ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன் ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 36

 


மதுரா ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தானத்தில் தரிசனத்திற்குப் பிறகு புறப்பட்டு இரவு விருந்தாவனம் வந்த கதையை சென்ற வாரம் எழுதியிருந்தேன். யாத்திரைகளில் எல்லா இடங்களிலும் நன்றாக இருக்கும் தங்குமிடங்கள் அமைவதில்லை. சில பல இடங்களில் சுமார்தான். அதிலும் ஆக்ரா, அலஹாபாத் போன்ற இடங்களில் வெகு சுமார். ஆனால் விருந்தாவனத்தில் நாங்கள் தங்கிய ரகுநாத் ஆசிரமம் வெகு அழகாக இருந்தது. அங்கு ஏசி வசதியுள்ள அறைகளும் சாதாரண அறைகளும் இருந்தன. நாங்கள் ஏசி இருக்கும் அறையைத் தேர்வு செய்துகொண்டோம். யாத்திரை நடத்துபவர் ஏற்பாடு செய்யும் மண்டபங்களில் (Dormitry) தங்கிவிட்டால் கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால் இதுபோல தனி அறைகளை ஏற்பாடு செய்தால் அதற்கான வாடகையை நாம் கட்டிவிடவேண்டும். பஞ்ச துவாரகை யாத்திரையே மிகுந்த பிரயாண அலுப்பைத் தரும் ஒரு யாத்திரை. அதனால் கிடைத்த இடங்களில் தனி அறை (அதாவது இருவர் அல்லது மூவர்/நால்வர் தங்கும் அறைகள்) கிடைத்தால் நான் எடுத்துக்கொள்வது வழக்கம்.

ஆனால் பாருங்கவிருந்தாவனத்தை அடைந்து, எங்களுக்கான அறைகளைக் கொடுத்து நாங்கள் அதில் செட்டிலாக இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆசிரமம் மிகப் பெரியது. லக்கேஜைத் தூக்கிக்கொண்டு எங்களுக்கான அறைகளுக்குச் சென்றுஎன்று அதுவே பெரிய வேலையாகத் தெரிந்தது. அதற்கப்புறம் நாங்கள் இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்கச் சென்றோம் (அதுக்கே 11 மணிக்கு மேல ஆகிடும்). ஆனால் யாத்திரையை நடத்துபவர் எங்களை காலை 6 ½ மணிக்குத் தயாராகி காபி சாப்பிட்டுவிட்டு கோவில்களுக்குச் செல்லவேண்டும் என்று சொல்லியிருந்ததால், ஏசி அறையாக இருந்தாலும், காலை 4 மணிக்கே எழுந்து எங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவேண்டும். இது ஒன்றுதான் குழு யாத்திரையில் உண்டான கஷ்டம்.

ரகுநாத் ஆஸ்ரமம்

நல்ல விசாலமான ஆஸ்ரமம். சுற்றிவர நிறைய தங்கும் அறைகள்.

கோதா ஹரிதேவ் ஆலயம்

தங்குமிடத்திற்கு எதிரே இருந்த கோதா ஹரிதேவ் ஆலயத்திற்கு காலை 6:30க்கு நாங்களே சென்று வணங்கினோம். இது கொஞ்சம் புதிய கோவில்தான். (இதே பெயரில் கொஞ்சம் பழைய கோவில்-அதாவது நெடுங்காலத்துக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கோவில் உள்ளது) வ்ருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கில் கோவில்கள் இருக்கின்றன என்கிறார்கள். நாங்கள் பொதுவா 5-6 இடங்களுக்குத்தான் செல்வோம். வடநாட்டில் கோவில்களைவிட அந்த மண்ணை மிதிப்பதுதான் பிரதானம் என்பது யாத்திரை நடத்துபவரின் எண்ணம் (நிறைய விதிவிலக்குகள் உண்டு)

ஆலயத்தின் நுழைவாயில்

தூண்களில் இருந்த சிற்பங்கள் (இவைகளைப் பார்த்தால் ஆலயம் புதிது என்று தெரியும்)

அங்கு கீழே இருந்த கருடர் சிலை (என்று தோன்றியது) அதனால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்ட கோவிலாகவும் இருக்கக்கூடும்.


