புதன், 25 நவம்பர், 2020

பொய்யே சொல்லாமல் வாழ்தல் சாத்தியமா ?

 


ஏஞ்சல் : 

> 1, பொய் சொல்லாமல் , பொய்யே சொல்லாமல் வாழ்தல் சாத்தியமா ?

# நிச்சயம் அரசுப் பணியாளர்களுக்கு சாத்தியமில்லை. ஒரு நாள் லீவு பிராவிடண்ட் ஃபண்ட் கடன் இவற்றைப் பொய் சொல்லாமல் பெறுவது அசாத்தியம்.

& சாத்தியம்தான் என்று நான் சொன்னால், அது பொய். 

> 2, கடினமான கரடுமுரடான அனுபவங்கள் ஒருவரின் வாழ்க்கையை செம்மைப்படுத்துமா அல்லது தவறான வழியை தேர்ந்தெடுக்க வைக்குமா ?

# அனுபவிப்பவரின் மனப் பாங்கை ஒத்து செம்மையோ சலிப்போ சினமோ பிறழ்வோ  ஏற்படும்.

& கடினமான அனுபவங்கள், படித்த பண்பான நல்ல மனிதர்களை செம்மைப்படுத்தத்தான் செய்யும். 

> 3, கடவுளை கடவுளின் அன்பை உணர்ந்த அதாவது அனுபவபூர்வமா உணர்ந்த தருணம் உண்டா ?

# இதுவரை இல்லை. கடவுள் துணை இருக்கிறார் என்று எண்ணவைத்த சில தருணங்கள் உண்டு.

$ கடவுள் அருள் இல்லை என்றால் இப்போது இதை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் கடவுள் என்பதே நம் நல்ல குணங்கள் தான் என்று எண்ணுபவன். 

& நிறைய உண்டு. குறிப்பாக விளிம்பு நிலைக்கு சென்று மீண்ட 26 - 06 - 2017. 

> 4, எதோ ஒரு விஷயம் உதாரணத்துக்கு பட்டாம்பூச்சியோ /மரம் இலை இப்படி வந்தவுடன் அதன் காரணம் என்னவாயிருக்கும்னு கூகிளில் ஆராய்ச்சி செய்யும் வழக்கமுண்டா ???இந்த ஆராய்ச்சி பழக்கம் நல்லதா ? கெட்டதா ?

# நல்ல பழக்கம் தான். ஆனால் என்னிடம் இல்லை.

& ஆராய்ச்சி செய்யும் பழக்கம் எப்போதுமே உண்டு. அது நல்லதுதான். அந்தப் பழக்கத்தால் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ஏராளம். 

> 5, இன்னிக்கு மிக்ஸர் விரும்பிகள் நிறையபேர் இருப்பதுகண்டு இன்னொரு கேள்வி : கார மிக்சருடன் லேசா சர்க்கரை ஐ மீன் வெள்ளை சர்க்கரை தூவி சாப்பிட்டிருக்கீங்களா ?

 # இல்லை. பிடிக்காது என்று தோன்றுகிறது. 

& ஐயே !! நினைத்துப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. என்னுடைய நண்பர் ஒருவர் ஆபீஸ் கேண்டீனில் சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின் வாழைப்பழம் சாப்பிடும்போது - உரித்த வாழைப்பழத்தை உப்புப் பொடியில் தொட்டுச் சாப்பிடுவார். ( என்னுடன் இப்போ வாட்ஸ் அப் குழு ஒன்றில் உள்ளார். 'இப்போதும் அப்படித்தான் சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டிருந்தேன். 'இல்லை இப்போதெல்லாம் உப்பு, இனிப்பு, காரம் எல்லாவற்றுக்கும் தடா' என்கிறார்.)


திண்டுக்கல் தனபாலன் : 

> இன்றைய தீநுண்மி போல, தீபாவளி எனும் சொல் முதற்கொண்டு, தமிழர்களிடம் தொற்றின காலம் எப்போது...?

# தீநுண்மி என்றால் என்ன ? இதுவரை கேள்விப்படாத சொல். வைரஸ் ?   
தீபாவளி என்ற சொல் ஆரியருடன் இங்கு வந்தது என்று சொன்னால் சிலர் திருப்தி அடைவர்.

$ வைரஸ் என்று எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி சொன்னால் என்ன ? Covid19 என்று புரிகின்ற மாதிரி சொல்லும் சொல்லாட்சி நம்மிடம் உண்டா?
தீப ஆவளி என்பது தனித்தமிழ், தனி நாடு எனும் வியாதி வரும் முன் மணிப் பிரவாள நடையில் வந்திருக்கலாம்.


நெல்லைத்தமிழன்: 

> தவறான கேள்வியா நினைக்கவேண்டாம். தமிழர், தமிழ் என்று 'பீத்திக்கொள்ளும்' பெரும்பாலானவர்களுக்கு, தங்களுக்கு வைத்துக்கொள்ள தமிழ் பெயர் இல்லாது போயிற்றே. அதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?

# பெயரில் என்ன இருக்கிறது ? பெயர்  பெற்றோர் வைத்தது.  தமிழ் ஆர்வம், தமிழின் பெயரால் "போராட்டம்" என்பதெல்லாம் எளிதான முதலீட்டில் எக்கச் சக்கமான வியாபாரம் என்பதைப் பலரும் தெரிந்திருக்கிறார்கள்.

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் "தனித்தமிழ்"ப் பெயர் ஒன்றே தமிழார்வத்துக்கு உரைகல் என்று ஏற்றுக் கொண்டுவிட்டது போல் அல்லவா இருக்கிறது ?

பெயரில் தம் குடும்பத்து "நட்சத்திரம்" நினைவு கூரப்பட வேண்டும் என்பதன் காரணமாகக் கூட "பால"  "நிதி"  " குமார " போன்ற பகுதிகள் பயன் படுத்தப் படலாம்.

உன் பெயரில் வட சொல் என சண்டைக்குப் போவதில்  நியாயம் இராது.

$ தனித் தமிழ் பெயர் வைத்துக் கொண்டால் காளிதாசனோ கம்பனோ ஆகி கவிதையோ காவியமோபுனைந்திடுவாரா?


கீதா சாம்பசிவம் : 

> 1. தீபாவளிப் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் உண்டா?

$ , & :  உண்டு. 

# வெடி ஆர்வம் இளவயதில் இருந்தது . அறுபது பிராயத்தில் மறைந்தது.

> 2.இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை போடுகிறார்களே! அது சரியா?

$ 100 மைல் வேகத்தில் போகக்கூடிய வாகனங்கள் இருந்தாலும்,வேகத்தடைகள், limit இவை எல்லோர் நன்மை முன்னிட்டு தேவைப் படுவது போல வெடிகள் சப்தம் பெரிதாகி நிரந்தர செவிடர்களை உண்டாக்குகிறதே?

 # சூழல் மாசு படுவதால் பட்டாசு தடை சரிதான். ஆனால் அதை நம்பிப் பிழைப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு அவசர அவசியம். 

& பட்டாசுக்கு மட்டும்தானே தடை. மத்தாப்பூ, தரைச்சக்கரம், வாணங்களுக்கு தடை இல்லைதானே? (ஆனால் இந்த தீபாவளி அன்று பல இடங்களில் மக்கள் கட்டுப்பாடுகள் எதையும் இலட்சியம் செய்யாமல் வெடிகள் வெடித்தார்கள் என்று பேஸ்புக் பதிவுகளில் படித்தேன்) 

> 3. தடையை மீறிப் பட்டாசு வெடிப்பவர்கள் பற்றி?

# சிறு குற்றங்கள் மன்னிக்கப் பட வேண்டியவை. 

> 4. பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதால் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே! அதற்கு என்ன செய்யலாம்?

# இது அவசரமாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினை. 

> 5. தீபாவளி அன்னிக்குப் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் கெடுகிறதா?

# நாடளாவி ஏக காலத்தில் புகை மண்டலத்தை எழுப்புவது கெடுதி விளைவிக்கும்தான். 

> 6. பொதுவாகவே எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் பட்டாசு வெடிக்கிறார்கள். தலைவர் வரவு, நண்பர்கள் திருமணம், பிறந்தநாள், கிரிக்கெட்டில் ஜெயித்தால், ஆங்கிலப் புத்தாண்டு இப்படினு எல்லாத்துக்கும் பட்டாசு வெடிப்பது உண்டு. தீபாவளி அன்று மட்டும் வேண்டாம்னு சொல்லுவது ஏன்?

# பெரிய அளவில் புகைவது தீபாவளியின் போதுதானே.

> 7.தீபாவளி பக்ஷணம், பட்டாசு, புத்தாடைகள் இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது? ஏன்? இப்போது எது கவர்கிறது?

