வியாழன், 9 நவம்பர், 2023

என் பெயர் ஸ்ரீராம்..

 திடீரென்று ஒருநாள் என்னைப்பற்றிய அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்ததது.  யாரால் தெரிய வந்தது என்பது முக்கியம் இல்லை.  என்ன விஷயம் என்பதுதான் முக்கியம்.

அதாவது என் பெயர் ஸ்ரீராம் இல்லை, ஸ்ரீராம் என்று வைக்கப்படும் முன் ரவிச்சந்திரன் என்று என் பாட்டி எனக்கு பெயர் சூட்டி இருந்தார்.  ஸ்ரீராம் என்பது அப்பா வைத்த பெயர்.

இந்தத் தகவல் தெரிய வந்ததும் கொஞ்ச நாளைக்கு தீவிர சிந்தனை, தீவிர ஆராய்ச்சி..  எந்தப் பெயர் நன்றாய் இருக்கிறது என்று..  என்னவோ அந்த வயதில் நாம் நினைத்தால் பெயரை மாற்றிக் கொண்டு விடலாம் என்பது போல..  

கடைசியில் என்னை நானே அழைத்து அழைத்துப் பார்த்து, மற்றவர்களையும் அழைக்கச் சொல்லி பார்த்து,  இந்த ஸ்ரீராம் பெயரிலேயே செட்டில் ஆனேன்.  பாட்டி சொல்லைத்த தட்டிய முதல்  விஷயம் அது.  இன்னொன்று பின்னாட்களில் இருபத்திரண்டு வருடங்கள் கழித்து..  முடிந்தால் அதைப் பிறகு சொல்கிறேன்!

என் பெயர் இருக்கட்டும்.. 

உங்கள் பெயர் ராஜாவா?  நிறைய படங்களில் உங்கள் பெயர்தான் ஹீரோவின் பெயராக இருந்திருக்கும்.  சுஜாதா புரொடக்ஷன்ஸ் சிவாஜி படங்களில் அத்தனை படங்களிலும் சிவாஜி, கமல், ரஜினி  பெயர் ராஜாதான்!  ஹிந்தியில் அமிதாப் பெயர் நிறைய படங்களில் விஜய் என்று வருவது போல...

என்ன பெயர் அதிகமாக சினிமா ஹீரோவின் பெயராக உபயோகபபடுத்தப் பட்டிருக்கிறது?  ராஜாதானோ!

இன்னமும் உங்களுக்கு சில திரைப்படங்களில் சில கதாநாயகர்களின் பெயர்கள் நினைவில் இருக்கும், இல்லையா?  உதாரணமாக புதிய பறவை படத்தில் சிவாஜி பெயர் கோபால்!  விவேக் போன்றோரின் நகைச்சுவைக்கு கூட அது பயன்பட்டது!  இப்போது மீம்ஸ்களுக்கும் உதவுகிறது.  16 வயதினிலே படத்தில் கமல் சப்பாணி என்று அழைக்கப்பட்டாலும் அவருக்கு வைக்கப்படும் பெயரும் கோபால்தான்!  கோபாலகிருஷ்ணன்.

கதாநாயகர்களின் பெயரையே படத்தின் பெயராக வைத்திருப்பவர்களை சொல்லக் கூடாது!.

பாஸ்கர், கணேஷ், வேலு இப்படி பல பெயர்களும் திரையில் ஹீரோக்களுக்கு பெயர்களாக வந்து அழைக்கப்படும்போது அதே பெயருடையவர்களுக்கு லேசாக மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் வருமா?  வரும்!

அதுவே தங்கள் பெயர் வில்லன் பெயராகவோ, அடியாட்களில் ஒருவர் பெயராகவோ வந்தால் கொஞ்சம் சங்கடமாகவும் இருக்குமா?!  மாயாண்டி, முனியாண்டி என்று..  இதெல்லாம் காவல் தெய்வங்களின் பெயர்கள் எனினும் சினிமாவில் அடியாட்கள் பெயராக வரும்.  பின்னாட்களில் மாயாண்டி குடும்பத்தார் பெயர் புகழ்பெற்றது!  ஆனால் பின்னர் போகப்போக சினிமா வில்லன்களில் மாயாண்டி முனியாண்டிகள் காணாமல் போனார்கள்.

எப்போதாவது கண்ணாடி முன்னே நின்று உங்கள் பெயரை நீங்களே சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறீர்களா?   முன்னர் நான் அடிக்கடி கூப்பிடுவேன்.

எனக்கு என் பெயர் ரொம்பப் பிடிக்கும்.  யாருக்குதான் அவரவர்கள் பெயர் பிடிக்காது என்கிறீர்களா?  கொஞ்சம் தேடிப்பார்த்தால் சிலபேர் அகப்படுவார்கள்.  நீயா நானா கோபிநாத் நிகழ்ச்சியில் கூட அப்படி ஒரு கலந்துரையாடல் நடந்தது என்று நினைவு.

குணா திரைப்படத்தில் கூட கமல் தன் முகம் பிடிக்கவில்லை..  என் அப்பா..  என் அப்பாவோட மூஞ்சி என்று சொல்வாரே தவிர, பெயர் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்!!

கூத்தாடிகள் நடிக்கும் சினிமாக்களில் நம் பெயர் வந்தால் பெருமையா என்று கேட்காதீர்கள்.  ஒரு பிரபலத்தின் வாயால் நம் பெயர் அழைக்கப்படுவது கொஞ்சம் மனதில் சிறு சுவாரஸ்யத்தைத் தரும்!  அட, பிரபலத்தை விடுங்கள்..  உங்கள் வீட்டைத் தவிர வெளியிடங்களில், உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரிகள் கூப்பிடும்போது, பொது இடத்தில திடீரென ஒரு பழைய நண்பன் அடையாளம் கண்டு பெயர் சொல்லி கூப்பிடும்பொழுது...

ஏதாவது ஒரு படத்தில் அனுஷ்கா 'ஸ்ரீராம்..  ஸ்ரீராம்...' என்று கூப்பிட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.  இல்லையா?!!!   சிவாஜி, MGR  அப்படி அழைத்திருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தெரிந்து என் பெயர் இரண்டு மூன்று  படங்களில் இடம்பெற்றிருக்கிறது.  ஹீரோவின் பெயராக ஆஹா படத்தில் என் பெயர்!  அப்புறம் தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் பெயர் ஸ்ரீராம்.  ரஜினி மிஸ்டர் ஸ்ரீராம்...    மிஸ்டர் ஸ்ரீராம் என்று அழுத்தம் திருத்தமாக இரண்டு முறை அழைக்கும்போது "எஸ்.." என்று சொல்லத் தோன்றும்!  மூன்றாவதாக ரட்சகன் திரைப்படத்தில் கதாநாயகி சுஷ்மிதா சென்னின் அப்பா கிரீஷ் கர்னாடின் பெயர் ஸ்ரீராம்.  ரகுவரன் ஸ்ரீராம் என்று கூப்பிடுவார்!

சினிமாவை விடுங்கள்.  உங்கள் பெயரை உடைய இன்னொருவரை சந்திக்கும்போது ஒரு சின்ன பூ பூக்காது மனதில்?  என் பெயரில் முன்பு இரண்டு நடிகர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஒரு ஒளிப்பதிவாளர் இருக்கிறார்.  

