செவ்வாய், 28 நவம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாளா? கீதா ரெங்கன் - சீதை 29


     சீதை ராமனை மன்னிக்கும் தொடரில் தனது  இரண்டாவது படைப்பைத் தருகிறார் கீதா ரெங்கன்.



     உங்களுக்குத் தெரிந்த கதையும், விஷயங்களும் தான். என் சிறு வயதில் கேட்ட ராமாயாணத்தில், பருவவயதில் கேள்விகள் பல தோன்றியது. அப்போது நான் பள்ளியில் 10 ஆம் வகுப்பு. மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டி நடந்தது. நடத்தியவர்கள் புராணங்களையும், கலாச்சாரத்தையும் வெகுவாகப் போற்றுபவர்கள் என்றாலும் யாரென்பதை இங்குத் தவிர்க்கிறேன். போட்டி தொடங்க இருந்த சமயத்தில்தான் தலைப்பு கொடுத்தார்கள்.  

     “ராமன் சீதையை காட்டிற்கு அனுப்பியது தர்மமா?” என் அப்பாவழி தாத்தா, பாட்டி சொன்னதை வைத்தும், அந்த வயதில் எழுந்த என் கேள்விகளின் அடிப்படையில் எழுதினேன். வியப்போ வியப்பு! முதல் பரிசு! இக்கதையில் அதன் ஒரு பகுதியும், பின்னர் நான் வாசித்து அறிந்தவற்றின் அடிப்படையில் எழுந்த கேள்விகளும், அதன் பின்னரான புரிதலின் அடிப்படையிலும் எழுதியதே இது. தவறு இருந்தால் திருத்தி விளக்கங்களும் தந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 

==================================================================================


சீதை ராமனை மன்னித்தாளா?!


கீதா ரெங்கன்



“பாட்டீ……ஈஈஈஈஈஈ எங்கருக்க” என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டினுள் வேகமாக நுழைந்தாள் விநோதினி.!  


“என்னாச்சு? எதுக்கு இப்படிக் கூப்பாடு போட்டுண்டே வர” என்று கேட்டபடி பாட்டி சீதா சமையலறையில் வினோதினிக்காக டிபனும், நெஸ்க்விக்கும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருக்க,. பாட்டியைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டாள் வினோதினி.


“பாட்டி, எனக்கு ஒரு ஹெல்ப். எங்க ஆர்ட்ஸ் க்ளப் இன்சார்ஜ் ஸ்ரீராம் ஸார் எங்க காலேஜ்டேக்கு ஒரு கதைப் போட்டி, “சீதை ராமனை மன்னித்தாள்”னு முடியணும்ன்ற கண்டிஷனோட அறிவிச்சுருக்கார். செலக்ட் ஆற கதைய காலேஜ் டேல ட்ராமாவா போடுவாங்களாம். ஸோ… பாட்டி பாட்டி ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல கதைக்கு ஐடியா கொடேன்.”


“இதென்ன கூத்து? சீதை எதுக்கு ராமனை மன்னிக்கணும்? ராமனோட ஜீவனே சீதைதானே! எங்க காலத்துல எல்லாம் எங்க ஆத்துக்காரர மன்னிக்கணும்னு எல்லாம் நினைச்சுக் கூடப் பாத்ததில்ல. இப்பல்லாம் சின்ன விஷயத்துக்குக் கூட அத்துண்டு போறதுகள். அதான் இப்படிக் கொடுத்துருக்கார் போல.”


“ ஏன் பாட்டி உன் கதையையே கூடக் கொடுக்கலாமோ!”


“என் கதை காலேஜ் டே ட்ராமாவுக்கு தோதுப்படாது.”


“ம்ம்ம் அப்ப, எனக்கு சின்ன வயசுல நீ சொன்ன, அதே உத்ரகாண்ட ராமாயணத்தை சொல்லு. இடையில நான் உங்கிட்ட கேள்வி கேப்பேன். அதுக்கு நீ கரெக்டா பதில் சொல்லணும். என் வழில எழுதிக்கறேன்.”.


“நான் வேலைய முடிச்சுட்டு வரேன். நீயும் கைகால் அலம்பிண்டு சாப்பிடு. உக்காரலாம்.” அது சரி சீதை ராமனை மன்னித்தாள்னு எப்படி முடிக்கப் போறா என்று எண்ணியபடியே பாட்டி வேலையை முடித்துவிட்டு வர, வினோதினியும் தயாராகிட பாட்டி சொல்லத் தொடங்கினார்.


வனவாசம், போர் எல்லாம் முடிந்து சீதையை மீட்டு, வெற்றி வாகை சூடி கோசலை ராஜ்யத்தில் அரியணை ஏறிய சீதாராமனின் பட்டாபிஷேக விழா வெகு சிறப்பாக முடிந்ததன் சுவடுகள், ராஜ்யம் முழுவதும் அதைப் பற்றிய பேச்சுகள், பிரமிப்பு, மகிழ்ச்சி எல்லாம் பல மாதங்கள் கடந்தும் நீடித்திருந்தது. இப்படி ராஜ்யமே பெருமையாகப் பேசியதும் கூடக் கண் திருஷ்டியானதோ? ஏதோ ஒரு சலவைத் தொழிலாளி, ‘தானாக இருந்தால் மாற்றான் வீட்டில் இருந்த மனைவியை ஏற்றிருக்க மாட்டேன்’ என்று சொல்லியது ராமனின் காதுவரை எட்டித் தொலைக்க வேண்டுமா? 

சீதாராமன் அயோத்திக்குத் திரும்பிய போது எழுப்பப்படாத கேள்விகள் பட்டாபிஷேகம் முடிந்து, ராமனின் சிறப்பான ஆட்சியில் நாடே மகிழ்வுடன் இருந்த போது, அதுவும் பல மாதங்கள் கடந்த பின் தான் எழும்ப வேண்டுமா? விதி என்பது இதுதானோ?


ராமன் வேதனையுற்று முடிவெடுப்பது பற்றி தவித்தான். சிந்தித்தான். சீதை பட்டத்தரசி! மனைவி! தானோ நாட்டின் குடிமக்களை முதன்மையாக நினைத்து அவர்களின் குரலுக்குச் செவி சாய்க்கும் அரசன்! தர்மசீலன்! சத்யசீலன்! நீதிமான்! ‘கர்ப்பிணியாக இருந்த சீதை, தான் வனத்திற்குச் சென்று வனவாசத்தின் போது உதவிய முனிவர்களுக்கு எல்லாம் அன்பளிப்புகள் வழங்கி அவர்களுடன் தங்கியிருந்து நன்றிக்கடன் ஆற்றிட விரும்பி தன்னிடம் அனுமதி கோரினாளே!’ ராமனின் மனம் அதைச் செயல்படுத்த நினைத்தது! தன் சகோதரர்களை அழைத்து, சலவைத் தொழிலாளி சொல்லியதைச் சொல்லி, சீதையை அனுப்பிட முடிவு செய்திருப்பதாகச் சொன்னான். லக்ஷ்மணன்தான் அதைச் செய்யப் போவதாகவும் அறிவித்தான். லக்ஷ்மணனோ மனம் துடித்துவிட்டான். ஆனால், ராமன் இடும் கோட்டினை தம்பிகள் தாண்டாதவர் ஆயிற்றே!


இந்த இடத்தில் வினோதினி நிறுத்தினாள்!


“ஏண்டி குழந்தே நிறுத்திட்ட? பாத்தியா ராமன் லோகத்துக்கே உதாரண அரசன். ஹனுமான் கூட ராமசரிதம் எழுதி, தன் மூச்சாக இருக்கும் தன் பிரபுவைப் பத்தி எழுதற தகுதி கூடக் கிடையாதுனு சொல்லி கடலுக்குள்ள போட்டுட்டாராம்!….பார் எப்பேர்ப்பட்டவன் அந்த ராமச்சந்திர மூர்த்தி”


“பாட்டி! எல்லாம் சரிதான்! அந்தச் சலவைத் தொழிலாளி ராமனைத்தானே சொன்னான்? ராமனுக்கு ஒற்றன்தான் வந்து சொன்னான். அப்போ சீதையைக் காட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி ராமனே அந்தச் சலவைத் தொழிலாளியை அவைக்கு அழைச்சு ‘நீ சொன்னது உண்மையா? ஏன் அப்படிச் சொன்னனு” கேட்டிருக்கலாம். சரி ராமனே நேரடியா கேட்டான் அப்படின்ற வெர்ஷனை எடுத்துண்டாலும், அந்த வண்ணானை அவைக்குக் கொண்டு வந்து கேட்டிருக்கலாமே! தர்மசீலன் ராமன்! ஏன் செய்யலை?”


“எந்த பங்கமும் இல்லாத கற்புக்கரசி அவனுக்கு மனைவி, நாட்டின் அரசி! வண்ணானை அவைல பேசவிட்டு, பதில் சொல்லி எப்படி சீதையை அவமதிப்பான்? அது அவளுக்கு அவமானம் இல்லையா? அதனாலதானே ராமன் ராஜதர்மப்படி, தன் சுயமகிழ்ச்சி முக்கியம் இல்லைனு சீதைய அனுப்பறான்?”


“ஹான்!. அப்படி வா! எந்த பங்கமும் இல்லாதவள்னு தெரியுந்தானே! அப்படினா அந்தச் சலவைத் தொழிலாளியோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சீதையை அனுப்பினது மட்டும் அவமானமில்லையா? அதுக்குப் பதிலா, சீதை சும்மா வரலை. அக்னிப்ரவேசம் செஞ்சு தன்னை நிரூபிச்சுதான் இங்க வந்தானு சொல்லிருக்கலாமே! அதுக்கு எத்தனை சாட்சிகள் இருந்தது! ஒரு இம்மெச்சூர் வண்ணான் ஏதோ உளறினான்னு ஒரு மெச்சூர் அவதார புருஷர் இப்படி ஒரு முடிவு எடுக்கலாமோ? ஸோ…. ராமன் தான் ரொம்ப நேர்மையான மக்கள் அரசன் அப்படின்றத ப்ரூவ் பண்ண தன் மனைவியைக் கூட வேதனைப்படுத்துவான் இல்லையா? ராமன் காட்டுக்குப் போனப்ப, ராமன் மட்டும் போனா போதும்னு வஸிஷ்டர் சொன்னாலும், தானும் கணவனோடு போறதுதான் தர்மம்னு சீதை முன்னால போனாளா இல்லையா? அதே போல இப்ப ராமனும் தன் தம்பிகள்கிட்ட நாட்டை ஒப்படைச்சுட்டு சீதையோட காட்டுக்குப் போயிருக்கலாமே! தர்மம் தர்மம்னு நீ ஜஸ்டிஃபை பண்ணற. ஆனா சீதைய அனுப்பினது மட்டும் எப்படித் தர்மம் ஆகும்? பாட்டி, ஐ ஆம் ஸோ ஸாரி பாட்டி! என்னால ஏத்துக்க முடியலை…”


“ராமன் அவமானப்படுத்தலைடி குழந்தே!. அவன் விளக்கியிருந்தா தன் மனைவிக்கு சப்போர்ட் பண்ணறான், பாரபட்ச்சம்னு பழி வந்திருக்கும். ராமனும் தன் தம்பிகள ஆளச் சொல்லிட்டு சீதையோடு போகத்தான் நினைச்சான். ஆனா ராமன்தான் ஆளனும் அதுதான் தர்மம்னு போக முடியலை. பின்ன ராம ராஜ்யம்னா என்னனு உலகத்துக்குத் தெரியணுமே! ஒரு அரசன் எப்படி இருக்கணும்னு ஒரு கணவனா இல்லாம, நாட்டு பிரஜைகள மதிச்சு எடுத்த முடிவு! சீதையை காட்டுக்கு அனுப்பிட்டு எப்படித் தவிச்சான் தெரியுமா? அஸ்வமேதயாகம் பண்ண போது, சீதையைச் சிலையா வடிச்சு வைச்சு…..நாட்டுக்கும் அது வழியா சேதி  சொன்னானே! நான் என் மனைவிய சந்தேகிக்கலை, அவள்தான் என் ஜீவன்னு... பாவம் ராமன்.”


“சரி பாட்டி உன் வழியிலேயே வரேன். வண்ணான் சொன்னது சரியில்லைனா அதுக்கு மதிப்புக் கொடுத்திருக்கக் கூடாது. சரி அவன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ராஜதர்மம்! தன் முடிவுதான் சரி, அப்படினு சீதையை அனுப்பிட்டான். அப்ப தவிச்சுருக்கக் கூடாது! நீதானே சொல்லிருக்க பாட்டி, பார்வதி சிவனிடம் உலக தர்மம் என்னனு கேட்டப்போ சிவன் சொன்னாராம் ராமதத்வம், அதாவது ராமராஜ்யம்னு! அப்படி ராமராஜ்யம்னு நாம சொல்லிப் பெருமப்படற அவர் ஆட்சில, அந்த உலக தர்மத்துல மனைவினு நினைக்காம ராஜாவா எடுத்த முடிவுனா, சீதையும் நாட்டு பிரஜைதானே! இப்படி ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அனுப்பறது மட்டும் தர்மமாகுமா? அப்போ நீதி, தர்மம் எங்க போச்சு? எவனோ ஒரு கூறுகெட்ட வண்ணான் சொன்னத ஜஸ்டிஃபை பண்ணறா மாதிரி ஆயிடறதுல்லையா? அது மட்டும் சீதைக்கு அவமானமில்லையா? ராஜாவா? கணவனா? அப்படின்ற நிலைக்கிடையில அங்கயும் இல்லாம இங்கயும் இல்லாம எதுக்கு இந்தக் குழப்பம்? வண்ணான் மட்டும்தானே கமென்ட் அடிச்சான். மெஜாரிட்டி சீதை பக்கம்னுதானே அர்த்தம்.”


“இதுதான்! பகவானே மனுஷ ரூபத்துல வந்தாலும் இப்படித்தான் மனுஷ வாழ்க்கை! இப்படித்தான் தர்மம், நீதினு வரும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும்னு சொல்லறது.”


