சனி, 17 ஆகஸ்ட், 2024

வீண் ஆடம்பரமும் வறுமையே மற்றும் நான் படிச்ச கதை

 

சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி விராலிபட்டியில் பார்வையற்ற மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் இணைந்து இலவசமாக வீடு கட்டி அதை நேற்று திறந்து வைத்தனர்.  சாணார்பட்டி விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் மருதம்மாள் 75. இவருக்கு இரு கண் பார்வையும் இல்லை. ஆதரவின்றி ஏழ்மையான நிலையில் வாழ்கிறார். இவர் வீடு சேதமடைந்து ஆபத்தாக இருந்தது. இதையறிந்த சமூக ஆர்வலர் பால் தாமஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து மருதம்மாளுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தனர்.  உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் திரட்டி புதிய வீட்டை கட்டினர். வீட்டின் திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை முன்னாள் வணிகவரி இணை ஆணையர் தேவநாதன், அனுகிரக கல்லுாரி முன்னாள் முதல்வர் ஐசக், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி வீட்டை திறந்து மருதம்மாளிடம் ஒப்படைத்தனர்.

======================================================================================================

சென்னை: துாய்மை பணியாளரின் மகளுக்கு, திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சேகர். மன்னார்குடி நகராட்சியில், துாய்மை பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர்களின் மகள் துர்கா. அரசு பள்ளியில் படித்தார். அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார்.  குடும்ப சூழ்நிலை காரணமாக, 2015ல் துர்காவுக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த நிர்மல்குமாருக்கும் திருமணம் நடந்தது. அவர் தாலுகா அலுவலகத்தில், தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அரசு பணிக்கு தயாரான துர்கா, குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, நகராட்சி கமிஷனராக தேர்வானார்.

\]]]]]]]]]]]]]]]]\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

விசாரணையின் போது, போலீசாரை தாக்கி தப்பியோட முயன்ற ரவுடியை, துணிச்சலாக துரத்திச் சென்ற பெண் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் ரோஹித் ராஜ், 34. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, சென்னையில் மட்டுமின்றி மதுரையிலும் வழக்குகள் உள்ளன. 2017ல், தீச்சட்டி முருகன், மயிலாப்பூரில் சிவகுமார் ஆகியோரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார்.  மேலும், 2022 மே 18ல், சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகத்தை, 36, ஷெனாய் நகரில் பட்டப்பகலில், ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார். இந்த மூன்று கொலை வழக்குகள் உட்பட இவர் மீது, 14 வழக்குகள் உள்ளன.   ஜாமினில் வெளியே வந்த ரோஹித் ராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தேனி, மதுரை என, பல இடங்களில் தலைமறைவாக தங்கி, போலீசாருக்கு, 'தண்ணி' காட்டி வந்தார். இந்நிலையில், ரோஹித் ராஜ் சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளதாகவும், கீழ்ப்பாக்கம் டி.பி.,சத்திரம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சியின் கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, டி.பி.சத்திரம் பெண் எஸ்.ஐ., கலைச்செல்வி தலைமையிலான போலீசார், கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருந்த ரோஹித் ராஜை சுற்றி வளைத்தனர்.  அப்போது, தப்பியோட முயன்றார். போலீஸ்காரர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோர் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர். உடனே, அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து, இருவரையும் தாக்கிய ரோஹித் ராஜ், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து ஓடினார்.  சுதாரித்த எஸ்.ஐ., கலைச்செல்வி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி ரோஹித் ராஜ் தப்ப முயன்றதால், காலில் குறிபார்த்து சுட்டார். இதில், தடுமாறி கீழே விழுந்தார்.  அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார், காயமடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், ரோஹித் ராஜ் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

=============\]]]]]]]]]]]]]]]]]]]\]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]==========================

வீண் ஆடம்பரமும் வறுமையே
••••••••••••••••••••••••••••••••••••••••••
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது... அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்.... ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போது
நான் அதை சரி செய்வேன், டிஸ்பிளே மாற்றி விடுவேன் என்றார்... நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்ட போது "என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்க முடியும் ,ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்? நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன்,.. என்னால் படிக்க முடியவில்லை, எனக்கு காலணிகள் இல்லை, காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை. ஆனால் இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன் .. அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.. என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்குறேன்... வசதியாக வாழ்வதற்கு பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்...
அற்புத மனிதன்.

தீக்ஷன்யா சௌந்தர்ராஜூலு என்னும் முகநூல் நண்பர் பதிவிலிருந்து...

===============================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

அஞ்சுமாடி

 கதையாசிரியர்: தஞ்சை பிரகாஷ்

தஞ்சை பிரகாஷ் (ஜி. எம். எல். பிரகாஷ்) (1943 - ஜுலை 27, 2000) எழுத்தாளர். இலக்கியச் செயல்பாட்டாளர். பதிப்பாளர். தஞ்சையில் கதைசொல்லி என்னும் அமைப்பை நடத்தியவர். 

தீவிர கிருத்துவர்களான பெற்றோருக்கு ஒரே மகனான பிரகாஷ் சமஸ்க்ருதத்தில் சிரோன்மணி பட்டம் பெற்றவர். சமஸ்க்ருதம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். பிரெஞ்சு, கன்னடம், வங்காளி, ஜேர்மன் என்று பல மொழிகள் அறிந்தவர். 

ரயில்வேயில் விபத்து பிரிவில் பாலக்காட்டில் பணியாற்றினார் அவ் வேலையை சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக பல தொழில்களை தொடங்கினார். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் பால் கடையும் பேப்பர் கடையும் வைத்தார். வெங்காய வியாபாரம் செய்யும் பொருட்டு ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரை சென்றார். மதுரையில் பி .கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கள் பதிப்பித்தார். பின் தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரிண்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார். 

க நா சு, வெங்கட் சாமிநாதன், கரிச்சான் குஞ்சு, எம் வி வெங்கட்ராம், இவருடைய நெருங்கிய நண்பர்கள். வெங்கட் சாமிநாதனுக்காகவே வெசாஎ என்ற சிற்றிதழை நடத்தியவர்.

தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்என்ற தலைப்பில் அவரது அனைத்துச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

இவருடைய கரமுண்டார் வீடு’, ‘பற்றி எரிந்த தென்னை மரம்என்பன சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன.. இவருடைய மேபல் என்ற படைப்பை எஸ் ரா தன்னுடைய 100 சிறந்த கதைகள் பட்டியலில் உட்படுத்தியிருக்கிறார்.

தமிழில் பாலியல் மீறல்களை அன்றிருந்த பொதுவான எல்லைகளை மீறிச் சென்று எழுதியவர் தஞ்சை பிரகாஷ். ஆனாலும் ஆபாசத்தை தவிர்த்து காமத்தை நுட்பமாக கையாண்டவர் என்று சிறப்பிக்கப் படுகிறார். 

இவரது ஒரு கவிதை 

காலம் மனிதனைத்

தின்றுகொண்டிருந்தது

மனிதர்கள்

காலத்தை நொறுக்கிக்

கொண்டிருந்தார்கள்

காலம் என்பது

கற்பனை

அதில்

இன்னொரு கற்பனை

மனிதன் 

ஆதிசங்கரரின் மாயை இக்கவிதையில் புலப்படுகிறதல்லவா!

உலகே மாயம் ..வாழ்வே மாயம் …. தேவதாஸ்

-x-x-x-x-x-x-x-x-x-x-x-

முன்னுரை 

தஞ்சை பிரகாஷ் பற்றி பல எழுத்தாளர்களும் பல ஆக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.  எஸ் ரா இவரது படைப்பான மேபல்என்ற கதையை சிறந்த கதைகள் பட்டியலில் உட்படுத்தியுள்ளார். ஆகவே இவ்வாரம் மேபல்கதையை பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் மேபல்ஒரு குறு நாவல். சுருக்குதலும் மிகக் கடினம். ஆக அவருடைய அஞ்சுமாடிஎன்ற கதையை இவ்வாரம் பகிர முயற்சிக்கிறேன். 

உரையாடல் மூலம் கதை சொல்வது என்பது ஒரு தனித்துவம். பாட்டிகள் இதில் விற்பன்னர்.  இக்கதையும் ஒரு உரையாடலின் தொகுப்பு தான். 

அது ஒரு அஞ்சு மாடி அரண்மனை. அஞ்சாம் மாடி காலி. ஒரு மாடியில் அரச  குடும்பத்தினர் வசிக்கின்றனர். மற்ற மூன்று மாடிகளில் அரசு அலுவகங்கள் உள்ளன. கோபிராவ் இந்த அலுவகங்களின் பியூன் மற்றும் வாட்ச்மேன். எதையும் சுருக்க சொல்ல தெரியாத ஒரு வெகுளி மனிதர்.. அவர் புதிதாக சேர்ந்த மேலதிகாரியிடம், ஒரு மழை இரவில் உரையாடுவது போல் கதை உள்ளது. 

கதையை  ஒரு முட்டை போல் உருவகப்படுத்தலாம்.. முட்டையின் மேல் ஓடு கோபிராவின் பேச்சு,  அதாவது உரையாடல். அதற்குள் வெள்ளை, மற்றும் மஞ்சள் கருக்களாக கோபிராவுடைய, மற்றும் சிறிது நாட்கள் முன்பு இறந்த வாட்ச்மேன் தாவீது பிள்ளை ஆகிய இருவரது  கதைகள் உள்ளன. இரண்டுக்கும்  உள்ள பிணைப்பு வாசகர்கள் கடைசியில் ஊகித்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று. 

கதை முழுதும் தரப்படவில்லை. சுருக்கம் மட்டுமே தந்துள்ளேன். கதையின் சுட்டி கீழே

x-x-x-x-x-x- கதையின் சுட்டி -x-x-x-x-x-x

அஞ்சுமாடி (கதைச்சுருக்கம்) 

வாங்கஎன்றார் கோபிராவ்.

அட மேலே வாங்க சார் இன்னும் இஞ்சியே நின்னுக்கிட்டுகோபிராவ் மேலே நின்று கத்தியது அரைகுறையாகத்தான் காதில் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன் ஐந்துமாடிக் கட்டடம் மழை மங்கலில் சித்திரம் போலத் தெரிகிறது.

பிரும்மாண்டமான வாயில் வழியே உள்ளே இருட்டில் நுழைகிறேன். கோபிராவ் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

தீக்குச்சி உரசும் ஓசை மேலே இருபதடி தூரத்தில் ஒரு தீக்குச்சி எரிகிறது. கோபிரால் குரல் கேட்கிறது.

என்னா சார் இது! சீக்கிரம் மேலே வாங்க இந்த எடத்துக்கு லைட் போடுங்கடா போடுங்கடான்னு மூப்பனார் சேர்மனார்ந்த காலத்லேர்ந்து எழுதி எழுதிப் போட்டாச்சும்ஹ்ம்

மேலே முதல்மாடிக்கு வந்து சேர்ந்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து படிகளாவது இருக்கும். திறந்தவெளி, நூறு நூற்றைம்பதடி அகலம் முன்னூறு  முன்னூற்றைம்பதடி நீளம் உள்ள திறந்த மாடி அதில் நடுவில் வளைவு வளைவாக கமான் வளைவுகள் வைத்துக் கட்டி பெரிய கட்டடம். சுவரில் ஒரு பல்பு எரிந்துகொண்டிருக்கிறது. கதவைத் திறந்தார் ராவ். பெரிய பெரிய அறைகள்

பின்ன என்ன சார்!? நானும் இந்தக் கட்டடத்ல வாட்ச்மேனா ரெண்டு மாமாங்கத்துக்கு மேலே இருக்குறேன் . என்னா பாருங்கஇவ்வளவு பெரிய கட்டடத்ல நானும் தாவீதுப் புள்ளையும்தான் இருந்தோம்போனவாரம்…. நீங்க இஞ்ச மாத்தலாயி இந்த ஆபீஸ்க்கு வர்றதுக்கு சரிய்யா மூணு நாள் முந்தி செத்துப் போய்ட்டாருஅவரு போனதுக்கப்பறம் இஞ்ச யாரு வர்றா? ராத்திரி எட்டு மணியாச்சுள்ளா அல்லு அயல் எல்லாம் ஜாடா அடங்கிபோயிடுது.  எனக்கும் வயசார்சில்ல சார்கண்ணு சரிய்யா தெரிய மாட்டேங்கிதுஇருட்லஎதாவுது தெரியாம எசகேடா எங்கியாவுது கால வெச்சா ….என்னா ஆகும் சார்மொத்தம் அஞ்சு மாடி இருக்குமூணுமாடிலை ஆபீஸ் வெச்சிட்டாங்கமேலே மஹாராஜா குடும்பத்ல ஆளுங்க இருக்கராங்க.. ராத்திரியில் கீழே நான் வாச்சுமேன், மேல தாவீதுப்புள்ள இப்ப அவரும் இல்லநானே பாத்துக்க வேண்டிருக்குதினம் எரணத்தம்பது படி ஏறி இறங்க வேண்டிருக்கு லைட்டு இல்லாம்….”

