ஞாயிறு, 12 நவம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 20

 

வைரமுடி யாத்திரை தொண்டனூர் பகுதி 20

நம்பி நாராயணர் ஆலயம், தொண்டனூர்

அங்கிருந்து புறப்பட்டு அருகிலிருந்த நம்பி நாராயணர் கோவிலுக்கு நடந்து சென்றோம். அந்த ஊர், தற்போது தொண்ணூர் கரை என்று அழைக்கப்படுகிறது (தொண்டனூர் கரை). அதன் முந்தைய பெயர், பக்த புரி (இராமானுஜர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்). ஆனால் கல்வெட்டுகள், இந்த இடத்தை, யாதவ நாராயண சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கின்றன.

இந்தக் கோவில் 5000 வருடப் பழமையானதாம். மூலவர் நம்பி நாராயணர், அழகிய நின்ற திருமேனி. இராமானுஜர், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, கர்பக்ரஹத்தைச் சுற்றி மண்டபங்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தாராம். இந்தப் பகுதியில் உள்ள பஞ்ச நாராயணர் கோவில்களில் ஒன்று இந்தக் கோவில்.

கோவில், சோழர் காலக் கோவில் போலத் தெரிந்தாலும், இதைக் கட்டியவர்கள் ஹொய்சாள அரசர்கள். ஹொய்சாளர்களின் பாணியாக, இராஜகோபுரம் இல்லாததாக இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. ஆனால் பாறாங்கற்களால் கட்டப்பட்ட உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தைக் கொண்டுள்ளது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே நிலையில் இருக்கிறது.

துவாபர யுகத்தில், அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்ததாம்.  அதற்காக நாராயணை நினைத்துத் தவமிருந்தபோது, இந்தப் பகுதியில் ஐந்து நாராயணர்களை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு வந்ததாம். அப்படி அமைக்கப்பட்ட ஐந்து நாராயணர் கோவில்களில் இதுதான் புராதானமானது. மற்ற கோவில்கள், செலுவ நாராயணர் கோவில், மேல்கோட்டை,  கீர்த்தி நாராயணர் கோவில் தலக்காடு, வீர நாராயணர் கோவில், Gகடக்G மற்றும் சென்னகேசவர் (விஜய நாராயணர்) கோவில், பேளூர். இந்த பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களையும் தரிசிப்பவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சிலர், செல்வநாராயணர் கோவில் மேல்கோட்டையைச் சேர்க்காமல், சௌம்ய நாராயணர் கோவில் நகமங்கலா வைச் சொல்கின்றனர்.

இந்தக் கோவிலுக்கு பல ஹொய்சாள அரசர்கள் நிவந்தங்கள் கொடுத்திருக்கின்றனர். மைசூர் அரசர்  கிருஷ்ணராஜா II,  இந்தக் கோவிலில் அக்ரஹாரம் அமைத்து கோவில் வழிபாடு செம்மையாக நடக்க உதவி செய்திருக்கிறார். இதனை கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோவிலின் முன்பு மிகப் பிரம்மாண்டமான புல்வெளி உள்ளது. அது நந்தவனமாக இருந்திருக்கவேண்டும். கிணறு ஒன்றும் உள்ளது.

1175ல், இங்கு திருவாய்மொழி (நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்) சேவிக்கப்பட்டு (ப்ரபந்தப் பாடல்களை இறைவன் சந்நிதியில் பக்தர் குழாங்கள் அணியணியாக வாசிப்பதை சேவிப்பது என்று சொல்வர்) வந்திருக்கிறது.  வருடம் தோறும் திருவாய்மொழி விழாவும், பிரம்மோத்ஸவமும், அந்தச் சமயத்தில் அன்னதானமும் 12ம் நூற்றாண்டில் நடைபெற்றுவந்திருக்கிறது.  (அப்படியென்றால், இராமானுஜர் காலத்தில் வைணவ மதத்தைப் பரப்பும்போது நாலாயிர திவ்யப் ப்ரபந்தப் பாடல்களும் இங்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்.)

கோவில் வளாகம்-மிகப் பெரியது. 

