சனி, 25 நவம்பர், 2023

யாழுக்கு (மறு) உருவம் மற்றும் நான் படிச்ச கதை

 ஈரோட்டில் இருந்து அமெரிக்காவில் போய் படிக்க ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி!

``பணம் இருக்கவங்கதான் அந்த மாதிரியான அமெரிக்க யுனிவர்சிட்டியில எல்லாம் போய் படிக்க முடியும். உன் ஃபேமிலியோட வசதிக்கு எல்லாம் அது சாத்தியமே இல்லை’ன்னு எனக்குத் தெரிஞ்சவங்க சொன்னப்ப எனக்குக் கஷ்டமா இருந்துச்சு."
``எங்க அம்மாவும் அப்பாவும் பெருசா படிக்காதவங்க. எங்க குடும்பத்துல இருந்து வர்ற முதல் தலைமுறைப் பட்டதாரி நான் தான். சாதாரண விவசாயின் மகளான நான் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் படிக்க செலக்ட் ஆகி அமெரிக்காவுக்கு படிக்கப் போறேன்னு நினைக்கிறப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கு” - மகிழ்ச்சியுடன் சொல்லும் ஸ்வேகாவின் வார்த்தைகளில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் நிரம்பியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள காசிபாளையம் என்னும் கிராமத்திலுள்ள ஒரு மிடில்கிளாஸ் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஸ்வேகா. அப்பா சாமிநாதன் ஒரு சாதாரண விவசாயி, அம்மா சுகன்யா இல்லத்தரசி, 7-ம் வகுப்பு படிக்கும் தம்பி அச்சுதன் எனச் சிறிய குடும்பம் ஸ்வேகாவுடையது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், ஸ்வேகாவினுடைய உழைப்பும் ஆர்வமும் மிகப் பெரியது. அதுதான் இன்றைக்கு அவரை அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணம் செலவில்லாமல் பட்டப்படிப்பு படிக்க கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ஆம், அமெரிக்காவின் புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் இலவச ஸ்காலர்ஷிப்பில் பட்டப்படிப்பு படிக்க ஸ்வேகா தேர்வாகியிருக்கிறார்.
இதற்கு ஸ்வேகாவுக்கு கை கொடுத்தது அவருடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான்.
9-வது படிக்கிறப்ப கிளாஸ்ல `ஜெனிட்டிக்ஸ்’ பாடம் சொல்லிக் கொடுத்தது புரியலை. வீட்டுக்கு வந்ததும் யூடியூப்ல அந்த டாபிக் சம்பந்தமா தேட ஆரம்பிச்சேன். அப்போ, அமெரிக்காவுல இருக்கிற எம்.ஐ.டி (MIT - Massachusetts Institute of Technology) யுனிவர்சிட்டியோட லெக்சரர் எரிக் லேண்டர் என்பவர், அவரோட ஸ்டூடன்ட்ஸுக்கு கொடுத்த லெக்சர்ஸைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு ஈஸியா புரிய ஆரம்பிச்சது. மார்க்குக்காகப் படிக்கிறதைவிட, அறிவியலை அங்க வித்தியாசமா சொல்லிக் கொடுத்தது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது.
அப்பவே, எதிர்காலத்துல நாம அமெரிக்கா மாதிரியான வெளிநாடுகள்ல போய் படிக்கணும்ங்கிற ஆசை வந்துடுச்சு.
`நான் 10-வது படிச்சப்ப, `டெக்ஸ்டெரிட்ரி குளோபல்’ என்னும் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஷரத் விவேக் சாகர் எங்க ஸ்கூலுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தாங்க. `நானும் ஒரு ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன் தான். ஸ்காலர்ஷிப்ல அமெரிக்க யுனிவர்சிட்டியில படிச்சிட்டு வந்து தான் இன்னைக்கு இப்படி இருக்கேன்’னு அவரோட ஸ்டோரியை சொன்னப்ப எனக்கு ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்தது.
கிராமப்புறம் மற்றும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாகச் செயல்பட்டு வந்த ஷரத் சாகர் சாரோட நிறுவனத்தில் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவங்ககிட்ட ஐடியா கேட்டுட்டே இருந்தேன். அவங்களோட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்ல தான் சிகாகோ யுனிவர்சிட்டிக்கு அப்ளிக்கேஷன் போட்டேன்.
என்னோட மதிப்பெண் சான்றிதழ்கள், விளையாட்டு மற்றும் அறிவியல் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள், ஆய்வறிக்கைகள் எல்லாத்தையும் அனுப்பினேன். எப்படியான பின்புலத்துல இருந்து நான் வர்றேன், எதுக்காக நான் அந்த யுனிவர்சிட்டியில படிக்கணும்னு ஆசைப்படுறேன்னு எல்லாத்தையும் தெளிவா குறிப்பிட்டிருந்தேன். எல்லாத்தையும் பரிசீலனை செஞ்சிட்டு என்னை ஸ்காலர்ஷிப்ல படிக்க செலக்ட் பண்ணிட்டாங்க. இதன் மூலமாக 4 ஆண்டு படிப்புக்கான கல்விக் கட்டணம், தங்கும் விடுதி , போக்குவரத்து செலவு என 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையுடன் இளங்கலை பட்டப்படிப்பு பயில என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க.
உலக அளவில் சிறந்த பேராசிரியர்கள், சிறந்த ஆய்வகங்கள் போன்றவற்றை நேரடியா பார்க்கப்போறேன், அங்க படிக்கப்போறேன். நிச்சயமா அதையெல்லாம் நான் முழுமையா பயன்படுத்திக்குவேன். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடணும்ங்கிறது என்னோட ஆசை. அதேமாதிரி நம்முடைய எஜூகேஷன் சிஸ்டம் சம்பந்தமாகவும் ஏதாவது செய்யணும்னு ஆசை. 12-வது முடிச்சிட்டு அடுத்த வருஷம் ஆகஸ்ட்லதான் அமெரிக்கா போறேன்.
ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும், கடின உழைப்பும் ஆர்வமும் இருந்தால் யாருக்கு வேணும்னாலும் இப்படியான வாய்ப்புகள் நிச்சயமா கிடைக்கும். நீங்க எங்க இருந்து வர்றீங்கன்னு முக்கியமில்லை. எதை நோக்கி பயணிக்கிறீங்கங்கிறதுதான் முக்கியம்” என்றார்.
வாழ்த்துகள் ஸ்வேகா!

