திங்கள், 12 செப்டம்பர், 2016

"திங்க"க்கிழமை பதிவு – சங்கீதா பாணி மோர்க்குழம்பு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி






          கவர்ச்சியான வண்ணத்தில் மோர்க்குழம்பு செய்து காட்டியிருக்கிறார் நெல்லைத்தமிழன்.



     எனக்கு ஒருவர் இந்தக் குழம்பைக் கற்றுக்கொடுத்தார். எனக்குப் பொதுவாகவே மோர்க்குழம்பும், புது மாங்காய் ஊறுகாயும், பருப்பு உசிலியும் மெனுவில் இருந்தால் (எது ஒன்று இருந்தாலும்) சாப்பிடப்பிடிக்கும். 




     நான் 11,12ம் வகுப்பு ஹாஸ்டலில் (St. Britto hostel, தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளியுடன் கூடியது) தங்கி இருந்தபோது, புதன் தோறும் அங்கு மோர்க்குழம்பு. 





     அதனால் அன்றைக்கும், திங்கள் கிழமை மதியம் அவர்கள் ஸ்டைலில் எலுமிச்சை சாதம் + தயிர் சாதம் இதையும் தவறவிட மாட்டேன். அதெல்லாம் 70களின் இறுதி. இப்போ மோர்க்குழம்பை எப்படிப் பண்ணுவது என்று பார்ப்போம். 






      தேங்காய்த் துருவல் 3 மேசைக்கரண்டி (1/4 மூடித் தேங்காய்), ஜீரகம் ¼ ஸ்பூன், பச்சை மிளகாய் 3, கொஞ்சம் இஞ்சி. இவற்றைக் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வழுமூன (இது எங்கள் சொல். மைய அரைக்கவும் என்றும் சொல்லலாம். தூய தமிழில், நைஸா அரைச்சுக்கணும்) மிக்சியில் அரைக்கவும்.







     தயிரையும் மோரையும் கலந்து ஓரளவு ரொம்ப நீர்க்க இல்லாமல் தயார் செய்யவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.




       4 வெண்டைக்காயை, பொடியாக நறுக்கி, தேங்காய் எண்ணைவிட்டு வறுத்துக்கொள்ளவும். வெண்டை இல்லாமல், தளிகைப்பண்ணின பூசணியும் சேர்க்கலாம்.




     அடுப்பை SIMல வைத்து, ¼ ஸ்பூன் மஞ்சப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பவுடர், மோர், தேங்காய் பேஸ்ட், தேவையான உப்பு இதைக் கலந்து, கரண்டியால் கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும். 





     கொஞ்சம் அனல் பாத்திரத்தில் ஒரு இடத்தில் பட்டாலும் திரிந்துவிடும். அவ்வப்போது விரல் வைத்துப்பார்த்து, விரல் பொறுக்கும் சூட்டைவிடக் கொஞ்சம் அதிகமானவுடன் அடுப்பை அணைக்கவும்.  இப்போது வெண்டைக்காய் தானைச் சேர்க்கவும்.
     தேங்காய் எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் ஜாஸ்தி வெந்தயம், 2 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, குழம்பில் சேர்க்கவேண்டியதுதான்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்

23 கருத்துகள்:

  1. ஆகா
    தங்களுக்கும்
    நண்பர் நெல்லைத் தமிழனுக்கும் வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. அட! இதுக்கு போண்டோக்களைத் தான் தானாகப் போடுவோம். நாங்களும் வழுமூணத் தான் அரைப்போம்! நைஸ் எல்லாம் இப்போ வந்தது. மைய அரைக்கச் சொன்னதே இல்லை! :)

    பதிலளிநீக்கு
  3. மோர்க் குழம்பில் பருப்பு வடையை ஊறப் போட்டு சாப்பிட்டால் தனி டேஸ்ட்தான்:)

