வியாழன், 22 செப்டம்பர், 2016

கேட்காமலேயே வந்த கதை! தன் குழந்தை




     எங்களின் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியால் கவரப்பட்ட நெல்லைத்தமிழனின் முயற்சி இது.  நான் எழுத வேண்டிய வரிகளையும் அவரே சேர்த்திருக்கிறார்!

     இணையப் பிரச்னைகளால் பதிவை காலை வெளியிட முடியவில்லை!


===============================================================

அன்புள்ள ஸ்ரீராம்,


‘நீங்கள் ‘கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு’, கேட்காமலேயே நான் அனுப்பியிருக்கேன். இதுவரை கதை எதுவும் எழுத முயற்சி எடுத்ததில்லை. தில்லை அகத்தின் திருமதி கீதா ரெங்கனின் கதையைப் படித்ததும் எழுதத் தோணிற்று. பொதுவாக நீங்கள் எழுத்தாளரை(?)ப் பற்றி ஒரு முன்னுரை கொடுப்பீர்கள். கதை உருப்படி என்று நினைத்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய மாறுதல் செய்துள்ளேன். சரியாக வந்திருக்கிறதா?

நெல்லைத் தமிழன் சிலமுறை ‘திங்கக் கிழமை’க்கு பதிவு எழுதியுள்ளதைப் படித்திருப்பீர்கள். அவர் முதன் முறையாக கதை எழுத முயற்சித்திருக்கிறார். தன் படைப்பைப் பற்றிச் சில வரிகள் கூறியபின் கதையைத் தொடர்கிறார்.

---------------------------------------------------------------------
நான் 80களின் இறுதியில் மேட்டூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு வேலை பார்த்த பிராமண குலத்தைச் சேர்ந்தவர், அருகில் முள்ளுக்காட்டில் பெற்றவளால் தூக்கிவீசப்பட்டிருந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவந்தார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது எவ்வளவு ஆசையாக அவர்கள் அந்தப் பெண்குழந்தையை வளர்க்கிறார்கள் என்று காண நேர்ந்தது. அந்த வயதில் இருந்த மன’நிலையில், யார், எந்த ஜாதி என்று ஒன்றுமே தெரியாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய உறவினர்களில் இருவருக்கு குழந்தையே இல்லை. ஒருவர், கடைசி காலத்தில் அபிமான புத்திரனாக, தன் சகோதரனின் பையனை ஏற்றுக்கொள்ளலாமா என்று நினைத்துப் பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். இன்னொருவர் கடைசி காலம் வரை குழந்தை இல்லாமலேயே இருந்துவிட்டார். சமீபத்தில் திருமதி கீதா ரங்கன் (தில்லைஅகத்து) அவர்களின் கதையைப் படித்தபோது, இந்த சப்ஜெக்ட்ல கதை எழுத முயற்சித்தால் என்ன என்று தோன்றியது. கதைக்கு இன்ஸ்பிரேஷன் திருமதி கீதா ரங்கன் அவர்கள். ‘நான் சிறிய வயதிலிருந்து ஏராளமான புத்தகங்களைப் படிப்பவன். (light reading). சரி எழுதித்தான் பார்ப்போமே என்று முயற்சித்திருக்கிறேன். சமையல்னா, செய்முறையும், படமும் போதும். பண்ணினது சரியா வந்ததா என்ற கேள்வி எழாது. கதை அப்படி இல்லையே.

எனக்கு இந்தக் கதைக்கு நானே ஓவியம் வரையவேண்டும் என்பது ஆசை. பொதுவாக நான் ஓரளவு ஓவியம் வரைவேன். ‘நான் படித்த தூய சவேரியார் மேல்’நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசை திரு. ம.பொ.சிவஞானம் அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறேன். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள். அவசர கோலத்தில் ஒரு படத்தை வரைந்து சேர்த்துள்ளேன்.


=============================================================================

தன் குழந்தை

வாசலில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. சொன்ன மாதிரியே தம்பிதான், அவன் இரண்டு பசங்களோடு வந்திருந்தான்.

‘வாடா கார்த்திக். ஏன் கமலியையும் பொண்ணையும் கூட்டிட்டு வரலை’.