$ சின்ன வயதில் பட்சணம், சற்று வளர்ந்த பின் உடை, இப்போது முதுமையில் (77 முதுமையில் சேர்த்தி என்றால்! ) உறவினர் நண்பர்களுடன் கூடி மகிழ்தல்.

# சிறு பிராயத்தில் பட்சணம், இளமையில் வெடி, வளர்ந்த பின் புத்தாடை, கனிந்த பின் அடுத்தவர் மகிழ்ச்சி.

> 8. கூடப் பிறந்தவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்த அனுபவம் இருக்கும். அதில் யார் சிறப்பாக தைரியமாகப் பட்டாசு வெடிப்பார்கள்? உங்கள் மூத்த சகோதரர்களும் உங்களோடு சேர்ந்து பட்டாசு வெடித்திருக்கிறார்களா?

$ தைரியமாக வெடி வெடித்த (சகோதரர்கள்) நாங்கள் 6 பேரும் பழுவேட்டையர்கள்கள்தான்! அப்பா சித்தப்பா எல்லோரும் கூட வெடி வெடிப்பார்கள். அம்மா, மனைவி, சகோதரிகளும்.

# விலக்கில்லாமல் எல்லாருடனும் கொண்டாடி இருக்கிறோம். நானே ஓவர் (அசட்டு)  தைரியம் கேஸ்தான். 

> 9.தீபாவளி பக்ஷணம் செய்ய அம்மாவுக்கு உதவியது உண்டா? மனைவிக்கு?

$ உதவியது தீபாவளி மட்டும் அல்ல; மற்ற பண்டிகைகள் சமயங்களில்  கூடத்தான்! 

# இல்லை. இருவருமே தனியாகவே சாதிக்கும் திறனாளிகள். 

& அம்மாவுக்கு - அம்மா கேட்டுக்கொண்டால் உதவியது உண்டு. மனைவி உதவி கேட்டது இல்லை. நானாக எப்போதாவது சிறு உதவிகள் செய்தது உண்டு. 

> 10. உங்களால் மறக்க முடியாத தீபாவளி எது? ஏன்?

$ அரியலூர் ரயில் விபத்து நடந்த வருடமும் தனுஷ்கோடி கடலில் கரைந்த நாளும். 

# மிக மோசமான பட்டாசு விபத்து நடந்த இரண்டு தீபாவளிகள்.

& எல்லா சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளிகள் எல்லாமே மறக்க முடியாதவை. 

> //கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தீபாவளிப் பண்டிகை பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டதற்கும், கோயில்களில் தீபாவளி கொண்டாடப்பட்டதற்கும் ஆதாரம் கல்வெட்டுக்களில் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்,. பத்துப் பதினைந்து நாட்கள் முன்னர் தினமலரில் வந்திருந்தது அவருடைய பேட்டி.//திருச்சிப் பதிப்பில் வந்திருந்தது. அதைத் தேடி எடுக்கணும். இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

# ஒரு நிபுணர் சொன்னதை மறுத்துச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  அதற்கும் முன்பாகவே தீபாவளி வந்திருக்க சாத்தியம் உண்டு தான்.

& நானும் பேஸ்புக் பதிவு ஒன்றில் படித்தேன்.  அந்தப் பதிவின் screenshot  இங்கே  கொடுத்துள்ளேன் :



> இங்கே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வருடா வருடம் தீபாவளி கொண்டாடுவதோடு அனைத்து சந்நிதி தெய்வங்களுக்கும் தீபாவளிப் பரிசு, புத்தாடைகள், எண்ணெய், சீயக்காய், பெண் தெய்வங்களின் சந்நிதிகளுக்கு மஞ்சள் பொடி உட்படப் பெருமாள் சார்பில் அளிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வேறே எந்தக்கோயிலில் இப்படி உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டுனு நினைக்கிறேன்.

 # கோயில் நடைமுறைகள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.

& எனக்கும். 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

> நீண்ட பயணங்களில் 
1. பாட்டு கேட்பது(சாஸ்ததிரீய இசை அல்லது சினிமா பாடல்கள்)
2. அருகில் இருப்பவரோடு உரையாடுவது
3. புத்தகம் படிப்பது
4. வேடிக்கை பார்ப்பது
இவற்றில் எதை செய்வீர்கள்?

# உண்மை யில் இவை எல்லாம் பிடிக்கும். செய்வது வழக்கம்.
அவ்வப்போது தக்காளி சூப்,  மசால்வடை, மிளகாய் பஜ்ஜி என விற்பவர்களை ஊக்குவிப்பதும் பிடித்துச் செய்வதுதான்.

& முறையே 4, 3, 2. ரயில் சத்தத்தில் பாட்டு கேட்பது கஷ்டம். 

> தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் கர்நாடக இசை, மெலடி, குத்துப்பாட்டு, கிராமீய இசை இந்த ஒவ்வொன்றிலும் சிறந்தவர் என்று யாரை குறிப்பிடுவீர்கள்?

பாடல் புகழ் பெற்று விட்டால் எல்லோருமே சிறந்தவர்கள்தான்.  எல்லோருமே எல்லாமே அமைப்பதில் வல்லுநர்கள்தான்.  அமைவதில்தான் இருக்கிறது.

கர்நாடக இசை : கே வி மகாதேவன். 
    மெலடி : எம் எஸ் வி, இளையராஜா 
    கிராமிய இசை : இளையராஜா 
    குத்துப்பாட்டு : கேட்பதில்லை / இரசிப்பதில்லை. 

----- 

 எங்கள் கேள்வி. 

சமீபத்தில் பேஸ்புக் தளத்தில், Hug ring  என்ற மோதிர விளம்பரம் பார்த்தேன். அந்த விளம்பரப் படத்தில் ஒரு தவறு உள்ளது. அது என்ன என்று கண்டுபிடிங்க !

==============

மின்நிலா பொங்கல் மலர் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக படைப்புகள் வந்துகொண்டு உள்ளன. 

நீங்க என்ன அனுப்பலாம்? 

கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

சிறுகதை 

உங்கள் ஊர் பற்றிய கட்டுரை - நீங்க எடுத்த படங்களுடன் 

கவிதை 

சுவாரஸ்யத் தகவல்கள் / துணுக்குகள் 

சமையல் குறிப்புகள் 

பொங்கல் பண்டிகை பற்றிய உங்கள் நினைவுகள் 

நீங்க வரைந்த படங்கள். 

உங்க சொந்தக்கார / நண்பர் வீட்டுக் குழந்தைகள் வரைந்த படங்கள். 

எல்லாவற்றையும் engalblog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். 

(இது வரை படைப்புகள் அனுப்பியுள்ள துரை செல்வராஜூ, சுபஸ்ரீ ஸ்ரீராம், கீதா ரெங்கன், நெல்லைத்தமிழன், சூரியப்ரகாஷ், தில்லைநாயகம், kgy ராமன், தேவராஜன் சண்முகம், சியாமளா வெங்கட்ராமன், அட்டைப்படங்கள் + சில கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள அருண் ஜவர்லால் ஆகியோருக்கு எங்கள் நன்றி. இவர்கள் மேலும் படைப்புகளை அனுப்பலாம். வரவேற்கிறோம். ) 

===== 

இந்த வார பட்டிமன்றம். 

(வெண்)பொங்கலுக்கு சிறந்த சைடு டிஷ் எது? 

பின்னூட்டங்களில் கருத்து சொல்லுங்க. ஒருவர் கூறும் கருத்தை ஆதரித்தோ / எதிர்த்தோ மற்றவர்கள் கருத்துகள் பதியலாம். ஆட்களை விமரிசனம் செய்யாதீர்கள். கருத்து மோதல் மட்டுமே இருக்கலாம்! 

பின்னூட்டக் கருத்துகள் தொகுக்கப்பட்டு பொங்கல் மலரில் வெளியிடப்படும். 

நடுவர்கள் தீர்ப்பு அடுத்த வாரம்.  

========== 


====== 

166 கருத்துகள்:

  1. 1, பொய் சொல்லாமல் , பொய்யே சொல்லாமல் வாழ்தல் சாத்தியமா ?

    ஒய்?

    பதிலளிநீக்கு
  2. இன்னிக்கு மிக்ஸர் விரும்பிகள் நிறையபேர் இருப்பதுகண்டு இன்னொரு கேள்வி : கார மிக்சருடன் லேசா சர்க்கரை ஐ மீன் வெள்ளை சர்க்கரை தூவி சாப்பிட்டிருக்கீங்களா ?

    மிக்சரில் எந்த மீனையும் தூவிச் சாப்பிட்டதில்லை

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தீநுண்மி போல, தீபாவளி எனும் சொல் முதற்கொண்டு, தமிழர்களிடம் தொற்றின காலம் எப்போது...?

