வியாழன், 16 நவம்பர், 2023

கலைஞரும் டி ராஜேந்தரும்

 உங்கள் நோக்கம் தவறில்லாதபோதும், உதவி செய்யப்போய் அல்லது சும்மா இருக்கும்போதே ஒரு சின்ன கெட்ட பெயராவது உங்களுக்கு வந்திருக்கும் என்று "எண்ணி"ப் பார்த்திருக்கிறீர்களா?

எண்ணி...  (1) நினைத்து  (2) ஒன்று இரண்டு என விரல் விட்டு கணக்கெடுத்து எண்ணி 

கொஞ்சம் முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.  உங்களுக்கும் காரணம் புரியும், எனக்கும் இரண்டு வாரம் தாங்கும்!

என்னிடம் பேசுபவர்கள் பொதுப்படையாக விளித்தல் இல்லாமல் பேசுபவர்களைவிட என்னை பெயர் சொல்லி அழைத்து பேசுபவர்களை எனக்குப் பிடிக்கும்.  எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே அது கொஞ்சம் பிடிக்கும்தான்.  ஏதோ ஒரு இனம் தெரியாத சிறிய நெருக்கம் அதில் உண்டாகி விடுகிறது.

தம்பி, என்றோ, அண்ணே என்றோ பேசினால் நெருக்கம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அதைவிட பெயர் சொல்லி அழைக்கப்படும் போது மனதில் வரும் Feel கொஞ்சம் அதிகம்.  போன வாரம் இதை வேறு மாதிரி பார்த்தோம்!

சில பேர் என்னை ஸ்ரீராம் என்றும் சிலர் அதை இன்னும் சுருக்கி ஸ்ரீ என்றும் விளித்து பேசுவார்கள்.  என்னை ஸ்ரீ என்று அழைப்பவர் இருவர் மட்டுமே...  என் அக்கா, என் தோழி பிரேமகுமாரி,  (யோவ் என்று செல்லமான அதட்டலுடன் இருவர்...  பாபு, வேலாயுதம்!)  'ஸ்ரீ சார்' என்று ஒருவர் கூப்பிடுவார் என்பது நினைவிருக்கிறது.  ஆனால் யாரென்று சட்டென நினைவுக்கு வரவில்லை! முப்பத்தைந்து வருடங்களாக சென்னையில் இருந்தாலும் மதுரை ஸ்லாங்கிலேயே பேசும் என் நண்பன் ராஜமாணிக்கம் என்னை  'சிர்ராமு' என்று கூப்பிடுவான்!

ஹேமா என்னை ஸ்ரீபா என்று அழைப்பார்!

என்னுடைய இந்த சந்தோஷம் நிச்சயம் நிறைய பேருக்கு இருக்கும் என்பது என் எண்ணம்.  எனவே என்ன செய்வேன் என்றால் அவரவர் பெயர்கள் தெரியும் பட்சத்தில் பெயர் சொல்லியே அழைத்து பேசுவேன்.  ஆனால் ரொம்ப நெருக்கமானவர்களாக இருந்தாலொழிய மரியாதைக் குறைவாய் ஒருமையில் பேசமாட்டேன்.

பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமான பிரச்னைகள் உண்டு.  நம்மை பெயர் சொல்லி அழைக்கும் அதே தோழியை சட்டென நாம் பெயர் சொல்லி அழைத்து விட முடியாது. பெயர் சொல்லி அழைத்தாலும் பன்மையில் பேசவேண்டி இருக்கும்.  அல்லது பெயரோடு சிஸ்டர் அல்லது மேடம் என்கிற அடைமொழியை சேர்க்க வேண்டி இருக்கும்.  ஒரு பெண் தோழியை நான் ரொம்ப நாள் மாலினி என்று அழைத்துக் கொண்டிருக்க அப்புறம்தான் தெரிந்தது அவர் பெயர் மாலினி அல்ல ஹாசினி என்று.  அவரும் என்னை ஒருமுறை கூட திருத்தவில்லை!  கேட்டதற்கு எல்லோரும் ஒரு மாதிரி அழைக்க நான் மட்டும் ரைமிங்காய் வேறு பெயர் சொல்லி அழைத்ததை ரசித்ததாக சொன்னார்.வித்தியாசமாக இருந்தது என்றார்.  சொல்லப்போனால் ஹாசினியும் தன் பெயர் என்று நம்பத்தொடங்கி விட்டதாக சிரித்துக்கொண்டே சொன்னார்!

இப்படி நமக்கு சந்தோஷம் தரும் ஒரு விஷயம் கட்டாயம் மற்றவர்களுக்கும் சந்தோஷம் தரும் என்பது என் நம்பிக்கை.

எனவே முடிந்தவரை நான் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவர்களை பெயர் சொல்லியே அழைப்பேன்..  பாருங்கள், இதில் சில அந்தஸ்து,  பேதங்கள் இருக்கின்றன.  தனக்கு மேல்நிலையில் பணியாற்றுபவர்களை பெயர் சொல்லி அழைப்பது அரசாங்க வேலைக்காரர்களுக்கு சாத்தியமல்ல.  தனியார் நிறுவனங்களில் இதுவும் சாத்தியம்.  அதில் கடமை இருக்கும்.  கனிவு இருக்குமா, தெரியாது!

எங்கள் அலுவலக கேன்டீனில் நான்கு பேர்கள்.  மூவர் ஆண்கள்.  ஒரு பெண்.  பெண் பெயர் இதுவரை நான் கேட்டதில்லை.  மூன்று ஆண்களின் பெயர் தெரியும்.  அவர்களை நான் பெயர் சொல்லியே அழைக்கிறேன்.  அழைக்கும்போதே அவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்பது தெரிந்து விடும்.  அதற்கேற்ப நாம் நம் வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்!

கொஞ்ச நாள் பழகியபிறகு கேன்டீனில் பணிபுரியும் நண்பர் என்ன படித்திருக்கிறார் என்று கேட்டு, அவர் பதில் சொன்னபோது மிரண்டு விட்டேன்.  என்னைவிட அதிகம் படித்தவர்.ஆறிலக்கத்தை நெருங்கி கொண்டிருந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், சில காரணங்களால்  இங்கு வந்து வேலை பார்க்கிறார்.  இன்னொருவர் B E படித்தவர். இதுபோன்ற சிறிய அதிர்ச்சிகளை ஆச்சர்யங்களை ஆட்டோ ஓட்டுநர் முதல் சரவணா ஸ்டோர் போன்ற இடங்களில் பணிபுரியும் ஊழியர் வரையும், ஸ்விக்கி ஜோமேட்டோ ஊழியர்களிடமும் அனுபவப் பட்டிருக்கிறேன்.

இப்படி அறிந்து கொள்வதெல்லாம் கூட பெயர் சொல்லி அழைத்து பேசி நெருக்கமாவதால்தான் சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

சிலர் கேன்டீனில் டீயோ, காபியோ ஆர்டர் செய்து விட்டு ஓரமாக உர்ரென்று காத்திருந்து குடித்து விட்டு காசைக் கொடுத்து விட்டு அகலுவார்கள்.  ஆட்டோவில் விரோதமாக உட்கார்ந்து (எங்கே இறங்கும்போது ஆட்டோ டிரைவர் எக்ஸ்டரா பணம் கேட்டு வம்பு செய்து விடுவாரோ போன்ற எண்ணங்களுடன்) பயணித்து காசைக் கொடுத்து விலகுவார்கள்.

அவரை பெயர் விளித்து பேசுவது ஒரு  ஆரம்பம் என்று வைத்துக் கொள்ளலாம்.  அதற்காக ஒரேயடியாக உரிமை எடுத்துக் கொண்டு கண்டதையும் பேசிவிடக்கூடாது என்பதும் உங்களுக்கு தெரியும்தானே!    நம் எல்லையில் நாம் நின்றால் போதும்.  மரியாதைக்கு குறைவாகவோ, அல்லது உரிமையாக பேசுகிறேன், உண்மையாக பேசுகிறேன் என்று அரசியலோ, சினிமாவோ அல்லது வேறு ஏதோவோ..  அவர் கருத்துக்கு எதிர்க்கருத்துகளை ஆவேசமாக எடுத்துரைப்பது நன்றாய் இருக்காது!

இதெல்லாம் கூட கூடுமானவரை தனியாக பயணம் செய்யும்போதுதான்..  குடும்பத்தோடு பயணம் செய்யும்போது மிகக் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்!

