செவ்வாய், 7 நவம்பர், 2023

சிறுகதை : அன்பின் உலகம் - துரை செல்வராஜூ

 அன்பின் உலகம்

துரை செல்வராஜூ 

*** *** *** *** *** ***

இரண்டு நாட்களாக மேக மூட்டம் அப்படியே இருந்ததில் மக்களுக்கு மகிழ்ச்சி..

இன்னும் நான்கு நாட்களில் தீபாவளி..

" அம்மா வாங்க.. ஐயா வாங்க..  அண்ணே வாங்க.. அக்கா வாங்க.."

" ஜின் ஜினக்கா நைட்டி.. ஒன்னு எடுத்தா ஒன்னு பிரீய்..  ஒன்னு எடுத்தா ஒன்னு பிரீய்..   வாங்க அம்மா.. வாங்க... "

" வாங்க அக்கா.. வாங்க..  டன் டனக்கா லெக்கின்ஸ்... ரெண்டு எடுத்தா ஒன்னு பிரீய்.. ரெண்டு எடுத்தா ஒன்னு பிரீய்..  "

" அழகுக்கு அழகூட்டும் அபிலாஷா இன்னர்ஸ்.. ஷார்ட்ஸ்.. அதுக்கு இது ஆப்பர்.. இதுக்கு அது ஆப்பர்..  ஆப்பரோ.. ஆப்பர்!.. "

வேஷ்டிகள் விற்பனை இன்றிக் கிடக்க - ஒலிப் பெருக்கிகளில் பற்பல ஆரவார சத்தங்கள்..

" எதை எடுப்பது.. எதற்கு எடுப்பது?.. " 

மக்களின் குழப்பத்தால் தவித்திருந்தது - வேப்பந்திடல் வருடாந்திர தீபாவளிச் சந்தை..

இத்தனைக்கும் இது நடுத்தரமான நகரம்.. பெரியதாக ஏழெட்டு ஜவுளிக் மாளிகைகள்.. இன்னபிற வசதிகள்..  

இருந்தாலும் வருடாந்திர தீபாவளி சந்தடிக்குள் புகுந்து வேட்டி சேலை எடுத்தால் தான் ஜனங்களுக்கு நிம்மதி..

வேப்பந்திடல்..  ஒரு காலத்தில் ஏராளமான வேப்ப மரங்கள் இருந்த இடம்.. 

அதையெல்லாம் பார்த்தவர்கள் யாரும் இப்போது இல்லை என்பதுடன் எந்த ஒரு வேப்ப மரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

எல்லாமும் எப்படியோ காணாமல் போய் விட -  மரங்கள் நின்றிருந்த பூமி மட்டுமே மிச்சம்.. 

அதையும் அப்படியே அடித்துச் சுருட்டிக் கொள்வதற்கு ஏராளமான கோஷ்டிகள்..

எப்படியோ தப்பிப் பிழைத்த வேப்பந்திடல்  வருடாந்திரம் தீபாவளிச் சந்தையாக களை கட்டிக்கொள்ளும்.. 

உள்ளூர் நகராட்சிக்கு இந்தப் பத்து நாட்களிலும் நல்ல வருமானம்.. 

அந்தப் பக்கத்துல இருந்து ஜவுளி வியாபாரிகளும் இந்தப் பக்கத்துல இருந்து பலசரக்கு வியாபாரிகளும் கடை விரித்திருந்தனர்.. இதோடு கூட , இந்த வருடம் தட்டு முட்டு சாமான்  கடைகளும் புதிதாக அமைக்கப்பட்டிருந்தன..

இந்தச் சிறு நகரமும் ஏதோ ஒரு அபிவிருத்தி திட்டத்துக்குள் வந்து விட்டதால் - திடலுக்குப் பக்கத்தில் இருந்த - அந்தக் காலத்து குளம் மீட்கப்பட்டு மின்னொளியுடன் இருந்தது.. நகரமும் புதிய ஒப்பனையில்  பளபள பள பப்பளா.. - என்று இருந்தது.. 

நெரிசலுக்குள் மெதுவாக நடந்து கொண்டிருந்த சுந்தர் அந்தக் கடைக்கு முன் நின்றான்.. 