“இரு பாட்டி அதுக்கு முன்னாடி….அகலிகை மேல இருந்த மோகத்துல இந்திரன் கௌதம முனி மாதிரியே வந்து அகலிகையை ஏமாத்தினான். கௌதம முனிவர் அவள பிரிஞ்சு சமூகமும் அவள ஒதுக்கி அவ கல்லு மாதிரி வாழ்ந்தப்ப ராமன் அவ எந்தத் தப்பும் பண்ணலைனு அவளுக்குச் சப்போர்ட்டிவா இருந்து கௌதம முனியோட சேர்த்துவைச்சு சமூகத்துக்கும் புரிய வைச்சான். அதே மாதிரி சுக்ரீவன் மனைவி ரூமையை வாலி கவர்ந்தப்ப வாலியைக் கொன்னப்புறம் ரூமையை யும் சமூகமும், சுக்ரீவனும் ஏத்துக்கணும்னும் தாரைக்கும் சப்போர்ட் பண்ணி சேத்துவைச்சான். இப்படி பெண்களை சப்போர்ட் பண்ணின ராமன் தன்னோட மனைவிய ஒரு பெண்ணா நினைச்சு கூட சப்போர்ட் பண்ணலயே?”


“அந்தப் பெண்கள் எல்லாம் ராமனோட மனைவி இல்லையே. சீதையும் பிரஜைநாலும் அவனோட மனைவி! ராஜதர்மம் வேற. நீ கண்ட கண்ட வ்யாக்கியானங்கள வாசிச்சுருக்க. அதான் உன் புத்தி இப்படி எல்லாம் யோசிக்கறது. நீ இந்தக் காலத்துக் குழந்தை. ஆனா நான் அந்தக் காலம். ஒரு வேளை நான் ராமாயணத்தை நம்பறதுனால, அது கோடிட்டுக் காட்டற வாழ்க்கையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்டதுனால, ராமரை மனுஷ தெய்வமா பார்க்கறதுனால என்னால உன் மனசு ஏத்துக்கற வகைல சொல்ல முடியலைனு தோணறது…”


“அப்படி எல்லாம் இல்லை பாட்டி! ஐ ஆம் திங்கிங்க் இட் ஓவர் அண்ட் சீதையோட கோணத்துல இருந்தும் பார்க்கறேன்! முன்னாடி செஞ்சது, கர்மா, அதனால இதுனு காஸ் அண்ட் எஃப்ஃபெக்ட், அந்த தர்மம் இந்த தர்மம் அப்படி இப்படினு நீ ஜஸ்டிஃபை பண்றதுனால மனசுல நிறைய ஓடறது. எப்படி சீதை ராமனை மன்னித்தாள்னு முடிக்கறதுனு யோசிக்கறேன்”


“ரூல் போட்ட அந்த ஸ்ரீராமையே போய்க் கேளு” என்று சொல்லிவிட்டு, மாலை 6 மணி ஆகிவிட்டதால் பாட்டி சுவாமி சன்னதியில் விளக்கு ஏற்றிவிட்டு, “ராமச்சந்திரா பிரபோ! என் குழந்தைக்கு நல்ல புத்திய கொடு. அது ஏதோதோ வாசிச்சுட்டு என்னவெல்லாமோ கேக்கறது. அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…..” என்று வணங்கினாள். குழந்தே நீ இன்னும் கொஞ்சம் பெரியவளாகும் போது, உன் குழந்தைக்கோ, பேரன் பேத்திக்கோ சொல்லும் போது புரிஞ்சுப்ப”


“சரி! பாட்டி! அந்த ராமாயண ஸ்ரீராமா இல்லை எங்க இன்சார்ஜ் ஸ்ரீராமா? ஏன்னா நீ சொல்லுவ அந்த ஸ்ரீராம் தான் இந்த ஸ்ரீராம இப்படி ரூல் போட வைச்சான்னு. ஆனா ஸ்ரீராம் ஸாரோட அப்பா போட்ட கண்டிஷன் இது. தாத்தா மட்டும் இருந்திருந்தா தாத்தாகிட்ட நான் நேரடியாவே போய்க் கேட்டிருப்பேன். பாட்டி, நான் கேரளத்துல நாட்டார் ராமாயணம்னு சொல்றதுல எழுத்தச்சன் எழுதின அத்யாத்ம ராமாயணத்துல தெரிஞ்சுண்டது……..ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினப்ப சீதையோட கோணத்துல வருத்தப்பட்டது போலத்தான் எழுதியிருக்கார். எழுத்தாளர் பஷீர் கூட, வால்மீகி ராமாயணத்துலயே அப்படி வரதா சொல்றார். ராமன் மாசிலன், அறம் காப்பவன்தான் ஆனா இந்த இடத்துல மட்டும் நெகட்டிவாத்தான் சொல்லியிருக்கார்னு. பெண்ணை, பெண்மையைப் புரிஞ்சுக்காம, மதிக்காம, அரசியலையும், அறத்தையும் மட்டுமே தெரிஞ்ச ஒரு ஆண் ராமன் அப்படினு. அப்படி என் மனசுல வந்ததுதான் என் கேள்விகள். பாட்டி கவலைப்படாத ராமருக்கு நான் நல்ல குழந்தைனு தெரியும். இப்ப சீதைதான் ராமரை மன்னிக்கணும்……ஸோ நாம மீதி கதைய பாப்போம்….நான் முடிக்கப் பாக்கறேன்.”


லக்ஷ்மணன் மனதிற்குள் மிகுந்த துயரத்துடன், தன் அன்னையைப் போன்று போற்றும் அண்ணி சீதம்மாவிடம் எப்படி உண்மையைச் சொல்லுவது என்ற வேதனையுடன், தவித்தபடி சீதையை ரதத்தில் ஏற்றிக் கொண்டு ரதத்தைச் செலுத்தினான். பாவம் சீதையோ தான் கருவுற்றிருப்பதால் தன் விருப்பத்தைத் தன் பிரபு ராமன் நிறைவேற்றுகிறான் என்ற சந்தோஷத்தில் சென்றாள்.


லஷ்மணன் தங்களுக்குக் காட்டில் செய்த சேவையையும், ஊர்மிளை லக்ஷ்மணன் எடுத்த முடிவை ஏற்று, பிரிவின் துயரை மறைத்துக் கொண்டு அரண்மனையில் பெற்றோருக்குச் செய்த சேவையையும் சீதை மெச்சினாள். நித்ரா தேவி லக்ஷ்மணனின் சேவையைக் கண்டு களித்து வரம் தருகிறேன் என்று சொன்னவுடன் அதை ஊர்மிளைக்கு அருளிட அவன் வேண்ட, ஊர்மிளையோ அதை லஷ்மணனுக்கு அருளிட வேண்ட இருவரும் ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த தன்னலமற்ற அன்பினை வெளிப்படுத்தியதை சீதை பாராட்டிக் கொண்டே வந்தாள். “இந்த அன்பு நீடித்திட வேண்டும்! லக்ஷ்மணா! நீங்கள் இருவரும் நீடூழி வாழ்ந்திட வேண்டும்”


லக்ஷ்மணன் அமைதியாகத் தேரைச் செலுத்தினான். சீதையின் அன்பினை நினைத்து மனம் மகிழ்ந்து வெடித்து அழுதிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது என்றாலும் அதை அடக்குவது எவ்வளவு சிரமம் என்பதையும் உணர்ந்த வேதனையான தருணங்கள்! ஏன் இப்படி ஒரு துன்பம்? எதற்காக நிகழவேண்டும்? அதுவும் எந்தப் பாவமும் செய்யாத என் சீதாம்மாவுக்கு? என்று எண்ணிக் கொண்டிருந்தவனை சீதையின் குரல் கலைத்தது


“என்ன லஷ்மணா பதிலே இல்லை?”


“நான் என் மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய என் தெய்வங்கள் உங்கள் இருவருக்கும் செய்த சேவையும், ஊர்மிளை செய்ததும் பெரிய விஷயமே இல்லையே. அது எங்கள் இருவரின் கடமையும், எங்களுக்குக் கிடைத்த பாக்கியமுமல்லவா! அதனால்தான் அமைதி காத்தேன் தாயே”


நாட்டின் எல்லைப் பகுதி முடிந்து காட்டுப் பகுதி வந்து விட, ரதத்தை நிறுத்தினான் லஷ்மணன். சீதைக்குக் குழப்பம். “லஷ்மணா ஏன் இங்கு நிறுத்திவிட்டாய்? வால்மீகியின் ஆஸ்ரமம் இன்னும் வரவில்லையே!” லக்ஷ்மணனால் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சீதையைப் பார்க்கும் சக்தி இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு வெடித்து அழுதான். சீதை மீண்டும் குழம்பினாள்.


“லஷ்மணா எதற்காக அழுகிறாய் இப்போது? என்ன நடந்துவிட்டதென்று?” என்று வினவிட லஷ்மணன் காரணத்தைச் சொன்னதும், அதிர்ச்சி. வேதனை, குழப்பம் என்று சீதையின் மனதில் தோன்றிய உணர்வுகள் அவள் முகத்தில் தாண்டவமாடின. சீதை பேசவில்லை. தன் கற்பு மீண்டும் விவாதிக்கபப்டுகிறதே என்று நினைத்தவளுக்கு தன் உயிர் பிரிவது போன்ற உணர்வு.


“தாயே! என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு அதைச் சொல்லும் துணிவு இல்லாமல் இத்தனை நேரம் தவித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் தாயே” என்று சொல்லி சீதையை வால்மீகியின் ஆஸ்ரமத்தில் விட்டு சீதையிடம் மீண்டும் மன்னிப்பு கோரி விடைபெற்றுச் சென்றான்.


சீதை, ஆஸ்ரமத்தில் இருந்த ஆஸ்ரமத்துப் பெண்களிடம் தன் துன்பத்திற்கான காரணம், தன் பருவ வயதில், ஜோடிக் கிளிகள் தன் கதையைச் சொன்னதைக் கேட்டு ஸ்வாரஸ்யமாகி அவற்றைத் தன்னுடன் வைத்துக் கொள்ள நினைத்து, அவை தங்கள் இருப்பிடம் மலைகள், மரங்கள், என்று சொல்லி செல்ல வேண்டும் என்றிட சீதையோ கருவுற்றிருந்த அந்த அழகிய பெண் கிளியைத் தன்னுடன் வைத்திருப்பேன் என்று சொல்லி ஆண் கிளியை அனுப்பிட அப்போது அந்தப் பெண் கிளி “நீயும் கருவுற்றிருக்கும் போது உன் கணவனைப் பிரிவாய் அப்போது அந்த வலி உனக்குத் தெரியும்” என்றிட ஆண் கிளியோ கங்கையில் வீழ்ந்து மரித்திட, அந்த ஆண் கிளிதான் இப்போதைய சலவைத் தொழிலாளி அதன் சாபம்தான் இப்போதைய நிகழ்வு, .கர்மவினை என்று சொன்னாலும் அவள் மனதிலிருந்த வேதனை நீங்கவில்லை. தெய்வீக அம்ஸமான சீதையும் அப்போது மானுடப் பிறவிதானே!


லவனும், குசனும் பிறந்தார்கள். வால்மீகி அவர்களுக்குப் பல கலைகளையும், சாஸ்திரங்களையும், நன்னடத்தையையும் சிறப்பாகப் பயிற்றுவித்தார். வில்வித்தையிலும் ராமனுக்கு நிகராகத் தேர்ச்சி பெற்றார்கள்.


உலகிற்குத் தன் பலத்தையும் ஆட்சியின் உன்னதத்தையும் நிரூபித்த ராமன், சக்கரவர்த்தி என்பதை அறிவிக்க அஸ்வமேத யாகம் செய்து யாகக் குதிரையைத் தன் வெற்றிக் கொடியுடன் அனுப்பினான். அக்குதிரை வால்மீகி ஆஸ்ரமத்தின் அருகில் வரவும், லவனும் குசனும் குதிரையைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். சிறு பாலகர்கள் குதிரையைக் கட்டிப் போட்டு சவால் விட்டிருப்பதைக் கண்ட லஷ்மணன் அவர்களின் துணிவைக் கண்டு வியந்து யாரென வினவிட அவர்கள் மிகப் பெருமையுடன் “நாங்கள் ராமச்சந்திர பிரபுவின் மைந்தர்கள்” என்று சொல்லிடவும் லஷ்மணனுக்கு வியப்பு, மகிழ்ச்சி! மேலும் விவரங்கள் அறிந்ததும், வால்மீகி முனிவரின் அனுமதியுடன் அவர்களை அழைத்துக் கொண்டு அரசவைக்கு வந்தான்.


லவனும் குசனும், ராமரின் புகழைப் போற்றிட, ராமன் மகிழ்வடைந்திட, பாலகர்களும் தாங்கள் பெருமையுடன் போற்றி வந்த தங்கள் தந்தையைக் கண்டதை எண்ணிப் பேருவகை அடைந்தனர். ராமன், சீதையை உடனே காண வேண்டும் என்றிட எல்லோரும் வால்மீகி ஆஸ்ரமத்தை அடைந்தனர். சீதைக்குத் தன் பிரபுவைக் கண்டதும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சம் விம்மியது! ராமன் சீதையிடம் தன்னை மன்னித்து, அரண்மனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.