இவற்றைப் பற்றி தனியாகவே கொஞ்சம் எழுதலாம்.  அது பின்னர்.  இப்போது நான் சொல்ல வந்த கதைக்கு, சம்பவத்துக்கு இதெல்லாம் அதிக தொடர்பில்லாதவைதான்.  ஆனால் சில சமயம் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.  சிலருக்கு சுவாரஸ்யம் இல்லாதிருக்கலாம்!  ஆனால் நாம் பழகும் விதத்தினால் அவர்கள் இம்ப்ரெஸ் ஆகிறார்கள்,  உணர்கிறார்கள், சில விஷயங்களை மனம் விட்டு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையெல்லாம் நான் உணர்ந்திருக்கிறேன், பார்த்து வருகிறேன்.  அவற்றைச் சொல்ல இது தேவையாய் இருக்கிறது.  இந்தப் பழக்கம் என்னைப்போலவே உங்களில் பலரும் பின்பற்றும் பழக்கம்தான் என்றும் நினைக்கிறேன்.

உதாரணமாய் ஊபர் ஓலா விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன்.  அது சம்பந்தமாய் நடந்த சம்பவத்தைத்தானே  சொல்ல வந்தேன்..

=====================================================================================================

ஏகாந்தமாய் 
ஏகாந்தன் 

எங்க குருதான் பூரண குரு !

அந்த காலகட்டத்தில் அமைச்சரவையில் என்னோடு பணிபுரிந்த பெண்கள் இருவர். அவர்களில் ஒருவர் ஐம்பதுகளில் இருந்தார்.  

அப்போது. பஞ்சாபி/டெல்லி பெண். ’மணி’ என்றும் சேர்த்துக்கொள்ளலாம்தான். வெகு இயல்பாக எல்லோருடனும்
பழகியவர். மென்மையாக, ஆளுக்கேற்றபடி கொஞ்சம் சாதுர்யமாக(!) பேசத் தெரிந்தவர். மிஸஸ் விமலா பல்லா (Vimla Bhalla). ஆஃபீஸ் வேலையில் அவ்வளவு நாட்டமெல்லாம் காட்டுபவரில்லை.  ஆட்களோடு பேசிப்பேசியே பழக்கமேற்படுத்திக்கொள்வதில் கில்லாடி. சில நாட்களில், நாம் வார்த்தை ஏதும் கொடுக்காமல் வேலையில் பிஸியாக இருந்தாலும், சீட்டுக்கருகில் வந்து நின்றுகொண்டு, ‘’டியர்! என்ன ஆச்சு.. ஏன் இப்படி சீரியஸா, மௌனமா இருக்கே இன்னிக்கு.. எவரிதிங் ஈஸ் ஓகே. ?’’ என்று
குசலம் விஜாரித்து, சிரித்து, மேற்கொண்டு வார்த்தை வளர்ப்புக்கு
அடிபோட ஆரம்பிக்கும் மனுஷி. சராசரி ’பெண்மணி’களைவிட சற்று
மேலான ஒழுங்கும், பக்குவமும் அவரிடம் தென்பட்டதைக் கவனித்திருக்கிறேன்.

என்னோடும், நண்பன் மோஹனனோடும் கொஞ்சம் விரும்பிப் பழகினார் மிஸஸ் விமலா பல்லா. அவ்வப்போது எங்களை எதற்காவது புகழ்வார். என்னை, குறிப்பாக ‘அழகான’ கையெழுத்திற்காக! இப்படி.. அவருடைய வயதான தோற்றம் காரணமாக அமைச்சகத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் பலர் அவரை உரிமையோடு ‘ஆண்ட்டி’ என்றழைப்பது வழக்கம். குறிப்பாக இளம் பெண்கள். அவருக்கு அதிலும் சந்தோஷமே! They are nice girls..  they love me. I love them too!” என்பார் கண்களில் அன்பும் பெருமையும்
மின்ன. ஆரம்பகாலத்தில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் நான்..!

டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் எனும் பகுதியில் ஒரு ஃப்ளாட் இருந்தது அவருக்கு. தனியாக வசித்து வந்தார். கணவர் எங்கள் அமைச்சகத்திலேயே பணிபுரிந்தவர். காலமாகிவிட்டிருந்தார். விக்ரம் என்ற அவரது ஒரேயொரு மகனும் தன் டெல்லித் தோழி ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்கா போய்விட்டான். அவ்வப்போது லீவில் வருவான்.  அம்மாவோடு எதற்காவது சின்னதாக ஒரு சண்டை போடுவான்.  போய்விடுவான்.

அவனைப்பற்றி சந்தோஷமாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்வார் எங்களிடம்.  அவன் அமெரிக்கா திரும்புமுன் ஏற்பட்ட ஒரு ‘சண்டை’பற்றியும் சொல்லிக் கண்கலங்குவார். இப்படி சில
சமயங்களில் மனம் திறப்பார் மிஸஸ் பல்லா.

அவருக்கு அப்போது ஸ்ரீலங்காவின் கண்டியிலுள்ள எங்கள் தூதரக
அலுவலகத்திற்கு மாற்றலானது. மூன்று வருட காலம் அங்கிருக்கவேண்டும். அந்தக் காலவெளியில் தன் வீட்டிலேயே
எங்களை, வாடகைக்கு, தங்கிக்கொள்ளச் சொன்னார் அவர்.  சொந்தக்காரர்களிடமோ வேறு வடக்கத்தி வாடகைக்கு இருப்பவர்களிடமோ தன் சொந்த வீட்டை மூன்று வருடத்திற்கு - அதுவும் அவரே நாட்டில் இல்லாத காலத்தில் – விடத்
தயாராயில்லை. ”ஒங்க ரெண்டு பேரையும் நான் நம்பறேன். இந்த
ஊர்ல மற்றவங்களைப்பத்தி நான் அப்படிச் சொல்லமுடியாது” என்று
எங்களிடமே மனம்விட்டு சொன்னாராதலால், நாங்கள் அவர் வீட்டில்
தங்கி வசித்தோம் அப்போது. 

மிஸஸ் விமலா ஒரு தீவிர பக்தை என்பது எங்களுக்குப் பின்னர் தெரியவந்தது!  யாருக்கு? பாலஷிவா என்று அழைக்கப்பட்ட, சிலரால் கொண்டாடப்பட்ட, டெல்லியில் அப்போது தங்கியிருந்த ஒரு இளம் சன்னியாசிக்கு. மேற்கொண்டு அவரைப்பற்றி விபரம் தெரிந்திருக்கவில்லை. சத்ய சாயிபாபா பஜன் போல, இவரது
பேரிலும் டெல்லிவாழ் பக்தர்கள் சிலர், வாரம் அல்லது மாதம் ஒரு
முறை தங்களில் ஒருவர் வீட்டில் கூடி பஜன் நடத்துவார்கள்.

பாலஷிவா என மரியாதையுடன் அழைக்கப்பட்ட, வணங்கப்பட்ட
அவரே பஜனுக்கு வருவார். மிஸஸ் பல்லாவின் வீட்டிலும் அது
நடந்ததை மூலையில் உட்கார்ந்து பார்க்கும் அனுபவம் கிடைத்தது!
தபலா, டோலக்குகளுடன் பாடும், இசைக்கும் சிறு குழு ஒன்றை
அப்போது அவர் வீட்டில் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் ஞாயிறுகளில் அது நிகழும். எனக்கோ, மோஹனனுக்கோ பஜனில் எல்லாம் சுவாரஸ்யம் இருந்ததில்லை. தத்துவம், சித்தாந்த ரீதியாக மதம் என்பதை அணுகப் பார்த்தவர்கள். அதை எங்கள் வீட்டு ஆண்ட்டியிடம் ‘விளக்க’ முடியாது. அவரது உலகம் வேற! நாங்கள் தென்னிந்தியர்கள் என்பதால் பக்தி மிகுந்தவர்கள் என்பதாகவும், இந்த குரு மஹராஜும் தெற்கத்திக்காரர் என்பதால், எங்களுக்கு அவரோடு உடனே நெருக்கம் ஏற்படும் என்பதும் ஆண்ட்டியின் அழகான அனுமானம்! அது வேலை செய்யவில்லை என்று நாங்கள் அவரிடம் நேரிடையாகச் சொல்லத் தயங்கியதால், அவர் தன் குருவைப்பற்றி அவ்வப்போது எடுத்துவிடும் மிர்ராக்கிள் கதைகளில் ஆர்வம் காட்டுவதுபோல் கேட்போம். அவரும் நிறையச் சொல்வார்.

அவர் வீட்டில் இன்று மதியம் பஜன், பால ஷிவா & கோ வருகிறது
என்றால் நாங்கள் வெளியே பாயப் பார்ப்போம், ஏதாவதொரு காரணம் சொல்லிவிட்டு. 