    பதிலளிநீக்கு
  4. நாங்களும் இந்த முறையில் மோர்குழம்பு செய்வோம். வெண்டைகாய் இது போல் வெட்டிக் கொண்டு எண்ணெயில் வறுத்து போடுவோம்.
    மைய அரைக்கவேண்டும் என்று தான் அம்மா சொல்வார்கள். மைய அரை, பிறு பிறு என்று அரைத்து விடாதே என்பார்கள்.
    துவரனுக்கு தேங்காய், சீரகம், மிளகாய் வற்றல் பிறு பிறு என்று அரைக்க வேண்டும். மோர்குழம்பு, புளிக்குழம்புக்கு எல்லாம் மைய அரைக்க வேண்டும். நெல்லையில் இப்படித்தான் சொல்வார்கள்.
    செய்முறை படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. இந்த தேங்காய்க் கலவையை அரைக்கும் முன்னரே துளி அரிசியையும் பிசறி வைத்து விட்டுப், பின்னர் அரைத்தால் வெழு மூணாகத்தான் அரைத்துக் கலந்தால் மோர்க்குழம்பு திரிந்தே போகாது. இந்த முறை குழம்பும் கெட்டியாக வரும். ஓரளவு சாதத்தில் கலக்கும்படியான கெட்டிப்பதம் போதும். வசனம் சொல்வதில்லையா? என்ன ஒரே மோர்க்குழம்பா குழப்பிட்டே? ஓரளவு தாளிப்பைத் தவிர்த்து பாலக்காட்டுக்காரர்களும்,தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய் அரைத்து விட்டுதான் மோர்க்கூட்டான் செய்வார்கள். காய்கள் நம் இஷ்டம். வெண்டைக்காய் வருத்தமாதிரி போட்டால்தான் கொழகொழப்பு இல்லாமலிருக்கும். நாமும் நம்முடைய மோர்க்குழம்பை இன்று ஸங்கீதா என்று சொல்லி விடலாம். அருமையாக குறிப்புகள் தந்திருக்கிரார். நன்றி அன்புடன் .

    பதிலளிநீக்கு
  6. கிராண்ட் சுவீட்ஸ் சாலிகிராமம் மோர்க்குழம்பு மிக்ஸ் ரூ 175 மட்டுமே. வாங்கினால் 3 மாதம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜில் வைக்கவேண்டும்.



    இரண்டு ஸ்பூன் எடுத்து கொதிக்கும் வெந்நீரில் கலந்து, பின் கெட்டி தயிர் ஒன்று முதல் இரண்டு கப் கலந்து



    அதை இளம் சூடான சாதத்தில் கலந்து,



    பக்கத்துலே சூடான மெது வடை, கத்திரிக்காய் அல்லது வென்டைக்காய் பொரியல், கொத்தமல்லி சட்னி யுடன் ஒரு கை அளவு சிப்ஸ்



    சாப்ப்பிட அந்த ஸ்ரீனிவாச பெருமாள் அருள் செய்ய முடிவு செய்தால்,



    மனித்த பிறவியும் இனி வேண்டேன் இந்த மாநிலத்தே.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  7. சு.தா.க்ரான்ட் ஸ்வீட்ஸ் என்ன, எந்தக் கடைத் தயாரிப்பும் வீட்டுத் தயாரிப்புக்கு முன்னால் சொதப்பல் தான்!

    பகவான் ஜி, பருப்பு வடை மட்டும் இல்லை, உளுந்து வடையும் மோர்க்குழம்பில் போட்டுச் சாப்பிடலாம்.

    கடைசியா செய்முறையில் கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டினால் சுவையும் வித்தியாசமா இருக்கும்.

    அரைத்த கலவையை வெந்த தானின் மீது கொட்டி நன்கு கொதிக்கவிட்டுப் பின்னர் கெட்டி மோரை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அதில் சேர்த்ததும் பொங்கி வருகையில் இறக்கித் தே.எண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வ.வெந்தயம் தாளிக்கணும்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் அதிகம் பிடித்தக் குழம்பு
    எப்படியும் மூன்று முறை செய்யச் சொல்லி
    சாப்பிட்டுவிடுவேன்
    செய்முறைபதிவிட்ட விதம் அருமை
    அதனால் இந்த வாரம் நானே
    சமைக்க உத்தேசம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  9. எனக்கு பிடிக்கும் மோர் குழம்பு செய்தால் அதற்கு சைடிஷ் சேப்பங்க்கிழங்கு ரோஸ்ட்தான் எனது சாய்ஸ்

    பதிலளிநீக்கு
  10. இப்பொழும் நான் ரசித்து சாப்பிடுவது மோர்க்குழம்பு.

    பதிலளிநீக்கு
  11. அட! இதுதான் சங்கீதா மோர்க்குழம்பா! இப்படியும் செய்வதுண்டு வெழுமூன அரைத்து..... அதுசரி நெ. தமிழன்..நைசா அரைத்து....இது.தூய தமிழ்??!!!! ஹாஹ்ஹ...உங்க நக்கல்!!

    இதில் போண்டா வடை எல்லாலாம் போடலாம்..இதிலேயே கொஞ்சம் பருப்பு அரைத்தும்ம் மாமியார் செய்வார்.

    நெல்லைக் தமிழன் .... நம்ம ஊர் அழுக மாங்கா/மாவடு பச்சடி/மோர்க்குழம்பு செய்வதுண்டா?

