ஞாயிறு, 19 நவம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 21

 

வைரமுடி யாத்திரை மேல்கோட்டை பகுதி 21

மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பஜார் பக்கம் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்து நடந்தேன். மறுநாள் காலையில் (அதாவது ராஜமுடி தரிசனம் முடிந்ததும்), கல்யாணி திருக்குளத்தில் குளித்துவிட்டு, பிறகு மேல்கோட்டையை விட்டு 7 மணிக்குக் கிளம்பிவிடுவோம். எல்லாமே பக்கத்தில்தான் என்பதால், திருக்குளத்துக்குப் போகும் வழியையும் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்துச் சென்றேன். (யாத்திரை நத்துபவர், காலையில் 5 ½ மணிக்கு காபி சாப்பிட்டுவிட்டு குளத்துக்குச் சென்று குளித்துவிட்டு, 7 மணிக்குள் தயாராகி வெளியில் வந்துவிடுங்கள், பேருந்து கிளம்பும் என்று சொல்லிவிடுவார். வேக வேகமாக நாம் தயாராகவேண்டும்.)

ஊர் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது என்பதையும் காண முடிந்தது.


ஊரில் அலங்காரங்கள். மக்கள் கூட்டம் வரும் என்பதால் ஏகப்பட்ட காவலர்கள்.

கடைவீதி திடீர்க்கடைகளுடன்இவ்வளவு இனிப்பு, காரம் சாப்பிட ஆட்கள் இருக்கா?

வித வித கார வகைகள் பெரிய பெரிய மைசூர்பாக்குகள், வித வித அல்வாக்கள், ஜிலேபிகள். எங்க தயாரிப்பாங்க, என்ன எண்ணெய்லாம் உபயோகிப்பாங்க, சுத்தமா இருக்குமா என்று யோசிக்க விடாமல் நிறங்கள் நம்மைக் கவர்ந்து இழுக்கும்.

மேல்கோட்டைப் பகுதிக்கே உரித்தான புளி வியாபாரம் (கிலோ 100-120)

காலம் மாற மாற, புதுப் புது கட்டிடங்கள் பழைய வரலாற்றை மறைக்க நினைக்கின்றன.


கல்யாணி திருக்குளம். மிகப் பெரியது. சுற்றிலும் மண்டபங்களோடு கூடியது

கல்யாணி திருக்குளத்தின் முழுப் பரிமாணமும் படங்களில் தெரிகிறதா?

திருக்குளச் சுற்றின் மண்டபத்திலுள்ள சிற்பங்கள் மிக அழகு. நிறைய சிற்பங்கள் இருந்தன

கல்யாணி திருக்குளத்திலிருந்து யோக நரசிம்மர் கோவில், மலைமீது. திருக்குளத்தின் மண்டபங்கள்.

மேல்கோட்டையில் பெயர் பெற்ற சுப்பண்ணா மெஸ். இங்கு சர்க்கரைப் பொங்கல் (வெல்லம் மற்றும் கல்கண்டு) நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். மேல்கோட்டைக் காரர்கள், சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் இங்குதான் முதன் முதலில் செய்தார்கள்/கண்டுபிடித்தார்கள். பிறகுதான் மற்ற இடங்களுக்குப் பரவியது என்று சொல்கிறார்கள். கொப்பரைத் தேங்காய் நிறையப் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்தால், இவர்கள்தாம் கண்டுபிடித்தது என்று ஆகிவிடுமா? எனக்கு பரவாயில்லாமல்தான் பிடித்தது. இதைவிட நான் நன்றாகப் பண்ணுவேன் என்று நினைத்தேன். 2 மேசைக்கரண்டி சைஸுக்கு 40 ரூபாய். ஆனால் மற்ற ஐட்டங்களை, தோசை, தட்டை இட்லி போன்றவற்றை சாதாரண விலையில்தான் விற்றார்கள். விழாக்காலம் என்று விலையை ஏற்றவில்லை. (தட்டை இட்லி 20 ரூபாய், மசால் தோசை 40 ரூபாய்)

எல்லோரும் வாங்குகிறார்களே என்று நானும் மேல்கோட்டையில் ஒரு கிலோ புளி வாங்கினேன். அங்கிருந்த கடையில் நல்ல 9x5 வேஷ்டியும் வாங்கிக்கொண்டேன்.

