைகளில் வென்று விட்டீர்கள். மழைகால காரசாரமானபுது முயற்சிகள் நன்றாக உள்ளது.

    முதல் ரசரவா படம் மைசூர்பாகு போல உப்புமாவை கட் செய்து பார்க்கவே நன்றாக உள்ளது. வித்தியாசமாக செய்து உள்ளீர்கள். இரண்டாவது ரசரவா வுக்கு வழக்கம் போல மி. பொடியா? தேங்காய் சட்னி நன்றாக இருந்திருக்கும்.

    நேற்று எங்கள் வீட்டில் காலை டிபன் வெங்காயம் நிறையபோட்டுரவா ரவா உப்புமா, தொட்டுகையாக தேங்காய் சட்னி வீட்டுக்கு வந்தவர்களுக்கும், எங்களுக்கும் டிபன் கொஞ்சம் பற்றாகுறையாக போய் விட்டது. அந்த அளவுக்கு "நான்" என ரவை பெருமிதபட்டுக் கொண்டது.

    /இது என்ன என்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு ரூபாய் பரிசு' என்று சொல்லி இருந்தேன். /

    பரிசு தொகை கொஞ்சம் அதிகமோ.?:))

    /மாமா பெண் ஒரு ரூபாய்க்கு தகுதியானார். இன்னும் அவர் தன் ஜி பே நம்பர் தரவில்லை என்பதால் பரிசு அவரை சென்றடையவில்லை! /

    அடாடா..! எவ்வளவு பெரிய தொகை இழப்பு அவருக்கு.. நிச்சயம் வருந்திருப்பார். ஹா ஹா ஹா.

    படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நன்றாக உள்ளது. நானும் இதுபோல் செய்ய முயற்சிக்கிறேன். ரவை பிரியவளான என் நன்றி உங்களுக்கு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ///வித்தியாசமான சுவையுடன்
    நாங்களும் துப்பாக்கி
    ரவையென சீறிப்பாய்ந்து
    வந்திடுவோம்.///

    ஆனாலும் நெறஞ்ச பொறுமைசாலி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு இந்தப்பாராட்டு. ரவைக்கா, ரவைக்கு அடிமையான எங்களுக்கா? . நன்றி சகோதரரே.

      நீக்கு
  11. ரவா உப்புமா செய்து, அதற்கு குழம்பையோ,ரசத்தையோ தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு அல்லது ரசத்திலேயே உப்புமாவை கிண்டி விடுவதா..? நல்ல ஐடியா. விளக்கம் தராமல் படங்கள் மூலமே விளங்கிக்கொள்ளச் சொல்வது வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  12. கௌதம் ஜி... பல்லாண்டு நலமுடன் வாழ்க..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!