அங்கே ஆண் பெண்களுக்கான அனைத்துவித உள்ளாடைகளும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.. 

இழைந்தபடி வந்து கொண்டிருந்த சுபா கணவனின் கையைச் சுரண்டினாள்..

" ஏன்.. என்ன விஷயம்?.. " - என்பதாக அர்த்தம்..

" அப்பா  ரெண்டு இன்னர் கேட்டிருந்தார்.. அதான் வாங்கலாமே.. ன்னு.. " -  சுந்தர் புன்னகைத்தான்..

" அப்படியா.. வாங்க சொல்றேன்!.. " - என்றபடி அவனது கையைப் பிடித்துக் கொண்டு நடந்து பேருந்து நிலையத்துக்கு அருகிருந்த உணவகத்தின் தனியறைக்குள் நுழைந்தாள்.. 

நாலு நாள் இடைவெளியில் தீபாவளி இருக்க - ஜனங்கள் உணவகத்தினுள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்..

சுந்தருக்கு ஒன்றும் புரியவில்லை.. 

'அங்கே அந்தக் கடையில்  அப்பாவுக்குத் தோதாக  கிடைத்திருக்கும்.. ஏன் இவள் தடுக்கிறாள்.. வீண் செலவு.. என்று நினைக்கிறாளோ?. ' 

மனதிற்குள் எண்ணங்கள் ஓடின..

வந்து நின்ற சர்வரிடம். - " இரண்டு நெய் ரோஸ்ட்.. பனீர் மசாலா.. காஃபி.. " - என்றாள் சுபா..

" மாமாவுக்கு இன்னர் எடுக்க வேற கடை கிடைக்கலையா.. உங்களுக்கு!.. "

" இங்கே எடுத்தால் விலை கம்மியா இருக்கும்!.. "

சுந்தர் - சுபா..  கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள்.. நல்ல முறையில் பொழுதுகள்..  

தாய் வீட்டில் தலை தீபாவளிக்குப் பிறகு இங்கே மாமனார் வீட்டில் இது முதல் தீபாவளி.. 

சென்ற வாரமே வீட்டில் அனைவருக்கும் ஜவுளி எடுத்தாயிற்று.. 

சுந்தரின் தங்கை ஜனனிக்கு மட்டும் மூன்று வகை.. கல்யாணம் ஆகப் போகின்றவள் என்று அவளுக்கு பிரத்தியேகமாக சிலவற்றை  எடுத்துக் கொடுத்திருந்தாள் சுபா..

இப்படியிருக்க -  இது மட்டும் எப்படியோ விடுபட்டு விட்டது..

தீபாவளிக்காக - லாடு,  பர்பி, நெய் முறுக்கு எல்லாம் செய்து அடுக்கி வைத்தாயிற்று.. 

முதல் நாள் இரவில்  செய்து கொள்ளலாம் என்று சில வகைகள் காத்திருக்கின்றன..

இப்போதைக்கு வீட்டில் வேறு வேலை இல்லை என்பதால் கடைத் தெரு வேடிக்கை பார்க்க என்று வந்து விட்டார்கள்..

நேருக்கு நேர் பார்த்தபடி புருவங்களை உயர்த்தினாள் சுபா..

" அன்னைக்கு மறந்து போச்சு.. "

" கீதா பேலஸ் போய் எடுக்கலாமே.. " 

" அங்கே வயசானவங்களுக்கு ஏத்த மாதிரி இருக்குமா தெரியலை... அதுவும்  விலை குறைச்சலா..."  - வார்த்தைகள் தடுமாறின அவனிடம்..

" ஏன் வயசானவங்க மாடர்ன் டிரண்ட்  இன்னர் போட்டுக்கக் கூடாதா.. எப்படி.. எப்படி?.. விலை கம்மியா எடுக்கணுமா.. போன வாரம் நம்ம ரெண்டு பேருக்கும் கையில் எவ்வளவு பணம் கொடுத்தாங்க?..."