ஆலயத்தின் கோபுரம், பலிபீடம். குரங்குத் தொல்லையால் வலைப் பாதுகாப்பு.



மூலவர் கோதா ஹரி. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டநாதர்

இந்த ஆலயத்தில் தரிசனம் முடித்தவர்கள் யாத்திரை நடத்துபவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றோம். மற்றவர்கள் வரும்வரை, சீக்கிரம் வந்தவர்கள் அங்கிருந்த கோவிலில் நித்யானுசந்தானம் (திருப்பாவை போன்றவை) சேவித்தார்கள். எல்லோரும் வந்த பிறகு, யாத்திரை நடத்துபவர் ஏற்பாடு செய்திருந்த ஷேர் ஆட்டோ (எலெக்ட்ரிக்) வில் சென்று பிருந்தாவனத்தின் முக்கியமான இடங்களுக்குச் செல்வதாகத் திட்டம்.

இந்த ஆட்டோவில்தான் நாங்கள் பல கோவில்களுக்குப் பயணித்து, மதிய உணவு வாக்கில் தங்குமிடம் திரும்புவோம்அதனால் காலையிலேயே அறைகளைக் காலிசெய்துவிட்டு, யாத்திரை நடத்துபவர் தங்கியிருந்த இடத்திற்கு (அங்கும் சிறிய கோவிலும், சமையல் செய்ய பெரிய இடமும், எல்லோரும் உணவு உண்ண வசதிகளும் இருந்தன) சென்று எங்கள் லக்கேஜுகளை வைத்துவிட்டோம்.

வ்ருந்தாவனம் பெரிய இடமாக இருந்தாலும் கோவில்கள் எல்லாமே கொஞ்சம் பக்கத்தில்தான் இருக்கின்றன. இங்குதான் கண்ணனின் ராஸலீலைகள், யமுனை ஆறு சம்பந்தமான பல நிகழ்வுகள் (காளிங்க நர்த்தனம்) போன்றவை நிகழ்ந்தன. அவற்றில் முடிந்தவற்றை இன்று பார்க்கப்போகிறோம்.

காலை 7 ½ க்கு ஆட்டோவில் ஏறி 7 ¾ க்கெல்லாம் கோவிந்த் தேவ்ஜி ஆலயம் சென்று சேர்ந்தோம்.

கோவிந்த் தேவ்ஜி ஆலயம்

இந்த ஆலயம் அதனுடைய தனித்துவ கட்டிடக் கலையால் மிகுந்த புகழ் பெற்றது. இந்தக் கோவிலை ஆமீர் அரசர் மான்சிங் என்பவர் 1590ல் கட்டினாராம். அப்போதே அதற்கு 1 கோடி ரூபாய் செலவானதாம். 7 மாடிகளைக் கொண்ட கம்பீர கோவிலாக அது அப்போது விளங்கிற்றாம். எப்போதும்போல வில்லன் ஔரங்கசீப் காலத்தில் இது மிகுந்த சேதப்படுத்தப்பட்டு, தற்போது மூன்று மாடிக் கட்டிட அமைப்பு மாத்திரமே எஞ்சியிருக்கிறது. ஔரங்கசீப் காலத்தில் கோவிலில் இருந்த மூலவர், ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டாராம்.

இந்தக் கோவிலின் மூலவர், கோவிந்த் என்று அழைக்கப்படும்  ஸ்ரீகிருஷ்ணர்பெரிய விதானங்களாலும் அழகிய தூண்களாலும், சிவப்பு நிறக் கட்டிடத்தாலும் இந்தக் கோவில் எல்லா யாத்ரீகர்களையும் கவரும்படி அமைந்துள்ளது.


கோவிந்த் தேவ்ஜி ஆலயத் தோற்றம்

கண்ணைக் கவரும் நெடிய தூண்களும் அழகிய விதானங்களும்.


