வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக புத்தக தினம்.

                                        

உலக புத்தக தினமாகிய இன்று,
உங்களைப் 'பெரிதும் கவர்ந்த புத்தகம் எது' என்றும், அந்தப் 'புத்தகத்தின் ஆசிரியர் யார்' என்றும் விவரங்களை  பின்னூட்டமாகப் பதியுங்கள்.

நிபந்தனைகள்:
# நீங்க ஒரு தடவையாவது அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்திருக்க வேண்டும்.

# ஒருவரே எவ்வளவு புத்தகங்கள் பற்றி வேண்டுமானாலும் பதியலாம்.  

இந்தப் பதிவின் நோக்கம் : 'எங்கள்' வாசகர்களின் ஆர்வம் எந்த வகைகளில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதுதான். மேலும் நாங்க + மற்ற வாசகர்கள் எந்தப் புத்தகம் அல்லது புத்தகங்கள் வாங்கலாம் என்பதற்கு ஒரு வழிகாட்டியாகவும் இது அமையலாம்.   

20 கருத்துகள்:

  1. "வீரம் விளைந்தது" நிக்கலய் ஒஸ்திரவொஸ்கியின் நூல், ரஷ்ய புரட்சியின் போதான செம்படையின் பயணத்தை பற்றிய நாவல். நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸின் தமிழாக்கம் வாசித்தேன். பல முறை வாசித்த நூல். இந்த நாவலை பலருடைய பிறந்த தினங்களில் வாங்கி பரிசளித்திருக்கின்றேன். நான் ஒரு புத்தக காதலன் என்றபடியால் வாசித்த பல புத்தகங்கள், பிடித்த புத்தகங்களாக இருந்த போதிலும், ஆரம்பமாக ஒன்றை பகிர்ந்து கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. செ.பொ. கோபிநாத் - நன்றி.
    ரொம்ப சுறு சுறு - பாராட்டுகள்.
    மேலும் புத்தகங்கள் விவரங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எங்கே பிராமணன்?- சோ அவர்கள் எழுதியது. என் நண்பர்கள், சுற்றத்தினர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது.
    பிசினஸ் வெற்றி கதைகள்-S.P. அண்ணாமலை அவர்கள் எழுதியது.
    --கீதா

    பதிலளிநீக்கு
  4. சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி - கல்கி
    மோகமுள் - ஜானகிராமன்

    பதிலளிநீக்கு
  5. கௌதமன் சார்,

    UK மற்றும் அயர்லாந்து நாடுகளில் உலகப் புத்தக தினம் என்பது மார்ச் மாதம் நான்காம் தேதி கொண்டாடப் படுவது!

    யுகே, அயர்லாந்து நீங்கலாகமற்ற நாடுகளில் இன்றைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப் படுவது உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்!

    இது ஐநா சபையால் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கொண்டாடப் படுகிறது! நம்மூர்ப் பதிவர்கள் கவனத்திற்கு இந்த ஆண்டு தான் வந்திருக்கிறது.

    இது புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனை செய்பவர்கள் மற்றும் தொடர்புடையவர்களால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டாடும், பரவலாக்கச் செய்யும் முயற்சியாக ஆரம்பிக்கப் பட்டு இன்றளவும் நடந்து வருகிறது.

    இதன் முக்கியமான அம்சமே, குழந்தைகளைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகச் செய்வது தான்! குறைந்த விலையில், குழந்தைகளைக் கவரும் விதத்தில் புத்தகங்களை அறிமுகம் செய்கிற ஒரு இயக்கமாகவும் அங்கே நடத்தப் படுகிறது.

    யுனெஸ்கோ புத்தகம், காப்புரிமை மீறல் தொடர்பாக ஒரு இயக்கமாகவே இந்த தினத்தை நடத்தி வருகிறது.

    http://portal.unesco.org/culture/en/ev.php-URL_ID=39055&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html

    இங்கே, குழந்தைகளுக்காக, எளிமையான மொழி, உரைநடையில், சுவாரசியமாக எழுதுபவர்களுக்கும் பஞ்சம்!

    விலை விஷயமும் இங்கே படு கொள்ளை தான்!

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. நான் மிகவும் விரும்பிப் படிக்கும் கதைப்புத்தகம், மகாபாரதம். ஈடு இணையில்லாத புத்தகம். நெம்பர் 1.