    யார் தமிழர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் தமிழர்கள் என்பதில் யாருக்குமே புரிதல் கிடையாது. பொதுவா எல்லோருக்கும் தெரிந்தது, அடுத்தவன் தமிழனா என்று கேள்வி எழுப்புவது மட்டும்தான். தமிழர் என்பதை சரியாக நிர்ணயித்து, காலச்சக்கரத்தில் சென்று பார்த்தால் 90% க்கு மேல் இங்க தமிழர்கள் (for that matter in each regional language states) இருக்க மாட்டாங்க.

      நீக்கு
    2. தொல்காப்பியர் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அப்போதே ஆரியக்கடவுள் எனப்பட்டவர்கள் அவர் பாடல்களில் இருக்கிறார்கள். அப்போ ஆரியர்கள் என்னும் கூற்றே அடிபட்டுப் போயிடும். தொல்காப்பியருக்குப் பின்னாடி வந்தவங்க என்றால் இந்தக் கடவுளர்கள் அனைவரும் தமிழர்கள் எனப்படுபவர்களால் பல நூற்றாண்டுகளாக வழிபடப்பட்டவர்கள் எனவும் ஆரியர்கள் என்பவர்கள் கொண்டு வரலை என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். ஆகத் தமிழர்கள் என்பது யார் எனச் சொல்லுவது கஷ்டமே!

      நீக்கு
    3. தமிழர் என்ற சொல்லே பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் இருந்ததா என்று தேட வேண்டும்

      நீக்கு
    4. //தமிழர் என்ற சொல்லே // - இது ஒரு விஷயமே இல்லை என்பது என் அபிப்ராயம். காரணம் புரிய, கீழ்கண்ட பாடலைப் பாருங்கள்.

      வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
      திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
      உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
      ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்

      மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை. எல்லோரிடமும் தேவையான பொருட்செல்வம் இருந்தது. மக்களிடம் அறியாமை இல்லை; ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்த நாட்டில் உண்மை இல்லை; ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை

      அந்தக் காலத்தில் கம்யூனிகேஷன், போக்குவரத்து மிகக் குறைவு. அதுனால அவங்கள்ட புழங்கியது, 'இவன் பாண்டிநாட்டான்', 'சோழநாட்டான்', 'இவன் சேரநாட்டான்', 'இவன் யவனன்' என்பதுபோலத்தான்.

      நீக்கு
    5. // $ வைரஸ் என்று எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி சொன்னால் என்ன ? Covid19 என்று புரிகின்ற மாதிரி சொல்லும் சொல்லாட்சி நம்மிடம் உண்டா? //

      தமிழ் வாழ்க...!

      // யார் தமிழர்கள்? //

      தமிழ் முதல் எழுத்து அ முதல் கடைசி எழுத்து ன் வரை உள்ள திருக்குறள் போல் வாழ்ந்தவர்கள் இருக்கலாம்...!

      // தமிழர் என்ற சொல்லே பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் இருந்ததா என்று தேட வேண்டும் //

      ஏன் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னால் தேடக்கூடாதா...?

      முதலில், தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்ட ஒரு குறுநூல் "தமிழன் எப்படிக் கெட்டான்?" தேடி படிங்க தலைவரே...!

      நீக்கு
    6. படித்திருக்கிறேன். நூலுக்கும் 'தமிழன்' என்ற சொல் சில நூற்றாண்டுகட்குட்பட்டது என்ற என் கருத்துக்கும் என்ன தொட்ர்பு என்று புரியவில்லையே?

      நீக்கு
  4. தீபாவளி பக்ஷணம் செய்ய அம்மாவுக்கு உதவியது உண்டா? மனைவிக்கு?

    சாப்பிட்டு உதவியதுண்டு

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுகள்.

    கேஜிஜி அவர்கள் இந்தப் பகுதியை மெருகேற்றி வருகிறார். என்ன ஒண்ணு... கேள்விகளுக்கிடையில் ஓரிரு படங்கள் சேர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காலத்துல இருக்கீங்க? தமன்னாவுக்கு வயசு ஏற ஏற எனக்கு வயசு குறைந்துகொண்டே வருகிறது என்ற விஷயம் இன்னுமா தெரியலை? ஹிஹி

      நீக்கு
    2. அப்போ நிக்கி கல்ராணி படம் போடுவோமா?

      நீக்கு
  6. இங்கே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வருடா வருடம் தீபாவளி கொண்டாடுவதோடு அனைத்து சந்நிதி தெய்வங்களுக்கும் தீபாவளிப் பரிசு, புத்தாடைகள், எண்ணெய், சீயக்காய், பெண் தெய்வங்களின் சந்நிதிகளுக்கு மஞ்சள் பொடி உட்படப் பெருமாள் சார்பில் அளிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வேறே எந்தக்கோயிலில் இப்படி உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டுனு நினைக்கிறேன்.

    நீ கே நீ ப?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்குத் தெரிந்த கோவிலை மட்டும் சொல்லித் தப்பித்துவிடக் கூடாது என்ற மு.ஜா.

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து மதுரை மீனாக்ஷி கோயிலில் அர்ச்சாவதாரங்களுக்குப் புத்தாடை அணிவிப்பது உண்டு. ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்பது பார்த்த நினைவில் இல்லை. இன்னும் வயசானவங்க இருந்தால் கேட்கணும். ஸ்ரீரங்கத்தில் கோயிலொழுகு போன்ற கோயில் சார்ந்த விபரங்களைத் தெரிவிக்கும் புத்தகங்களிலேயே இது உண்டு. அநேகமாய்ப் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே இருப்பதாய்த் தெரிய வருகிறது. சிதம்பரத்திலும் உண்டு என தீக்ஷிதர்கள் சொல்லி இருக்காங்க. சிதம்பரம் கோயிலில் சுதந்திர தினக் கொடியேற்றம் கூட உண்டு. கிழக்கு கோபுரத்தில் வருடா வருடம் கொடியேற்றுவார்கள்.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழரே, எனக்குச் சிதம்பரம் கோயிலைப் பற்றிய தகவல்கள் அதிகம் தெரியும். சிதம்பர ரகசியம் என்னும் என்னோட மின்னூலைப் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    4. அதனைப் படித்திருக்கிறேன். சிதம்பரம் கோவிலைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும், நிறைய காண்டாக்ட் இருக்குன்னுலாம் தெரியும். ஆனா நாங்க சிதம்பரம் கோவிலுக்குப் போறோம்னு சொன்னா, ஒரு நாள் தங்குங்க, இவரை காண்டாக்ட் பண்ணுங்க, எல்லா வேளையிலும் கோவில் பிரசாதம் இது இது தருவாங்க, இந்தக் கிழமைல போனீங்கன்னா இது நிச்சயமாக் கிடைக்கும் என்ற விஷயம் மட்டும் ஷேர் பண்ண மாட்டாங்க இந்த கீசா மேடம். ஹாஹா.

      நீக்கு
    5. எல்லா வேளையிலும் என்ன பிரசாதம்னு தெரியாது. ஆனால் தீபாவளி சமயம் தேன்குழல், லட்டுவும், திருவாதிரை அன்று களியும், மாலை வேளைகளில் சில நாட்கள் சர்க்கரைப் பொங்கல், சில நாட்கள் கல்கண்டுப் பொங்கல் கிடைக்கும். நெய் வடை கிடைத்தால் அன்று கால பைரவருக்கு அபிஷேஹம் நடந்திருக்கும். நாங்க எதுவும் சொல்லுவதில்லை. கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வருவோம். இப்போப் பிரசாத ஸ்டால் போட்டிருக்காங்க. விலைக்கு நம்பி வாங்கலாம். ஏனெனில் தீக்ஷிதர்களே அவங்க அவங்க வீடுகளில் செய்து கொண்டு வருகிறார்கள். அங்கே எல்லாமும் கிடைத்தாலும் முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு போன்றவை அத்தனை சுவை இல்லை.

      நீக்கு
    6. நானும் அந்த ஸ்டால்களைப் பார்த்தேன். என் மனைவி, நான் பார்த்ததைப் பார்த்துட்டான்னா, என்னை அந்த இடத்திலிருந்து கிளப்புவதிலேயே குறியா இருப்பா. (நானும் அது இது என்று நிறைய வாங்கி வேஸ்ட் பண்ணிடுவேன்). சில ஸ்டால்களை, அவள் இது கோவில் ஸ்டாலே இல்லை, வாங்கக்கூடாது என்று சொல்லிடுவா.