கோவிலின் முன் உள்ள தீபஸ்தம்பம்/வெற்றித் தூண் மற்றும் தமிழ் கல்வெட்டு

நம்பி நாராயணன் முன்மண்டப நுழைவாயில். மூலவர் நம்பி நாராயணர் (இணையம்)

கோவில் விமானம் மற்றும் திருச்சுற்று. கருங்கல்லினால் ஆனது.

நம்பி நாராயணன் கோவில் விமானம்

கோவிலின் உள்ளே காற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்புஇந்த இடத்தில் இராமானுஜர் தங்கியிருந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இராமானுஜாச்சார்யார் விஜய பீடம் (அவரது திருவடிகளோடு)

தமிழ் கல்வெட்டு. மற்றும் கல் தூண்கள் உடைய மண்டபம்

கோவில் வளாகத்தில் பழைய கிணறு. கல்லால் செய்யப்பட்ட வெற்றித்தூண் (த்வஜஸ்தம்பம் போல) இதுபோல கர்நாடகத்தில் பல கோவில்களில் உண்டு.

இந்த முறை கோவிலில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தரிசனத்துக்குக் குறைவில்லை. பிறகு அங்கிருந்து கிளம்பி, எதிரே இருந்த வேணுகோபாலர் (பார்த்தசாரதி) கோவிலுக்குச் சென்றோம்.

நம்பி நாராயணர் ஆலய தரிசனத்திற்குப் பிறகு, அதன் எதிரில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். இங்குள்ள கோவில்கள் எல்லாமே தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படுபவை.

பார்த்தசாரதி பெருமாள் ஆலயம், தொண்டனூர்

பார்த்தசாரதி பெருமாள் ஆலய சுற்றுச் சுவரும் அங்கிருக்கும் நுழைவு வாயில் போன்ற அமைப்பும் (இதன் அருகில் சிறிய ஆறு ஓடுகிறது)


கோவில் மிகப் பழமையானது.

எந்தக் கோவில் சென்றாலும் எங்களைப் புகைப்படம் எடுக்காமல் இருக்கமாட்டாயா? அந்த அந்தப் பிரதேசப் பெண்களின் முகம், உடை என்று ஏதேனும் உடான்ஸ் விட வேண்டியது.

இந்த விஷ்ணு ரூபம்தான் பெரும்பாலான கர்நாடக கோவில்களின் நான் காண்பது. இன்றைக்கு பார்த்த சாரதிப் பெருமாள் கோவில் கொஞ்சம் பழமையாகத் தெரிந்தாலும் 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு மஹோன்னதமாக இருந்திருக்கவேண்டும்.

பார்த்தசாரதி பெருமாள் மூலவர்.

கருவறை விமானம் மற்றும் வெளிப்புறத்தில் கல்வெட்டுகள். 

கோவில் திருச்சுற்றில் உள்ள தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுகள். 

11-12ம் நூற்றாண்டுகளில் இந்தக் கோவில் வீற்றிருந்த பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டது. கோபிநாதப் பெருமாள் என்றும் அழைத்தனர். 13ம் நூற்றாண்டில், ஊரின் பெயரையொட்டி (யாதவ நாராயண சதுர்வேதி மங்கலம்) கிருஷ்ணன் கோவில் என்றும் சொல்லப்பட்டது.

கருவறையின் இடது பக்கத்தில் மிகச் சிறிய ஆஞ்சநேயர் சிலைவலது பக்கம் இராமானுஜர் திருவுருவம்.

கோவிலில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் மிகவும் தொன்மையானவை. அழகுடன் கூடியவை.

காலை 9 ½ க்குள் மூன்று கோவில்களின் தரிசனம் முடிவடைந்தது. குழுவில் வயதானவர்களும் இருந்ததால், சிறிது நேரமானது. கிடைத்த சமயத்தில், பேருந்து நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த இளநீர் கடைகளில் 30 ரூபாய்க்கு அருமையான இளநிகள் குடித்தோம். வைரமுடி சேவைக்காக பெரும் கூட்டம் வருவதால், புளி விற்பனையும் ஜோராக நடந்துகொண்டிருந்தது. கிலோ 100 ரூபாய். 9 ¾ க்கு அங்கிருந்து கிளம்பி மேல்கோட்டை நோக்கிச் சென்றோம்.