" பத்தாயிரம்.. "

" அப்படிப்பட்ட அப்பாவுக்கு இப்படிப்பட்ட பிள்ளை!.. "

சுபா புன்னகைத்தாள்..

நெய் ரோஸ்ட்டும் பனீர் மசாலாவும் வந்தன..

" பத்து நிமிஷம் கழித்து காஃபி.. " - என்றாள்..

" நினைச்சுப் பாருங்க..  உங்கள எப்படி எல்லாம் வளர்த்திருப்பார்!.. நீங்க யங் ஸ்டாரா இருந்தப்போ உங்க வளர்ச்சியப் பார்த்து எப்படி எல்லாம் சந்தோஷப்பட்டிருப்பார்!.. "

மெல்ல தலையசைத்தான் சுந்தர்..

" அன்னைக்கு நீங்க குழந்தை.. இன்னைக்கு அவங்க குழந்தை... "

மின்னலைப் போல் வார்த்தைகள்..

" வயசாகிற காலத்துல எதுக்கு காஸ்ட்லியா.. ன்னு தான்!.. "

சுந்தர் அமைதியாகச் சொன்னான்..

" நாம யார் அதத் தீர்மானிக்கிறதுக்கு?.. " 

மெல்லிய புன்னகை அவளிடம்..

" கீதா பேலஸ் ல நல்லதா  பார்த்து வாங்கலாம்.. இங்கே வேணாம்.. இதெல்லாம்  விலை கம்மியான செகண்ட்ஸ்.. "

" இப்படியான சிந்தனை எல்லாம் எப்படி வருது சுபா?.. "

" நம்ம வீட்டு பெரியவங்க  நமக்காக எதை எல்லாமோ விட்டுக் கொடுத்தவங்க..  இன்னிக்கு எழுபதாயிரம் எண்பதாயிரம் சாலரி சர்வ சாதாரணமா எடுக்கறோம்...  அன்னைக்கு அவங்க ஆயிரம்  ரூபாய்க்குக் கூட கஷ்டப்பட்டு இருக்கலாம்.. காஸ்ட்லியா  க்வாலிட்டியா நாலு இன்னர் எடுத்துக் கொடுப்போம்.. அவங்களுக்கும் ஒரு உலகம் இருக்கு!.. "

சுபாவின் கண்கள் மின்னின..

" அவங்களோட தியாகத்துக்கு ஈடு இணை கொடுக்கவே முடியாது.. "

" நான் கேட்டதுக்கு பதில் இல்லையே?... இந்த சிந்தனை எல்லாம் எப்படி வருது உனக்கு?.. "
 
மறுபடியும் கேட்டான் சுந்தர்..

" இதையெல்லாம் தனியா வந்து யாரும் சொல்லித் தரணுமா!.. "


அன்பினொடு காற்றில் முத்தமிட்டான் சுந்தர்.. 

புன்னகையுடன் சுந்தரின் கையைப் பற்றிக் கொண்டு, கீதா ஜவுளி மாளிகையை நோக்கி - 

நடந்து கொண்டிருந்தாள் சுபா..

***

45 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் சித்திரத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. வயதாகிவிட்டால் அவரவர்க்கு உரிய மரியாதை போய்விடுமா? நல்ல சிறுகதை.

    அது சரி... இப்படியாப்பட்ட மருமகள்களைத் தேட முடியாமல் பலர் அவஸ்தையில் மேட்ரிடோனியல் வாட்சப் க்ரூப்பில் புலம்பித் தள்ளுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      இது மேட்டுரி மோனியல் காலம் இப்படித் தான் இருக்கும்..

      தம்பிக்கு அக்கா பெண் பார்த்ததும் அண்ணனுக்கு தங்கை பெண் பார்த்ததும் கனவாகிப் போய் விட்டன..

      நீக்கு
  6. பல நேரங்களில், ஒவ்வொருவருக்கான உடைகளை நாமே நம் அளவுகோல்களை வைத்துத் தீர்மானிக்கிறோமே, அவர்கள் மனதில் என்ன இருக்கு என்பதை அறிந்துகொள்ள முயல்வதில்லையே என்ற சிந்தனையைத் தூண்டும் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று வயதாகி விட்டாலே அவர்களிடத்தில் சகஜமாகப் பேசுவதற்கும் இன்றைய இளம் தலைமுறை யோசிக்கின்றது..