      ஸ்ரீரங்கம் தாயாரை சேவித்துட்டு வெளியே வரும்போது அங்க பிரசாதம் விற்றார்கள் (பொதுவா அங்கெல்லாம் ஸ்டால் கிடையாது). உடனே நான் வாங்கினேன், நல்ல ருசி. மூலவர் சன்னிதி பட்டர் ஒரு தடவை எனக்கு கோவில் பிரசாதம் தேன்குழல் தந்தார். எனக்கு from ருசி point of view, அவ்வளவா பிடிக்கலை.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் தொற்று குறித்த அச்சம் குறைந்து இயல்பான வாழ்க்கை வாழவும் ஆரோக்கியம் பெருகவும் மனமார்ந்த பிரார்த்தனைகள். புயலால் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு விரைவில் நிவாரணங்கள் கிடைத்து இயல்பு வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. கேள்விகளும், பதில்களும் அருமை! $ மீண்டும் வந்து பங்கெடுத்ததில் மகிழ்ச்சி! * இசை பற்றிய கேள்விக்கு இவர் பதில் சொல்லாமல் யார் சொல்லுவார்கள்? மற்றவற்றிற்குப் பின்னர் வருவேன். இப்போது வெண் பொங்கலுக்கு உகந்தது கொத்சு மட்டுமே என்று சொல்லிக் கொண்டு என் தரப்பை நிறைவு செய்கிறேன்.
    மறந்துட்டேனே, தீபாவளி பற்றிய உங்கள் முகநூல் தகவலுக்கு நன்றி. எனக்கு அது காணக்கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கும் இன்று பதில் சொல்ல வருகிறேன். எனக்கு மனதில் வெண்பொங்கல் சூடாக மிகச் சுவையாக பண்ணமுடிந்தால் அதற்கு எதற்கு தொட்டுக்கொள்ள என்று தோன்றும். ஹாஹா

      நீக்கு
    2. அந்த கொத்சுவும் பருப்பெல்லாம் சேர்க்காமல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாக் கத்திரிக்காய்(குழைவாக) வெங்காயம் மட்டுமே போட்டதாக இருக்கணும். சூடான பொங்கலில் முந்திரிப்பருப்பு முழித்துப் பார்க்க அதைச் சாப்பிட்டுட்டுப் பொங்கலோடு கொத்சுவையும் சேர்த்துச் சாப்பிடணும்.
      பி.கு. எனக்குப் பொங்கல் அவ்வளவெல்லாம் பிடித்தமானது இல்லை. கொஞ்சம் போலச் சாப்பிடுவேன்/கொத்சு இருந்தால்!

      நீக்கு
    3. ஆஹா நினைக்கும்போதே சுகானுபவமாக இருக்கு.

      நீக்கு
    4. வெறும் கத்தரிக்காய் வெங்காயம் வேக வைத்தால் போதுமா?

      நீக்கு
    5. கத்தரிக்காய், வெங்காயம் வதக்கி நன்கு மசிந்த நிலையில் புளி விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து, இன்னொரு வாணலியில் கடுகு,பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை, மஞ்சள் பொடி தாளித்துக் கொண்டு கொத்சுவுக்கென வைத்திருக்கும் பொடியைக் கொதிக்கும் கொத்சுவில் போட்டுப் பொடியையும் சேர்த்துப் பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ளணும். நோ பருப்பு. கொத்சு எனில் பருப்பே கிட்டே வரக் கூடாது! ஆமாம்! சொல்லிட்டேன்!

      நீக்கு
  9. //சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே// - இந்த மாதிரி சிந்திப்பதே அர்த்தமில்லாதது. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. நாம இந்த மாதிரி கேள்வி எழுப்பினால், அவங்க வாழ்க்கையை நினைத்து என்ன செய்வாங்க என்று ஆச்சர்யப்படுகிறோமே தவிர நம்மால் வேறு எதையும் செய்யமுடியாது.

    பிறக்கும்போதே இதுதான் வாழ்வாதாரம் என யாருக்கும் நிச்சயம் கிடையாது. கால மாற்றங்களுக்குத் தயாராக இருக்கணும்.

    காலையில் வம்பை ஆரம்பித்து வைப்போம்.

    நாம தட்டச்சு, சுருக்கெழுத்து கத்துக்கும்போது, இதுவரை கையால் எழுதி வாழ்க்கையை ஓட்டறவங்க என்ன பண்ணுவாங்கன்னு நாம நினைக்க முடியாது. பதிவு நாடா வரும்போது, சுருக்கெழுத்து அழிந்துவிடுமே எனக் கவலைப்பட முடியாது. அறிவியல் மாற்றங்கள் வாழ்வாதாரத்தின் போக்கை மாற்றும். இது பெரிய சப்ஜெக்ட். நான் மக்கள் தொலைக்காட்சி தெருக்கூத்துகளைப் பார்த்து நொந்துபோனேன், காரணம் ரசனை மாற்றம்.

    வெடி சம்பந்தமா எழுதினால் சர்ச்சை உண்டாகும்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் கர்நாடக இசை, மெலடி, குத்துப்பாட்டு, கிராமீய இசை இந்த ஒவ்வொன்றிலும் சிறந்தவர் என்று யாரை குறிப்பிடுவீர்கள்?


    கர்நாடக இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    மெலடி: எம்.எஸ்.விஸ்வநாதன்
    குத்துப்பாட்டு: எம்.எஸ்.விஸ்வநாதன்
    கிராமீய இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன், எல்லாத்துக்கும் இளையராஜான்னு சொல்லும். முந்தைய ஜெனரேஷன், ஐயரை (ஜி ராமனாதன் அவர்கள்) நினைவுகூறும். ரசனை என்பதே சக்கரம்தானே.

      கேவிஎம்மின் மன்னவன் வந்தானடியை மறக்கலாமா

      நீக்கு
    2. //கேவிஎம்மின் மன்னவன் வந்தானடியை மறக்கலாமா//அதே அதே.

      நீக்கு
    3. முந்தைய ஜெனரேஷனுக்கு ரசனை கிடையாது, அடுத்த ஜெனரேஷனுக்கு ரசனை சுத்தமா கிடையாது :-)

      நீக்கு
    4. //அடுத்த ஜெனரேஷனுக்கு ரசனை சுத்தமா கிடையாது :-)// -முந்தின ஜெனெரேஷனுக்கு நம்மை விட அதிக ரசனை உண்டு (யாருக்குமே அவர்களோட முந்தின). அடுத்த ஜெனெரேஷனுக்கு, யாருக்குமே, அவர்கள் ஜெனெரேஷனைவிட ரசனை நீர்த்துப்போய்விடுகிறது.

      ஆனா நீங்க சொன்ன மாதிரிதான் ஒவ்வொரு ஜெனெரேஷனும் நினைக்குது. என் பசங்க ஆங்கிலப்பாடல்களைத்தான் பெரும்பாலும் கேட்பாங்க, அந்த இழவுக்கு வரிகளைவேறு சரியா பாடுவாங்க, எனக்கு ஒரு எழவும் காதுல விழுவதில்லை, அட இந்த வரிகளையா இந்தப் பி.காரன்/காரி பாடினா என்று.

      ஒரு நாள் அவங்கள்ட இதுபற்றி விவாதித்தேன். நம்ம மென்மை இசையில் இல்லாதது என்ன இருக்கிறது என்று. அவங்க சொல்றாங்க, அந்த டாபிக்குக்கே போகவேண்டாம், அந்த அந்த ஜெனெரேஷனோட ஒத்த ரசனையில் நாமும் இல்லைனா, we will be outdatedனு சொல்றாங்க. அதுவும் சரிதானே.

      நீக்கு
    5. ஆங்கில (மேற்கத்திய?) இசை தனி தான். அங்கேயும் ஜெனரேஷன் இடைவெளி உண்டு.. நம் இசையில் இல்லாத நிறைய மேன்மைகள் மேற்கத்திய இசையில் உண்டு என்றே நினைக்கிறேன்.. அங்கே இல்லாத மேன்மைகள் நம் இசையிலும் உண்டு.. (இந்த இந்துஸ்தானின்றாங்களே அதான் ஒண்ணும் புரியலே க)

      நீக்கு
  11. அனைத்து கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்.

    எல்லோரின் நலத்துக்கும், நோயற்ற வாழ்வுக்கும்
    பிரார்த்தனைகள்.
    இந்த நாள் இனிய நாளாகட்டும்.

    பொங்கலுக்கு ஏற்றது மிளகு குழம்பு+ கொத்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. பொங்கலிலும் மிளகு, குழம்பிலும் மிளகு. கண்ணுல தண்ணி வருது.

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    என்றென்றும் நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. இந்த வாரம் இன்னமும் கூடுதலாக அருமையுடன் இருக்கிறது.

    சூடான வெண் பொங்கலுக்கு சின்ன வெங்காயம் போட்டு பருப்பு தூக்கலாக சேர்த்து வறுத்து அரைத்து விட்ட சாம்பார் நன்றாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அதனுடன் மிருதுவாக உளுந்துவடை, வெள்ளை தேங்காய் சட்னியும் உடன் பவனி வர வேண்டும். இல்லாவிட்டால் பொங்கல் சோபிக்காது என்பது எங்கள் வீட்டின் விருப்பம். இவை இல்லாமலும், வெறும் கத்திரிக்காய் வத்தக் குழம்புடனோ, இல்லை வெறும் தே. சட்னி மட்டும் தொட்டுக் கொண்டோ மேற்சொன்ன அத்தனையையும் மானசீகமாய் நினைத்தவாறே சாப்பிட்ட நாட்களும் உண்டு. (அது பசியின் உத்தரவுக்கு கட்டுப்படும் நாட்கள்.)

