புதன், 25 செப்டம்பர், 2024

ஜீவியின் பதில்கள்; சீ & சி பதில்கள்!

 

வாசகர் கேள்விகளுக்கு
                                                                                   
                                                            ஜீவியின்   பதில்கள்  

கெளதமன்:

டைமண்டுக்குக் கூட இல்லாத மதிப்பு உலகில் தங்கத்திற்கு  மட்டும் ஏன் என்று தெரியவில்லை.. தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்.

பதில்:     ஒரு மகளிர் மாநாட்டில் இதே கேள்வி வேறு ரூபத்தில் வந்தது நினைவுக்கு வர்றது.  "தங்கத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு கவர்ச்சி உங்களுக்கு?"ன்னு ஒரு அப்பாவி மேடையில் கேட்டதும் கூட்டத்திலிருந்த  
ஒட்டுமொத்த மகளிர் மத்தியிலிருந்து கைத்தட்டலும்  'ஓ..' போட்ட ஒலியும் இப்பொழுது கூட என் நினைவில் தேங்கி இருக்கு..அந்த சமயம்  ஒரு பெண் விறுவிறுவென்று மேடையேறி  மைக்கைப் பிடித்தார்.. சொன்னார்:  "பணத்தட்டுப்பாடு அவசரத்திற்கு தங்கம் கைகொடுக்கறது போல அண்ணன் தம்பி கூட கைகொடுக்க மாட்டாங்க.."ன்னு ஒரு போடு போட்டாரே பாக்கலாம்!.  மறுபடியும் ஏகோபித்த கைத்தட்டல்கள்.  "அமைதி.. அமைதி என்று கூட்டத்தினரை அவரே அமைதி படுத்தி விட்டுச் சொன்னார்.  "பிஸினஸ் பண்ணுகிறவர்களுக்கு நான் சொல்லாமலே தெரியும், எந்த நேரத்தில் பணத்தட்டுப்பாடு வரும்ன்னு சொல்ல முடியாது.  என் கணவரும் பிஸினெஸ்தான் செய்கிறார். பணத்தட்டுபாடு வந்தால் சோர்ந்து போய் விட மாட்டார்.  கையிருப்பு நகைகளை அடமானம் வைத்து சமாளிப்பார்.  அதே அவர் பிஸினஸ் கொழித்துக் கொட்டும் பொழுது எனக்கு ரெண்டு வகைலே கிஃப்ட் கிடைக்கும்.  ஒண்ணு: அடமான நகைகளை மீட்டுத் தந்துடுவார், இரண்டு: ஏதாவது புதுசாகவும் நகை எனக்குக் கிடைக்கும்.  அதாங்க சொன்னேன், தங்கம் கைகொடுப்பது போல சகோதரர்கள் கூட கைகொடுக்க மாட்டாங்க.." என்று. அவர் சொன்னபோது பெண்கள் கூட விசிலடித்தார்கள்.  

சந்தோஷம் ஏற்பட்டால் அது எப்படிலாம்  வெளிப்படும்ன்னு தெரியாதுன்னு நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்த பெண்மணி,  "ஏம்மா.. உங்க சொந்த ஊர் எது?" என்று மைக் பிடித்தப் பெண்மணியிடம் கேட்ட பொழுது, "K.G.F"' என்று அந்தப் பெண்மணி சொன்னாங்க, பாருங்க, நான் கூட அடக்க முடியாம அட்டகாசமா சிரிச்சேன் என்றால் பார்த்துக்கங்க.

சொல்லப் போனால் வீட்டுக்கு இருக்கற நிலைமைதாங்க, நாட்டுக்கும். 'நாஸிக் பிரஸ்லாம் அரசாங்கம் கைவசம் தானே இருக்கு? இஷ்டப்படி ரூபாய் நோட்டு அடிச்சிக்கலாம்'ன்னு நினைச்சா அது தப்புங்க.  

நாட்லே தங்கத்தின் இருப்பு எவ்வளவு இருக்கோ அதுக்கேத்த மாதிரி தாங்க நோட்டு அச்சடிக்கறதும் இருக்கும்.  இதை மீறினா சொல்லாம கொள்ளாம பணவீக்கம் தேசத்துக் கதவைத் தட்டி பயமுறுத்தும்ங்க.  உடனே விலைவாசிலாம் உச்சாணிக் கொம்புக்கு போகும்.  அதனால ஆட்சி நடத்தறவங்களுக்கும் நாட்டிலே இருக்கற தங்க இருப்பு பற்றி ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாங்க்கன்னா  பாத்துக்கோங்க.  இப்படிலாம் தங்கத்துக்கு  நிறைய பெருமை இருக்கு.

