சனி, 10 ஏப்ரல், 2010

கண்மணியே காய்கறி என்பது ...

தஞ்சையில் இருந்த காலங்களில் (எந்த ஊராய் இருந்தால் என்ன) காலை நேரங்களில் ஒரு கீரைக் காரப் பெண்மணியோ, அல்லது ஒரு பெரிய கூடையைச் சுமந்த ஒருவரோ (ஒரு கையுடன் ஒருவர் வருவார் அப்போது) காய்கறி விற்க வருவார். கிட்டத் தட்ட வாடிக்கை சப்ளையர் போலதான். கூப்பிடாமலேயே வாசல் வந்து கூடை இறக்குவார் ("ஒரு கை பிடிங்க தம்பி..") நல்ல பச் பச் என்று பசுமை மிளிரும் காய்கறிகள் கூடையில் நிறைந்திருக்கும். விலையும் சல்லிசாய் இருக்கும். அதே விற்பனையாளர் வாரத்தில் இரண்டு நாள் கருவாடு விற்று வருவதைப் பார்த்த பிறகு அவரிடம் காய்கறி வாங்க மறுத்து விட்டார் அம்மா..! அதே கூடைதானே என்றார்.


சில சமயங்களில் ஈவினிங் பஜார் பக்கம் போனால் அங்கு அப்போதுதான் பறித்து வரப் பட்ட பிஞ்சு கத்தரிக்காய் முதல் (தஞ்சாவூர் கம்மாக் கத்தரிக்காய் போல அப்புறம் எங்கேயும் நான் பார்த்தது இல்லை) முருங்கை, புடலை வரை கண்ணைக் கவரும்.





பின்னர் ஒரு மாற்றமாக தள்ளுவண்டியில் காய்கள் நிறைய வைத்து விற்பனை செய்து வருவார்கள். அதுவும் வீடுகள் நிறைய இருக்கும் வீட்டு வசதிக் குடியிருப்பில் இரண்டிரண்டு ப்ளாக்காக கவர் செய்து வண்டி வரும் நேரம் இல்லத்தரசிகள் காத்து நிற்பார்கள். இவர்கள் எல்லாம் வாடிக்கை ஆட்கள் என்னென்ன வாங்குவார்கள் என்று அத்துபடி. மலையாள வீட்டம்மா, ஐயர் வூட்டம்மா, பாப்பாம்மா, ரமேஷ் அம்மா, என்று பெயர் வைத்து அழைத்து அவர்கள் விரும்பும் வகைகளை உள்ளிருந்து அவர்களுக்கென்று 'ஸ்பெஷலாக' எடுத்துத் தரும் லாவகம் மற்றும் வியாபார தந்திரம். ஆனாலும் கள்ளம் இருக்காது இந்த வியாபாரங்களில். வியாபாரம் முடிந்ததும் ரொம்ப பிடித்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிடி பீன்ஸ், அல்லது கொத்தவரங்காய், அல்லது பச்சை மிளகாய் என்று அள்ளித தருவார்கள்.

இப்போதும் காய்கறிகள் வாங்கச் செல்கிறோம். ரிலையன்ஸ், பழமுதிர்சோலை, மோர் என்று பலப்பல பெயர்களில் குளிரூட்டப் பட்ட நவநாகரீகக் கடைகள்... பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப் பட்ட பள பள காய்கள்..ஆனால்...ஆனால்.. குளிரூட்டுதலுக்கும், நீண்ட அந்த கட்டிடங்களுக்கும் சேர்த்தே காசு கொடுக்கிறோம். முன்னர் புதிதாய் பறிக்கப் பட்டு அருகிலேயே விலைக்கு விற்கப் பட்ட காய்கறிகளின் பசுமையையும் காணோம், விலையையும் காணோம்.

இப்போதெல்லாம் இது மாதிரி வெளியூர்களிலிருந்து கொண்டு வராமல், பறித்த இடத்துக்குப் பக்கத்திலேயே வைத்து விற்பவர்கள் கூட இந்த மாதிரிக் கடைகளில் என்ன விலை விற்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு சற்றேறக்குறைய அந்த விலைக்கே தமது பொருட்களையும் விற்கிறார்கள்.