நீண்ட நீண்ட மேஜைகளை இழுத்துப்போட்டு படுக்கை தயாரித்திருந்தார். கோபிராவ்.  வந்து இந்த ஆபீசில்    வேலை ஒப்புக்கொண்டு ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. மிஞ்சிப் போனால் கூட இரண்டு நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம். அதற்குள் அப்படி ஓட்டி ஓட்டிப் பழகினார் வாட்ச்மேன் கோபிராவ். அவருக்குச் சொந்த ஊர் தஞ்சாவூரேதான். எனக்கும் சொந்த ஊர் இதே ஊர்தான் என்று கேட்டதும் ராவ் கட்டித்தழுவாத குறைதான். பேச்சு பேச்சு ஓயாத பேச்சு பேசாவிட்டால் ராவ் உயிரோடு இருக்கமாட்டார் என்றே தோன்றும்.

என்ன சார் மழையையே பாத்திகிட்டு இருக்கீங்க? ஊதக்காத்து ஒடம்புக்காகாது சார் வாங்க இப்டி!”

ஆமா ராவ் அந்த தாவீது புள்ளேன்னிங்களேஅவரும் இங்கேயே வேலை பார்த்தாரா என்ன?”

ந்தா வந்துட்டேன் சார்..” ஆபீஸ் அலமாரியைத் திறந்து பிளாஸ்க் ஒன்றை எடுத்தார். பெரிய பிளாஸ்க். இரவு முழுவதும் அடிக்கடி எழுந்து வென்னீர் சாப்பிடும் பழக்கம் ராவிடம் இருந்தது. தூங்கமாட்டார் ரால், எப்போது கூப்பிட்டாலும் உடனே குரல் கொடுப்பார். படுத்துப் புரண்டு கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். எழுபது வயசு இருக்கலாம் தலையெல்லாம் சுத்தமான பஞ்சுநரை இருந்தும் அயர்ந்து உட்காரமாட்டார். பகல் முழுதும் ஆபீசில் பியூன் வேலை ஓயாது பைல்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு டேபிளாக கொடுப்பதும் வாங்குவதும் காபி வாங்கப்போவதும் பாங்கு தபாலாபீஸ் பி. டபுள்யு.டி. -ஆபிஸ் போவதும் ஹெட் கிளார்க்குக்கு சுறிகாய் வாங்கப் போவதும் எனக்கு சீருடை செய்வது உள்பட கோபிராவ் அயர்வதில்லை.

என்னா கேட்டங்க? தாவிதுப்புள்ளையா? ம்ஹும்! என்னத்தைச் சொல்றது சார். சாவுற வரைக்கும் மன்ஷனுக்கு அவனோட மதிப்பு தெரியறதில்ல. செத்த பின்னாடி ரொம்ப தெரியுது. என்னா பண்றது.”

என்ன சொல்றீங்க கோபிராவ்?”

ஆமா சார், நீங்க சின்ன புள்ளெ! இந்த வயசுலேயே ஆபீசராயிட்டீங்க இந்த கட்டடத்தோடயே கெடந்தாரு தாவிதுப்புள்ளெ. என்னடாது இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்ன்னுட்டு யோசிக்காதீங்க சார். தாவீது பிளைக்கி என்னா வயகன்னே எனக்கே தெரியாது. சார் கேட்டாக்கூட வயசாமஹ்ன்னு நீட்டிக்கேட்டுப்ட்டு சிரிச்சிக்கிட்டே போய்விடுவாரு. சுறுப்பா குள்ளமா மிஞ்சிப்போனா அஞ்சடிக்கி மேல இருக்கமாட்டாரு சார்? ஆனா இந்த அஞ்சுமாடிக் கட்டடம் முழுசுக்கும் அவர் ஓர்த்தர்தான் வாச்சுமேன், நான் கீழ படுத்துக்கெடப்பேன், ராத்திரி ரெண்டு மணிக்கு டாண்னுட்டு கீழ வந்து என்னெ எழுப்புவாரு சார். ரெண்டுபேருமா ஒருக்காமேல வரைக்கும் போயி எல்லா ரூம்புலையும் சுத்தி சர்ச் பண்ணிப்ட்டு கீழ வந்து படுப்போம். உச்சிமாடில நெறய ஆந்தையும் கோட்டானும் கூடுகட்டிகிட்டு இருக்கு சார். ராத்திரியெல்லாம் கோட்டான் போடற சத்தம் பயங்கரமாயிருக்கும். உஷ் உஷ் உஷ் உஷ்ன்னுட்டு கூகெவேற பேசிகிட்டே இருக்கும். “

என்ன ராவ் தாலீதுப்பள்ளையெப் பத்திக் கேட்டா, ”