இத்தனை சொன்னதைத்  தொடர்ந்து நம்ம நாட்டு சென்ற காலத்துப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் ஞாபகமும் வருதுங்க..  இருந்தாலும் அது பத்தி வாய்ப்பு வந்தா இன்னொரு சமயம் பாக்கலாங்க.

கேள்வி:  வேல்ஸ் இளவரசரின் கம்போடிய விஜயத்தால் யாருக்கு லாபம்?

பதில் :  நிச்சயனாய் நம்ம எபி நண்பர்களுக்கு இதைத் தெரிந்து கொள்வதில் கூட ஏதும் லாபம் இல்லேன்னாலும்,  எந்த வருஷத்து வே. இளவரசர் என்று சொல்லுங்க.  இருக்கவே இருக்கார், ஜகதலப்பிரதாபன் என்று நண்பர் ஒருவர்.  அவரிடம் கேட்டுச் சொல்றேன். 

கேள்வி: அமெரிக்கா மற்ற நாடுகளின் விஷயத்தில் தலையிடுவது போல ரஷ்யா ஏன் தலையிடுவதில்லை?

பதில்:  ஏதோ பரீட்சை கேள்வி போல இருக்கு. 5 மார்க் கொடுப்பாங்களா? குமுதம் போன்ற பத்திரிகைகளில் வாசகர் அனுப்பும் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றால் அவற்றை சகஜமான வாசிப்புக்கு ஏற்ற மாதிரி திருத்துவது உண்டு. அதே மாதிரியான திருத்தங்களை இந்தப் பகுதியிலும் செய்தால் அதுவே தனியாக வாசிப்பு நேர்த்தியுடன் களைகட்டும். வரும் பகுதிகளில் அப்படியான முயற்சிகளைச் செய்யலாம்.

அமெரிக்காவுக்கு மற்ற உலக  நாடுகளிடம் இருக்கும் நெருக்கம் போல ரஷ்யாவுக்கு இல்லை.  இந்த நெருக்கம் லோகத்தில் நடக்கும் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டது.. அதனால் இயல்பாகவே அவரவர் தேவைகளின் அடிப்படையில் இது நடக்கிறது.  ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்கிக் கொள்வது போலவான உறவு இது.

நெல்லைத் தமிழன்: 

கேள்வி:  இலக்கிய படைப்புகள் தான் சமூகத்திற்கு நல்லதா?  நாவல் என்பது டிவி சீரியல் மாதிரி பொழுதைப் போக்கக் கூடியதா?

பதில்: இலக்கிய படைப்புகள் என்று நீங்கள் அழகாகச் சொல்வதையே  தற்கால தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் படைப்பிலக்கியம் என்று மாற்றி விட்டார்கள்.  இந்த மாதிரி சீர்திருத்தம் என்று இவர்கள் செய்யும் குழப்பங்கள் எத்தனையோ.  இந்தப் படைப்பு வகைகளைத் தான் கதை, கட்டுரை என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். 

என்னைப் பொறுத்தவரை உரைநடையிட்ட பாட்டுடைச்  செய்யுளாக அமைந்த சிலப்பதிகாரம் தான் தமிழின் முதல் புதினம் (நாவல்) என்பேன்.  நாவல் என்ற ஒன்றுக்காக இப்பொழுது வரையறுக்கப்படும் அத்தனை  வரையறைகளையும் உள்ளடக்கிய அற்புதக் காப்பியம் அது.   புகார் காண்டம், மதுரைக் காண்டம். வஞ்சிக் காண்டம் என்று மூன்று பாகங்களாக கட்டமைப்பு கொண்ட அருமையான நாவல்.  மூன்று பாகத்திற்கும் பல்வேறு தலைப்புகள் கொண்ட உட்பிரிவுகள் கூட.

தற்காலத்தில் கதை என்பதை உரை நடை வடிவில் எழுதப்படும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கொள்கிறார்கள்.   வாசிப்பவர் மனத்தில் ஆழப் பதிந்து அவர்கள் சமூக வாழ்க்கைக்குப்  பொருந்தாத தீய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றால்  அவர்களை நல்வழிக்கு மனமாற்றம் செய்ய உதவும் எல்லா  வகை படைப்புகளுமே இயல்பாக சமூகத்திற்கு நன்மை பயப்பதாக செயல்படும்.

சீட்டாடல், ஆடு-புலி ஆட்டம், தாயம், கேரம், செஸ், அரட்டை போன்றவற்றை பொழுதுபோக்கு என்று நீங்கள் கருதுவீர்களென்றால் டிவி சீரியல் பார்ப்பது கூட அந்த வகைப்படாத ஒன்று.  நல்ல வாழ்க்கைப் போக்கிற்கு நம்மை வழிப்படுத்தும் எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையானவை தாம்.  ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால் நம் புராணங்கள் கூட தீயதைச் சொல்லித்தான் நம்மை நல்வழிப்படுத்த முயற்சிக்கின்றன என்பது தெரியும். 