    நான் விரும்பிப் படிக்கும் இன்னொரு கதைப் புத்தகம்: டூமசின் கவுன்ட் ஆப் மான்டி க்ரிஸ்டோ. இந்தப் புத்தகத்துக்கும் இணையில்லை என்பேன்.

    நான் அடிக்கடி படிக்கும் இன்னொரு புத்தகம்: ரொபர்ட் ரூல்ஸ். பொதுவில் எப்படிப் பழகுவெதன்பதற்கான விதிகள்/முறைகளை அரச/நாடாளுமன்ற முறைகளை வைத்து விளக்கும் புத்தகம்.

    மற்றப் புத்தகங்களை ஆசிரியருக்காக வாங்கிப் படிப்பேன். சுஜாதா பிடிக்கும் (85க்கு முற்பட்ட எழுத்து - அதற்குப் பிறகு சகிக்கவில்லை என்பது என் கருத்து). பி.ஜி.ஓடவுஸ் பிடிக்கும் (உலக மகா எழுத்தாளர் என்றால் இவர் தான் என்பது என் கருத்து). ஐசக் அசிமவ் பிடிக்கும் (அவருடைய ப்ளேக் விடோயர்ஸ் புத்தகங்கள் அருமை). புதுமைப்பித்தன் பிடிக்கும். ஸ்கொட் பிட்ஸ்ஜெரல்ட் பிடிக்கும். கார்ல் சேகன் பிடிக்கும் (கடவுள் இருக்கிறாரா? இவர் எழுத்தைப் படியுங்கள்.) ரவீந்த்ரனாத் தாகோர் பிடிக்கும். சத்யஜித்ரே படிப்பேன். (இவருடைய சங்கர்லால் பாணி துப்பறியும் கதைகள் சுவை). பாரதியார் கவிதைகள் கட்டுரைகள் பிடிக்கும்.

    ஹைகூ கவிதைப் புத்தகங்கள் பிடிக்கும். அசல் ஜப்பானிய கவிதை மொழிபெயர்ப்புகள் இன்னும் சுகம்.

    வீட்டு நூலகங்களில் அவசியமிருக்க வேண்டிய சில புத்தகங்கள்:
    - தி வைகிங் புக் ஆப் போய்ட்ரி ஆப் தி இங்லிஷ் ஸ்பீகிங் வொர்ல்ட் (பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து நடு இருபதாம் நூற்றாண்டு வரையிலான தொகுப்பு - ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள். சில இந்தி தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் மகிமையில் வெளிச்சம்)
    - அத்யாத்ம ராமாயணம் (முழுமையான ராமாயணக் கதை - உத்தர காண்டம் இடைச்செருகல் என்று பலர் சொன்னாலும் சுவையான கற்பனை. ராம லட்சுமணர்கள் இறந்த கதையைத் தெரிந்து கொள்ளலாம்)
    - தமிழ் விரும்பிகளுக்கு: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இணையில்லாத புத்தகம். வர்த்தமானன் பதிப்பகம் பத்து தொகுதிகளில் வெளியிட்டிருக்கிறார்கள். எப்போதாவது எடுத்துப் படித்தால் கூட இதமாக இருக்கும்.
    - ஒன் ஹன்ட் ரெட் லிடில் விச் ஸ்டோரிஸ் (மதிய வேளையில் தூங்கப் பிடிக்காமல் டிவி பார்க்கப் பிடிக்காமல் வெளியே தலைகாட்டப் பிடிக்காமல் இருக்கும் நேரங்களில் தனியாக அமர்ந்து ஒரு தட்டில் சீடை முறுக்குடன் அனுபவிக்க வேண்டிய ஸ்டெபான் ட்ழிஎமியனௌய்க்ழ் இன் தொகுப்பு) ட்ழிஎமியனௌய்க்ழ் = dziemianowicz. சும்மா எழுதிப் பார்த்தேன், google indic transliteratorல் என்ன தான் வருகிறது பார்ப்போமே என்று.

    சமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த இரண்டு புத்தகங்கள்: மறைமலையடிகளின் 'சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் கருத்தாய்வும்'. மொழிபெயர்ப்பை விடுங்கள், தெரிந்த கதை தான். கருத்தாய்வைப் படித்தால் மறைமலையடிகளின் தமிழார்வம் (பிற மொழி மற்றும் பார்ப்பனர் வெறுப்பு) புரியும். கம்பனைக் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார். கம்பனைச் சும்பன் என்ற ஒரே தமிழர் இவராகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகம்: முத்துக் குளியல். கலைஞர் கருணாநிதி 1969 வருடத்திலிருந்து ஆற்றிய உரைத் தொகுப்பு. முதல் பாகம் முத்து. இரண்டாம் பாகம் வெத்து.

    புத்தகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. நிபந்தனையைச் சரியாகக் கவனிக்கவில்லை. திவ்வியப்பிரபந்தத்தை முழுமையாகப் படிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை அவர்களின் பின்னூட்டம் பார்த்து அவர் மேல் உள்ள மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது. அவர் படிப்பின் ஆழம் அகலம் அபாரம். பொறாமை பிறக்கிற அளவு ஆச்சரியமான தேர்வு. என் பாராட்டுகளை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. எனக்குப் பிடித்த புத்தகம் என்று ஒரு பட்டியல் தர முற்பட்டால், மிக நீளமானதாக இருக்கும். எனினும் தி. ஜானகிராமன், சுஜாதா, வண்ண நிலவன் படைப்புகள். ரகு நாதன் கதைகள் என்று எந்தக் காலத்திலோ சக்தி பிரசுரம், பெர்னார்டு ஷாவின் கிட்டத் தட்ட அனைத்து நாடகங்கள், சாமர்செட் மாம் நாவல்கள் நாடகங்கள், கதைகள், பெர்ரி மேஸன் மர்மக் கதைகள், ஜி.கே. செஸ்டர்டன் கதைகள், ஹென்றி செசில் எழுதிய கோர்ட் ரூம் நகைச் சுவை நாவல்கள், இன்னும் பல.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், தமிழில் தி.ஜா வின் அன்பே ஆரமுதே, பெட்டி ஸ்மித் என்பவர் எழுதிய ‘எ ட்ரீ க்ரோஸ் இன் ப்ரூக்லின் ‘ என்ற நவீனம், ஷாவின் ‘ மேன் அண்ட் சூபர்மேன் ‘. கடைசியாகக் குறிப்பிட்டுள்ளதை இதுகாறும் படிக்காதவர்கள் படிக்க பலமாக சிபாரிசு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் உள்ள அன்பின் ஆழம் திகைக்க வைப்பது. அவ்வாறே திருப்புகழ் சந்தம், திருமந்திர சொல்லாட்சி. காளமேகம் நகைச் சுவை தமிழ்ப் பாடல்/செய்யுள்களில் உள்ள நயம். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு மிகப் பெரும் புதையல் இருக்கிறது. அனுபவிப்பவர்கள் தாம் நாளுக்கு நாள் அருகி வருகின்றனர்.

    பதிலளிநீக்கு
  12. கனிமொழிக்கு நன்றி, ராமன். வயதும் பொழுதும் இருந்தால் (அதாவது, வேலை வெட்டி இல்லையென்றால்) புத்தகம் படிக்க ஆர்வம் ஏற்படும் என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், புத்தகம் படிப்பது can be exhausting. முழு நீள நகைச்சுவை நாவலானாலும் சரி இலக்கியமானாலும் சரி (அதிலும் தமிழ் இலக்கியங்கள்) பல தூங்க வைக்கக்கூடியவை என்பதில் உண்மை இருக்கிறது. புத்தகங்களைப் படித்து ரசிக்க நேரமும் பொறுமையும் வேண்டும். வாங்கிப் படித்த புத்தகங்களை விட வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அதிகம்.

    அண்ணாதுரை, அவர் இருந்த நாளைய சென்னை கன்னிமரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் (!) படித்தவர் என்று சொல்லப்படுகிறவர். அண்ணா ஒரு முறை சொன்னதாகச் சொல்லப்படுவது: "ஒரே நேரத்தில் பல புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவேன், தினம் கொஞ்சமாகப் படித்தாலும் சலிப்பும் வராது சுவையும் கூடும்." i think i have embraced it subliminally.