4 மணி வாக்கில் காசி அல்வாவும், போண்டாவும் காபியும் தந்தார்கள். இரவு 8 ½ மணிக்கு இரவு உணவு. அதன் பிறகு வைரமுடியுடன் வரும் செல்வப்பிள்ளை தரிசனத்துக்கு இடம் பிடித்துக் காத்திருக்க வேண்டியதுதான் என்று சொன்னார்கள்.

வைரமுடியும் ராஜமுடியும் ரொம்ப காலமாகவே இட்லி பானை போன்ற பாத்திரத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு லாக்கரில் இருக்கும். இந்த விழாவுக்காகவே பலத்த போலீஸ் காவலுடன் எடுத்து வருவார்கள்அது வந்ததும், அதனைப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக் கொண்டுவருவார்கள். நாம் உள்ளிருக்கும் வைரமுடியையோ இல்லை ராஜமுடியையோ காண இயலாது. ஆனாலும் இந்த ஊர்வலம் (நால்வீதிகளில் வரும்) வந்தால், வங்கி லாக்கரிலிருந்து இரண்டும் வந்துவிட்டன என்று அர்த்தம்.  5 ½ மணி வாக்கில் இந்த ஊர்வலம் நடந்தது


வைரமுடி, வங்கி லாக்கரிலிருந்து குண்டு துளைக்காத வேனில் நிறைய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்படும்பிறகு, மாவட்ட டி.எஸ்.பி மற்றும் சீனியர் அஃபீஷியல்கள் முன்னிலையில், கோவில் பொறுப்பு பட்டாச்சார்யார்களிடம் கொடுக்கப்பட்டு, கேமரா முன்னிலையில் அவர்களால், வைரம் போன்றவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆராயப்படும். அவர்கள் கையெழுத்து போட்டுக்கொடுத்த பிறகு, வைரமுடியும் ராஜமுடியும் பட்டாச்சார்யார் வசம் இருக்கும். அவர்கள் தக்க பாதுகாப்புடன் செல்வப்பிள்ளைக்கு அலங்காரம் செய்யும்போது உபயோகப்படுத்துவார்கள். கோவிலுக்கு நிறைய பாதுகாப்பு போடப்படும்.


திருவிழாவின் அங்கமாக நிறைய ஆட்டம்/வேடிக்கை காட்டும் கலைஞர்கள். 

தெருக்களில் கூட்டம் சேர ஆரம்பிக்கிறது. கிடைக்கின்ற இடத்தில் பாலிதீன் பாயை விரித்து அதில் அமர்ந்துகொள்கின்றனர். – 7 மணிக்கு

8 மணிக்கு ஆங்காங்கே விரிப்புகளை விரித்து படுக்க ஆரம்பிக்கிறார்கள். நள்ளிரவுதான் பெருமாள் ஊர்வலமாக வருவார்.

இரவு 9 மணிக்கு கூட்டம் அதிகமாகிறது. ஆங்காங்கே தரும் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்க ஆரம்பிக்கின்றனர். (வைரமுடி திருவிழா சமயத்தில் அன்னதானம் நிறைய இடங்களில் நடைபெறும். வரிசையில் நின்று உணவும் ஒரு இனிப்பும் வாங்கிக்கொள்வார்கள்இரவாகிவிட்டால் சில இடங்களில் தொன்னையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் தருவார்கள். வைரமுடி சேவையைக் காண வரும் மக்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்)

சில சமயங்களில் சுயநலமாக இடத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றவர்களை வரவிடாமல் செய்யவேண்டியிருக்கும். மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். இரவு 10 மணி நிலைமை.

வைரமுடியுடன் சம்பத்குமாரர் ஊர்வலம் வரும் சமயத்தில் இவ்வளவு கூட்டம் தெருக்களில் இருக்கும். (கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணிக்கு)

இரவு 8 மணிக்கே உணவு தயாராகிவிட்டது. இடத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, batch batch ஆகச் சென்று இரவு உணவைச் சாப்பிட்டோம். கோவில் பிரசாதங்களோடு heavy உணவு. பிறகு அவரவர் இடங்களில் சென்று அமர்ந்துகொண்டோம்.