பொன்ராமியின் முகநூல் பதிவை எடுத்துக் கொடுத்து உதவியவர் JKC

==================================================================================


===================================================================================



[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

 

நான் படிச்ச கதை (JKC)

காளிங்கராயன் கொடை

 கதையாசிரியர்: பெ. தூரன்


முன்னுரை

காளிங்கராயன் கொடை என்றால் எதோ கோவில் கொடை போன்ற விழா என்று பொருள்  கொள்ள வேண்டாம். இந்தக் கொடை  காளிங்கராயன் என்ற சிற்றரசன் மக்களுக்கு அருளிய நற்பணி. 90  கி மீ  நீளத்தில் பவானி ஆற்றையும் நொய்யல் ஆற்றையும் இணைக்கும் ஒரு வாய்க்கால் வெட்டியது. 

இந்த வாய்க்கால்  கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும் கதையின் கரு அதுவல்ல. விருந்தோம்பல், மற்றும் தானம் கொடுப்பது என்ற இரு பண்புகள் தான் கருப்பொருட்கள். 

கதையில் நால்வர்  மட்டுமே பாத்திரங்கள். அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. எல்லோரையும் “ங்க” சேர்த்து அழைக்கும் இனிக்கும் கொங்கு தமிழ் கதையைச் சிறப்பிக்கிறது. 


“வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியறதில்லே. வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ” என்று அந்தப் பெரியவர் அன்போடு என்னை வரவேற்றார். அந்தி வேளை, பகல் ஒளி மறைந்து இருள் கூடிக் கொண்டிருந்தது. பெரியவர் அப்பொழுதுதான் பண்ணையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார். அவருடைய மருமகள் ஒரு செம்பிலே தண்ணீரும், ஒரு தட்டத்திலே வெற்றிலைப் பாக்கும் கொண்டு வந்து வைத்துவிட்டு, உள் வீட்டுக் கதவருகிலே போய்ச் சற்று மறைவாக நின்று, “வீட்டிலே எல்லாரும் சுகமா இருக்காங்களாக?” என்று அடங்கிய குரலில் கேட்டாள். “எல்லோரும் சௌக்கியந்தானுங்க” என்று நான் பதில் சொல்லிக்கொண்டே பாயில் அமர்ந்தேன்.

