சனி, 28 செப்டம்பர், 2024

நவ்யா நாயரின் சாகசம். மற்றும் நான் படிச்ச கதை

 

தெற்காசியாவில் முதன்முறையாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 'பைபர் டிராக்கிங் நேவிகேஷன் 3.0' சாப்ட்வேர்' மூலம் 3 நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டி துல்லியமாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடு குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் எம்.ஜே.அருண்குமார் கூறியதாவது:  "'நேவிகேஷன் 2.0' தொழில்நுட்பத்தின் போது மூளை கட்டியை சுற்றியுள்ள நரம்புகள் துல்லியமாக தெரியாது. 'நேவிகேஷன் 3.0' தொழில்நுட்பத்தில் அகச்சிவப்பு கேமரா மூலம் மூளையில் கட்டி இருக்கும் இடம் வரைபடம் போல காட்டப்படும். வழக்கமான எம்.ஆர்.ஐ., பரிசோதனை படங்களை 'டிப்யூசன் டென்சர் இமேஜிங்' (டி.டி.ஐ.) தொழில்நுட்பத்திற்கு மாற்றி அந்த படங்களை அடிப்படையாக வைத்து கட்டிகளின் இருப்பிடம் துல்லியமாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நரம்புகளுக்குள் ஊடுருவிய கட்டிகளின் வெளிப்பகுதியை மட்டும் அகற்றி கதிரியக்கமும் கீமோதெரபி சிகிச்சையும் வழங்குகிறோம். புற்றுநோய் அல்லாத கட்டிகள் முழுமையாக அகற்றப்படும் போது அவை மீண்டும் வளர்வதில்லை.  இந்த அறுவை சிகிச்சையின் போது மூளையின் நரம்புத் தண்டுகளின் செயல்பாடுகளை நேரடியாக பார்க்க முடியும். கை, கால்களை இயக்கும் நரம்புகள், பேச்சு மற்றும் செயல்பாட்டுக்கான நரம்புகளின் ஓட்டத்தை பார்த்துக் கொண்டே கட்டியை மட்டும் அகற்ற முடிந்தது. நோயாளிக்கு எந்த பக்கவிளைவும் பக்கவாதமும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது. இரண்டு நோயாளிகள் பத்து நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினர். 3வது நோயாளி மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளார்.  ஜெர்மனியின் பிரைன் லேப் உருவாக்கியுள்ள இத்தொழில்நுட்பத்தால் அறுவை சிகிச்சைக்கான நேரம் குறைகிறது. நோயாளி சீக்கிரம் குணமடைய முடியும். இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்" என்றார்.

டாக்டர்கள் கணேஷ், அருண்குமார், ரமா சங்கரி, பாஹிமா, விநாயகமணி, பணிக்கர், சங்கீதா, பிரைன் லேப் இந்திய நிர்வாகிகள் விபா சிங், அர்த்தநாரீஸ்வரர் உடனிருந்தனர்.
======================================================================================================

ரீல் அல்ல ரியல்.  நவ்யா நாயரின் சாகசம்.



=====================================================================================================


நன்றி பானு அக்கா.


==================================================================================================

நான் படிச்ச கதை 
ஜீவி 


குமுதத்தில் கதைகளை  வாசியுங்கள்.  .  உங்களுக்குப் பிடித்திருந்தால் கதை பிடிச்சிருக்கு என்று சொல்லாதீர்கள். அது ஒரு 'குமுதக்கதை'யென்று சொல்லுங்கள்,  என்று அந்தக் காலத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.  

இதோ அப்படியான ஒரு குமுதக்கதை ஒன்று உங்கள் வாசிப்புக்கு இன்று.

1975-ம் வருடம் மே மாதம் குமுதத்தில் பிரசுரமான கதை.  கிட்டத்தட்ட 49 வருடத்திற்கு முந்தியது.
படித்துப் பார்த்தால் அப்படித் தெரியாது.  இன்றும் கதை சொல்லலில் மிளிர்ந்து பளபளக்கும் கதை. எழுத நினைக்கும் எபி வாசகர்கள் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு நாமும் இதே போல் ஈஸியாக வார்த்தைகளை வரிகளாக்கி எழுத மாட்டோமா என்று ஆசையைக் அடி மன ஆழத்தில் கிளப்பும் கதை.