உங்களுக்கு செல்லப்பெயர் எதுவும் உண்டா?  எனில், என்ன பெயர்?! அதை வைத்து அழைக்கப்படுவதை நீங்கள் விரும்புவார்களா?  என்னை சிறுவயதில் ஏனோ 'தாமா' என்று அழைப்பார்கள்.  

குடும்பத்தில் உங்கள் பெயரிலேயே எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?  வேறுபடுத்திக் காட்ட நம்மை எப்படி அடையாளப்படுத்துவார்கள் என்று அறிய ஒரு சுவாரஸ்யம் தோன்றும்! சில சமயங்களில் நண்பர்களின் அலைபேசியில் என்னை எந்தப் பெயரில், எப்படி சேமித்து வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஒரு சின்ன ஆர்வம் வரும்.  நீங்கள் சொல்லுங்களேன்..  என்னை என்ன, எப்படி உங்கள் செல்லில் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்?

===========================================================================================

K J யேசுதாஸ் தமிழில் பதித்த தடம்

வீணை எஸ்.பாலசந்தரின் `பொம்மை’ திரைப்படத்தில் வரும் `நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடலின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் யேசுதாஸ். மலையாளத்தைப் போன்று தமிழில் யேசுதாஸுக்கு உடனடியாக வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை. தமிழ் மொழியில் தொடக்கத்தில் அவருக்கு இருந்த தடுமாற்றமும் ஒரு காரணம். ஆனால் மலையாளத்தில் சலீல் சவுத்ரி, தேவராஜன், வி. தட்சிணாமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினர்.
சலீல் சவுத்ரி யேசுதாஸை வங்க மொழிப் படத்திலும் பாடவைத்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகே யேசுதாஸின் குரல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’, பாட்டின் மூலமாக விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையரின் இசையில் ஒலித்தது.
இரு துருவங்களுக்கு பின்னணி
தமிழ்த் திரைப்பட உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பின்னணிப் பாடல்களைப் பாட ஆரம்பித்ததும் யேசுதாஸின் குரலை முழுமையாக வசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது தமிழ்த் திரைப்பட உலகம். உரிமைக் குரல், உலகம் சுற்றும் வாலிபன், பல்லாண்டு வாழ்க போன்ற எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலும், சிவாஜிக்காக டாக்டர் சிவா, இமயம் போன்ற படங்களிலும் பாடி தான் ஒரு தவிர்க்க முடியாத பாடகர் என்பதை தமிழ் திரையுலகிலும் நிரூபித்தார்.
சர்ச்சைகளும் சவால்களும்
தொடக்கக் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் யேசுதாஸின் தமிழ் உச்சரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் யேசுதாஸின் தொடர் முயற்சியால் அத்தகைய விமர்சனங்களை அவர் தவிடுபொடியாக்கி, தமிழ் இசை சங்கத்தில் தமிழ்ப் பாடல்களைக் கொண்ட முழுக் கச்சேரியே அவர் நடத்தினார்.
சபரிமலையில் அய்யப்பன் யேசுதாஸ் பாடியிருக்கும் சுப்ரபாதம் கேட்டுதான் கண்விழிக்கிறார். இரவில் அவர் பாடிய ஹரிவராசனம் கேட்டுதான் சயனிக்கிறார். யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை இது! யேசுதாஸின் இசை உலகம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது.
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். பாடல் வரிகளின் உருக்கத்தால் உந்தப்பட்டு கண்களில் கண்ணீர் தாரையாக வழிய பாடிய சந்தர்ப்பங்களும் சில நேரங்களில் ஒலிப்பதிவையே ஒத்திவைத்த சம்பவங்களும்கூட நடந்திருக்கின்றன. “ஒரு இந்து நண்பர் மோசஸ் பற்றி எழுதிய பாடலைப் பாடும் போதும் கிருஷ்ணனைப் பாடும்போதும் கண்ணீர் கரைபுரண்டு ஓடும்” என்பார் அவர்.
“நான் சோர்ந்திருக்கும் சமயங்களில் எல்லாம் மூன்று இடங்களுக்குச் சென்றால் தெம்பாகிவிடுவேன். அவை, திருவையாறு, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், கொச்சினில் இருக்கும் புனிதர் ஜோசப் ஆலயம்” என்பார் யேசுதாஸ். இசையில் அவருக்கு இருந்த ஆழங்கால்பட்ட அறிவால் கர்னாடக இசையைக் கேட்கும் ரசிகர்களையும் அவரால் திருப்திபடுத்த முடிந்தது.
நன்றி: இந்து தமிழ் திசை

====================================================================================

ஏகாந்தமாய்..


யூ… தமிள்ஸ்… ஐ நோ !
- ஏகாந்தன் -

மினிஸ்ட்ரியில் சேர்ந்து எனக்கு சில மாதங்கள் ஆகியிருந்தன. இவன் ஒரு மதராஸி! ஹிந்தி தெரியாது. தானாக ஏதும் பேசமாட்டான். நாம் ஏதாவது கேட்டாலும், இங்கிலீஷில் தான் பதில் சொல்வான் என்கிற நிதர்சனம் கூடவே வேலை பார்க்கும் வடக்கத்தியர் மத்தியிலே பரவியிருந்தது. என்னோடு இயல்பாகப் பேச, அவர்களில் சிலர் தங்கள் ஆங்கிலத்தை சீவிவிட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதையும் கவனிக்க நேர்ந்தது! ஆஃபீஸின் கடைநிலை ஊழியர்களும் சிரமப்பட்டு ஹிந்தியோடு கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து என்னிடம் பேச முனைந்தது சற்றே எரிச்சலையும், ஒருவித அயற்சியையும் ஏற்படுத்தியவாறிருந்தது. வேறுவழியில்லை. வந்தாயிற்று. சேர்ந்தாயிற்று. உள்ளூர் மொழி வசப்படும்வரை.. இதையெல்லாம் சமாளிக்கத்தான் வேணும்.
என்னதான் ஹிந்து பஞ்சாபிகள், உ.பி. பனியாக்கள் அவர்கள், இவர்களென வடக்கு வெரைட்டிகள் இருந்தாலும், சர்தார் இல்லாத ஆஃபீஸ் ஒரு ஆஃபீஸா! சர்தார்ஜிக்கள் கலகலப்பானவர்கள் என அறியப்படுபவர்கள். உதவும் குணம் நிறைய உண்டு அவர்களிடம். ஜோக் அடிப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியும் பேர்வழிகள் அவர்களில் அதிகம். எங்கள் செக்‌ஷனில் சர்தார்ஜிக்கள் இரண்டு பேர். ஒருவன் சஜன் சிங். முப்பதுகளின் ஆரம்பத்திலிருந்தான். பழக இனிமையானவன். வேலையில் கெட்டிக்காரன். ஆரம்ப கட்டத்தில் என் சீட்டில் இருந்த சிக்கலான வேலைகளைப்பற்றி அவனிடம் சொல்லியிருக்கிறேன். அவ்வப்போது உதவுவான். நேரடித் தீர்வு இல்லையென்றால், எப்படி சமாளிப்பது என்று சீனியரான அவன் சில நுணுக்கங்கள் சொல்வான்! உபயோகமாக இருந்திருக்கின்றன. மொத்தத்தில் எளிதானவன். நல்லவன். இன்னொரு சர்தார்ஜி சர்வ்ஜீத் சிங். வயதில் இளையவன். கல்லுளிமங்கன். எதைக் கேட்டாலும் மழுப்புவான். கூட வேலை செய்பவர்களுடனும் அரட்டை/விவாதத்துக்குள் வருவதைத் தவிர்ப்பான். எதையாவது குறிப்பிட்டு அவனது கருத்து என்னவெனக் கேட்டால் தாடியைத் தடவிக்கொண்டே மங்கலாகச் சிரிப்பான். மெல்ல எழுந்து நழுவிவிடுவான். இவனை அவ்வப்போது த்ரிப்பாட்டி சீண்டிச் சிரிப்பதுண்டு. சஜனுக்கு நேரெதிர் இந்த சர்வஜீத். ரெண்டும் ரெண்டு சாம்பிள்தான்.
அன்று மாலையின் லேட்-சிட்டிங் சமயத்தில், ஆறுமணிக்கு மேல், நானும், பக்கத்து சீட் சர்தார்ஜி சஜன் சிங் இருவரும் மட்டுமே இருந்தோம். சஜன் சிங் அரட்டை மூடில் இருந்தான். அல்லது அவனுக்கு அப்படியொன்றும் வேலையில்லை, சும்மா ஃபைல்களைப் புரட்டிக்கொண்டிருந்தான் என்று தெரிந்தது. நான் இந்திய எம்பஸி ஒன்றின் கடிதத்திற்கு பதில் ட்ராஃப்ட் தயார்பண்ணிக்கொண்டிருந்தேன்.
சிங் என்னைப் பார்த்து திடீரென - ”ஆர் யூ ஃப்ரம் கேரள் ?” என்றான்.