“பிரபோ! பலவருடங்களுக்குப் பிறகு உங்களை மீண்டும் கண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!  நான் நினைத்தபடி குழந்தைகள் தங்களிடமே சேர்ந்துவிட்டதை நினைத்து எனக்கு எல்லையற்ற ஆனந்தம்! உங்களையே எண்ணித் துதித்து வாழ்ந்து வந்ததால்தான் லவனுக்கும், குசனுக்கும் உங்கள் பெருமைகளைச் சொல்லி அவர்களை வளர்க்க முடிந்தது. தாங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதா?! நீங்கள் என்னை அனுப்பியதன் காரணத்தை அறிந்த போது வேதனை, அதிர்ச்சி இருந்ததுதான் என்றாலும், ஒரு நாட்டின் அரசனாக ராஜதர்மம் என்று நீங்கள் எடுத்த முடிவு அது. உங்கள் மீது தவறில்லை என்று நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குக் கோபமில்லை.” என்று சொல்லி சீதை ராமனை மன்னித்தாள்……


“பாட்டி கதைய இங்க முடிச்சுட்டேன். ஆனா, என் மனசு சமாதானம் அடையல. ஆர்ட்ஸ் க்ளப்ல இருக்கற வ்யாக்கினங்கள் நல்லா தெரிஞ்ச விற்பன்னர்கள் நல்ல விளக்கங்கள் சொல்லுவாங்கனு நினைக்கறேன். ஸோ கொஞ்சம் எக்ஸ்டன்ட் பண்ணறேன்.”


சீதை தொடர்ந்தாள். “பிரபோ! ஒவ்வொரு முறையும் பெண்ணான எனக்கு ஏற்படும் வேதனைகளை நினைத்து வருத்தம் மேலிடுகிறது. 


இன்று எந்தக் காரணத்தின் அடிப்படையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு அரண்மனைக்கு அழைக்கிறீர்களோ அதை அன்றே மக்களுக்குப் புரியச் செய்திருக்கலாமே! சலவைத் தொழிலாளி அன்று எழுப்பிய அந்த ஐயம் இப்போது மக்களிடம் நீங்கிவிட்டதா? அதே ஐயத்தின் தொடர்ச்சியாகத் தற்போது வேறுவிதமாக, குழந்தைகள் லவனையும், குசனையும் முன்னிறுத்தி மீண்டும் எழாது என்று எப்படிச் சொல்ல முடியும்? மீண்டும் மீண்டும் நான் மாசற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டியச் சூழலும், ராஜதர்மம் என்பதை நான் அறிந்தாலும், உங்கள் ஜீவனான என்னை, எல்லையற்ற அன்பை நிராகரித்ததும், உங்களை நான் குற்றப்படுத்தவில்லை என்றாலும், என் மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.


போதும் நான் பட்ட துன்பங்கள். தாங்கள் திருமாலின் அம்சம், நான் லக்ஷ்மியின் அம்சம் என அறிவேன். அப்படி திருமாலின் மார்பில் உறை இலக்குமியான நான் இப்பூமியில் ஏகபத்தினி விரதனான என் பிரபுவுடன் இத்தனை வருடங்கள் எனக்கு வாழும் பாக்கியம் இல்லாத போது இனி இந்த வாழ்க்கை தேவையில்லை. என் அன்னைக்கும் நான் படும் துன்பங்களை நினைத்து வேதனை இருக்கத்தானே செய்யும்? நான் என் அன்னையிடமே சென்றுவிடுகிறேன்” என்று சொல்லி பூமாதேவியிடம் சென்றுவிட்டாள் சீதை!


“பாட்டி இதுவும் ஒரு வகையில அந்தக் காலத்துப் "பிரிதல்" னு சொல்லலாமோ?"


"நேக்கு அப்படி எல்லாம் சொல்லத் தெரியலடி குழந்தே!"


"ம்ம்ம்ம் சரி பாட்டி பரவால்ல.......நான்  கதைக்கு வெளியே இப்படிச் சொல்லி முடிக்கறேன்”…

.
ஸோ…. சீதை மன்னித்தாளா இல்லையா? உங்கள் ஒவ்வொருவரது புரிதல்களின், விளக்கங்களின் படி உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.



----  வினோதினி 



95 கருத்துகள்:

  1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. கதைக்குள் கதை.. அருமை..
    இந்த கர்மா என்பதை புரிந்து கொண்டால் பிரச்னையே இல்லை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. ஹை! துரை செல்வராஜு சகோ! அண்ட் ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். அப்புறம் வருபவர்களுக்கும் வணக்கம்.

    கதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்....

    கணினி பாட்டி மீண்டும் தூங்கப் போகிறாள் என்று தோன்றுகிறது ஆடி வழிகிறாள்....அவளை சமாதானம் செய்து செய்து விட்டு மீண்டும் வருகிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. Naan ethutha aaramcha kathaiyum kittathatta ithe linesla thaan,,
    Ungal kathai supera irukku Geetha Rengan madam!!

    பதிலளிநீக்கு
  5. செல்லில்தான் படிச்சுண்டு வர்றேன்.

    பதிலளிநீக்கு
  6. கதையை முடித்து விட்ட பிறகு தொடங்கிய கடைசி பகுதி மிகவும் அருமை.

    பாட்டியோடு தர்க்கம் செய்த வினாக்கள் சிலருக்கு குதர்க்கமாக யோன்றக்கூடும் ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

    மாறுபட்ட சிந்தனையில்யான் வேறுபட்ட வினாக்கள் தோன்றும்.
    வாழ்த்துகள் உங்களுக்கு.... ஹி.. ஹி.. வினோதிக்கு.

    பதிலளிநீக்கு

  7. கீத வினோதினிக்கு வாழ்த்துகள்.
    எல்லோருக்கும் எழும் சந்தேகங்கள் தான்.
    ஆண் கிளி கங்கையில் விழுந்தது. பெண்கிளி என்னவாயிற்று. ராமனும் சரயுவில் அடைக்கலம் தேடினேன். சீதையின் இத்தனை கேள்விகளுக்கும் எப்பாஓது விடை கிடைக்கும்.
    அன்பு கீதா அருமையான சிந்தனை வரிகளுக்கும், அருமைப்பாட்டிக்கும் பவணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  8. துரைசெல்வராஜு சகோ! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! சரிதான் நீங்கள் சொல்லுவது கர்மவினையைப் புரிந்து கொண்டா பிரச்சனை இல்லை என்று. ஆனால் அதிலேயே பல கேள்விகள் எழுகின்றதே...என் மகன் பல கேட்கிறான். நான் என் பாட்டியிடம் கேட்டதற்கும் மேலாக அவன் கேட்கிறான். பலவற்றிற்கு என்னிடம் பதில்கள் இல்லை. அதாவது அவன் மனம் ஏற்றுக் கொள்ளூம் வகையில்.

    அவனை அபத்தமாகக் கேள்விகள் கேட்காதே என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அவனைக் குழந்தையிலிருந்தே கேள்விகள் எழுப்பு....உன் சிந்தனை விரியும் என்று சொல்லிக் கொடுத்ததானாலும்...அதே சமயம் உன் கேள்விகளைக் கேட்கும் போது விவாதமாகவோ, மூர்க்கத்தனமாகவோ, இல்லை விதண்டாவாதத்திற்காகவோ கேட்காமல் உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கேட்க வேண்டும் என்றும் சொல்லியதால்....மாற்றி யோசி என்றும்...

    நான் நல்ல விஷயங்களை, அது ராமாயணமோ, மகாபாரதமோ அதிலிருந்து கற்கவும் நிறைய இருப்பதாலும், பிற நல்ல கதைகளையும் பேரன் பேத்திகள் (வீட்டில் நிறைய இருக்கிறார்கள்!!)ளுக்குச் சொல்லி வருகிறேன். இனியும் மகன் மூலம் பெறும் வாய்ப்பும் எனக்கு அதுவரை மூச்சிருந்தாலும் சொல்லிட ஆசை. ஆனால், அவர்கள் எழுப்பும் கேள்விகள் தான்!!!

    எனவே இங்கு கீதாக்கா, ஜீவி அண்ணா, நெ த, காமாட்சியம்மா, வல்லிம்மா இப்படி உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் கருத்துகளையும் மனதில் சேமித்து வருகிறேன்....

    மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மி மா!! அட உங்களுக்கும் ஸேம் லைன்ஸ்!!! ஆம் அரபிந்தோ சொல்லியது நினைவுக்கு வருகிறது.....ஒருவர் மனதில் நினைப்பது உலகின் வேறு எங்கோ ஒரு மூலையில் இருப்பவரின் மனதிலும் எழும் என்று..(அவர் டெலிபதி என்று)

    ஆம் இது பலரது மனதிலும் எழுதிருக்கலாம்....உங்கள் கதையும் வாசிக்க ஆர்வம் எழுதுங்கள் மிமா...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு....அப்புறம் ஒன்று ப்ளீஸ் என்னை மேடம் என்று சொல்ல வேண்டாமே...கீதா என்றே சொல்லலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கரந்தை சகோ மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கு. பாட்டியிடம் வினோதினியின் கேள்விகள்...இந்தக் கான்வர்செஷனே ஒவ்வொரு தலைமுறையின் சிந்தனைகளும் மாறுபடுவதால் எழும் கேள்விகளே...அதைச் சொலல்த்தான். இதோ என் வீட்டில் இருக்கும் என்பேரக் குழந்தைகள் நான் சாதாரணமாகப் பஞ்சத்தந்திரக் கதைகளைச் சொலும் போதே கேள்விகள் கேட்கிறார்கள்! நான அவர்களை ஏய் சும்மா இரு இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்று சொல்லுவதில்லை...பொத்தாம் பொதுவாகச் சொல்லாலம், முடிந்தவரை அவர்களுக்கு நல்ல ரீதியில் அவர்கள் மனம் ஏற்கும் வகையில் சொல்லி வருகிறேன். அதனால் நானும் நிறைய கற்கிறேன். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டி நான் தேடுவதில்...

    மிக்க நன்றி கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அட! வல்லிம்மா உங்கள் கருத்தும் வந்துவிட்டதா/..நான் துரை செல்வராஜு சகோவிற்குச் சொல்லும் போது உங்களையும் சொல்லியிருந்தேனா...அந்தக் கமென்ட் போகும் சமயம் உங்கள் கமென்ட் வந்திருக்கு...

    ஆம் பலரின் கேள்விகளும் தான்...ஆம் அம்மா ஆண் கிளி கங்கையில் விழுந்தது...பெண் கிளி என்னாயிற்று? கீதாக்கா விடை சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்...இது சீதையின் கர்மா என்றால் ராமனின் கர்மா என்ன? சீதைதான் கிளியை வளர்த்தாள்.....அதற்கு ஈக்வலண்டாக ராமனுக்கு ஒரு கர்மவினை இருக்கணுமே அது என்ன? என் பாட்டிக்கும் அப்போது சொல்லத் தெரியவில்லை. ராமன் முதலில் காட்டுக்குச் சென்றது அதாவது பெற்றோரைப் பிரிந்தற்கு ஒரு கதை வரும்....வல்லிம்மா என் மகன் நிறையவே கேட்கிறான்....அதைவிட இப்போதைய சிறுவர்கள்..ஏதோ ஒரு டிவியில் ராமாயணம் ஓடுகிறதே!! அதை வைத்துக் கேட்கிறார்கள். நான் தொடரும் பார்ப்பதில்லை. சிலது நாம் கேடதைவிட வித்தியாசமாகவும் இருக்கு... அவர்களுக்குப் பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை!!!

    மிக்க நன்றி வல்லிம்மா கருத்திற்கு!! (ஹை கீத வினோதினி!!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கில்லர்ஜி வினோதினிக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு மிக்க நன்றி அங்கு விட்டுப் போச்சு!! ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தில்லையகத்து கீதா/ பாதி படிக்கையிலேயே தாரையை சுக்ரீவன் மனைவினு குறிப்பிட்டிருக்கிறது கண்டேன். தாரை உண்மையில் வாலியின் மனைவி. ருமை என்பவளே சுக்ரீவன் மனைவி. அவளைத் தான் விருப்பமில்லாமல் இருந்தவளை வலுக்கட்டாயமாக வாலி தன்னுடன் சேர்த்துக் கொண்டான். வாலி வதத்துக்குப் பின்னர் தாரை விரும்பியே சுக்ரீவனுக்கு மனைவி மற்றும் ஆலோசகர் ஆனாள். இந்தத் தாரை தான் பஞ்சகன்னியரில் ஒருத்தி எனச் சிலரும் இல்லை குருவின் மனைவி தாராதேவி எனச் சிலரும் சொல்கின்றனர். இந்தப் பஞ்சாயத்து இன்னமும் முடியவில்லை. :))))

    பதிலளிநீக்கு
  15. இனி முழுக்கப் படிச்சுட்டு மத்தது!

    பதிலளிநீக்கு
  16. அஸ்வமேத யாக சம்பவங்கள் கொஞ்சம் மாறுபடுகின்றன. லக்ஷ்மணன் வந்து லவ, குசர்களை அழைத்துச் செல்ல மாட்டான். அவர்கள் ராம காதையை கீதமாக இசைப்பதைக் கேட்டு ஶ்ரீராமனே அவர்களை அரண்மனைக்கு வரவழைப்பான். அதோடு ராமன் தன்னைக் காட்டுக்கு அனுப்புவதன் காரணம் தெரிந்தே தான் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் லக்ஷ்மணன் விட்டுச் செல்வான். அப்போது சீதை புலம்பும் புலம்பல்கள் கல்லையும் உருக்கச் செய்யும் விதம் சொல்லப்பட்டிருக்கும். இதைத் துளசி ராமாயணத்தில் நன்கு படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  17. மற்றபடி ஓர் அரசனாக நடுநிலை தவறாமல் ராமன் தன்னை விலக்கி வைத்ததை சீதை ஏற்றுக் கொண்டதில் இருந்தே அவள் ராமனை மன்னித்து விட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சீதையை விலக்கி வைத்ததற்கான தண்டனையாகவே ராமன் காட்டில் வாழ்ந்த தவ வாழ்க்கையையே அரண்மனையிலும் மேற்கொண்டு சீதையைப் பிரிந்த துக்கம் தன்னுடனேயே வைத்துக் கொண்டு வாழ்ந்தான். சீதைக்கோ, ராமனுக்கோ அவர்கள் இறை அம்சம் என்பது தெரியாமலேயே வாழ்ந்தனர். ஆகவே சீதை தன்னைத் திருமகளின் அம்சம் எனச் சொல்லிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவளின் நேர்மையையும் பரிசுத்தத்தையும் சபையோர் முன்னர் நிரூபிக்க ராமன் மீண்டும் சொல்லவே மனம் வெறுத்த சீதை பூமித்தாயே நான் மனத்தாலும், வாக்காலும், மெய்யாலும் ஶ்ரீராமனைத் தவிர வேறொருவரை நினையாதிருந்தது, இருப்பது உண்மையெனில் என்னை ஏற்றுக் கொள்வாய்! என்று வேண்டுகிறாள். பூமித்தாயும் அவளை ஏற்றுக் கொள்கிறாள். உத்திரப் பிரதேசத்தில் கான்பூருக்கு அருகிலுள்ள வால்மீகி ஆசிரமத்தில் சீதை பூமியில் புதையுண்ட இடம் இன்னமும் இருக்கிறது. என்னுடைய வலைப்பக்கம் படம் எடுத்தும் போட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  18. மிச்சம் ஏதேனும் தோணினால் அப்புறமா வரேன். ராமாயணத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் சொல்லுவதால் மீண்டும் மீண்டும் அதைப் படிக்கையில் ஒவ்வொரு சமயத்திலும் புதிது புதிதாக அர்த்தங்கள், விளக்கங்கள் கிடைக்கின்றன. மிக்க நன்றி கீதாரங்கன்.