கதைக்காக நாம் தேர்ந்தெடுக்கும் விஷயம் நமக்குப் பிடித்த மாதிரி எது வேணாலும் இருக்கலாம்.   நான் அதைப் பற்றிச் சொல்லவில்லை.  வாசிப்பதற்கு சுலபமாக வழுக்கிக் கொண்டு போகும் ஒரு எழுத்து நடை சிலருக்கு மட்டும் கை வந்திருந்திருப்பதை நாமும் கைப்பற்றி நம் இஷ்டத்துக்கு எழுத வழி காண இத்தனை வாசிப்பு அனுபவங்களும் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சிகள் தான் இவையெல்லாம்.

ஹேமா ஆனந்ததீர்த்தன் என்ற அந்த நாளைய பிரபல எழுத்தாளர் எழுதிய கதை இது.  நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்.  இவரை குமுதம் எழுத்தாளர் என்றும் சொல்லும் அளவுக்கு குமுதம் இதழுக்கு என்றே பிரத்யேகமாக நிறைய எழுதியிருக்கிறார்.  வெகுஜன பத்திரிகைகளின் லாவகமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்.

ஒரு புது மண தம்பதிகளைப் பற்றிய கதை.  இன்னும் சாந்தி முகூர்த்தம் கூட நடக்காத புதுக்கருக்கு கலையாத தம்பதிகள்.  கூட பையனின் அம்மா.  இந்த மூன்று பேர்கள் தாம் கதை மாந்தர்கள்

நாமக்கல்  நரசிம்ஹ ஸ்வாமி கோயில்  தீர்த்தத்திலே  மூழ்கி எழுந்து ஈரத் துணியோட சுவாமி சன்னதியை வலம் வந்து...  என்று காலை - மாலை இரண்டு வேளையும் 12 நாட்களுக்கு பையனும் மருமகளும் விரதம் கடைபிடித்த பிறகு மற்ற தாம்பத்திய சுபகாரியங்கள்  நடத்த பையனின் தாயார் வேண்டிக் கொண்டிருப்பதால் நாமக்கல் வந்திருக்கிறார்கள்.

இனி மேல்  நீங்க்களும்,  ஹேமா ஆனந்த தீர்த்தனின் இந்தக் கதையும்.  சிறுகதைகள்.காம் சுட்டியை க்ளிக்கி கதையை வாசித்து விட்டு உங்கள்  வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

சிறுகதைகள்.காமிற்கு நன்றி.

- ஜீவி -

இனி ஹேமா ஆனந்த தீர்த்தன் எழுதிய 'நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்' சிறுகதை....

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபத்தெட்டு வயதாகியும் வரதன்ஒரு ‘கால்கட்டு’ இல்லாமல் தடிப் பிரம்மசாரியாக நின்றிருந்த போதும், அரையும் குறையுமாக் அவனைப் பற்றியும் அவன் ஆபீசிலுள்ள கொங்கணிப் பெண்ணைப் பற்றியும் சம்பந்தப்படுத்தி ரங்கநாயகி காதில் சில விஷயங்கள் விழுந்த போதும் அவள் பட்ட கவலையை யார் அறிவார்கள்? அப்போது அவள் தங்கள் குலதெய்வமான நாமக்கல் நாமகிரித் தாயாரை வேண்டிக் கொண்டாள். “தாயே, நல்லபடியாக எங்கள் வரதனுக்கு ஒரு நல்ல இடத்தில் சீக்கிரமே கல்யாணம் ஆகட்டும். அவனையும் அவன் மனைவியையும் உன் சந்நிதிக்கு வந்து பன்னிரண்டு நாள் சேவை செய்ய வைக்கிறேன். கண் திறந்து பார் தாயே நாமகிரி!” 

அவள் பிரார்த்தனை சீக்கிரமே பலித்து விட்டது. மைதிலி வரதராஜனின் மனைவியாக வந்தாள். ஸ்ரீரங்கத்துப் பெண். நல்ல அழகி. 


“நீ என்னம்மா, என்னைக் கன்ஸல்ட் செய்யாமல் வேண்டிக் கொண்டுவிட்டு இப்போ வந்து தொண தொணக்கறே. ஒரு நாளா ரெண்டு நாளா? பன்னிரண்டு நாள். எப்படி முடியும்? இப்போ ஒண்ணும் நடக்காது. எனக்கு லீவு கிடைக்காது”, என்றான் வரதன். 