(கேரளாவை, கேரள் என்பான் வடக்கத்தி இந்தியன்! அப்படித்தான் ஹிந்தியில் குறிப்பிடுவார்கள். ஹிந்தி நாளேடுகள், புத்தகங்களிலும் அவ்வாறே. அந்த சில வருடங்களில் எங்கள் மினிஸ்ட்ரியில் நிறைய மலையாளிகள் சேர்ந்திருந்தார்கள். தெலுங்கு, கன்னடத்துக்காரர்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். எங்கள் தேர்வுப் பிரிவில் தேர்வாகி வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தவர்களில், அந்த வருட பேட்ச்சில் நான் ஒருவனே தமிழன் என எனக்குப் பின்னால்தான் தெரியவந்தது.)

சர்தார் சஜன் சிங்கின் கேள்வியைச் சரியாகக் காதில் வாங்கிகொள்ளாததால் நானும் கேள்வியானேன்: ”வாட்?”
”ஆர் யூ ஃப்ரம் கேரள்?” (நீ கேரளாவிலிருந்தா வந்திருக்கிறாய்) என்றான் சஜன், மீண்டும்.
”நோ!”
என்று நிறுத்திவிட்டு, வேலையைத் தொடர்ந்தேன். மேற்கொண்டு கேட்டால் சொல்வோம். இல்லையேல் மர்மம் நீடிக்கட்டும். கேரள், சாரல் என்றெல்லாம் இவனுக்குத் தெரிந்து என்ன ஆகப்போகிறது..
”நாட் ஃப்ரம் கேரள்? ஃபிர் கஹா(ன்) ஸே?” ( கேரள் இல்லையா? வேறு எங்கிருந்து நீ வருகிறாய்?) - என்றான் ஹிந்தியில். ”ஃப்ரம் தமிழ்நாடு! ” - என்றேன் ’தமிழ்நாடு’ என்கிற வார்த்தையைக் கொஞ்சம் அழுத்தமாக உச்சரித்தவாறே. இவன் வாயில் இது சரியாக நுழையாதுதான். எனினும், தெரிந்துகொள்ளட்டும், இப்படித்தான் இந்தப் பெயரை உச்சரிப்பது என. டர்பனை இருகைகளாலும் சரி செய்துகொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்த சஜன் சிங் குழம்புவதுபோல் முகத்துடன் ”தமிள்ள்…நடு ?” எனக் கேட்டான்.

”ம்…”
”தமிள்ள்… ஐ அண்டர்ஸ்டேண்ட்.. வாட் ஈஸ் ’நடு’ (தமிள்.. புரியுது. நடு - ன்னா என்ன அர்த்தம்) என்றான் சிங், ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன் ஆர்வம் காட்டுவதுபோல்.
”அது ’நடு’ அல்ல. ’நா..டு’. தமிழ்.. நாடு…” - விளக்குகிற மூடில் நான்.
டர்பனுக்குள் (தலைப்பாகைக்குள்) சூடேறியது சஜன்சிங்கின் மண்டை. மீண்டும் தன் இளம்பச்சை நிற டர்பனை சரிசெய்தவாறே என்னை உற்றுப் பார்த்தான். கேட்டான்: ”(த்)தமிள்.. நா.. டூ..? நா..டூ..ஊ –ன்னா என்ன அர்த்தம், புரியலையே?”
இதென்னடா வம்பாப் போச்சே.. நாடுக்கு விளக்கம் சொன்னால் வேறெங்காவது போய்விடுமோ.. என்று யோசித்தேன். சரி சொல்வோம். கேட்கிறானே சர்தார்ஜி… ”நாடு-ன்னா நேஷன்.. கண்ட்ரி!”
”ஓ…! (த்)தமிள் நேஷன்..! தமிள் நா..டூ.. அப்படின்னா ’அலக் தேஷ்’?