சிவப்பு நிறத்தில் விதானத்தின் அழகிய வடிவம், சிறிய மாடங்களுடன்

தற்போதைய கட்டிடமே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், கட்டிய புதிதில் எப்படி இருந்திருக்கும் ஏழு நிலைகளுடன்.

கோவிலின் மூலவர்

கோவிலின் உள்ளே நெடிய தூண்கள்

8 மணிக்கு கோவிந்த் தேவ்ஜி ஆலயத்தில் தரிசனம் முடிந்த பிறகு பத்து நிமிட தூரத்தில் உள்ள நிதிவனம் என்ற இட த்திற்குச் சென்றோம்.

நிதிவனம் (விலைமதிக்கமுடியாத வனம்)

வ்ருந்தாவனம் ஸ்ரீகிருஷ்ணரின் சிறிய வயது லீலைகளைப் பார்த்த இடம். இங்கு நிதிவனம் என்று அழைக்கப்படும் இடம், துளசிக் காடுஇங்குதான் ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளுடன் ராஸலீலை நடத்திய இடம்.

தற்போது சுற்றுச் சுவர்களுடன் இருந்தாலும், வனமாக ஒரு காலத்தில் இருந்த இந்த இடத்தை மிகவும் புனிதமாக இப்போதும் பேணுகிறார்கள். இன்றும் ஒவ்வொரு இரவும் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு கோபிகைகளுடன் ராஸலீலை நடத்துவதாக பக்தர்கள் நம்புவதால், மாலை மயங்கிய பிறகு இந்த இடம் பூட்டப்பட்டு விடுகிறது. யாரும் நுழைய முடியாது, நுழைந்தால் திரும்ப முடியாது என்று எல்லோரும் நம்புகின்றனர். அதனை மெய்ப்பிக்கும்விதமாக ஆக்ரோஷமான குரங்குகள் இந்த இடத்தில் ஏராளமாக உள்ளனஇந்த வனத்தின் மத்தியில் நிதிவனக் கோவில் (சிறியது) அமைந்துள்ளது. மாலை மயங்கியபிறகு பறவைகள் விலங்குகள் என்று எதுவுமே இங்கு இருப்பதில்லையாம்.

நிதிவனம் நுழைவாயில்

வனத்தில் இருந்த பிருந்தாவனங்கள்/கல்லறைகள், இந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெரியோர்களுடையது. துளசி மரங்கள் படர்ந்துள்ளன

துளசி வனத்தின் தோற்றம் (உள்ளிருந்து எடுத்த படம்)



இந்த வனத்தின் நடுவே ராதாராணி என்று சொல்லப்படும் சிறிய ஆலயம் இருக்கிறது. அதன் சன்னிதி முன்பு பக்தர்கள் பாடல்கள் பாடி தன்னை மறந்து ஆடுகின்றனர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ண கானம் கேட்டுக்-கொண்டிருக்கும்படியாக  அங்கு பாடல்கள் ஒலிக்கின்றன. எங்கள் குழுவினரும் அந்த நடனங்களில் கலந்துகொண்டார்கள்.


கோவில் மதிற்சுவரில் (நிதிவனம்) ராஸலீலா சிற்பம்


இந்தத் துளசி, நம் கோவில் துளசி இலை போல இல்லை.

வனத்துக்குள் கோவிலுக்குச் செல்லும் வழி. இருபுறமும் துளசி மரங்கள்.

அப்பொழுது வனாந்திரமாக துளசி மரங்களுடன் இருந்திந்த விருந்தாவனம் தற்போது ஒரு பகுதியை மாத்திரம் வனமாக வைத்துக்கொண்டுள்ளார்கள்

இணையத்திலிருந்து எடுத்த இந்தப் படம், எப்படி வசிப்பிடங்களில் ஆக்ரமிப்பால் துளசிவனம் சுருங்கிவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. இன்னும் சுருங்கிவிடக்கூடாது என்பதற்காக சுற்றிவர காம்பவுண்ட் அமைத்திருக்கின்றனர்.

நிதிவனத்தில் இருபது நிமிடங்கள் செலவிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு யமுனை ஆற்றுக்குச் சென்றோம்இங்குதான் காளிங்க நர்த்தனம் செய்த இடம் இருக்கிறது. இந்த இடம்தான் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அங்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார்கள்.