“எப்ப கேட்டாலும் இப்படியே சொன்னா எப்படிடா?” 

“சரி பார்க்கலாம். நாளைக்கு மானேஜரைக் கேட்டுப் பார்க்கிறேன். எப்படியும் கல்யாணமான பிறகு ஹனிமூனுக்குக் கூடப் போகவில்லை. இந்தச் சாக்கை வைத்துக் கொண்டு இப்போது ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தால் போச்சு,” என்றான் வரதன், ஓரக்கண்ணால் மைதிலியைப் பார்த்துப் புன்னகைத்தபடி. 

“சீ, வாயை அலம்பு, ஹனிமூன் போறானாம் ஹனிமூன். அப்படி யெல்லாம் போய் ஜாலியா இருந்து விட்டு வர்றதில்லைடா இது.” 

“என்ன பண்ணணும்கறே பன்னிரண்டு நாளும்?” 

“ஒண்ணுமில்லே. தினமும் காலையிலே நரசிம்மதீர்த்தத்துலே குளிச்சுட்டு ஈரத் துணியோடு ஆஞ்சநேயர், கொடிக் கம்பம், நரசிம்மர், தாயார் என்று ஒவ்வொரு பிராகாரத்திலும் பன்னிரண்டு பிரதட்சிணம், நமஸ்காரம் செய்யணும். ஒவ்வொரு பிராகாரத்திலும் அர்ச்சனை செய்யணும். உச்சி கால பூஜை நடக்கும்போது சந்நிதியில் இருக்கணும். ஆரத்தி கொடுத்த பிறகு மூஞ்சியிலே தீர்த்தம் தெளிப்பார்கள். பிறகு பலி சாதம்னு சொல்லி, சின்னதா ஒரு உருண்டை சாதம் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் சாப்பிடணும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு சாயங்காலம் மறுபடியும் அதே மாதிரி குளத்தில் குளிச்சிட்டுப் பிரதட்சிணம், நமஸ்காரம், அர்ச்சனை எல்லாம் செய்துவிட்டு வீட்டுக்கு வரணும். ராத்திரி சாப்பிடக் கூடாது. ரொம்பப் பசிக்கிறாப்பலே இருந்தால் பலகாரம் செய்யலாம். பன்னிரண்டு நாளும் இப்படி இருந்ததுக்கப்புறம் பதிமூணாவது நாள் ஸ்வாமிக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் சேவை முடிஞ்சுது”, என்று ரங்கநாயகி விவரித்தாள். 

“அடேயப்பா! தபசுதான் போலிருக்கு”, என்றான் வரதன். 


நாமக்கல் வந்து சேர்ந்த அன்றைக்கே மூவரும் மாலை கோவிலுக்குள் போனார்கள். 

தாயார் சந்நிதி அர்ச்சகர் எல்லாம் விவரமாகச் சொன்னார். ரங்கநாயகி சொன்னபடியே தான் எல்லாம். ஒன்றை மட்டும். அவள் சொல்ல விட்டு விட்டிருந்தாள். அதை அர்ச்சகர் சொன்னார். “படுக்கையில் படுக்கக் கூடாது. பாய்கூட வேண்டாம். புடவையோ, துண்டோ தரையில் விரிச்சு அதன்மேல்தான் படுக்கணும். தலைக்கு ஏதாவது உசரக் கட்டையோ புஸ்தகமோ வெச்சுக்குங்க”, என்றார். “அப்புறம் தம்பதிகள் சேர்ந்து படுக்கப்படாது. தனித்தனியாகப் படுக்கணும். பெண்கள் ரெண்டு பேரும் ரூம்லே படுத்துக்கட்டும். நீங்க வாசத் திண்ணையிலே படுத்துக்குங்கோ. கண்ட் ரோல் யுவர்செல்ஃப் ஃபர் ட்வெல்வ் டேஸ்,” என்று வரதராஜனைப் பார்த்துக் கூறித் தமது தெற்றுப் பற்கள் தெரியப் புன்னகைத்தார். புன்னகை அவர் சொன்ன விஷயத்திற்காகவும் இருக்கலாம். இங்கிலீஷ் பேசியதற்காகவும் இருக்கலாம். வரதனும் அசடு வழியச் சிரித்தபடி விடை பெற்றுக் கொண்டான். 