(வேறொரு நாடு..?) இந்தியாவுல இல்லையா?”
பகத்சிங்காக உருமாறியவன்போல் கண்களை உருட்டி என் தேசபக்தியை சந்தேகிப்பதுபோல் என்னைப் பார்த்தான் சஜன் சிங். சிரிப்பு வந்தது. ஃபைலை மூடினேன். தேசபக்த சர்தார்ஜிக்குக் கொஞ்சம் புரியுமாறு விளக்குவோம். ”நாடு- ன்னா இங்கே - ஒரு ப்ரத்யேகமான பிரதேசம்.. தமிழ் மக்கள் வாழும் நிலம்.. பூமி.. என்கிற அர்த்தம்” - என்றேன்.
சமாதானமானவன்போல் தோன்றினான் சஜன் சிங். கொஞ்ச நேரம் பேசாதிருந்தான். இன்னிக்குக் கந்தாயம் முடிந்தது என்று ஃபைல்களை அல்மாரிக்குள் வைத்து மூடினேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படலாம்..
சஜன் சிங் தமிள்நாட்டைப்பற்றி மேலும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் என்பது அவன் அடுத்தாற்போல் கேட்ட கேள்வியில் தெளிவானது.
”ஹூ ஈஸ் பேரியர்?” - என்றான் சீரியஸான முகத்துடன். நானும் குழப்பமாகி (சர்தார் பக்கத்திலிருந்தால் நடக்கக்கூடியதுதான் இது) திருப்பி அவனையே கேட்டேன்:
”என்ன… பேரியரா? என்ன இது.. எதைப்பற்றிக் கேட்கிறாய் நீ”?
”பேரியர்..! பேரியர்தானே அந்த ஆளோட பேரு.. ஃப்ரம் தமிள்..நாடூ.. (தமிழ்நாட்டுலேர்ந்து)” என்றவாறு தன் தாடியைத் தடவி, தடவிக் காண்பித்தான். (எனக்குப் புரியவைக்கிறானாம் சிங்!). ”நான் படிச்சிருக்கேன்.. கடவுள் இல்லைன்னு சொன்னவரு.. ஹீ வாஸ் அகென்ஸ்ட் காட் (God) .. அகெண்ஸ்ட் ராம்! யூ… த்தமிள்ஸ் ஃபால்லோ ஹிம்.. ஐ நோ..! (அவரு கடவுளுக்கே எதிரி.. ராமருக்கு எதிரி.. தமிளர்கள், அவரைப் பின் தொடர்பவர்கள்தான்.. (எல்லாம்) எனக்குத் தெரியும்) என்று என்னையே ’பேரியரா’கப் பாவித்து சீறினான் சஜன் சிங்.
அட ராமா! தமிழனுக்குத்தான் எப்படியெல்லாம் வந்து சேருது ப்ரச்னைகள்!
– திடுக்கிட்டவாறு, சர்தார்ஜியை சாந்தப்படுத்த பதில் சொல்லலானேன்.
”ஹி வாஸ் நாட் பே..ரியர்! ’பெரியார்’ என்று அவரை மரியாதையாகத் தமிழ்நாட்டில் குறிப்பிடுவது வழக்கம்” என்றேன்.
முழுப்பெயரென்று ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்குள் நுழைய நான் தயாராயில்லை. உடனே, வாட் ஆர் யூ சேயிங்? பேரு ராம ஸ்வாமி.. ஆனா பகவான் ராமுக்கு எதிராக் காரியம் செய்தவரா என்பான். வாட் ஈஸ் நாய்க்கர் ? - என்றெல்லாம் குழம்புவான்.. குடைவான். அதை விட்டுவிட்டு பேரியரில்.. ஐ மீன்.. பெரியாரில் மட்டும் விளையாடுவோம்..
சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு பேரி..யார்.. பெரி…யர்ர் என்றெல்லாம் முயற்சி செய்துபார்த்தான்.
”இந்தியாவின் சுதந்திரத்தை எதிர்த்தவர்தானே அந்த ஆள் !” மேலும் கேட்டு என்னை மிரளவைத்தான் சஜன் சிங். என்னடா இது.. நமக்குத் தெரிஞ்சிருப்பதவிட இவனுக்கு ’பேரியர்’ சங்கதியெல்லாம் நிறையத் தெரிந்திருக்கிறதே என்று ஆச்சர்யமாயிருந்தது.
அந்தப் பெரிய மனுஷனின் கட்சி, அவருக்கான ஒரு விசுவாசக் கூட்டம், அதிலிருந்து பிரிந்த அண்ணாத்துரை.. பிறந்த புதுக்கட்சி என்று சுருக்கமாகச் சொன்னேன். தமிழ்நாடு முழுவதுமே இவரை ஒன்றும் ஃபாலோ பண்ணவில்லை. ஒரு சிலர், குறிப்பாக ஒரு கட்சி.. அதாவது டிஎம்கே.. போன்றவை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டிருக்கின்றன என்று தெளிவுபடுத்தினேன்.
”டிஎம்கே.. ஹ்ம்.. தெரியும்.. தெரியும்!”
என்று என்னை ஆராய்வதுபோலப் பார்த்தான். ஏதோ நானே அந்தக் கட்சியின் ஆக்டிவ் மெம்பரோ… என்று சந்தேகிப்பவன்போல்!
அவனை வேகமாக ந்யூட்ரலைஸ் செய்ய நினைத்து ”உங்கள் பஞ்சாபில் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சியாக ‘அகாலி தள்’ (Akali Dal) இருக்கிறதே.. சிரோமணி அகாலி தள். எஸ் ஏ டி! அதுபோலன்னு வச்சிக்கோ..!” என்றேன் சிரித்தவாறு அவனைப் பார்த்து.
என்னுடைய பதிலில் திடுக்கிட்டவனாய், ” சரி.. சரி.. பந்த் கரோ (மூடு)! நேரமாயிடுச்சு.. கிளம்பு! வீட்டுக்குப் போகலாம் .. ஃபைல்களை எடுத்து அலமாரிக்குள் தள்ளி சாத்திவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே புறப்படத் தயாரானான் சஜன் சிங்.

நானும் அவனோடு கிளம்பினேன்.

=================================================================================

நியூஸ் ரூம்

பானுமதி வெங்கடேஸ்வரன்

செய்திகள் 9-11-23

- அருகி வரும் நாட்டு மாடுகளை உறைவிந்து முறையில் மீட்டெடுக்க முயற்சி.

- பிரிட்டனில் வேப்பிங் எனப்படும் எலக்ட்ரிக் சிகரெட்டிற்கு பள்ளி மாணவிகள் பலர் அடிமையாகி வருகிறார்களாம். அவர்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு முயற்சி.

- கேரளாவில் ஐந்து ஆண்டுகளில் பணிச்சுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக 69 போலீஸார் தற்கொலை. இதில் 32 பேர் சிவில் போலீஸ் அதிகாரிகள், 16 பேர் மூத்த சிவில் போலீஸ் அதிகாரிகள், 8 பேர் எ.எஸ்.ஐ.கள், 12 பேர் எஸ்.ஐ.கள், ஒரு இன்ஸ்பெக்டர்.

- சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் ஒருவர் ப்ளூ டூத் பயன்படுத்தியதால் தேர்வாணையம் சில விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில் பெண்கள் தாலி அணிய அனுமதி இருந்தாலும், தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தாலியை கழற்றி கொடுக்க நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியதால் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- டில்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உணவகங்கள் சுணக்கம், ஏர்-ப்யூரிஃபையர் நிறுவனங்கள் மகிழ்ச்சி.

- இந்தியா, பூடான் வர்த்தக உறவை மேம்படுத்த இரு நாடுகளும் முயற்சி.

- தமிழகத்தில் வாகன வரி உயர்கிறது.

====================================================================================

ரசித்த, சுவாரஸ்யமான துல்லிய க்ளிக்குகள்..





=====================================================================================


மழையை ரசிப்பதுபோல் 
மனிதன் 
வெய்யிலை ரசிப்பதில்லை 
அழைப்பதுமில்லை 

இளமை நனைய 
மழையை அழைக்கும்
மனிதன் 
வெயிலை  எப்போதும் 
வெறுப்பாகவே பார்க்கிறான்  

மறுப்பால் 
கோபப்பட்ட வெய்யில் 
வெப்பமான வெறுப்புடன்
வெண்மையாய்  
வீதியெலாம் வழிந்தோடுகிறது  




இருள் பிரதேசங்களில் 
இட்டு நிரப்ப 
அதோ அந்த 
பாத்திரத்தில்தான் கொஞ்சம் 
வெயில் பிடித்து 
வைத்திருக்கிறேன்.


=============================================================================================

பொக்கிஷம் :-

வக்கா பறவை அறிவீர்களோ?

தீபாவளி ஸ்பெஷல்....

தீபாவளி மலர்!

மாநில சுயாட்சி!

பாட்டு வரும்... பாட்டு வரும்...