அப்போதே, நிறைய வாகனங்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஊருக்கு வெளியே பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஊருக்குள் செல்ல இலவச வேன்களும் உண்டு. நாங்கள் அங்கிருந்து நடந்து தங்குமிடத்தை அடைந்தோம். நனைந்த துணிகளைக் காயப்போட்டுவிட்டு, 11 மணிக்கு சாப்பிடச் சென்றோம். அன்று ஜிலேபிகோவிலிலிருந்து பிரசாதமாக வந்திருந்த பூந்தி, மேல்கோட்டை புளியோதரையுடன் ரெகுலர் சாப்பாடு.

இரவு வைரமுடி பல்லாக்கு ஊர்வலம் இரவு முழுவதும் தொடரும் என்பதாலும், எங்கள் இடத்திற்கு வருவதற்கு நள்ளிரவு ஆகிவிடும் என்பதாலும், எங்களை மதியம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 5 மணிக்கு காபி சாப்பிட வந்தால் போதும் என்றார்கள்.

பலரும் பயண மற்றும் உண்ட களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இரவு முழுவதும் முழித்திருக்க வேண்டுமே. பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்) 

 

56 கருத்துகள்:

  1. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    வாழ்க வையகம்!..

    பதிலளிநீக்கு
  5. கோவிலின் பழமை குறித்த தகவல்கள் மனதை மிக கவர்கின்றன.  ஒரே ஊருக்கு மூன்று பெயர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். ஒவ்வொரு ஊரின் பெயரும் காலமாற்றங்களின் போது பெயர் மாறுகிறது. சில இடங்கள் மாத்திரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பெயரைத் தக்கவைத்துக்கொள்கிறது. சமீபத்தில் கும்பகோணம் அருகிலுள்ள நெடுந்தெரு என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். சில நூறு வருடங்களுக்கு முன்னால், தஞ்சைப் பகுதியின் மழையின்மை, பஞ்சம் காரணமாக ராகவேந்திர்ரை அழைத்து மரியாதை செய்து நாயக்க மன்னர் வேண்ட, அவர்ருளால் உடனே மழை பொழிந்ததாம்.

      அவருடைய ஆலோசனைப்படி, 650 ஏக்கரா நிலத்தை தானம் செய்து ஆயிரம் அந்தணக் குடும்பங்களை நான்கு ஊர்களாகப் பிரித்து ஒவ்வொரு ஊரும் ஒரு வேத்த்தில் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு, வேதமுழக்கம் இருக்கவேண்டும் என நினைத்து நாயக்கர் மன்னர் ஏற்பாடு செய்தார். அதில் ஒரு ஊர் அவர் தந்தை பெயரால் அமைந்த ரகுநாதபுரம் (முன்பு ரகுநாத நாயக்கர் புரமாக இருந்திருக்குமோ?) அங்கிருக்கும் நீண்ட தெருவினால், நெடுந்தெரு என்று ஊர் பேராயிற்று. காலம் ஊர்களின் பெயரையும் மாற்றிவிடுகிறது, அந்த நிலத்துக்குரிய வழிபாட்டையும் மாற்றுகிறது.

      நீக்கு
  6. இங்கு திருமழிசையில் ஒரு 'வீற்றிருந்த பெருமாள் கோவில்' உள்ளது. சில வாரங்களுக்கு முன் படங்கள் போட்டிருந்தேன்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமழிசை ஆழ்வாரின் அவதாரத் தலம். நான் சென்றிருக்கிறேன்.

      நீக்கு
  7. கோவிலின் வெளியே இருக்கும் புல்வெளியோ, நந்தவனமோ, கிணற்றடியோ தோற்றங்கள் மாறி இருக்கலாம்.  கோவிலுக்குள் அப்படியேதான் இருக்கும்.  இங்குதான் அந்தக் காலத்தில், அந்தக் கால உடை, நடை பாரம்பர்யங்களோடு வீரர்களும், மன்னர்களும், மக்களும் நடமாடி  இருப்பார்கள் என்னும் எண்ணமே சுவாரஸ்யமாய் இருக்கிறது.  தூரத்தே தெரியும் மலை மேடுகளில் பாதுகாப்புக்கு வீரர்கள் வில்லும் அம்புமாய் நின்றிருக்கக் கூடும்!  அந்தக் கிணற்றடி அந்தக் காலத்தில் எப்படி தோற்றம் கொண்டிருந்திருக்கும்?  சுற்றிலும் பூச்செடிகள் இருந்திருக்குமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த எண்ணம் எனக்கு வரலாறு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடங்கள், கோவில்களுக்குச் செல்லும்போது எப்போதும் தோன்றும். தஞ்சைப் பெரிய கோவில் எவ்வளவு பாதுகாப்புகளோடு இருந்திருக்கும், சிவபாதசேகரன் வலது நுழைவாயில் வழியாக வரும்போது எப்படிப்பட்ட கெடுபிடிகள் இருந்திருக்கும், நாட்டின், அரச குலத்தின் காதுகாப்பில் ஒற்றர்கள் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கும், படைவீர்ர்களிடையே கறுப்பாடுகளை எப்படிக் கண்காணித்திருப்பார்கள், உறவினர்களிடையே எப்படிப்பட்ட கண்காணிப்பு இருந்திருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன்.