“குளத்தில் இறங்கிக் குளிப்பியா? குளிருமே?” என்று வரதன் மைதிலியைக் கேட்டான். 

அவர்கள் இருவரும் வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரங்கநாயகி உள்ளே வீட்டுக்கார அம்மாளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்.

“எனக்குக் காவேரியில் குளிச்சுப் பழக்கம். உங்களுக்குத்தான் ஆறு, குளம் பழக்கம் கிடையாது.” 

“பார்க்கலாம், நாளையிலேர்ந்துதானே சேவை ஆரம்பிக்கப் போகிறோம்? இன்னிக்கு நானும் ரூம்லேயே உன்னோடு படுத்துக்கலாம் இல்லையா?” என்று வரதன் விஷயத்திற்கு வந்தான். ரங்கநாயகி வருவதற்குள் இந்த விஷயத்தை முடிவு பண்ணிவிட வேண்டுமென்று அவனுக்கு ஆத்திரம். 

மைதிலி சிரித்தாள். 

“என்ன சிரிக்கிறே? நான் சீரியஸ்ஸா கேட்கறேன்”, என்று முகத்தைச் சுளித்தான். 

“எனக்குத் தெரியாதம்மா. அம்மாவைக் கேட்கலாம்.” 

“அம்மாவையும் கேட்கவேணாம் ஒருத்தரையும் கேட்க வேணாம். நாளையிலேந்து தான் நியமம்.” 

“உங்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கு. இப்படியும் கூடவா மனசு அலைய விடுவார்கள் கட்டுப்பாடு இல்லாம்?” என்று மைதிலி மறுபடியும் சிரித்தாள். 

“போறும் வாயை மூடு. கன்னத்துலே ஒண்ணு வெச்சேன்னா தெரியுமா சேதி. ரொம்பத்தான் மனசைக் கட்டுப்படுத்தத் தெரிஞ்சவ. உன் வண்டவாளத்தை எங்கிட்டேயே காட்டறியா?” என்று வரதன் கூறிக் கொண்டிருந்த போதே ரங்கநாயகி அங்கே வந்து விட்டாள். 

“என்ன வாக்குவாதம் ரெண்டு பேருக்கும், வாசலில் உட்கார்ந்துகொண்டு?” 

“ஒண்ணுமில்லை அம்மா. என்னாலே எல்லா சந்நிதியிலேயும் பன்னிரண்டு பிரதட்சிணம் நமஸ்காரம் பண்ண முடியாதுன்னார். முடியும். எனக்கு சக்தி இல்லாட்டாலும் தாயார் சக்தி கொடுப்பாள்னு சொல்லிக் கொண்டிருந்தேன்,” என்று சமயோசிதமாகப் புளுகினாள் மைதிலி. 

பெண்களுக்கே ஆண்களைவிட இது விஷயத்தில் சாதுரியம் அதிகம் என்று நினைத்துக் கொண்டான் வரதராஜன். அதை மறுபடியும் நிரூபித்தாள் மைதிலி. அடுத்த கணமே, “அம்மா. இன்னிக்கி ராத்திரி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடா பலகாரமா? சேவை நாளை யிலிருந்துதானே?” 

“பலகாரம்தான். எனக்கும் சேர்த்து மூணு பேருக்குமே ஒரு உப்புமா கிளறிடறேன். நாளைக்குச் சேவை ஆரம்பிக்கிறதுன்னா இன்னி ராத்திரியிலேந்தே நியமம் ஆரம்பிச்சுடணும்.”


அன்று இரவு வரதன் வாசல் திண்ணையில் துண்டை விரித்துப் படுத்தான். பகலெல்லாம் வெய்யில் பட்டுச் சூடேறியிருந்த சிமெண்ட் திண்ணையில் சூடு இறங்கியிருக்கவில்லை. அந்த வெப்பமும், தனிமையினால் உடலில் கிளம்பிய வெப்பமும் துன்புறுத்தத் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தான். 

மறுநாள் காலை. இருவரும் குளத்திற்குக் குளிக்கப் போனார்கள். வேறு யாரும் இருக்கவில்லை. அவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். இருவரும் அருகருகே குளத்தில் இறங்கினர்.

“பாசி வழுக்கும். ஜாக்கிரதை!” என்றான் வரதன் – மைதிலி புடவையை அவிழ்த்து ஒரு மடிப்பாக உடுத்திக் கொள்வதை ஓரக்கண்ணால் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டு. 