ஸ்ஸ்ஆமா சார்ஏங்கிட்ட இது ஒரு தொல்லசார். எதையோ கேட்டா…. எதையோ பத்தி ஒளரிக்கிட்டுருக்கேன்ல? என்னா பன்றதுஇப்டீ…. பேசிப்பேசி பழக்கமாப் போச்சுதாவிதுப்புள்ள இந்த கட்டடத்துல வாட்ச்மேனா வந்ததுயாரு ஆபிசராருந்தப்போ ம்ம்ரெங்கசாமி அய்யிங்காரு காலத்துலதான்ஆமா அவரு ஆபிசராருந்தப்போதான் சார். அப்ப அருளானந்தசாமி நாடார்  சிபாரிசுலதான் தாலிதுப்புள்ள வேலைல சேர்ந்தது. மொதல் நாளே என்னமோ என்னெ அவருக்குப் புடிச்சுப்போச்சு. நானும் வேலைக்கி சேர்ந்த புதுசுநீங்கள்ளாம்…. அப்ப சின்னப்புள்ளையா இருந்திருப்பீங்கஎனக்கு புதுசா கல்யாணம் ஆயிருந்தது. அஞ்சுநாள் கல்யாணம்ஏக தடபுடல் பண்ணாங்கராத்திரி ட்யூட்டி எனக்குஎன்னா பன்றதுகல்யாணம் ஆகி ஒண்ணற மாசம்தான் ஆயிருக்குபகல்ல வீட்டுக்குப் போனாக்கூட பொண்ணு கண்ணெக் கசக்குச்சு . ஆனா கரைக்கட்டா ஏழற மணிக்கெல்லாம் ஆபீசுக்கு ராத்திரி படுக்க வந்துடணும்ன்னுட்டு ரெங்கசாமி அய்யிங்காரு சொல்லிட்டாரு. தட்ட முடியுமாபகல்ல ஒண்ணும் பண்ண முடியாதுஊட்ல எல்லாரும் இருப்பாங்கஒண்ணும் பேசக்கூட முடியாதுநீங்க சின்னப்புள்ள ஓங்க கிட்ட போயிஇதல்லாம் சொல்லப்படாது…”

சொல்லணும்ன்னு ஆரமிச்சாச்சுசொல்லீட்றேன் தாவிதுப்புள்ளைக்கிந்த விஷயம் தெரிஞ்சிதுன்னுதான் நெனைக்கிறேன்ஒருநாளு வீட்டுக்குப் போனேன் சார்… – எல்லாரும் கொல்லையிலே இருந்தாங்க இவ… … ஏம் பொன்ஜாதிஉள்ளறையிலே இருந்திருக்கா.. எனக்குத் தெரியாதுஉள்ளற போய்ட்டேன்அவ்வளவுதான் அவளாவே கதவர் சாத்தி தாப்பா போட்டுட்டா…”

அப்பறம்?”.

அப்பறம் என்ன சார் நெஞ்சில் உளுந்து ஒரே அழுக ஒரே புடிவாதம்நசநசன்னுட்டுபெரிய்ய தொல்லையாப் போச்சு! ஜன்னலோட சேத்து ஒக்காரவெச்சு என்னெபெரிய்ய கஷ்டம் சார்என்னா சார் சிரிக்கிறீங்கஎன்னடா கெழவன் இதப்பத்தியெல்லாம் ஞாபகம் வெச்சிட்டு இருக்கானேன்னுட்டா? எனக்கு கொஞ்சம் இது ஜாஸ்திதான் சார்…. அதனாலதான் சார் புள்ளையே இல்லஎன்னோட வாழ்க்கையிலியே பெரிய கஷ்டம் அதுதான் சார்பத்து பதனஞ்சு வருஷமாஅவளும் உடல்லநானும் உடல்ல.. என்னா பண்றது சார்எல்லா டாக்டர்ட்டியும் போயாச்சுஅவ தொந்தரவுக்காகத்தான் சார் வீட்டுக்கே போறது! இல்லேன்னாக்க போகவே மாட்டேன். தாவீதுப்புள்ளெதான் தானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்னு சொல்லி கல்யானம் ஆன புதுசுல விட்டுக்கு என்ன அனுப்புச்சுடுவாரு. போகல்லேன்னாக்கூட ஆனாப் புள்ளமட்டும் உண்டாகவேயில்லை. என்ன செய்யிறதுன்னு எனக்கும் தெரியல்ல அவளுக்கும் தெரியல்ல சார். –”

தாவீதுப்புள்ள சொன்னாரு புண்ணிய கேந்திரதுக்கெல்லாம் போய்ட்டு வந்தா புள்ள உண்டாகும்ன்னு. சரின்னுட்டு நானும் அவளுமா பொறப்ட்டோம். ஒரு மாசம் வீவு எடுத்துக்கிட்டு நெறைய்ய செலவு பண்ணி காசிக்கெல்லாம் கூடப் போனோம். கோலாப்பூர் பூனா பூரியெல்லாம் சுத்துனோம். காசு ஏதுடாங்கறீங்களா? அப்படிக் கேளுங்கதாவீது புள்ளே இருந்தாரே அவருதாங் குடுத்தாரு….”

நாங்களெல்லாம் ராஜா குடும்பத்தெச் சேர்ந்தவுங்க சார்பான்ஸ்லே ராஜா சாஹெப் சிவாஜி தென்னிந்தியாவுக்கு வந்தப்போ அவரோட வந்தவங்க நம்ப முன்னோருங்க ஆனா இப்பொ எல்லாம் போச்சு சார்.. என்னா பண்றது?…. சார்…”

தாவீது புள்ள இருந்தாரேஅவருக்கு குடும்பமா மண்ணா ஒண்ணும் கெடயாதுதனி ஆளு!  இங்க வந்தப்புறம் இங்கயேதான் இருந்தாருமாடி ஆபீசுலதான் அவர் பெட்டி இன்னமும் கெடக்கு. ஒரு வீட்ல பதனஞ்சு ரூபா குடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. வேற செலவு ஒண்ணும் கெடயாது. குடிப்பாரு, அதுவும் ஒரு எடத்துல பத்துவரவு வெச்சுக்கிட்டு இருந்தாரு. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் முழிச்சுக்குவாரு. பைப்படில ஆபீசுக்குள்ளறயே குளிச்சுப்புட்டு எண்ண தேச்சு நல்லா மினுங்கமினுங்க தலைசீவிக்குவாரு. புஸ்தகம் ஒண்ணு வெச்சு இருந்தாரு.. பைபிள்காலைல  மொதல் வேல அதுதான். அப்புறம் டேபிள் எல்லாம் தொடச்சு, கூட்ற பொண்ணு வர்றவரைக்கும் இருந்து கூட்டச்சொல்லி, பானைக்கெல்லாம் தண்ணி ஊத்திப்புட்டு ரெடியா ஆபிஸைத் தெரந்து வெச்சுகிட்டு இருப்பாரு.”

