திங்கள், 19 ஆகஸ்ட், 2024

"திங்க"க்கிழமை : சுட்ட கத்தரிக்காய் சட்னி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 சாதாரணமாய் கத்தரிக்காய் சட்னி செய்வதைக்காட்டிலும் இப்படி கத்தரிக்காய்களை சுட்டு அவற்றை வைத்து சட்னி செய்வது மிகவும் சுவையாக இருக்கும். 

கத்தரிக்காய் கொத்ஸும் இப்படி செய்யலாம். பொன்னிறமாக நல்லெண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கும் தோசைக்கு இந்த சட்னி அத்தனை ருசியாக இருக்கும். ‘ முத்தபல் ‘ என்னும் அரேபிய சாலட் இந்த சுட்ட கத்தரிக்காயை வைத்து செய்யும்போது அதன் ருசி பிரமிக்க வைக்கும். இங்கெல்லாம் அரை கிலோ அளவுக்கு ஒரு கத்தரிக்காய் கிடைக்கும். அதில் தான் சுட்ட கத்தரிக்காய் பதார்த்தங்கள் நான் செய்வது. 

கத்தரிக்காய் ஊருக்கு ஊர்நாட்டுக்கு நாடு வேறு படும். ருசியும் வேறு படும். தஞ்சையில் கிராமப்புறங்களிலிருந்து சந்தைக்கு விற்பனைக்கு வரும் பிஞ்சு கத்தரிக்காய்களின் ருசியே தனி!


இனி சட்னிக்கு போகலாம்!!

சுட்ட கத்தரிக்காய் சட்னி

தேவை:

நடுத்தரமான கத்தரிக்காய்கள்-4

நடுத்தரமான தக்காளி-5

பெரிய வெங்காயம்-1

வற்றல் மிளகாய்-4

புளி- நெல்லிக்காயளவில் பாதியளவு

தேவையான உப்பு

நல்லெண்னெய் – 5 மேசைக்கரண்டி

செய்முறை:

கத்தரிக்காய்களை நெருப்பில் சுட்டெடுத்து அவை ஆறியதும் மேல் தோல்களை நீக்கி சதையை எடுத்து வைத்துக்கொள்ளவும்.



2 மேசைக்கரண்டி எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுட வைத்து கடுகு தாளித்து ஒரு சட்னி கிண்ணத்தில் கொட்டிக்கொள்ளவும்.

அதே வாணலியில் பாக்கியுள்ள எண்ணெயைக் கொட்டி அது சூடானதும் வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கவும்.

அடுத்து மிளகாயைப்போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.




பின் அரிந்த தக்காளி துண்டுகளைப்போட்டு புளியையும் போட்டு மிதமான தீயில் தக்காளி குழையும் வரை வதக்கியெடுத்து ஆற வைக்கவும்.

முதலில் மிளகாய்புளிவதக்கிய தக்காளி பாதியளவு சேர்த்து நன்கு அரைக்கவும்.

அதன் பின் உப்புசுட்ட கத்தரிக்காய்பாக்கியுள்ள தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தாளித்து வைத்துள்ள கிண்ணத்தில் கொட்டி கலக்கவும்.

 

47 கருத்துகள்:

  1. கத்திரிக்காய் சட்னியாவது? -- என்று திகைத்தேன்.

    ஒ.. இதை கத்திரிக்காய் பஜ்ஜி என்று பெயர் சூட்டி சென்னை பகுதிகளில் அழைக்கிறார்கள். கத்திரிப்பூ கலரில் பருத்து பெரிதாய் இருக்கும் கத்திரிக்காய்கள் இதற்காகவே வாய்த்தவை.

    சட்டென வேறொரு நினைவு வந்து சிரிப்பு வழிந்தது.

    சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணனின் அந்தக் காலக் கதைகளில் கத்திரிக்காய் என்றொரு கதாபாத்திரம். குண்டாய் இருக்கும் சிறு பையன். அவனுக்கு அண்ணன் மாதிரி மாணிக்கம். வஹாப் போலீஸ் ஆபிஸர். சங்கர்லால் மனைவி பெயரும் சமையல்காரர்
    பெயரும் மறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! இந்திரா -- மறக்கலாமோ இந்தப் பெயரை!