    ஒவ்வொருவரின் ரசனைகள் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானவை. கை கால் விரல்களைப் போல உருவத்தில் ஒன்றாக இருந்தாலும், உள்ளத்தால் வேறுபட்ட மனித வர்க்கமாக இறைவன் படைத்துள்ளார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையாக, ரசனையாக சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி.

      நீக்கு
  15. பொங்கல் வடை காம்பினேஷன் அட்டகாசமாக இருக்கும், ஆனால் அதெல்லாம் வீட்டில் நிகந்ததே இல்லை.. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை சார்... இந்த காம்பினேஷன் ஹோட்டல்ல மட்டும்தான் நல்லா இருக்கும். ஹோட்டல்ல எதிர்பார்ப்பதை வீட்டில் எதிர்பார்க்கலாமா? பொதுவா வீட்டுலனா, இரண்டு மூன்று தடவை பொங்கல் சாப்பிடுவோம். ஹோட்டல்லனா ஒரு கரண்டி பொங்கல், ஒரு வடை என்ற காம்பினேஷன் இருக்கும்.

      நீக்கு
    2. ரைட்.. வீட்ல வடை பொதுவா சுமார் ரகம் என் அனுபவத்தில்.

      நீக்கு
    3. MTR vada mix ல செய்யும் வடை நன்றாக இருக்கும். (நான் கொஞ்சம் அந்த மாவில் உப்பு சேர்ப்பேன், மிளகு உடைத்துப் போடுவேன்.)

      நீக்கு
    4. கேஜிஜி சார்... வடை மாவில் யாருக்குமே பிரச்சனை வராது. நானும் பலதடவைகள் வடைமாவு, அப்புறம் வடைக்குத் தேவையானவற்றைக் கலந்து ரெடி பண்ணுவது எல்லாமே மிகச் சரியா பண்ணியிருக்கேன். மாவை எடுத்து ஒரு துளையோட நல்லா டயர் டியூப் மாதிரி அழகா ஹோட்டல் மாதிரி வடை செய்வது 90%க்கு வராது. நீங்க அடுத்த முறை வடை(களின், வந்ததுல ஒரு நல்ல வடையை இல்ல) படத்தை ஷேர் பண்ணுங்க.

      நீக்கு
  16. பொய் சொல்ல சாமர்த்தியம் வேண்டும் என்னிடம் அது குறைவு.
    ராக்கெட் உட்பட எல்லாவற்றையும் கையால் கொளுத்தும் அசட்டு தைரியசாலியாக இருந்த நான் குழந்தைகள் வந்தவுடன் ராக்கெட், சக்கரம், புஸ்வாணம் இவற்றை கையால் கொளு்துவதை நிறுத்தி விட்டேன். பட்டாசுகளை மட்டும் இன்னும் கையில் பற்ற வைத்து தூக்கி எறிகிறேன்."பானு சித்தி,பானு சித்தி என்று குழந்தைகளும்,பேரக்குழந்தைகளும் அதட்டுவார்கள். :))

    பதிலளிநீக்கு
  17. நெய் பளபளக்கும், முந்திரியும் மிளகும் முழித்துப் பார்க்கும் சூடான வெண் பொங்கலுக்கு கத்தரிக்காயும், வெங்காயமும் வதக்கி பருப்பு சேர்க்காத புளிப்பு கொஞ்சம் தூக்கலான கொத்ஸீதான் சரியான இணை என்பது என் விருப்பம். இல்லாத பட்சத்தில் நார்த்தங்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ !! எங்கோ வானத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து ----- ஊறுகாய் என்று சொல்லி ஒரேயடியாக கீழே கொண்டுவந்துட்டீங்களே !!

      நீக்கு
    2. ஹாஹா! தரையில் இறங்கும் விமானங்கள்!

      நீக்கு
    3. இறைவா...சீக்கிரம் பா.வெ. வீட்டின் நார்த்தங்காய் ஊறுகாய் காலியாகணும். இல்லைனா எதைச் சொன்னாலும் (மோர் சாதம், வடை, பருப்புப் பாயசம்...) அதற்கு நார்த்தங்காய் ஊறுகாய் சூப்பரா இருக்கும்னு சொல்லி வயிற்றில் புளியைக் கரைப்பாங்களே

      நீக்கு
    4. நிஜமாகத்தான் நெல்லை. சிறு வயதில் சர்க்கரை பொங்கல் திகட்டினால் (எங்கள் வீட்டில் ஒண்ணுக்கு மூணு வெல்லம்  போடுவார்கள்) கொஞ்சம் ஊறுகாயை தொட்டுக் கொண்டதுண்டு. மோர் சாதத்திற்கு நார்த்தங்காய் ஊறுகாயை தொட்டுக்க கொண்டு சாப்பிடாதவர்கள் ருசி அறியாதவர்கள். 

      நீக்கு
    5. நானெல்லாம் எப்போவுமே தித்திப்புப் பண்டங்களுக்கு 1:3 என்னும் விகிதம் தான். சமயத்தில் அதுவே பத்தலையோனு தோன்றும்.
      என் பெரியப்பா ஒருத்தர் சர்க்கரைப் பொங்கலுக்குக் காய்ந்த நாரத்தங்காய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்.

      நீக்கு
    6. // சர்க்கரைப் பொங்கலுக்குக் காய்ந்த நாரத்தங்காய்// படிக்கவே நாராசமா இருக்கு! என்ன ரசனையோ!!

      நீக்கு
    7. //சிறு வயதில்...

      :-) i have seen people use a lick of salt to get over cloy

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. வெண்பொங்கலைப் பற்றி பலரும் அவங்க அவங்க ரசனையைச் சொல்லியிருக்காங்க. எனக்குக் கிடைத்த வாய்ப்பு மாதிரி பலருக்குக் கிடைத்திருக்காது. ஒவ்வொரு ஹாஸ்டலிலும் ஒவ்வொரு மாதிரி பொங்கல் பண்ணுவாங்க, வீட்டில், கோவில்களில் - ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படும். ஹோட்டல்களி - அது அச்சடித்ததுபோல இருக்கும்.

    கோவில்ல தரும் பொங்கலுக்கு ஒன்றும் தொட்டுக்கத் தேவையில்லை. அவங்க கை பொறுக்க முடியாத சூட்டில் ஒரு கரண்டிதான் தருவாங்க.

    எங்க சேவியர்ஸ் காலேஜ் ஹாஸ்டல்ல, பொங்கல், உதிர் உதிரா, கொஞ்சம் மெனெக்கெட்டால் பாசிப்பருப்பையும், அரிசியையும், சீரகம் மிளகையும் பிரித்து எடுத்துவிடலாம் போலிருக்கும். அதுக்கு சாம்பார் குளம் கட்டாவிட்டால் உள்ள இறங்காது குளம் கட்டினால் நிறையவே சாப்பிடலாம்.

    ஹோட்டல் பொங்கலுக்கு ஒரு வாய்க்கு தேங்காய் சட்னி, இன்னொரு வாய்க்கு கொஞ்சம் சாம்பார், என்று மாற்றி மாற்றி இரண்டு முறை சாப்பிட்டு எது சூப்பர் என்று எண்ணுவதற்குள் தட்டில் பொங்கல் இருக்காது.

    பொங்கலுக்கு நல்ல டிஃபன் சாம்பார் நன்றாக இருக்கும். இரண்டாவது உப்பு/பொட்டுக்கடலை அதிகம் போடாத நல்ல தேங்காய் சட்னி. நான் ரொம்ப நல்லா வெண்பொங்கல் செய்வேன், அதற்கு நிறைய நெய், முந்திரி, இஞ்சி, மிளகு, இள கருவேப்பிலை கண்டிப்பா வேணும்.

    கல்யாண வீடுகள்ல அனேகமா வனஸ்பதிதான் விடுவாங்க. சாப்பிடும்போது தெரியாது, பிறகு நம்மை அது பொங்கலை வெறுக்கும் நிலைக்குக் கொண்டுபோயிடும்.

    எத்தனைபேருக்கு வடை நல்லா பண்ணத் தெரியும் என்று பார்த்தால் 10%கூட இருக்காது என்பது என் அபிப்ராயம். வெகு சிலரே வடை நன்றாக பண்ணுவார்கள் (எனக்கு வராது).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் நாயகர் என்ற பட்டத்தை அளித்து கௌரவமடைகிறேன்

      நீக்கு
    2. நான் அதை வழி மொழிகிறேன்.

