செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

பொக்கிஷம் : எடுத்துப் போடும் கதை - கரப்பான் பூச்சிகள் - மாலன்

 முன்குறிப்பு :  

நாற்பது ஆண்டுகளுக்கு முன் விகடனில் பொன்மொழிக்கதைகள் என்று ஒரு பகுதி வந்தது.  புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், மாலன், அசோகமித்திரன், ஸ்ரீவேணுகோபாலன் எல்லோரும் இந்தத் தலைப்பில் எழுதி உள்ளார்கள்.  சுஜாதா எழுதிய சிறுகதையின் பெயர் 'நட்பு.'  

அரஸ் ஓவியம்.

இந்த வாரம் இங்கு, அந்தத் தொடரில் வெளிவந்த மாலன் எழுதிய 'கரப்பான் பூச்சிகள் கதை' யைப் பகிர்கிறேன்..  இதற்கு ஓவியம் ம செ.  இந்தக் கதைகள் எந்த வருடம் வந்ததது என்று சட்டென சொல்ல முடியாத பைண்டிங் தொகுப்பு.  எனவே புரட்டிக்கொண்டே போனபோது மூன்று கதைகளுக்குப் பின், - மூன்று வாரங்களுக்குப் பின் - இந்த விளம்பரம் கண்ணில் பட்டது.


 எனவே, இந்தப் படம் வந்த ஆண்டைக் கண்டுபிடித்தேன்!



1985.  எனவே விகடனில் பொன்மொழிக்கதைகள் வெளிவந்த ஆண்டு 1985.  சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்!

இப்போது பராசக்தி என்கிற பெயரில் சிவகார்த்திகேயன் நடிக்கிற படம் ஒன்று எடுக்கிறார்கள்.  அதற்கு ஏ வி எம்மோ, இல்லை, கதைக்கு சொந்தக்காரரோ பிரச்னை செய்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் 1985 ல் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது!  கீழே பாருங்கள்.

இனி கதைக்குச் செல்லலாம்....


======================================================


கரப்பான் பூச்சிகள் - மாலன் 


பொன்மொழி :

"எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான்."

From : Aesop Fables




எண்ணிப் புள்ளி வைத்த

இழைக் கோலம் மறந்து போகும்.

உண்ணச் சோறு எடுத்தால்
உன் நினைப்பால் புரைக்கேறும்
தண்ணீருக்கு உருளும் ராட்டை
உன்னைப் போல் முரடாய் பேசும்
துணி உலர்த்தும் கொடிக் கயிற்றில்
அணி வகுக்கும் அண்டங் காக்கை
உன் பெயரைச் சொல்லிக் கரையும்
பாடத்தில் வரிகள் மாறி
பாதியில் உன் முகம் தெரியும்
உனக்கென்ன புத்தகம் கவிதை
யென்று

எப்படியோ பொழுது போகும் …
எனக்கு ? உன் நினைவே கவிதையாகும் ’


“ எப்படி இருக்கு கவிதை ” என்று பத்திரிகையை நீட்டினாள் ஜான்ஸி. ஆவலும் நாணமும் ததும்பும் குரல்.

“ கவிதையா ? இதில் எங்கே இருக்கு கவிதை ? ” என்றான் சிவராமன்.

“ இதைப் பார்த்தா கவிதை மாதிரி தெரியலையா உங்களுக்கு? பரிசு கொடுத்திருக்காங்க. இளைஞர் ஆண்டின் இரண்டாம் பரிசுக் கவிதை. யாரு ? அட்டையைத் திருப்பி பேரைப் பாருங்க ! லட்சக்கணக்கான காப்பி விக்கிற பத்திரிகை. எங்க கையெழுத்துப் பத்திரிகைன்னு நினைச்சுக்கிட்டீங்களாக்கும் ! இது கவிதையா இல்லாமலா இத்தனை பெரிய பத்திரிகையில் பிரசுரிச்சிருக்காங்க ? ”

“ பிரசுரம் பண்ண அவங்களுக்குக் கவிதை எதுக்கு ? கனவு போதுமே ! ”

“ இது கற்பனை இல்லீங்க நிஜம் ! ”

“ தெரியுதே ! இது வாசற் கோலம், கிணற்று ராட்டினம், பாடப் புத்தகம் என்று நிஜம் போல் தோற்றம் தருகிற பொய். தமிழி சினிமா, வாரத் தொடர்கதை … ஸாரி ! இதில் வாழ்க்கையும் இல்லை, கவிதையும் இல்லை. ’

“ பெரிய அலட்டி ! ” – ஜான்ஸி சிரித்துக் கொண்டே கோபப்பட்டாள். “ கவிதை யில்லை. ஸாரி ! ” என்று சிவராமன் குரல் மாற்றிக் கேலி செய்தாள்.

“ இதிலே உங்களுக்குக் கவிதைதான் தெரியலை, மனசாவது புரியுதா ? ”

“ சிவராமன் அவள் விழிகளையே இமைக்காமல் பார்த்தான்.

“ மனசா ? யார் மனசு ? ”

“ கவிதையில ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கால்ல ? அவ மனசு ! ”

“ எனக்கு, உன் நினைவே கவிதையாகும். ”

“ ம். அவதான். அவளேதான். ”

ரகசியம் முடிச்சவிழ்ந்து போய்விடப் போகிற குறு குறுப்பைத் தாங்க முடியாத தவிப்பு முகத்தில் படர்ந்தது.

