திங்கள், 5 செப்டம்பர், 2016

"திங்க"க்கிழமை பதிவு – வாழைக்காய் அரைக் கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இந்த வாரம் நண்பர் நெல்லைத்தமிழன் அனுப்பி இருக்கும் ரெஸிப்பிகளில் ஒன்றை இங்கு பகிர்கிறேன்.
 

     நன்றி நெல்லைத்த தமிழன்..  
 

     வாங்க... வந்து உங்கள் செய்முறையைச் சொல்லுங்க..  இப்போ நெல்லைத்த தமிழன் சொல்வதைக் கேட்போம் நண்பர்களே...




 

     எனக்கு இந்தக் கறியமுது (என்ன தமிழ்..அடடா..) ரொம்பப் பிடிக்கும். என்னோட பசங்களுக்கும் இது ரொம்பப் பிடிக்கும். இதுக்கு தக்காளி சாத்துமது சாதம் நல்லா இருக்கும். இல்லாட்டா புளி இல்லாத குழம்பு (வேற என்ன.. மோர்க்குழம்புதான்) சாதத்துடன் சாப்பிட அருமையா இருக்கும். போதும் புராணம். எப்படிப்பா பண்றது?





      ரெண்டு வாழைக்காய். தோலை உரித்து அரை வட்டமாகத் திருத்திக் (கட் பண்ணுவது) கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓரளவு கெட்டியாகக் கரைத்த புளிஜலத்தில் வாழைக்காய்த் துண்டுகளையும், கொஞ்சம் மஞ்சப்பொடி, தேவையான அளவு உப்பு போட்டுக்கொள்ளவும். அரை அல்லது முக்காப் பதமா வேகவைத்துக்கொள்ளவும். வாழைக்காய்ல புளியும் உப்பும் கொஞ்சம் சேர்ந்திருக்கும். இப்போ, இதை வடிகட்டி, வாழைக்காய்த் துண்டங்களைத் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.





 
     இலுப்புச்சட்டியில், 4 சிவப்பு மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டுத் திருவமாறிக் (தாளித்துக்) கொள்ளவும். அதில் வெந்த வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டுக் கலக்கவும் (பிரட்டிக்கொள்ளவும்). கடைசியாக ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் சேர்த்துப் பிரட்டினால், இரண்டு நிமிடத்தில் வாழைக்காய் அரைக்கரேமது ரெடி.







     குறிப்பு: புளித்தண்ணீர் ரொம்பக் கெட்டியாயிடுத்துனா, வாழைக்காய்த் துண்டங்கள் ரொம்ப ஒட்டிக்கொள்ளும். ரொம்பப் புளிப்பு பிடிக்காதவர்கள் கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளலாம். ஆனால் புளி இருந்தால்தான் இந்தக் கரேமது நல்லா இருக்கும்.






     குறிப்புக்குக் குறிப்பு – நாங்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் எழுதியுள்ளேன். இது நம் வீட்டில் (அகத்தில்) புழங்கும் சொற்கள் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக. இதை வட்டார வழக்காகவும் புரிந்துகொள்ளலாம்.






 
     நான் நேற்று இதற்கு, சங்கீதா ஹோட்டல் பாணியில் மோர்க்குழம்பு பண்ணினேன். அதன் செய்முறை (பெரிய கம்ப சூத்திரமில்லை) விரைவில்… ஸ்ரீராம் அனுமதித்தால்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்

31 கருத்துகள்:

  1. ஆகா
    நண்பர் நெல்லைத் தமிழனின் ரெசிபி அருமை

    பதிலளிநீக்கு
  2. அரைக்கரேமது...இது எந்த மொழி வார்த்தை :)

    பதிலளிநீக்கு
  3. வாழைக்காய் அமாவாசைக்கறி என்று என் புக்ககத்தில் சொல்வாங்க. வாழைக்காயை அதுவும் ரொம்பவே முற்றாத வாழைக்காயில் இந்தக் கறி நன்றாக இருக்கும். அநேகமா அமாவாசைக்கு இந்தக் கறி அல்லது வாழைக்காய்ப் பொடிமாஸ் தான் பண்ணிண்டு இருக்கேன். :) இந்தப் பொடி சமயத்தில் இல்லைனா ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியே போட்டுக் கீழே இறக்குகையில் தேங்காய்த் துருவலைச் சேர்க்கலாம். திப்பிசத்துக்கு நமக்குக் கேட்கவா வேணும்! :)

    பதிலளிநீக்கு
  4. அரைக்கறேமுது என்பது வைணவ பரிபாஷை! திருத்துதல் என்று தான் காய்களை நறுக்குவதற்குச் சொல்வாங்க. முன்னெல்லாம் முக்கியமான விசேஷ நாட்களில் புரோகிதர்கள் சாப்பிட்டால் இந்தக் கறி கட்டாயமாய் இருக்கும். கல்யாணங்களில் கூட கல்யாணத்தன்று மதியச் சாப்பாட்டில் இந்த வாழைக்காய்க் கறி இல்லைனா பொடிமாஸ் கட்டாயம் இடம் பெறும். இப்போதெல்லாம் உருளைக்கிழங்கை இதே போல் செய்யறாங்க.