“நம்ம சின்னப்பையன் முத்து வீட்டுக்காரி. உங்க வீட்டைப் பற்றி நினைக்காத நாளே கிடையாது தம்பீ. நீங்க இந்த ஊரிலே இருந்தபோது அவர்கள் ரண்டு பேரும் அப்படி உயிருக்குயிரா இருந்தாங்கோ. ஏன் தம்பி, நீங்கள் தனியாத்தான் வந்தீங்களா?” என்று பெரியவர் தமது மருமகள் கேட்ட கேள்விக்கு வியாக்கியானமாகப் பேசினார். என் மனைவியைப் பற்றித்தான் அவர்கள் அப்படி விசாரிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் சட்டென்று விளங்காமலிருக்கலாம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்கு அது உடனே விளங்கும்.

“தனியாத்தானுங்க வந்தேன். அவளையும் கூட்டி வர வேணும்னா எங்கே முடியுது?” என்றேன் நான். “ஆமா, உங்களுக்கு எத்தனை சோலியோ?… இருந்தாலும் எல்லோருமா வந்து நாலு நாளைக்கி இப்படி இருந்துட்டுப் போனா மனசுக்கு சந்தோஷமா இருக்கும். கட்டுத் தறியிலேயே கட்டிப் போட்டாப்டி ஒரே பக்கத்திலே இருந்தா அவுங்களுக்கும் சலிச்சுப்போகும்” என்று பெரியவர் தம் அனுபவத்திலே உறுதிப்பட்ட உண்மையை எடுத்துக் கூறினார்.

கொங்கு நாட்டிலே எங்கள் ஊரிலே இப்படி அன்போடு பேசி வரவேற்பது சாதாரணமாக பழக்கம். எனக்கு இந்தப் பேச்சைக் கேட்பதிலே தனி மகிழ்ச்சியுண்டு. இந்தத் தடவை ஊருக்குச் சென்ற போதும் இந்த அன்புப் பேச்சைக் கேட்டு என் உள்ளம் பூரித்தது. கொங்கு நாட்டு வேளாளர்களின் பேச்சு ஓர் அலாதியான சுவையோடு இனிக்கும். அவர்கள் என் உறவினர்கள் என்பதால் மட்டும் அப்படி இனிக்கிறதென்று யாரும் நினைக்க வேண்டாம். அந்தக் கொச்சையான பேச்சிலே அத்தனை கனிவும் கபடமற்ற அன்பும் குழைந்து கிடப்பதை யாரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். நான் செம்பிலேயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் பருகி விட்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடும் பழக்கம் கிடையாது. ஆனால் எங்கள் ஊர்ப் பக்கத்திற்குச் சென்றால் வெற்றிலை போடாமல் இருக்க முடியாது. அங்கு வாழும் மக்களுடைய அன்பே மனமார ஏற்றுக் கொண்டதற்கு வெற்றிலை போடுவது ஓர் அடையாளம். ஒரு வீட்டிலே விருந்துண்ணாமல் கூட வந்து விடலாம். ஆனால் வெற்றிலையை ஏற்காமல் வந்துவிட்டால் அந்த வீட்டார் மனம் வருந்துவார்கள். ‘எங்கள் மேலே மனசிலே என்ன வருத்தமோ?’ என்று அவர்கள் கவலைப்படத் தொடங்கி விடுவார்கள்.

“பட்டணத்திலே இந்த வருசம் மழைத்துளி எல்லாம் எப்படி?” என்று மருமகள் இந்தச் சமயத்திலே கேட்டாள். “பட்டணத்திலே மழையைப் பற்றி அவுங்களுக்கு என்ன கவலை? அங்கேதான் பணமா விளையுது. நம்மைப் போலே நிலத்தை நம்பியா அவுங்க பிழைக்கிறாங்கோ?” என்று பெரியவர் இடைமறித்துப் பேசினார்.