‘பொண்ணுக்கு ஸ்கூல்ல பாட்டு செலெக்ஷன் நடக்குது. அதுக்கு அவள கமலி கூட்டிட்டுப் போயிருக்கா. உனக்குத்தான் தெரியுமே.. பொண்ணு ஆசைக்கு நான் தடை போட மாட்டேன்னுட்டு’.

“மெட்ராஸில் இருக்கோம்னு பேரு. அத்தி பூத்தமாதிரி வந்திருக்க.”  அவன் பசங்க என்னைப் பார்த்ததும் ‘வணக்கம் அத்தை’னு கோரசா சொன்னாங்க. கார்த்திக் எனக்கு சித்தப்பா பையன். கல்லூரி காலம் வரை வருடா வருடம் விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு கிராமத்துக்குப் போயிடுவோம். இரண்டு மாசம் ஒரே கும்மாளமா இருக்கும். லீவு போனதே தெரியாது. வீட்டுல நான் ஒருத்திதான் பெண் என்பதால் எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். அதுலயும் கார்த்தி, எப்போப் பார்த்தாலும் ‘அக்கா அக்கா’ என்று கூடவே இருப்பான். உறவுகளுக்காக உசிரையே விடக்கூடியவன். அவன் பசங்க ‘அத்தைனு’ என்னைச் சொன்னதும் இதெல்லாம் ஞாபகம் வந்தது.

“மாமா எங்கக்கா?”.. ‘இன்னைக்குக் கடையைப் பாத்துக்கறவர் அவசரமாக அப்பாக்கு முடியலைன்னு ஊருக்குப் போயிருக்கார். அதுனால அவர் காலைலயே கடை தொறக்கப் போயிட்டார். நேத்தே நீ வர்றேன்னு சொல்லியிருந்தும் அவரால இங்க இருக்க முடியலை. மதியம் சாப்பிட வந்துர்றேன்னு சொல்லியிருக்கார்’

பசங்களுக்காக வாங்கி வச்சிருந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்தேன். ‘டே பசங்களா.. டிவி பாக்கறீங்களாடா’ ‘வேணாம் அத்தை. புத்தகம் படிக்கிறோம்’னு மூத்தவன் வசந்தன் சிரிச்சுக்கிட்டே சொன்னான். அவங்களுக்கு சாப்பிட தேன்குழலும் பாதுஷாவும் கொடுத்தேன்.

‘அக்கா.. இந்தாங்க பழம். கமலி அதிரசமும் முருக்கும் குடுத்தனுப்சிருக்கா. மாமாவுக்கு முருக்கு பிடிக்கும்ல’.

நகர்ல சொந்த வீடும் கடையும் அக்காக்கு இருந்தும் குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை. அவங்களும் பதினைஞ்சு வருஷமா கோவில் குளம்னு ‘நேர்ந்துகொண்டு யாத்திரை பண்ணியும் வீட்டுல அழுகைச் சத்தமே இல்லாமல் போயிற்று.  ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கோ என்று பலமுறை சொல்லியும் மாமாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் இஷ்டம் இல்லைனே எப்போதும் சொல்லிடுவா.  அதுவும், அக்காவோட மாமியார், குழந்தையைத் தத்தெடுத்திக்கிட்டா, கடவுள், இவளுக்குத்தான் இப்போ குழந்தை இருக்குன்னு எப்போயும் பிள்ளைவரம் கொடுக்க மாட்டார்னு சொல்லி தான் சாகிற வரைல அதுக்கு ஒத்துக்கமாட்டேன்னுட்டார். அக்கான்னா, எம் பசங்க வருவாங்கன்னு ஆசை ஆசையா காமிக்ஸ்லாம் வாங்கிவச்சிருக்கா. ப்ச். நினைக்கவே மனசுக்குக் கஷ்டமாயிருக்கு.

இரண்டு பசங்களும் கதைப் புத்தகத்தைச் சேர்ந்து படிப்பதைப் பார்க்கும்போது அன்புக்கரசிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

‘பசங்களா எப்போடா சாப்பிட வர்றீங்க..’