    பதிலளிநீக்கு
  5. எங்க வீட்டில் இது குழைஞ்சால் தான் பிடிக்கும். :)

    பதிலளிநீக்கு
  6. வாழைக்காய் ! எனக்குப் பிடித்த காய்!

    பதிலளிநீக்கு
  7. பார்த்த உடனே அம்மா நினைவுதான். அவள் தான் இத்தனை சிறப்பாகத் தயார் செய்வாள். நெல்லைத்தமிழன் வட்டார வழக்குடன் கரேமதும், மோர்க்குழம்பும் அருமை.
    மனம் நிறைந்துவிட்டது. சாப்பிட்டது போல உணர்வு.என்ன சொல்வதென்றே
    தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. அரைக் கரேமது என்று சொல்வது பாதிவெந்தது போலவும், கடக் கென்று கடிக்க ருசியாக இருக்கும்
    அதற்குத்தான் அந்தப் பெயர். முழுவதும் வெந்துவிட்டால் பொடிமாஸ் ஆகிடும்.

    பதிலளிநீக்கு
  9. வெளியிட்டமைக்கு நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக். கருத்துரையிட்டமைக்கு நன்றி கரந்தை சார், பகவான்'ஜி, ஜம்புலிங்கம் ஐயா, தேவகோட்டை கில்லர்ஜி, கீதா மேடம், புலவர் ஐயா, கோமதி மேடம், வல்லிசிம்ஹன் மேடம்.

    கீதா மேடம் - வாழைக்காய் அமாவாசைக் கறி - முன்னெல்லாம், அந்த அந்த விசேஷங்களுக்கு உரிய காய்கறிகளை அப்போது விற்பனைக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். (அகத்திக்கீரை, வாழைக்காய் போன்றவை). இப்போதெல்லாம் இது பரவலாக நடக்கிறதா என்று தெரியவில்லை. (பொடிமாஸ்-வருது வருது) உங்கள் பின்னூட்டம் (திங்கக் கிழமை) எப்போதுமே அது சம்பந்தமான பல ரெசிப்பிக்களையும், திருத்தங்களையும் கொண்டிருக்கும். அதை விரும்பிப் படிப்பேன்.

    வல்லிசிம்ஹன் மேடம்-உங்கள் பதிவினைப் படிக்கும்போது நினைத்துக்கொள்வேன்.. எவ்வளவு பாஸிடிவ் thinking என்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சங்கீதா ஓட்டல் மோர்க்குழம்பு அப்படி என்ன அதீத ருசினு புரியலை! :) இதோடு பலமுறை சொல்லிட்டீங்க! அது சரி, இதே போல் முற்றின வாழைக்காயில் வாழைக்காய்ப் பொடி செய்வாங்களே தெரியுமா? குளிர்நாட்களில் இரவுச் சாப்பாட்டின் போது வாழைக்காயைச் சுட்டுக் காரசாரமான பொடி செய்துவிட்டு பொடி சாதத்துக்குத் தொட்டுக்க டாங்கர் பச்சடியும் வைப்பாங்க. சுட்ட அப்பளமும் இருக்கும். வாழைக்காய்ப் பொடியைப் போல்த் தேங்காயும் முற்றிய தேங்காய்த் துருவலில் தேங்காய்ப் பொடி செய்யலாம். சாப்பாட்டுக்கும் போட்டுக்கலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. கறியமுது என்கிற வார்த்தை ஒவ்வொரு அகத்திலும் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. என் பிறந்தகத்தில் கறிமீது, என் மாமியார் கறமது என்பார். எப்படியோ அந்த பாஷையை இங்கு கொண்டுவந்ததற்கு நெல்லைத் தமிழனுக்கு நன்றி. நான் கூட என் பதிவுகளில் இந்த பரிபாஷையை அப்படியே உபயோகிக்கிறேன். இப்படி சில வார்த்தைகள் இருந்தன என்று வரும் தலைமுறை தெரிந்துகொள்ளட்டுமே என்று.
    இந்தக் கறியமுதுக்கு எங்கள் வீட்டில் அவ்வளவு வரவேற்பு இல்லை - என் கணவரைத் தவிர. அதனால் இப்போதெல்லாம் வாழைக்காயை தோலுடன் திருத்தி குக்கரில் வேக வைத்து உதிர்த்து பொடி போட்டு செய்துவிடுகிறேன். நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தவுடன் இதுபோல செய்து பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஹை!!!சேம் சேம்!!!! நெல்லைத் தமிழன் கறியமுது! கொலொக்கியலி கரெமது. வேக வைத்து - தளிகைப்பண்ணி, கொலொக்கியல் தளிப்பண்ணி . ஆம் நறுக்கி என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள் திருத்தி.