அவரா விடுவார்? எங்களிடம் வந்து, “நீங்க ரெண்டு பேரும் என் பிள்ளைகள்போல! சொன்னதைக் கேளுங்கப்பா..  நீங்க பஜனையில ஒன்னும் செய்யவேணாம். ஒரு மூலையில உட்கார்ந்து பாட்டுகளைக் காதாலே கேளுங்க. போதும். பகவான் பாலஷிவாவோட ஆசீர்வாதம் கிடைக்கும். உங்களுக்குத்தான் எவ்வளவு அதிர்ஷ்டம்..” என்கிற அர்த்தத்தில் நிறையச் சொல்வார்.

வசதியா இன்னிக்கு மாட்டிக்கிட்டோம் என்று நினைத்தவாறு நானும்
மோஹனனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வோம்.  வேறு வழி தெரியாமல் உட்கார்ந்து ‘அனுபவித்துவிட்டு’ பிரசாதம்(ஹல்வா) வாங்கிக்கொள்வோம். இப்படிச் சில ஞாயிறு மதியங்கள் மிஸஸ் பல்லாவின் அகத்தில் கழிந்திருக்கின்றன.

பஜனைக்கு வரும் ஸ்வாமி பாலஷிவாவின் சிஷ்யர்களில் குறிப்பிடத்தக்க ஒரு இளம் பெண். தன் அம்மாவுடன் வருவாள்.  மலையாள மங்கை. அவர்கள் வாத்யங்களை இசைப்பார்கள்.  அதற்கவள் பாடுவாள். நன்றாகவே பாடுவாள்.. அவளது உடல் அசைவுகளை, நளினத்தைப் பார்க்கையில் ஆடவும் செய்வாளோ எனவும் தோன்றும். அந்த வீட்டில் பாட்டோடு நின்றிருக்கிறது பஜன்.  பங்குகொள்ளும் மற்றவர்களில் பெரும்பாலோர் ஐம்பது ப்ளஸ்க்காரர்கள். டோலக், தபலா, ஜால்ராக்கள் இருபதுகளில் இருந்த இளைஞர்கள்.

அந்த குடியிருப்பு ப்ளாக்கில் இன்னும் சில குடும்பங்களோடு மிஸஸ் பல்லா நட்புடன் இருந்ததால், எங்களுக்கும் அவர்களில் சிலரோடு
ஓரளவு பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஏனோ இந்த பஜனில் கலந்துகொண்டதில்லை. அவர்களில் ஒருத்தி மிஸஸ் மல்ஹோத்ரா. அவர் நம்ம ஆண்ட்டியை சந்தித்து அடிக்கடி உரையாடுவதுண்டு. அத்தகைய ஒரு சந்திப்பின்போது மிஸஸ் மல்ஹோத்ரா சொன்ன ஒரு கருத்து இவருக்கு எரிச்சலையூட்டியது என்பது, ஒருநாள் மிஸஸ் பல்லா என்னோடு
பேசிக்கொண்டிருக்கையில் தெரியவந்தது.

பக்கத்துவீட்டுக்காரர்களைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய மிஸஸ் பல்லா, ‘’அந்த மிஸஸ் மல்ஹோத்ரா இருக்காளே.. எனக்கு அவளைக் கண்டாலே.. பிடிக்கவில்லை!” என்றார். எனக்கு ஏனோ சிரிப்புவந்தது. ஒருவேளை அவர் அதைச் சொன்னவிதம் சிரிப்பை வரவழைத்திருக்கலாம். “நல்ல மனுஷிபோலத் தெரியறாரே..  உங்களுக்கும் தோழிதானே.. இப்படி திடீர்னு சொன்னால் எப்படி!” என்று சீண்டினேன். அவர் குழப்பத்தோடு சொன்னதில் விஷயம் வெளிவந்தது: மிஸஸ் மல்ஹோத்ராவிடம் நம்ப ஆண்ட்டி தன் வீட்ல நடந்த பஜன்பத்தி சொல்லியிருக்கார். அதோடு
நிறுத்தியிருக்கலாம். கூடவே ஸ்வாமி பாலஷிவா எப்பேர்ப்பட்ட குரு
தனக்கு, எப்படியெல்லாம் மிராக்கிள்ளாம் செஞ்சிருக்காரு.. அவருக்கு
சக்தி மிக அதிகம். அவர்தான் உண்மையில் ஷிவ்ஜி… (அதாவது சிவபெருமான்) –ன்னு அடுக்கிகிட்டே போக, ஒரு கட்டத்தில்
எரிச்சலான மிஸஸ் மல்ஹோத்ரா இடைமறித்து ”உன்னோட குருவையெல்லாம் ஒரு ’பூரண் குரு’ -ன்னு (பூரண குரு)
சொல்லமுடியாது. உண்மையான குருன்னு இந்த ஒலகத்துல ஒருத்தர சொல்லனும்னா அது எங்க குருதான்னு சொல்லி வாதித்திருக்கிறார். மிஸஸ் மல்ஹோத்ரா குடும்பம் பஞ்சாபில் பாப்புலரான ’ராதா ஸ்வாமி (ராதா ஸோமி (Radha Soami)’ எனும் ஒரு (இந்து) மதப்பிரிவை (Sect) சேர்ந்தது. அதன் மரபுகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பது. டெல்லி, ஹரியானாவிலும் அந்த வழியினருக்கு ஆதரவாளர்கள் உண்டு). “என்ன இப்படி ஒரு ஸ்டுபிட் லேடியா இருக்கா இவ! தன் குருதான் உயர்ந்தவர்னு திமிர்ல சொல்றா.. "
என்று சீறினார் மிஸஸ் பல்லா. நான் வேகமாக சப்ஜெக்ட்டை  மாற்றிக்கொண்டு போகவேண்டியதாயிற்று அந்த மாலையில்.

நான் வெளிநாட்டு அசைன்மெண்ட் ஒன்றில் இருக்கையில், டெல்லியின் தலைமை அலுவலகத்தில் மிஸஸ் பல்லா பதவி ஓய்வு பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்குப்பின், டெல்லி வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பஞ்சாபுக்குப் போயிருப்பாரோ..  அல்லது, தன் பையனோடு அமெரிக்கா போய்விட்டிருக்கலாமோ என்னவோ.. அதற்குப் பின், அவரோடு தொடர்புகொள்ள முடியாமல் போனது.

==========================================================================================

நியூஸ் ரூம் 



செய்திகள் 16.11.23

- உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ராம்ஜித் யாதவ் என்பவர் சென்னையில் பணியாற்றி கொண்டிருந்தார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருடைய நண்பர் அவரை சம்பர்க் கிராந்தி விரைவு மில்லில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். வழியில் நாக்பூரை விட்டு ரயில் கிளம்பிய பிறகு ராம்ஜித் மரணமடைந்தார். அவரது உறவினர் ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டும், பலனில்லாமல் ஜான்சியில்தான் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ததாம். இதனால் இறந்த உடலோடு 600 கிலோ மீட்டர் சக பயணிகள் பயணம் செய்திருக்கின்றனர்.(இதைப் போன்ற ஒரு பதிவை வெங்கட் நாகராஜின் தளத்தில் படித்த நினைவு)

- என்.சி.ஓ.எல் எனும் ஆர்கானிக் உணவு பொருட்களுக்கான தேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பாரத் ஆர்கானிக் கை அமித் ஷா அறிமுகப் படுத்தினார். தற்சமயம் துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை, பாசுமதி அரிசி உள்ளிட்ட ஆறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

- இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் பெண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்கள் இறந்த பிறகு அவர்கள் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன, பெண்களோ உயிரோடு இருக்கும் பொழுதே தங்கள் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். வாழ்க்கைத் துணைக்கு உறுப்பு வழங்க 10% ஆண்கள் மட்டுமே முன் வருகிறார்களாம், பெண்களில் இது 90 சதவீதமாம். குழந்தைகளுக்கு தங்கள் உடலுறுப்பை தானமாக வழங்கும் பெற்றோர்களில் 70% பெண்களாம்.

 -2020ல் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட 200 மீனவர்களின் 80 பேர் விடுதலை செய்யப்பட்டு தங்கள் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடினர்.

 -கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்,'சக்தி' திட்டம் மூலம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பால் கண்டக்டர்கள் அவதி. பஸ்ஸில் ஏறும் பெண்கள் அவர்கள் குறிப்பிட்டு டிக்கெட் பெறும் இடம் வரை செல்லாமல் பாதியில் இறங்கி விடுகின்றனர். செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் வந்து சோதிக்கும் பொழுது, எந்த இடத்திற்கு செல்ல டிக்கெட் வழங்கப் பட்டிருக்கிறதோ அங்கு பெண் பயணிகள் இல்லாததால் கண்டக்டர்களுக்கு மெமோ வழங்குதல், சம்பள பிடித்தம் போன்ற சிக்கல்கள் எழுகின்றதாம்.

 -அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 35% அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்ற நிலை வந்துள்ளது.