இந்த வாரம் ஏகப்பட்ட படங்களால் நிரம்பிவிட்டதால், அடுத்த வாரம்தான் நாம் யமுனை நதிக்கரைக்குச் செல்லமுடியும். ஒரு முறைதான் யாத்திரையைப் பற்றி எழுதப்போகிறோம் என்பதால் முடிந்தவரை நிறைய படங்கள் சேர்த்த பதிவாகக் கொடுக்க நினைக்கிறேன். யமுனை நதிக்கரையில் என்ன பார்த்தோம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

 (தொடரும்) 

39 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. வாசித்து விட்டேன். படங்கள் பார்த்தேன்.
    வழக்கம் போல ஒரே குறைதான். அவ்வளவு பெரிய நெடிய கற்சிற்பங்கள் கொண்ட தூண்களோடு கோயில்களைக் கட்டியவர்கள் கர்ப்பகிரங்கள் அமைத்து அவற்றுள் கற்சிலைகளாலான
    இறை உருக்களை அமைத்திருக்கவில்லையே என்பது தான்.

    அப்படிச் செய்திருந்திருந்தால் தென்னிந்தியக் கோயில்களைப் போல
    நித்ய கால பூஜைகள், அர்ச்சனைகள், வேண்டல்கள், தேர், திருவிழாக்கள் என்று
    பக்தர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கூடியிருக்குமே என்பது தான்.

    யமுனை நதி தீர்த்த கோயிலையும் காளிங்க நர்த்தன தரிசனத்தையும் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ வி சார்.. இதற்கு நெடிய பதில் எழுதணும். செவ்வாய் அன்று எழுதறேன். Our temples were relatively less affected compared to North by Muhamadeen barbariars

      நீக்கு
    2. //அப்படிச் செய்திருந்திருந்தால் தென்னிந்தியக் கோயில்களைப் போல நித்ய கால பூஜைகள், அர்ச்சனைகள், // - ஜீவி சார்... நாம் அஜந்தா எல்லோரா, மற்றும் பல்வேறு வட இந்திய இடங்களைப் பற்றிப் படித்திருப்போம். சிற்பக் கலையில் நமக்குக் குறைந்தவர்கள் இல்லை. சில இடங்களில் குளங்களை (வாவி) எவ்வளவு கலை நயத்துடன் செய்திருக்கிறார்கள் என்பது இணையத்தைப் பார்த்தாலே தெரியும்.

      அவர்களும் கற்சிலைகளிலால் ஆன இறை உருவைத்தான் ஆரம்பத்தில் வைத்திருந்தார்கள். நான் வாரணாசி பிந்து மாதவர் கோவிலைப் பார்த்திருக்கிறேன். ரிஷிகேசில் இன்னொரு வெகு புராதானமான வைணவக் கோவிலைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் உருவச் சிலைகளே இருக்கின்றன.

      கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியில் பல கோவில்களும் இடிக்கப்பட்டன. கோவில் நகைகளைக் கொள்ளையடிக்க கோவில்களே அழிக்கப்பட்டன. இது உச்சத்தில் இருந்தது ஔரங்கசீப் காலத்தில். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஔரங்கசீப் காலத்தில் காசியில் நுழைய வரி, கங்கையில் நீராட வரி என்று சட்டம் இருந்தது. அவரது பையன் முராத் காலத்தில், கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் வரி என்று விதிக்கப்பட்டது. ஔரங்கசீப் காலத்தில் வாரணாசியில் இந்துக்கள் நுழைய அனுமதி கிடையாது. சோம்னாத் கோவில் பற்றியும் அறிந்திருப்பீர்கள். அங்கு கொள்ளையடித்த தங்கம், வைர வைடூரியங்கள் யானை, குதிரை, மாட்டு வண்டி என்று பலவற்றில் ஏற்றிக் கொண்டுசெல்லப்பட்டது (ஒவ்வொரு முறையும்).