    திருவமாறி.... திரு(வ்)றி - கொலோக்கியல்....

    திருமாப்பள்ளியில்தானே தளிகை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நெல்லை ரெசிப்பிஸ் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பரிபாஷையில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கரமது.... நன்றாக இருக்கிறது. செய்முறை நன்று. நன்றியும்!

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. வாழைக்காய் அரைக்கரே(றே) மது!வாய் இருக்குமோ என்று வந்தேன். பசியோடு எழுதுகிறேன், இன்று வாழைக்காய் வாங்க வேண்டும்..... வாழைக்காய் அதிகமாய் இருப்பதாகத் தோன்றுகிறது(தட்டில்). பார்த்து சாப்பிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. 'நன்றி ஹேமா மேடம். நீங்கள் சொன்னது சரி. நான் அதிக அளவு பண்ணுபவன் (அளவாகப் பண்ணத் தெரியாது, எனக்கு ஒருவனுக்கு). நன்றி தில்லையகத்து டீம். சமயத்தில் நான் எழுதும்போது எங்கள் வழக்குமொழியை மறக்கக்கூடாது என்று வலிந்து எழுதுகிறேன். இந்த மொழியைவிட்டுவந்து கிட்டத்தட்ட 30 வருடங்களாகிவிட்டது. கிச்சனை தளிஉள் அல்லது திருப்பம் என்றுதான் சொல்லுவார்கள். அங்கு நாங்க பசங்க (70களில்) உள்ளே செல்வது, வெகு அபூர்வம். மீரா பாலாஜி, ரஞ்சனி மேடம், வெங்கட்ஜி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மனைவியிடம் செய்து பார்க்கச் சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
  19. அருமையான சமையல்
    படிக்கப் படிக்க
    நாவூறுகிறதே!

    பதிலளிநீக்கு
  20. புளித்தண்ணீரில், மஞ்சள்பொடி சேர்த்து வாழைக்காயை வேகவட்டு வடிக்கும் போதே காய் கமகமவென்று வாஸனையுடன் அழகாக இருக்கும். இந்த கடலை,உளுத்தம் பருப்புகளுடன்,தனியா மிளகாயையும் வறுத்துப் பொடித்துப்போட்டு காயை வதக்கினால்,அதுவும் நல்லெண்ணெயில் கறி பளபளவென்றிறுக்கும் என்று என் அம்மா வர்ணிப்பார்கள். பெருங்காயம் இல்லாத சமையலே இல்லை. இது இன்னும் ஸுலபமாக தாளித்துக் கொட்டியே வதக்குவது.வைஷ்ணவ பாஷைப் பதங்கள் அழகு. நம்மையறியாமல் நம்முடைய நடைமுறை வார்த்தைகள் அந்தந்தப் பொருளுக்குப் பின்னும் அழகு சேர்க்கிறது.
    இந்த வாழைக்காயை ஒவ்வொரு பிராந்தியத்தில் வெவ்வேறு முறைகளில் சமைக்கிரார்கள். வெட்கப்பட்டால் வாழைக்காய் கறி கிடைக்காது என்று வசனமும் உண்டு. அமாவாஸை மாத்திரமில்லை. கல்யாணங்களிலும் முன்பெல்லாம் இதற்குப் பிரதான இடமுண்டு.ருசித்துப் புசிக்கலாம் எல்லோரும். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத் தமிழன் திருப்பம் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அதன் நல்ல வடிவம் திருமாப்பள்ளி என்பது அதுவும் அந்தப் பக்கங்களில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. உண்மைதான் நெல்லைத் தமிழன் திருப்பத்தில் திரும்பக் கூட விட மாட்டார்கள். அதுவும் ஆண் குழந்தைகளை. பெண் குழந்தைகளுக்கும் ஒரு வயதிற்கு மேல் தான் அனுமதி. அதாவது கல்யாண வயது நெருங்கும் சமயத்தில். இது வீட்டிற்கு வீடு மாறுபடலாம் ....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இன்றைக்குத்தான் எதேச்சயாகப் பார்த்தேன். திருப்பம்-சொல்வழக்கு. சரியான வார்த்தை திருமடைப்பள்ளி. எல்லாக் கோவில்களிலும் இதனைப் பார்க்கலாம். சொல்வழக்கில் 'மடைப்பள்ளி' என்பார்கள். திருமாப்பள்ளி கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  24. பேச்சு வழக்கில் 'திருவாப்புளி' என்பார்கள்!

    பதிலளிநீக்கு
  25. வாழைக்காய் அரைக்கிறேமது ..செய்து சாப்பிட்டாச்சு உங்க சங்கீதா ஸ்டைல் மோர்க்குழம்பு தான் செய்தென் .செம காம்போ ..பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!