      நீக்கு
    2. நானும் இப்படி நினைத்துக் கொள்வேன்..

      நீக்கு
  8. சிலருக்கு எப்போதும் புளியோதரை வாய்க்கிறது.  பலருக்கு எப்போதும் வெண்பொங்கல்தான் வாய்க்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர்சாத்த்தை விட பொங்கல் மேல், பொங்கலை விட புளியோதரை மேல், புளியோதரையைவிட சர்க்கரைப் பொங்கல் இன்னும் மேல் என்று தோன்றுமல்லவா? எனக்கு பொதுவா புளியோதரையில் விருப்பமில்லை. (பல இடங்களில் கலவை மிக மென்மையாக அமைந்துவிடுவதும் ஒரு காரணம்) புளிப்பு உரைப்பாக இருந்தால்தான் புளியோதரை சிறக்கும்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்....அப்படி புளியோதரையை வாழ்த்திவிட்டு நீங்கள் சாப்பிடுவது என்னவோ தயிர்சாதம்தான். ஹா ஹா ஹா

      நீக்கு

  9. அழகான
    படங்களுடன்
    சிறப்பான
    தகவல்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்.. நன்றி...இன்று ஏதேனும் கோவிலுக்குச் செல்கிறீர்களா? உங்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஆண்டவர் கடை அல்வாவை (அசோகா அல்வா அல்ல) வாங்க மறந்துவிட்டேன்.

      நீக்கு
    2. அசோகா அல்வா அல்ல..

      அது தான் நமக்குத் தெரியுமே..

      நீக்கு
  10. /// எந்தக் கோயில் சென்றாலும் எங்களைப் புகைப்படம் எடுக்காமல் இருக்கமாட்டாயா?.. அந்த அந்தப் பிரதேசப் பெண்களின் முகம், உடை என்று ஏதேனும் உடான்ஸ் விட வேண்டியது.. ///

    வேற என்ன தான் செய்றது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுழைவாயிலில் என்ன சிற்பம் இருக்கிறது என்று பார்ப்பேன். பெரும்பாலும் இந்த மாதிரி வரவேற்புப் பெண்கள்தாம் இருப்பர். உடனே புகைப்படம் எடுத்துவிட வேண்டியதுதான். அது சரி.. ஏன் ஆண்களை வரவேற்பாளர்களாகப் போடுவதில்லை, எல்லா விழாக்களிலும் பெண்களையே வரவேற்பாளர்களாகப் போடுவதன் மர்மம் என்ன துரை செல்வராஜு சார்?

      நீக்கு
    2. அதை இங்கே ஜொல்லலாமா!..

      புன்னகை, வசீகரம் இவற்றில் அவ்விடமே முதலிடம்..

      இளித்தவாயன் என்று தானே பெயர்..

      புன்னகை அரசன் என்று யாரேனும்?..

      புன்னகை அரசிகளிடத்தில் தான்!..

      (எப்படியோ தப்பித்துக் கொண்டோம்!..)

      நீக்கு
    3. குழந்தைகளைத் தவிர (அதாவது பாலகர்களைத் தவிர) வேறு ஆண்களை வரவேற்பாளராக என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. பொதுவாக, அடுத்து திருமணத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞிகளைத்தான் வரவேற்பில் நிறுத்துவார்கள் என்று சொன்னால், பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துவிடுவார்களோ?

      நீக்கு
    4. நமக்கு அந்த வாய்ப்பு போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்குமோ!?...

      நீக்கு
  11. விளக்கங்கள் அருமை...