      அதனால்தான் அந்தக் கோவில்களில் உருவச் சிலைகளும் வழிபாட்டு முறைகளும் மாறிவிட்டன. வடநாட்டில் பல கோவில்களில் வழிபாட்டை நெறிப்படுத்தியவர் ஆதிசங்கரர் என்பது ஒரு பெரும் ஆச்சர்யம்.

      கொள்ளைக் கும்பல்கள் ஆட்சியாளர்களாக இருந்ததால் (இப்போதும் என்ன மாறிவிட்டதா என்று கேட்காதீர்கள்) திரும்பத் திரும்ப கற்சிலைகளை உண்டாக்காமல், மிக எளிமையாக இறை உருவை அவர்கள் வைத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் பக்தி, என் மனதில், மிக உயர்வாகப் பட்டது. உதாரணமா, துவாரகையில், (கோமதி துவாரகை) ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வதே மிக மிக ஜாக்கிரதையாகச் செய்வார்கள், பிறகு கண்ணாடி கொண்டு அவருக்கே அவற்றைக் காண்பிப்பார்கள்.

      இப்போதும் பூரி ஜெகன்னாதர், பண்டரீபுரம் என்று திருவிழாக் கொண்டாட்டங்கள் இருக்கின்றதே.

      நீக்கு
    3. உங்களுக்குத் தெரியும் தஞ்சை பெரிய கோவில் முழுவதும் பொன் வேய்ந்திருந்தது என்று. இது போலப் பலப் பலக் கோவில்கள். அத்தனையும் முஸ்லீம் படையெடுப்புகளால் அழிந்துபட்டன.

      தற்போதைய காலத்திலும் பல்வேறு கோவில்களில் ஆட்கள் இல்லாததாலும், முஸ்லீம் படையெடுப்புகளில் தற்காத்துக்கொள்ளவும், இறைவனின் உலோகச் சிலைகள் (உற்சவர்கள்) பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கின்றன.

      என்னுடைய அனுமானப்படி (ஆனால் ஆஸ்திகர்கள் அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் அதற்கொரு வரலாறு சொல்வார்கள்), திருவல்லிக்கேணி, காஞ்சீபுரம் போன்ற கோவில் திருமேனிகள் பூமிக்குள் புதைத்துவைக்கப்பட்டு, வெகு காலம் கழித்து எடுக்கப்பட்டதால் அந்த உற்சவர்கள் பழுதுபட்டிருப்பது தெளிவாகத் தெரியும். நீங்கள் கூகிளிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  3. வடக்கில் சுற்றுலா அல்லது பக்தியுலா வருபவர்கள் தங்குவதற்கேற்ப நிறைய சத்திரங்கள், விடுதிகள் என்று வசதிகள் நிறைய உள்ளதை அறிய முடிகிறது. தெற்கில் ஒரு சில கோயில்கள் தவிர மற்ற கோயில்களில் சத்திரங்கள், தங்குமிடங்கள் குறைவு.

    அதே போன்று வடக்கில் உள்ள கோயில்களில் கடவுளர் சிலைகளில் ஒரு தெய்வீகம் தென்படுவதில்லை. அலங்காரங்களும் ஒரு ஒழுங்கு இல்லாமல் சில சமயம் அலங்கோலமாகவும் இருக்கிறது. ஆகவே பக்தியுணர்வு என்பது இல்லை. ஏதோ கடமையில் கோயிலுக்கு வந்ததை போல் அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு மூட்டையைக் கட்டி அடுத்த கோயிலுக்கு செல்லும் மனப்பான்மையே ஓங்குகிறது என்று தோன்றுகிறது.

    விவரங்களும் படங்களும் வழக்கம் போல நன்றாக இருந்தன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். அப்படிச் சொல்லக் கூடாது. தெய்வக் குற்றமாயிடும். அவங்கள்ட இருக்கும் பக்தியுணர்வு நம்மிடம் இல்லையோ எனப் பலசமயங்களில் நான் நினைப்பேன்.

      நீக்கு
  4. பதிவு மிக அருமை.
    விரிவாக தங்கும் இடம் வசதி பற்றி சொன்னது நல்லது.
    தங்கும் இடம் அருமை. கோவில் படங்கள் மிக அழகு.