இரவு 9 ½ மணிக்கு புறப்பாடு ஆரம்பிக்கும். ஊர்வலம் மிக மிக மெதுவாக வரும். அதனால் செவ்வக வடிவ மாட வீதியில் இரண்டாவதில் இருந்த எங்கள் இடத்திற்கு வருவதற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். இடையில் கொஞ்சம் தூங்கினேன். 12 மணிக்கு எழுந்து வெளியில் தயாராக அமர்ந்தேன்.

வைரமுடி சேவை பற்றிய விவரங்கள் அடுத்த வாரத்தில்.

(தொடரும்) 

 

48 கருத்துகள்:

  1. படிப்படியாக கூட்டம் கூடுவதைக் காட்டும் படங்கள் நன்றாய் இருக்கிறது.  கடைசியாக காணப்படும் கூட்டத்தைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.  இதற்கு நடுவில் மாட்டிக் கொள்வதா என்று தோன்றும் எனக்கு.  நீங்களும் இந்தக் கூட்ட இடத்தில்தான் இருந்தீர்களா?  வேறு இடமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். நாங்கள் சாலையின் ஓரத்தில் உள்ள திண்டுகளில் இருந்தாலும், இரண்டு முறையும் கூட்டத்துக்குள் புகுந்து வைரமுடியை அருகில் தரிசனம் செய்தேன். சாலை ஓரத்திலிருந்தும் தரிசனம் நன்றாகவே கிட்டும்.

      நீக்கு
  2. கல்யாணி குளம், அங்கிருந்து மேல்கோட்டை படங்கள் அழகு.  அங்கு வாங்கிய புளி நன்றாய் இருந்ததா? அங்கு கிடைக்கும் வேஷ்டியில் என்ன ஸ்பெஷல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்துநாட்கள் யாத்திரை. வேஷ்டியைத் தோய்த்துக் காயப்போட்டது இரண்டு நாட்கள்தாம் (காலையில் 10,000 ஸ்டெப்ஸ் என்று வைத்துக்கொண்டுள்ளதாலும் தோய்த்துக் காயப்போட சௌகரியக் குறைவு என்பதாலும்). சரி.. ஒரு வேஷ்டிதான் புதிதாக வாங்குவோமே என்று தோன்றியது)

      பெங்களூர் புளி நன்றாக இருக்கும். மேல்கோட்டைப் புளியும்தீன். புதுப் புளி அல்லவா?

      நீக்கு
  3. வைரமுடியின் மதிப்பு என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஒரு புராதானப் பொருளையும் விலை மதிப்பில் அறுதியிட முடியாது. புதிதாக ஒரு பஞ்சலோகச் சிலை, 30 கிலோ என வைத்துக்கொள்ளுங்கள், செய்ய ஒரு லட்சம் ஆகலாம். ஆனால் ஆயிர வருடப் பழைமை என்றால் கோடிக்கணக்கான விலை என்று சொல்வதில்லையா? அது போல

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. படங்களும் படங்களுக்கு ஏற்ப தந்த விளக்கமும் நன்றாக இருந்தன. காவிரி வெள்ளம் போல் மக்கள் வெள்ளம் படிப்படியாக அதிகரித்து தெருக்கள் நிறைவதை புகைப்படத்தில் சரியாக பிடித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயகுமார் சார். கொசகொசவென கூட்டம் இருக்கும். அதிலும் எஓயிலைச் சுற்றியுள்ள மண்டபத்தில் முந்தைய நாளே குழந்தை குட்டிகளோடு பக்தர்கள் இடம்போட ஆரம்பித்துவிடுவார்கள்.

      நீக்கு
  6. ஓரளவுக்கு அறிந்த விஷயங்கள் என்றாலும் விரிவான செய்திகள்..
    கண் கவரும் படங்கள்..

    சிறப்பான பதிவு..