    தீபாவளி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளை வாழ்த்துகள்

      நீக்கு
  12. திருச்சுற்றைப் பார்க்கும் போதே கோயிலின் தொன்மை தெரிகிறது. இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். Thiruchutrai
    இலவச வேன் வசதியா? vasathiya ?... அருமை. நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே மிக அழகாக அருமையாக இருக்கின்றன, நெல்லைத்தமிழன். பார்க்கும் அருள் கிடைத்த நீங்கள் இங்கு பகிர்ந்ததில் கூடவே நாங்களும், nankalum....

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லையகத்து துளசிதரன் சார்...உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

      நாங்கள் ஒரே பேருந்தில் எல்லா இடங்களுக்கும் சென்றிருந்தோம்.

      தொண்டனூரில் உள்ள மூன்று கோவில்களும் (அதிலும் இரண்டு கோவில்கள்) மிகவும் தொன்மையானவை. அதிலும் பார்த்தசாரதி பெருமாள் கோவில், உள்ளே, பல மண்டபங்களுடன் மிக விஸ்தாரமாக இருக்கிறது. தொல்லியல் துறையினால் இந்தக் கோவில்கள் பாதுகாக்கப்படுகின்றன (மேம்படுத்தப்படவில்லை, தஞ்சை பெரிய கோவில் போல. அதற்குத் தகுதியானவை இந்தக் கோவில்கள்)

      நீக்கு
  13. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  14. கோவில் தரிசனம் முடித்து வந்தேன், இங்கு வீற்றிருந்த பெருமாளையும், பார்த்தசாரதி பெருமாள் மூலவரையும் தரிசனம் செய்து கொண்டேன்.

    கோவில் படங்கள், திருசுற்று மண்டபங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது, வெகு சுத்தமாக இருக்கிறது. திருசுற்றில் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் மரம் என்ன மரம்?

    தூண் சிற்பங்கள் நடனமாதுகள் அழகு.


    //பார்த்தசாரதி பெருமாள் ஆலய சுற்றுச் சுவரும் அங்கிருக்கும் நுழைவு வாயில் போன்ற அமைப்பும் (இதன் அருகில் சிறிய ஆறு ஓடுகிறது)//
    அருமையான அமைதியான இடமாக இருக்கிறது. பக்கத்தில் ஆறு ஓடுகிறது என்றால் இயற்கை சூழல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்...அந்த மரம் என்ன மரம் என்று இப்போது நினைவில்லை.

      இந்தக் கோவில், அரசர்கள் தங்கள் பாதுகாவலர்கள் புடைசூழ வலம் வரும் கோவிலாக இருந்திருக்கவேண்டும். ரொம்பவே விஸ்தாரமாக இருந்தது.

      இவற்றையெல்லாம் இன்னும் சுத்தமாகவும், பலரும் வந்து பார்க்கும் வரலாற்று இடங்களாகவும் ஆக்க நிறைய செலவழித்து மெனெக்கிடவேண்டும்.

      நீக்கு
  15. வெளிச்சம் , காற்றுக்காக அமைக்கப்பட்ட சாளரம் அழகு. பார்த்தசாரதி பெருமாள் கோவில் முகப்பு தோற்றம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய படங்களை இங்கு போடவில்லை. பார்த்தசாரதி பெருமாள் கோவில் தலைப்புக்குக் கீழே போட்டுள்ள இரண்டு படங்களிலும் (ஒன்றின் கீழ் ஒன்று) அதன் தொன்மை தெரியும். இரண்டாவது படத்தில் அரசனின் சின்னம் போன்று தனியாக கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். முதல் படத்தில் பெரிய நிலைத்தூண் போன்று இருக்கிறது. அது எதற்கு உபயோகித்திருப்பார்கள், அதில் மணி இருந்ததா இல்லை வேறு உபயோகத்திற்கா என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் தொன்மையானது

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், நம் எ.பி நட்புகளான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நேற்றிலிருந்து இங்கு நெட் கனெக்ஷன் தடைபட்டு விட்டது. அதனால் காலையிலேயே முதல் வேலையாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க இயலவில்லை. இப்போது மருமகளின் ஃபோனிலிருந்து கடன் வாங்கி களிக்கிறேன். :))) அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்...தீபாவளிக்கு ஒக்கோரை பண்ணினீங்களா?