“இல்லீங்க. பட்டணத்திலேயும் மழை இல்லாது போனால் கஷ்டந்தானுங்க. குடிக்கக் கூடக் தண்ணீர் கிடைக்காது” என்று நான் சொன்னேன். “அது வாஸ்தவம் தம்பீ, மழை இல்லாமல் போனால் எல்லோருக்கும் கஷ்டந்தான். இருந்தாலும் எங்க கஷ்டம் உங்களுக்கு வராது. நாங்கள் மழையை நம்பித்தான் பிழைக்க வேணும்” என்று பெரியவர் விவசாயிகளுக்கு மழை எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பாகக் காட்டினார்.

அந்த சமயத்திலே ஒரு தள்ளாத கிழவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தடுமாறித் தடுமாறி அங்கே வந்தார். அவரைப் பார்த்தவர்கள் அவர் குறைந்தது இரண்டு நாட்களாவது பட்டினியாக இருந்திருக்க வேண்டும் என்று உடனே கண்டு கொள்வார்கள். அவரை யாரென்று வீட்டுக்காரப் பெரியவருக்குத் தெரியாது. இருந்தாலும் வழக்கப்படி அவரை அன்போடு வரவேற்றுப் பாயில் உட்காரும்படி சொன்னார். “வெற்றிலை போடுங்கோ, எங்கேயோ ரொம்பத் தூரம் போய் வந்திருக்கிறாப்பிலே தெரியுது” என்று பெரியவர் அவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளுவதற்காகக் குறிப்பாகக் கேட்டார்.

“ஆமாங்கோ, திருச்செங்கோட்டுக்குப் போய் மலையேறி அர்த்தனாரீசுவரரைத் தெரிசிக்க வேணும்ணு ரொம்ப நாளாகத் தவணை. அதுக்கு இப்பத்தான் வேளை வந்து கூடிச்சு” என்று கிழவர் தமது நீண்ட பயணத்தைப் பற்றி விளக்கினார். “கால் நடையாகவே போய்விட்டு வந்துட்டாப்படி இருக்குது?” என்று பெரியவர் மீண்டும் கேட்டார்.

“ஆமாங்க, அப்படித்தான் வேண்டுதலை செய்துக்கிட்டேன். வண்டி பூட்டவும் வசதி பத்தாதுங்க. எங்க ஊரிலிருந்து இருபத்தஞ்சு மைல் தானுங்கோ திருச்செங்கோடு போக ஒரு நாள், வர ஒரு நாள், அங்கே சுவாமி தரிசனத்துக்கு ஒரு நாள். அவ்வளவு தானுங்கோ, இந்த வயசிலும் எனக்கு அது கஷ்டமில்லீங்கோ” என்றார் கிழவர்.

“இங்கிருந்து திருச்செங்கோட்டுக்கு நேராக காவிரியைத் தாண்டிப் போனாப் பத்து மைல் ஆகுது. அப்போ நம்ம ஊரு இங்கிருந்து இன்னும் மேக்கே இருக்குதுங்களா?” என்று பெரியவர் விநயமாகக் கேட்டார். “ஆமாங்கோ, இங்கிருந்து இன்னும் பதினைஞ்சு மைல் போக வேணும். திருச்செங்கோட்டிலிருந்து நான் காலையிலே புறப்பட்ட நேரத்துக்கு இந்நேரம் ஊரே போய்ச் சேர்ந்திருக்க வேணும். இருபத்தஞ்சு மைல் ஒரே மூச்சிலே நடந்திடுவனுங்க… ஆனால் இன்னைக்கி அப்படி முடியல்லே.”

“அதுக்கென்னங்க? அப்படி அவசரமாகப் போகாவிட்டால் என்ன முழுகிப் போவுது? நாங்களெல்லாம் மனுசரு இல்லையா? இருந்து சாப்பிட்டு விட்டு இளைப்பாறி நாளைக்குப் போனாப் போகுது” என்றார் பெரியவர்.