- குஷ்பு இலங்கைக்கு வரக் கூடாது என புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு.

 -பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய கோரேகானின் புறநகர் பகுதியில் இருந்த ஆறு வாகன நிறுத்தங்களோடு(car parking) கூடிய தன்னுடைய 2648சதுர அடி வீட்டை ரூ.15.2 கோடிக்கு விற்றிருக்கிறாராம். இதற்கான ஸ்டாம்ப் ட்யூட்டி ரூ.91.50 லட்சம். அவர் சென்ற ஆண்டு ரூ.119 கோடியில் பாந்த்ராவில் வாங்கிய அபார்ட்மெண்ட் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீடுகளுள் ஒன்றாகும்.

***************************************************

துரை செல்வராஜூ 







=======================================================================================================

இணையத்தில் ரசித்த, துல்லிய புகைப்பட கணங்கள்...   புகைப்படக் காரர்கள் தங்கள் ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு கண்கொத்தி பாம்பாய்  காத்திருப்பர், சரியான கணத்திற்காக...!



==========================================================================================================

கவி முயற்சி...


கல்லெறியாதே 
நடுங்குகிறது நிலவு 
குளம் 

கத்தியைப் பார்த்ததுமே 
கத்தத் தொடங்குகிறது 
ஆடு 

மூடினாலும் திறக்கிறது  
முகிலின் விளையாட்டு 
முந்தானை 

கையில்லா மரம் 
வெட்டப்பட்ட கிளைகள் 

============================================================================================================

பொக்கிஷம் : - 

இதயநோய் உள்ளவர்கள் தினம் ஒன்று சாப்பிடும் ஆஸ்பிரின்தான்.  இது வலி நிவாரணியாகவும், ஏன் ஜுரத்துக்குக் கூட கொடுக்கலாம் என்று அறிவோம்.  ஆனால் ஜலதோஷத்துக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள் - அதுவும் விளம்பரத்தில்!


கலைஞரும் டி ராஜேந்தரும் 


"ஆ....!"

மறுபடியும் "ஆ...!"


ஜோக் என்றுதான் வெளியிட்டிருக்கிறார்கள்...


ஹா ஹா ஹா ஹா  ஆ...  ஆ... ஆ....

சுஜாதாவின் பக்கம்.  வருடம் 77.  குமுதம்.  படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம்!

114 கருத்துகள்:

  1. ஓலா, ஊபர் ஓட்டுனர்களோடு பயணத்தில் அவர்கள் சொந்த ஊர் விசாரித்துப் பேசுவதுண்டு. தமிழகத்து பெரும்பாலான ஊர்கள் நான் படித்த, வேலை பார்த்த, தெரிந்த ஊர்களாய் இருக்கும் ஆதலின் அந்த ஊர்கள் பற்றி எனக்குத் தெரிந்த என் காலத்து பழைய செய்திகள் ஏதாவது சொல்லி ஓட்டுனரை வியக்க வைப்பதுண்டு. "அப்படீங்களா, ஐயா.." என்று பவ்யத்துடனான ஒரு நெருக்கத்தை உணர்ந்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் ஒரு பழக்கம்.  என்னிடமிருந்து பெரிய விவரம் எதுவும்  கொடுக்க மாட்டேன்.  அவர்களுக்கு கேப்டதை விட சொல்வதில்தான் ஆனந்தம் அதிகம் என்பது என் நினைப்பு.  

      நீக்கு
    2. சொந்த விவரம் பகிர்வு இருக்காது.
      நெல்லை என்றிருந்தால்
      அன்றைய திருநெல்வேலி ஜங்ஷன் ஏரியா பற்றி ம.தி.தா. இந்து கல்லூரி பற்றி, சுலோச்சனா முதலியார் பாலம் பற்றி -- என்று நான் பார்த்த சுவையான தகவலாய் இருக்கும்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. சொந்த விவரம் என்றே இல்லை.  அவர்கள் கேட்பதைவிட பேசுவதை விரும்புபவர்கள்.  அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க ஆள் வேண்டுமே!  சொந்த விவர பகிர்வு எங்குமே இருக்காது!

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நான் தினமும் இரவில் படுக்கப் போகும் முன் ஒரு ஆஸ்பிரின் (Castro Resistant) 75 MG எடுத்துக் கொள்கிறேன், டாக்டரின் பரிந்துரையின் படி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஸ்பிரின் இப்போதெல்லாம் இதய நோயாளிகளுக்கு பயன்படுகிறது. பெரும்பாலும் மதிய நேரங்களில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

      நீக்கு
  4. எபி வாட்ஸாப் குருப்பில் கலைஞரின் பிறந்த நாள் அன்று அவரையும் தமிழையும் இணைத்து தமிழ் வளர்ச்சி பற்றி ஒரு தகவல் பரிமாறிக்கொண்டு அன்று பூராவும் அர்த்தமில்லாத சீறல்களைச் சந்திந்த அனுபவம் இருக்கே.. இன்னும் மறக்கவில்லை. கலைஞர் என்று அவரை விளித்ததே பலருக்கு வெறுப்பாய் இருந்தது ஆச்சரிய அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1989.  மதுரை பஸ்ஸ்டேன்ட்.  நண்பனிடம் எதோ பேசிக்கொண்டிருந்தேன்.  கலைஞர் ன்று சொல்லாமல் கருணாநிதி என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தேன்.  பின் மண்டையில் நச்சென்று ஒரு அடி.  திரும்பிப் பார்த்தல் ஒரு ஆள்.  "கலைஞர்னு சொல்லு"   "அவர் பேர் கருணாநிதிதானே?" - நான்.  மறுபடி ஒரு நச்.  "கலைஞர்னு சொல்லு"  "நாங்க பேசிக்கிட்டிருக்கோம்.  நீங்க யாருங்க நடுவுல?" - நான்.  "நச்'  " கலைஞர்னு சொல்லு"  சொன்ன பிறகுதான் நகர்ந்தார்.  எவ்வளவு அடி வாங்க முடியும்?!

      நீக்கு
    2. ஏற்கனவே இந்த நிகழ்வுபற்றி நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். சாருநிவேதிதாவும் தன் பக்கத்தில் இத்தகு அவல அனுபவம்பற்றி (அடிவாங்கியதல்ல) அங்கதமாகவோ, கோபமாகவோ சில வருடங்கள் முன் குறிப்பிட்டிருந்த நினைவு.

      நாஸிகளின் ஜெர்மனியில்கூட இதைவிட மேலான சமூக, அரசியல் பார்வை, நாகரிகம் இருந்திருக்கும், நிஜமாகவே . இங்கே எல்லாமே அரசியல்.. அதாவது கீழ்த்தர அரசு இயல். விளைவாக, சமூக வெளியிலும் பரவும் துர்நாற்றம்....unbearable stench...

      .. என்றெல்லாம் கொஞ்சம் ஃப்ரீயாக(!) எழுதி, பின்னர் வெகுவாக வெட்டி, தந்திருக்கிறேன். பின்னூட்டமே தளத்திற்கு ஒரு பாரமாக ஆகிவிடக்கூடாதல்லவா!

      நீக்கு
    3. ஒரு மனிதன் எப்படிப்பட்ட கெட்டவனாக, தீயசக்தியாக இருந்திருந்தால் பலபேரின் வெறுப்பைச் சம்பாதித்திருப்பார். யூதர்களிடம் கொய் பஃர்ர் என்று சிலாகித்து ஜீவி சார் பேசிவிட்டு பிறகு புரிந்துகொள்ளட்டும் ஏன் மக்கள் கருணாநிதியை வெறுக்கிறார்கள் என்று.

      நீக்கு
    4. ஆமாம் ஏகாந்தன் ஸார்...  மதுரை பஸ் நிலையத்தில் ஏற்பட்ட இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள்!  இதையும் பகிர்ந்திருக்கிறேன்.  இன்னொன்றையும் பகிர்ந்திருக்கிறேன்!

      நீக்கு
    5. தமிழுக்காக விரும்புகிறேன் என்றும் சொல்ல முடியவில்லை.  அவர் எழுதிய ஓரிரு கதைகளை படித்தால் குமட்டிக்கொண்டு வரும்.

      நீக்கு
    6. நமக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களைவிடவா கருணாநிதிக்கு தமிழ் தெரிந்திருந்தது? எல்லாம் ஒரு விளம்பரம்தான். கூடவே அவரது அரசியல் அதிகாரத்தால், ஜால்ரா கோஷ்டிகள் பெருகி, அவர் தமிழுக்காகவே அவதரித்தவர் என்றெல்லாம் அள்ளி விட்டார்கள். இப்படி ஜால்ரா போட்டு, பல இடங்களை சல்லிசு காசுக்கு சுருட்டிக்கொண்டவர்கள் விவரம் நமக்குத் தெரியாதா என்ன?

