திங்கள், 30 செப்டம்பர், 2024

"திங்க"க்கிழமை : பாகற்காய் புளி இஞ்சி   - மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

கேரளத்தில் முக்கியமாக விஷுஓணம் பண்டிகைகளில் இந்த ‘ புளி இஞ்சி’ பக்குவம் மிகவும் புகழ் பெற்றது.

காரமும் புளிப்பும் இனிப்புமாக தனி ருசியுடனிருக்கும் இந்த புளி இஞ்சியை எங்கள் உணவகத்திலும் நாங்கள் ‘ ஓணம்’ பண்டிகையின் போது செய்வதுண்டு. இந்த புளி இஞ்சியை பாகற்காயிலும் சுவை பட செய்யலாம். ருசி இன்னும் அதிகமாக இருக்கும். இதற்கு பெரிய பாகற்காய் தான் தகுந்தது. மிதி பாகல் அவ்வளவு ருசியைத்தராது. இனி சமையலுக்கு செல்லலாம்!!



பாகற்காய் புளி இஞ்சி

தேவை:

பாகற்காய்-2 [ சிறிய துண்டுகளாய் நறுக்கவும்]

நல்லெண்ணெய்- 3 மேசைக்கரண்டி

கடுகு- 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல்-2 [ கிள்ளிப்போடவும்]

கறிவேப்பிலை- 1 கொத்து

மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-4

துருவிய அல்லது நன்றாக நசுக்கிய இஞ்சி- 2 மேசைக்கரண்டி

புளி- எலுமிச்சம்பழ அளவு

தேவையான உப்பு

பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்

துருவிய வெல்லம்- 2 அல்லது 3 மேசைக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகைப்போடவும்.

அது வெடித்ததும் தீயைக்குறைத்து மிளகாய்பெருங்காயம்கறிவேப்பிலைஇஞ்சிபச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு பாகற்காய் துண்டுகளைப்போட்டு வதக்கவும்.

பாதியளவு வெந்ததும் புளியைக்கரைத்து விட்டு மஞ்சள் தூள்உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பாகற்காய் வெந்து மசாலா கெட்டியானதும் வெல்லம் சேர்த்து தீயைக்குறைத்து வெல்லம் நன்றாக உருகி கறியுடன் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.


31 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. இது ஒரு புது சமையல் குறிப்பு. எனக்கு எப்போதுமே புளி இஞ்சி ரொம்பப் பிடிக்கும்.

    பாகற்காயைச் சேர்த்துப் பண்ணினால் கசப்பு இருக்காது. புளி இஞ்சி அளவுக்கு டேஸ்டா இருக்குமான்னு செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. குவைத்தில் இருந்த போது சாப்பிட்டு இருக்கின்றேன்...

    இப்போது உப்பு புளி காரத்திற்குத் தடை ...

    இவற்றிலிருந்து
    விலகி இருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  4. இன்றைக்கு எனது ' பாகல் புளி இஞ்சி ' குறிப்பை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  5. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் நெல்லைத்தமிழன்! இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //இப்போது உப்பு புளி காரத்திற்குத் தடை ...

    இவற்றிலிருந்து
    விலகி இருக்கின்றேன்..//
    உடல் நலத்தை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் சகோதரர் துரை செல்வராஜ்!! அது தான் முக்கியம்!

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. சாதாரணமாக பாகற்காயில் பருப்பு உசிலி, பாகல்காய் புளிக்கறி, பாகல்காய் பகோடா, என்பவை செய்வதுண்டு. புளியுடன் இஞ்சி வெல்லம் சேர்த்தது செய்தது இல்லை.
    சமையற்குறிப்பு ஓகே.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!!

      நீக்கு
    2. பாகற்காய் பருப்பு உசிலியா?

      நீக்கு
  9. வணக்கம் மனோ சாமிநாதன் சகோதரி

    இன்றைய திங்கள் சமையலில், தங்கள் செய்முறையாக தந்த பாகற்காய் புளி இஞ்சி நல்லதொரு குறிப்பு. படங்கள், செய்முறை மிக அருமையாக உள்ளது.பாகற்காய் எனக்கு பிடிக்கும். பொதுவாக அது உடல் நலத்திற்கு நல்லது. நானும் இது போல் ஒரு நாள் செய்கிறேன்.