கொளதமன்: (!!!) 

கேள்வி:  இந்தியா, சீனா, ரஷ்யா மூன்று நாடுகளும் ஒரு அணியாகச் சேர்ந்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் குறைக்க முடியுமா?  

பதில்:  ஏன் பிரிட்டனை விட்டு விட்டீர்கள்?  அதையும் சேர்த்துக்கறதுதானே!  ஏகாதிபத்தியம் என்கிறது எந்தக் காலத்து வார்த்தைங்க?..  அதுக்கு என்ன அர்த்தம்ங்கறது கூட மறந்தே போச்சு!  இன்றைய உலகம் என்பது விஞ்ஞான பூர்வமான  வளர்ச்சிகளிடையே சிக்கிக் கொண்ட அல்லது வேண்டுமென்றே மாட்டிக் கொண்ட இன்னும் இன்னும் மேலான வளர்ச்சிக் கனவுகளுடன் சஞ்சரிக்கிற பூமிப் பந்து!  இதில் விசேஷம் என்னவென்றால் சகல சௌபாக்கியங்களுடன் நிம்மதியாக உறங்கி எழும் நாடே பூவுலகில்  இல்லாத மாதிரியான இறைவனின் ஏற்பாடு!  அவரவர் தேவைகளுக்கு கொடுக்கலும் வாங்கலும்  நடந்து கொண்டிருக்கையில் ஏகாதிபத்யமாவது,  வெண்டைகாயாவது!  ஹி..ஹி..  இந்தக் கூட்டத்தில யாராவது ஒருத்தர் (சீனா?) அதீத வளர்ச்சியடைந்து  சட்டாம்பிள்ளையாகி விடாமல்   நீ  பார்த்துக் கொள்ள  வேண்டும். இறைவா!

( ஏகாதிபத்தியம் பற்றி கேள்வி கேட்டேன் என்பதற்காக - என்னுடைய பெயரையே குதறி விட்டீர்களே ஜீவி சார்! ஏகாதிபத்தியம் : அந்தக் காலத்தில் பீகிங் வானொலி நிலைய தமிழ்ச் செய்திகளில் ஒவ்வொரு நாளும் நூறு தடவை இடம் பெற்ற வார்த்தை!)

கேள்வி:  ரூபி, ஆஸ்வால்டை ஏன் சுட்டுக் கொன்றார்?

பதில்:  ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள்?  கோவலன் ஏன் கொலையுண்டான்? 
அகலிகை ஏன் கல்லானாள்? அரிச்சந்திரன் ஏன் அவ்வளவு துன்பங்களைச் சுமந்தான்? --  இந்த மாதிரி நிறைய 'ஏன்?'-கள் வரலாறுகளில் உண்டு.  அது சரி,  வாரன் விசாரணை அறிக்கை வாசித்து விட்டீர்களா?..

கேள்வி:  சாம்பாருக்கு அரிசி மாவு கரைத்து ஊற்றுவதற்கு பதில் சோள மாவு கரைத்து ஊற்றலாமா?

பதில்:  எபி 'திங்க'க்கிழமை ஒண்ணுல கூட யாரோ குழம்புக்கு அரிசி மாவுக்குப் பதில் சோள மாவு கரைச்சு ஊத்தின ஞாபகம்.  'ரெண்டு மாவுகளும் வேணாம், ஆளை விடுங்க' என்கிறவர்களுக்கும் வேறு வழிகள் உண்டு.. ஆரம்பத்தில்  வழக்கமா போடறதை விட கொன்சம் கூட துவரம்பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி திக்கா பருப்பு கரைசல் செஞ்சிண்டா போதும். குழம்பு நீர்க்க இல்லாமலும் இருக்கும்; புரோட்டின் சக்தி கிடைச்ச மாதிரியும் ஒண்ணுக்கு ரெண்டா பலன் கிட்டும்.  

கேள்வி:  விஜய் அரசியல்லே ஜொலிப்பாரா?

பதில்:  'இவர்' ஆட்சிக்கு வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று மக்கள் ஏங்கற மாதிரி யாராவது ஒருத்தர் கிடைக்கிற வரைக்கும் இந்த மாதிரி கேள்விகள்தான்.  மக்கள் நலங்களை எந்தவித சமரசத்துக்கும் பலியாகி விடாமல் கட்டிக் காக்கிற தலைவர் ஒருத்தர் கிடைத்து விட்டால் இந்த  மாதிரி கேள்விகளுக்கே இடமில்லாது போகும்.  