    கீதா

    பதிலளிநீக்கு
  12. 'நன்றி வெளியிட்ட ஸ்ரீராமுக்கும், கருத்துரையிட்ட அனைவருக்கும். கரந்தையார் எப்போதும் முதல். வெங்கட்ஜி, புலவர் இராமானுசம் 'நன்றி. பகவான்'ஜி.. மோர்க்குழம்பு வடை மிகவும் நன்றாக இருக்கும். பழைய காலத்தில், இரவு மோர் சாதத்திற்கு, மோர்க்குழம்பில் ஊறின வடை போடுவார்கள். கோமதி மேடம் .. நாங்கள் கர கர என்று அரைக்கணும் என்பார்கள் (பிறு பிறு என்று கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி) காமாட்சி மேடம்.. நீங்கள் சொல்வது சரி. அரிசியும் துவரம்பருப்பையும் ஊறவைத்து அரைப்பதுதான் என் அம்மாவின் வழக்கம். சுப்பு தாத்தா - நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. மாம்பலம் ஆரிய கௌடா ரோடில், வெங்கட் நாராயணா போளி கடைக்கு எதிரே மூலையில் ஒரு வயதானவர் சிறிய வண்டியில் வடகம், ஊறுகாய், பொடி வகைகள் விற்பனை செய்கிறார். அவரிடம் மோர்க்குழம்பு மிக்ஸ் ஒரு சிறிய பாக்கெட் (50 ரூ) வாங்கினேன். அதையும் வெறும்ன மோரில் கலந்து கொதிக்க வைத்தால் போதும். அதுவும் நன்றாக இருக்கிறது. மோர்க்குழம்புக்கு மதுரைத் தமிழன் சொன்ன மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், இல்லாட்டா இருக்கவே இருக்கு உருளை ரோஸ்ட் ரொம்ப நன்றாக இருக்கும். ரமணி சார்.. இந்த வாரம் நீங்கள் செய்துபார்த்துச் சொல்லுங்கள். முடிந்தால் இங்கேயே பின்னூட்டமிடுங்கள். முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. நிறைய பேருக்கு மோர்க்குழம்பு மிகவும் பிடிக்கும். கீதா மேடம்.. நீங்கள் சொன்னதுபோல் வீட்டுத் தயாரிப்புக்கு முன் கடைத் தயாரிப்புகள் அருகிலேயே வர முடியாது. நான் சொல்வது எஸ்டாபிளிஸ்ட் கடைகள். வீட்டில் சிறிய அளவில் தயாரித்து கடையில் விற்பனை செய்யப்படும் (நான் சொன்ன மாதிரி பொடிவகைகள், வடகம், ஊறுகாய்கள் போன்றவை) பொருட்களின் டேஸ்டும் நன்றாகத்தான் இருக்கும். உளுந்து வடை மோர்க்குழம்பில் போட்டுக் கேள்விப்பட்டதில்லை. ஒரு தடவை என் ஹஸ்பண்டிடம் சொல்லிப் பண்ணச்சொல்கிறேன். எங்க அம்மா, துவரை, அரிசி, சிவப்பு மிளகாய், உப்பு (பெருங்காயம்? தெரியவில்லை) போட்டு அதில்தான் வடை பண்ணி மோர்க்குழம்பில் போடுவார்கள். துளசி/கீதா - இப்போல்லாம் யாருக்குமே (தைரியமாகச் சொல்லலாம்) 5 நிமிடம் சேர்ந்தார்ப்போல் தமிழில் பேச முடியாது. இலங்கைத் தமிழர்கள் போல் இல்லாமல், நம் தமிழில் எல்லா ஆங்கில வார்த்தைகளும் நைஸாக உள் புகுந்துவிட்டன. என் இள வயதில் மாவடு போட்டு மோர்க்குழம்பு எங்கள் பெரியம்மா செய்து சாப்பிட்டிருக்கிறேன். அது அசத்தும். நான் சென்ற வருடம் மாங்காய் போட்டு முயற்சித்தேன் நன்றாக வரவில்லை. எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் மாவடுவில் காரம்லாம் இருக்காது. (அதாவது சிவப்பாக இருக்காது). இப்போது கடையில் வாங்கும் மாவடு சிவப்பான திரவத்தில் இருக்கிறது. அதனால்தான் கடை மாவடு போட்டு முயற்சிக்கவில்லை. நிச்சயம் நன்றாக இருக்கும். ரெசிப்பி சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  13. இதே மோர்க்குழம்பு அம்மா செய்வார். நாங்களும் வெழுமூண தான் அரைப்போம்..
    எங்கள் வீட்டு மாவடு சிவப்பாக எல்லாம் இராது.
    மாவடு எட்டு ஆழாக்கு,
    கடுகு ஒரு ஆழாக்கு,
    உப்பும் மஞ்சள் பொடியும் கைத்திட்டம்.