மணி எட்டரை ஆகீடும். நான் அப்பதான் ஆபீசுக்கு போவேன் ஒண்ணுமே சொல்லமாட்டாரு. என்னைக்காவது ஒருநாள் என்ன கோபிராவ் இன்னைக்கி தங்கச்சி இப்பதான் உட்டுதாக்கும். அப்புடிம்பார்…. மத்தியானம் தாவிதுப்புள்ளை சாப்பிடப் போறப்போ நான் ஆபீஸில் இருக்கணும்ஆன அவஉடமாட்டாஅப்படி இப்புடின்னு வந்து சேந்துடுவேன் அப்பறம்தான்  சாப்பிடப் போவார் தாவிதுப்புள்ளெ”..

“…ஒருநாளு அவருடைய கல்யாணத்தெப்பத்திக் கேட்டுட்டேன் தெரியாமெஅபாரமா கோபம் வந்துடுச்சி அவருக்கு. “

தாவீதுப் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்களாம். அவரு பொள்ஜாதி பேரு ஆலீஸுன்னு சொன்னாரு. அவ பெரிய்ய பஜாரியாம் சார். ஒழுங்காயிருக்கவே மாட்டாளாம். மார்கட்டுல கடத்தெருவுல தெருமொணை இன்னும் அங்க இங்க எங்கப் பாத்தாலும் எவனோடயாவது பேசிகிட்டு இருப்பாளாம். ஆவீக இப்படிச் சுத்தறதையும் அலையறதையும் தாவீதுப்புள்ள கொஞ்சநாள் ஆனப்பறம் கண்டிச்சிருக்காருஅவ சொல்லிருக்கா பாருங்கஎங்க ஜாதீல அப்படி ஒருத்தி சொன்னா அவளே அங்கியே வெட்டிப் போட்டுடுவோம்… ”வேணும்ன்னா நீயும் யாரையாவுது புடுச்சுக்கையேன். நான் அப்படித்தான் சுத்துவேன்னாளாம்.”

தாவிதுப் புள்ளைக்கும் கொழந்தை பெறக்கவேயில்லஆமா.. ஒரு வருஷத்துக்குள்ள சிலோனுக்கு எவனோடேயோ ஓடிப்போய்ட்டாளாம்…”

தாவீதுப்புள்ள தூக்குப்போட்டாக் கூட லேசில உசிர் போகாது. அப்பேர்ப்பட்ட ஒடம்பு சார் தாவீதுப்புள்ள! கரணை கரணையா கண்டு கண்டா ஓடம்பு அழகா எப்படி இருப்பாரு பயில்வான் மாதிரி என்னா பண்றது. அவரையும் ஒருத்திக்கி புடிக்கல்ல! அவங்கம்மா அவரெ கல்யானாம் பண்ணிக்கச் சொல்லி ரெண்டாவது தடவெ தொந்தரவு பண்ணியிருக்காங்கஎன்னால பொம்பள இல்லாம இருக்க முடியும்ன்னு சொல்லி முடியாதுன்னுருக்காரு அந்தம்மாவுக்கு மகனெப் பாக்க சகிக்கல்ல. தனியா சமைச்சு மகனுக்குப் போட்றதும் வர்றதும்…. சன்யாசி மாதிரி மகன் இருக்கறதும் அந்தம்மானால் பாக்க முடியாமஒருநாள் அந்தம்மாளும் போய்ச் சேந்தாங்கஞாயித்துக்கெழம தவறாமல் சர்ச்சுக்குப் போவாரு "

ஒரு நாள் நாங்கூட ஆவீசப் பாத்தேன் சார்அதாவது அவ ஓட்றதுக்கு ஒரு மாசத்துக்கு மிந்தி! அவளெப் பார்க்கவே பயமாயிருந்தது சார், எவ்வளவு பெரிய கண்ணு தெரியுமா சார். ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது. ஆனா ஒரு பொண்ணு இவ்வளவு தெளிவா அழகா வெளியில் சுத்தினாக்க யாராலையும் சும்மா இருக்க முடியாதுதான்னு அவளைப் பார்த்தப்போ தோணிகிட்டே இருந்தது சார்! நிறையவே அவளுக்குத் தலைமுடிசார் கருள் சுருளா! அதுக்குப் பின்னால அவளெ மாதிரிப் பொண்ணு எவளையும் நான் பார்க்கவேயில்ல சார்! அன்னைக்கி ராத்திரி தாவீதுப்புள்ளெ சொன்னாரு சார

கோபிராவ்! ஆலீசு அப்டி ஓடிப்போனத்துக்கு அவ காரணமில்ல! நான்தான் காரணம்! ஆலீசு கேட்ட தெக் குடுக்க என்னால முடியல அவ என்ன கேட்டா? தெரியல்ல எதையோ அவ கேட்டா நான் குடுக்க முடியல்ல! எனக்குத் திராணியில்லை! அதனால்தான் அவ அப்டி ஆயிட்டா மஹ்ம்! எல்லா இடத்திலயும் இதான் விஷயமே! இங்க மட்டுமில்ல எங்கியும் இதேதான்”.

என்ன இப்டிச் சொல்றீங்கன்னேன். அதுக்கு அவரு சொன்னாரு

கோபிராவு! எனக்கு இன்னமும் ஏன் அவமேல கோபம் வருது? இன்னமும் அவளெ வெச்சுகணும்ங்கற ஆசதானே காரணம். அவ சொன்னதுல என்ன தப்பு? இன்னமும் இதெல்லாத்தையும் என்னால் உட முடியல்லியேன்னு புலம்பினாரு. நீ கேட்ட உடனே ஒம்மேல கோபம் வருது பாத்தியா கோபிராவு!”

எதுக்கு கோபம் வரணும்ன்னு ஏதேதோ பேசிகிட்டே இருந்தாரு. பாதி துக்கம் வர ஆரமிச்சிட்டது. அன்னிக்கு அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்குப் பின்னாலதான் சார் வௌங்குச்சு. ஏராளமா பாங்கிலே சேத்துவெச்ச அவர் சம்பளப் பணத்துலதான் எங்களுக்கு புண்ணிய கோத்திரத்துக்கெல்லாம் போய்ட்டுவரச் சொல்லிக் குடுத்தனுப்பிச்சாரு. காசி, பூரி, பம்பாய், பூனா எல்லாம் போனோம்.”