      மாது! மனிசிலே ஆயி!

      சேதி கேட்டோ சேதி கேட்டோ
      சேட்டன் சொன்ன சேதி கேட்டோ!

      நீக்கு
    2. மர்ம மனிதன் என்று நினைவு.  மாதுவே குற்றவாளி ஆகி அரெஸ்ட் ஆகி விடுவார்.

      நீக்கு
  2. சுட்ட கத்திரிக்காய் சட்னி பலரும் பலவிதத்தில் எ பி யில் எழுதி விட்டனர். ஆனாலும் மறைந்த கோவை கந்தசாமி ஐயா எழுதிய பதிவு மட்டும் தற்போதும் நினைவில் வருகிறது.
    சட்னி பற்றி எழுதிய நீங்கள் கொஸ்துவிற்கும் சட்னிக்கு உள்ள 6 வித்தியாசங்களையும் கூறியிருக்கலாம். படங்கள் நன்றாக உள்ளன. சட்னியும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
      சட்னிக்கும் கொஸ்துவிற்கும் பெரிய வித்யாசங்கள் எல்லாம் இல்லை! கொஸ்து சாம்பார் மாதிரி தளர இருக்கும். சட்னியை வதக்கி அரைக்க வேண்டும். கொஸ்து அபப்டியே அரைக்காமல் சாம்பார் மாதிரி செய்வது!

      நீக்கு
  3. சுட்ட கத்தரி சட்னி பற்றி இரண்டு நாட்களுக்கு முன் பேசிக்கொண்டிருந்தோம். உறவினர் வீட்டில் செய்தது நன்றாக இருந்தது என்று சொன்னார். விரைவில் செய்துபார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் நெல்லைத்தமிழன்! புளி மட்டும் புதுப்புளி என்றால் அளவை சிறிது குறைத்துக்கொள்ள வேண்டும்!

      நீக்கு
  4. சிறப்பான செய்முறைக் குறிப்பு..

    கத்தரிக்காய் சாப்பிட்டு மூன்று வருடங்கள் ஆகி விட்டன.,

    இப்போது ஒத்துக் கொள்வதில்லை..

    இதற்குப் பயந்து கொண்டே வெளியில் சாப்பிடுவதும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

      நீக்கு
  5. ///இப்படி கத்தரிக்கய்களை சுட்டு///

    காலில் சுட்டு விட்டீர்களே...

    ஸ்ரீராம் கவனிப்பாராக..

    பதிலளிநீக்கு
  6. தஞ்சாவூர் சமையலில் கத்தரிக்காயை விடுத்து -

    விருந்து இல்லை...

    பதிலளிநீக்கு
  7. தஞ்சாவூர் கத்தரிக்காய் ரொம்ப ஸ்பெஷல்.  குறிப்பாக சந்தையில் கம்மா கத்தரிக்காய் என்று கிடைக்கும்.  அருமம்ம்மியாக இருக்கும்.  தஞ்சாவூர் கத்தரிக்காயின் ருசி வெளியூர் கத்தரிக்காய்ளில் கிடைக்காது.  ஹோசூர் கத்தரிக்காய் கொஞ்சம் மேட்ச் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தஞ்சையில் சந்தையில் தான் கத்தரிக்காய்கள் வாங்குவேன். சாலையோரம் மாலை நேரங்களில் கிராமங்களிலிருந்து வரும் கத்தரிக்காய்களை விற்பார்கள்! சீக்கிரம் அவை போட்டி போட்டுக்கொண்டு விற்பனையாகி விடும். என் சினேகிதி ஒருவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். கீரைத்தண்டு, கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு இவையெல்லாம் ருசிக்கு மன்னார்குடிக்கு அப்புறம் தான் எல்லாம் என்று எப்போதுமே சொல்லுவார்! அது உண்மையும் கூட!!