ஆ... தமிழ் இல்லையா?

பாலச்சந்தரின் சந்தேகம்...

105 கருத்துகள்:

  1. என் பெயர் ராமசேஷன்... வாசித்திருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்சிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்.  அதே சமயம் அவர் என் பெயர் ஆதவன்னு எழுதவில்லை!!

      நீக்கு
    2. இந்த மாதிரி ஜெ.ஸி. சார் கண்ணில் படாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
      சிறுகதை.காமின் கண்ணில் படாதவர்கள் போலிருக்கு.

      நீக்கு
  2. 'இளமை நனைய மழையை அழைக்கும்
    மனிதன்(?)... ஏதோ திருத்தம் வேண்டி வார்த்தைகள் நிற்பது போன்றவான உணர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா.. சாரல் விழும் நேரம்..". - சினிமா பாட்டு!

      நீக்கு
    2. மேலே சொன்னதின் பாதுப்பு என்றால் மனிதன் மனுஷியாகியிருக்க வேண்டுமல்லவா?

      நீக்கு
    3. இது அதன் பாதிப்பால் வந்ததல்ல, அப்படியும் இருக்கிறது எனும் தகவல்!

      நீக்கு
    4. அது என்னவோ தெரியவில்லை, காலத்தின் மாற்றங்களில் இளமை என்பதே பெண்பால் சம்பந்தப்பட்டதாய் ஆகிவிட்டது, இல்லையா?

      நீக்கு
    5. அப்படியா சொல்கிறீர்கள்?  ஏன் எனக்கு அபப்டி தோன்றவில்லை?

      நீக்கு
  3. கல்கி தீபாவளி மலர் விளம்பரத்தில் என் ஆசான் ஆர்வி அவர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பா.வெ. அவர்கள் 'வெகுஜன' செய்திகளை வாசிக்க மாட்டாரா? -- என்று கேட்கத் தோன்றிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகுஜன செய்திகள் என்றால் என்ன?

      நீக்கு
    2. உதா: நேற்று ஸ்ரீரங்கத்த்தில் என்ன உற்சாகம் என்கிறீர்கள்? .. எதிர்கால தமிழக சிறப்புகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாம்.

      நீக்கு
    3. அப்படியா? இந்த பாணியில் நான் செய்திகள் வாசித்துள்ளேன். போதிய வரவேற்பில்லை!

      நீக்கு
    4. வரவேற்புகளுக்கு ஏற்ற மாதிரி நாட்டியம் (dance) ஆட வேண்டும் என்றால் நம் சுயம் செத்து விடும், ஸ்ரீராம். வரவேற்புகளை உருவாக்குவதில் நீங்களும் சளைத்தவர் இல்லை என்பதற்கு வியாழனே அத்தாட்சி.

      நீக்கு
    5. ம்ம்.. இப்படியெல்லாம் ஸ்பின் போடக்கூடாது!

      நீக்கு
  5. அக்கா பறவை தான் அறிவேன்.
    அரிதான தருணங்களில் அது 'அக்கா..வ்' என்று சன்னமாய் நீட்டி
    கண் சிமிட்டவும் செய்யும். எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா!.. கோடானுகோடி நன்றி.

    பதிலளிநீக்கு

  6. நனைந்த துணிகளை
    உலர்த்த வழியில்லை
    மழையே நில்
    வெயிலே வா

    அளவுடன் இருந்தால்
    எதுவும் சரியே
    வெயிலானாலும்
    மழையானாலும்

    இருள் போக்க
    கொஞ்சம் வெயில்
    பிடித்து வைத்தேன்
    சோலார் விளக்கில்.

    சிறு பிராயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்கள் சாதாரணம். வீட்டில் கிட்டு, பாட்டிக்கு கிருஷ்ணா, பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி. ஆதாரிலும், PAN யிலும் க்ரிஷ்ணமூர்த்தி நரசிம்ஹன்.

    இரண்டு போட்டோக்களும் சரியான தருணத்தில் எடுக்கப்பட்டவை. நடந்ததை அப்படியே எடுத்துக்காட்டுகின்றன.

    என்ன இருந்தாலும் ஒரு காரியத்தில் வட இந்தியர் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அது superiority complex எனலாம். அவர்களே ஆளப்பிறந்தவர்கள் என்ற நினைப்

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவதாக சொல்லி இருக்கும் பொருளில் நான் முன்னரே எழுதி இருக்கிறேன்!  மூன்றாவது சற்றே பெரிய ஹைக்கூ.  அந்த பாணியில் சில எழுதி வைத்திருக்கிறேன்.  அடுத்தடுத்த வாரங்களில் வரலாம்...  கபர்தார்!

      நீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. செல்வராஜ்
    திரைப் படங்களில் காவல் துறை அதிகாரியின் பெயராக வந்திருக்கின்றது..

    அட.. என்னோட பேரு!..

    " வாத்யாரே.. உம்ம பேரு
    செலுவராஜூ.. அத்த மறந்துடாதீங்கோ.. குவைத்தில நீங்க ஷில்பா ராஜ் தானே!.. "

    " நீ வேற குறுக்கால குறுக்கால வந்துக்கிட்டு.. "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குவைத்தை விடுங்கள்.. இங்கே என்ன பெயரோ அதைத்தானே....

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஏதோ நம்மால் முடிஞ்சது! ​இதில் (சினிமா) பாடல்களை விட்டு விட்டேன்!

      நீக்கு
  10. ”ஓ…! (த்)தமிள் நேஷன்..! தமிள் நா..டூ.. அப்படின்னா ’அலக் தேஷ்’?..
    (வேறொரு நாடு..?)

    இந்தியாவுல இல்லையா?”

    தமிழனுக்குத்தான் ப்ரச்னைகள்
    எப்படியெல்லாம்
    வந்து சேருது !..

    ஆகா..
    அருமை..
    வரிந்து கட்டிக் கொண்டு யாரும் !?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி நாடு! மற்ற இந்தியன்ஸ் நம்மை அப்படிதான் நினைக்கிறார்கள் போல!

      நீக்கு
  11. வெயிலே மழையாய்
    மழையே வெயிலாய்..
    இருக்கட்டுமே..
    என்ன பிரச்சினை?..

    அவசர உலகின் ஆசை
    இதில் இருந்து அதையும்
    அதில் இருந்து இதையும்
    பிரித்திடல் வேண்டும்..

    அலைந்திடும் உலகே
    அவசரப்படாதே
    இதில் இருந்து அதுவும்
    அதில் இருந்து இதுவும்
    பிரிந்திடுகின்றோம்..

    எதில் இருந்து
    பிழைக்க இருக்கின்றாய்?..
    பார்த்து
    விடுகின்றோம்!..

    பதிலளிநீக்கு
  12. பெயர் ஆராய்ச்சி!!! சுவாரசியம் ரசித்து வாசித்தேன்.