      ஏன் இப்படி?..

      காலத்தின் கொடுமைகளில் இதுவும் ஒன்று

      நீக்கு
    2. பல நேரங்களில், ஒவ்வொருவருக்கான உடைகளை நாமே நம் அளவுகோல்களை வைத்துத் தீர்மானிக்கிறோமே, அவர்கள் மனதில் என்ன இருக்கு என்பதை அறிந்துகொள்ள முயல்வதில்லையே //

      நெல்லை, எங்கள் வீட்டில் நாங்கள் சொல்லிக் கொள்வது. பேசிக் கொள்வது. அதனால்தான் பரிசுப் பொருட்கள் என்பதையே நாங்கள் பெரும்பாலும் தவிர்க்கிறோம் நெருங்கிய உறவினர், நட்பு என்றால் கேட்டு வாங்கிக் கொடுத்துவிடுவோம். இன்னும் சொல்ல உண்டு பெரிதாகிறதுகருத்து. நேரப் பற்றாக்குறை வேறு..

      கீதா

      நீக்கு
  7. நெல்லை அவர்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  8. இப்படி மருமகள் கிடைத்தால் அனைவரும் நலமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி மருமகள் கிடைத்தால் நல்லது தான்..

      தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  9. மூன்றாம் தேதி எழுதி நான்காம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட கதை ஏழாம் தேதியன்று படத்துடன் வெளியாகியிருக்கின்றது

    எனில்
    கௌதம் அவர்களது உழைப்பு பாராட்டுக்குரியது.

    மகிழ்ச்சி.. நன்றி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! துரை அண்ணா உங்களுக்குப் பாராட்டுகள்!

      எனக்கு இப்படி டக்கென்று எழுத சுத்தமாக முடிவதில்லை. அதுவும் இப்போது மண்டைக்குள் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீராம் பாவம் என்னிடம் கேட்டும் என்னால் பாதியில் இருப்பவற்றைக் கூட முடிக்க முடியவில்லை.

      முடித்தாலும் கதையை அப்படியே ஆறப் போட்டு. ;பின்னர் எடுக்கும் போது என்ன தோன்றுகிறது மனதில் என்று பார்த்து ஹிஹிஹி யுகம் ஆகிடும்!!!

      கீதா

      நீக்கு
    2. பாராட்டுக்கு நன்றி. ஆம் - குறுகிய காலத்தில் அவசரமாக வரையப்பட்ட படம்.

      நீக்கு
  10. நல்ல சிறுகதை .

    இப்படி ஓர் அன்புள்ளம் உள்ள மருமகள் கிடைத்திருப்பது அந்தப் பெரியவர்கள் செய்த புண்ணியத்தால்தான்.

    கடைத்தெருவு எல்லாம் நாமும் சுற்றி வந்தோம். படிக்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது கதை.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      வாழ்க நலம்..

      நீக்கு
  11. கதை நன்று துரை அண்ணா. நல்ல முடிவு. நல்ல பெண் அந்த மருமகள்.

    இப்படியும் மருமகள்கள் இருக்கிறார்கள். நான் என் சுற்று வட்டாரத்தில் பார்க்கிறேன்.

    நல்ல முடிவு

    கீதா

    பதிலளிநீக்கு
  12. போன வாரம் நம்ம ரெண்டு பேருக்கும் கையில் எவ்வளவு பணம் கொடுத்தாங்க?..."

    " பத்தாயிரம்.. "//

    இதில் மற்றொரு கேள்வியும் எழுகிறது. சுந்தரின் அப்பா 10000 ஆயிரம் கொடுத்ததாலா? என்ற கேள்வியும் எழுகிறது.

    ஒரு சிலர் புகுந்த வீட்டில் கறந்து கொண்டு பாராமல் போகும் ரகங்கள், முகத்தைத்திருப்பிக் கொள்ளும் ரகங்கள்....

    புகுந்த வீட்டினர் கொஞ்சம் பணம் குறைவாக இருந்தால் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகும் வர்கம்....