      நீக்கு
    2. நான் எப்போதுமே தஞ்சையில் உழவர் சந்தையில் தான் கத்தரிக்காய் வாங்குவேன். அதுவும் மாலை நேரங்களில் சாலையோரம் கிராமங்களிலிருந்து வரும் கத்தரிக்காய்களை கூறு கட்டி விற்பனை செய்வார்கள். அவை அத்தனை ருசியாக இருக்கும்!! என் சினேகிதி மன்னார்குடியை சேர்ந்தவர். எப்போதுமே கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, கீரைத்தண்டு இவையெல்லாம் மன்னார்குடியை அடித்துக்கொள்ள முடியாது என்பார்!!

      நீக்கு
    3. சமீபத்தில் நான் மன்னார்குடியில் சில நாட்கள் தங்கினேன். மாலை 4 மணிக்கு புத்தம் புதிதாக கீரைகள், ஏராளமான வியாபாரிகள் சைக்கிளில் கொண்டுவருவார்கள். அதுபோலவே அங்கு பார்த்த புடலங்காய் (ஒல்லியாக சிறியது), கத்தரி.... விலையில் பெங்களூர் மாதிரியே அதே விலைதான்... ஆனாலும் நிச்சயம் ருசி நன்றாக இருக்கும். எங்களுடன் வந்திருந்தவர்களில் சிலர் அங்கு காய்கறி வாங்கினார்கள், பெங்களூர் திரும்புவதற்கு முன்பு. நான், எதுக்கு சுமக்கணும் என்று வாங்கவில்லை

      நீக்கு
  8. // இங்கெல்லாம் அரை கிலோ அளவுக்கு ஒரு கத்தரிக்காய் கிடைக்கும். //

    இது செயற்கைக் கத்தரிக்காய் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது செயற்கையாக செறிவூட்டப்பட்ட கத்தரிக்காய்!

      நீக்கு
    2. அப்படி இல்லை. இந்த கத்திரிக்காய் நல்ல கருநீல நிறத்தில் பூச்சி, புழு இல்லாமல் முற்றலும் இல்லாமல் பைங்கண் பர்த்தா
      ​என்ற வட இந்திய சைடு டிஷ் செய்யப் பயன்படுவது.

      நீக்கு
    3. இது பிடி கத்தரி. வெளிநாடுகளிலும் இதுதான் கத்தரிக்காய். 300 கி முதல் 90 கிராம் எடை இருக்கும். விதையில்லாத்து.

      நீக்கு
    4. இன்றைக்கு எனது குறிப்பை வெளியிட்டுள்லதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
    5. இந்த மாதிரி பெரிய கத்தரிக்காயெல்லாம் பெரிய அளவில் [ ஒரு கத்தரிக்காய் அரை கிலோ அளவுக்கு] இங்கேயே அமீரகத்தில் பண்ணைகளில் விளைவித்து விற்பனைக்கு வருகிறது! புழுக்கள் இருப்பதில்லை. ஆனால் பெரிய பெரிய விதைகளும் சிலவற்றிலும் இருக்கும். இவற்றில் இந்த மாதிரி சட்னிகள், வறுவல், அரேபிய குறிப்புகள் செய்யலாம். சாம்பாருக்கெல்லாம் லாயக்கிலை!

      நீக்கு
    6. ஸ்‌ரீராம் ஆமாம் அது Genetically modified கத்தரிக்காய்தான்.

      அது போல நல்ல பள பளன்ன்னு மழு மழுன்னு நீட்டமா ஆழ்ந்த வயலட் கலரில் வருதே அதுவும் அப்படியானதுதான்.

      ஆனா இப்ப வர கத்தரிக்காய்களில் எது GM வகை எது நாட்டுக்காய்ன்னு தெரியலை. விதைகள் உட்பட!

      வீட்டில் வளர்க்கலாம் என்றால் விதைகளும் GM ஆகி வருகின்றன!