“ஆமாம். பன்னிரண்டு நாளும் வழுக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?” என்று கூறிச் சிரித்தாள் மைதிலி. 

“பொடி வச்சுப் பேசறியா?” என்றான் வரதன். 

“ராத்திரி தூக்கம் வந்ததா?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டாள் மைதிலி. குறும்பு அவள் உதடுகளில் நடனமாடியது. 

“உனக்குக் கேலியா இருக்கு. வா வா, சேவை முடியட்டும். அப்புறம் பேசிக்கிறேன்,” என்றான் வரதன். 

இருவரும் குளித்தார்கள். இருவருக்கும் அது புது அனுபவம். மைதிலியின் பொன்மேனியில் நீர்த்திவலைகள் முத்து முத்தாக உருண்டோடும் அழகு அவனுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

மைதிலியும் ஈரத்தோடு கூடிய கணவனின் பரந்த மார்பையும், உருண்டு திரண்ட தோள்களையும், குளித்துத் துவட்டிக் கொள்வதற்கு முன் உடலில் ரோமங்கள் படிந்து இருக்கும் அழகையும் பார்த்தும் பார்க்காமலும் கிளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தாள்.

“குளிரவே இல்லை. உங்களுக்கு?” 

“எனக்கும் தான்… போகலாமா?” 

இருவரும் ஒவ்வொரு சந்நிதியாகச் சென்று முறையாகப் பிரதட்சிணம், நமஸ்காரம் எல்லாம் செய்து விட்டு வீடு திரும்பினார்கள். சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டார்கள்.

மறுபடியும் மாலையில் அதே மாதிரி. கோவிலில் அதிகமாகக் கூட்டமே இல்லை. “முன்பெல்லாம் சேவை செய்யறவா நிறைய வருவா. இப்போ உங்களை மாதிரி யாராவது ஒண்ணு, ரெண்டு பேர்தான் வரா. பக்தர்களும் குறைஞ்சு போச்சு. காலம் கெட்டுப் போச்சு. தெய்வ பக்தி குறைஞ்சுடுத்து. என்னைப் போல அர்ச்சகாளுக்கெல்லாம் ஜீவனம் ரொம்பக் கஷ்டமாய்ப் போயிட்டுது” என்றார் அர்ச்சகர். 


“ஏழு நாள் ஓடிவிட்டது”, என்றாள் மைதிலி, இருவரும் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, 

“இன்னும் நாலு நாள் பாக்கி”, என்றான் வரதன். 

“நல்லா இருக்கு உங்க கணக்கு. பன்னிரண்டிலே ஏழு போனா நாலு நாளா? இன்னும் அஞ்சு நாள்”. 

“நான் ராத்திரி கணக்குச் சொல்றேன். இன்னும் நாலு ராத்திரிகள் ஓடினால் போதும். பன்னிரண்டாவது நாள் சேவை முடிஞ்சுடறது. அன்னிக்கு ராத்திரி நியமம் ஒண்ணும் வேண்டியதில்லை.” 

“எப்பப் பார்த்தாலு இதையே நினைச்சுட்டிருங்கோ!” என்று சிரித்தாள் மைதிலி. 

“உனக்கு இந்த நினைப்பே இல்லை என்று நெஞ்சிலே கையை வைச்சு சொல்லு”, என்று அவள் நெஞ்சின் மீது தன் கையை வைக்கப் போனான் வரதன். 

“ஊம். இது கோயில். ஆக்கப் பொறுத்தாச்சு. ஆறப் பொறுக்கணும்,” என்று மைதிலி அவன் கையைப் பற்றிப் பின்னுக்குத் தள்ளினாள். 


பதினொரு நாள் சேவை முடிந்துவிட்டது. திண்ணையில் படுத்திருந்த வரதன் மறுநாள் இரவு மைதிலியுடன் கழிக்கப் போகும் சுகத்தை நினைத்து, நாட்களை எண்ணுவதை விட்டு மணிக்கணக்கில் புகுந்திருந்தான். 

திடீரென்று படபடவென்று மழைத் துளிகள் மேலே விழ ஆரம்பித்ததும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். விரித்துப் படுத்திருந்த வேட்டியையும் தலைக்கு வைத்துக் கொண்டிருந்த டிக்ஷனரியையும் எடுத்துக் கடகத்தில் இடுக்கிக்கொண்டு கதவைத் தட்டினான். 