    நான் பாகல் உசிலி, பிட்லை, தேங்காய் போட்டு கறி, காரம் போட்டு கார கறி போன்றவற்றை செய்துள்ளேன். கறி, பிட்லை யில் சுவைக்காக ஒரு ஸ்பூன் வெல்லம் எப்பவாவது சேர்த்துள்ளேன் . இது போல் இஞ்சி சேர்த்து செய்ததில்லை. இப்படி செய்து பார்க்கிறேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்குமென்று நினைக்கிறேன்

    இன்று என்னுடைய பதிவிலும் பாகல் பற்றியே..! சகோதரர் நெல்லைத்தமிழர் அதற்கு வந்து சிறப்பித்து தந்த கருத்துரைகளுக்கு இங்கேயும் அவருக்கு பல நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. கருத்துரைக்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!
    பாகற்காயில் புளிக்குழம்பும் பொரியலும் அடிக்கடி செய்வேன். அதுவும் புளிக்குழம்பில் பாகற்காய் ஊறி நல்லெண்ணெய் வாசத்துடன் சுவையாக இருக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகற்காய் புளிக்குழம்பு முயற்சித்தது இல்லை. ஒரு முறைசெய்து பார்க்க வேண்டும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      என் பதிவுக்கு அன்புடன் வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      பாகல் புளி குழம்பும் ஒரு முறை செய்கிறேன் சகோதரி. புளியில் ஊறி இருக்கும் போது பாகலின் கசப்பு அவ்வளவாக தெரியாது ருசிக்கும். தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. பாகற்காய் புளி இஞ்சி… ஆஹா… இன்றைக்கு இரண்டு வலைப்பூக்களில் பாகற்காய் சமையல் - ஒரு இடத்தில் புளி இஞ்சி என்றால் இன்னொரு பக்கம் பாகற்காய் பருப்பு உசிலி!

    புளி இஞ்சி… எனக்கும் பிடிக்கும். பாகற்காயில் புளி இஞ்சி சுவைத்ததில்லை. செய்து/சுவைத்துப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வெங்கட்! அவசியம் பாகற்காய் புளி இஞ்சியை செய்து, சுவைத்துப்பார்த்து சொல்லுங்கள்!!

      நீக்கு
  12. பாகற்காய் புளி இஞ்சி நல்ல
    உணவு. உடலுக்கு மிகவும் நல்லது. செய்து பார்ப்போம்

    கே. சக்ரபாணி
    சென்னை28

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் செய்து பாருங்கள் சகோதரர் சக்ரபாணி! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

      நீக்கு
  13. பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. பாகற்காய் புளி இஞ்சி பார்க்கவே. மிக அருமையாக இருக்கிறது .

    செய்து பார்க்க வேண்டும். எளிதான சமையல் குறிப்பு.
    செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது மனோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!!

      நீக்கு
  16. குவைத்தில் இருந்தபோது கேரளத்தின் சைவ உணவுகள் சிலவற்றை சமைத்ததுண்டு..

    இன்றைய பதிவில்
    எளிதான குறிப்பு...
    குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!

      நீக்கு
  17. மனோ அக்கா ஆஹா, சூப்பர் குறிப்பு! பாகற்காய், புளி இஞ்சி. நான் மிளகாய் தாளிக்காமல் பொடியாகக் கொஞ்சம் போட்டுச் செய்துவிடுவதுண்டு. இது பரவாயில்லையே காரம் அதிகம் சேராமல் இருக்கும் என்று நினைக்கிறேன். தாளிப்பதால். ரொம்ப நல்லா வந்திருக்கு மனோ அக்கா. நாவூறுது.

    நம் வீட்டிலும் செய்வதுண்டு. புளி இஞ்சி ரொம்பப் பிடிக்குமா நான் பாகற்காய் சேர்த்துச் செய்வதற்கு நான் முதலில் ருசித்ததற்கு ஒரு பழைய நினைவு....