      நீக்கு
  5. சுஜாதா பக்கம் நன்றாகவே படிக்க முடிகிறது. 'யார் அந்த அவர்கள்?' என்று வாசிக்க முடிந்த யாராவது சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes.  நானும் காத்திருக்கிறேன்.  யாரும் சொல்லாட்டா ராத்திரி நீங்களே சொல்லிடுங்க ப்ளீஸ்...

      நீக்கு
    2. இப்பவே இங்கு இரவு 08.30. சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்.
      ஜெஸி ஸார் வந்து சொல்வார் என்று எதிர்பார்ப்பு. (சென்ற புதன் அன்று அவர் பின்னூட்டம் பிரமாதம்)

      நீக்கு
    3. நேற்று.
      பின்னூட்டம் போட்டு ரசித்ததைச் சொல்வது என்பது இக்காலத்துத் தேவை. அதைச் சுவையாய் செய்வது என்பது வெகு சிலருக்கே சாத்தியப் பட்டிருக்கு. பலர் இந்தக் கல்வியைக் கற்க முயற்சிப்பதில்லை என்பதையும் கிடைத்த இடுக்கில் சொல்வதில் தவறில்லை. எல்லாம் எழுதும் சிறப்புக்குத் தானே! என்ன சொல்கிறீர்கள்?

      நீக்கு
    4. புதன் என்பது புதின் என்று வந்திருப்பதற்கு மன்னிக்கவும்!

      நீக்கு
  6. ஜோக்கென்று பெயர் கொண்டவைகளில் 'மறுபடியும் ஆ' மட்டும் ரசிக்க முடிந்ததாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. 'மூடினாலும் திறக்கிறது முகிலின் விளையாட்டு முந்தானை' மெல்லிய முறுவலுடன் நான் ரசித்த வரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகில் என்றால் மேகம் என்று தான் தெரியும். அது எப்போது தென்றல் என்ற காற்றாக மாறியது என்று புரியவில்லை.
      Jayakumar

      நீக்கு
    2. ஆம்.  ஆனால் நான் என்ன நினைத்து எழுதினேனோ அந்தப் பொருள் சரியாய் புரிந்து கொள்ள பட்டிருக்கிறது JKC ஸார்,,,!!  வேண்டுமானால் இப்படி மாற்றுகிறேன்..

      கவனத்தைக் கலைக்கிறது 
      காற்றின் விளையாட்டு 
      முந்தானை 

      நீக்கு
  8. கலைஞரும் டி ராஜேந்தரும் என்ற தலைப்புக்கும் கட்டுரைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே என்று வியந்த போது தலைப்புக்கேற்ற செய்தி பொக்கிஷத்தில்.

    கட்டுரை ""கெட்ட பெயர் வருவதற்கு காரணம்" என்று துவங்கி பெயர் சொல்லி அழைப்பதை விளக்கி மாலினி ஹாசினி என்று சுற்றி படிப்புக்கும் வேலைக்கும் பொருத்தம் இல்லாமையில் வந்து கடைசியில் இது ஒரு முன்னுரை என்று முடிக்க உங்களால் மட்டும் தான் முடியும். சாண்டில்யன் ?

    shot at the right moment போட்டோக்கள் நன்றாக உள்ளன.

    அந்தக்காலத்தில் சர்வரோக நிவாரணிகள்
    ஆஸ்ப்ரோ, வாட்டர்பரி காம்பௌண்ட், உட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டர் போன்றவை தாம். ஆஸ்ப்ரோ என்று பெயர் இல்லை என்றாலும் ஈகோஸ்பிரின், டிஸ்பிரின் என்ற பெயர்களில் ஆஸ்பிரின் தற்போதும் கிடைக்கிறது.

    கவிதைகள் சுமார். நான் இந்த விளையாட்டுக்கு இன்று வரவில்லை.

    சுஜாதா சார் எழுதியது போன்று தான் தற்போதும் நடக்கிறது. காரணம் அக்கறையின்மை. சாட்சி போலீஸ் கோர்ட் என்ற வம்புகளில் மாட்ட விரும்பாமை. அதற்கு பரிகாரமாக வந்த 108 சும்மா அரசியல்வாதிகளின் பாக்கெட் மணி கொடுக்கும் சேவை ஆகி விட்டது. கூப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து வந்தாலும் வரலாம்.

    செய்திகள் என்ற பெயரில் நிறைய கொட்டை எழுத்துக்கள். சுருக்க முடியாதோ??

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ ஒரு கேட்சி தலைப்பு வைக்க வேண்டும்!  அவ்வளவுதான்!

      சாண்டில்யன் வர்ணனை மன்னன்.  மாலையி மேகம் கூடி மழை பொழியத்துவங்கும் காட்சியை விஸ்தாரமாக வர்ணித்து கடைசியில் அலலது நடுவில் ஆற்றில் குளித்து விட்டு கரைவரும் இளவரசி பற்றிய வர்ணனைக்குள் புகுபார்!

      ஆஸ்பிரின் தற்போதும் கிடைக்கிறதுதான்.  ஆனால் இருமலுக்கு என்று சொல்லபப்டுவதில்லை.  அதைதான் சொல்லி இருக்கிறேன்!

      செய்திகளை இப்போது சுருக்கி இருக்கிறேன்...  பாருங்கள்.

      நீங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டதற்கும் நன்றி JKC ஸார்...

      நீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. ’கவி முயற்சி’யில் முதலாவதில் ஹைக்கூ எட்டிப்பார்க்க யத்தனித்திருக்கிறது. நிலவு என்பதற்கு பதில் நிலா என்று வந்திருந்தால் - it may have sounded lighter, so sweeter...

    பதிலளிநீக்கு
  12. நானும் "எண்ணிப்" பார்த்தாலும், ஒப்புரவறிதல அதிகாரத்தின் குறள்கள் நினைவுக்கு வந்தாலும், முன்னே வருவது :

    105. உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதவி என்று இல்லாமல் நீங்கள் சாதாரணமாக செய்யும் ஒரு செயல்.  அவருக்கான உதவி அல்ல அது.  அடுத்த வாரம் படித்தால் புரியும் DD.  எனவே இந்தக் குறள் இங்கு பொருத்தமில்லை 

      நீக்கு
  13. விடுதியில் 3 ஆண்டுகள் ஒரே அறையில் பழகிய நண்பன், இன்றைக்கு "ங்க" என்று ஒவ்வொரு பேச்சிலும் வருகிறது...

    அதிகம் பழகாத, வேறு துறையை படித்த நண்பனோ, "டேய் தனபாலு + 'டா' என்று பேசும் போது, கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்...

    பதிலளிநீக்கு
  14. தோழிகள் பொறுத்தவரை :

    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி..
    நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு க்ளோஸ் சிநேகம் எல்லாம் இல்லை DD.  அன்றாட வாழ்வில் ஆர்டினரியாய் பழகும் பழக்கம்தான்!

      நீக்கு
  15. முதலில் பெயர் கேட்டு, அதன்பின் "தலையிலிருந்து பிறந்தவரா?" என்று அறிந்து கொள்ளும் அற்பமான சிலர் (ஒரு சமூகம்) உள்ளனர்...

    சமீபத்தில் பெங்களூர் சந்திப்பில், மேற்பட்டவரின் துணைவியார் எப்படியோ சமாளித்தார்...

    "வாங்க பழகலாம்" என எண்ணும் பழக்கம் உள்ளவர்கள் வெகு சிலரே...

    "இது நம்ம ஆளு" அதிகம் பேர்... அவர்கள் ஐயன் சொன்ன கீழ்கள் எனலாம்...

    இதற்கும் கணக்கியல் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலையிலிருந்த்து பிறந்தவரா என்று அல்ல..  பல வகைகளிலும் 'இவன் நம்ம ஆளா' என்று அறியத்துடிக்கும் மக்கள் எல்லா சாதிகளிலும் உண்டு.  பதில் சொல்லாமல் ஒதுங்கிச் செல்லும் பிரிவில் அல்ல, மிரட்டி நிற்கும் பல பிரிவுகளிலும் அதிகம் உண்டு.  சொல்ல ஆளில்லை.  கேட்க நாதியில்லை! எப்படியோ சமாளிக்க ஏடாகூட பிரிவா என்ன?  பெருமையாய் சொல்லிக் கொள்ள வேண்டாமா தான் யாரென்று.  தனக்கே இல்லாத பெருமை மற்றவரிடம் எப்படி இருக்கும்?