“அதுக்கொன்னும் உங்க வீட்டிலே குறைவில்லீங்கோ. நீங்கதான் ஊர் பண்ணாடின்னு கேள்விப்பட்டு ராத்திரிக்கு இங்கே தங்கியிருந்து போகலான்னு வந்தேன். இருட்டிலே கண் சரியாத் தெரியாதுங்கோ” என்றார் கிழவர். “கண் தெரிஞ்சாலும் தெரியாது போனாலும் இருட்டிலே அப்படி எதுக்குப் போக வேணும்? இது உங்க வீடு மாதிரிதானுங்கோ. எழுந்திருங்கோ சாப்பிடலாம்” என்று பெரியவர் அவரிடம் கூறிவிட்டு, “தம்பீ, நிங்களும் இன்னிக்கு இங்கேதான் சாப்பிட வேணும்” என்று என்னிடம் சொன்னார். 

நான் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு உடனே எழுந்தேன். பட்டினியாக வந்திருக்கும் கிழவருக்கு உடனே உணவு தரவேண்டும் என்பது எங்கள் இருவருடைய உட்கருத்தாகவும் இருந்தது. ஆனால் கிழவர் பாயை விட்டு எழுந்திருக்கவில்லை. “நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ. நான் இன்னைக்கு சாப்பிடறதில்லை. உடனே படுத்துக்க வேணும். அவ்வளவுதானுங்க”” என்று அவர் கூறினார். பண்ணாடி அவரை விடவில்லை. சாப்பிட்டே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார். வந்தவர் ஒரே மனமாக மறுத்துக் கொண்டே இருக்கவே பண்ணாடிக்கு ஒரு சந்தேகம் வந்தது. “கோயிலுக்குப் போய் வந்ததனால் விரதம் ஒண்ணும் இல்லையே?” என்று அவர் கேட்டார். கோயிலுக்குப் போய்த் திரும்புகிறவர்கள் வீடு சேரும் வரை உண்ணாவிரதம் இருப்பதுண்டு.

“கோயிலுக்குப் போனதிலே விரதம் இல்லீங்கோ. ஆனால் வேறே ஒரு விரதம் இருக்குதுங்கோ. அதை அப்புறம் நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு வேணும்னா சொல்லறேன். இப்போ நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் கிழவர்.

“எங்களுக்கு இப்போ அவசரம் இல்லீங்கோ. நாங்கள் வழக்கமாச் சாப்பிட இன்னும் நேரமாகும்” என்றேன் நான். “அது தெரிஞ்சுது தம்பீ. எனக்காகத்தான் பண்ணாடியும் இத்தனை அவசரமாகச் சாப்பிட எழுந்திருக்கிறாங்கோன்னு நான் கண்டுக்கிட்டேன்… ஆனால் நான் சாப்பிடறது இல்லை” என்றார் கிழவர்.

“ஏன் சாப்பிடறது இல்லைன்னு தெரியாமல் நாங்கள் போகப் போறதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளியை விட்டுப் போட்டு சாப்பிடற வழக்கம் எங்க வம்சத்திலேயே இல்லீங்கோ” என்று உட்கார்ந்தார் பண்ணாடி.

பண்ணாடி அப்படி ஒரே தீர்மானமாக உட்கார்ந்த பிறகும், தாம் சாப்பிட மறுப்பதற்கு விளக்கம் சொல்லாமலிருப்பது சரியல்லவென்று கிழவருக்குப் பட்டது. “விருந்தாளியை விட்டுச் சாப்பிடறது உங்கள் வம்சத்திலே இல்லீங்கோ கொடுத்த தருமத்தை மறுபடியும் கையிலே தொடறது எங்க வம்சத்திலேயும் இல்லீங்கோ – ஏழையாப் போய்ட்டாலும் காளிங்கராயன் வம்சமுங்கோ நாங்கோ” என்றார் கிழவர்.

“அப்படிங்களா? ரொம்ப சந்தோசமுங்கோ. அப்போ உங்களை நான் இனிமேலும் சாப்பிடக் கூப்பிட மாட்டேனுங்கோ விஷயம் தெரிஞ்சு போச்சு – ஆனால் வீட்டுக்கு வந்தவங்கள் பட்டினியாக இருக்கிறபோது நானும் சாப்பிடப் போறதில்லை… தம்பீ, நீங்க மாத்திரம் போய் சாப்பிட்டு வாங்கோ” என்றார் பெரியவர். “எனக்கு மாத்திரம் எதுக்குங்கோ?” என்றேன் நான்.