      நீக்கு
  20. நான் என்னதான் இளையராஜா ரசிகையாக இருந்தாலும்,(சமீபத்தில் சென்னை சென்று விட்டு திரும்பும் பொழுது,"ஒரேயடியாக 80கள் பாடல்களாக போட்டுத் தாக்கி விட்டாயே" என்றான் மகன். எல்லாமே இளையராஜா பாடல்கள்)
    சாஸ்தீரீய இசை என்றால் கே.வி.மஹாதேவன்
    மெலடி, கிராமீய இசை இவைகளுக்கு எம்.எஸ்.வி என்றுதான் தோன்றுகிறது.(வயதாகி விட்டதோ?)
    போனால் போகிறது என்று குத்துப் பாட்டிற்கு இளையராஜாவை சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாஸ்தீரீய இசை என்றால் கே.வி.மஹாதேவன்// சில நாட்களுக்கு முன்புதான் புகழேந்தி மற்றும் கேவிஎம் அவர்களோட பேட்டிகளின் காணொளி பார்த்தேன். அவங்க சொல்வது, எங்களுக்கு பத்து ராகங்களை இனம்கண்டுகொள்ளத் தெரியுமே அன்றி ராக knowledge, பயிற்சி கிடையாது. அந்தத் தயாரிப்பாளர் தனக்கு தேவகாந்தாரில ஒரு பாட்டு வேணும் என்று இன்ஸிஸ்ட் பண்ணினதால், ஏரிக்கரையின்மேலே பாட்டை அந்த ராகத்தில் அமைத்தோம் என்றார். அதனால் எங்கள் பாட்டு இந்த இராகத்தில்தான் நாங்கள் அமைத்தோம் என்று சொல்வது கடினம் என்றார். சாஸ்த்ரீய இசை என்றால் ஜி.இராமனாத ஐயர், அவரை விட்டால் பாபநாசம் சிவன் இவர்கள்தான் இருக்க முடியும்.

      இவற்றையெல்லாம் நான் படித்து, கேட்டுத் தெரிந்துகொண்டவை. ஹாஹா

      நீக்கு
    2. ஏரிக்கரையில் மேலே பாட்டு ஆரபி.
      புகழேந்திக்கு ராகம் தெரியாதுன்றது சரிதான்.

      நீக்கு
    3. எனக்கும் சிந்து பைரைவி படத்தின் டயலாக் நினைவில் ஆரபி என்றுதான் நினைத்தேன். பிறகு உடனே கீதா ரங்கனுக்கு மெசேஜ் அனுப்பி, அந்த எக்ஸ்பர்ட் என்ன சொல்றாங்கன்னு கேட்டேன். அவங்க, வைணவக் கருத்தைச் சொல்லிட்டாங்க,

      உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
      உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
      உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
      உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே - இது நம்மாழ்வாரின் வரிகள்

      உண்டு என்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை - கண்ணதாசன்.

      இரண்டுமே இழையோடியிருக்கு என்பதுதான் பொதுக்கருத்து போலிருக்கு.

      நீக்கு
    4. அந்த எக்ஸ்பர்ட் என்ன சொல்றாங்கன்னு கேட்டேன்.//

      நெல்லை நான் எக்ஸ்பெர்ட் எல்லாம் இல்லை. கண்டிப்பாக இல்லை.

      நான் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.

      கீதா

      நீக்கு
    5. // ஏரிக்கரையில் மேலே பாட்டு ஆரபி.
      புகழேந்திக்கு ராகம் தெரியாதுன்றது சரிதான்.// ஆம், அந்த பேட்டியை நானும் பார்த்தேன். எல்லா கேள்விகளுக்கும் புகழேந்திதான் பதில் சொல்வார். kvm சும்மா பார்த்துக்கொண்டே இருப்பார். புகழேந்தி அந்தப் பாடலை தேவகாந்தாரி என்று சொன்னதைக் கேட்ட பல நண்பர்கள் அதை அப்படியே நம்பி வாதம் செய்யத் துவங்கிவிட்டனர், அந்தக் காலத்தில்.

      நீக்கு
    6. நான் சும்மா சொன்னேன்.. புகழேந்தி யாருமே தெரியாது.. I am sure he is talented

      நீக்கு
    7. நான், அம்மா:
      : ஏம்மா, கூட்டு பண்றேன்னியே
      : இதான் கூட்டு
      : அப்ப பொறிச்ச குழம்புனு சொன்னது?
      : இதாண்டா பொறிச்ச குழம்பு

      தயாரிப்பாளர், புகழேந்தி:
      : சார் தேவகாந்தாரில ஒரு பாட்டு..
      : இதான் தேவகாந்தாரி
      : அப்ப ஆரபில?
      : இதான் ஆரபி..

      நீக்கு
    8. கே வி மஹாதேவனுக்கு உதவி புகழேந்தி. பழைய திரைப்படங்களில் இவர் பெயர் வரும். அதுபோல எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு உதவி கோவர்தன் என்று வரும்.

      கேவிஎம் அதிகமா பேசமாட்டார். புகழேந்திதான் பேசுவார், கேவிஎம் ஐ எப்போதும் 'பெரியவர்' என்றே விளிப்பார்.

      நீக்கு
    9. சினிமா பாட்டுங்கள்ல ராகங்கள் கலக்கறது இயல்பா நடப்பது தான் - தப்பும் இல்லே.. to think of it தேவகாந்தாரில ஒரு சினிமா பாட்டு கூட சட்டுனு தோண மாட்டேங்குது..

      தேகா ஆரபி ரெண்டும் ஒரே ராகத்து அடிப்படையாகவும் இருக்கலாம்..

      கேட்டு ரசிக்குறதோட நிறுத்திக்குவோம்.. ஒரு வேளை ஏ பாட்டு தேகா தானோ என்னவோ! இசை அமைத்தவரே சொன்னாருனா நான் யாரு..

      நீக்கு
    10. அப்பாதுரை சொல்றாப்போல் தான் எங்க பழைய காடரர் கூட்டுப் பண்ணுவார். பொரிச்ச குழம்பு செய்முறை. ஆனால் கூட்டு என நாமகரணம்.

      நீக்கு
    11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  21. இந்த கானா பாடல்கள்என்று ஒன்று வருகிறதே.. அதை ரசிக்க முடிகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கானா பாடல் என்பது சுத்த கோணா மாணா பாடல்கள்.

      நீக்கு
    2. ஓ ! நீங்க கேட்டது அடுத்த வாரத்துக்கான கேள்வியா?

      நீக்கு
    3. இதற்காகத்தான் நான் இங்கு கேள்விகள் கேட்பதில்லை.ஹூம் !

      நீக்கு
    4. அடுத்த புதன் பகுதியிலும் பதில் அளிக்கிறோம்!!

      நீக்கு
  22. பத்திரிகைகள் நடத்தும் சிறுகதை, நாவல் போட்டிகளில் established writers கலந்து கொள்வது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்வி நியாயமா? தீர்மானிக்கும் பேனலில் இருப்பவரோ, இன்ஃப்ளூயன்ஸ் செய்பவரோ மட்டும்தான் கலந்துக்கக்கூடாது. Established writers/Famous ones கலந்துக்கிட்டு மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசு வாங்கின கதையெல்லாம் படிக்கலையா?

      நீக்கு
    2. ஆமாம், நானும் பார்த்திருக்கேனே, கல்கி வெள்ளி விழா நாவல் போட்டியில் பி.வி.ஆருக்கு மூன்றாம் பரிசும், ர.சு.நல்லபெருமாளுக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது.

      நீக்கு
    3. இப்போது குமுதம் அறிவித்திருந்த சிறுகதை போட்டியில் இந்துமதி கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய கதை பரிசு வாங்கவில்லை, பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. 

      நீக்கு
    4. கல்கி சிறுகதை போட்டியில் ஒரு முறை அசோகமித்திரன் கலந்து கொண்டார். 

      நீக்கு
    5. //ஒரு முறை அசோகமித்திரன்// - அப்போது அவர் கதைக்கு முதல் பரிசு கொடுத்ததைப் பற்றிச் சர்ச்சை வந்தது. (அது பொறாமையால் கிளப்பிவிடப்பட்ட சர்ச்சையா என்று தெரியாது) போட்டி என்று வந்தால் யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். தவறில்லை. போட்டியில் வெற்றி/தோல்வி படைப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்போதுதான் படைப்பாளிகளுக்கும் கெளரவமாக இருக்கும்.

      நீக்கு
  23. மிக மிக வருத்தமான செய்தி ஒன்று. கோமதி அக்கா கணவர் அரசு ஸார் இன்று காலை திடீர் மாரடைப்பில் மறைந்து விட்டார். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப வருத்தமான செய்தி ஸ்ரீராம். அவருக்கு ஆறுதல் செய்தி அனுப்பினேன்..இருந்தாலும் மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஓதுவார்கள் சிவனின் நிழலில்தான் இளைப்பாறுவார்கள்.