    செல்வப் பிள்ளை திருவடிகள் சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு.... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜர் கையால் மீண்டும் மேல்கோட்டையை அடைந்த செல்வப்பிள்ள மற்றும் இராமானுஜருடைய திருவுருவம் நான் தரிசனம் செய்தபோது கண்ணில் வரலாறும் தெரிந்தது.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் மிக அருமை. திருவிழா கடைகள், மற்றும் கல்யாணி திருக்குளம் படங்கள் மிக அருமை.
    தெருக்களில் கூட்டம் சேர ஆரம்பிக்கும் படங்கள் மிக அருமை.
    ஒளி வெள்ளத்தில் அந்த இடம் இருப்பது மகிழ்ச்சி.
    தூண் சிற்பங்கள் அழகு.
    மகுடி வாசிப்பது, நாகம் படமெடுத்து ஆடும் படம், எக்காளம் வாசிக்கும் தூண் சிற்பங்கள் நடனமாது படங்கள் எல்லாம் அருமை.

    திருவிழாவின் அங்கமாக நிறைய ஆட்டம்/வேடிக்கை காட்டும் கலைஞர்கள். //

    அவர்கள் காலில் சலங்கை கட்டி இருக்கிறார்கள் சுழன்று ஆடும் போது
    அவர்கள் தலைசுமையில் சுற்றி இருக்கும் வண்ண துணிகள் சுழன்று வருவதை பார்க்க நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். வீடியோ எடுத்தீர்களா?

    வைரமுடி சேவை காண ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடும் கலைஞர்களின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை, காணொளியும் எடுக்கவில்லை. இருந்தாலும் இவர்களைப் போல பல கலைஞர்களையும் அங்கு பார்த்தேன்.

      இரவு வைரமுடி சேவை என்றால், பகலில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்துவிடும். காலையிலிருந்தே (10 மணிக்குப் பிறகு) அன்னதானம் போன்றவையும் தொடங்கிவிடும்.

      நீக்கு
  9. படங்கள், அதற்கான விளக்கங்கள் என அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  10. வைரமுடி யாத்திரை படங்களுடன் கண்டு வணங்கினோம்.

    கல்யாணி குளம் சிற்பங்கள் அழகு.
    குளத்திலிருந்து படம் யோக நரசிம்மர் மலையில் அழகாக வீற்றிருக்கிறார்.

    கடைகளும் ,சனக்கூட்டமும் நிறைந்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி.... கடைகளும் சனக்கூட்டமும் அழகுதான், கொஞ்சம் கசகசவென இருந்தாலும்

      நீக்கு
  11. ஸ்வீட் காரம் எல்லாம் வாங்குறோமோ இல்லையோ, திருவிழாக்கடைகளைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும் எனக்கு. சும்மானாலும் திடீர்க்கடைகள், கோயில் அருகே இருக்கும் கடைகள் அதாவது கைவினைப்பொருட்கள் கடைகள், தின்பண்டக்கடைகள் எல்லாம் இருக்குமே ரவுன்ட் வர ரொம்பப் பிடிக்கும். எல்லாமே மனதைக் கவரும்.

    உங்க படங்களைப் பார்த்ததும், இப்ப இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு தோன்றுகிறது. திருப்பதியில் கோயிலுக்குப் போவதை விட அதைச் சுற்றி இருக்கும் க்டைகள், தெருக்கள், பேருந்து செல்லும் சாலைகள், மற்றும் மலையில் இருக்கும் வேறு இடங்களுக்குச் செல்லப் பிடிக்கும்.

    அது போல திருப்பதியின் கீழேயும் கோயிலுக்கு வெளியில், அப்புறம் கோவிந்தராஜர் கோயிலுக்குப் போகு வழி இரு புறமும் கடைகள் தான் என்னை இழுக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். நீங்க எதிர்பார்க்கும் திடீர்க்கடைகள்....லாம் மேல்கோட்டைல வைரமுடி திருவிழாவின்போது பார்க்கலாம்.

      திருப்பதியில் சுற்றி இருக்கும் கடைகள்/தெருக்கள்.... ஒவ்வொண்ணும் எவ்வளவு தூரம் தெரியுமா? அதிலும் இப்போல்லாம் நிறைய சாப்பாட்டுக்கடைகள்தாம் (சுத்தம் இருப்பதுபோல எனக்குத் தோன்றவில்லை).