    அறிவு வளர்வது எல்லாம் இருக்கட்டும் (புத்தகம் படித்துத் தான் வளர வேண்டும் என்பதில்லை), பரவலான சிந்தனையைத் தூண்டுவது எழுத்து (புத்தகம்) மட்டும் தான் என்பது என் கருத்து. அதற்காகவாவது படிக்க வேண்டும். தி.நகர் ரவிராஜ் லென்டிங் லைப்ரெரிக்காரர் புலம்புவது போல 'புத்தகம் படிப்பது குறைந்து விட்டது' என்று நினைக்கிறேன். இன்றைய வளர்ச்சி வேகத்தில் புத்தகம் படிப்பது அத்தனை ஏற்புடையதாகத் தெரியக் காரணமில்லை தான். it is a phase, however. மற்ற நாடுகளில் படிக்கும் ஆர்வம் திரும்பியது போல் சென்னையிலும் திரும்பும். தமிழ்ப்புத்தகங்களின் ஆழத்தைப் புரிந்து கொள்ள எனக்கும் முப்பத்தைந்து வயதுக்கு மேலானது. கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் என்னுடைய இருபதுகளில் நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். it catches up. ராமன் கோதாவரி நதியைப் பார்த்ததும் அதன் பிரம்மாண்டத்தை 'சான்றோர் உள்ளம்' போல் நினைத்தான் என்ற கம்பன் கற்பனையைப் பின்வயதில் 'அட!' போட்டு ரசிக்கத் தோன்றியது.

    நான் சொல்ல மறந்த இன்னொரு புத்தகம்: சிவபுராணம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சுவையாக இருக்கும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தப் புத்தகம் இன்னும் சுவையாக இருக்கும். 'எல்லாம் அவன் செயல்' என்கிற சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சிவபுராணத்தைப் படிக்க வேண்டும். hint: எல்லாம் 'அவன்' செயலுக்கும் கடவுளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. நம்முடைய எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் என்ன காரணம், என்ன உந்துதல், என்ன ஆதாரம்? இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் அடுத்தவர்களின் உந்துதலைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? இதைச் சிவபுராணம் எடுத்துச் சொல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? எத்தனையோ மடத்தனமான இடைச்செருகல் கதைகள் இருந்தாலும் (உ: முருகன் பிறந்த கதை எழுதப்பட்டிருக்கும் விதம் பெண் சமூகத்துக்கே அவமானம்), இவற்றில் இழைந்திருக்கும் மனிதநேய அறிவு (அதான் ஆத்மா என்று சொல்கிறார்களே... ஹிஹி.. ஆத்மா அழியாது என்று சொல்பவர்கள் மண்டையில் இந்தப் புத்தகத்தால் நாலு சாத்து சாத்த வேண்டும்) கொந்தளிக்கும் மனதை கட்டுப்படுத்தும் என்பேன். சுய அனுபவம். சிவபுராணம் (3-4 பாகங்கள், பதிப்பகத்தைப் பொருத்து) வீட்டு நூலகங்களில் இருக்க வேண்டிய புத்தகம்.

    முன் சொன்னது போல், இந்தப் புத்தகங்களையெல்லாம் என் பின்வயதில் படிக்கத் தொடங்கினேன். இந்தப் புத்தகங்களின் சாரத்தை ஏன் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் அடிக்கடி வரும். புராணம் சாமி பாவம் புண்ணியம் என்ற பாவ்லாக்களை ஒழித்து அடிப்படைக் கருத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தால் நம் சமுதாயம் வேறு விதமாக இருக்குமே என்ற எண்ணத்தை ஒடுக்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், நான் உருப்பட்டிருப்பேனே என்ற சுய நல எண்ணம் தோன்றியிருக்கிறது.

    சிந்தனையைத் தூண்டிய பதிவு. நன்றி எ.பி.

    பதிலளிநீக்கு
  13. என்னவோ தெரியவில்லை - தி.ஜானகிராமன் எழுத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. கல்கியையும் என்னால் பத்து பக்கங்களுக்கு மேல் படித்து ரசிக்க முடியவில்லை.

    அசோகமித்திரன் புத்தகங்கள் சில பிடிக்கும். பெயர் மறந்து விட்டது, இரண்டு சகோதரிகள் - ஏமாற்றப்பட்ட ஒரு சகோதரி - பற்றி அவர் எழுதிய நாவல் ஒன்று என்னை மிகவும் பாதித்திருக்கிறது.