      நீக்கு
  16. பதில்கள்
    1. நன்றி DD.  சொற்குற்றம், பொருள் குற்றம் பாராது பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  17. ஹாசினியும் தன் பெயர் என்று நம்பத்தொடங்கி விட்டதாக சிரித்துக்கொண்டே சொன்னார்!//

    ஹாஹாஹா ஸ்ரீராம் அவர் பெயர் ஹாசினிதானே!!! நீங்க மாலினி கூப்பிட்டதை கேட்டு மாலினியும் தன் பெயர் ......இப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம், எனக்கும் என் பெயர் சொல்லி அழைப்பது ரொம்பப் பிடிக்கும். அது என்னவோ ஒரு நெருக்கம் போன்று. நான் என் வட்டத்தில் யாருடன் பேசினாலும் பெயர் சொல்லி பேச்சைத் தொடங்கி இடையிடையேயும் பெயரைச் சொல்வது வழக்கம். எனக்கும் இது பிடிக்கும். ஆண் நட்பு என்றாலும் பெண் நட்பு என்றாலும்.

    என்னைவிடச் சிறியவர்களும் என்னை பெயர் சொல்லி அழைத்தால் ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்!! ஹிஹிஹி...

    அக்கா, பெரியம்மா, அத்தை என்றும் என்னோடு பேசுபவர் உண்டு அதுவும் பிடிக்கும். நீங்க சொல்லிருப்பது போல் பொதுவாகப் பேசுவதை விட இது. இது எனக்கு ஊர்ப்பழக்கம். எங்கள் ஊரில் ஊருகே பொதுவான சித்தப்பா, பெரியப்பா அத்திம்பேர் உண்டு!!!

    அதனால்தான் நான் இங்கு பலரையும் அண்ணா, அக்கா, அம்மா என்றும் அல்லது பெயர் சொல்லியும் கருத்திடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலரை பெயர் சொல்லி அழைத்தால் அவங்க தப்பா நினைச்சிருவாங்களோ என்று ஒரு சின்ன தயக்கம் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை என் அக்கா போன் செய்து இன்னொரு எதிர் வீட்டுக்கார அம்மா எப்படி என்னை அழைப்பார் என்று ஞாபகப்படுத்தினார்.  மேலும் தன் பெயறை கல்லூரியிலுமும் தோழிகளும், விரிவுரையாளர்களும் எப்படி அழைப்பார்கள் என்று நினைவுக்கு வந்ததது என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.

      நீக்கு
  19. ஸ்ரீராம், நானும் தனியாகப் பயணித்தால், ஆட்டோஓ ஓட்டுநர், கார் ஓட்டுநர் அல்லது செல்லும் இடங்களில் சந்திக்க நேரிடுபவர்களிடம் சும்மா பேச்ஹ்குக் கொடுத்தால் அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் வெளியில் வரும். சுவாசியமான விஷயங்கள் கூட இருக்கும்.

    நீங்கள் சொல்லியிருப்பது போல்தான்,,,நமது பேச்சில் நம் தனிப்பட்டக் கதை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சில சமயங்களில் சில பேர்களிடம் பேசாமல் இருப்பது மேல் என்றும் நமக்கே தெரிந்து விடும்!

      நீக்கு
  20. மிஸஸ் பல்லா பற்றிய, ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் வெகு சுவாரசியம்.

    மிஸர் பல்லா, மிஸர் மல்ஹோத்ரா என்றில்லை, பலரும் தாங்கள் பின்பற்றும் குருதான் உசத்தி என்று பேசிக் கொள்வது இப்போதும் உண்டு. அதுக்குள் புகாமல் தப்பித்து வருவது நல்லது, நீங்கள் செய்தது போல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நியூஸ் ரூம் செய்திகள் பார்த்தேன். பங்களூர் பேருந்து பற்றிய செய்தி ஓ இப்படியும் பிரச்சனை எழுகிறதா கண்டக்டருக்கு என்று தோன்றியது.

    குஷ்புக்கு ஏன் தடை இலங்கைக்குப் போகக் கூடாது என்று? செய்தி பார்க்க வேண்டும். சரி குஷ்பு எந்தக் கட்சியில் இருக்கிறார்!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்விக்கு குஷ்புவே பதில் சொல்ல தினறுவார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  22. துரை அண்ணா பகிர்ந்திருக்கும் செய்திகளில் நாதஸ்வரக் குட்டீஸ் மனதைக் கவர்ந்தனர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. துல்லியப் படங்கள் - அட்டகாசமான ஷாட்ஸ்!

    ஹைக்கூக்களை ரசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கலைஞரும் டி ராஜேந்தரும் தகவல் செம சுவாரசியம். கலைஞரின் பேச்சு வார்த்தை விளையாடலை மிகவும் ரசித்து வாசித்தேன் அது போல காதர், டி ராஜேந்தர் வழக்கமான அவரது ரைமிங்க் பாணி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஜோக்ஸில் டாக்டர் ஜோக் சிரிப்பை வரவழைத்தது.

    சுஜாதா பக்கம் வாசிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கு, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  26. சில நேரங்களில், ஆட்டோவில் விரோதத்துடன் உட்கார்ந்து கொள்வது உண்மையிலேயே தவிர்க்க முடியாத ஒன்றுதான் எல்லோருக்கும் என்று தோன்றுகிறது. பிராக்கெட்டில் கொடுத்ததை வாசித்து சிரித்துவிட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   சிலசமயங்களில் துளஸிஜி, ஓட்டுநர் முகத்தைப் பார்த்தாலே நமக்குள் ஒரு ஒவ்வாமை வந்து விடும்.  அதுவும் காரணம்!

      நீக்கு
  27. நெருக்கமானவர்களாக இருந்தாலொழிய மரியாதைக் குறைவாய் ஒருமையில் பேசமாட்டேன்.//

    நானும் அப்படித்தான். வீட்டில் பணி செய்யும் உதவியாளரையும் மரியாதையாகத்தான் பேர் சொல்லி அழைப்பேன். வாங்க . போங்க என்று தான் பேசுவேன். உங்களை மற்றவர்கள் எப்படி அழைப்பார்கள் என்று பகிர்ந்து கொண்டது அருமை. அம்மா எப்படி அழைப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவுடனேயே இருந்ததால் அம்மா என்னை  அழைத்துப் பேசவேண்டிய சமயங்கள் இருந்ததில்லை.  அப்படியே பேச்சைத் தொடர்ந்து அல்லது பேகிச்சை தொடங்கிய நினைவு.  .  என்ன சொல்லி அழைப்பார் என்று கண்ணை மூடி, நெற்றியைச் சுருக்கி யோசித்துப் பார்த்தால் விளையாடிக் கொண்டிருக்கும் என்னை படிக்க அழைக்கும் அம்மா கண்ணுக்குள் தெரிகிறார்.  "ஸ்ரீராம்....  உள்ள வா...  கைகால் கழுவிகிட்டு படிக்க உட்காரு..."

      நீக்கு
  28. //மிஸஸ் மல்ஹோத்ரா இடைமறித்து ”உன்னோட குருவையெல்லாம் ஒரு ’பூரண் குரு’ -ன்னு (பூரண குரு)
    சொல்லமுடியாது. உண்மையான குருன்னு இந்த ஒலகத்துல ஒருத்தர சொல்லனும்னா அது எங்க குருதான்னு சொல்லி வாதித்திருக்கிறார்.


    அவர்கள் ஏற்று கொண்ட குருதான் உயர்வானவர் என்று மிஸஸ் மல்ஹோத்ரா சொல்லி இருக்க வேண்டாம்.
    செய்திகள் வாசித்தேன். தலைப்பு செய்திகள் வாசித்தேன்.
    துல்லியமான படங்கள் அருமை.
    கவி முயற்சி நன்றாக இருக்கிறது. பொக்கிஷபகிர்வுகள் படித்தேன்.

    டி ராஜேந்தர் கவிதை படித்தேன். நகைச்சுவைகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  29. பெயர் சொல்லி அழைப்பது ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும்.

    துல்லிய புகைப்படம் அருமை.

    கவிதை முயற்சி நன்று.

    பதிலளிநீக்கு
  30. பெரும்பாலும் நான் தெரிந்தவர்களிடையே அக்கா அல்லது மன்னி. வெகு சிலர் கீதா அக்கா என்பார்கள். எங்க அப்பாவழி/அம்மாவழிக் குடும்பத்தில் கீதா அக்கா/அத்திம்பேர். அல்லது அக்கா/அத்திம்பேர் தான் காமன்.

    பதிலளிநீக்கு
  31. வீட்டுப் பெரியவங்க தான் அதிகம் பெயர் சொல்லிக் கூப்பிட்டிருக்காங்க. அடுத்துப் பள்ளி ஆசிரியர்கள், கூடப் படித்த மாணவிகள். இணையத்தில் கூட வெகு காலம் நான் ஒரு கீதா தான் இருந்தேன். பின்னர் சில கீதாக்கள் வந்தனர். முகநூலில் எக்கச்சக்க கீதா. என் ப்ரொஃபைலின் ஆனைக்குட்டியை வைச்சே என்னை அடையாளம் காணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பக்கங்களில் அப்பாதுரையின் சகோதரி ஒரு கீதா இருந்தார்.  எண்ணங்கள் என்றே எல்கேயும் ஒரு வலைத்தளம் வைத்திருந்தஹார் என்று நினைவு.