கதை படிப்பதில் மும்முரமாக இருந்தாங்க. ‘இப்போதானே அத்தை தேன்கொழல் சாப்பிட்டோம். மாமாவோட சேர்ந்து சாப்பிடறோம்’. 

தட்டு காலியாக இருந்தது.

‘எப்படிடா இருந்துச்சு? பிடிச்சுச்சா? இன்னும் வேணுமா’?

‘தேன்கொழல் நல்லா இருந்துச்சு அத்தைனு சின்னவன் நீட்டிச் சொன்னான். ‘எங்களுக்கு ஸ்வீட் பிடிக்காது அத்தை. தங்கச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்னு எடுத்துவச்சிருக்கோம்’.

தங்கச்சின்னு சொல்லும்போது அவங்க முகத்துல இருந்த சந்தோஷம் எனக்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. அது நடந்து ஒரு எட்டு வருடம் இருக்கும்.




“அக்கா எப்படி இருக்க? பிஸியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“நல்லா இருக்கேன் கார்த்தி. கடைக்கு வந்தேன். மாமாவுக்கு லஞ்ச் கொடுத்துட்டுப் போலாம்னு. என்ன விஷயம் சொல்லு”

“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியும்ல. என் பசங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கணும்னு நினைக்கிறேன்”

“அதுக்கென்ன.. இன்னொரு கொழந்தையைத் தாராளமா பெத்துக்கோயேன். நல்லா சம்பாதிக்கற. உங்க ரெண்டு பேருக்கும் வளக்க முடியும்னு தோணுச்சினா பெத்துக்கோயேன்’

‘அதுக்கில்லைக்கா.. இன்னொண்ணும் ஆணாப் பொறந்துடுச்சுன்னா? எங்களுக்கு பெண்ணை வளக்கணும்னுதான் ஆசை. அதுனால ஒண்ணு நினைச்சுருக்கோம். அதுக்கு உன்னோட அபிப்ராயத்தைக் கேட்கலாம்னுட்டு.. கமலியோட தூரத்து உறவினருக்கு போன வாரம் மூணாவதா பொண்ணு பொறந்திடுச்சாம். அவங்க கொஞ்சம் கஷ்டப்படுறவங்க. ஏற்கனவே ரெண்டு பொண்கள். மூணாவது ஆணா இருக்கும்னு நப்பாசைல பெத்துக்கிட்டாங்க. தினப்படி வாழ்க்கையே கஷ்டமாக இருக்குங்கறபோது இதுல மூணாவதும் பொண்ணான்னு ரெண்டுபேரும் அழுதுக்கிட்டிருக்காங்களாம். அவரோட சொந்தக் காரங்களும் வசை பாடுறாங்களாம்.  அதுனால அந்தப் பொண் கொழந்தையைத் தத்துக்கேட்கலாம்னு இருக்கோம். உன் அபிப்ராயம் என்ன?”

“ஒரு குழந்தை அதோட அப்பா அம்மாகிட்ட வளர்றதுதான் நல்லது. அப்படி அவங்களால வளக்க முடியாதுன்னா தாராளமா தத்து எடுத்துக்கோங்க. ஒரு வக்கீல்கிட்ட எதுக்கும் ஆலோசனை கேட்டு சட்டரீதியா தத்தெடுத்துக்கோ. உனக்கும் பிற்காலத்துல பிரச்சனையெல்லாம் வராது. எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இதுவரை இல்லை”

…..
எனக்கு ஆரம்பத்துல இது சரிவருமா என்று யோசனையாகத்தான் இருந்துச்சு. ஏற்கனவே தான் பெத்த குழந்தைகள் இருக்கறப்போ, இன்னொரு பொண்ணைத் தத்தெடுத்தா அது குடும்பத்தோடு ஒட்டுமா, கார்த்தி நல்ல பையன். இருந்தாலும் அவன் பசங்களுக்கும் அம்மாக்கும் ஒத்துப்போகணுமேன்னு தோணிச்சு. இப்போ இந்தப் பசங்க தங்கச்சி தங்கச்சின்னு சொல்றதைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பவே, ‘தங்கச்சிக்குப் பிடிக்கும்னு’ ஸ்வீட் தனியா எடுத்து வச்சுக்குதுங்களே..  

என் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டவன்போல் கார்த்தி, ‘அக்கா.. இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போயிடலை. மாமியார்தான் போய்ச்சேர்ந்துட்டாங்களே. மாமாகிட்ட பேசி நீ எப்பக்கா தத்தெடுக்கப்போற.. உனக்கும் ஒரு பிடிப்பு இருக்கும்க்கா. நேரம் கூடி வந்தா பொண்ணுன்னா எனக்கு மருமகளாகவும் ஆயிடுவா”. உங்களுக்குச் சரின்னா, பையனா இருந்தா என் பொண்ணுக்குக் கொடு. உறவு விட்டுப் போகாது. ‘நான் வேணா இன்னிக்கு மாமாட்ட பேசவா?

கார்த்தி… மாமா வந்து சொல்லட்டும்னு நினைச்சுருந்தேன். நான் இப்போ முழுகாம இருக்கேன் என்று முகம் சிவந்தாள் அன்புக்கரசி.

32 கருத்துகள்:

  1. அருமை
    நெல்லைத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. படிக்கவே நன்றாக இருக்கிறது..பாராட்டுகள் நெல்லை தமிழன் சகோ..

    பதிலளிநீக்கு
  3. படிக்கவே நன்றாக இருக்கிறது..பாராட்டுகள் நெல்லை தமிழன் சகோ..

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை. பாசிடிவாக வாழ்க்கையைப் பார்க்கும் தம்பி. பொறுமையான
    அக்கா. அவளுக்குக் கடவுள் கொடுத்த வரம். எல்லாமே இனிமை.
    வாழ்த்துகள் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  5. கதை தந்த கதை அருமை
    மிக இயல்பான நடையும்
    பாஸிடிவானமுடிவும் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சுய அறிமுகம் அருமை. கதையை ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு எழுத்தாளரை உருவாக்கிய பெருமை உங்களையே சேரும் !
    நெல்லைத் தமிழன் கதையும் படமும் தொடர்ந்தால் சாதனைப் படைப்பார் !

    பதிலளிநீக்கு
  8. இது வரை கதை எதுவும் எழுத முயற்சி எடுத்ததில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. சொன்ன விதம் அருமை. கோடுகள் சித்திரமாகும் நேர்த்தியும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நெல்லைத் தமிழன் தனக்கென ஒரு தளம் உருவாக்கியதாகத் தெரியவில்லை. இவரது எழுத்துகளை எங்கள் ப்ளாகிலோ பின்னூட்டங்களிலோதான் காண முடிகிறது திருமதி கீதாவின் கதை இவருக்குத் தூண்டுகோல் என்பதால் இக்கதையும் அதே பொருளில் அமைந்து விட்டதோ. முதல் முயற்சிக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. வேண்டாத குழந்தைக்கு தத்தெடுக்க சாசுவதமாக உடனிருக்க பிரிய அகாகாவின் மூலம் மருமகளாக நினைத்ததும்,நாமொன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைத்து, குழந்தை பாக்கியமருளுவதும் அருமையான முடிவு. அந்த மூன்றாவது பெண்ணையும் எடுத்து வளர்க்க முடிவு மனதில் இருந்திருக்கும். கதை முத்தாய்ப்பாக இருக்கும். முதல் கதையே அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஶ்ரீராம். உங்கள் ஊரிலதான் இந்த வாரம் 3 நாட்கள். யதாஸ்தானம் சென்றபின் பதிலெழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  13. உயிருள்ள கதை
    உணர்வுகளைத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  14. அருமையான கதை. எங்கள் உறவிலேயே இரண்டு, மூன்று தம்பதிகள் குழந்தை தத்து எடுத்திருக்கிறார்கள். இந்தக் கதையிலாவது உறவினரின் பெண். அவங்க தத்து எடுத்தது அநாதை இல்லத்திலே இருந்து. குழந்தைகளுக்கு இனிமேல் தான் சொல்லணும். ஆனால் அவர்கள் பெற்ற குழந்தையை விட அருமையாக வளர்க்கின்றனர். இதிலே ஒருத்தருக்கு ஏற்கெனவே முதலில் ஓர் பிள்ளை பிறந்திருக்கிறது. இரண்டாவது பெற்றுக்க வேண்டாம்னு முடிவு பண்ணி தத்து எடுத்து வளர்க்கிறாங்க, பெண் குழந்தையை! தாயின் முகஜாடை இருக்குமாறு தேர்ந்தெடுத்திருப்பதால் புதிதாய்ப் பார்ப்பவர்களுக்குத் தெரியவே வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  15. நெல்லைத் தமிழனுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! எங்களில் ஒருவரின் கதை உங்களுக்குத்தூ ண்டுகோலாக இருந்தமைக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றோம். முதல் கதையே அருமையாக வந்திருக்கிறது. மீண்டும் வாழ்த்துகள் பாராட்டுகள் நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  17. நெல்லைத் தமிழன் கதை அருமை. படம் நன்றாக வரைந்து இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் நல்ல வித்தியச படித்தி அழகாய் வரைந்து இருக்கிறார். இன்னும் நிறைய கதைகள் எழுதலாம்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் முதல் கதைக்கு, இனி வரும் கதைகளுக்கும்.