      கீதா

      நீக்கு
    7. இது செயற்கை கத்தரிக்காய் இல்லை ஸ்ரீராம்! இங்கே அரேபியர் நிறைய பேர் பண்ணையில் காய்கறிகள் விளைவிக்கிறார்கள். அப்படித்தான் இந்த கத்தரிக்காயும் இங்கே விளைவது தான்! சட்னிக்கும் வறுவலுக்கும் சில அரேபிய உணவுகள் செய்யவும் பயன்படுகிறது. மற்றபடி சாம்பாருக்கெல்லாம் இதை உபயோகிக்க முடியாது! சில சமயம் விதைகளே இல்லாமலும் சில சமயம் பெரிய பெரிய விதைகளுடனும் இங்கே கிடைக்கும்!!

      நீக்கு
    8. நாங்க 74 ஆம் வருடத்திலேயே அரைக்கிலோ அளவுப் பெரிய கத்திரிக்காயைப் பார்த்துப் பிரமித்திருக்கோம். பிடி கத்திரிக்காய், செயற்கைக் கத்திரிக்காய் எல்லாம் இதன் பின்னரே வந்தவைனு நினைக்கிறேன். வடக்கே பெரிய பெரிய கத்திரிக்காய்களைக் கீறிக்கொண்டு (நாலைந்து இடங்களில்_ அதன் உள்ளே கீறிய பச்சை மிளகாய், கீறிய பூண்டை வைத்து மூடி விட்டுத் தணலில் சுட்டெடுத்து பைங்கன் பர்த்தா செய்வார்கள். அநேகமாகப் பஞ்சாப், ஹரியானாவில் இப்படிப் பண்ணிப் பார்த்திருக்கேன். அந்த ருசியே தனி.

      நீக்கு
    9. //அந்த ருசியே தனி.// இவங்க யாரு புதுசா? கேள்விப்பட்ட பேராவும் இருக்கு. ஆனால் இந்தத் தளத்தில் கடந்த சில வருடங்களாகப் பார்த்த நினைவே இல்லையே

      நீக்கு
    10. ஹாஹா, அடிக்கடி பார்க்கலைனாலும் எப்போவானும் பார்த்திருப்பீங்க

      நீக்கு
  9. கத்திரிக்காயை சுட்டு பதார்த்தங்கள் செய்வது எஜிப்தியர்களின் இறக்குமதி.

    பொதுவாக க.காய் பிடிக்காத எனக்கு இவர்களது செய்முறை பிடித்து போனது.

    முத்தபல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
      //கத்திரிக்காயை சுட்டு பதார்த்தங்கள் செய்வது எஜிப்தியர்களின் இறக்குமதி.//
      கத்தரிக்காய்களை அந்தக்காலத்திலேயே, அதாவது என் பாட்டி காலத்திலேயே நெருப்பில் சுட்டு மிளகாய், புளி வைத்து அம்மியில் அரைத்து சட்னி செய்வார்கள் கில்லர்ஜி! அது அத்தனை ருசியாக இருக்கும்!
      ' முத்தபல் ' எனக்கு மிகவும் பிடித்தமானது. அடிக்கடி செய்வேன். பொதுவாக ஐந்து நட்சத்திர விடுதியில் கூட இதை பக்குவமாக செய்வதில்லை! எங்காவது ஒரு உணவகத்தில் தான் அப்படியே செய்வார்கள்!

      நீக்கு
  10. //கத்திரிக்காய் சட்னியாவது? -- என்று திகைத்தேன்.//
    எதனால் ஜீவி அவர்களுக்கு திகைப்பு?
    சுட்ட கத்தரிக்காயை வைத்து நிறைய சட்னிகள் செய்யலாம். அதோடு அதை வைத்து கொஸ்து வகைகளும் செய்யலாம். இட்லி, தோசைக்கு சுவையான பக்கத்துணைகள் இவை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா நிறைய செய்யலாம்.

      வட இந்தியாவில் பெய்ங்கன் பர்தா செய்வாங்களே!

      என் பாட்டி புளிக்கோசு என்று செய்வாங்க சிம்பிள். எபியில் வந்த நினைவு!

      கீதா

      நீக்கு
  11. ஆஹா மனோ அக்கா சூப்பர் ரெசிப்பி!