      நீக்கு
    2. ஓ கடவுளே கடவுளே.....இப்பத்தான் பார்க்கிறேன் ஹையோ...

      மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு...கொஞ்ச நாள் முன்ன அக்காவோடு பேசினப்ப கூட நல்ல விஷயமே சொல்லிக் கொண்டிருந்தார்...

      கடவுளே மனசு ஏற்க மறுக்குது...கஷ்டமாக இருக்கிறது..

      ரொம்ப வருத்தமான செய்தி. அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பார பிரார்த்திப்போம். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...

      கீதா

      நீக்கு
    3. அடாடா.. மிக மிக வருத்தமான செய்தி சகோதரரே. எப்படி சகோதரிக்கு ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு இதை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன்தான் அருள வேண்டும். மனதில் வருத்தங்கள் மேலோங்கி எழுகிறது.

      நீக்கு
    4. அவங்க நம்பர் கிடைக்காமல், இப்போத் தான் கிடைச்சிருக்கு. செய்தி மட்டும் அனுப்பி இருக்கேன். நாளைக்குத் தான் பேசணும். மனசே ஆறலை. எங்க மருமகளுக்காக மதுரை மீனாக்ஷி கோயிலில் கர்பிணிக் கோலத்தில் காட்சி அளிக்கும் பிள்ளை பெத்தா அம்மனுக்கு எண்ணெயெல்லாம் போட்டுட்டு வந்தாங்க. அவங்களும் திரு அரசு சாரும் சொல்லித் தான் நாங்க பூம்பாறை குழந்தை வேலவரைப் போய்ப் பார்த்துப் பிரார்த்தனைகள் செய்து வேண்டிக் கொண்டு வந்தோம்.

      நீக்கு
    5. மிகவும் வருத்தமான செய்தி.  

      நீக்கு
    6. மிகவும் வருத்தமும் அதிர்ச்சி அளித்த செய்தி :( கோமதி அக்கா அவர்களுக்கு இறைவன் இந்த கஷ்டமான சூழலில் துணையிருக்க   பிரார்த்திப்போம் .

      நீக்கு
    7. ஸ்ரீராமின் தகவலை எபி க்ரூப்பில் பார்த்து அதிர்ந்து, இரங்கல் தெரிவித்தேன். இப்போது இங்கே படிக்கையிலும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அரசு சாரின் ஆன்மா ஆண்டவன் அருளால் அமைதியுறட்டும்.

      நீக்கு
  24. //ஒரு நாள் லீவு பிராவிடண்ட் ஃபண்ட் கடன் இவற்றைப் பொய் சொல்லாமல் பெறுவது அசாத்தியம்.//
    உண்மை. பணியில் இருக்கும்போது தங்கையின் திருமணத்திற்காக பத்திரிக்கையுடன்  பிராவிடண்ட் பண்ட் கடனுக்கு விண்ணப்பித்தேன். நிராகரிக்கப்பட்டது. அட்மினில் கேட்டபோது தங்கை திருமணத்திற்க்கு எல்லாம் கடன் தர முடியாது. வேண்டும் என்றால் மனைவிக்கு ஆயுர்வேத சிகிச்சை என்று விண்ணப்பம் கொடுங்கள். பாஸ் ஆக்குகிறேன் என்றார். அப்படியே செய்தேன்.
    பொங்கலுக்கு ஏற்ற துணை சின்ன வெங்காய சாம்பார் தான். ஆனால் நான்கு துணைகள் தேங்காய் சட்னி, புதினா கொத்தமல்லி  சட்னி, சுட்ட கத்திரிக்காய் கொஸ்து, சின்ன வெங்காய சாம்பார் என்று அனைத்துமே இருந்தால் சிறப்பு தான்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. திரு ஜெயகுமார் அண்ணா சொல்லும் விஷயம் புதுசா இருக்கு. நம்மவர் அவர் அக்கா பெண்களின் கல்யாணங்களுக்கே பிஎஃப் கடன் வாங்கி இருக்கார். தங்கை கல்யாணத்துக்கும் வாங்கி இருக்கார். ஆனால் வேறே காரணம் போட்டதாய்த் தெரியலை. எதுக்கும் மறுபடி கேட்டு நிச்சயப் படுத்திக்கிறேன்.

      நீக்கு
    3. உங்களுக்குப் போட்ட கருத்து மேலே போய்விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ண முடியுமானு பார்க்கிறேன். ஏற்கெனவே தகராறு. நீ ரோபோதான்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. வாங்க முடியாது என்றே சொல்கிறார் அவரும். எனக்கு என்னமோ தங்கை கல்யாணம்னு சொல்லி வாங்கிய நினைப்பு! :))))) அ.வ.சி.

      நீ ரோபோவானு கூகிள் கேட்குது. :)

      நீக்கு
    5. இல்லைனு நிரூபிக்கணுமாம்.

      நீக்கு
    6. அதென்னவோ உங்க கணினி / சிஸ்டம் இவைகளுக்கு எல்லாம் உங்க மேல அடிக்கடி சந்தேகம் வருது. நான் ரோபோ இல்லை என்று டிக் செய்தாலே ஒப்புக்கொள்ளுமே !!

      நீக்கு
    7. Yes. But it is asking me for each and every comment I am giving. grrrrrrrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
  25. முதல் கேள்விக்கு....சான்சே இல்லை.

    திருவள்ளுவர் தாத்தாவே சொல்லிருக்காரே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ சண்டைக்கு வந்திடாதீங்க யாரும் திருவள்ளுவர் தாத்தா பொய் சொன்னார்னு சொல்லலை!! ஹா ஹா ஹா ஹா

      அவர் எழுதிய திருக்குறளைச் சொன்னேன்..ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. இந்த பதில் உண்மையா இல்லை பொய்யா கீதா ரங்கன்?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா

      நினைச்சேன் இப்படி ஏதாச்சும்வ் வரும்னு!! இதுக்கு இப்படி நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்...நான் சொல்லியிருக்கும் இரண்டாவது பதிலுக்கும் எனக்கு கேள்வி வந்துச்சு...ஹா ஹா ஹா ஹா

      இன்னும் மற்ற கேள்விகளுக்கு நிறைய சொல்ல ஆசை ஆனால் நேரம் இடிக்குது..

      கீதா

      நீக்கு
  26. ஏஞ்சலின் 4 வது கேள்விக்கு

    மீக்கு உண்டு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டதுண்டு. & பதில் டிட்டோ! செய்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பானுக்காவின் முதல் கேள்விக்கு..

    நீண்ட பயணம் செய்யும் போது வேடிக்கை நிறைய பார்ப்பேன். சுற்றி நடப்பதை...அதன் பின் கூட வருபவருடன் உரையாடுவதும்..அவர் வேற்று மனிதராக இருந்தாலும்.,.. இவை இரண்டும் கதைகள் எழுதும் போது பயன்படும்..

    ரயில் என்றால் பாட்டு கேட்பது கஷ்டம். குழுவினருடன் என்றால் பாட்டு கண்டிப்பாகப் போடுவார்கள். அதன்பின் மேலே சொன்னது. பேச ஆள் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் வேடிக்கைப் பார்ப்பதோடு புத்தகம்/ வார இதழ் அல்லது மாத இதழ் ஏதேனும் வாங்கி வைத்து வாசித்தல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வெண் பொங்கலுக்குச் சிறந்த சைட் டிஷ் அதாவது எனக்கு மிகவும் பிடித்தது கத்தரிக்காய் கொத்சு, பருப்பில்லாத கொத்சு.

    என் பாட்டி புளிக்கோசு என்று செய்வார் கத்தரிக்காயைச் சுட்டு...அதுவும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிக்கோசு ?? அப்படி என்றால் என்ன?

      நீக்கு
    2. கத்தரிக்காயைச் சுட்டுவிட்டுத் தோலை உரித்துக் கொண்டு விழுதைக் கைகளால் பிசைந்து கொண்டு அதில் புளி ஜலம் விட்டு உப்புச் சேர்த்துத் தாளிப்பில் கடுகு, மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை, தேவையானால் மஞ்சள் தூள் சேர்ப்பார்கள். அதிகம் கொதிக்க வைக்க மாட்டார்கள். சொல்லப் போனால் கொதிக்கவே வைப்பதில்லை. பத்தில்லாமல் வயதானவர்களுக்குப் பண்ணுவது. எங்க வீட்டில் அப்பாவின் சித்திக்கு இது அடிக்கடி பண்ணுவார் அம்மா. மோர் சாதத்துக்கும் நாங்க தொட்டுப்போம். அதுவும் கத்திரிக்காயைக் குமுட்டி அடுப்பில் சுடுவாங்களா! அந்த வாசனையே தனி! இதைத் தான் வயதானவங்க வழக்குமொழியில் புளிக்கோசு/புளிக்கொச்சு என்று சொல்வார்கள். எங்க வீட்டு வயசானவங்க புளிக்கொஜ்ஜு என்றும் சொல்வாங்க. தென்மாவட்டங்களுக்கே உரியதுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஓ ! கத்தரிக்காய் புளி கொத்சுவா ! கொதிக்க வைக்காவிட்டால் - புளி பச்சை வாசனை வரும் அல்லவா? கொதித்தால்தானே கொத்சு மணக்கும்!