    சுப்ரமண்ய ராஜூவின் எழுத்து வீச்சு பிடிக்கும். அவர் எழுதிய 'இன்னொரு கனவு....' தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு மைல்கல். இந்தக்கதையை உல்டா பண்ணி சுஜாதா ஒரு பிரபல கதை எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன். சுஜாதாவானதால் ஒருவரும் தட்டிக் கேட்கவில்லை. சுஜாதாவின் நிழலில் வளராமல் போன செடிகளுள் ஒன்று சு.ரா.

    'எங்கே பிராமணன்' படித்தேன். சகிக்கவில்லை. சோ எழுதிய 'ராமாயணம்' அருமையான புத்தகம் என்று நினைக்கிறேன். வால்மீகி, கம்பன், துளசி ராமாயணங்களின் கருத்துக்களை இணைத்து அவர் எழுதியிருப்பது தனிப்பட்ட மெருகு. சோவுக்கே உரித்தான நையாண்டியுடன் 'ராம' ராஜ்ஜியங்களை அலசியிருப்பது சுவை. 'ராமாயண கால' ஜோசியம் ஒன்றை புத்தகத்தில் சேர்த்திருக்கிறார். ஜோசியத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்கும் நல்ல விளையாட்டு/புதிர்.

    தேவன் புத்தகங்கள் சில வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டும். பெரி மேசன் கதைகள் சுவாரசியம், ராமன். ஹேட்லி சேஸ் கதைகளும் சுவை - இவையெல்லாம் கிடைக்கிறதா தெரியவில்லை.

    அவசியம் சேர்க்க வேண்டிய இன்னும் சில புத்தகங்கள்: முத்து காமிக்சின் தொடக்க நாள் வெளியீடுகள்.

    பதிலளிநீக்கு
  14. ஜெயகாந்தன் மறந்தே போச்சு. இவருடைய புத்தகங்கள் சில சேர்த்து வைத்திருந்தேன், எல்லாம் காகா ஊஷ் ஆகிவிட்டது, ஹ்ம்ம்ம்.

    பதிலளிநீக்கு
  15. புஷ்பா தங்கதுரையின் 'ஊதாப்பு' கதையை புத்தகமாகவோ சினிமாவாகவோ தேடு தேடு என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஏதோ படித்த அறிவாளிகள் பேசிக்கொள்ளுக்கின்றீர்கள். நான் அப்பாலிக்க வரேன்.

    எனக்கு பதிலாக துரை நிறைய படிக்க வைக்கும்படி கடவுளை வேண்டிக்கொண்டது எவ்வளவு நல்லதாக போயிற்று ?

    நான் உடனே தூக்கம் வர நம்பும் ஒரே தூக்க மருந்து புத்தகங்கள். ஒன்று இரண்டு வரியில் கதை இருந்தால் நான் படிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பக்கம் படித்து மறுபக்கம் போகுமுன் மறந்து விடும் எனக்கு. அதனால் தான், நாம் வெறும் மறுமொழி மட்டும் பார்த்து எல்லா ப்ளாகிலும் பஜனை செய்து வருகின்றேன்.

    வ்வ்ரட்டா ...............

    பதிலளிநீக்கு
  17. Shiv Khera is an Indian motivational speaker, author of self-help books, business consultant, activist and politician. While working in the United States, he was inspired by a lecture delivered by Norman Vincent Peale, and followed his motivational teachings to achieve success in his life.
    ou can win”, by Shiv Khera, is a storehouse of inspiration and knowledge. The book contains the golden rules for achieving success. It also inspires the readers to become good human beings.
    Being successful is not the only achievement. The book strives to instill sterling qualities of head and heart that are the indispensable characteristics of a good human being. The book helps the readers in achieving success and building pleasant personalities.

    “You can win” contains eleven chapters, equally important and relevant. The chapters are motivating, inspirational and stimulating. The book contains the important principles and axioms that are required to construct a pleasant personality. Positive attitude, motivation, self-esteem, pleasing personality, values and vision are aspects covered thoroughly in the book.


    Positive attitude is a critical factor in success. The author has effectively explained the benefits of positive attitude. The author has also included an action plan which would help the readers to develop a positive attitude. He has also enumerated the steps required to build a positive attitude.

    பதிலளிநீக்கு
  18. interesting, divya.
    i think i aw this title on amazon kindle promotion - thanks for the detailed intro.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!