    பதிலளிநீக்கு
  19. ஹஒயோ கீதாக்கா சரியாகச் சொன்னீங்க நல்ல காலம் சுட்டிக் காட்டியமைக்கு....சுக்ரீவன், வாலி இருவரையும் சொல்லி முதலில் திருத்தங்கள் செய்ததில் தவறிவிட்டது....அக்கா மீண்டும் மீண்டும் நன்றி. நான் எழுதியிருந்தது சுக்ரீவனின் ரூமையையும் மீண்டும் எற்றுக் கொள்ளச் செய்தது போலவும். தாரையையும் சமூகம் எற்றுக் கொளளச் செய்ததையும்....அது எனக்கு யாஹூ வருவதில் மிகவும் பிரச்சனை உள்ளது. நடுவில் கணினியிலும் பிரச்சனைகள் பல இருந்தன....அதனால் மீண்டும் திருத்தங்கள் செய்யும் போது திருத்தி விட்டு வாசித்த்ப் பார்க்க முடியாமல் இப்போது மீண்டும் ஞாயிறு அன்று ஏற்கனவெ அனுப்பியதில் சில சேர்த்து யஹூவுடன் போராடி அனுப்பியதில் அலைன்மெட்ன் மாறி வரிகள் கன்னாபின்னாவென்று மாறி....மீண்டும் வாசித்துப் பார்க்காமல் அனுப்பிவிட்டேன்...இங்கும் வாசிகக்வில்லை..ஹிஹிஹிஹி

    மிக்க மிக்க நன்றி அக்கா....ஸ்ரீராமுக்கு அனுப்பறேன்....பாவம் அவர்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. அதே போன்று லவ குசா அரண்மனைக்குப் போய் பாடுவார்கள் ராமனின் புகழை ஆம்...முதலில் நானெ எழுதியது 15 பக்கங்களுக்கு மேல் வந்துவிட்டது.....சுருக்கியதில் நிறைய சுருக்கி....வேறு சில வெர்ஷன்ஸையும் சொல்லவந்த்தால் இப்படியானது....மிக்க நன்றி கீதா அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஒரு கல்லில் ரெண்டு மாங்கான்னு சொல்லுற மாதிரி ஒரு தலைப்பில் ரெண்டு கதையா?!

    பதிலளிநீக்கு
  22. கதை, கண்டிஷன்படி முடியலையே. இருந்தாலும் வித்தியாசமான நடையுடன் கூடிய கதை. வாழ்த்துக்கள்.

    "கர்மவினையைப் புரிந்து கொண்டா பிரச்சனை இல்லை " - இதைப் புரிந்துகொள்வது கடினம். சமீபத்தில் (400 வருடங்களுக்குள்), பத்ராசலம் ராமர் கோவிலை, அரசுப்பணத்தை வைத்துக் கட்டியதற்காக, ராமதாஸை, கோல்கொண்டா கோட்டையின் தனிமைச் சிறையில் அரசன் வைத்துவிடுகிறான். 12 வருடங்கள் கழித்து, ராமர், லக்ஷமணனோடு தரிசனம் தந்து, அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய பணத்தை அரசனுக்குக் கொடுத்துவிடுகிறார். அரசனும் ராமதாசை விடுதலை செய்கிறார். ராமதாஸ், 12 வருடங்கள் சிறைப்பட்டதற்குக் காரணம், முந்தைய ஜென்மத்தில் ஒரு கிளியை 12 வருடங்கள் கூண்டில் அடைத்து வளர்த்தது என்று விளக்கம் சொல்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் எல்லோரும் தினம் தினம் செய்யும் தவறுகளுக்கு என்ன என்ன விளைவோ.

    பதிலளிநீக்கு
  23. கீதாக்கா உங்கள் கருத்துகள் அனைத்தையும் குறித்துக் கொண்டேன்....வால்மீகி ஆஸ்ரமம் அந்த பூமி இருப்பது என்று அனைத்தும் சேமித்துக் கொண்டேம் அக்கா. மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு. அதுவும் உங்கள் உடல் பிரச்சனைகள் இருக்கு அதனிடையிலும் வந்து கருத்திட்டமைக்கு. ராமாயணம் குறித்து நிறைய வெர்ஷன்ஸ் இருக்குதான் அக்கா. ஒவ்வொன்றும் ஒவ்வொன்று சொல்லுகிறதுதான்...மீண்டும் நன்றி தங்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஹா ஹா ஹா ஹா ராஜி ரொம்ப நன்றிபா கருத்திற்கு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா ஹா ஹா... நெல்லை அதான் வினோதினி சொல்லிட்டாளே முதல்ல கண்டிஷன்படி கதையை முடிகிச்சுட்டா....அப்புறம் பின் குறிப்பு போல் ஒரு நப்பாசை நல்ல விளக்கங்கள் கிடைக்கும்னு (நம்ம கீதாக்கா இருக்க பயமென் அப்படினுதான்!!! இதுஎப்புடி?!!!) எழுதினதுதான்... அந்த எக்ஸ்டென்ஷன். ஸோ பாட்டியோட மனசுலயும் கண்டிஷன்லயும் சீதை ராமனை மன்னித்துவிட்டாள்....ஆனா வினோதினியோட மனசுல தான் சீதை ராமனை மன்னிக்கலைன்ற மாதிரி அவ சிந்தனை வெர்ஷன்.....

    ஆமாம் நெல்லை கர்மா பத்தி யோசிச்சா மண்டை காயுது...அதுவும் என் பையன் ரொம்பவே என்னை காயவைப்பான்..ஸோ நான் அதன் பக்கமே போறதில்லை...எனக்குக் குருமா மட்டும்தான் தெரியும்!! ஹிஹிஹிஹி...

    ராமதாஸர் பற்றிய தகவல் சமீபத்தில் அறிந்ததுதான் நானும் என் மாமியும் (என் மாமி திருவனந்தபுரத்தில் ம்யூஸிக் அகாடமியில் 7 வருடீம் இசை கற்றுக் கொண்டவர் மிக மிக நன்றாகப்பாடுவார். செம்மங்குடி பிரின்ஸிபாலாக இருந்த சமயம். இப்போது ஃபேமஸான வித்வான்கள் பலர் அங்கு மாமிக்கு சீனியர்களாகவும், ஜூனியர்களாகவும் கற்றுக் கொண்டவர்கள். மாமி வீணை ஆன்சிலெரியாகக் கற்று நன்றாக வாசிக்கவும் செய்வார். ஆனால் இசையுலகிற்கு வர முடியவில்லை...) பத்ராசல கீர்த்தனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது 70 வயதிலும் குரல் க்ணீர். அப்போது ராமதாஸர் பற்றி சொன்னார். இந்தக் கதையையும் சொன்னார். நான் அவரிடம் கேள்விகள் கேட்கலை...ஏனென்றால் எங்கள் இருவரின் பாடும் மூடைக் கெடுத்துவிடும் என்றும் இரண்டாவது இதற்கு நீங்கள் சொல்லுவது போல் புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கு..... எனக்கு அந்த அளவிற்கு ஞானம் வரவில்லையே!!!! (சிவாஜி பாணியில்!!) மாமி புரந்தரதாஸர், துளசிதாஸர், அன்னமாச்சாரியா, ஸ்வாதித்திருநாள் எல்லார் பற்றியும் கொஞ்சம் சொல்லித்தான் அவர்களது க்ருதிகளைப் பாடிக் காட்டுவார் கற்றும் கொடுப்பார். அவரிடம் நிறைய தமிழ்க் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொள்ள. பாசுரங்களையும் மெட்டுப் போட்டுச் சொல்லித்தருவார் எனக்கு. இப்போதும் கற்றுக் கொள்ள அழைக்கிறார். கற்றுக் கொள்ள வேண்டும்....

    கதை, கண்டிஷன்படி முடியலையே. இருந்தாலும் வித்தியாசமான நடையுடன் கூடிய கதை. வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி நெல்லை....

    கீதா


    பதிலளிநீக்கு
  26. எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தாங்கள் எழுதிய கதையின் போக்கு கட்டிப் போட்டு விட்டது. ஜீவனுள்ள வரிகள். கோர்வையான Presentation. பாட்டியை படைத்த பொழுதே கதையை நகர்த்த ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்ட உங்கள் திறமை தெரிந்து விட்டது. வேறு என்னத்தைச் சொல்ல?.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ சிருஷ்டித்த கதை.
    ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை. இறைவனுக்கு விதவிதமான மாலைகளைத் தொடுத்து சாற்றி மகிழ்வது போல அந்தந்த தலைமுறைகளில் வழிவழி வந்த எழுத்தாசான்கள் தங்கள் தங்கள் கற்பனைக்கேற்ப தங்களுக்கும் தெரிய வந்த ஸ்ரீராமனின் கதையில் தங்களின் பூசனையாக தாங்கள் தொடுத்த புஷ்ப மாலையைச் சாற்றியிருக்கிறார்கள். இதில் எந்த மாலை நேர்த்தி, எந்த மாலை தொடுத்ததில் என்ன குறைபாடு என்று தோண்டித் துருவிப் பார்ப்பதில் அந்தந்த மாலை பற்றிய நமது பார்வை தான் வெளிப்படுகிறதே தவிர மாலைத் தொடுத்தவர் இந்தக் காரணத்திற்காக இதை இப்படித் தொடுத்தேன் என்று காரணம் சொல்லப் போவதில்லை. தலைமுறைக்கு தலைமுறை ஒரே கதை விதவிதமாக பார்க்கப்படுவதில் தலைமுறைகள் தாண்டி வாழும் அந்த 'கதை'க்குத் தான் பெருமை. இந்த தலைமுறை தாண்டிய விமர்சனங்களை நீங்களே அழகாக பாட்டி, பேத்தி, பேத்தியின் குழந்தைகள் என்று கதை ரூபமாக
    வரிசைப்படுத்தி விட்டீர்கள்.

    (தொடர்கிறேன்)

    பதிலளிநீக்கு
  27. http://sivamgss.blogspot.in/2013/12/3.html இங்கே வால்மீகி ஆசிரமப் படங்கள் காணலாம். 2013 ஆம் ஆண்டில் சென்றோம்.

    பதிலளிநீக்கு
  28. http://sivamgss.blogspot.in/2008/07/80.html

    http://sivamgss.blogspot.in/2008/08/81.html

    http://sivamgss.blogspot.in/2008/08/82.html

    http://sivamgss.blogspot.in/2008/08/blog-post.html

    http://sivamgss.blogspot.in/2008/08/83.html

    http://sivamgss.blogspot.in/2008/08/84.html இதை எப்போப் படிச்சாலும் அழுகை வந்துடும். எழுதும்போதும் அழுது கொண்டே தான் எழுதினேன். :)

    பதிலளிநீக்கு
  29. தில்லையகத்து கீதா! கர்மவினை குறித்து இங்கே பலரும் எழுதி இருப்பதாலும் நீங்களும் அதைக் குறிப்பிட்டிருப்பதாலும் ராமாயணத்தின் சீதை, ராமன் பிரிவுக்கும் கர்மவினையே காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். பிருகு முனிவரின் மனைவியை மஹாவிஷ்ணு வாளால் தலையைத் துண்டித்துக் கொன்றுவிடுகிறார் அல்லவா? அதற்குத் தான் பிருகு முனிவரின் சாபம் மஹாவிஷ்ணுவுக்குக் கிடைக்கும். ஆனால் மஹாவிஷ்ணுவாக இருக்கும்வரை சாபம் ஏதும் செய்யாது! ஆகவே தான் ராமாவதாரத்தில் அந்த சாபத்தின் பலனை ஏற்கப் போவதாக மஹாவிஷ்ணு சொல்வதாகவும் வரும்! :) அதே போல் தான் சீதைக்கும் கிளியின் கதை! :)

    பதிலளிநீக்கு
  30. http://sivamgss.blogspot.in/2008/08/82.html அந்தக் காரணம் இந்தச் சுட்டியில் காணலாம்.

    பதிலளிநீக்கு
  31. 'சீதை ராமனை மன்னித்தாள்' என்ற வார்த்தைத் தொடரே இக்காலத்திற்கு சம்பந்தப்பட்டது. அதனால் அதை இராமாயண காலத்திற்கு பொருத்திப் பார்ப்பதும், நமக்குத் தெரிந்த மாதிரியான அதற்கான அர்த்தங்களைக் கொள்வதும் அந்தப் புராண காலத்து கதையிலிருந்து விலகிப் போன சிந்தனைகளாகவே அமையும் என்பது என் எண்ணம். தனிப்பட்ட எண்ணங்களைக் குறித்து விரிவாகச் சொல்வதற்கு ஏதுமில்லை.