கதவைத் திறந்தார்கள். வரதன் அறைக்குள் நுழைந்து சுற்று முற்றும் பார்த்தான். 

“எப்படிப் படுத்துக்கறது? மழை நிற்காது போலிருக்கு. நின்னாலும் கூடத் திண்ணையெல்லாம் ஈரமாயிட்டது,” என்றான். 

“இங்கேயே படுத்துட்டால் என்ன?” என்ற மைதிலி மாமியாரியின் முகத்தை நோக்கினாள். 

“மூணு பேரும் இங்கே எப்படிப் படுத்துக்கறது?” என்று ரங்கநாயகி தயங்கினாள். “வீட்டுக்காரரை வேணா சின்ன ரூமைத் திறந்து விடச் சொல்லலாமா?” 

“வேண்டாம், அம்மா. அவர்களை உபத்திரப்படுத்த வேண்டாம். மணி ஒண்ணாயிட்டுது. இன்னும் நாலு மணி நேரம். நீங்க அப்படி ஓரமா படுத்துக்குங்கோ. அவர் இப்படி இந்த ஓரமா படுத்துக்கட்டும், நான் நடுவிலே படுத்துக்கறேன். பரவாயில்லை,” என்றாள். 

மூவரும் படுத்துக் கொண்டார்கள். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.  

ரங்கநாயகி சுவரைப் பார்த்தபடி படுத்திருந்தாள். மதிலியின் இடுப்பை ஒரு கரம் அணைத்துக்கொண்டது. மைதிலி திடுக்கிட்டாள். கணவனின் கையை அகற்றியபடியே, “வேண்டாமே. இன்னிக்கு ஒருநாள். ப்ளீஸ்”, என்று முகத்தருகே வந்து கிசுகிசுத்தாள். 

“பரவாயில்லை. மைதிலி. கொஞ்ச நேரம். நான் சும்மா படுத்திருக்கேன்”, என்று அவன் கெஞ்சுவது போலக் கேட்டான். 

“அப்படித்தான் சொல்லுவீர்கள். அப்புறம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜாஸ்தியாயிடும்; உங்களாலே சும்மாயிருக்க முடியாது.” என்றாள் மைதிலி. 

அவள் வாய்தான் அப்படிச் சொல்லிற்றே ஒழிய, கைகள் அவன் தோள்களையும் கன்னங்களையும் வருடின.

தொண்டையைக் கனைத்தபடி ரங்கநாயகி இந்தப் பக்கம் திரும்பினாள். வரதன் உருண்டபடியே தன்னிருப்பிடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். அயர்ந்து தூங்குபவனைப்போல.

“இந்த மழை வந்துட்டுது சனியன். என் ஆஸ்துமாவுக்குக் கொண்டாட்டம்தான். இன்னிக்குத் தூக்கம் அவ்வளவுதான்,” என்று கூறியபடியே ரங்கநாயகி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். 

மைதிலி தூக்கத்திலிருந்து விழித்தெழுபவள் போல எழுந்திருந்து கவலைப்பட்டாள். 

“நீ தூங்கு. நான் இனி விடிய விடிய இப்படியேதான் உக்கார்ந்திட்டிருப்பேன். இந்தச் சனியன் இப்போ போகாது.” என்று மூச்சு இழுத்துக் கொண்டு பேசினாள் ரங்கநாயகி. 

மூன்று பேருக்குமே தூக்கமில்லாமல் கழிந்தது அந்த இரவு.


மறுநாள். வரதனும் மைதிலியும் குளிப்பதற்காகக் குளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். கோவில் வெளிப் பிராகாரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, மதில் சுவரின் மீது வரிசையாக ஏழெட்டுக் குரங்குகள் வந்து கொண்டிருந்தன. 

“இவ்வளவு குரங்குகள் நாம் ஒருநாள் கூடப் பார்க்கலை இல்லையா?” என்றாள் மைதிலி கணவனிடம் அவைகளைச் சுட்டிக் காட்டி. 

வரதன் அவைகளைப் பார்த்து, ‘உஷ்’ என்று சீட்டியடித்தான்.

அடுத்த நிமிடம் ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் குரங்கள் சுவரிலிருந்து குதித்து அவர்கள் எதிரே வந்து வழியை மறைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டன. 

“உஸ். போ,” என்று வரதன் கையை ஓங்கினான். 