நெல்லைத்தமிழன்: 

கேள்வி:  பொதுவா மொழி, கலை என்பவை காலம் செல்லச் செல்ல வளரும்.  ஆனால் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு நேர்த்தி,  ராஜேந்திரன், பிறகு வந்த ராஜராஜசோழன்--II  காலங்களில்
காணப்படாததின் காரணம் என்ன?..
     
கல்லைச் செதுக்கிச் செய்யப்படும் சிற்பங்களை எடுத்துக் கொள்ளலாம்.  ராஜ ராஜ சோழனுக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்றால்  ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரம் இல்லையா, நெல்லை?   தஞ்சாவூர் பெரிய கோயிலைப் போலவே  சிவபெருமானின்  லிங்கத்திருவுரு பிரகதீஸ்வரர் என்றும்  அம்பாள் பெரியநாயகி என்றும் பெயர் கொண்டிருக்கின்றனர். 
.
தமிழக கோயில்களிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் கங்கை கொண்ட சோழபுர கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தான்.  தன் வடபுலத்து படையெடுப்பின் போது தோற்ற மன்னர்களின் தலை மீது கங்கை நீரை குடம் குடமாகச் சுமக்கச் செய்து இக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்த நன்னீரால் பிர்மாண்ட லிங்கத்திருவுருவிற்கு அபிஷேகம் செய்தான்.  ஊருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்பதும் பெயராயிற்று.  பகல் நேரங்களில் இந்த நந்தியின் மீது கதிரவன் ஒளி பட்டு  அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்திருவுருவின் மீது பிரதிபலிப்பதாய் வடிவமைத்திருப்பது சிற்பக்கலையின் நுண்ணிய வேலை திறனாகும்.  திருவாலங்காட்டு செப்பேடுகள் ராஜேந்திர சோழனின் வடபுலத்து படையெடுப்புகள் பற்றி நமக்கு எடுத்தோதும் ஆவணமாகும்.  ராஜராஜ சோழன் காலத்திலேயே ஆட்சிப் பொறுப்புகளில் இராஜேந்திரன் பயிற்சி பெற்றது போலவே இராஜேந்திரனின்  ஆட்சி காலத்திலேயெ இரண்டாம் ராஜராஜன் பயிற்சி பெற்றான் என்று தெரிய வருகிறது. கிருஷ்ணகிரி  தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள மதகொண்டப்பள்ளி என்னுமிடத்தில்  இராஜேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்திருப்பதாக அறிய வருகிறோம்.

                                     கம்போடியாவில்  ராஜேந்திர சோழனுக்கு சிலை   

சிற்பிகளின் கனவு என்று போற்றப்படும் தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் நிர்மாணம் கொண்டது தானே, நெல்லை? ஒன்று, இரண்டல்ல கோயிலின் இண்டு இடுக்கெல்லாம் ஏறத்தாழ 40 ஆயிரம் சிற்பங்களைக் கொண்டிருக்கும் இக்கோயில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக கொண்டாடப்படுவதை கோயில் சிற்பங்களில் ஆர்வம் கொண்டுள்ள நீங்களே அறிவீர்கள்.   இந்த மூன்று பேர் காலத்து கல்வெட்டுகளையும் பற்றி எழுத வேண்டுமானால் அதற்கு தனிப்பதிவு தான் போட வேண்டும்.  இப்போதைய திருப்திக்குக் கீழ்கண்ட சுட்டியைக் கிளிக்கிப் பார்க்கலாம்: 

நன்றி : " youtube " 


= = = = = = = = = = = =  

டிஸ்கி 1 : ஜீவியின் பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், அவருடைய கருத்துகள் மட்டுமே. அவைகளை  எ பி ஆசிரியர்களின்  கருத்துகளாக எடுத்துக்கொள்ளவேண்டாம். 


டிஸ்கி 2 : சீ & சி பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், சிந்திக்கவும், சிரிக்கவும் மட்டுமே! சிரிக்க வேண்டிய பதில்களை சீரியசாகவும், சிந்திக்கவேண்டிய பதில்களை சிரித்தபடி கடந்தும் போகாதீர்கள்! 

= = = = = = = = = = = =

சீ & சி பதில்கள் 🤬& 🤣
( ஹி ஹி ! சீரியஸ் & சிரிப்பு பதில்கள்) 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பாஸ்தாவில் புளிக்காய்ச்சல் கலந்து சுவைத்ததுண்டா? Very tasty fusion food.