    குரங்கு தொல்லை என்று படித்ததும் நாங்கள் கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்து விட்டது.
    கோவரத்தனத்தில் தமிழ் நாட்டு முறையில் கட்டப்பட்ட பெருமாள் கோவிலுக்கு போய் இருந்தோம் மகள் குடும்பத்தோடு.
    குரங்கு என் மகள் மூக்கு கண்ணாடியை பிடுங்கி கொண்டு ஓட ஆரம்பித்து விட்டது. நான் வாங்கி தருகிறேன் காசு கொடுங்கள் என்றார் , ராதே ராதே என்று பின்னால் ஓடினார் அது கோவில் மேல் தளத்துக்கு தாவி ஓடி உடைத்து தூக்கி வீசியது. அதை எடுத்து வந்து கொடுத்து காசு கேட்டார்.
    இப்படி பழக்கி வைப்பார்களாம் குரங்கை என்று கண்ணாடி கடைக்காரர் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  5. கோவிந்த் தேவ்ஜி ஆலயத் தோற்றம் மிக அழகாய் இருக்கிறது.ராதா ராணி கோவில் துளசி வனம், நிதி வனம் விவரங்கள் குரங்குகள் காவல் காப்பது விவரங்கள் அருமை.
    பார்க்க போகிறவர்களுக்கு உதவும் கையேடாக இருக்கும் உங்கள் தலயாத்திரை பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். எனக்குமே பிறகு படிக்கும்போது சென்ற இடங்களை நினைவுக்குக் கொண்டுவர உபயோகமாக இருக்கும்

      நீக்கு
  6. காலை வணக்கங்கள்.
    திரு. நெல்லை தமிழருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது

    வேஷ்டி கட்டிக்கொண்டு
    நீல நிற சட்டை போட்டிருப்பவர்
    தான் நெல்லை தமிழரா
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைக்கிறேன்!

      நீக்கு
    2. வாங்க சக்ரபாணி சார். ஆம் அது நான்தான். By the by சென்றவாரம் கும்பகோணத்தில் சக்ரபாணி தரிசனம் கிடைத்தது

      நீக்கு
  7. நெல்லை, இரவுச் சாப்பாடு ரொம்ப லேட்டாகிறதே அப்ப தூக்கம் எல்லாமே லேட் ஆகும் இல்லியா...காலைல சீக்கிரம் எழுந்து தயாராகணும்னா குழுவில் எல்லாரும் ரெடியாகிடுவாங்களா?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாத்திரையில் இந்தச் சிக்கல்கள் உண்டு கீதா ரங்கன். இரவு 3 மணிக்குப் படுத்தாலும் ஐந்து மணிக்குத் தயாராகவேண்டியிருக்கும்இ. சில நாட்கள் தானே

      நீக்கு
    2. யாத்திரையில் இந்தச் சிக்கல்கள் உண்டு கீதா ரங்கன். இரவு 3 மணிக்குப் படுத்தாலும் ஐந்து மணிக்குத் தயாராகவேண்டியிருக்கும்இ. சில நாட்கள் தானே

      நீக்கு
  8. இன்று பதிலளிக்கத் தாமதமாகலாம். சென்னையில் இருக்கிறேன். இன்று திருநீர்மலை திருமழிசை திருநின்றவூர் திருஎவ்வுள் தரிசனம் வாய்த்தது

    பதிலளிநீக்கு
  9. /// வடநாட்டில் கோவில்களைவிட அந்த மண்ணை மிதிப்பதுதான் பிரதானம் என்பது ///

    சத்யம்...சத்யம்..

    பதிலளிநீக்கு
  10. தஞ்சை கீழ்வேங்கை நாட்டின் சூரக்கோட்டை ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா சமேத பரம நாத ஐயனார் கோயிலில் ஸ்வாமி தரிச்னம்.. சாப்பாடு..

    பதிலளிநீக்கு
  11. ஐயனார் செல்லப்பிள்ளை என்றாலும் துடியானவர்.