“குர்ர்ர்.” என்று அவை கோரமாகப் பல்லைக் காட்டிக் கொண்டு உறுமின.

“ஐயோ எனக்குப் பயமாயிருக்கு. நீங்க ஏன் அதுங்களைப் பார்த்து விசிலடிச்சிங்க?” என்று மைதிலி அவனோடு ஒட்டிக்கொண்டாள். 

“பயப்படாதே, போயிடும்,” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு. “தே, போறயா இல்லையா?” என்று கீழேயிருந்த கல்லையெடுத்து எறிவது போல் பாசாங்கு செய்தான். 

அடுத்த நிமிடம் ஒரு பெரிய குரங்கு ‘சங்’ கென்று அவன் மீது பாய்ந்துவிட்டது. இன்னொரு குரங்கு மைதிலியின் புடவையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. 

“ஐயோ, குரங்கு! குரங்கு!” என்று மைதிலி வீறிட்டாள். 

நல்ல வேளையாக, அந்த வழியாக அப்பொழுது வந்து கொண்டிருந்த  கோவில் மடைப்பள்ளிக்காரர் ஒரு தடியைக் கொண்டு வந்து விரட்டவும் குரங்குகள் ஓடிப்போய்விட்டன. 

மைதிலியின் நெஞ்சுப் படபடப்பு வெகுநேரம் அடங்கவே இல்லை. 


அன்று மாலை மங்கள ஆரத்தி யெல்லாம் முடிந்து, மறுநாள் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி அர்ச்சகருடன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் மைதிலி, வரதன், ரங்கநாயகி மூன்று பேரும். 

பேச்சோடு பேச்சாக அர்ச்சகர் சொன்ன ஒரு விஷயம், “ஒரு நாள் பாருங்கோ, சேலம் கலெக்டர் வந்திருக்கார். தாயாரைத் தரிசித்து ஒரு அர்ச்சனை பண்ணிடுங்கோன்னு தர்மகர்த்தா சொன்னார். அப்போ நான் குளிச்சிருக்கலை. தாயார் சந்நிதிக்குப் போகப்படாது. தர்மகர்த்தாவிடம் சொன்னேன். அஞ்சு நிமிஷத்திலே குளிச்சிட்டு வந்துடறேன்னு சொன்னேன். அதெல்லாம் வேண்டாம்னுட்டார். கலெக்டருக்கு நேரமில்லையாம். ஈரோட்டுக்குப் போகணுமாம். சீக்கிரமாக ஆகட்டும், பரவாயில்லை என்றார். சரின்னு அவர் சொன்னபடியே அப்படியே விழுப்போட மனசுக்குச் சமாதானமில்லாமலே அர்ச்சனையைப் பண்ணிக் கலெக்டரை அனுப்பிச்சுட்டு கர்ப்பக்கிரகத்தின் கதவை மூடப் போற சமயம் தரையிலே என்னமோ பளபளத்தது. தாயாரோட மூக்குத்தி மாதிரி இருந்தது. என்னடாது மூக்குத்தி எப்படிக் கீழே விழுந்தது என்று அதை எடுக்கப் போனேன். தொட்டேனோ இல்லியோ, கையிலே பொட்டுனு போட்டுட்டது, பெரிய செந்தேள்! தாயார் கை மேலே ‘பனிஷ்மெண்ட்’ கொடுத்துட்டா. மூணு நாள் விரலை அசைக்க முடியலே.” 

‘குரங்கு என் மேலே விழுந்து ஏன் மிரட்டியது என்று இப்போ புரியுது’ என்கிற அர்த்தத்திலே வரதன் மைதிலியைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். 

‘நல்ல வேளை, இவர் அம்மா இடைஞ்சல்னு நினைச்சோம். அவர் இல்லாம இருந்திருந்தா இன்னும் என்ன அபசாரம் பண்ணியிருப்போமோ. குரங்கு நம்மைக் கடித்துக் குதறியிருக்கும்’, என்று மைதிலி நினைத்துக்கொண்டாள். 

‘ஆஸ்துமான்னு பொய் சொல்லி இவர்களை ராத்திரி பூரா நெருங்க விடாம கண்காணிச்சேனோ, தப்பித்தார்களோ! இல்லாட்டா என்ன அசம்பாவிதம் நடந்திருக்குமோ’, என்று ரங்கநாயகி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

5 கருத்துகள்:

  1. குமுதம் கதை நல்ல பகிர்வு. இந்தக் கதை விகடனில் வெளியாகியிருக்காது என்றே தோன்றுகிறது.