      நீக்கு
    4. தெரியலை. ஆனால் கொதிக்க விட்டு நான் பார்த்ததில்லை. இருந்தும் நான் பண்ணும்போது கொதிக்க விட்டே பண்ணி இருக்கேன்.

      நீக்கு
    5. கத்தரி மற்றும் தடை செய்யப்பட்ட காய்கள் வேண்டாம் என்றால், வெண்பூசனி மட்டும் போட்டால் சரிப்படுமா? இல்லை வேறு என்ன காய் போடலாம் (நாட்டுக் காய்கள் மட்டும், முருங்கைலாம் - ஐயோ)

      நீக்கு
    6. எதுக்கு? பூஷணிக்காய் பற்றி இங்கே சொல்லவே இல்லையே!

      நீக்கு
    7. இன்றைக்கு பண்ணும் வாய்ப்பு வந்தது. ஆனால் தக்காளி, கத்தரி உபயோகிக்க முடியாது. (அலர்ஜியாம்) ஒன்லி நாட்டுக்காய். அதுனால கேட்டேன்.

      நீக்கு
  29. //அந்த விளம்பரப் படத்தில் ஒரு தவறு உள்ளது. அது என்ன என்று கண்டுபிடிங்க !//

    ரொம்ப ரொம்ப சுலபம். எல்லாரும், மோதிர விரலில் இல்லாம நடுவிரலில் மோதிரம் போட்டிருக்காங்க என்று சொல்வார்கள். அப்படி இல்லை. எந்த விரலிலும் மோதிரம் போடலாம் (இப்போதான் அந்தக் கல்லு இந்தக் கல்லு என்று வந்துவிட்டதால் இந்தக் கல் மோதிரம் இந்த விரலில்தான் போடணும்னுலாம் சொல்றாங்க).

    மோதிரத்தில் உள்ள கைகள் இடம் மாறி வந்திருக்கு. அதுதான் விஷயம் (மோதிரமே இரு கைகள் இருப்பதுபோல உள்ளது. அதில் வலதுகை இடது கை மாறியிருக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மோதிரத்தில் உள்ள கைகள் இடம் மாறி வந்திருக்கு. அதுதான் விஷயம் (மோதிரமே இரு கைகள் இருப்பதுபோல உள்ளது. அதில் வலதுகை இடது கை மாறியிருக்கு)// இதில் கொஞ்சம் குழப்பம் இருக்கு. இன்னும் தெளிவாக சொல்ல இயலுமா?

      நீக்கு
    2. வலது கை மட்டும்தான் இரண்டிலும் இருக்கு.

      நீக்கு
    3. இன்னமும் தெளிவு தேவை. யோசித்துப் பாருங்கள்.

      நீக்கு
    4. யோசிக்கணுமா பார்க்கணுமா?

      நீக்கு
    5. நான் சொன்ன பதில் சரியானதுதான்

      நீக்கு
    6. ஆம், அதே. Impossible position for the hand with thumb down. (Unless the person is hanging upside down)

      நீக்கு
    7. Just imagine. Instead of left palm, they have used right palm only. if one has both like right hand, then only this kind of கட்டைவிரல் position possible.

      நீக்கு
  30. // காலச்சக்கரத்தில் சென்று பார்த்தால் 90% க்கு மேல் இங்க தமிழர்கள் (for that matter in each regional language states) இருக்க மாட்டாங்க. //

    தென்புலத்தார் சிலர் இருக்கும் வகையில், நெ .த அவர்களின் கூற்று, கிட்டத்தட்ட 90% உண்மை... வருத்தத்துடன் வேதனையுடன்...

    பதிலளிநீக்கு
  31. // ஆகத் தமிழர்கள் என்பது யார் எனச் சொல்லுவது கஷ்டமே!

    Geetha Sambasivam25 நவம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 6:39 //

    அவர்களுக்கு இன்றைக்கு ஓர் இணைப்பு மட்டும் :

    https://ta.m.wikisource.org/wiki/வரலாற்றுக்கு_முன்_வடக்கும்_தெற்கும்/தொல்காப்பியத்துக்கு_முன்னும்_பின்னும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கட்டுரையில் சாரமில்லை. 'சொல்லப்படுகிறது' என்றெல்லாம் கதைவிட்டிருக்கிறார்கள். தொல்காப்பியர், 'அந்தணர்' என்று எழுதியவர், யவனரைப் பற்றி எழுதவில்லை, மற்றவர்களைப் பற்றி எழுதவில்லை. தமிழர் என்பதிலிருந்து, திராவிடர்கள் என்று மெதுவாக நீட்டி எழுதியிருக்கிறார். அதே சமயம் தெலுங்கர்கள் மொழியை வடமொழி என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார். ஆரியர் என்பவர் யார் என்றே யாருக்கும் தெரியாது. திராவிடர்கள் யார் என்பதையும் சரியாக define பண்ண முடியாது. திருக்குறளே 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றுதான் சொல்கிறார்கள்.

      நீக்கு
    2. ஆம் உண்மை... திருக்குறள் ஆய்விற்கு பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எண்ணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்... (பாயிரம் என தலைப்பு முதற்கொண்டு)

      நீக்கு
    3. நெல்லையாரே, கால்ட்வெல் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றினார். அவர் சொல்லுவதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்? பிரிவினைக்கு வித்திட்டவரே அவர் தானே!

      நீக்கு
    4. நம்ம நாட்டு சரித்திரத்தை நடுநிலையாளர்கள், உள்நோக்கம் கொண்டவங்க, மத பிரிவினைவாதிகள், கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் என்று பலர் எழுதியிருக்காங்க. அவங்க அவங்க எதை நம்ப ஆசைப்படறாங்களோ அந்த அந்தப் பகுதிகளை quote பண்ணுவாங்க. பஹ்ருளி ஆறு, முழு நிலப்பகுதி இவை எல்லாவற்றிர்க்கும் ஆதாரம் கிடையாது. இவங்க, துவாரகை கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து கடலுக்கடியில் எடுத்த புகைப்படங்களையும் ஆதாரமாகக் கொடுத்தால், அப்படீல்லாம் கிடையாதும்பாங்க. அதனால, இதிலெல்லாம் ஆராயாமல் கடந்துபோயிடணும்.

      நீக்கு
  32. ரொம்ப நன்றி திரு தனபாலன். ஆனால் இந்தக்கட்டுரை மின் தமிழ்க் குழுமத்தினர்களால் ஏழெட்டு ஆண்டுகள் முன்னரே விவாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்திருக்கிறேன். எனினும் பகிர்வுக்கு நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவடியிலிருந்து படியெடுக்கும் போது ஏகப்பட்ட தவறுகள் நடந்துள்ளது... அதில் திருக்குறளும் ஒன்று... தொல்காப்பியம் எனக்கு பல்வேறு வகையில் துணை புரிந்தாலும், அதன்பின் அதாவது 1500 ஆண்டுகளுக்குப் பின் நன்னெறி நூல் மற்றும் இன்னமும் சிலவற்றை வைத்துக் கொண்டு...

      திருக்குறள் ஆய்வு தொடங்கினாலும், அதற்கேற்ப கணக்கியல் எங்கும் இல்லை... திருக்குறள் சொல்லடைவு பற்றிய கோப்பு உண்டு... ஆனால் அதில் கணக்கியல் இல்லை...

      எண்களால் கட்டமைத்த திருக்குறளை (உறுதி; ஆனால் கணக்கை எப்படி எழுத்துகளால் எழுதி நிரூபிக்க வேண்டும் என்பது தான் சற்றே சிரமம்) மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்... நன்றி...

      நீக்கு
  33. க்ரூப்பில் அலைந்தால் மிளகுக் குழம்பு. இங்கே நுழைந்தால் வெண்பொங்கல்..
    என்னப்பா இது, இந்த சாப்பாட்டுக்கடை எப்பத்தான் முடியும்!

    பதிலளிநீக்கு
  34. திருமதி கோமதி அரசு அவர்களின் கணவர் திடீர் மறைவு கவலை தருகிறது .ஆழ்ந்த அனுதாபம். அவர் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. கேள்வி பதில் ஸ்வாரஸ்யம்.

    பொங்கல் சிறப்பிதழ் - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!