# ஃபாஸ்டா புளியோதரை நான் இதுவரை சாப்பிடாத ஒன்று.  நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. 

& சொன்னா கோவிச்சுக்காதீங்க ! பசிக்கு ஃபாஸ்டா சாப்பிடுவது என்பது என்னைப் பொருத்தவரை கு கா குதிரை வைக்கோல் தின்ற கதைதான். அதிலே புளியோதரையும் கலந்தா !! நாராயண, நாராயண! 

உங்களுக்கு பிடித்த வேறு fusion food ஏதாவது உண்டா?

# புதுமை சமையல் எல்லாம் எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று . சமையலே எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லாத ஒன்றுதான்.

& நான் சாபிட்ட fusion food ஞாபகம் இல்லை. ஆனால், ஆறாம் வகுப்புப் படித்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த இராமன், போர் அடிக்கும்போது, அவர்கள் வீட்டில் உள்ள கோபால் பல்பொடி, கொஞ்சம் தேங்காய் எண்ணை, கொஞ்சம் புளி எல்லாம் சேர்த்து fusion செய்து சாப்பிடுவான்! 

ஒரே பாடலை வெவ்வேறு பாடகர்கள் பாடி அடுத்தடுத்து கேட்பதுண்டா? உதாரணமாக அகிலாண்டேஸ்வரி என்னும் தீக்ஷதர் கிருதியை பாம்பே ஜெயஸ்ரீ, செளம்யா, மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள் பாடியிருப்பதை யூ ட்யூபில் அடுத்தடுத்து கேட்பது.

# அந்தப் பாட்டைப் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது அப்படிச் செய்வது உண்டு.

& இல்லை. 

சாப்பாட்டில் புதுமையை ரசிப்பீர்களா? அல்லது பாரம்பரிய உணவுதான் பிடிக்குமா?

# சாப்பாட்டில் புதுமைகள் செய்து ரசிப்பது சமைக்கும் திறன் உடையவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். நான் யாரோ சமைத்ததை ருசித்துச் சாப்பிடும் ரகம். புதுமை என்று என்ன செய்தாலும் அது எப்படி இருக்கிறது என்று ருசித்துப் பார்ப்பது என் வழக்கம். சிலது பிடிக்கிறது, சிலது அதிகம் பிடிப்பதில்லை. 

& சாப்பாட்டில் புதுமைகள் செய்ய முயன்று தோற்றது உண்டு. சாப்பிடும் முறையில் புதுமை என்று யோசித்தால், என் அம்மா சொல்லும் தெனாலி ராமன் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 

ஜீவி : 

வாரன் விசாரணை அறிக்கை வாசித்து விட்டீர்களா?..

& ஹி ஹி - முன் காலத்தில் வாங்கி வெச்சேன் - மேலாகப் படித்தேன். வெண்டைக்காய் மோர்க்குழம்பு போல இருந்தது. ஆனால் முழுவதும் படிக்கவில்லை. அப்புறம் யாரோ எடைக்குப் போட்டு பட்டாணி வாங்கித் தின்றுவிட்டார்கள்! 

கே. சக்ரபாணி சென்னை 28:

1. நீங்கள் நன்றாக  சமைப்பீர்கள்  என்று  கேள்விப்பட்டேன்.  உங்கள்  favorite சமையல்  ஐட்டம். எது. நீங்கள்  சொதப்பின. ஐட்டம் எது? 

# வதந்திகளை நம்பாதீர் !!

& எனக்குப் பிடித்த விஷயம் : அடை. செய்து பார்த்து சொதப்பியவை நிறைய இருக்கு! 

2. நான்  நான்காவது  ஐந்தாவது  வகுப்பு  படிக்கும்  போது  தினசரி  காலண்டரில்  என்றேனும்  தேதி கிழித்தால்  அன்று  எல்லாம் அம்மாவிடம்   நன்றாக  அடி வாங்குவேன்.   அதனால்  அன்றுமுதல் இன்றுவரை  தினசரி  காலண்டரில்   தேதி கிழிக்கமாட்டேன். 
 தங்களுக்கு  இது போல் ஏதேனும்  நிகழ்வுகள்  உண்டா? 

# காலண்டர் நாள் கிழித்ததற்காக இல்லை, ஆனால் 7-8 வயதில் அம்மாவையே ஒரு தவறான சொல் சொல்லித் திட்டியதால் அடி வாங்கியது உண்டு.

& அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எதுவும் இல்லை. இப்படிச் செய்தால் இது நடக்கும்; அப்படிச் செய்ததால் அது நடந்தது என்பதெல்லாம் நம்முடைய நம்பிக்கைகள் மட்டுமே - அப்படி நிகழாத நாட்கள் நம் நினைவில் தங்குவதில்லை. 