      நீக்கு
  32. அடுத்து நீங்கள் பகிரப்போகும் ஓலா, ஊபர் செய்திக்குக் காத்திருக்கேன். சுஜாதா பக்கமெல்லாம் படிக்க முடியுமா? நாளைக்குப் பகலில் பார்க்கிறேன். கவிதை எல்லாம் ஓகே ரகம். ஜோக்குகளுக்குச் சும்மாச் சிரிச்சு வைக்கிறேன். நியூஸ் ரூமில் பெண்களூர் நடத்துநர்களின் பிரச்னை பற்றியும் முன்னரே படிச்சேன். :( இப்படியும் ஒரு பிரச்னை. ஆனால் என்ன தான் சொல்லுங்க, "பெண்"களூர் பேருந்துகளில் பயணித்தல் சுகமோ சுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் தப்பாது சொல்லி விடுகிறேன். மற்ற பகுதிகளையும் ரசித்திருப்பப்பதற்கு நன்றி.

      நீக்கு
    2. //"பெண்"களூர் பேருந்துகளில் பயணித்தல் சுகமோ சுகம்.// - இவர் எந்த யுகத்தை நினைத்து எழுதியிருப்பார்? To be fair, பெங்களூர் பேருந்துகள் தமிழக பேருந்துகள் மாதிரி மோசமில்லை. சில மாதங்கள் முன்பு ஏர்போர்ட் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, இடையில் ஒரு நிறுத்தத்தில் 3 பெண்கள் ஏறினர்...வண்டி கிளம்பின பிறகு, எங்களுக்கு டிக்கெட் இல்லைதானே என்று கேட்டனர் (பெண்களுக்கு இலவசம் மற்ற பேருந்துகளில்). ஏர்போர்ட் பேருந்தில் அப்படி இல்லை என்றதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர். அரசு எங்கு மக்களை அழைத்துச் செல்கிறது என்று யோசித்தேன்.

      நீக்கு
  33. ஏகாந்தமாய் எழுதி இருப்பது நன்றாக உள்ளது. அவரவருக்கு அவரவர் குரு தானே ப்ரதானம். என் சின்ன வயசில் மதுரைப்பக்கமெல்லாம் காஞ்சி காமகோடி பீடம் ஸ்வாமிகளை விட சிருங்கேரி ஸ்வாமிகளுக்கே சிஷ்யர்கள் அதிகம் இருந்தனர். இளையாத்தங்குடியில் காஞ்சிப் பெரியவர் நடத்திய வித்வத் சதஸுக்குப் பின்னரே அங்கேயும் அவர் பெயரும், காஞ்சி மடமும் அதைப் பின்பற்றும் சீடர்களும் அதிகமாக ஆரம்பித்தனர். அந்த வித்வத் சதஸுக்குப் பின்னர் அதே மாதிரி வேறெங்கும் நடந்ததாய்த் தெரியலை. என்னோட இளைய நண்பர் மதுரையம்பதி என்னும் புனைப்பெயர் கொண்ட சந்திரமௌலிக்குக் காஞ்சிப் பெரியவர் தான் பெயர் வைத்ததாகச் சொல்லுவார். இது நடந்தது எழுபதுகளின் ஆரம்பத்தில். மதுரையில்.டிவிஎஸ் காரங்க தான் அவரை வரவழைத்து கௌரவித்து வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தார்கள் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த போட்டி பற்றி நானும் அவருக்கு 1 2 1 ல் சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  34. ஆஸ்ப்ரோ ஆஸ்பிரினெல்லாம் சாப்பிட்டதே இல்லை. அந்த ஜிம்னாஸ்டிக் காரர் செய்யும் அதே விளையாட்டைக் குட்டிக் குஞ்சுலுவும் அவங்க பள்ளியில் ஜிம்னாஸ்டிக் பீரியடில் பண்ணுகிறது. அவ அம்மா ஃபோட்டோ எடுத்து அனுப்பினாள்.. அடுத்த படமும் நன்று. கருனாநிதி/ராஜேந்தர் பத்தி எல்லாம் நாளைக்குப் படிக்க முடிகிறதானு பார்க்கிறேன். விளக்கேத்தணும். வரேன் அப்புறமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்க முடியாமல் ஒரு விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு மன்னிக்கவும்// அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் வெளிப்படையாக இருக்கிறேன்.

      நீக்கு
  35. //ஒரு தீவிர பக்தை என்பது // ஆன்மீகம் மற்றும் இதைப்போன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் பெர்சனல் அனுபவத்தில் ஏற்படுவது. ஒருவருக்கு ஏற்படுவது இன்னொருவருக்கு ஏற்பட வாய்ப்பு குறைவு. அதனால் ஒருவரின் ஆன்மீக குரு இன்னொருவரின் ஆன்மீக குருவாக, அவரைப்பற்றி உயர்த்திச் சொல்லுவதன் மூலமாக ஆக முடியாது. அனுபவம் கிடைக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் என் குரு நல்லவர் என்றே சொல்ல வேண்டும். அவர் மோசமானவர், இருந்தும் அவரைப் பற்றி எழுதுகிறேன்

      நீக்கு
    2. மேலே வெளியாகியுள்ள கருத்து நான் போடவில்லையே... என்ன குழப்பம் இது?

      நீக்கு
  36. கலைஞரும் டி ராஜேந்தரும் - பாவம் டி.ஆர். கருணாநிதிக்கு priorities முதலில் தான், பிறகு தன் குழந்தைகள் (கட்சி வாரிசு, பிறகு அவரவர் துணை, பிறகு குழந்தைகள் என்று வரிசை), பிறகு தன் அடுத்த லெவல் உறவினர்கள், பிறகு தன் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று வரும். பிறகுதான் வெளியாட்கள். வெளியாட்கள் சிறிது திறமை இருந்து புகழ் பெற ஆரம்பித்தால் அவர் சுதாரித்துக்கொள்ளுவார். இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்காலத்தில் போட்டியாக வந்துவிடக் கூடும் என்று. அதனால் தட்டி வைத்துவிடுவார். இந்த விஷயத்தில் அவர் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். அப்படி மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர் டி.ராஜேந்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இந்திரா ப்ரியதர்ஷினி மாதிரி போல...

      நீக்கு
    2. இல்லை. இந்திரா கூழைக்கும்பிடு ஆட்களை மாத்திரம்தான் மேலே கொண்டுவருவார், ரயில்வே மினிஸ்டர் ஜாஃபர் கான் போல (அவர் நிஜலிங்கப்பாவின் கார் டிரைவர்). ஆனால் கருணாநிதி, அறிவு உள்ளவர்களைப் பயன்படுத்திக்கொள்வார், அவர்கள் 'கருணாநிதி போடும் பிச்சைக்கு' மேல் ஆசைப்படக்கூடாது. ஏதோ ஒன்றில் எழுதியிருந்தார்கள், முரசொலி மாறன், கருணாநிதிக்கு கண்ணும் காதுமாகச் செயல்பட்டார் (இடையில் புல்லுக்கும் ஆங்கே பொசிந்துகொண்டார். அதுபற்றி கருணாநிதிக்கு அக்கறை இல்லை). முரசொலி மாறன், கருணாநிதி இடத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் அவருக்கும் 'கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு' என்ற நிலைமை வந்திருக்கும் கலாநிதி/தயாநிதிக்கு நடந்ததைப்போல

      நீக்கு
    3. இப்போது நிலைமை கொஞ்சம் தலைகீழ் என்று ஆங்காங்கு படித்தேன்.  மூத்த அமைச்சர்கள் முதல்வரை அந்த அளவு லட்சியம் செய்வதில்லை, தனித்தனியாக செயல்படுகிறார்கள் என்பது போல.

      நீக்கு
  37. //இந்தப் பழக்கம் என்னைப்போலவே உங்களில் பலரும் பின்பற்றும் பழக்கம்தான்// - சமீபத்தில் பெங்களூர் ஆட்டோவில் குடும்பம் பிரயாணித்தபோது, நாங்கள் பேசிக்கொண்டிருந்தவைகளைக் கேட்டு டிரைவரும் அதில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். பிறகு எங்கள் ஊர் என்பது பற்றியெல்லாம் கேள்வி கேட்கவும் நாங்கள் உஷாராகி பொய்த் தகவல்களை அள்ளிவிட ஆரம்பித்தோம். எப்போதும் வெளியிடங்களில் நாம், நம் குடும்பத்தினரிடம் பேசிக்கொள்வதே டேஞ்சர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த அனுபவம் உண்டு.  அப்படி சொந்த விஷயம், குடும்ப விஷயம் பேச நானும் அனுமதிக்க மாட்டேன்.