    கடுகை அரைத்துக் கலந்து கொஞ்சமே கொஞ்சம் மிளகாய்ப் பொடி போடுவது உண்டு. இப்போது அதுவும் இல்லை. அடுத்த வருடம் செய்து பாருங்கள்.
    நன்றாக இருக்கும். நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  14. வல்லி மேடம் நன்றி. எனக்கு மாவடு அரைத்த மோர்க்குழம்பு ரெசிப்பி யாரேனும் சொல்லவும். பேசாம, துவரம்பருப்பு (ஊறவைத்தது), அரிசி, தேங்காய், சிவப்பு மிளகாய் அதோடு ஒர் மாவடுவையும் அரைத்தால் மோர்க்குழம்பு சரியாக வருமா?

    பதிலளிநீக்கு
  15. @நெல்லைத் தமிழன், அதிகம் புளிப்பில்லாத கெட்டி மோரில் பச்சைமிளகாய், தேங்காய், மாவடு ஊறுகாயிலிருந்து எடுத்த இரண்டு அல்லது மூன்று மாவடுகளைச் சேர்த்து நல்லா நைசாக அரைத்துக் கொண்டு தயிரில் கலக்கவும். உப்பு மாவடுவில் ஏற்கெனவே இருக்கும் என்பதால் மோரும் புளிப்புக் குறைவாக இருக்கும் என்பதால் நிதானமாகப் பார்த்துச் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய், கருகப்பிலை தாளிக்கவும்; பெரும்பாலும் இந்தக் குழம்பைச் சூடு பண்ணுவதில்லை. அப்படியே சாப்பிடுவார்கள். நாங்க மாங்காய்ப் பச்சடி(இனிப்பு அல்ல) என்போம். அல்லது அரைச்சுக் கலக்கிய குழம்பு என்றும் சிலர் சொல்வதுண்டு. திருநெல்வேலிப்பக்கங்களில் மற்றும் பாலக்காட்டுப் பக்கமெல்லாம் அரைச்சுக் கலக்கிய குழம்பு என்றே சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  16. இதைத் தவிர மோர் வெந்த சாறு என்றும் பண்ணுவார்கள். எங்க வீட்டில் அதற்கு மோர்ச்சாறு என்றே பெயர். அரிசி மாவு ஒருடேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதை அரைக்கிண்ணம் நீரில் கரைத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவேண்டும். கரண்டியால் கிளறிக் கொடுக்க வேண்டும். இல்லைனா மாவு கட்டி கட்டியாக ஆயிடும். கெட்டியான புளித்த மோரில் உப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு கொதிக்கும் அரிசிமாவுக் கலவையில் ஊற்றி நன்கு கலந்து உடனே கீழே இறக்கிடணும். தே.எண்ணெயில் கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, மி.வத்தல் கருகப்பிலை தாளிக்கணும். உடம்பு சரியில்லாதவங்க, வயிறு சரியில்லாதவங்களுக்கு இதோடு ஓமமும் சேர்க்கலாம். ஏற்கெனவே எழுதின நினைவும் இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  17. மிகுந்த நன்றி கீதா மேடம். இந்த வார இறுதியில் 'மாவடு அரைச்ச மோர்க்குழம்புதான்' பண்ணப்போகிறேன். புளிப்பு, உப்பு பதம் சொன்னவிதம், நீங்கள் ஜாம்பவான் என்பதையும், சொல்வதைச் சரியாகச் சொல்லவேண்டும் என்று எண்ணுவதைக் காட்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @நெல்லை தமிழன் ..மாவடு அரைச்சு செஞ்சா செம டேஸ்டி .லக்ஷ்மி அம்மானு குறை ஒன்றுமில்லை பிளாக் எழுதுவாங்களே அவங்க ரெசிப்பி நா செஞ்சேன் அரைச்சு கலக்கி /அம்மாஞ்சி குழம்பு என்று அதன் பேர்

    பதிலளிநீக்கு
  19. இந்த சங்கீதா வகை மோர் குழம்பு நல்ல இருக்கு ..பருப்புக்கள் சேர்க்காததால் நானும் செய்து சாப்பிட்டேன்

    பதிலளிநீக்கு
  20. 'நன்றி ஏஞ்சலின். லக்ஷ்மி அம்மாவின் பிளாக்கிலேயும் தேடிப்பார்க்கிறேன். கீதா சாம்பசிவம் மேடம் சொன்னதை இந்தவாரம் செய்யப்போகிறேன். நீங்கள் மோர்க்குழம்பு செய்துபார்த்துவிட்டு நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!