    பதிலளிநீக்கு
  18. நெல்லைத் தமிழன் கதை அருமை. படம் நன்றாக வரைந்து இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் நல்ல வித்தியச படித்தி அழகாய் வரைந்து இருக்கிறார். இன்னும் நிறைய கதைகள் எழுதலாம்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் முதல் கதைக்கு, இனி வரும் கதைகளுக்கும்.

    பதிலளிநீக்கு
  19. அட! நெல்லைத் தமிழன் நான் எழுதிய கதை??? யா தூண்டு கோல்! ம்ம்ம் நீங்கள் அன்றே பின்னூட்டத்தில் தெரிவித்த நினைவு இருக்கிறது. தூண்டு கோலாக இருந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் மிகவும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். அதே கார்த்தி ஆனால் அருமையாகப் புனைந்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள், பாராட்டுகள் நெல்லைத் தமிழன்.

    ரஞ்சனி அக்காவின் சென்ற வார கேவாபோக வில் ரஞ்சனி அக்காவின் கருத்தையும் வாசித்தென். அவர்கள் மிக் அருமையாக எழுதுபவர்கள். அவர்கள் சொல்லியிருந்தது போல் நான் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் கதை எழுதுவதற்கு. நிறைய வாசிக்க வேண்டும். கல்லூரிக் காலத்துடன் வாசிப்பு முடிந்து, பின்னர் எப்போதேனும் என்றாகி, இப்போது பல வருடங்களுக்குப் பிறகுதான் துளசியின் உதவியால் எழுத ஆரம்பித்துள்ளேன். ஆரம்பத்தில் என் பெயர் கூட போட தயக்கம் இருந்து வந்தது. எங்கள் தளத்தில் துளசியின் குறிப்புகளுடன் கதைகள்??? எழுதியுள்ளேன் ஆனால் பெயர் இல்லாமல். அவற்றை நல்ல விமர்சகர்கள் விமர்சித்தால் கற்றுக் கொள்ளலாம்.

    உங்கள் படம் அருமை..நானும் வரைந்ததுண்டு. ஆனால் எல்லாம் இப்போது எங்கேயோ...

    மிக்க நன்றி நெல்லைத் தமிழன்...அருமையான கதை முடிவும் செம...மனம் நிறைந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. யாரப்பா அங்கே? எங்கள் ப்ளாக் நம்ம நெல்லைத் தமிழனுக்கு ஒரு கேடயம் பரிசு கொடுத்துரலாமா..."பன்முகக் கலைஞர்" அப்படின்ற பட்டத்துடன்!! படமும் வரைகிறார், கதை, சமையல்...அழகான ஆழமான கருத்துகளுடன் பின்னூட்டங்கள். நல்ல பதிவர்!!!