“தம்பீ, இப்போ நீங்க இந்த ஊருக்காரர் அல்ல. நீங்கள் விருந்தாளி தான். நீங்கள் சாப்பிட்டாக் குத்தமில்லை” என்றார் பண்ணாடி.

இதே சமயத்தில் அவருடைய மருமகளும் வந்து என்னைச் சாப்பிட வற்புறுத்தத் தொடங்கவே நான் சமையற் பகுதிக்குச் சென்றேன். சாப்பிட்டுக் கொண்டே, “அவர் ஏன் சாப்பிட மாட்டேனென்று பிடிவாதமாக இருக்கிறார்?” என்று கேட்டேன்.

மருமகள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “காளிங்கராயன் வம்சத்தார் நம்ம பக்கத்திலே தண்ணீர் கூடத் தொடமாட்டார்கள்” என்றாள் அவள்.

“ஏன் அவர்களும் நம்மைப்போல வேளாளக் கவுண்டர்கள்தானே? நம்மைவிட உயர்ந்தவர்களா?” “அப்படி ஒன்னும் இல்லை. ஆனால் காளிங்கராயக் கவுண்டர் தான் அந்தக் காலத்திலே சுமார் ஆறு நூறு வருசத்துக்கு முன்னாலே நம்ம ஊருக்கு வாய்க்கால் வெட்டி வச்சார். அந்த வாய்க்காலிலிருந்து தண்ணீர் பாய்ஞ்சுதான் நம்ம ஊர்லே நெல் விளையுது”

“அது எனக்கும் தெரியும். அதனால்தான் இந்த வாய்க்காலுக்குக் காளிங்கராயன் வாய்க்கால் என்று பெயர் வந்திருக்கிறது. பவானி ஆறு காவிரியில் சங்கமமாகிற இடத்திலிருந்து வாய்க்கால் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று நான் மேலும் விளக்கம் கூறினேன்.

“ஆமாம். இந்த வாய்க்காலை வெட்டி வச்சதும் அந்த வம்சத்தார் எல்லோரும் மேற்கே குடி போய்விட்டார்களாம். தருமத்திற்காக அவர்கள் வெட்டிய வாய்க்காலிலுருந்து தண்ணீர் பாய்ஞ்சு விளைகிற அரிசியை அவுங்க சாப்பிட மாட்டாங்களாம். அப்படி சாப்பிட்டால் தருமம் கெட்டுப் போகுமாம். அந்த வம்சத்திலே இப்போ ஏழையா இருக்கறவங்க கூட நம்ம பக்கத்திலே தண்ணீர்கூடக் குடிக்க மாட்டாங்கோ”

“அப்படியா?” என்று நான் ஆச்சரியத்தில் முழுகி விட்டேன். எனக்கு அதற்குமேலே சாப்பிடக்கூட முடியவில்லை. அவசரம் அவசரமாக ஒருவாறு உணவை முடித்துக்கொண்டு அந்தக் கிழவர் தூங்குவதற்கு முன் அவரை நன்றாகப் பார்க்க வேண்டுமென்று வந்தேன்.

“ஏனுங்கோ, இந்தப் பக்கம் வர்றபோது உங்கள் வீட்டிலேயே செய்த கட்டு சோறாவது கொண்டு வரலாமே? அதைக் கூடக் காணமே?” என்று பண்ணாடி  கிழவரை அந்தச் சமயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டுமென்று நானும் எண்ணிக் கொண்டிருந்தேன்.

“கொண்டுகிட்டுத்தான் வந்தனுங்கோ. கோயிலுக்குப் போற போது காளிங்கராயன் வாய்ககாலைத் தாண்டித் தானுங்கோ போக வேணும். அப்படிப் போகிறபோது அந்த வாய்க்கால் கரையிலே ரண்டு மாடு மேய்க்கிற பசங்கள் கஞ்சிக்குச் செத்து உட்கார்ந்திருந்தாங்கோ, கண்ணெல்லாம் குழி பாஞ்சு கிடந்தது.”

