சனி, 4 நவம்பர், 2023

விமானத்தில் மாணவியர் மற்றும் நான் படிச்ச கதை

 

==========================================================================================================

விழித்தெழு இளைஞா...


=================================================================================================


                                                           நான் படிச்ச கதை (JKC)


முன்னுரை

 

பூவுலகில் இனப்போர்கள் முடிவில்லாத சரித்திரம். எங்கேயும் எப்போதும் ஏதாவது சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு போர் நிகழ்ந்து கொண்டிருக்கும், நடக்கிறது.  அப்படியான ஈழத்து இறுதிப்போர் முடிந்த நிலையில் அதன் அடிப்படையில் அதனைக் கருவாக்கி பல எழுத்தாளர்களும் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதி வெளியிட்டனர் (புறநானூறு, கலிங்கத்து பரணி போன்று?). அவ்வாறு அமைந்த இரு கதைகளை வாசிக்கும் படி நேர்ந்தது. ஒன்று ஜே. கே. யின் ‘கதை அல்லாத கதை.’   //ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட…’//

(நினைவிருக்கிறதா. ‘சப்புமல் குமாரயாவின் புதையல்’, இப்பகுதியில் இடம்பெற்ற ஜே.கே யின் படைப்பு ) 

இரண்டாவது கதை இன்றைய  ‘ அரசனின் வருகை’.  இருவரும் உபமேய, உருவகங்களாகத் தான் போரை உட்படுத்தி கதையை எழுதியிருக்கின்றனர். 

‘அரசனின் வருகை’ கதை போரில் பங்கேற்க்காத  ஒரு ஊமையன் (SILENT SPECTATOR) படும் பாட்டையும், தெய்வம் எப்படி நின்று கொன்றது என்ற நீதியையும் வலியுறுத்துகிறது. மறைமுக போர் வருணனைகளுக்கு பஞ்சமில்லை. 

ஆசிரியர் இக்கதையை கவிதையாக்க முயற்சித்திருக்கிறார்.  அதனால் கதை உருவகங்களாலும், உபமேயங்களாலும் நிறைந்திருக்கின்றது. 

எடுத்துக்காட்டாக சில உபமானங்கள், உருவகங்கள் 

‘கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும்.’ (சூர்ப்பனகை) 

‘ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது’

‘ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான்.’ (பயம்).

‘நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது.’

'பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.’

‘அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான்.'

‘அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.’ (வெண் புறா சமாதானத்தின் அடையாளம். அறுபட்ட தலை போரின் அடையாளம்.)

‘கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள்.’ (உண்மைக்கு சாயம் பூசுதல்)

‘கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம் ‘ (வானத்தில் மழை மேகம் மழை பெய்ய காத்திருக்கிறது.)

‘வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான்.’ (இடி) ‘நீரேணி வழியாக இறங்கும்  அவன் கைகளில் மின்னல் சாட்டைகள்; சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.’

இப்படிப் பல

இப்படி வருணனைகளால் நிரப்பப் பட்டிருப்பதால் கதையின் நீளம் கூடிவிட்டது. நான் கதையில் பல பாகங்களை வெட்டி சுருக்கி தந்திருக்கிறேன். முழுக்கதையும் வாசிக்க ஏதுவாக  சுட்டிகளை கடைசியில் தந்திருக்கிறேன். பதிவும் நீளம் அதிகம். பொறுத்தருள்க.

அரசனின் வருகை - உமா வரதராஜன்


உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கைபாண்டிருப்புகல்முனைஇலங்கை ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரிஇந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனவர்.

அரசனின் வருகை 


மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன

ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது….கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது…..கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும்….பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.

ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.

ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.

ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்நத சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில்; நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.

மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனா. தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது.

ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று….தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப் பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்.

ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். …..அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.

அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்தான்.

'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'

அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.

'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம்?'....

ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.

'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'

ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.

போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '

அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'

'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான்; ஊமையன்.

அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.

அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள் ..வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன.

'கோயில் தந்தான்

எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்

இன்னுந்தருவான்

கேட்கும் எல்லாம் தருவான்.

தில்லாலங்கடி......தில்லா....

பிச்சைப் பாத்திரம் இந்தா......'

திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.

'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.

அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பாhர்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.

வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள்.

பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர்….ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். …கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்கின்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.

விடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.

'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள்' என்று அதட்டினான்.

அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகள் விரைந்து சென்றன. எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்நது. இடியுண்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர்.

வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள்.

உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான்.

ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

'என் உயிரிலும் மேலான மக்களே.....'

மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.

குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.

'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'

காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.

'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும. உடனே கேளுங்கள்.'

ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள. சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.

'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'

அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.

ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.

பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.

====> கதையின் சுட்டி அழியாச்சுடர்கள் தளத்தில் <====

=====>கதையின் சுட்டி சிறுகதைகள்.காம் தளத்தில் <=====

16 கருத்துகள்:

  1. இராணுவ வீர்ர்கள் பற்றிய பகுதி மனதைக் கவர்ந்தது. நல்லவர்கள் சிலரால் பலர் நிம்மதியாக இருக்கிறோம், அப்படிப்பட்ட நல்லவர்களைப் பற்றிய அறிமுகம் இன்றியே

    பதிலளிநீக்கு
  2. உமா வரதராஜன் லூவரில் எடுத்துக்கொண்டுள்ள படத்தைப் பார்த்து, நானும் அங்கே எடுத்துக்கொண்ட படங்களைப் பகிரணும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. கதை என்னவோ ஈழ மக்களின் துயரங்களைப் பேசுவதுபோல இருக்கிறது. போரினால் திரும்ப அடுக்க முடியாதபடி கலைத்துப்போடப்பட்டவர்கள் அல்லவா அவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. //ஆசிரியர் இக்கதையை கவிதையாக்க முயற்சித்திருக்கிறார். //

    எனக்கென்னவோ அக்கால மனோகரா
    போன்ற திரைப்பட வசனங்கள் மாதிரி எழுத்து நடை தோற்றம் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அப்படியே இருக்கட்டும். புதுக்கவிதை அல்லது வசன கவிதையின் சாயல் தெரிகிறது அல்லவா? அதைத்தான் முன்னுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். விமரிசனத்திற்கு நன்றி சார்.

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. கதை போரால் மக்கள் பட்ட துன்பங்களை சொல்கிறது.

    //பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள்.//

    இந்த வரிகளிய படிக்கும் போது கண் முன் காட்சியாக விரிந்து மனம் கனத்து போனது. சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் திரும்பி வராத போது உறவுகள் படும் துன்பம் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  7. இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க வந்த மன்னன் முடிவு!
    படித்த கதை பகிர்வுக்கு நன்றி. முன்னுரை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. படித்த கதையை மீண்டும் படிக்கும்போதுதான் கூடுதல் விவரங்களும் கதையின் சிறப்பும் புரியும். சனிப்பதிவிற்கு நான் எடுக்கும் ஒவ்வொரு கதையையும் குறைந்தது 4 முறையாவது வாசிப்பேன். அப்போதுதான் கட்டுரையில் மேற்கோள்கள் காட்ட ஏதுவாகும். வருகைக்கும் கருத்துக்கள் கூறியதிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நம்நாட்டு கதை நமது எழுத்தாளரினதும் கூட.

    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ராணுவ வீரர்கள் குறித்த செய்தி அதுவும் அந்தக் கடைசி வரிகள் நச். ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட்! நிஜமாகவே நாம் நிம்மதியாக சுக வாழ்வை வாழ்கிறோம் அவர்கள் எல்லையில் நம்மைக்காக்கும் பணியில்!