      நீக்கு
    2. நாங்க ரெண்டு பேரும் போனால் சண்டைக்காரங்க மாதிரி தான் உட்கார்ந்திருப்போம். குழந்தைகள் வந்தால் அவங்களுக்குச் சுற்றுவட்டார இயற்கை வளத்தை அறிமுகம் செய்வோம். உதாரணமாக நெல் வயல், கரும்புத் தோட்டம், வாழைத்தோப்புனு வரும்போது. அவங்க இதை எல்லாம் அம்பேரிக்காவிலோ, நைஜீரியாவிலோ எங்கே பார்க்கப் போறாங்க. நைஜீரியாவில் பையர் தோட்டம் போட்டிருக்கார் என்றாலும் இங்கே மாதிரி வராது இல்லையா?

      நீக்கு
    3. நாங்க போன டிசம்பர் வரை வேலைக்கு வைத்திருந்த பெண்மணி இப்படித்தான் எங்க பேச்சில் குறுக்கிட ஆரம்பிக்கப் பிடிக்காமல் போய் விட்டது. முக்கியமாய் அதுக்காகவே நிறுத்தினோம்.

      நீக்கு
    4. ஆட்டோவில், காரில் போகும்போது நான் இந்த ஓரம் இந்தப் பக்கம் பார்த்துக்கொண்டும், பாஸ் அந்த ஓரம் அந்தப் பக்கம் பார்த்துக்கொண்டும்தான்  உட்கார்ந்திருப்போம்.  குடும்ப விஷயம் எதுவும் பேசமாட்டோம்.  பாஸ் டிரைவருக்கு எதிரில் இதைப் பேசக்கூடாது, அதைதான் பேசப்பதொடங்குவார்.  ஒரு முறைப்பில் நிறுத்துவார்!

      நீக்கு
  38. ஆஸ்ப்ரோ - இந்தியாவில்தான் எல்லாக் குப்பைகளையும் மக்களிடம் விற்றுவிடுவார்கள். பிறகு சுதாரித்துக்கொண்டு விற்பனை தடை செய்யப்படும். முன்பு நமக்குக் கொடுத்துக்கொண்டிருந்த குளிர்பானங்களில் பலவித நச்சுக் கலப்படங்கள் (லிம்கா ஒரு உதாரணம். முன்பிருந்த சுவை சேர்ப்பு நச்சு என்பதால் புதிய சுவை சேர்த்ததால் சுமாராக இருந்தது). மருந்துகளிலும் அப்படித்தான். விக்ஸ் ஆக்‌ஷன் 500 அல்லது வேறு ஒன்று - மிகவும் கெடுதல் என்றெல்லாம் செய்தியில் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹார்லிக்ஸ், விவா, போன்விட்டா போன்ற பானங்கள் கூட  எல்லாமே அப்படித்தான்.  எழுபது, எண்பதுகளில் இருந்த சுவை இப்போது இல்லை.  மாறிக்கொண்ட இருக்கிறது.

      நீக்கு
    2. எங்க வீட்டுக்கு வரவங்க ஜலதோஷம், வலி போன்றவற்றுக்கு நிவாரணிகளான விக்ஸோ, அமிர்தாஞ்சன் போன்றவையோ கேட்டால் நாங்க திரு திரு தான். அதெல்லாம் வாங்கினதே இல்லை. சின்ன வயசில் அப்பா வீட்டில் இதெல்லாம் லக்சுரி. பின்னர் விபரம் தெரிந்த பின்னர் இவற்றைப் பயன்படுத்தவே பிடித்தது இல்லை. ஆஸ்ப்ரோ, சாரிடான் போன்றவற்றைப் பயன்படுத்தியதே இல்லை.

      நீக்கு
    3. ஒரு கட்டத்தில் என் ஒற்றைத் தலைவலிக்கு நான் பயன்படுத்தாத மருந்தே இல்லை.  சாப்பிடாத மாத்திரையே இல்லை.  அன்றும் இன்றும் என்றும் எங்கள் வீட்டில் விக்ஸ், அமிர்தாஞ்சன், கோடரி, இன்னும் சில நிவாரணிகள் எப்போதும் உண்டு.  பேறில்லாத ஒரு மருந்து இருக்கிறது.  தனியார் ஒருவர் வந்து அலுவலகங்களில் விற்பது.  யாரென்று தெரியாது.  அக்கா மகள் வாங்கி கொடுத்தாள்.  கொரோனாவுக்கு அப்புறம் கிடைக்கவில்லை.

      நீக்கு
  39. //என்னைவிட அதிகம் படித்தவர்// இங்கு எழுதியிருந்தேன் என்று நினைக்கிறேன். மார்க்கெட்டில் கேரட் விற்றுக்கொண்டிருந்தவர் (இங்கு) என்னிடம் தான் பிஜி, ஆசிரியர் படிப்பு மற்றும் இன்னொரு படிப்பு படித்திருப்பதாகவும் வேலை இல்லாததால் இப்போது மார்க்கெட்டில் கேரட் விற்பதாகவும், இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழக அரசு வேலைக்கு அப்ளை செய்யப்போவதாகவும் -வேலை வாய்ப்புக்கு விளம்பரம் வந்திருக்கிறதாம், என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் செய்த கோலமடி' என்று பாடத்தான் தோன்றும்! பியூன் வேலைக்கு BE பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் அப்ளை செய்யும் காலம் இது!

      நீக்கு
  40. //கத்தியைப் பார்த்ததுமே
    கத்தத் தொடங்குகிறது
    ஆடு// - பக்ரீத் போன்ற சமயங்களில் ரோட்டில் ஆடுகளை இறக்கி விற்றுக்கொண்டிருப்பார்கள். அவற்றைப் பார்க்கும்போது, அதன் மனதில் என்ன இருக்கும் என்று யோசிப்பேன். புல்லைப் போட்டு, வெட்டு களத்துக்குப் பேரம் பேசும் எஜமானனைப் பற்றியும் வாங்குபவனைப் பற்றியும் அதுகள் என்ன நினைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடு மாடு நாய் போன்ற ஜீவன்களுக்கெல்லாம் மனம் என்ற ஒன்று இருக்குமா, அதற்கு யோசனை ஓடுமா ன்று கேள்விகள் எழும் எனக்கு!

      நீக்கு
  41. நான் யாரையும் மரியாதையாகவே அழைப்பேன். ஒருமையில் அழைப்பது எனக்குப் பிடிக்காது. அதுபோல என்னை ஒரு சிலரைத் தவிர (2-3 பேர்கள்) ஒருமையில் அழைப்பதை நான் விரும்புவதில்லை. அது காய் விற்பவராகட்டும், வேலை செய்பவராகட்டும் இல்லை குப்பை பொறுக்குபவர் ஆகட்டும் அல்லது பிச்சை எடுப்பவராகட்டும். இந்தப் பழக்கம் எப்படி எனக்கு வந்தது என்று தெரியவில்லை.

    என் அம்மா வழி உறவினர்கள் அனைவரும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில்தான் பேசுவார்கள். நான் மட்டும் நீங்க என்றெல்லாம் பேசுவதை அவர்கள் 'என்னவோ போலப் பேசுகிறாய்' என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி இருப்பவர்களை கொஞ்சம் பயந்த ஸ்வபாவம் என்று வகைப்படுத்தினார் என் நண்பர் ஒருவர்.  ஏனெனில் நானும் அதே டைப்தான்!

      நீக்கு
    2. //கொஞ்சம் பயந்த ஸ்வபாவம்// - ஏதிலிகளைக்கூட நாம பயந்துகிட்டே 'நீங்க' என்று சொல்கிறோமா இல்லை, 'பணம்' என்ற வஸ்துவை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்கிறோமா? 'பயந்தவர்கள்'/'சந்தர்ப்பவாதிகள்', தனக்கு மேல் நிலையில் இருப்பவர்களிடம் கூழைக்கும்பிடு போட்டு, தனக்குக் கீழானவர்களிடம் எஜமான தோரணையில் அதிகாரமாகப் பேசுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    3. நான் சொல்ல வந்தது பொதுவாக சிலர் மற்றவரைப் பார்க்கும் பார்வை அவர்களிடம் இருக்கும் சில நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் இப்படி ஏதாவது பெயர் கொடுப்பது!  எஜமான தோரணையில் பேசுவதை பல இடங்களில் நானும் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  42. பிறரைப் பெயர் சொல்லி அழைப்பது பற்றிய விரிவான அலசல் சுவாரஸ்யம்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!