    ஆனா பாருங்க எனக்கு இந்த சிபொ அ ரொம்பக் கம்மி. அதனால எதுல யார் பெயர் வருகிறது என்பது சுத்தம்! அப்படியே பார்த்த சினிமாவாக இருந்தாலும் ம்ஹூம் பெயர் நினைவே இருப்பதில்லை ஸ்ரீராம். நானும் ரஜனி மாதிரி மிஸ்டர் ஸ்‌ரீராம்னு கூப்பிட்டுப் பார்க்கலாமான்னு ஹிஹீஹி

    எனக்கு என் பெயர் கீதா என்பது ரொம்பப் பிடிக்கும். கீதைன்னுதான் என் உறவுக்காரத் தம்பிகள் விளிப்பார்கள். இது பிடிக்கும் ஆனால் கேரளத்து உச்சரிப்பில் கீதே என்று கூப்பிட்டால் முதலில் கொஞ்சம் முகம் சுருங்கியதுண்டு அதன் பின் அவர்கள் மொழி என்று பழகிவிட்டது....

    கேரளத்தில் உள்ளவர்கள் உங்களை விளித்தால் ஸ்ரீராமன் என்பார்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கீதா என்று சொன்னதுமே எஸ் பி பி குரலில் 'கீதா... கீதா..... கீதா.....' ன்னு காதில் கேட்கும் உங்களுக்கும் கேட்கணுமா?  'அவள்' படத்து பாட்டைக் கேட்டுப் பாருங்க...

      நீக்கு
  13. // என்னை என்ன, எப்படி உங்கள் செல்லில் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? //

    Bg EB Sriram Chennai

    பதிலளிநீக்கு
  14. என் இன்னொரு பெயரும் முதலில் பிடித்ததில்லை ஆனால் என் பாட்டி அதன் பொருள் சொன்னதும் ரொம்பப் பிடித்துப் போனது...நான் அழகு இல்லை என்றாலும் என் பெயரிலேனும் அப்பொருள் இருக்கிறதே என்று.......ஆனால் அதையும் கேரளத்தவர்கள் அவர்கள் விளிப்பது போல் விளித்தால் சுத்தமாகப் பிடிக்காது! எனவே கீதே பெட்டர் என்று சொல்லிவிடுவேன்...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வெயில் பிடித்து வைத்திருப்பதை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  16. தாஸேட்டன் தகவல்கள் அறிந்தவை என்றாலும் வாசிக்கும் போது சுவாரஸியம்.

    திருக்கோயிலே ஓடிவா பாடலில் அவர் உச்சரிப்பு தெருக்கோயிலே என்று டக்கென்று கேட்கும்..அது கூட விமர்சிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

    இத்தனைக்கும் மலையாளத்திலும் திருமேனி என்ற சொல் உண்டு. திரு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி அங்கலாய்த்தவரே கண்ணதாசன் தான்..!

      நீக்கு
    2. அது இருக்கட்டும் கீதா.. உங்களுக்கு ஒரு சிபாரிசு.. மேலே ஏகாந்தன் ஸார் பதிவுக்கு பதில் சொல்லி இருக்கேன் பாருங்க ஒரு பாட்டு.. தயவு செய்து அதை ஒரு தரம் கேட்டுட்டு சொல்லுங்க...

      நீக்கு
  17. ஏகாந்தன் அண்ணாவும் சர்தாரும் உரையாடல் சில இடங்களில் சிரித்துவிட்டேன்.

    சுவாரசியமான தொடர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இங்கும் எலக்ட்ரிக் சிகரெட் பிடிப்பதை முக்குக் கடைகளில் பார்க்கிறேன்.

    கர்நாடகா தேர்வு ஆணையம் - ப்ளூடூத் செய்தி வாசித்தேன் தாலி கழட்டிக் கொடுத்த விஷயம் புதிய செய்தி.

    வாகன வரி உயர்ந்தாலும் தெருவில் ஒடும் வாகனங்கள் குறைந்துவிடுமா ம்ஹூம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. மழை வெயில் - ரசித்தேன் ஸ்ரீராம்.

    மழையை ரசிக்கும் அளவு வெயிலை ரசிக்க முடியவில்லைதான் ஆனால் வற்றல் வடாம் ஊறுகாய் போட வெயில் தேவையாச்சே அதுக்காக ரசித்தே ஆக வேண்டிய கட்டாயம் மீக்கு... இல்லைனா கோவிச்சுக்கிட்டா ஸ்ரீராம் நீங்க பிடிச்சு வைச்சிருக்கற பாத்திரத்திலருந்து எடுத்துக் கொள்வேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்துக்குங்க கீதா..   உங்களுக்கில்லாத வெயிலா?!  நான் வேற பிடிச்சு வச்சுக்கறேன்.

      நீக்கு
  20. இணையத்தில் ரசித்த படங்கள் - சூப்பர் டைம்லி ஷாட்ஸ்!

    ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. வக்கா பறவை புதிய தகவல் இது வரை அறியாதது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. பொக்கிஷம் - ப்ராக்ரஸ் ரிப்போர்ட் சிரித்துவிட்டேன். பின்ன நம்ம பழசெல்லாம் இப்படி யார் மூலமாவோ நினைவுபடுத்தப்படுதே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

  23. பெயர் சுவாரசியம்.

    பறவை புதிய தகவல்.

    வெயில் கவிதை பிடித்தது.

    திரு.ஏகாந்தன் பக்கம் ரசனை.

    நியூஸ்ரைம் அறிந்தோம்.

    தீபாவளி மலர்அந்தக்கால மலர்களை நினைவுகூர்ந்தது மனம்.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  24. பெயர் ஆராய்ச்சி அருமை.

    //ரவிச்சந்திரன் என்று என் பாட்டி எனக்கு பெயர் சூட்டி இருந்தார். ஸ்ரீராம் என்பது அப்பா வைத்த பெயர்.//
    அப்பா வைத்த பேர் நல்ல பேர்.

    தினம் உங்கள் பேரை அழைக்கும் போது ராமநாமம் சொன்ன மாதிரி இருக்கும். பாட்டி ஏன் ரவிச்சந்திரன் என்று பேர் வைத்தார் காரணம் தெரியவில்லை.
    தேவகோட்டை ஜி ஸ்ரீராம் கடை பெயர்கள் பகிர்ந்தது நினைவுக்கு வந்தது.
    வை. கோபாலகிருஷ்ணன் சார் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம் என்று அழைப்பது நினைவுக்கு வந்தது.

    //என் பெயரில் முன்பு இரண்டு நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு ஒளிப்பதிவாளர் இருக்கிறார். //

    பழைய நடிகர் ஸ்ரீராம் குரல் நன்றாக இருக்கும், மலைகள்ளன், பழனி ஆகிய படங்களில் நடித்தவர்.

    //ஏதாவது ஒரு படத்தில் அனுஷ்கா 'ஸ்ரீராம்.. ஸ்ரீராம்...' என்று கூப்பிட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். இல்லையா?!!!//

    இப்படி ஒரு ஆசையா! உங்க பாஸ்கிட்ட சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர் ஸ்ரீராம் என்றால் யார் என்று உங்களுக்கு தெரிகிறது. அட... நான் சில பட விளம்பரங்களில் பெயர் மட்டும் பார்த்திருக்கிறேன்.

      //இப்படி ஒரு ஆசையா! உங்க பாஸ்கிட்ட சொல்கிறேன்.//

      பாஸ் படிச்சுட்டாங்க!  அனுஷ்காவுக்கே டப்பிங் வாய்ஸ்..  அப்புறம் என்ன என்கிறார்!