      நீக்கு
  17. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  18. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    தீபாவளி நாளில் தொன்மையான கோவில் தரிசனங்கள் சிறப்பு.
    கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
  19. நெல்லை, படங்கள் எல்லாம் அட்டகாசம் போங்க!

    காற்றுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஜன்னல்? செம அழகு. என்ன ஒரு டிசைன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாத்திரம் பிற்கால கட்டிடக் கலையோ என்று தோன்றியது கீதா ரங்கன்(க்கா). தீபாவளி நல்லா கொண்டாடினீங்களா?

      நீக்கு
  20. //இந்தக் கோவில் 5000 வருடப் பழமையானதாம்//

    ஆச்சர்யமான விடயம் வழக்கம் போல படங்கள் அழகு.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி...முதல் கருத்து துபாயிலிருந்து. நலமா?

      நீக்கு
  21. கல்வெட்டு அருகில் தூண்கள் படம் பார்த்ததும் குழந்தைகள் தூண்களைக் கட்டிக் கொண்டு எட்டிப் பார்த்து விளையாடும் காட்சிகள் வருகிறது.

    இப்படியான கொடிமரங்கள்தான் பல கோயில்களிலும் இருப்பதைக் காண முடிகிறது இங்கு.

    பெரிய நிலம் கிணறு..அந்தக்காலத்துல பெரிய தோட்டமா இருந்திருக்குமோ? இப்பவும் அருகில் மரங்கள் இருக்கின்றனவே!

    தொல்லியல் துறையினால் பாதுக்காக்கப்படுவது சிறப்பான விஷயம். இல்லைனா....அம்புட்டுத்தான்.

    நுழைவு வாயில் பகுதியில் ஆறு? அந்தப் படத்தைக் காணலை..?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றைப் போய் படம் எடுக்கவில்லை. நான் ஒருத்தன் போனால் பலர் என்னைத் தொடர்ந்து வந்துவிடுவாங்களோ என்று.

      அந்த இடம் சிதைந்திருக்கும் கீதா ரங்கன். தொல்லியல் துறை அதைச் சீர்மை செய்து புல்வெளியாக வைத்துள்ளார்கள். பிறகு ஒரு தொடரில், ஹளபேடு எப்படி இருக்கிறது என்று காண்பிக்கிறேன். அவற்றையெல்லாம் சீர் செய்வது மிகக் கடினம்

      நீக்கு
  22. எந்தக் கோவில் சென்றாலும் எங்களைப் புகைப்படம் எடுக்காமல் இருக்கமாட்டாயா? அந்த அந்தப் பிரதேசப் பெண்களின் முகம், உடை என்று ஏதேனும் உடான்ஸ் விட வேண்டியது.//

    ஹாஹாஹாஹா ...நானும் இப்படி மனசுக்குள்ள் பேசிக் கொள்வதுண்டு....என்ன கதை கட்டபோற உங்க ப்ளாக்ல போட? ஃபோட்டோ புடிச்சு இண்டு இடுக்கு விடாம புடிக்கறியேன்னு...அதுங்க நினைச்சுக்குமோன்னு ....

    ஏதோ நம்மாலான முடிஞ்ச ஒன்று!

    நான் திரும்பக் கேட்டதுண்டு மனதுக்குள் - அப்ப பெண்கள் எல்லாம் இப்படித்தான் உடை அணிந்து சுற்றிக் கொண்டிருந்தாங்களான்னு? சினிமாலயும் அப்படித்தானே காட்டறாங்கன்னு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்கள் எல்லாம் இப்படித்தான் உடை அணிந்து சுற்றிக் // - இருந்திருக்கலாம் கீதா ரங்கன். ஆண்கள் பார்வை, தற்காலங்களில் மோசமாகியிருக்கும் என்று தோன்றுகிறது.

      அந்தச் சிற்பி அரூபமாக அங்கே இருந்து, யாரும் அவன் பண்ணின சிலைகளைக் கண்டுகொள்ளாமல் போனால் வருத்தப்படுவான் அல்லவா? நான் படங்கள் எடுத்து அவனுடைய வேலைக்கு கௌரவம் சேர்க்கிறேன் அல்லவா?