    ஒரு சிலர் மொய்க்கு மொய் என்பது போல மாமனார் மாமியார் வீட்டிலிருந்து வந்தால் உடனே பதிலுக்குச் செய்ய வேண்டும் அல்லது கொடுத்திருக்கிறார்கள் என்பதால் நல்லதாகச் செய்ய வேண்டும் என்பது போல்...சிலர் இருக்கிறார்கள்...

    கதாபாத்திரம் சுபாவை நல்லவிதமாக நல்ல மனமுள்ள பெண்ணாகப் படைத்திருக்கிறீர்கள் துரை அண்ணா....இந்த வரிகளைத் தவிர்த்து, அவர்களது உரையாடல்கள் அதே உரையாடல்கள் தொடர்ந்திருந்தால் சுபாவின் பாத்திரம் இன்னும் உயர்ந்திருக்குமோ....ஏனென்றால்

    //இன்னிக்கு எழுபதாயிரம் எண்பதாயிரம் சாலரி சர்வ சாதாரணமா எடுக்கறோம்..//

    தப்பா எடுத்துக்காதீங்க துரை அண்ணா. என் மனதில் இப்படித் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு பத்தாயிரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. சாதாரணமாக ஐநூறுகள் புழங்கிக் கொண்டு இருக்கின்றன.

      உள்ளங்கை அகலமுடைய உடுப்பு ஒன்றுக்கு சில நூறுகள் கொடுப்பதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்..

      மற்ற உடுப்புகளைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை..

      இதைக் கருத்தில் கொண்டே வீட்டில் பெரியவர்கள் இளந் தம்பதியர்க்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது..

      மகன் தந்தைக்கு வயதாகி விட்டது என்று - தரையில் போட்டு விற்கும் உள்ளாடைகளைப் பார்க்கும்போது -

      அன்பான மருமகள் தரமான உள்ளாடைகளை வாங்குவதற்கு முற்படுகின்றாள்..

      நம்முடைய தேவைகளுக்கு நியாயம் முன் நிற்க வேண்டும் என்று விரும்பும் போது பெற்றோரின் தேவைகளையும் நியாயமாகச் செய்தாக வேண்டும்!..

      நீக்கு
    2. உங்கள் கருத்தில் பிழை ஒன்றும் இல்லை..

      இப்படியெல்லாம் இருந்தால் தான் உலக நடப்புகள் புரியும்..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ...

      வாழ்க நலம்..

      நீக்கு
    3. சில துறைகளில் லட்ச ரூபாய்க்கும் மேலாக ஊதியம் கொடுக்கப்படுகின்றது..

      அதை அப்படியே செலவழிக்கவும் வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு விட்டன..

      நீக்கு
    4. நன்றி துரை அண்ணா.

      கண்டிப்பாகப் பெரியவர்களுக்கும் நமக்கு நாம் என்ன செய்துகொள்கிறோமோ அதையேதான் நாம் பார்த்து பார்த்து அவர்களுக்கும் செய்ய வேண்டும். நம் வீட்டிலும் பெரியவர்கள் உண்டே....கூடவே.

      கீதா

      நீக்கு
  13. சுபா சொன்னதில் தப்பில்லை. ஏனெனில் இன்றைய நிலைமையோடு அன்றைய பொருளாதார நிலைமையைச் சுட்டிக்காட்டத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள். உண்மை தானே! அப்போதெல்லாம் ஜவுளி எடுப்பதெனில் அது ஒரு பெரிய விஷயம். அதிலும் தீபாவளி மாதிரிப் பண்டிகைகளுக்கு எனில் கேட்கவே வேண்டாம். தன் மாமனார் தான் எனினும் உயர்ந்த ஆடைகளையே போட வேண்டும் என நினைக்கும் சுபாவுக்குப் பாராட்டுகள். அவங்க ப்த்தாயிரம் கொடுத்ததைச் சுட்டிக் காட்டியது கூட அவங்க இந்த வயசில் இத்தனை பெருந்தன்மையுடன் இருக்கையில் நாம் அவங்களுக்கு உள்ளாடை எடுப்பதில் சிக்கனம் பார்க்கலாமா என்பதால் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன் மாமனார் தான் எனினும் உயர்ந்த ஆடைகளையே போட வேண்டும் என நினைக்கும் சுபாவுக்குப் பாராட்டுகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி அக்கா..