டிசம்பர் ஜனவரி வருகிறதா மாகாளி , ஃபிப்ரவரி மாதம் வந்து விட்டதா தஞ்சாவூர்க் குடைமிளகாய், மார்ச் ஏப்ரல் வந்து விட்டதா மாவடு என்று வாங்க ஆசை வரும். காய்கறி வாங்குவது தனிக் கலை. ஏதோ ஒரு படத்தில் விஜய் சொன்னதைப் போல, முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்தும், வெண்டைக்காயை முனையில் ஒடித்தும், கத்தரிக்காய் பாவாடை எனப்படும் காம்பின் கனத்தை வைத்தும், என்று பார்த்து பார்த்து வாங்கும் திறமையே அலாதி. இந்த மாதிரி காய்கறிகளை உடைத்தும் வளைத்தும் சோதிப்பது வியாபாரிக்குத் தெரியாமல் செய்வது நம் சாமர்த்தியம். இல்லா விட்டால் காய்கறிகள் நம்மிடமிருந்து பிடுங்கப் பட்டு, அதனதன் இடத்தில் மீண்டும் போடப் படும்..(போம்மா...நீ ஒண்ணும் வாங்க வேணாம்..)

ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விலை விற்கப்படும் விளைபொருட்கள் நம்மை வியப்புற வைக்கும்.


உதாரணமாக சமீபத்தில் பெத்தநாயக்கன்பாளையம் சென்றபோது அங்கு மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் குடித்த இளநீர், விழுப்புரத்தில் இருபது என்று விற்கப் பட்டது. 


வழக்கம்போல ஒரு ஜோக்குடன் கட்டுரையை முடிப்போம். அச்சரப்பாக்கத்திற்கு ஒரு வேலையாகச் செல்கிறார் அந்த வெளிநாட்டவர். அங்கே தெருவோரத்தில் ஒருவர் இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறார். அருகே சென்ற வெளிநாட்டவர், அந்த இளநீர் வியாபாரியிடம், 'என்ன விலை?' என்று விசாரிக்கிறார். இளநீர் வியாபாரி, 'ஒன்று நூறு ரூபாய்' என்கிறார். ஆச்சரியப்பட்டுப் போன வெளிநாட்டவர் "ஏன் இவ்வளவு விலை? இந்தப் பகுதியில் தென்னை மரங்களே கிடையாதா? இளநீர், தேங்காய் எல்லாம் ரொம்ப அபூர்வமா?" என்று கேட்கிறார்.


இளநீர் வியாபாரி சொல்கிறார், "தென்னைமரம் இளநீர் எல்லாம் நிறைய இருக்கிறது. ஆனால் வெளிநாட்டவர்கள்தான் ரொம்ப அபூர்வம்."  

13 கருத்துகள்:

  1. ஆங், இன்னும் போணியே ஆகலை. அதுக்குள்ளே உன் பீச்சான் கையே கொண்டு வந்து போட்டுட்டியே ! இப்போ மட்டும் நீ ஒரு வேலை கேட்டு வாங்காமப் போனே ..... என்பதெல்லாம் அப்பொழுதும் உண்டா ?

    பதிலளிநீக்கு
  2. அட தமிழர்கள் இவ்வள்அவு சாமர்த்தியமான வியாபாரிகளா ...ராம்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் சிறப்பான பதிவு .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  4. இந்த படங்களை பார்க்கும்போதே கண்ணுக்கு
    குளிர்ச்சியாய் இருக்கு!!!