      நீக்கு
  23. 11-12ம் நூற்றாண்டுகளில் இந்தக் கோவில் வீற்றிருந்த பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டது. கோபிநாதப் பெருமாள் என்றும் அழைத்தனர். 13ம் நூற்றாண்டில், ஊரின் பெயரையொட்டி (யாதவ நாராயண சதுர்வேதி மங்கலம்) கிருஷ்ணன் கோவில் என்றும் சொல்லப்பட்டது.//

    ஓ அப்ப ஒவ்வொரு நூற்றண்டிலும் பெயர் மாற்றம் அடைந்திருக்குமா? அப்பப்ப இருந்த அரசர்கள் அலல்து ஏதேனும் நிகழ்வுகளின் படி மாறுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதம் தெரிந்தவர்களைக் குடியேற்றி, அவர்கள் வாழ்வுக்காக இடமும், நிலமும் கொடுப்பது. ஊரின் பெயர் அவ்வப்போது ஆள்பவர்களால் அல்லது வேண்டப்பட்டவர்களால் மாறியிருக்கலாம்.

      நீக்கு
  24. அப்போதே, நிறைய வாகனங்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஊருக்கு வெளியே பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஊருக்குள் செல்ல இலவச வேன்களும் உண்டு.//

    ஆஹா! அப்ப நான் ஒரு கதையில் சொல்லியிருந்தது உண்மைதான்...ஆனா அப்ப அது விமர்சிக்கப்பட்டது!!!! ஊருக்குள் புகை பசுமை காத்திட என்று....

    நான் ஏதாவது இப்படி ஒரு கற்பனையில் அல்லது அறிந்ததை வைத்து எழுதினா விமர்சிக்கப்படுகிறது. ஐடியலிஸ்டிக், இல்லைனா இப்படி எல்லாம் நடக்காது என்று.....ஆனால் பெரிய எழுத்தாளர்கள் எழுதினால் ஆஹா என்று சொல்லப்படுகிறது. நடைமுறையில் இருந்தாலும் அட! என்று சொல்லப்படும்....

    அதனாலேயே பல கதைகளை முடிக்காமல் பெண்டிங்கில் வைத்து ஆர்வம் குறைகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல்கோட்டையில், ஊரில் மக்கள் நடமாட்டம் அதிகமாகிக்கொண்டு வருவதால் (விழாவை முன்னிட்டு) கார், பேருந்து போன்றவை செல்வது கடினம். அதனால் அவற்றிர்க்குக் கடிவாளம்.

      நீங்கள் நினைத்த 'புகை பசுமை காத்திட' என்பது சிறந்த சிந்தனை. அதிகாலையில் நான் நடைப்பயிற்சி செல்லும்போது பாலுக்காக இரு சக்கர வண்டி புகை விடும்போது எரிச்சலாக இருக்கும்.

      கதை எழுத ஆரம்பித்தால் சட்னு முடித்துவிட வேண்டும். பத்து நாட்கள் கழித்துப் பார்த்தால், என்ன முடிவு யோசித்தோம், எந்த ஃப்ளோவில் கதையைக் கொண்டு செல்லணும் என்பதே மறந்துவிடும். எப்போதும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதான். நானும் ஒரு சில கதைகளை ஆரம்பித்து அப்படியே விட்டிருக்கிறேன்.

      நீக்கு
  25. நல்ல ரசனை மிகுந்த உங்களுக்கு இப்படியான புராதனக் கோயில்களைப் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கே. அதுக்கு இறைவனுக்கு நன்றி. உங்கள் மூலமாக நாங்களும் பார்த்துக்கொள்கிறோம். காலச்சக்கரம் நரசிம்மா மூலம் பஞ்ச நாராயணக் கோட்டம்னு படிச்சது நினைவில் இருந்தாலும் அவற்றுக்கு நீங்கள் நேரிலேயே போயிட்டு வந்து எழுதுவீங்கனு நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  26. நீங்கள் போட்டிருக்கும் படங்கள் மூலமாகவே கோயில்களின் பிரம்மாண்டம் புரிகிறது. அருகில் ஆறு ஓடும் பார்த்தசாரதிக் கோயிலின் இய்ற்கை அழகு கொஞ்சும் இடமாக இருந்திருக்கும் இல்லையா? இப்படி எல்லாம் பார்க்க ஆசை தான். ஆசை இருக்கு தாசில் பண்ண.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!