    நம்ம வீட்டுல சுட்ட கத்தரிக்காய் சட்னி / துவையல் ரொம்பப் பிடிக்கும்

    சாதத்தில் கலந்து சாப்பிடவும் செய்யலாம் இப்படிச் செய்யறப்ப நம்ம வீட்டுல சாதத்திலும் பிசைந்து சாப்பிடுவதுண்டு!

    இன்னொரு முறை துவையலாக தக்காளி இல்லாம க பருப்பு, உ பருப்பு வறுத்துப் போட்டு மற்றபடி சேம் செய்யறதையும் சாதத்தில் பிசைந்து சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
      தக்காளி இல்லாமல் செய்வது மிக பழமை கால ரெசிப்பி! அம்மியில் அரைத்து கடுகு உ.பருப்பு, சின்ன வெங்காயம் வதக்கி தாளிப்பார்கள் என் பாட்டி!

      நீக்கு
  12. முத்தபல் - Muttabal - மத்திய கிழக்கு நாடுகள் லெபனான் அரேபியா செய்முறை நல்லாருக்கும் மனோ அக்கா நான் செய்ததுண்டு. அதில் Tahini எனும் எள் சாஸ் பயன்படுத்துவதுண்டு. ரொம்ப நல்லாருக்கும். இதுவும் செய்த போது ஃபோட்டோ வீடியோ எடுத்து வைத்து ஹூம் எழுதவே இல்லை!

    அது போல அவகேடோ பயன்படுத்தி மெக்சிக்கன் வகையும் செய்ததுண்டு நம்ம ஊர் சட்னி யும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் இந்த தஹிணி சாஸ் கிடைக்கும். நாமே வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

      நீக்கு
  13. சுட்ட கத்தரிக்காய் சட்னி சூப்பர். இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்.

    சாதத்துக்கு நாங்கள் பச்சைமிளகாய் சிறிது தேங்காய் சேர்த்து அரைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி மாதேவி!
      மிளகாய் வற்றலுக்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்து செய்தாலும் ருசி அருமையாகத்தான் இருக்கும்!

      நீக்கு
  14. வட இந்தியாவில் இந்த கத்திரிக்காய் வைத்து தான் சப்பாத்திக்கு தொட்டுக்கையாக Bபேங்கன் கா Bபர்த்தா செய்வது வழக்கம். நானும் செய்வேன்.

    சட்னியாகவும் நன்றாகவே இருக்கும் என்று தெரிகிறது. முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வெங்கட்!
      பைங்கன் பர்த்தா நன்றாக இருக்கும்! ஆனாலும் அது சில இடங்களில் தான் ருசியாக இருக்கிறது என்பது என் கணிப்பு! நீங்கள் தில்லி வாசி என்பதால் நீங்கள் செய்யும் முறை நிச்சயம் அருமையாகத்தானிருக்கும்!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில், தங்களின் சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்முறை விளக்கங்களும், படங்களும் அருமையாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். கத்திரிக்காயின் பல தினுசுகளைப்பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு முறை தங்கள் செய்முறைப்படி செய்கிறேன். பதிவுக்கு வந்த அனைவரின் கருத்துக்களும் நன்றாக உள்ளது. முன்பு கரி அடுப்பில் சுட்டு அம்மி, கல்லுரலில் அரைத்து செய்வோம்.

    முத்தபல் என்ற உணவின் பெயர் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்த சமையல் முறையையும், அவசியம் ஒரு தடவை வெளியிடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!
    Moutabal salad இங்கே அரேபியர் உணவில் ஒரு dip ஆக pita breadக்கு பக்கத்துணையாக பரிமாறப்படுவது.
    விரைவில் தங்களுக்காக ' முத்தபல் ' சாலட் [ Moutabal ] குறிப்பை எங்கள் பிளாகிற்கு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கத்திரிக்காய் துவையல், கத்திரிக்காய் சட்னி எல்லாம் நாங்களும் செய்வோம். என் தம்பி, மனைவி, மருமகள் எல்லாம் சுட்டு செய்வார்கள்.
    நான் வதக்கி அரைத்து செய்வேன். சுட்டு செய்வதுதான் அதிக ருசி.
    மனோ உங்கள் செய்முறை குறிப்பு, படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!