“சரி சரி கட்டுச்சோத்து மூட்டையை அவுங்களுக்குக் கொடுத்திட்டீங்களா?”

“ஆமாங்கோ, வாய்க்கால் வெட்டி வச்சவன் வச்சான். ரண்டு வேளைக்குச் சோறு கூடப் போடப்படாதுங்களா? ரண்டு நாளைக்குப் பட்டினியாக் கிடந்தா நான் என்ன செத்தா போவனுங்க?”

கிழவர் பேச்சைக் கேட்டு எனக்கு அவரிடத்திலே மிகுந்த மரியாதை ஏற்பட்டது. காளிங்கராயனுடைய தாராள மனம் இன்னும் இருக்கிறதென்று நான் பூரிப்படைந்தேன். மறுநாள் காலையிலே அந்தக் கிழவரின் முகத்தைப் பகல் வெளிச்சத்திலே நன்றாகப் பார்க்கவேண்டுமென்று எனக்கு ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. கிழக்கு வெளுக்கு முன்னமேயே கரிக்குருவி கூப்பிடுறபோதே எழுந்து அந்த கிழவர் கால்நடையாகத் தமது ஊருக்குப் போய்விட்டார்.

பின்னுரை

விருந்தோம்பலிலும் கவுரவம்  காப்பதிலும் இரு கிழவர்களும் ஒருவருக்கு ஒருவர் மிஞ்சிவிட்டனர். வந்தவர்களுக்கு தாம்பூலம் தந்து குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடும் கொடுத்து உபசரிப்பதில் பண்ணாடிக் கிழவர் மிஞ்சி விட்டார் என்றால் பாதசாரிக் கிழவர்  பட்டினியால் வருந்தினாலும் தன்னுடைய கட்டு சோற்றை சிறுவர்களுக்கு கொடுத்ததால் மதிப்பு மிக்கவராகிறார். இது தான் பரம்பரை குணம் என்று சொல்வதோ? இந்த பண்பு

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

என்ற அவ்வையின் மூதுரையை நினைவூட்டுகிறது. 

இவ்வாறு கூறும்போது நம்முடய கந்தசாமி ஐயா அவர்களின் விருந்தோம்பல் பண்பு நினைவில் வந்தது. யார் அவரைச் சென்று கண்டாலும் அன்னபூர்ணா  முழு சாப்பாடு கொடுத்து உபசரிப்பார்.

பி.கு : ஈரோடு மாவட்டத்தில் ஏன், உலக அளவில் மிகப்பழமையான பாசன வாய்க்கால் என்ற பெருமை ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலுக்கு உண்டு. கி.பி.1270-ம் ஆண்டு காளிங்கராயன் அணை கட்டும் பணியும், வாய்க்கால் வெட்டும் பணியும் தொடங்கின. சரியாக 12 ஆண்டுகள் நடந்த இந்த பணி கி.பி.1282-ம் ஆண்டு முடிந்தது

நன்றி :: தினத்தந்தி

ஆசிரியர் பற்றிய குறிப்பு

பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) (ம. ப. பெரியசாமித் தூரன். பெ.தூரன்). தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.

அவருடைய சிறுகதைகள் எளிமையான நேரடியான கருத்துப்பிரச்சார வடிவங்கள்.

பெற்ற விருதுகள்

  1968 இந்திய குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம பூஷன் விருது.

  1970 தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது.

  1972 தமிழ் சங்கம் வழங்கிய, இசைப் பேரறிஞர் விருது.

1978 எம்.ஏ.சி. தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அண்ணாமலை செட்டியார் விருது.

தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு (கூட்டம் எனப்படுகிறது).

நன்றி  : >>>>>>>தமிழ் விக்கி<<<<<<<<

>>>>>>>>>கதையின் சுட்டி<<<<<<<<<<

அட்டாலும் பால்சுவையில் குன்றாது; அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார், நண்பு அல்லர்;

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

என்பது "மூதுரை" என்னும் நூலில் ஔவையார் பாடியருளிய பாடல்.