திரும்பி பூனாவிலிருந்து வந்து சேர்ந்த ரெண்டு மூன்று மாசத்துக்கெல்லாம் நம்ம ஊட்ல கொழந்த உண்டாயிருக்குன்னு தெரிஞ்சுபோச்சு, பேயாயிருந்தாள்ள சார்!? மனுஷியா மாறிப் போனா சார்! மந்தரம் பண்ண மாதிரியிருந்துது சார் எனக்கு கொழந்த உண்டாயிருக்குன்ன  ஒடனே எங்க சொந்தக்காரங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம் சார்! எனக்கு மட்டும் புரியவே இல்ல சார்! ரொம்பக் கொழம்பிப்போனேன்

என் அப்படி ஆச்சு ராவ்?” – நீண்ட நேரத்துக்குப் பின்னால் நான் கோபிராவைப் பார்த்துப் பெருமூச்சுடன் கேட்டேன்.

ஏன் அப்டின்னு கேக்கறீங்களா?” – மீண்டும் அதே கேள்வியைத் திருப்பி என்னிடமே கேட்டார் கோபிராவ். மேலே முகட்டைப் பார்த்தபடி ஏதோ யோசித்தார். நிச்சயமாக மேலே பார்த்தார். வெளியே இன்னும் மழை விடவில்லை. கோடையில் இப்படி மழை பெய்வது ஆகாது என்பார்கள். மழையில் இந்த பெரிய பழைய கட்டடம் குளித்துக்கொண்டிருந்தது. இன்னமும் மௌனமாய் இருந்தார் ராவ், நான் தொடங்கிவிட்டேன்.

நீங்க மட்டும் ஏன் ஓங்க கொழந்தையை…”

ஆமா சார்! எதையோ கேட்டீங்க இப்டி சொல்லிக் கிட்டே வந்துட்டேனாஇப்ப சொல்ல முடியல்லா நானு பதினைஞ்சு வயக வரும்போதெல்லாம் எங்க குடும்பம் பெரிசாத்தான் இருந்துது.… நான்தான் கடைசி. நான் தலையெடுக்கும் போது குடும்பமே படுத்துப் போச்சு! எல்லாத்தையும் வித்து கட்டு தின்ன வேண்டி ஆச்சு. கடைசில பொழப்புக்கே வழியில்லாமத் தானே மானம் மரியாதைக்கஞ்சி  இந்த வாட்சுமேன் உத்தியோகத்துக்கு வந்தேன்…”

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ராவ்!” – என்றேன் புரியாமல். வெளியில் மழை நின்றிருந்தது.

எனக்கே இன்னக்கி வரைக்கும் சந்தேகம்தான் சார். எனக்கும் புரியத்தான் இல்லை. புரிஞ்சமாதிரியும் இருக்கு ஆனா என்ன செய்யிறதுன்னு தெரியாததுனாலியே நான் ஒன்னும் செய்யலே!”

என்னது?”

ஆமாம் சார்! கொழந்த பெத்துக்க முடியலியேன்னுட்டு ஆத்திரமா அலஞ்சாள்ள சார் நம்ப வீட்டுக்காரி? அப்பவெல்லாம் வீட்ல ஓயாத சண்ட தான் சார் இப்ப சாதுவா சொன்னத்துக்கு மறுபேச்சு பேசமாட்டேங்கிற கெழவிஅன்னைக்கி எப்படி அப்டி பத்ரகாளியா இருந்தான்னே என்னால சொல்ல முடியல சார். அப்டி அடிக்கடி நாங்க ரெண்டு பேரும் சண்டெ போட்டுகிட்டா நாலஞ்சு நாளைக்கு வீட்டுக்கே போக மாட்டேன் சார்! நம்ப வீட்டுக்காரி பொறப்பட்டு நேரா ஆறு ஏழு மணிக்கி தனியா நம்ப தாவீதுப்புள்ளைகிட்ட வந்து எல்லாத்தியும் சொல்லி ஒரு மொரை வெச்சு ஒரு அழுக கூப்பாடு திட்டு எல்லாம் வப்பா அவரும் கொஞ்சம் கொஞ்சமா புத்தி சொல்லுவாரு அப்ப நான் அங்க போகவே மாட்டேன் போனா பெரிய கூச்சல் ரப்சர்தான் போங்க. நம்ம ஊட்டுக்காரி இருக்காளே அவ சரியான லண்டியா இருந்தா அந்தக் காலத்துல. அசாத்தியமான தைரியம்…”

தாவீதுப்புள்ளை கூட சொல்வாரு. பாவம் ஏந்தான் இந்த பச்சப்புள்ளையெப் போயி அடிக்கிறயோ? முதுகுல அப்படியே சப்புன்னி பதியிற மாதிரியா அடிக்கிறது? அடிச்சது அப்புடியே செவசெவன்னு கன்னிப்போயிருக்கேம்பாரு…. –”

நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன். வேற யாராயிருந்தாலும் ஒனக்கென்னாடான்னு சுளீர்ன்னு குடுத்துடுவேன். ஆனா தாவிதுப்புள்ளை கிட்ட மட்டும் என்னமோ ஒரு பயம் பாசம் எல்லாம் வந்துடும். அவளையும் வெச்சுகிட்டே என்னெ மொட்டுவாரு. இனிமே இதுமாதிரியெல்லாம் செய்வியான்னு எங்கிட்ட கேப்பாரு. இனிமே இல்லம்பேன். அவ சிரிப்பா நானும் சிரிப்பேன். தாவீதுப்புள்ளையும் சிரிப்பாரு. தாவீதுப்புள்ளைன்னா எங்க வீட்ல எல்லாருக்கும் மரியாத ஜாஸ்தி. எல்லா விசேஷத்துக்கும் எங்க வீட்டுக்கு சாப்டக் கூப்பிடுவோம். நம்ப ஊட்டுக்காரி அவருக்குன்னு எல்லாம் தனியா எடுத்து வெச்சிருப்பா….”