3. ஒவ்வொரு  எண்ணெய்  விளக்குகள் ஏற்றுவதால்  ஒவ்வொரு  பலன்கள்  இருப்பதாக  சொல்கிறார்கள்.  அதேபோல்  மெழுகுவர்த்தி ஏற்றுவதால்  ஒளியை தவிர  வேறு ஏதேனும் உடல் ஆரோக்கியம் தரும் குணம்  இருக்கிறதா?  

# இந்த மாதிரி செய்வதால் ஒரு நன்மை இருக்கிறது என்று நம்பிச் செய்தால் அதில் உண்மை இல்லாமலே இருந்தாலும் ஒரு பாஸிட்டிவ் மன‌அமைதி ஏற்படுவது உண்டு. சில சமயம் தற்செயலாக நன்மை நடந்தே விட்டால் அமைதியோடு மகிழ்ச்சியும் உண்டாகும்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் : 

இந்த வாரம் முதல், ஜீவி அவர்களும் பதில் சொல்கிறார் என்பதால், பதிவில் - கருத்துரை பகுதியில் கேள்வி கேட்பவர்கள், தங்கள் கேள்விகளுக்கு  - ஜீவி பதில் வேண்டுமா அல்லது சீ & சி (எ பி ) பதில்கள் வேண்டுமா என்று குறிப்பிடவும். அப்படி எதுவும் குறிப்பிடப்படாத கேள்விகளுக்கு எல்லோராலும் பதில் கொடுக்கப்படும் அபாயம் உண்டு! 

கேள்வி கேட்பவர்கள், கருத்துரைப் பகுதி மட்டும் இன்றி, என்னுடைய வாட்ஸ் ஆப் எண் (9902281582 - குரல் அழைப்புகள் வேண்டாம்)   மற்றும் engalblog@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் கேள்விகள் கேட்கலாம். 

= = = = = = = =
KGG பக்கம் :

kgs நினைவுகள் தொடர்கின்றன. 

அண்ணன் எஸ் எஸ் எல் சி படித்த காலத்தில், அவருடைய தமிழ் செய்யுள் மனப்பாடப் பகுதிகளை மட்டுமின்றி எல்லா செய்யுள்களையும் மானப்பாடமாக சொல்வார். 

அவர் அப்போது படித்த / சொன்ன இரண்டு செய்யுள் பகுதிகளின் சில பகுதிகள், எனக்கு இன்றும் ஞாபகம் உள்ளன. 

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்." 

'இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா?நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தேம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
பகடு என்றேன் உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே! '


(எழுதியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார்) 

விளக்கம்: 

பாடினி என்னும் பாடல் பாடும் பெண், அரசர் வீடுகளில் பாடும் பாணனைப் பார்த்து, “இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் புகழ் பெற்ற இராமன் என்ற வள்ளலைப் பாடி என்ன பரிசில் கொண்டு வந்தாய்?” என்று வினவினாள். அதற்குப் பாணன் பதில் கூறத் தொடங்கினான்.

பாணன் களபம் (மும்மதம் கொண்ட யானைக் கன்று) என்று கூற, அவர் மனைவி அதனை சந்தனம் என்று எண்ணி, உடலில் பூசிக் கொள்ளுங்கள் என்றாள்.
மாதங்கம் (சிறப்பினைத் தரும் பொன்) என்று கூற, மிகுதியான பொன் என்று புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் புகழும் சிறந்த வாழ்க்கையினை அடைந்தோம் என்றாள்.
மிக்க புகழுடைய வேழம் என்று கூற, அவள் அதை கரும்பு என்று எண்ணி சாப்பிடுங்கள் என்றாள்.
பகடு என்று கூற, அவள் அதை மாடு என்று நினைத்து வயலை உழும் என்றாள்.
இறுதியில் கம்பமா என்றுரைக்க, அவள் கம்பு தானியத்தின் மாவு என்று எண்ணி நல்ல களியாகச் செய்யலாம் என்றாள்.
புலவர் பொறுமையிழந்து தான் கொண்டு வந்தது கைம்மா என்று கூற, கொண்டு வந்த பரிசில் யானை என்பதை உணர்ந்து, நம் வயிற்றுக்கு உணவில்லாத நிலையில் யானைக்கு எவ்வாறு உணவிடுவது என்று வீணாகக் கலங்கினாள்.
இப்பாடலில் யானைக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு பெயர்களைப் பற்றி அறிய முடிகின்றது. ( களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா ) 


(தொடரும்) 
============================  

49 கருத்துகள்:

  1. ஜீவியின் பதில்கள் பகுதியில் இருக்கும் Image.png திறக்கவில்லை. பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஜீவி சாரின் பதில்கள் ரசனை, கடைசிக் கேள்வி தவிர. கேள்வி, கல்வெட்டு எழுத்துகளைப் பற்றியது, ஆனால் சிற்பங்கள் பகுதிக்கு பதிலை நகர்த்திக்கொண்டு போய்விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. இலக்கியப் படைப்புகள், நாவல் சம்பந்தமான கேள்விக்கு நல்ல பதிலை அளித்திருக்கிறார். படைப்பின் நோக்கமே ஏதாவது செய்து அல்லது நிகழ்வு மூலம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதுதான் எனும்போது, படைப்பில் என்ன வேறுபாடு? என்ற பதில் பொருத்தமாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. புது துவக்கமாகிய சகோதரர் ஜீவி அவர்களின் பதில்கள் அனைத்தும் அவருடைய அனுபவங்களின் கூற்றுகள். அவருக்கென்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கான அவருடைய பதில்களையும் படித்து தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. //கட்டிக் காக்கின்ற தலைவர் கிடைத்துவிட்டால்//- காமராசர் ஆட்சியைப் பற்றி அனைவரும் புகழ்ந்தாலும் அவரையும் தோற்கடித்ததுதானே தமிழ் சமூகம். சமீப காலத்தில் அப்படிக் கட்டிக் காத்தவர் ஜெ அவர்கள்தாம். அதனால்தான் அவரை மக்கள் விரும்பி இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுத்தார்கள், தனித்து களத்தில் நின்றபோதும்.

    பதிலளிநீக்கு
  7. அந்தக்க் கவி வீர்ராகவ முதலியாரா? சரியாக எழுதணும்னா வீர்ராகவன் என்று மாத்திரம் எழுதணும். சாதிதான் ஒழிந்துவிட்டதே. அடுத்து இந்த மாதிரி சாதியைச் சேர்த்து எழுதுவதால் தமிழ் சமூகத்தின் நம்பிக்கைக்கு எதிராக எழுதுகிறீர்கள். பெரியார் வரும் வரை, பிராமணர்கள் மாத்திரமே கல்வி பயின்றார்கள், அவர்களுக்கு மாத்திரமே கல்வியறிவு இருந்தது என்பதுதான் தமிழ் சமூகத்திற்குத் தெரிந்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  8. குமுதம் அரசு பதில்கள் சுருக்கமாக, அதே சமயம் கேள்விக்கு சரியான பதிலாக இருக்கும். அதை வழிகாட்டியாக கொண்டு பதில் அளிப்பேன் என்று சொன்ன ஜீவி சார் கொஞ்சம் வளவள என்று பதில் அளித்திருப்பது ஆச்சர்யம். அவர் அளிப்பது பதில் அல்ல, கட்டுரை என்பது எனது தாழ்மையான கருத்து.

    ஆனால் இந்த கட்டுரைகள் விவரங்களை விரிவாக சொல்வதால் வாசகர்கள் புரிந்துகொள்ள சிரமப்பட தேவை இல்லை என்பதும் உண்மை.

    ஜீவி சார் பதில்களில் தங்கம் பற்றிய கேள்வியும், விஜய் பற்றிய கேள்வியும் சிறப்பான பதில்களை பெற்றுள்ளது.
    இந்த வாரம் கேள்வி மழை அதிகம்.

    யானை பரிசில் பெற்ற பாணன் கொண்டு வரும்போதே பாணத்தி அதை பார்த்திருக்க மாட்டாளா? பின்னர் கேள்வி ஏன்? யானைக்கு உள்ள மற்ற பெயர்களை காளமேகப்புலவர் பாடுவது போல் கேள்வி இல்லாமல் பாடி இருக்கலாம் அல்லவா? (பாம்பு, எலுமிச்சம் பழம் பாட்டு)

    ஆரம்பம் ஜோர். புதன் பொலிவுறுகிறது.
    நல்ல கேள்விக்கு குமுதம் தரும் ஸ்டார் ரேட்டிங் போல் ஏதேனும் குறியீடு தரலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  10. கேள்வி பதில் பகுதிகள் மெருகு ஏறியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் நீளம் அதிகம். வரும் கேள்விகளை பொறுத்து, ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவர் பதில் தரலாம் - முதல் வாரம் ஜீவி, அடுத்த வாரம் சீ & சி, மூன்றாம் வாரம் எபி என….

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீ & சி , எ பி எல்லாம் ஒன்றுதான்.