    'ஸோ…. சீதை மன்னித்தாளா இல்லையா? உங்கள் ஒவ்வொருவரது புரிதல்களின், விளக்கங்களின் படி உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்..' என்று நீங்கள் கேட்டிருப்பதினால் தான் இது கூட சொல்ல நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  32. ஆஆஆஆஆவ்வ்வ்வ் இன்று கீதா கதையாஆஆஆஆ சத்து இருங்கோ வந்து கீதா பின்னூட்டங்களுக்குப் பதில் குடுக்க முடியாதளவுக்கு திண்டாட வைக்கிறேன்....

    அதே அதே கீதாக்கா விட்டிடாதீங்கோ... பின்னிப் பெடல் எடுங்கோ... பின்ன ராமாயணத்தில ஆரும் தப்புத் தண்டா பண்ணினால் நேக்குப் புடிக்காதாக்கூம்:)...

    நெல்லைத் தமிழன் முதல் வரியிலயே கேட்டார் பாருங்கோ ஒரு கேய்வி:)... அதுக்காகவே அவருக்கு ஒடியல் கூழ் காச்சிக் குடுக்கலாம்... ஹையோ வாறேன்ன்ன்ன்...

    கீதாக்கா நேற்று முழுக்க கட்டிலுக்கு கீழயே கைடிங்:)... ஹா ஹா ஹா விடமாட்டமில்ல:)... ஹையோ அப்பாவி எண்ட பேரைத் தெரியாமல் மாத்திட்டனே... இப்போ அடிக்கப் போகினமே.....

    பதிலளிநீக்கு
  33. இறைவனுக்கு விதவிதமான மாலைகளைத் தொடுத்து சாற்றி மகிழ்வது போல அந்தந்த தலைமுறைகளில் வழிவழி வந்த எழுத்தாசான்கள் தங்கள் தங்கள் கற்பனைக்கேற்ப தங்களுக்கும் தெரிய வந்த ஸ்ரீராமனின் கதையில் தங்களின் பூசனையாக தாங்கள் தொடுத்த புஷ்ப மாலையைச் சாற்றியிருக்கிறார்கள். இதில் எந்த மாலை நேர்த்தி, எந்த மாலை தொடுத்ததில் என்ன குறைபாடு என்று தோண்டித் துருவிப் பார்ப்பதில் அந்தந்த மாலை பற்றிய நமது பார்வை தான் வெளிப்படுகிறதே தவிர மாலைத் தொடுத்தவர் இந்தக் காரணத்திற்காக இதை இப்படித் தொடுத்தேன் என்று காரணம் சொல்லப் போவதில்லை. //

    ஆம் ஜீவி அண்ணா....ஒரே கதைக்கு எத்தனை வெர்ஷன்கள். இது குழந்தைகள் விளையாடுவார்களே ஒரு விளையாட்டு பாஸிங்க் த சீக்ரெட் என்று....ஒருவர் காதில் சொல்லப்படுவது இறுதியில் வரும் போது சீதைக்கு ராமன் சித்தப்பா என்று வருவது போல்...இப்படித்தான்...

    //தலைமுறைக்கு தலைமுறை ஒரே கதை விதவிதமாக பார்க்கப்படுவதில் தலைமுறைகள் தாண்டி வாழும் அந்த 'கதை'க்குத் தான் பெருமை.//

    உண்மையே! நான் இன்னும் வியப்பது மகாபாரதம். அதில்தான் எத்தனை கிளைக்கதைகள்! இரண்டிலுமே கற்பதற்கு நிறைய இருக்கு...

    //இந்த தலைமுறை தாண்டிய விமர்சனங்களை நீங்களே அழகாக பாட்டி, பேத்தி, பேத்தியின் குழந்தைகள் என்று கதை ரூபமாக
    வரிசைப்படுத்தி விட்டீர்கள்.//

    மிக்க நன்றி அண்ணா. உண்மையாகவே நான் கேட்ட கேள்விகளுக்கும் என் மகன் கேட்கும் கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் அது கொஞ்சம் தான்...அதற்கே பல சமயங்களில் பதில் சொல்ல முடியலை....இப்போது இருக்கும் குட்டிக் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பல சமயங்களில் அபாரம்...பதில் சொல்லவும் தெரியலை இங்கு எல்லோரது கருத்துக்களையும் உங்கள் வரிகள் உட்பட ரசிக்கிறேன். எடுத்துக் கொள்கிறேன்....

    //எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தாங்கள் எழுதிய கதையின் போக்கு கட்டிப் போட்டு விட்டது. ஜீவனுள்ள வரிகள். கோர்வையான Presentation. பாட்டியை படைத்த பொழுதே கதையை நகர்த்த ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்ட உங்கள் திறமை தெரிந்து விட்டது. வேறு என்னத்தைச் சொல்ல?.//

    மிக்க மிக்க நன்றி அண்ணா தங்களின் பாராட்டிற்கும் ஊக்கமான வார்த்தைகளுக்கும்!!! மீண்டும் நன்றியுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
  34. மிக நேர்த்தியாக கதை சொல்லிய பாங்கிற்குப் பாராட்டுகள். அந்த ஸ்ரீராமரையும் இந்த ஸ்ரீராமையும் கோர்த்து வாங்கி போதாக்குறைக்கு பாட்டியையும் துணைக்கு அழைத்து பிரமாதமான சொல்லாடலில் அழகாகக் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த இடத்தை வெகுவாக ரசித்தேன்.
    இந்தத் திறமையை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தீர்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  35. //பிருகு முனிவரின் மனைவியை மஹாவிஷ்ணு வாளால் தலையைத் துண்டித்துக் கொன்றுவிடுகிறார் அல்லவா? // ஆமாம் அக்கா இக்கதை தெரியும்....ஓ அதனாலதானா.....ஸோ ஈக்வேஷன் வந்துருச்சு.....!!!!! உங்கள் சுட்டிகளைக் குறித்துக் கொண்டுவிட்டேன் அக்கா பார்க்கிறேன்...

    அப்புறம் கீதாக்கா நான் இதில் பேத்தி சீதை வாதிடுவது சொல்லுவது போல் இந்த வரிகளையும் சேர்த்திருந்தேன் அப்புறம் எடுத்துட்டேன் சந்தெகம் வந்ததால் அதாவது.....ப்ருகு முனிவர் முமூர்த்திகளையும் பார்க்கப் போவார் இல்லையா அப்ப்போது சிவனும் ப்ரம்மாவும் அவரை வரவேற்று உபசரிக்காமல் இருந்ததால் சாபம் கொடுப்பார்...அப்புறம் விஷ்ணுவைப் பார்க்கப் போகும் போது அவரும் கவனிக்காததால் மார்பில் உதைப்பார் அப்புறம் விஷ்ணு மன்னிப்பு கேட்பார் என்று வரும் இல்லையா...அப்போ லஷ்மி அவர் மார்பில் உதைத்ததாலும் விஷ்ணு மன்னிப்பு கேட்டதாலும் பிரிவாள் இல்லயா அதையும் சொல்லியிருந்தேன் அப்புறம் ஒரு சந்தெகம் வந்தது. அது ராம அவதாரத்திற்கு முன்பா இல்லை அப்புறமா என்று ஏனென்றால் அதுதான் பத்மாவதி திருப்பதி பெருமாள் கதையாக வரும் இல்லையா....அதனால் சந்தேகம் வந்ததால் எடுத்து விட்டேன்....எக்ஸ்டென்ஷனில் அது சேர்த்திருந்தேன் அப்புறம் எடுத்துவிட்டேன்....மிக்க நன்றி கீதாக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. @ சிரிப்பு கவிப்புயல் அதிரா - "அதுக்காகவே அவருக்கு ஒடியல் கூழ் காச்சிக் குடுக்கலாம்... " - நான் ஏதும் தவறா எழுதிட்டேனா? நல்லாத்தானே சொல்லியிருக்கேன். எதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை. வேணும்னா, தண்டனையைக் குறைத்து 'ஆயுள் தண்டனை'யாக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  37. கீதாவே வினோதினியாக மாறி தற்கால குழந்தைகளின் மறு பிம்பமாக மாறி, வினாவும்,விடையுமாக போகும் கதையில் லயித்து விட்டேன். இந்தக்காலக் குழந்தைகளின் சில கேள்விகளுக்குப் பதிலே சொல்ல முடிவதில்லை. எத்தனைவித ராமாயணங்கள். அதெல்லாம் போகட்டும். பாட்டி,பேத்தி,இராமாயண கதா பாத்திரங்கள்,சீதைராமனை மன்னித்தாள் தலைப்பின் ஸ்ரீராம்,அவரப்பா,அழகழகான பின்னூட்டங்கள், அவைகளின் சாரங்கள் எதைக் கொண்டாடுவது. எல்லாமே நம்பர் ஒன்று. கீதா ரங்கன், இதையெல்லாம் ரஸிக்க எல்லோருக்கும் சான்ஸ் கொடுத்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சி. என்ன நடையழகு, காட்சிகளழகு. நிறைய பாராட்டலாம். எழுத வார்த்தைகள் வரவில்லை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  38. 'சீதை ராமனை மன்னித்தாள்' என்ற வார்த்தைத் தொடரே இக்காலத்திற்கு சம்பந்தப்பட்டது. அதனால் அதை இராமாயண காலத்திற்கு பொருத்திப் பார்ப்பதும், நமக்குத் தெரிந்த மாதிரியான அதற்கான அர்த்தங்களைக் கொள்வதும் அந்தப் புராண காலத்து கதையிலிருந்து விலகிப் போன சிந்தனைகளாகவே அமையும் என்பது என் எண்ணம். தனிப்பட்ட எண்ணங்களைக் குறித்து விரிவாகச் சொல்வதற்கு ஏதுமில்லை.

    'ஸோ…. சீதை மன்னித்தாளா இல்லையா? உங்கள் ஒவ்வொருவரது புரிதல்களின், விளக்கங்களின் படி உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்..' என்று நீங்கள் கேட்டிருப்பதினால் தான் இது கூட சொல்ல நேர்ந்தது.//

    உண்மைதான் ஜீவி அண்ணா ஏனென்றால் அதான் பாட்டி சொல்லுவதிலேயே சொல்லிடுறேனே...சீதை ராமனுக்கு ஜீவன்...அதெப்பாடி மன்னித்தாள்னு சொலல் முடியும்னு பாட்டி எண்ணுவது போலவும்....

    இது தலைமுறை தலைமுறைக்குச் சிந்தனைகளும், பார்வைகளும் எப்படி மாறுகிறது என்று நான் எண்ணியதில் விளைந்ததே அண்ணா.

    இந்தியன் பேங்க் உயர் பதவியில் இருந்தவர் ராகவன் என்று பெயர் நினைக்கிறேன் அவர் ராமாயணத்தில் மேனேஜ்மென்ட் பற்றி இரண்டையும் இணைத்துக் கட்டுரைத் தொடர் குமுதத்தில் எழுதி வந்த நினைவு. நான் இதழ்கள் வாசிக்கும் சூழல் இல்லாததால் முழு தொடரையும் வாசிக்கவில்லை. ஒரே ஒரு பகுதி மட்டும் ஒரு வீட்டிற்குச் சென்ற போது வாசித்த நினைவு. அதில் அனுமனின் வார்த்தையாடலையும் அவரை வைத்து சேவை செய்யும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் மிக மிக அழகாகக் கம்பராமாயண வரிகளையும் மேற்கோள் காட்டிச் சொல்லியிருப்பார்.

    இப்படி ஒவ்வொருவரது பார்வையும், கோணமும் ஒவ்வொன்றிலிருந்தும் வெளிப்படும். சில நேர்மறையாக இப்படி இவர் எழுதியது போல்...சில எதிர்மறையாக....

    இப்போதைய தலைமுறைக்கும் நான் நேர்மறையாகச் சொல்ல வேண்டும் என்று தான் எனக்குப் பதில் சொல்ல முடியாதவற்றிற்கு இப்படி எல்லாம் விடை கிடைக்குமே என்று...எழுதியது.

    மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  39. @நெல்லைத்தமிழன் ..// தண்டனையைக் குறைத்து 'ஆயுள் தண்டனை'யாக்க முடியுமா?
    November 28, 2017 at 1:54 PM//

    ஒடியல் கூழ் குடிச்சா பரோலிலாவது வரலாம் :)

    ஆனா குழை சாதம் ஆயுள் தண்டனை :) எது வேணும்னு நீங்கதான் முடிவு செய்யணும் :)

    பதிலளிநீக்கு
  40. மிக நேர்த்தியாக கதை சொல்லிய பாங்கிற்குப் பாராட்டுகள். அந்த ஸ்ரீராமரையும் இந்த ஸ்ரீராமையும் கோர்த்து வாங்கி போதாக்குறைக்கு பாட்டியையும் துணைக்கு அழைத்து பிரமாதமான சொல்லாடலில் அழகாகக் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த இடத்தை வெகுவாக ரசித்தேன்.
    இந்தத் திறமையை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தீர்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..//

    மிக்க மிக்க நன்றி ஜீவி அண்ணா. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அண்ணா....

    இப்போது மீண்டும் நான் கல்லூரியில் இருப்பது போன்ற நினைவு வருகிறது. மிக்க நன்றி அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  41. கீதா !! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ..மிக அருமையான நடையில் அழகா தங்குதடையின்றி பிரேக் விடாம ராஜதானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இல்லையில்லை :) ice எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது கதை .
    எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியமுண்டு ..என்று நினைப்பேன் சலவை தொழிலாளி முற்பிறவி கிளியாக இருந்திருப்பது அறிந்தேன் இங்கே .
    ஸ்ரீராமின் அப்பா சீதையாகப்பட்ட பெண்கள் என்ற எண்ணத்தில் கதையில் தலைப்பை கொடுத்திருப்பாரோ என தோன்றுகிறது .
    .
    ஒவ்வொருவர் பார்வையில் சீதையம் ராமனும் அழகாக வலம் வருகிறார்கள்
    அவர்களை வலம் வரவைத்த ஆர்ட் டீச்சர் arts club in charge :) ஸ்ரீராமுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  42. வாங்க கவிப்புயல்!! வாங்க!! அதான் இங்க க்ளொடியா இருக்கா இப்ப!! சரி சரி...