    எனவே படங்கள் எடுக்க வில்லை..

    திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன துரை செல்வராஜு சார்... துடியானவர் என்பதால் புகைப்படங்கள் எடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள்?

      நீக்கு
  12. கோவிந்த தேவ்யி பிருந்தாவனம் கோவில்கள் அழகாக இருக்கின்றன.

    துளசி வனமும் கண்டோம். துளசி வனம் பேணிவருவது சிறப்பானது. அந்திமாலையின் பின் வரலாறும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  13. ரகுநாத் ஆஸ்ரமம் பிரமாதமாக இருக்கிறது. நல்ல விசாலமாக நிறைய இடம் இருக்கிறது. அறைகளும். இதெல்லாம் கோயிலுக்குச் செல்றவங்களுக்கு மட்டும்தானா? இல்லை வேறு சுற்றுலா செல்றவங்களும் இங்கு தங்கிக் கொள்ள முடியுமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்குமானதுதான். அங்கு தங்கி மதுரா, கோகுலம் போன்ற இடங்களையும் தரிசிக்கலாம். 'எல்லாருக்குமா' என்று கேட்டால், நல்ல நடத்தையுள்ள எல்லோருக்கும்தான் என்று சொல்வேன். அந்த அந்த இடங்களின் புனிதத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்

      நீக்கு
  14. விருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கில் ஆலயங்களா!!!

    தெருவுக்கு தெரு இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. காரணம் ஒவ்வொருவரும் அங்கு ஆலயம் கட்ட ஆசைப்படுகின்றனர். வாரணாசியிலும் இப்படிப் பார்த்திருக்கிறேன். நைமிசாரண்யத்திலும்தான்

      நீக்கு
  15. குரங்குத் தொல்லையால் வலைப் பாதுகாப்பு.//

    நாம எல்லா இடத்தையும் பிடிச்சுக்கிட்டா அதுங்க எங்க போகும்!!
    எல்லாமே ஆஞ்சு வடிவங்கள்தானே! மனித மனம் விசித்திரமானது. சப்போஸ் ஒரு குரங்கு வந்து யாருக்கேனும் சகாயித்தால் ஆஞ்சநேயர் பாரு இப்படி ரூபத்தில் வந்து உதவியிருக்கிறார் என்போம். அதே குரங்கு நம்மிடம் எதையேனும் பறித்தால் தொல்லை என்போம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் விலங்குகளின் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டு, ஊருக்கு உபதேசமாக, காடு அழிகிறது மரங்களை வெட்டுகிறார்கள் என்று புலம்புவதுதானே வழக்கம். அயோத்தியிலும் குரங்குகள் அதிகம். அவை அவைகளின் பாரம்பர்ய இடங்களில் வாழ்கின்றன. அவ்ளோதான்

      நீக்கு
  16. துளசிவனமும் படங்களும் நல்லாருக்கு நெல்லை. துளசி மரங்களாக வளருமா..?

    எல்லாப்படங்களுமே நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். அங்குள்ள துளசி மரம் மாதிரி வளர்ந்திருக்கிறது. நம்மூர் கோவில் துளசி மாதிரி அதனைச் சாப்பிட முடியலை, கசக்குது. அது கிருஷ்ணதுளசி போலவும் இல்லை. ஆனாலும் அவற்றை துளசி என்றுதான் சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? விருந்தாவனத்தில்தான் ஒரிஜினல் துளசி மாலை கிடைக்கும். (பல இடங்களில் ஏதோ மரத்தை வைத்து ஏய்த்துவிடுவார்கள், உருத்திராட்சம் என்று இலந்தைக் கொட்டையைத் தள்ளிவிடுவது போல)

      நீக்கு
  17. விருந்தாவனம் - அனுபவங்கள் சிறப்பு. நிதிவன் அனுபவங்கள் - ஒரு ஹோலி சமயத்தில் அங்கே சென்று அப்போது கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை...

    மரங்களாக இருக்கும் துளசி... இங்கே இப்படித்தான் இருக்கும். நம் ஊர் போல செடிகளில்லை....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!