      கோவிந்தராஜர் கோவிலுக்குப் போகும் வழியில் இருக்கும் கடைகள் பல வெரைட்டிகளில் உள்ளன. கொஞ்சம் போரடித்தால் பக்கத்திலேயே பீம விலாஸில் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

      எனக்கும் வாங்குவதைவிட, வெறும்ன நடந்து இவற்றையெல்லாம் பார்ப்பது மிகவும் பிடித்தமானது.

      நீக்கு
  12. மேல்கோட்டைப் புளி - இங்கு பெங்களூரில் பெரும்பாலும் சந்தைகளில் புளியின் விலை 90-150க்குள்தான் இருக்கும். மேல்கோட்டைப் புளின்னே விப்பாங்க. நல்ல பழம் புளியா இருக்கும் இதுதான் சீசன் பழம் புளி கிடைக்க. அதுவும் நல்லா எளிதா கரைக்கும்படிக் கிடைக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழம்புளியா!..
      பழம் புளியா?..

      இருந்தமிழே..
      உன்னால்
      இருந்தேன்!....

      நீக்கு
    2. பழைய புளி துரை அண்ணா. எனக்குத் தமிழில் புலமை கிடையாது துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
    3. பழம் புளி- பழம் புளிக்குது... அது எந்தப் பழமாவும் இருக்கலாம். கீதா ரங்கன்(க்கா) சொன்னது பழைய புளி. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பழைய புளி கறுப்பா இருக்கும், எனக்குப் பிடிக்காது. அதுபோல வற்றல் மிளகாயிலும் புது மிளகாய்தான் நல்லா இருக்கும்.

      நீக்கு
    4. பெங்களூரில் பெரும்பாலும் புளி 100-120ரூபாய்தான், சீசனில். என்னிடம் ஒரு தடவை மல்லேஸ்வரத்தில் 200 ரூபாய் என்று சொல்லி கால் கிலோவை கடைக்காரர் விற்றுவிட்டார்.

      நீக்கு
    5. சிலப்போ டைப்பும் போது இப்படி நேரும். சிலப்போ இல்ல பல சமயங்களில்..... பொருள் புரிகிறதா அம்புட்டுத்தான். இங்க சும்மா ஜாலியாக வருவது அவ்வளவே, நெல்லை.

      கீதா

      நீக்கு
  13. அழகிய புகைப்படங்களோடு சொல்லிய விபரங்கள் ஏதோ சொற்பொழிவு செய்வது போலவே ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... வாங்க கில்லர்ஜி...சொற்பொழிவாளர்னாலே கொஞ்சம் அறுவை கேஸ் என்பதால் அப்படிச் சொல்லிட்டீங்களா?

      எமிரேட்ஸ் வித்தியாசம் தெரியுதா? நிறைய புதுப் புதுக் கட்டிடங்கள்....

      நீக்கு
  14. கல்யாணித் திருக்குளத்தின் முழுபரிமாணமும் தெரிகிறது நெல்லை. மிக அழகாக இருக்கிறது.

    அதன் கீழுள்ள படங்கள் சிற்பங்கள் மிக அழகு,

    தோசை இட்லி விடலி ஓகே சர்க்கரைப் பொங்கல் விலை கூடுதல்.

    என்னாது புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் இவங்க கண்டுபிடிச்சாங்களா!! இரண்டுமே தென்னகத்துப் பாரம்பரியமாக்கும்! அதிலிருந்துதான் மற்ற மாறுபாடுகள் அவங்கவங்க இடத்துக்கு ஏற்ப. பிரபந்தம் வாசிக்கறவங்க அவங்களுக்கு இது கூடவா தெரியாம போச்சு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரைப் பொங்கல்லயும் இரண்டு வெரைட்டி, வெல்லம், ஜீனி/கல்கண்டுன்னு சொல்றாங்க. அளவு குறைவு விலை அதிகம். மத்ததெல்லாம் பரவாயில்லை.