    நீங்க என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிடுவோம்ல ஹா ஹா ஹா ஹா....திண்டாட வையுங்கோ...நான் அப்படிக் கேட்டா வுடு ஜூட் புயல் வந்துருச்சுனு ஓடிடுவேன்!!!! ஹா ஹா ஹா

    சரி அதென்ன கீதாக்காவும், நெல்லையும் எல்லாரும் சரியாத்தானே சொல்லிருக்காங்க.......விளக்கங்கள் தானே கொடுத்திருக்காங்க....புயலே கொஞ்சம் பாருங்க அதை எல்லாம்....ஹா ஹா ஹா ஹா

    பாவம் நெல்லை ஒடியல் கூழ்!!! நல்லா கேட்டீங்க நெல்லை...ஹா ஹா ஹா ஆயுள்தண்டனை!! ஹா ஹா ஹா ஹா ஹா..சிரித்துவிட்டேன் நெல்லை...புயலை அடக்குங்க நெல்லை இல்லைனா இங்க சென்னை வாசிகள் நாங்க பாவம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. காமாட்சி அம்மா மிக்க மிக்க நன்றி அம்மா! உங்கள் வார்த்தைகள் ரொம்ப மகிழ்ச்கியாக இருக்கு. உண்மைதான் அம்மா இப்போ குழந்தைகள் கேட்கும் கேள்விகள் ரொம்பவே நம்மை யோசிக்க வைக்கிறது அதே சமயம் பதிலும் இல்லை.

    என் மகன் சொல்லுவான். அப்போது ஒரே ஒரு வருடம்....அமெரிக்காவுல் அவன் 7 ஆம் வகுப்பு...வகுப்பில் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் உடனே பதில் கொடுப்பார்களாம். தெரியவில்லை என்றால் உடனே இணையத்தில் தெடி பதில் கொடுப்பார்களாம். வகுப்பிலேயே இணையம் உண்டே அங்கு. அப்புறம் ஒருவேளை சரியாக நேரத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வகுப்பில் விடை சொல்லுகிறேன் என்று சொல்லிக் கேள்விகளுக்கும் கேட்டவரையும் பாராட்டுவார்களாம். மறு வகுப்பில் முதல் வேலையாகக் கேட்கப்பட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் அடுத்ததற்கே செல்வார்களாம். ஐயையே இப்படியா கேட்பார்கள். உனக்கு வேற வேலை இல்லை. எனக்குத் தெரியாது....இப்ப இல்ல நீ அடுத்த க்ளாஸ் போகும் போது தெரிஞ்சுப்ப, இப்படி எல்லாம் வேண்டாத கேள்விகள் கேட்கக் கூடாது என்றெல்லாம் சொலல்வே மாட்டார்களாம்...

    எவ்வளவு நல்ல விஷயம் இல்லையா...சில சமயம் மாணவர்களிடையே கூடக் கேட்டு அவர்களையும் டிஸ்கஸ் பண்ண வைப்பார்களாம்.

    அது போலத்தான் இங்குப் பின்னூட்டங்களும் நானும் ரசிக்கிறேன் காமாட்சியம்மா. இதெற்கெல்லாம் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களைத்தான் பாராட்ட வேண்டும். இப்படியான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு....எல்லோரையும் ஊக்கப்படுத்துவதற்கு....நிஜமாகவே நாம் எல்லோருமே சொல்லிக் கொள்ளலாம் "எங்கள் ப்ளாக்" என்று...

    மிக்க நன்றி அம்மா தங்களின் பாராட்டிற்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  44. ஒடியல் கூழ் குடிச்சா பரோலிலாவது வரலாம் :)

    ஆனா குழை சாதம் ஆயுள் தண்டனை :) எது வேணும்னு நீங்கதான் முடிவு செய்யணும் :)//

    வாங்க ஏஞ்சல்!!! ஹப்பா மனதுக்கு ரொம்ப சமாதானம்! இப்படி போட்டீங்க பாருங்க!! கவிப்புயலுக்கு...நெல்லை பாவம்!! அவரே சொல்லி மாட்டிக்கிட்டாரோ??!!!!! ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  45. மிக்க நன்றி ஏஞ்சல் பாராட்டிற்கும் கருத்திற்கும்...

    நிறைய வெர்ஷன்ஸ் உண்டு....ஒவ்வொரு நிகழ்வுக்கு ஒரு காரண காரியம் உண்டு. நிச்சயமாக! சிலவற்றிற்கு நமக்குப் பதில் கிடைத்திவிடும். பதில் தெரியவில்லை என்றாலோ....ஈக்வேஷன் சரியா இல்லை என்றாலோ விதி என்றும் சொல்லிச் சமாதானம்...ஆம் அதுதான் இங்கு கர்ம வினை என்று...

    ஸ்ரீராமின் அப்பா சீதையாகப்பட்ட பெண்கள் என்ற எண்ணத்தில் கதையில் தலைப்பை கொடுத்திருப்பாரோ என தோன்றுகிறது //
    .ஆம் எ பியில் வந்த கதைகளை எல்லாம் அதாவது ராமாயணத்தை ஒட்டிய கதைகள் அல்லாமல் பிற நடைமுறைக் கதைகளை வாசித்திருந்தால் நிறைய சொல்லியிருப்பாராக இருக்கும்...இல்லையா?

    யெஸ் ஸ்ரீராமுக்கு நன்றியும் பாராட்டுகளும் பொக்கேக்களும்!!
    (எபி ஆசிரியர்கள் இப்படிப் பலரை, இளம் எழுத்தாளர்களை. அடுப்பூதிக் கொண்டிருந்த பெண்களை, வேலை வீடு என்று பரபரப்பாக இருந்த பெண்களையும் எல்லாம் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வெளியில் கொணர்ந்து காட்டியமைக்கு .. ஸ்ரீராமைச் சுற்றி ஒரே நன்றிகளும், பொக்கேக்களும், மாலைகளும் குவிந்து ஆளே தெரியவில்லை என்று எங்கேனும் அவர் படமும் செய்தியும் ஃப்ளாஸ் ந்யூஸாக வருதானு பாருங்க ஏஞ்சல்.....

    அப்புறம் கவிப்புயல் வந்து சொல்லுவாங்க "ஆம் இங்கு பிபிஸியில் வருது..அதுக்குக் காரணம் இந்தக் கவிப்புயலாக்கும்!!! என் கவிதையை எபி பிரசுரித்தமைக்கு இங்கு பிபிஸி கவிப்புயல் என்று பட்டம் கொடுத்து...........ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  46. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்:) திரும்ப வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா துக்கம்!!!:):):)..

    ///நெல்லைத் தமிழன் said...
    @ சிரிப்பு கவிப்புயல் அதிரா - "அதுக்காகவே அவருக்கு ஒடியல் கூழ் காச்சிக் குடுக்கலாம்... " - நான் ஏதும் தவறா எழுதிட்டேனா? நல்லாத்தானே சொல்லியிருக்கேன்///

    ஹையோ நீங்க நல்லாச் சொன்னதாலதானே உங்களுக்கு ஒடியல்கூழ் தருவேன் எனச் சொன்னேன்:).. இல்லை எனில் ஒடியல்கூழ் என்ன அவ்ளோ சீப்பாவா கிடைக்குதூஊஊஊஊ:)).....

    சேவல் கூவாமலும் இரவுகள் விடியலாம்
    [(இப்போ சேவல்களை யாரும் கண்டு கொள்வதில்லை:))
    ஹையோ நான் சேவலை மட்டும்தேன் ஜொன்னேன்:))]
    ஆனா சீதை ராமனை மன்னிக்காமல்
    செவ்வாய் விடியுமோ?:)..

    ஆவ்வ்வ்வ் கம்ப-பாரதம் பாடிய வாய் இப்போ கவிதையாக் கொட்டுதே:) என்னைச் சொன்னேன்:))... சரி சரி அது போகட்டும்.. நான் கேய்க்க இருந்த கிளவியை நெல்லைத்தமிழன் கேட்டிட்டர்ர்ர்ர்...:).. அப்போ சீதை ராமனை மன்னிக்காமல் கதை முடிஞ்சு போச்சா?:)).. நோஓஓஓஓ இது அநியாயம்:).. மன்னிக்காட்டில் எப்படியாம் குடும்பம் நடத்துவா சீதை?:).. மனதில் பகைமையை அடக்கி வைத்தல் மிகக் கொடியது எனச் சீதைக்குச் சொல்லுங்கோ கீதா:))

    ///யெஸ் ஸ்ரீராமுக்கு நன்றியும் பாராட்டுகளும் பொக்கேக்களும்!!
    கீதா///
    ஹையோ அவருக்கெதுக்கு பொக்கே?:) அந்த மரத்தடியில் கொண்டுபோய் வைக்கவோ?:).. என்வலப் ஏதும் குடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  47. ///Angelin said...
    கீதா !! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ..மிக அருமையான நடையில் அழகா தங்குதடையின்றி ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடிச் சொல்லிட்டு ஈசியா எஸ்கேப் ஆகலாம் என நினைச்சுட்டா கர்ர்ர்ர்ர்ர்:)).. ஒவ்வொரு பந்தியாப் படிச்சுப் படிச்சுக் கருத்தும் சொல்லோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))[இப்பூடி இப்பவே மிரட்டிப்போடோணும் இல்லை எனில்.. என் கதைக்கும் ஓடிவந்து நல்லா இருக்கு அதிரா என ஒற்றை வரியில குளோஸ் பண்ணிப்போடுவினம்:))]

    சே..சே... சாமி கொடுத்தாலும் பூசாரியார் விடமாட்டாரமே:).. அதுபோல நெல்லைத்தமிழன் அடிக்கடி ஓசிப்பார்ர்.. இன்று அதிராவின் குழைசாதம் செய்திடலாமா என ஆனா அப்ப பார்த்து அஞ்சு பாய்ஞ்சு காரியத்தைக் கெடுத்துப்போடுவா கர்:))

    சரி சரி கொமெண்ட்ஸ்ல தேவையில்லாத பேச்செல்லாம் இருக்கப்பிடாது:))... எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது..ஹா...!! கதை படிக்கிறென்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  48. ///தர்மம் தர்மம்னு நீ ஜஸ்டிஃபை பண்ணற. ஆனா சீதைய அனுப்பினது மட்டும் எப்படித் தர்மம் ஆகும்? பாட்டி, ஐ ஆம் ஸோ ஸாரி பாட்டி! என்னால ஏத்துக்க முடியலை…”///

    என்னாலயும் தான்...

    ///இப்படி பெண்களை சப்போர்ட் பண்ணின ராமன் தன்னோட மனைவிய ஒரு பெண்ணா நினைச்சு கூட சப்போர்ட் பண்ணலயே?”///

    ஆங்ங்ங் இது கேள்வி?:)) ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என நினைச்சிருப்பாரோ என்னமோ:)..

    //சீதையும் பிரஜைநாலும் அவனோட மனைவி! //
    என்ன கீதா இது புதுக்கதை??????? அப்போ ராமனுக்கு இரு மனைவியா? இல்லயே?:) ஹையோ என்ன நடக்குதிங்கின???..

    பதிலளிநீக்கு
  49. கேள்விகள் கேட்கப்பட வேண்டும் பதில்கள் தான் வேறு வேறாக வரும் இவற்றில் சரியாகப் படுவதையே தேர்ந்தெடுக்க வேண்டும் கதையில் பல ராமாயணக்களின் சாயல் வருகிறத்தே இதிலிருந்தேகதைகள் பின்னப்பட்டவை என்றும் தெரிய வரும் பதில்கள் தெரிய வில்லை என்ம்றால் இருக்கவே இருக்கிறது கர்மபலன் நான் இந்த விளையாட்டுக்குவர வில்லை ஸ்ரீராமின் அப்பா யுகபுருஷர்கள் என்னும் தலைப்பில் எழுதிய நினைவு அந்தப் புத்தகத்தை தேட வேண்டும்

    பதிலளிநீக்கு
  50. //“நீயும் கருவுற்றிருக்கும் போது உன் கணவனைப் பிரிவாய் அப்போது அந்த வலி உனக்குத் தெரியும்” என்றிட ஆண் கிளியோ கங்கையில் வீழ்ந்து மரித்திட, அந்த ஆண் கிளிதான் இப்போதைய சலவைத் தொழிலாளி ///

    ஓ இது எனக்குப் புதுக்கதை.. இன்னொன்று கீதா... அனைத்து இடங்களிலும் சலவைத்தொழிலாளி எனும் சொல்பதத்தையே உபயோகித்திருக்கலாமே எனத் தோணுது எனக்கு...

    ஓ லவ குசா பிறக்கும்போது ராமன் அருகில் இல்லையோ.. அதனால்தான் இன்றுவரை பெண்களைத்தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு கணவன்மார் தம் வீட்டில் தங்குவது வழக்கமாகி இருக்கிறது போலும்.. குழந்தைப்பேறுக்காக.

    ///ஏகபத்தினி விரதனான என் பிரபுவுடன் இத்தனை வருடங்கள் எனக்கு வாழும் பாக்கியம் இல்லாத போது இனி இந்த வாழ்க்கை தேவையில்லை. என் அன்னைக்கும் நான் படும் துன்பங்களை நினைத்து வேதனை இருக்கத்தானே செய்யும்? நான் என் அன்னையிடமே சென்றுவிடுகிறேன்” என்று சொல்லி பூமாதேவியிடம் சென்றுவிட்டாள் சீதை!///

    ஓ உண்மையில் இப்படியா முடிகிறது ராமாயணம்? அப்போ குடும்பமாக அவர்கள் வாழவே இல்லையா?.. நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன் கீதா... என்னைப்பொறுத்து சீதை ராமனை மன்னிக்கவில்லை என்றே தோணுது.