      நீக்கு
    2. //அனுஷ்காவுக்கே டப்பிங் வாய்ஸ்.. அப்புறம் என்ன என்கிறார்!//

      அதானே! சரியாதான் சொல்லி இருக்கிறார்கள்.அனுஷ்கா எங்கே கூப்பிடபோகிறார்!

      நீக்கு
  25. K J யேசுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரை நன்றாக இருக்கிறது.

    ஏகாந்தன் சார் பகிர்வு நியூஸ் ரூம் பகிர்வு எல்லாம் படித்தேன்.
    கவிதை நன்றாக இருக்கிறது.மனித மனம் மழைகாலத்தில் வெயிலை விரும்புவதும், கோடைகாலத்தில் மழையை எதிர்பார்ப்பதும் உண்டு.
    இரண்டும் தேவைதான் நமக்கு.

    பொக்கிஷபகிர்வுகள் அருமை.

    வக்கா பறவையை பற்றி படித்து கொஞ்சம் வருத்தம்.
    கூட்டை விட்டு குஞ்சுகள் கீழே விழுந்து விட்டால் எந்த பறவையாலும் மீன்டும் தூக்கி கூட்டுக்குள் வைக்க முடியாது. அதற்கு பாசம் இல்லை என்று சொல்லமுடியாது. கீழே விழுந்த குஞ்சை சுற்றி சுற்றி வந்து பரிதவிப்பதை பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மழைகாலத்தில் வெயிலை விரும்புவதும், கோடைகாலத்தில் மழையை எதிர்பார்ப்பதும் உண்டு.//

      மழைநாளில் உன்மேனி வெயில் தேடும்.  நல்ல வெயில் நாளில் உன்மேனி மழை தேடும்..
      மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்- கோடைவெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
      அது தேடி இது தேடி அலைகின்றாய் - வாழ்வில்
      எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
      அவரவர்க்கு வாய்த்தஇடம் அவன் போட்ட பிச்சை
      அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை

      கண்ணதாசன்!

      நீக்கு
    2. அவரவர்க்கு வாய்த்தஇடம் அவன் போட்ட பிச்சை
      அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை//

      ஆமாம், உண்மை. நல்ல கவிதை பகிர்வு.

      நீக்கு
    3. அக்கரை பச்சை படத்தில் கண்ணதாசன் எழுதி எம் எஸ் விஸ்வநாதன் பாடிய அருமையான பாடல்.

      நீக்கு
  26. எனக்கும் இரண்டு பெயர்கள் தான். முன்னேயே சொல்லி இருக்கேன். ஜாதகத்தில் எல்லாம் சீதா லக்ஷ்மி தான். கல்யாணப் பத்திரிகையிலும் சீதாலக்ஷ்மி./ இந்தப் பெயரால் தான் எனக்குக் கல்யாணமே நிச்சயம் ஆச்சு என்று கூடச் சொல்லலாம். நம்ம ரங்க்ஸின் கொ.பா. கொ.தா. பெயர் முறையே சாம்பசிவம்/சீதாலக்ஷ்மி. ஆகவே ஜாதகம் புக்ககம் போய்ச் சேர்ந்ததுமே அவங்க பெயர்ப் பொருத்தமே சரியா இருக்குனு கிட்டத்தட்ட முடிவே பண்ணி இருக்காங்க. பின்னால் சில/பல பிரச்னைகள் வரக் கல்யாணம் நடக்காதுன்னே அப்பா சொந்தத்தில் ஏற்கெனவே தொந்திரவு பண்ணிக் கொண்டிருந்த மாப்பிள்ளையை முடிக்க இருந்தார். அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் கடிதம் எழுதிட்டார்.ஆக மொத்தம் நான் ஊரெல்லாம் சுத்தணும்னு இருந்திருக்கே! யாரால் மாத்த முடியும்? சொந்தத்தில் மாப்பிள்ளை எனில் சின்னமனூர்/மதுரை, மதுரை/சின்னமனூர் மட்டும் தான். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் ஊரெல்லாம் சுத்தணும்னு இருந்திருக்கே! யாரால் மாத்த முடியும்? சொந்தத்தில் மாப்பிள்ளை எனில் சின்னமனூர்/மதுரை, மதுரை/சின்னமனூர் மட்டும் தான். :)))) //

      "என்னை மானமுள்ள பொண்ணுன்னு மதுரையில கேட்டாக..  அந்த மன்னார்குடியில் கேட்டாக...  அந்த மாயவரத்துல கேட்டாக.."

      நீக்கு
  27. உங்க பெயரை நான் எ.பி.ஸ்ரீராம்னு குறிச்சு வைச்சிருக்கேன். கவிதை நல்லா இருந்தாலும் வெறும் மழை மட்டுமே போதாதே. வெயிலும் வேண்டும் தான். அதுவும் மழைக்குப் பின்னர் வரும் பளிச் வெயில். ஜாஸ்தி உஷ்ணம் தெரியாது. மெலிதாகக் காற்று வீச பளிச்சென ஒரு வெயில். கண்கள் நிறையக் கண்ணீரோடு சிரிக்கும் குழந்தையைப் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயிலும் வேண்டும்தான் எனினும் அளவுக்கதிகமான வாட்டுகிறது.  ஆனால் ஒன்று அளவுக்கதிகமான வெயிலிலிருந்து தப்பி உள்ளே ஒளிஞ்சிக்கலாம்.  மழை வந்து வெள்ளம் வந்தால் எங்கே ஒளிய?  ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.

      நீக்கு
  28. https://www.kokuvilhindu.net/tamiltype.html இது புதுசாக் கிடைச்சது. எங்கேயோ ஒளிஞ்சுண்டு இருந்திருக்கு. எதையோ கூகிளில் தேடப் போய் இது கிடைக்கவே முயற்சி செய்தால் சுரதா மாதிரியே தான். இப்போ ஒரு வாரமா இதில் தான் தமிழ்த்தட்டச்சு. என் கண்ணே பட்டுடாமல் இருக்கணும் பிள்ளையாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முயற்சித்துப் பார்த்தேன்.  எளிதாக இருக்கிறது.

      நீக்கு
    2. கொக்குவில் என்றால் இலங்கை மென்பொருள் போல...

      நீக்கு
  29. ஏகாந்தனின் சர்தார்ஜி பற்றிய விபரங்கள் அருமை. எங்களிடமும் பலரும் இப்படித் தான் கேட்பாங்க. ஏன் தமிழ்நாட்டு மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்காங்க? ஏன் எப்போவும் "தமிழ்" "தமிழ்" என உணர்ச்சிவசப் படுறாங்க? என்றெல்லாம் கேட்பாங்க தான். என்னத்தைச் சொல்றது? ஏகாந்தன் நகைச்சுவையுடன் எழுதினாலும் அதிலும் அடக்கமாகவே காட்டிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்கள் என்றால் கேவலமா?  நம்மைப் பற்றி இப்படிதான் அபிப்ராயங்கள் பரவுகிறதா..