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. //கார்த்தி… மாமா வந்து சொல்லட்டும்னு நினைச்சுருந்தேன். நான் இப்போ முழுகாம இருக்கேன் என்று முகம் சிவந்தாள் அன்புக்கரசி.//

    இந்தக் கடைசி இரண்டு வரிகளே, உங்களை மிகச்சிறந்த காதாசிரியராக உருவாக்கிடும் ஆற்றல் பெற்றுள்ளன. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மேலும் தொடர்ந்து இதுபோல எழுத முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  23. இதுபோன்ற புதிய எழுத்தாளர் ஒருவரையும் உருவாக்கிட உதவியுள்ள எங்கள் ப்ளாக்கின் முயற்சிகளுக்கும், இதனைப் படிக்க இங்கு வாய்ப்பளித்துள்ளமைக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. //நான் 80களின் இறுதியில் மேட்டூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு வேலை பார்த்த பிராமண குலத்தைச் சேர்ந்தவர், அருகில் முள்ளுக்காட்டில் பெற்றவளால் தூக்கிவீசப்பட்டிருந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவந்தார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது எவ்வளவு ஆசையாக அவர்கள் அந்தப் பெண்குழந்தையை வளர்க்கிறார்கள் என்று காண நேர்ந்தது.//

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. அந்த நல்ல உள்ளங்கள் யாராக இருந்தாலும் வாழ்க ! :)

    பதிலளிநீக்கு
  25. முதல் முறையாக எழுதியது போன்று தோன்றவில்லை! நல்ல நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்! அருமையாக இருக்கிறது! தொடரட்டும் உங்கள் சிறுகதைகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. நன்றி கருத்துரையிட்ட அனைவருக்கும் மற்றும் வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கும் ஸ்ரீராமுக்கும். ஜாம்பவான்'கள் (ஜாம்பவிகள்?) உலவும் இணையத்தில்தான், 'தானும் எழுதலாம்' என்று நினைக்கும் எளியவர்களையும் எழுதுங்கள் என்று ஆதரிக்கும் மனோபாவத்தைப் பார்க்கிறேன். 'பெரியோர் என்றும் பெரியோர்'.

    'தளிர்' இந்தத் தளிர்'நடையோனைப் பாராட்டியதற்கு நன்றி. வை.கோ சார்.. எப்போதும்போல் எது எது அவரைக் கவர்ந்ததோ அவைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டியிருக்கிறார். அவரனைய அனுபவத்திற்கு சிறியவர்களிடம் இத்தனை நேரம் செலவழிக்க வேண்டியதில்லையாயினும், அவர்தம் பெருந்தன்மை அவர் எழுத்தில் தெரிகிறது. 'தில்லையகத்து' - கேடயம் ஏன் கொடுக்கிறீர்கள்? வாளோடு என்னிடம் சண்டையிடத் தயாராகிவிட்டீர்களா? (ஏன் என் கருத்தை எடுத்துக் கதை உருவாக்கினீர்கள் என்று?) அனுபவமிக்க கோமதி மேடம், கீதா மேடம், வலிப்போக்கன், ஜீவலிங்கம் அவர்கள், ராமலக்ஷ்மி மேடம், மாதவன், ஜீவி, பகவான்ஜி, காமாட்சிமேடம், முனைவர் ஜம்புலிங்கம், ரமணி அவர்கள், வல்லி மேடம், ஜி.எம்.பி ஐயா (வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை ஐயா.. ஆலமரங்களுக்கிடையில் எங்கனம் மாந்தளிர் வளர்வது? ஆலமரங்கள் ஆதரிக்கும்போதும்? உங்கள் அனைவரின் அனுபவத்தையும் படைப்புகளையும் படிப்பதே பல சாளரங்களைத் திறந்துவிடுகிறது), திருமதி வெங்கட்ஜி அவர்கள், மாணவர்களை முதலிடத்தில் கொண்டுவரும்பணியில் ஈடுபட்டாலும் தானும் முதலில் கருத்துரையிடும் கரந்தை ஐயா அவர்கள்.. அனைவருக்கும், படித்தவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அருமை...
    முதல் முயற்சியில் சிக்ஸர் அடிச்சிட்டீங்க மதுரைத் தமிழன் சார்...
    வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  28. அருமையான கதை. முடித்த விதமும் நன்று.

    உங்கள் படமும் அழகாய் வந்திருக்கிறது. பாராட்டுகள் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  29. 'நன்றி வெங்கட்ஜி மற்றும் பரிவை. இருவரும் encourage செய்யும் விதமாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!