    வாயால மன்னிக்கிறேன் எனச் சொன்னாவே தவிர உள்ளத்தால் மன்னிக்க வில்லை. உள்ளத்தால் மன்னிச்சிருந்தால், பூமாதேவியுடன் போகாமல் ராமனோடு தொடர்ந்து குடும்பம் நடத்தியிருப்பா என்றே என் மனம் சொல்லுது...

    நல்ல ஆர்வமாக இருந்தது கீதா படிக்க.. போறிங் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறீங்க... வாழ்த்துக்கள்..

    என் “கத்தரிக்காய் தொக்கு” டிஸ் உங்களுக்கே:)..

    பதிலளிநீக்கு
  51. பெண்கிளி அவசரப்பட்டு சாபம் கொடுத்தாலும் ..(பறவைகளுக்கு gestation 27-28 நாட்கள்தான் மனுஷங்களுக்கு ப்ரக்னென்சி காலம் 10 மன்த்ஸ் ) பறவை மிருகங்களுக்கும் பிரிவுத்துயர் உண்டு அதை மானிட வடிவில் இருந்தப்போ சீதை பாவம்.. தெரியாத செஞ்ச தவறென்று மன்னித்திருக்கலாம் ..இதைத்தான் கர்மா என்கிறார்கள் ..

    பதிலளிநீக்கு
  52. @geethaa

    //ஸ்ரீராமைச் சுற்றி ஒரே நன்றிகளும், பொக்கேக்களும், மாலைகளும் குவிந்து ஆளே தெரியவில்லை என்று எங்கேனும் அவர் படமும் செய்தியும் ஃப்ளாஸ் ந்யூஸாக வருதானு பாருங்க ஏஞ்சல்//

    அது யாரோ இந்த பொக்கேங்களுக்கு பாராட்டுக்களுக்கு நடுவிலே கத்திரிக்கா தொக்கு குழை சாதம் பேரெல்லாம் சொல்லினாங்க அதைக்கேட்டு மயக்கம் போட்டுட்டாராம் ..:) எழும்பி வருவார் கொஞ்சம் நேரத்தில்

    பதிலளிநீக்கு
  53. அடடாஆஅ அஞ்சுவுக்கும் ஞானம் பிறந்திட்டுதூஊஉ:)...

    அது அப்படியில்லை அஞ்சு கணக்கு... பத்துமாதம் ஒரு பெண் அனுபவிப்பதை ஒரு மாதத்திலேயே பறவை அனுபவித்துவிடும்.. அப்படித்தான் வரும் என நினைக்கிறேன்...

    இப்பிறவியில் நல்லவர்களாக இருப்போர் ஏன் துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுக்கும் இந்தப் பழைய பிறப்புக் கர்மாதான் காரணம் என்கிறார்கள்...

    இப்ப பாருங்கோ நான் இன்னும் தேம்ஸ்ல குதிக்காமல் இருப்பதற்கும் இப்படி ஏதும் பின்னணி இருக்கும்:))) அதாவது முற்பிறப்பில மீ ரொம்ப நல பொண்ணா இருந்தேனாம்ம்ம்:)

    பதிலளிநீக்கு
  54. அஞ்சூஊஊஉ அப்போ என் கம்புத்தோசை குடுக்கட்டோ ஸ்ரீராமுக்கு?:) மயக்கம் கெதியாத் தெளிஞ்சிடும்:)..

    பதிலளிநீக்கு
  55. ஹையோ பாவம் ஸ்ரீராம் :) அவரை ஹாஸ்பிடலில் சேர்க்காம ஓய மாட்டிங்களா :)

    பதிலளிநீக்கு
  56. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  57. ஆமா எங்கே நம்ம வலையுலக இளம்புயல் :) வருத்தப்படாத வாலிபர் மதுரை தமிழனை காணொம் :)
    யாரவது அவரை முகநூல் பக்கம் பார்த்தா நாங்க அவரை தேடறோம்னு சொல்லுங்க :)
    அதுவும் அதிரா ஒரு புது ஸ்வீட் செஞ்சி அவருக்காக வச்சிருக்காங்கன்னு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  58. அந்தக்காலத்துப் பாட்டியையும் இந்தக்காலத்து வினோதத்தையும் ராமாயணத்தால் இணைக்கப் பார்த்திருக்கிறீர்கள். பாட்டி-பேத்தி உரையாடல்கள் சரளமாகப் பாய்கின்றன. “ராமச்சந்திரா.. பிரபோ! என் குழந்தைக்கு நல்ல புத்திய கொடு. அது ஏதோதோ வாசிச்சுட்டு என்னவெல்லாமோ கேக்கறது. அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…..” - என்று பாட்டி சேவிக்கிற இடத்தில், பக்திரசத்தில் வாசகனைக் கொஞ்சம் தோய்த்துக் கண்கலங்க வைக்கிறீர்கள்..

    மொத்தத்தில், ஒரு கதாசிரியையாக நீங்கள் வெகுவாக வளர்ந்துவருகிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  59. //சீதையும் பிரஜைநாலும் அவனோட மனைவி! //
    என்ன கீதா இது புதுக்கதை??????? அப்போ ராமனுக்கு இரு மனைவியா? இல்லயே?:) ஹையோ என்ன நடக்குதிங்கின???..//

    கவிப்புயலே!!!! என்னப்பா இது கதையையே மாத்திட்டீங்களேமா...பிரஜை நா சிட்டிசன்!!!வ்னோதினியோட ஆர்க்யூமென்ட்....ஆனா பாட்டி ராமன் தரப்பு வாதம் அதாவது அந்த நாட்டுக் குடிமகள் என்றாலும் அவளை ராமனின் மனைவி அப்போ ராமன் அவளுக்குச் சப்போர்ட் செய்ய முடியாது ராஜதர்மம் வேறு! தன் குடும்பத்திற்கு முன்னதாக நாடுதான் தன் குடும்பம் முதலுரிமை என்ற தர்மம்..அப்படியான வாதம் அது அதிரா...

    கீதா

    பதிலளிநீக்கு
  60. ஓ இது எனக்குப் புதுக்கதை.. இன்னொன்று கீதா.//

    அதிரா நீங்கள் ராமாயணம், மகாபாரதம் முழுவதும் வாசித்தீர்கள் என்றால் இப்படி நிறைய உப கதைகள் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏன் அப்படி நடந்தது என்று கர்மவினை என்று பல கதைகள் வரும்...

    //அனைத்து இடங்களிலும் சலவைத்தொழிலாளி எனும் சொல்பதத்தையே உபயோகித்திருக்கலாமே எனத் தோணுது எனக்கு...//

    ஓகே அதிரா நோட்டட் திஸ் பாயின்ட்!!!!

    //ஓ லவ குசா பிறக்கும்போது ராமன் அருகில் இல்லையோ.. அதனால்தான் இன்றுவரை பெண்களைத்தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு கணவன்மார் தம் வீட்டில் தங்குவது வழக்கமாகி இருக்கிறது போலும்.. குழந்தைப்பேறுக்காக// இதில் சீதை வால்மீகி ஆஸ்ரமத்துக்குப் போனதன் காரணம் வேறு என்றாலும்....

    பொதுவாகப் பெண்கள் முதல் குழந்தைக்குத்தான் பிறந்த வீட்டுக்குப் போவது வழக்கமாக இருக்கு. இரண்டாவதற்கும் போவது என்பது ஒரு சில குடும்பங்களில்தான் பிறந்த வீட்டுக்குப் போவது.

    இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதாவது முதல் பிரசவத்திற்குப் பிறந்த வீட்டிற்குப் போவதற்கு.......முதல் குழந்தை என்பதால் கொஞ்சம் ரெஸ்ட் அதிகம் தேவைப்படலாம்..முதல் அனுபவம் இல்லையா ஸோ அம்மாவின் கவனிப்பு கொஞ்சம் கூடுதல் வேண்டியிருக்கலாம் என்பதாலும் (ஏன் மாமியார் செய்ய மாட்டார்களா என்றெல்லாம் கேட்கக் கூடாது...அவருக்கு அவரது மகள் வருவாரே!!!!)..அப்புறம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் கணவன் மனைவி பிரிந்து இருப்பது நல்லது என்ற ரீதியிலும்....இன்னும் இருக்கு காரணங்கள் இருந்தாலும் இரண்டாவது குழந்தை பிறக்கும் போதும் இதெல்லாம் அப்ளை ஆகாதா என்றும் கேட்கத் தோன்றும் எனக்கு...

    ஆம் அதிரா சீதை ராமனுடன் அப்புறமும் வாழவில்லை....அப்படித்தான் உத்தரகாண்டம் சொல்லுது. சீதை மன்னிக்கவில்லை என்பது உங்கள் கருத்துடன் தான் வினோதினியும்!! ஆனால் இப்படி அவர்களின் நிகழ்விற்கும் கதை இருக்கே...கீதாக்கா சொல்லிருக்காங்க பாருங்க...

    ஆமாம் மனதால் அவள் சொல்லவில்லையோ என்று வினோதினி நினைத்ததால்தான் அவள் கோணத்தில் முடிவு. கீதாக்காவின் லிங்க்ஸை பாருங்க....அவங்க வால்மீகியைப் படிச்சவங்க. நான் ஒரிஜினல் வாசித்ததில்லை...எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. ஹிந்தி ஓரளவுதான் தெரியும் ஆழ்ந்து வாசிக்கும் அளவிற்குத் தெரியாது. ஒன்லி தமிழ்..ஆங்கிலம்...எனவே இந்த வெர்ஷன்ஸ் மற்றும் என் பாட்டி தாத்தா சொன்னதை வைத்து எழுதியது...

    அதிரா ராஜாஜியின் ராமாயாணம் புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். தமிழில் நான் வாசித்தது அவரதுதான்.

    மிக்க நன்றி அதிரா உங்க பாராட்டுக்கும்....கத்தரிக்காய் தொக்கிற்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  61. ஆமாம் ஏஞ்சல் எனக்கும் கிளியின் கெஸ்டேஷன் பீரியட் எல்லாம் கேள்விகளாக எழுந்தது....

    கர்மா யெஸ் அதற்குத்தான் இந்தக் கதை....பாவம் சீதா அறியாப் பருவத்தில் செய்தது இல்லையா...

    அது யாரோ இந்த பொக்கேங்களுக்கு பாராட்டுக்களுக்கு நடுவிலே கத்திரிக்கா தொக்கு குழை சாதம் பேரெல்லாம் சொல்லினாங்க அதைக்கேட்டு மயக்கம் போட்டுட்டாராம் ..:) எழும்பி வருவார் கொஞ்சம் நேரத்தில் // ஹாஹாஹாஹா

    நெத வும் ஸ்ரீராமும் மாட்டிக்கிட்டாங்க அதிராகிட்ட இன்னைக்கு ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  62. ஏஞ்சல் மதுரை ஒரே அரசியல் பதிவா போட்டதுனால அவங்க வீட்டம்மாவுக்கே கொஞ்சம் போரடிச்சுருக்கும்....நம்மள எல்லாம் காணாம அங்க பாக்காம ஸோ ஒழுங்கா பதிவு போடுங்கனு பூரிக்கட்டை அடி கொடுத்திருப்பாங்க அதான் காணலையோ என்னமோ....ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  63. “ராமச்சந்திரா.. பிரபோ! என் குழந்தைக்கு நல்ல புத்திய கொடு. அது ஏதோதோ வாசிச்சுட்டு என்னவெல்லாமோ கேக்கறது. அதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…..” - என்று பாட்டி சேவிக்கிற இடத்தில், பக்திரசத்தில் வாசகனைக் கொஞ்சம் தோய்த்துக் கண்கலங்க வைக்கிறீர்கள்..//

    மெய்யாலுமா??!!!!! அப்படியா இருக்கு!!! இதுக்கு மெய்யாலுமே ஹா ஹா ஹா போடணுமா இல்லை ஹிஹிஹியா ஏகாந்தன் சகோ எனை வைச்சுக் காமெடி கீமடி செய்யலையே!!!! ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை..

    மொத்தத்தில், ஒரு கதாசிரியையாக நீங்கள் வெகுவாக வளர்ந்துவருகிறீர்கள். பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி சகோ!!உங்கள் எல்லோரது கருத்துகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சியும் அதே சமயம் இன்னும் நன்றாக எழுதணும் என்ற பொறுப்பும் ஆர்வமும் சேர்ந்து கொள்கிறது...

    மீண்டும் நன்றி ஊக்கமிக்க கருத்திற்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  64. அதிரா கீதாக்கா லிங்க்ஸ் அவங்க எழுதினதுக்குக் கொடுத்துருககங்க பாருங்க அங்க போய்க் கூட நீங்க வாசிக்கலாம்....நிறைய தெரிஞ்சுக்குவீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  65. //..மெய்யாலுமா??!!!!! அப்படியா இருக்கு!!! இதுக்கு மெய்யாலுமே ஹா ஹா ஹா போடணுமா இல்லை ஹிஹிஹியா ஏகாந்தன் சகோ எனை வைச்சுக் காமெடி கீமடி செய்யலையே!..//

    இல்லை. காமெடி இல்லை. நிஜமாக நான் அனுபவித்ததையே சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  66. அங்கும் போய்ப் படிக்கிறேன் கீதா, மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  67. மிக்க நன்றி அசோகன் குப்புசுவாமி சகோ! கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  68. இல்லை. காமெடி இல்லை. நிஜமாக நான் அனுபவித்ததையே சொன்னேன்.//

    மிக்க நன்றி சகோ. அது நான் அடிக்கடிச் சொல்லும் டயலாக் மனதிற்குள். என் மகனாக இருந்தாலும் சரி, நான் நெருங்கிய வட்டத்தில் பார்க்கும் குழந்தைகளானாலும் சரி, அவர்கள் ஏதேனும் எடக்கு மடக்காக, ஓவராக வயதுக்கு மீறின பேச்சு, தவறான வார்த்தைகள் என்று பேசினால் இறைவனிடம் வேண்டிக் கொள்வேன். அந்தக் குழந்தைக்கு நல்ல புத்தியைக் கொடு, நல்ல நாவினைக் கொடு...நல்ல சிந்தனையைக் கொடு என்று...அதான் பாட்டியின் டயலாக்காக....ம்ம்ம் நானும் அரைக்கிழவிதானே!! ஹா ஹா ஹா (ஆ! வாய் தவறி வந்துடுத்தே!! அரைக் கிழவினு...கவிப்புயலுக்குக் கேட்டிடக் கூடாது.!!!! பரவால்ல கபு பாட்டியை விடச் சின்னவள்தான் ஹிஹிஹிஹி!!!)

    மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  69. ///மொத்தத்தில், ஒரு கதாசிரியையாக நீங்கள் வெகுவாக வளர்ந்துவருகிறீர்கள். பாராட்டுக்கள்.// ///

    ஏகாந்தன் அண்ணன் என்னைச் சொல்லல்லே:) விடுங்கோ என் கையை விடுங்கோ.. ஆரும் என்னைத் தடுக்காதீங்கோ:).. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  70. ஜி எம்பி ஸார்! சரிதான் சார்! கேள்விகள் கேட்கப்படும் போது அவரவர்க்குத் தோன்றுவதைத்தான் சொல்லுவார்கள் இல்லையா...எது சரி எது தவறு என்று எப்படி சார் சொல்ல முடியும்? இது அறிவியல் டெஃபெனிஷன் இல்லையே! எனக்கும் கர்மவினை குறித்தெல்லாம் நிறைய தோன்றும்....இருந்தாலும் மனிதன் சமாதானம் கொள்வதற்கும் மனதை அமைதிப்படுத்தவும் உதவும் ஒரு விஷயம் எனலாமோ..

    மிக்க நன்றி ஸார் கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  71. @ அதிரா:

    //.. என்னைத் தடுக்காதீங்கோ:).. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:))

    நீங்க இப்பிடிச் சொல்லிச்சொல்லி, தேம்ஸ் மெல்ல மெல்ல நகர்ந்து ஒருநாள் அயர்லாந்துப் பக்கம் போயிரப்போவுது.. இதனாலே ரெண்டு நாட்டுக்கும் இடையிலே சண்டை மூண்டாலும் மூளலாம்..

    பதிலளிநீக்கு
  72. ///// சிந்தனையைக் கொடு என்று...அதான் பாட்டியின் டயலாக்காக....ம்ம்ம் நானும் அரைக்கிழவிதானே!! ஹா////

    ஆஆஆஆவ்வ்வ்வ் பொறுக்கிட்டேன்ன் பொறுக்கிட்டேஎன்ன்ன்ன்:).. பட் மீ சுவீட்ட்ட்ட்ட் 16:)...

    ஹையோ நாளைக்குப் புதன் கிழமை... நேக்கு லெக்ஸ்சு காண்ட்டூ எல்லாம் ரைப் அடிக்குதே:).. துரை அண்ணன் ஏதோ எழுதப் போறாராமே:) வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்:)...

    பதிலளிநீக்கு
  73. @ ///நீங்க இப்பிடிச் சொல்லிச்சொல்லி, தேம்ஸ் மெல்ல மெல்ல நகர்ந்து ஒருநாள் அயர்லாந்துப் பக்கம் போயிரப்போவுது.. இதனாலே ரெண்டு நாட்டுக்கும் இடையிலே சண்டை மூண்டாலும் மூளலாம்.. ////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நீங்க என்ன சொல்லி மிரட்டினாலும் நான் முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேன்ன்ன்ன்ன்...:)

    அஞ்சூ ... கீதா ...என் கையை விடுங்கோ:)... மீ ஜம்பிங்ங்ங்... :).. கடவுளே உடனடியா பயபிரிக்கேட்டருக்கு அடிச்சூ அதிராவைக் காப்பாத்துங்கோ:).. தண்ணியில் மூச்சுப் பிடிச்சு நிக்கத் தெரியாதெனக்கூஊஊஊ:)...

    பதிலளிநீக்கு
  74. கீதா சிஸ் இன்று உங்களுடைய கதையா காலையில் வரமுடியவில்லை (கெஸ்ட் ) இன்று காலையிலே வந்திருந்தா ஜோரா இருந்திருக்கும் இரவு ஆகிவிட்டது எல்லோரும் தூங்கவும் போயிருப்பார்கள் சரி விடுங்க, கதை சிம்பிளி சூப்பர் கதையும் கொடுத்து உங்கள் மனதையும் வைத்தவிதம் அருமை (நீங்கள் இங்கே கதையில் கொடுத்ததை நானும் முன்னரே கேள்வியாக வேறுமாதிரி கேட்டுளேன் ஒரு பதிவில்) வாழ்த்துக்கள் சிஸ் இந்த ராமாயணம், மகா பாரதம் என்ற இரண்டும் இன்றும் முடிவுகாணமுடியா சிக்கல்களையே கொண்டு இருக்கிறது இன்னும் நம்மை போல் பலருக்கு பல கேள்விகளுடன் கதவுகள் திறக்கலாம்

    பதிலளிநீக்கு
  75. பாட்டி, பேத்தி உரையாடலில் கதையை நகர்த்தி சென்றது அருமை.
    பாட்டிகள் கதையில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்து சொல்வது. பேத்தி, பேரன்கள் ஏன் , எதற்கு, இப்படி செய்து இருக்கலாம் என்று வாதிப்பவர்கள். உரையாடல் அருமை.

    கடவுள் என்றாலும் மனிதனாக பிறந்து விட்டால் கர்மவினையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

    சொல்லியவிதம் அருமை.
    வால்மீகி, கம்பர் இருவரும் வேறு வேறு மாதிரி சொல்வார்கள் ராமாயணத்தை.
    ஸ்ரீராம் அப்பாவின் விருப்பத்தால் ஒவ்வொருவரும் ராமாயணத்தை அலசி ஆராயும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
    வாழ்த்துக்கள் கீதா.


    பதிலளிநீக்கு
  76. பூவிழி மிக்க நன்றி கருத்திற்கு. இரண்டிலுமே கேள்விகள் என்றில்லை அதில் கற்க அதுவும் வாழ்க்கைக்குத் தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது பூழிவி...அதை, கேள்விகள் கேட்கும் அடுத்த அதலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற ஒரு எண்ணத்தின் அடிப்படையில், இங்கு விளக்கங்கள் கிடைக்கும் என்ற ஒரு ஆசையில் எழுதியதே...

    மிக்க நன்றி பூவிழி

    கீதா

    பதிலளிநீக்கு
  77. நீங்க இப்பிடிச் சொல்லிச்சொல்லி, தேம்ஸ் மெல்ல மெல்ல நகர்ந்து ஒருநாள் அயர்லாந்துப் பக்கம் போயிரப்போவுது.. இதனாலே ரெண்டு நாட்டுக்கும் இடையிலே சண்டை மூண்டாலும் மூளலாம்.. //

    ஹா ஹா ஹா ஹாஅ/...ஹயோ ஏகாந்தன் சகோ சிரிச்சு முடில....ரொம்பவே கைதட்டுறேன்....கவிப்புயலை அயர்லாந்து பக்கம் நகர்த்தியதற்கு...தேம்ஸ் அங்க போனா புயலும் அங்கு மையம் கொண்டுடுமேனு ஒரு நப்பாசைதான் ஹா ஹா ஹா..சென்னை ஏற்கனவே வாட்சப் செய்திகளால் பீதியில் இருக்கு!!! ரசித்தேன் உங்கள் கமென்டை..(ஏஞ்சலும் ரசிப்பார்..பார்க்கவில்லை போலும்...ஹா ஹா ஹா...அதிராவை ஓட்டுவதென்றால் ரொம்ப இனிப்பு எங்களுக்கு மட்டுமல்ல அவரது பதிலும் இப்படியானவையும் மனதை ரிலாக்ஸ் வைக்கிறது அதற்கு கவிப்புயல் பாட்டிக்கு நன்றி சொல்லியே ஆகணும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  78. //ஒரு கல்லில் ரெண்டு மாங்கான்னு சொல்லுற மாதிரி ஒரு தலைப்பில் ரெண்டு கதையா?!//

    ராஜி... இரண்டு கதை அல்ல, எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். மாறுபட்டு சிந்திக்கவும், வேறுபட்ட படைப்புகள் தரவும் வாய்ப்பு.

    சீதை மன்னிக்கும் கதை என்று இல்லை, சாதாரணமான சிறுகதைகளும் எழுதி அனுப்பலாம். இடை இடையே அவைகளும் வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  79. நெல்லை... கண்டிஷன் படி கதை முடிந்தபின் வரும் (பின்)குறிப்பு என்று அதை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் நினைவுக்கு. இதே உத்தியை திரு. டி என் முரளிதரனும் கைக்கொண்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
  80. கோமதிக்கா மிக்க நன்றி அக்கா தங்களின் கருத்திற்கு....
    ஆம் கடவுளும் மனிதனாய் பிறந்துவிட்டால் இப்படித்தான்...

    ஆம் அக்கா நிறைய வெர்ஷன்ஸ் இருக்கு அதில் ஒரு சிலவற்றை எடுத்தேன்...

    உண்மைதான் ஸ்ரீராமின் அப்பா வினால் நிறைய கதைகளும், பலரது ஆற்றலும் வெளிப்படுகிறது இல்லையா அத்தனை பேருக்குமே நல்ல ஊக்கம்!!! அனுபவமும்...

    மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  81. ஜீவி ஸார்... நீங்கள் சமையல் பகுதி படிப்பதில்லை. சமையல் பகுதியில் இதே போன்ற ஆனால் வேறு உத்தியை இதே கீதா ரெங்கன் உபயோகப்படுத்தி இருப்பார். வித்தியாசமான சிந்தனைகள் உடையவர் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  82. //ஆனா சீதை ராமனை மன்னிக்காமல்
    செவ்வாய் விடியுமோ?:)..//

    ஆஹா.... அருமை அதிரா.

    பதிலளிநீக்கு
  83. ஸ்ரீராம்....////ஒரு கல்லில் ரெண்டு மாங்கான்னு சொல்லுற மாதிரி ஒரு தலைப்பில் ரெண்டு கதையா?!//

    ராஜி இந்தக் கதையைத்தான் அப்படி நினைச்சுட்டாங்க....அதாவது கதைக்குள் கதைன்ற மாதிரி...அப்படித்தான் நான் நினைச்சேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  84. ஜீவி ஸார்... நீங்கள் சமையல் பகுதி படிப்பதில்லை. சமையல் பகுதியில் இதே போன்ற ஆனால் வேறு உத்தியை இதே கீதா ரெங்கன் உபயோகப்படுத்தி இருப்பார். வித்தியாசமான சிந்தனைகள் உடையவர் கீதா ரெங்கன்.//

    ஆ!! ஸ்ரீராம் ஸ்ரீராம் என்ன சொல்ல??!!! கண்களில் நீர்த் துளிர்த்துவிட்டது ஸ்ரீராம். நான் பெருமைப்படவில்லை ஆனால் மகிழ்ச்சியாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கு! உங்களைப் போன்று இப்படி வாப்பளித்து ஊக்கப்படுத்தும் நட்பூக்கள் உங்களால் இங்கு எனக்கு நிறைய கிடைத்தமைக்கு எப்படி நன்றி சொல்ல என்று தெரியவில்லை ஸ்ரீராம்...மிக்க மிக்க நன்றி! வேறு வார்த்தைகள் இல்லை...இப்படியான வார்த்தைகள் எனக்கு மேலும் பொறுப்பையும் கொடுக்கிறது.

    பள்ளியிலும், கல்லூரியிலும் இப்படித்தான் எனக்கு நிறைய தோழிகள் கிடைத்தார்கள். அதே போன்று எம் ஏ படிக்கும் போதும் ஆண் நண்பர்களும்......இப்போதும் இங்கும் நிறைய தோழமைக்கள் அதுவும் ஊக்கபப்டுத்தும் தோழமைகள். மீண்டும் ஒரு கல்லூரிக்குள் நுழைந்துவிட்ட உணர்வு

    அத்தனையும் எங்கள் ப்ளாகையும், தனது தளத்தையே எனக்குக் கொடுத்து எழுது எழுது என்று ஊக்கப்படுத்தும் நண்பர் துளசியையும் சேரும்.

    மிண்டும் மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல

    கீதா

    பதிலளிநீக்கு
  85. ஆமாம் ஸ்ரீராம் முரளிதரனும் கதையை முடித்துவிட்டு... பின்னால் ஊர்மிளையைக் குறித்துச் சொல்லியிருந்தார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  86. விடாமுயற்சியில் வருகின்ற தொடர். தொடர்ந்து வாசிக்கிறேன், ஒவ்வொருவர் பாணியில்.

    பதிலளிநீக்கு
  87. மிக்க நன்றி ஸ்ரீராம் அந்த வரிகளை மாற்றியமைக்கு.....மிக்க மிக்க நன்றி!!! உங்களுக்கும் சிரமம் வைத்தமைக்கும் வருந்துகிறேன்...

    மீண்டும் நன்றியுடன் (முடிவில்லாத நன்றிகள்!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  88. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  89. //ஜீவி ஸார்... நீங்கள் சமையல் பகுதி படிப்பதில்லை.//

    சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனம் இல்லாதவன் நான். வீட்டில் சாப்பிடுகிற பொழுது கூட வேறு ஏதாவது விஷயம் (வேறு என்ன, எழுதுகிற விஷயம் தான்!)
    மனசில் ஓடிக்கொண்டிருக்க மிஷின் போலச் சாப்பிட்டு எழுந்திருப்பவன் நான். இந்த விஷயத்தில் இன்றும் என் வீட்டுக்கார அம்மாவுக்கு குறை தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!