      நீக்கு
  14. படம் வரைந்திருக்கும் திரு கேஜிஜி அருமையாக ஓர் அமைதியான பெண்ணை வரைந்திருக்கார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. சிறு கதை தலைப்பும், கதையும் அருமை.

    நம்ம வீட்டு பெரியவங்க நமக்காக எதை எல்லாமோ விட்டுக் கொடுத்தவங்க.. //

    அன்பான மருமகள் சொன்னது சரியே,

    அந்த காலத்தில் வீட்டு பெரியவர் பண்டிகைக்கு எல்லோருக்கும் உடை எடுத்து தனக்கு கடைசியாக எடுத்துக் கொள்வார். எளிமையாக , வேஷ்டி, ஒரு துண்டு வாங்கி கொள்வார்.

    குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் பண்டிகை என்றால் என்கிற
    எண்ணம் கொண்டவர்கள்.

    இப்போது உள்ளவர்களுக்கு நினைத்த போது எல்லாம் துணிமணி எடுப்பதால் இந்த உணர்வுகள் புரியாது. முன்பு தீபாவளி பண்டிகை, பிறந்த நாள் மட்டுமே குழந்தைகளுக்கு, பெரியவர்கள் துணிமணி வாங்கி கொடுத்தார்கள், அதை அக்கம் பக்கம் காட்டி குழந்தைகள் மகிழ்ந்த காலம்.

    இப்போது கடைக்கு போய் வாங்குவது கூட இல்லை ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுகிறார்கள்.

    கெளதமன் சார் வரைந்த அன்பான மருமகள் படம் அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அந்த காலத்தில் வீட்டு பெரியவர் பண்டிகைக்கு எல்லோருக்கும் உடை எடுத்து தனக்கு கடைசியாக எடுத்துக் கொள்வார்.. ///

      அதெல்லாம் வசந்த காலம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  16. ஒவ்வொரு தீபாவளி சமயமும் கு. அழகிரிசாமி அவர்களின் "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுகளில் வந்து போகும்.

    தீபாவளி துணிக்கு குழந்தைகளின் ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு. ஒரு தாயின் உள்ளம் எல்லாம் கதையில் இருக்கும்.

    பதிலளிநீக்கு

  17. கடைத் தெரு வேடிக்கை பார்க்க என்று வந்து விட்டார்கள்..//

    அந்தக்காலத்தில் குழந்தைகளுடன் தீபாவளி கடைகளை வேடிக்கைப்பார்த்த காலங்கள் நினைவுகளில். பாசிகள், ரிப்பன்கள்,
    பட்டாசு வகைகளை எழுதி எடுத்து கொண்டு வெடிகடைகளை வேடிக்கைப்பார்த்து நம் பட்ஜெட் போட்டமாதிரி வாங்கி விட்டால் அதில் ஏற்படும் மகிழ்ச்சி. எல்லாம் இப்போது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்ஜெட்டுக்குள் தீபாவளி...

      இப்போது எல்லாம் மாறி விட்டன..

      காசு புழக்கம் ரொம்பவே அதிகம்..

      தங்கள் அன்பின்
      கருத்து மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  18. பட்ஜெட்டுக்குள் தீபாவளி...

    இப்போது எல்லாம் மாறி விட்டன..

    காசு புழக்கம் ரொம்பவே அதிகம்..

    தங்கள் அன்பின்
    கருத்து மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை அருமை. வீட்டிலுள்ள பெரியவர்களை மதித்து அவர்களின் மனங்கோணாமல் நடத்தும் மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நல்ல குணம் கொண்ட மருமகள். கதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கேற்ற ஓவியமும் அழகாக உள்ளது. இதை வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. /// நல்ல குணம் கொண்ட மருமகள். கதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.///

    தங்கள் அன்பின் வருகையும்
    கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!