    முதல் செய்தியும் நல்ல செய்தி. இப்படி ஒரு செய்தியை முன்பு வேறு ஒரு நிறுவனமோ அல்லது அறக்கட்டளையோ செய்த நினைவு. ஆ நினைவுக்கு வந்து விட்டது ஆதரவற்ற முதியோர்களை அழைத்துச் சென்ற செய்தி.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கதையை இரு முறை வாசித்தேன்., அண்ணா. அப்போதுதான் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேளை என் வாசிப்புத் திறன் அப்படியோ என்னவோ. சில கதைகளை மீண்டும் வாசித்தால்தான் கருத்து சொல்ல முடிகிறது. ஆழ்ந்து வாசிப்பேன். அதில் ஆழ்ந்துவிட்டால் சுற்றி நடப்பது கூடத் தெரியாது எனக்கு.

    நீங்க சொல்லியிருந்த பாட்டு இதில் வருவதை என்று புரிந்து கொண்டேன் இப்பதான் வாசித்தேன். பாடல் இப்பவும் பொருந்தும் தான்.

    உங்கள் வரிகளில் இருந்து தெரிவது ஈழத்தைச் சார்ந்த கதை என்று. நிறையப்பேர் தண்ணீரில் தப்பி ஓடியதும் அப்போது வாசித்த செய்தி.

    ஊமையன் கனவில் அரசனுடன் பேசும் அந்த இடம் அருமை. என் கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. என் தனிப்பட்டக் கருத்து - போர் என்றாலே அங்கு தர்மம் கிடையாது. தர்மத்துக்காகப் போர் என்று சொல்லி போர் புரிந்தாலும் அது தர்மம் கிடையாது. என்பதால் எந்த யுத்தமும் தர்மயுத்தம் கிடையாது. யுத்தம்/போர் என்றாலே அழிவுதான் உயிர்ச்சேதம்தான், ரத்த வெள்ளம் தான். ஊமையனின் கேள்வி யில் ஆசிரியரின் மனம் பிரதிபலிக்கிறது. அதற்கான அரசனின் பதில் - டிட்டோ போர் புரிந்த பல அரசர்கள், ஆட்சியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

    சென்ற புதன் அன்று நெல்லையின் கேள்வி போர் பற்றியதுதான். அங்கு நான் சொல்லியிருந்த அதே கருத்தும் இங்கு பொருந்தும்.

    பல வரிகள் நம் ஆட்சி முறையைக் காட்சிப்படுத்துகின்றன. அரசன் பேச வருகிறான் என்றால் கூட்டம் சேர்ப்பது.

    இந்த அரசன் போரில் வென்ற அரசன் அதாவது அப்பிரதேசத்து அரசன் அல்ல என்று தெரிகிறது. அதான் ஆள் சேர்ப்பு. அராஜகங்கள்.

    கடைசி முடிவு நல்லாருக்கு. அதாவது திணித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாத கடைசி வரிகளின் அமைப்பு.

    //தெய்வம் எப்படி நின்று கொன்றது என்ற நீதியையும் வலியுறுத்துகிறது.//

    அண்ணா இது மட்டும் - அப்படி நின்று கொன்றிருந்தால் இப்போது நிறைய பேரை கொன்றிருக்க வேண்டுமே!

    எனக்கென்னவோ அரபு தேசங்களைப் போல அரசன் அன்றே கொல்வான் என்றான சட்டங்கள் சில விஷயங்களில் இருக்க வேண்டும் என்று தோன்றும். அப்படி இருந்தால் சமூகத்தில் கொலை, கொள்ளையர்கள், பாலியலில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக உலாவ முடியாது. மேலும் குற்றங்கள் பெருகாமலும் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. விரிவான அலசல். நன்றி. யுத்தம் என்பதில் தர்மம் அதர்மம் என்பது கிடையாது. தர்மம் அதர்மம் என்பது மனிதன் வகுத்த நியதி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன் ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!