எங்களுக்கு கொழந்த இல்லா குறையைப் போக்க டாக்டர்கிட்ட கொண்டுபோயி அவளையும் என்னையும் டெஸ்ட் பண்ணிக்கச் சொல்லி கூட்டிகிட்டுப் போயி எல்லாம் பாத்ததுகூட தாவிதுப்புள்ளைதான். டாக்டர் எனக்குப் பிள்ளை பெறக்காதுன்னு சொன்னதும் தாவீது புள்ளைக்கித்தான் தெரியும். வேற என்னைத்தவிர எங்க வீட்டுலியோ அவளுக்கோ தெரியாது. அவளுக்கு கர்ப்பம் உண்டாயிருக்குன்னு கேட்ட உடனே குழப்பமாயிருந்தது. வேற ஒரு லேடி டாக்டர் கிட்ட அவளைக் கொண்டு போயி காட்டினேன் அவங்களும் அதே ஷி  இஸ் கேரியிங்ன்னுதான் சொன்னாங்க….”

அப்பறம்!?” – நான் பரபரத்தேன் அமைதியான குரலில் லேசாக சொன்னார் கோபிராவ் என்னவோ போல இருந்தது.

எனக்குப் பிள்ளை பிறக்காதுங்கறது எனக்கே உறுதியா நல்லாவே தெரியும். இருந்தாலும் பெறக்கப்போறது என் குழந்ததான். எனக்கு குழந்தையே பெறக்காதுன்னு உறுதிப்படுத்திக்க எனக்கே பயம்மாயிருந்தது. சே! என்ன இது? என்னோட கொழந்தைதான் என்று தட்டிக்கொடுத்து கிட்டேன் அவ கழுத்தெ நெறிச்சுக் கொன்னா என்னன்னுட்டு வந்தது அடுத்தாப்லஎனக்கே இன்னைக்கி நெனச்சாலும் வெக்கமா இருக்கு சார் –”

அந்த நேரத்துல வேற ஏதோ சண்டைய சாக்கா வெச்சிகிட்டு வாயும் வயிறுமா இருக்கிறப்போ ஒருநாள் அவளெ அடிச்சிருக்கேம் பாருங்க என்னா அடிங்கிறீங்க கீழ போட்டு அந்த வயித்துலேயே மிதிச்சேன்! ஒடம்பு பூரா குங்குமமா செவந்து போச்சு அவளுக்கு. ஆனா யாருன்னு நானும் கேக்கல சார்! அவளும் சொல்லை ரெண்டு பேருக்குமே தெரியும்!! ரெண்டு பேருக்குமே பயம்! நான் ஏன் சார் கேக்கணும்? அவதான் என் சொல்லணும்?”

அடுத்த ரெண்டுநாள்ள அவளுக்கு கொழந்த பெறந்துடுச்சு, குழந்தையைக் கையிலே வாங்கினேன். மருத்துவச்சி சொன்னான்: ‘குழந்தை தாயெ உரிச்சுகிட்டு பொறந்திருக்குன்னு’ ”.

சார் சும்மா சொல்லப்படாது. இப்ப ஏம்பையன் மாயவரம் தாலுகா ஆபீஸில் வேலை பார்க்கிறான். மாசாமாசம் நூறு ரூபா வீட்டுக்கு அனுப்புறான். கல்யாணம் நம்ப ஜாதியிலேயே பெரிய எடம் பொண்ணு. ஒருநாள் கல்யாணம்தான். நம்ப தாவீதுப்புள்ளெ கூட இருந்து நடத்துனாரு. அவரு இருந்த வரைக்கும். தாயும் புள்ளையும் என்னேத் தங்கமாத் தாங்குனாங்கன்னு சொல்வாரு சார். எனக்கு என்னா சார் கவலை, ஒரே ஒரு கவலைதான்தாவீதுப்புள்ளை நம்பகூட இல்லியேங்கறது ஒண்ணுதான் போங்க

நான் வைத்த கண் வாங்காமல் கோபிராவையும் அவர் பளபளக்கும் விழிகளையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த முகத்திலேதான் என்ன மிளிர்ச்சி

ரொம்ப நேரம் என்னெனமோ பொலம்பியிருக்கேன் சார்! இந்தப் பேச்சு ஒண்ணுதான் சார் என்னால் அடக்க முடியல மன்னிச்சுக்குங்க சார்! இதல்லாம் சொல்லமாட்டேன் சொல்லீட்டேன்…. என்ன பண்றது?. சாகும் போது தாவீது புள்ளெயிட்ட யாருமே இல்ல சார், செந்தபின்னால் கூட அவரச் சேர்ந்தவுங்கன்னு யாருமே வரவேயில்ல.”

யாருமே வரல்லியா?”

யாரு வந்தா என்ன வராட்டி என்ன சார்நானே போயி மிஷின் தெருவுல சொல்லி பாதிரியாரெக் கூட்டிக்கிட்டு வந்து நானே சவப்பெட்டி செய்து செலவெல்லாம் செய்து ஜாம் ஜாம்னு சடங்க ஒண்ணும் தவறாமே செஞ்சேன் சார்!…”

குழிக்குள்ள அவரெ வெச்சப்ப நானும் ஏம்மகன் ராஜாராமுந்தான் நின்னோம் ரொம்பநேரம்…”

இந்த அஞ்சுமாடிக் கட்டடத்துல நானும் அவரும் மாத்திமாத்தி சுத்தினப்போ எங்களுக்கு ஒரு ஆறுதல். இப்ப கூட ராத்திரி ரெண்டுமணி அடிச்சா எனக்கு அடிவயத்தையெல்லாம் கலக்குது சார்! முப்பது வருஷம் சார் இந்த பாழடஞ்ச கட்டெடத்தெ பூதங் காக்கிறமாதிரி நான் கீழ அவர் மேல காத்திட்டு இருந்தோம். இப்ப நான் மட்டும்! தனியா சுத்துறேன்!”….

நான் என்னை அறியாமல் அவர் தோள்களில் பார்வை செலுத்தினேன் அது குலுங்கிக்கொண்டிருந்தது

சிறிதுநேரம் மௌனமாய் கழிந்தது.

நான் அதிகாரியானேன் கோபிராவ் வாட்ச்மேன் ஆனார்!

மழை விட்டுப்போச்சா பாருங்க ராவ்!”