    பதிலளிநீக்கு
  5. மிண்ட் ஸ்ட்ரீட் முனையில் இப்போதும் பச்சைப் பசேல் கீரை, தளதளவென பச்சைக்காய்கள் மதியம் ஒரு மணி முதல் கிடைக்கும். :)

    பதிலளிநீக்கு
  6. >>மலையாள வீட்டம்மா, ஐயர் வூட்டம்மா, பாப்பாம்மா, ரமேஷ் அம்மா, என்று பெயர் வைத்து அழைத்து அவர்கள் விரும்பும் வகைகளை உள்ளிருந்து அவர்களுக்கென்று 'ஸ்பெஷலாக' எடுத்துத் தரும் லாவகம்

    vintage customer relationship management

    பதிலளிநீக்கு
  7. நீண்ட அந்த கட்டிடங்களுக்கும் சேர்த்தே காசு கொடுக்கிறோம். முன்னர் புதிதாய் பறிக்கப் பட்டு அருகிலேயே விலைக்கு விற்கப் பட்ட காய்கறிகளின் பசுமையையும் காணோம், விலையையும் காணோம்.



    எவ்வளவு சம்பாதிச்சாலும் ஏன் பத்த மாட்டேங்குது. இது தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  8. பிஞ்சு கத்திரிக்கா... பச் பச் காய்கறிகள்.... மாவடு... இளநீர்... ஹும்.... பெருமூச்சு தான் மிச்சம். அதோட கூடைல கொண்டு வர்றவங்க கிட்ட எங்க பாட்டி பேரம் பேசி வாங்கற அழகும் ஞாபகம் வந்துடுச்சு. கடைசீல சொன்னா வெளிநாட்டுகாரர் ஜோக் சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. நல்லா ப்ரெஷ்ஷா இருக்கு:)

    பதிலளிநீக்கு
  10. //மலையாள வீட்டம்மா, ஐயர் வூட்டம்மா, பாப்பாம்மா, ரமேஷ் அம்மா, என்று பெயர் வைத்து அழைத்து அவர்கள் விரும்பும் வகைகளை உள்ளிருந்து அவர்களுக்கென்று 'ஸ்பெஷலாக' எடுத்துத் தரும் லாவகம்//

    பெங்களூரில் 1986 (இந்தியாவின் சிலிகான் valley என்று உருப்படாமல் போவதற்கு முன்) நாங்கள் இருந்த மாருதி சேவா நாகர், லிங்கராஜபுரம் என்ற இடத்தில் இருந்தபோது - ஒரு வயசான பொம்பளை ஒரு கூடை நிறைய பச்சை காய்கறிகளை கொண்டுவருவாள். உங்கள் படத்தை போல் அழகாக இல்லாவிட்டாலும் அவளின் இந்த கஸ்டமர் relationship திறமைக்கு வாங்குவோம். எங்கள் வீட்டில் உள்ள எங்கள் ஐந்து பேரையும் தெரியும். எங்கள் வீட்டில் தண்ணி குடிப்பாள். அதற்கு மேல் ஒரு நாளும் சாப்பாடு போட்டாலும் சாப்பிடமாட்டாள்.

    பதிலளிநீக்கு
  11. catchy title! சுவாரசியமான பதிவு.
    இதை படிச்சபோது எங்க ஊரு மார்கெட் பேர்தான் ஞாபகம் வந்துது. 'காரணீஸ்வரர் மீன் மார்கெட்', 'அப்துல் சாஹிப்
    காய்கறி மார்க்கெட்'. இப்ப நினைச்சாலும் வேடிக்கையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு..
    இப்படி கலர் கலரா காய்கறி காமிச்சு, எனக்கு இப்ப பசிக்க ஆரம்பிச்சிருச்சு.. :)

    பதிலளிநீக்கு
  13. கண்மணியே...
    காய்கறி என்பதாகட்டும்,

    அக்கா வந்தாளாகட்டும்..

    முதலில் தலைப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு, அப்புறம் மேட்டரா,

    இல்லை, மேட்டரை எழுதிய பிறகு, அப்புறம் தலைப்பா--

    என்ன செய்கிறீர்கள் என்று தீர்மானிக்க முடியாமல், அவ்வளவு கச்சிதமாக பெயர் சூட்டல்கள் பொருந்தி விடுகின்றன..

    Congrates to ALL எங்கள்!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!