20 கருத்துகள்:

  1. ஆறு வயது சிறார்களாய் அவதானித்துக்
    கதை கேட்கலாம்.
    கேட்டு விட்டு 50 வயது ஆட்களுக்கான மன நிலையில் பின்னூட்டமிடலாம்.
    எல்லாம் ஜித்து வேலை தான்.

    காளிங்கராயன் வாய்க்கால் 1965 ஆண்டு வாக்கில் நான் பவானியில் வசித்த பொழுது பஸ் ஸ்டாண்டுக்குக் கொஞசம் தள்ளி சின்ன கால்வாய் மாதிரி ஓடி கொண்டிருந்தது.

    பெ.தூரன் அவர்கள் பற்றி சொல்லவும் வாசிக்கவும் நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான உருவகம். தூரன் சிறுவர் இலக்கியத்தில் (கதை, பாடல்) பெரிய பங்கு வகித்தவர்.

      அவரைப் பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
      Jayakumar

      நீக்கு
  2. யாழ் படம் இருக்குமோ என்று பார்த்தால் யாழ் மீட்டுருவாக்கியதாகச் சொல்லப்படுபவரின் படத்தைப் போட்டிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  3. காளிங்கராயன் கொடை கதை நன்னூல் கதை போல இருக்கிறது. நன்று.

    இதைப்போன்றதொரு கதையை உ வெ சா அவர்களின் நூலில் படித்திருக்குறேன். வண்டியோட்டு உணவையும் சாப்பிடாமல் பணத்தையும் வாங்கிக்கொள்ளாமல் செல்வது. அது நடந்த சம்பவம் என எழுதியிருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
  4. Global ஆகிவிட்ட இக்காலத்தில் பல வைராக்கியங்களுக்கும் இடமில்லை, நான் பாகிஸ்தான் பாஸ்மதி, அந்த ஊர் கேரட், ரோஜா கில்கந்து, சேமியா உபயோகித்ததைப் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்கந்த் Gulkand. மீட்டா பானில் உட்கார்ந்து வாய்க்கு ருசி சேர்க்கும் சங்கதி!

      நீக்கு
    2. நான் நம்ம ஊர் ஆச்சி ப்ரான்ட் பொருட்களையே பயன்படுத்துவதில்லைனு விரதம் மேற்கொண்டிருக்கேன். ஆச்சியில் சமைச்சுக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை. ஓட்டல்களில் தெரியாமல் நடந்தால் உண்டு.

      நீக்கு
  5. பெரியசாமி தூரன் புலமை வாய்ந்த
    கர்நாடக சங்கீத வழிவந்த சாகித்ய கர்த்தா.

    'கொஞ்சி கொஞ்சி வா குகனே' 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே' போன்ற பாடல்களை இயற்றிய பெருமை பெற்றவர்.
    சொல்ல மறந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. ஸ்வேதாவின் தன்நம்பிக்கையை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  8. முயற்சியால் வென்ற சுவேதாவுக்கு வாழ்த்துகள்.

    ப்ரித்திமாவின் பணி சிறக்கட்டும்.

    'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. நல்லதோர்கதை.

    பதிலளிநீக்கு
  9. ஸ்வேகா? அல்லது ஸ்வேதா? நல்லபடியாய்ப் படிச்சு முன்னுக்கு வரட்டும். அவருடைய உண்மையான ஆசைகள் நிறைவேறட்டும். யாழைப் படைச்சவரின் படமும், யாழின் படங்களும் அருமை. ப்ரித்திமாவின் வியாபாரம் வெற்றிகரமாய் நடைபெறட்டும்.

    பதிலளிநீக்கு
  10. கொங்கு நடையில் கதை அருமை. இம்மாதிரி வைராக்கியம் கொண்ட பெரிய மனிதர்களை அந்தக் காலங்களில் மட்டுமல்ல, இப்போதும் காணலாம். பெ.தூரன் அவர்களின் கவிதைகள் பிடித்தமானவையும் கூட.

    பதிலளிநீக்கு
  11. தன்னப்பிக்கை நிறைந்த ஸ்வேகாவிற்கு வாழ்த்துகள் , யாழிசை எங்கும் ஒலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. கதை பகிர்வு மிக அருமை.விருந்தோம்பலும், கொடைதன்மையும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கதை.கொங்குதமிழ் கேட்க இனிமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!