    மாருதியின் ஓவியத்தோடு பகிர்ந்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரத்தின சுருக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி நெல்லை.

      விகடனில் வெளியாகி இருக்காது என்பதற்கு கேரண்டி ஏதும் இல்லை நெல்லை. விற்பனை ஒன்றே எக்காலத்தும் இவர்கள் தாரக மந்திரம்.

      வாய்ப்பு கிடைத்தால் விகடனில் வெளியான ஜெயகாந்தனின் ஒரு கதையை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  2. அமன் கஷ்யப்பின் ஆர்வமும், விடா முயற்சியும் பாராட்டத் தகுந்தது.

    ஜீவி சார் துடங்கி வைத்த பகுதிக்கு அவர் இந்த வாரம் மீள் வருகை தந்து ஹேமா ஆனந்த தீர்த்தனின் கதையை அறிமுகப்படுத்தியது சிறப்பு.

    என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவரும் கதையை முழுவதுமாக தந்திருக்கிறார். கதைக்கு அவர் தந்திருக்கும் முன்னுரையில், அந்தக் கால குமுதம் பற்றிய சிறப்புகளை விவரமாக தந்திருக்கிறார்.

    ஆனாலும் 'நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்' கதையின் கருத்துக்கும் வேண்டுதலுக்கும் உள்ள முடிச்சு எனக்கு விபரீதமாக தோன்றுகிறது. நீண்ட நாள் குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்கள் இது போன்று சன்னதிக்கு வந்து விரதம் இருந்து தொழுகிறேன் என்று வேண்டிக்கொள்வதில் அர்த்தம் உண்டு. புதிதாக கல்யாணம் ஆனவர்கள் கோயிலுக்கு வருவதாக மட்டும் தான் வேண்டிக்கொள்வார்கள் என்பது எனது கருத்து.

    எப்படியோ அந்தக்கால குமுதத்தின் கிளுகிளுப்பூட்டும் ஒரு கதையை வாசகர்களுக்கு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஹேமா ஆனந்ததீர்த்தன் சில மொழிபெயர்ப்பு கதைகளையும் குமுதத்தில் வெளியிட்டுள்ளார் என்பது எனது அறிவு.

    இனி மற்றவர்களும் இது போன்று கதைகளை அறிமுகப்படுத்தத் துவங்குவர் என்று நம்புகிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஜெஸி ஸார் தங்கள் பதிவு இந்த சனிக்கிழமை மட்டும் இருக்காது
    என்று தெரியப்படுத்தப் பட்டு அவசரத்திற்கு கை கொடுக்க வந்தேன்.

    பை த பை பக்தர்களின் வேண்டுதல் என்பது எது வேண்டுமானாலும் இருக்கலாம் இல்லையா?
    அருள் பாலிக்கும் இறைவனுக்கும் அந்த பக்தருக்குமான அருள் பாலிக்கும் அந்த உறவில் இதெல்லாம் தான் வேண்டுதலாக இருக்க வேண்டுமென்றோ, இதற்கெல்லாம் தான் வேண்டிக் கொள்வார்கள் என்றோ வரையறுக்க நாம் யார் -- என்றே நினைக்கிறேன்.

    திருடப் போகும் தன் காதியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்ட ஒரு பக்தனின் நினைவு வருகிறது!

    நான் என்றுமே கதையின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். அந்தக் கதை வாசிப்பதற்கு சலிப்பேற்படாமல் சொல்லப்படுவதற்கே முக்கியத்துவம் என்னளவில். அதைத் தான் முன்னுரை போலவான அந்த நான்கு வரிகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ஆம். ஹேமா ஆனந்த தீர்த்தன் 'நடுக்கடலில் கவிழ்ந்த கப்பலில் அம்மணியும் நானும்' என்ற மலையாளத்தில் எழுதப்பட்ட ஒரு உண்மை நிகழ்வை தமிழில் குமுதத்தில் பகிர்ந்து கொண்டது எனக்கு மறக்கவே முடியாத ஒன்று.

    இந்தப் பகுதிக்கு அளவில்லாத பங்களிப்பைத் தந்திருக்கும்
    தங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!