    சின்ன வயதில் நான் பாகற்காய் சாப்பிடமாட்டேன். பாட்டி எனக்கு அதை இப்படிச் செய்து கசப்பு தெரியாது என்பதால் மறைத்து ஊட்டி விட்டுவிடுவார். பாகற் துண்டை ரொம்பச் சின்னதாக நறுக்கி கெட்டியாகச் செய்துவிடுவார். ஊறுகாய் போன்று. தொட்டுக் கொண்டு சாப்பிட மோர் சாதத்தில் உள்ளே வைத்து கையில் அல்லது வாயில் போட்டுவிடுவார். நன்றாக இருந்தது.

    இஞ்சி பொடியாக நறுக்கியதை வாயில் எனக்கு அகப்படக் கூடாது என்று அரைத்து வதக்கியும் செய்வார். ஒரு நாள் பாட்டி வீட்டுக்குப் போனப்ப, ஜாம் மாதிரி காரமா ஒன்னு மோர் சாதத்துக்குத் தருவியே அது செய் பாட்டி என்றதும், அப்ப நான் கொஞ்சம் வளர்ந்த பெண், அதுவா என்று சொல்லி வாங்கி வந்து செய்த போதுதான் எனக்குத் தெரிந்தது ஆ பாகற்காய் என்று. இதைக் கொடுத்தா என்ன ஏமாத்தின? என்றேன். சரி இப்ப செய்யணுமா வேண்டாமா என்றதும், நம்ம அப்படி எல்லாம் உடனே கெத்து விட்டுருவமா!!!! ம்ம முன்ன செய்த மாதிரி கசக்காம செய்வியான ஓகே பரவால்ல சாப்பிடறேன் என்று அதன் பின் நானுமே செய்யத் தொடங்கினேன். நன்றாகத் திரட்டி கெட்டியாக நீங்கள் காட்டியிருப்பதையும் விட கெட்டியாகச் செய்துவிடுவது வழக்கம். அதுவும் கொஞ்சம் வெல்லம் சேர்த்துச் செய்யும் போது முன்ன எல்லாம்.

    இப்ப வெல்லம் போடாம செய்கிறேன் வழக்கமாகவே. புளியும் உப்பும் கூடக் குறைத்துக் கொண்டு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா! உங்களின் இனிய பாராட்டு உண்மையிலேயே மனதிற்கு உற்சாகத்தை தந்தது!
      இந்த குறிப்பில் உள்ளபடி காரத்திற்கு பச்சை மிளகாயும் தாளிப்பில் உபயோகப்படுத்தும் வற்றல் மிளகாயுமே போதும்!!
      என் சம்பந்தி ஒரு முறை வீட்டுக்கு வந்த போது சாதத்தை விட இந்த பாகற்காய் புளி இஞ்சியைத்தான் திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
      ஒன்றே ஒன்று. வெல்லம் நல்ல வெல்லமாயிருந்தால் ருசி அதிகமாக இருக்கும்! உண்மையில் பாகற்காயை சற்று பெரிய துண்டுகளாய் அரிந்து செய்தால் நாவில் சுவைக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும்!!
      உங்கள் பாட்டியைத்தான் மிகவும் பாராட்ட வேண்டும்! உங்களை சிறு வயதிலேயே ஏமாற்றி சாப்பிட வைத்து, இன்று வரை அவரையும் நினைக்க வைத்து விட்டரே!

      நீக்கு
  18. பாகற்காய் புளி இஞ்சி நல்ல குறிப்பு. இஞ்சி சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும்.

    நாங்கள் பாகற்காய் புளிக்குழம்பு, பால்கறி , பாகற்காய் சலட், பச்சடி, பொரியல் செய்வோம்.

    பாகற்காய் குழம்பில் பாகற்காயை வதக்காமல் தேங்காய் தண்ணீர் புளி , உப்பு போட்டு அவிய வைத்து தக்காளி,சிறிது இஞ்சி, சிறிது பட்டை கலப்பதுண்டு . மிளகாய் தூள்இட்டு தேங்காய்பால் ஊற்றி இறக்கி வெங்காயம்,கடுகு காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை தாளித்து கொட்டுகிறேன். வீட்டுக்கு வீடுசமையல் மாற்றங்கள் அனைவரும் அறிவதற்காக தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மாதேவி!
    உங்கள் குறிப்பும் அருமை!! உங்கள் குறிப்புகளை இங்கே பகிரலாமே!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!