      நீக்கு
    2. தமிழர்கள் என்றால் கேவலம் என்றில்லை. (போனவாரம் த்ஸே த்ஸரிங் , தமிழர்கள்/சௌத் இந்தியர்களுக்கு பொதுவாகவே தாங்கள் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் (சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) உண்டு என என்னிடம் சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறேனே.. )

      தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்கள் பற்றி, அங்கு நிலவும் மொழி, கலாச்சாரம்பற்றியெல்லாம் அவர்களின் புரிதல் மிகவும் குறைவு, பெரும்பாலும் சரியற்றது. வடநாட்டின் பத்திரிக்கைகள், சேனல்களும் தென்னகத்தைப்பற்றிய சரியான புரிதல் வரும் வகையில் நிகழ்ச்சிகளைத் தந்ததில்லை..

      இப்போது இண்டர்னெட் வந்தபிறகு தென்னகம்பற்றிய புரிதல், விஷய ஞானம் அவர்களிடமும் வந்து சேர்ந்திருக்கிறது...!

      நீக்கு
  30. //என்னோடு இயல்பாகப் பேச, அவர்களில் சிலர் தங்கள் ஆங்கிலத்தை சீவிவிட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதையும் கவனிக்க நேர்ந்தது! //
    நல்ல விஷயம்தானே!
    // கடைநிலை ஊழியர்களும் சிரமப்பட்டு ஹிந்தியோடு கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து என்னிடம் பேச முனைந்தது சற்றே எரிச்சலையும், ஒருவித அயற்சியையும் ஏற்படுத்தியவாறிருந்தது. //

    அட...   பாராட்ட வேண்டாமோ ஏகாந்தன் ஸார்..?  அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள் ஒன்று, இரண்டாவது உங்களோடு பேச ஆவலாயிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எரிச்சல், அயற்சிக்குக் காரணம் என்னோடு பேசுகையில் அவர்கள் தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தைகளைப் அங்கே இங்கே எனக் கலந்துவிட்டு, அதில் பெருமைவேறு கொள்கிறார்கள் என்று முகத்தைப் பார்த்தால் தெரியும்.

      அந்த ஆரம்ப வருடங்களிலும் ஹிந்தியை புரிந்துகொள்வதில் (சில விசேஷ வார்த்தையாடல்கள், பழமொழிகள் போன்றவை தவிர்த்து) எனக்கு சிரமம் அதிகம் இருந்ததில்லை. என் பிரச்னை அந்த அசடுகளுக்கு ஹிந்தியிலேயே பதில் எப்படி சொல்வது என்று..

      நீக்கு
    2. இப்போதெல்லாம் நாடு முழுக்க இலக்கணமில்லாத இங்கிலீஷ்தான் பேசுகிறார்கள்!

      நீக்கு
  31. 'கஹான் ஸே ஆயி' என்கிற சர்தார்ஜியின் வார்தையைப் படித்ததும் நான் சென்று ஒருமுறை 'சஸ்மே பத்தூர்' பாடலைக் கேட்டு விட்டு வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எங்கேயிருந்து ( மாநிலத்திலிருந்து) வருகிறீர்கள் என்று ஒரு ஆணைப் பார்த்து ஹிந்தியில் கேட்கையில், ’ஆயி’ வராது! ஆப் கஹான் ஸே ஹை(ன்) என்றோ, கஹான் ஸே ஹை(ன்) ஆப்? என்றோதான் சொல்வழக்கில் இயல்பாக வரும். சில சொல்லாடல்கள் உருது கலந்து அழகாக வந்து அமரும்! மொழி வசப்படுகையில் ரசிக்கமுடியும்.

      Chashme buddoor (1981) படம் பார்த்திருக்கிறீர்களா? ஃபாரூக் ஷேக், தீப்தி நவல் நடித்த அழகான படம்.

      நீக்கு
    2. ஓகே..  ஆனால் அந்த வார்த்தை எனக்கு அந்தப் பாடலை நினைவு படுத்தியது என்று சொல்லவே வந்தேன்.

      நீக்கு
  32. யேசுதாஸ்/ஜேசிதாஸ் செம்பையின் சீடர் என்பது தெரியுமா? தெரியாதா? குருகுல முறையில் அவரிடம் போய்த் தங்கிப் பாட்டுக் கற்றுக்கொள்ளப் போன யேசுதாசைக் கிறித்துவர் என்பதால் உள்ளேயே விடாமல் கார் ஷெட்டிலோயோ அல்லது அவுட் ஹவுஸிலேயோ தங்க வைச்சாராம் செம்பை. ரொம்பவே ஆசாரக்காரர். ஆரம்பத்தில் ஒரு தம்பளர் தண்ணீர் கூடக் கொடுத்ததில்லையாம். பின்னர் ஜேசுதாஸின் ஈடுபாட்டைப் பார்த்துவிட்டு வீட்டில் சமையலறையிலிருந்து ஹார்லிக்ஸோ/காஃபியோ கொடுக்கச் சொல்லுவாராம். செம்பையின் நினைவு நாளை யேசுதாஸ் ஆராதனை மாதிரிக் கொண்டாடிய நினைவு. சென்னையில்/அம்பத்தூரில் இருக்கையில் அதிகம் பார்த்தது பொதிகை தானே. அதில் வந்திருக்கு ஒளிபரப்பு.

    பதிலளிநீக்கு
  33. ஆக, அகாலி தல்லுக்கு ஈக்வல் டி எம் கே என்று முடிக்கிறீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  34. இரண்டு படங்களும் அதற்கான விளக்கங்களும் நன்றாய் இருக்கு. இருவருமே ஒவ்வொரு வகையில் பயமுறுத்தறாங்க. பா.வெ.யின் நியூஸ் ரூமில் நாட்டு மாடு பற்றிய செய்தி படிச்சுட்டேன். மற்றவை புதுசு.

    பதிலளிநீக்கு
  35. வக்கா பறவை பற்றிச் சொல்லி இருப்பது எழுத்து ரொம்பப் பொடியாக இருப்பதால் படிக்க முடியலை. :( கண்களிலும் நீர் வருது. மசமசனு இருக்கு. மருத்துவரிடமும் போயிட்டு வந்தாச்சு. என்றாலும் ரொம்பப் பொடி எழுத்துனா படிக்கச் சிரமமாகவே இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமப்படாதீர்கள் அக்கா.  பெரிய விஷயம் இல்லை.

      நீக்கு
    2. எனக்கும் சில மாதங்களாக இப்படித்தான்.. கண்களில் நீர் வருகின்றது. மசமசந்னு இருக்கின்ற்து.. கண் மருத்துவரிடம் சென்றால் சித்த் வைத்திய மருந்துகளை விட்டு விடுங்கள் என்கின்றார்..

      நான் மறுபடி செல்லவில்லை..

      நீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. செல்வராஜ் அண்ணே!..

    ஹையா..

    என் பேரைச் சொல்லி நக்மா கூப்பிட்டிருக்காங்களே!..

    பதிலளிநீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. ..அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை//

    அக்கரையே பச்சை
    அதிலேதான் இச்சை.. இச்சை..

    பதிலளிநீக்கு
  40. @ ஸ்ரீராம்

    /// இப்போது எல்லாம் நாடு முழுக்க இலக்கணம் இல்லாத இங்கிலீஷ் தான்.. ///

    ஈன்னாள்
    போன்னாள்.. (இந்நாள் பொன்னாள்) - என்கின்றனர் தோ காட்சி விளம்பரங்களில்!..

    தமிழை இந்தப்பாடு படுத்துகையில் இங்கியாவது பிங்கியாவது!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!