      நீக்கு
    2. பேசாம இந்த பதிலளிக்கும் வேலைக்கு தில்லி வெங்கட்டையும் அழைத்துவிடுங்கள்

      நீக்கு
    3. Why this kolavery! :) Nellai? For the past few days I have not replied for the comments in my blog! Currently in Trichy.

      நீக்கு
    4. எல்லாம் இந்தப் பகுதி வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம்தான் வெங்கட்ஜி.

      நீக்கு
    5. டவுட்டு வித் வெங்கட்டு - இந்தத் தலைப்பு நல்லாருக்குல்ல?

      நீக்கு
    6. அட! ஆமாம். + " கிட்டுவைக் கேளுங்கள்" இது எப்புடி இருக்கு?

      நீக்கு
    7. டவுட்டு வித் வெங்கட்டு, கிட்டுவைக் கேளுங்கள்…. ஆஹா… இன்னும் தொடர்கிறதே :) கிட்டுவைக் கேளுங்கள் sounds better! 🙂ஹாஹா….

      நீக்கு
  11. உண்மையில் KGG அவர்களது பக்கம் மிளிர்கின்றது..

    பள்ளியில் மனப்பாடம் ஆகிய பழந்தமிழ்ப் பாடல்களை மீண்டும் காணும் போது மனதில் என்னென்னவோ தோன்றுகின்றன..

    வேறென்ன .. அந்தக் கால நீலத் தாவணிகள் தான்!..

    பதிலளிநீக்கு


  12. இது போல என்னுள்ளும் பலப் பல பாடல்கள் இன்னும் பளபளப்பாகவே மின்னிக் கொண்டிருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  13. இப்படியான கே ப நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இன்று முதல் பகுதி என்பதால் நிறைய வந்துவிட்டன போலும். கொஞ்சம் நிதானமாக வாசித்து வந்தேன்.

    ஜீவி அண்ணாவின் பதில்கள் ரசனையாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. நெல்லையின் கல்வெட்டு பற்றிய கேள்விக்கு ஜீவி அண்ணா சிற்பங்கள் பற்றி பதில் சொல்லிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

    படைப்பிலக்கியம் பற்றிய பதில் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பாஸ்டா புளியோதரை - ஹாஹாஹாஹா....ஆனா சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும். கொஞ்சம் கொழக் கொழக்குனு வாயில தெரியுமோ?!

    ஃப்யூஷன் என்பது எல்லாவற்றிலும் பொருந்துமா என்று தெரியலை. ஒரு சில ஓகே ஆகுமாக இருக்கலாம். யோசிக்கிறேன் நான் ஏதேனும் முயற்சி செய்திருக்கிறேனா என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஒரே பாட்டை வெவ்வேறு கலைஞர்கள் பாடியிருப்பதைக் கேட்டதுண்டு கேட்பதுண்டு. ஒவ்வொருவர் எப்படிப் பாடுகிறார் எனத் தெரிந்து கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. ///கடைசியில் அங்கே வந்துட்டீங்களே!!..///

    வேற வழி!..

    பதிலளிநீக்கு
  18. சுவாரசியமான கேள்வி பதில்கள்.
    பதில்கள் விரிவாக தந்துள்ளார்கள்.
    தொடரட்டும் உங்கள்பணி.

    Kgg தமிழ் பாடல்களும் கருத்துகளும் அந்தக்கால தமிழ் வகுப்பை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    தங்களது பக்கம் நன்றாக உள்ளது. தங்கள் அண்ணாவின் படிக்கும் காலத்தின் தமிழ் பாடல்களும் அருமை. இந்த பாணன், பாடினி பாடல் கேள்விபட்டுள்ளேன். அதில் யானையை குறிக்கும் சொற்கள் அனைத்தும் சுவையானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. கௌதம் ஜீ..

    அக்டோபர் இரண்டாம் புதனில் இருந்து நீங்கள் கேட்டுக் கொண்டபடிக்கு சிறப்புப் பகுதி சில வாரங்களுக்கு!...

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும் , பதில்களும் மிக அருமை.
    ஜீவி சார் பதில்கள் விரிவாக இருக்கிறது.
    தங்கம் என்று ஒரு சேமிப்புதான், அந்த பெண் சொன்னது போல அவசரக்காலத்தில் கை கொடுப்பது.

    சீரியஸ் & சிரிப்பு பதில்கள் எல்லாம் அருமை.


    உங்கள் அண்ணா மாணவர்மன்ற தேர்வில் வெற்றி பெற்று புத்தகம் பரிசு வாங்கியது மகிழ்ச்சி.(அந்த கடிதத்தை பத்திரமாக வைத்து இருப்பது மேலும் மகிழ்ச்சி)என்ன புத்தகம் பரிசு பெற்றார்கள் என்பதை சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!