விட்டுப்போச்சு சார்! நாம போயி எல்லாம் சரியா இருக்கான்னுட்டு ஒரு தடவை பாத்துட்டு வந்துட்றேன் சார். மணி ரெண்டு ஆச்சு நீங்களும் படுங்க

லாந்தர் விளக்கை கொளுத்தியபடி கண்களைத் துடைத்துக் கொண்டு அந்த மனிதன் ஆடி ஆடி படிகளில் மூன்றாவது மாடிக்குப் போவதை பார்த்துக்கொண்டே நின்றேன்.

வெளியே மொட்டை வராந்தாவுக்கு வந்தேன். மழை சுத்தமாக நின்றிருந்தது. மேலே நிமிர்ந்து கட்டிடத்தைப் பார்த்தேன். இருளில் வானளாவ  தின்றது அந்தப் பழைய கட்டிடம்.

ஐந்தாவது மாடியில் லாந்தர் வெளிச்சம். குச்சியால் டக் டக் டக் என்று தட்டும் ஓசை தொடர்ந்தது.

(அங்கிள் – 1971)

பின்னுரை

அடங்காக் காமம் கொண்ட இரு பெண்கள். ஒருத்தி பட்டவர்த்தனமாக சோரம் போகிறாள். மற்றொருத்தி ஒருவனிடம் மட்டுமே

அந்த ரகசியத்தை கடைசி வரை இரண்டாமவள்  வெளியிடவில்லை. கணவர்கள் இருவரும் ப்ரம்மச்சாரிகளாக, வாட்ச்மேன்களாக நோக்கிக்கொண்டு இருக்கின்றனர். கற்பு காமத்திடம் தோற்று விட்டது.

15 கருத்துகள்:

  1. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த, ரவுடியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். //

    சக போலீசார் காயமடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் - சக போலீசார் மற்றும் காயமடைந்த போலீஸ்காரர்கள் என்று வரணுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலம் மனிதனைத்

    நின்றுகொண்டிருந்தது//

    நின்று - தின்று

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போது//

    ஏதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து முடிப்பதற்குள் தெரியாமல் பப்ளிஷ் ஆகிவிட்டது.

      //ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போது//

      ஏதேனும் ஒன்று போதுமோ அதைப்பற்றி அல்லது இதைப்பற்றி?

      கீதா

      நீக்கு
  4. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் மனதை மிக மிக நெகிழ்த்திய வார்த்தைகளால் விவரித்திட முடியாத செய்தி அந்த அற்புத மனிதன் சாடியோ மானே செனகல் செய்திதான்.

    அவரைப் பாராட்டிட வார்த்தைகளே இல்லை. மனதார வாழ்த்துவோம்! இப்படியான நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் வாழ்வதற்கு.

    இதை வாசிக்கறப்ப ஏனோ மனதில் நம்ம அரசியல் வியாதிகள் இடையில் வந்து தொலைக்கின்றனர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. தஞ்சை பிரகாஷ் எழுத்தாளர் பற்றி கொஞ்சம் தெரியும். அவரது எழுத்து அறிமுகம் உண்டு.

    இந்தக் கதையில் இரு ஆண்களின் வேதனையான தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. தாவூதின் வாழ்க்கை கோபிராவின் வாழ்க்கையை விட மோசம் தான்.

    ஆனாலும் கதை மனதை ஈர்க்கவில்லை. கதைக்கரு அல்ல காரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஜெ கே அண்ணா,

    கணவர்கள் இருவரும் ப்ரம்மச்சாரிகளாக,//

    இதில் தாவீது மட்டும் தான் அடக்கம். கோபிராவ் இல்லை. கதையின் வரிகளில் பார்த்தால் தெரியும்.

    //மற்றொருத்தி ஒருவனிடம் மட்டுமே. அந்த ரகசியத்தை கடைசி வரை இரண்டாமவள் வெளியிடவில்லை.//

    ரைட்டு.

    ஏனோ கதை மனதைத் தொடவில்லை. கதாபாத்திரங்கள் உணர்வுபூர்வமாக மனதுக்குள் ஒட்டவில்லை. ஆண்கள் என்பதோ கதைக்கருவோ காரணமல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 'கதைசொல்லி' என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு எரிச்சலாக வரும். எழுத்தாளன் கதாகாலட்சேபம் செய்பவர் போன்ற கதைசொல்லி அல்ல. அவன் எழுத்தில் தன் கற்பனையை வடித்துக் காட்டுபவன்.

    தி.ஜா., எம்.வி.வி., கல்கி, அகிலன், ஜெகசிற்பியன், இந்துமதி, சிவசங்கரி, சாண்டில்யன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி --- எல்லோரும் வெற்று கதைசொல்லிகளா? இது அடுக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைச் சொல்பவன் கதைசொல்லி. எழுத்தில் வடிப்பவன் எழுத்தாளன். ஓவியன், சிற்பி என்பது போல். இப்படி அர்த்தம் கொள்ளலாம் அல்லவா?
      கேரளத்தில் தற்போதும் "காதிகன்" என்ற கதைசொல்லிகள் உண்டு. கிட்டத்தட்ட மோனோஅக்ட் போல.
      Jayakumar

      நீக்கு
    2. என்னுடைய வாதம் என்ன்வென்றால் எம்விவி கதை சொல்லி அல்ல. எழுத்தாளர்.

      எஸ்.ரா. ஜெயமோகன்,
      சாரு -- இவர்கள்

      நீக்கு
    3. (தொடர்ச்சி)

      எஸ்.ரா., ஜெயமோகன் சாரு -- இவர்களையெல்லாம் கதைசொல்லி என்று
      அழைப்பீர்களென்றால் அதில் ஏதும் ஆட்சேபம் இருக்காது என்பதே

      நீக்கு
  8. ஆடம்பரமே வறுமை.... செனகல் என் மனதைக் கவர்ந்துவிட்டார்.

    அஞ்சுமாடி கட்டடம் கதைச் சுருக்கம் கவர்ந்தது. இத்தகைய சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை கதைகளில் மாத்திரமே படிக்க முடியுது.

    பதிலளிநீக்கு
  9. 'காலம் மனிதனைத் தின்று கொண்டிருந்தது ........ இன்னொரு கற்பனை மனிதன்'. இது என்ன கவிதையா? வியாழக்கிழமை ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. பாராட்டிற்கு உரியவர்கள் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!