      நீங்க பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க கீதா ரங்கன்(க்கா). சர்க்கரைப் பொங்கல் தென் தமிழகம்தான். புளியோதரை.... அதுவும் நம்ம ஊர்தான். இவங்க அதிலயும் வெல்லம் போடறாங்களே...ஹிஹிஹி

      நீக்கு
  15. மேல்கோட்டை புளி எப்படினு எனக்குத் தெரியாது ஆனால் முன்பிருந்த இடத்திலும் - சந்தையில் - சரி இங்கும் சரி ஒரு இடத்தில் பழைய புளி மிக நன்றாகக் கிடைக்கும். கடையில் எல்லாம் இல்லை. சைக்கிளில் வைச்சிருப்பாங்க. அப்படியே கொட்டை கோது இல்லாம பேஸ்ட் போன்று நன்றாக எளிதாகக் கரைக்கும் அளவு கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய புளி, கறுப்பாக இருக்காது? எனக்கு புதிய புளி அதுவும் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும்.

      பஹ்ரைனுக்கு நான் பிரியா பிராண்ட் புளி பேஸ்ட்தான் வாங்கிச்செல்வேன். புளி கரைக்கணும் என்ற வேலையும் நேர விரயமும் இருக்காது.

      நீக்கு
  16. கிராமீயக் கலைகள் - கிட்டத்தட்ட தெய்யம் போன்று பூதகோலா, கர்நாடகாவின் மங்களூர் பகுதிகளில்-துளுநாடு - பகுதிகளில் போன்று இருக்கு படங்களைப் பார்த்தா.

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமீய ஆட்டத்தின்போது நான் படம் பிடிக்கவில்லை. பக்தியில் எத்தனையோ வகைகள்.

      நீக்கு
  17. பழம் புளி.
    புளியம் பழம்..

    பழம் புளி.
    பழைய புளி..

    தமிழுக்குள் விளையாடலாம்...

    நீங்கள் எழுதியதே புலமை..
    தமிழே என்றென்றும் இளமை!..

    பதிலளிநீக்கு
  18. திருவிழா படங்கள் திருவிழாவின் விஸ்தாரத்தைச் சொல்கின்றன...

    அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி திருவிழாக்களெல்லாம் அபூர்வம் இல்லையா? கிராமத்துச் சூழலை நினைவுபடுத்தியது இது

      நீக்கு
  19. வைரமுடி சேவை நிகழ்வுகளை ஆத்மார்த்த ஆர்வத்துடன் படமெடுத்திருக்கின்றார் நெல்லை..

    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
  20. காணாமல் போன கருத்துக்களை கேஜிஜி அவர்கள் மீட்டு வருவாரா?

    பதிலளிநீக்கு
  21. சாலையோரக்கடைகளும் மெது மெதுவாய் நிரம்பும் கூட்டமும் திருவிழாவின் பிரம்மாண்டத்தைச் சொல்கிறது. கல்யாணிக்குள மண்டபச் சிற்பங்கள் அருமை. அங்கிருந்து யோக நரசிம்மர் கோயிலும் அருமை. கடைசிப் படங்களில் கூட்டத்தைப் பார்த்தால் நமக்கெல்லாம் சரிப்பட்டூ வராதுனு தோணித்து. ஆனால் இங்கே ஸ்ரீரங்கம் கோயிலின் வைகுண்ட ஏகாதசி சமயத்திலும் சிதம்பரம் திருவாதிரை உற்சவத்தின் போதும் இந்த மாதிரி துண்டு போட்டு இடம் பிடித்து உட்கார்ந்து தரிசித்தோம். இரண்டு அனுபவங்களுமே எழுதி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். இந்தக் கூட்டம் உங்களுக்கு, இப்போது சரிப்படாதுதான்.

      திருவரங்கத்திலும், நல்ல காலத்திலேயே கோயிலுக்குள் நடையாய் நடக்கணும். வைகுண்ட ஏகாதசி நேரங்களில் ரொம்ப நேரம் வரிசையில் நிற்கணும். காயத்ரி மண்டபம் அருகில் தள்ளுமுள்ளாகவேறு இருக்கும்.

      சீனியர் சிட்டிசன்களுக்கும் டிக்கட் விரைவில் வந்துவிடும். இப்போவே அலைபேசியைக் கொண்டுசெல்லக் கூடாது.

      நீக்கு
  22. கமலா ஹரிஹரன் எங்கே மறுபடி காணோம்? உடம்பு சரியில்லையா?எல்லாம் நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலை அதிகமாக இருக்கிறது என,றே நினைக்கிறேன். இப்போதானே உடல் நலம் சரியானது. திருக்கார்த்திகை வேறு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!