“ அது கற்பனையா ? நிஜமா ? ”

“ நிஜங்க. நாலடி, பதினொரு அங்குலத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற நிஜம். நீங்க தினம் பார்க்கிற நிஜம். உங்க கூட பஸ்ஸிலே வருகிற நிஜம். ”

“ அப்படியா, யாரு ? ” – முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு கேட்டான் சிவராமன்.

“ அது… அதுகூட வாய்விட்டுச் சொல்லுவாங்க ! மூளை நிறைய கொடுத்துருக்கார்ல. யோசிக்கிறது … ”

ஜான்ஸியைப் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலிருந்தே தெரியும். பக்கத்து வீட்டுப் பெண். கிராமத்திலேயே சூட்டிகையான பெண் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும். பத்தாம் வகுப்பில் பள்ளிக் கூடத்தில் முதலாவதாக வந்த பெண். மாவட்ட அளவில் கூட நான்காவதோ ஐந்தாவதோ ரேங்க். அதனால் அதிகம் அலைக்கழிக்காமல், பக்கத்திலிருந்த ஜுனியர் காலேஜில் இடம் கொடுத்து விட்டார்கள். நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற அந்த நகரத்துக்குத்தான் சிவராமனும் எம்.ஏ., படிக்கப் போய் வருகிறான்.

பஸ்ஸில் வருகிற மாணவர்கள், புத்தகப் புழு என்று ஜான்ஸிக்குப் பெயர் வைத்திருந்தார்கள். சீட்டில் உட்கார்ந்து கையிலிருக்கிற புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டால், பள்ளிக்கூடம் வரை தலை நிமிராது. விறு விறு என்று பக்கங்கள் புரண்டு முகத்தில் ஒளி ததும்பும். புத்தகங்கள் என்றால் பாடப் புத்தகங்கள் அல்ல. பத்திரிகைகளில் வருகிற தொடர்கதைகளைக் கிழித்துத் தொகுத்த புத்தகங்கள். இரண்டு மூன்றாய்ச் சேர்த்து பைண்ட் செய்த மாத நாவல்கள். இல்லாத காதலியைத் தொலைத்து விட்டு ஏங்கிப் புலம்புகிற புதுக் கவிதைகள். சினிமாப் பாட்டை அலசி ஆராய்ந்தபடி, புத்திசாலிப் பெண்டாட்டியும், பெருந்தன்மைக் கணவனும் கட்டிப் புரண்டு வாழ்க்கை பற்றி யோசிப்பதாக போதிப்பதாக எழுதும் புது எழுத்தாளர்தான் ஜான்ஸியின் ஆதர்சம்.

ஜான்ஸி ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தது. மல்லிகை என்றோ புன்னகை என்றோ பெயர். பத்திரிகைச் சித்திரத்தை அப்படியே நகலெடுத்து, வர்ணம் பூசி, ஜிகினாவெல்லாம் ஒட்டித் தயாரிக்கப்பட்ட அட்டை முதல் பக்கத்தில் ஆதர்ச எழுத்தாளரின் மேற்கோள் வரிகள் ; பக்கத்துக்குப் பக்கம், அவர் நாவல்களில் இடம் பெற்ற சினிமாப் பாடல்கள். பாடலுக்கேற்ற புகைப்படங்கள். கல்லூரி மாணவன் தன்னோடு படிக்கிற பெண்ணைக் காதலித்துப் போராடி வெற்றி பெறுகிற சிறுகதை.

“ பத்திரிகை எப்படி இருக்கிறது ? ” என்றது ஜான்ஸி.

“ அப்படியே அச்சாக பெரிய பத்திரிகைகள் மாதிரி இருக்கிறது. ”

“ அப்பாடா ! இப்பவாவது பாராட்டாய் ஒரு வார்த்தை சொன்னீர்களே. ”

“ போரடிக்கிறது என்பதற்காகத்தானே பத்திரிகை படிக்கிறோம். கையெழுத்துப் பத்திரிகை நடத்தறோம். பொழுதுபோக்குங்கறது சந்தோஷத்துக்குத் தானே ! ”

“ வாழ்க்கை அலுத்துவிட்டது என்று நீங்கள் சொன்னால், உங்கள் கலாசாரத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம் ” – சொன்னது யார் தெரியுமா ?

ஜான்ஸி உதட்டைப் பிதுக்கியது.

“ டி.எச்.லாரன்ஸ். கேள்விப்பட்டிருக்கிறாயோ ? ”

மறுபடியும் உதடு பிதுங்கிற்று.

மலிவான உதாரணங்களையே அறிந்து, அவற்றை மாத்திரமே அறிந்த காரணத்தினால் அவற்றைப் பயின்று, அவற்றையே மறுபடியும் உருவாக்குகிற விஷச் சுழலில் இவர்கள் சிக்கிக் கொண்டு விட்டது எத்தனை பரிதாபம் !

கடைசியில் ப்ளாங்கா கொஞ்சம் பக்கம் விட்டிருக்கோம். உங்க அபிப்பிராயங்களை எழுதிக் கொடுங்களேன் ! ” பத்திரிகைகள் உங்களை நிராகரித்து விட்டதன் துக்கமா அல்லது அவற்றை நீங்கள் நிராகரிக்க இயலாத பலவீனமா ? உங்கள் படைப்பு உங்கள் சாயலில் இருப்பது என்பது யோக்கியமானது என்பது மட்டுமல்ல. உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளும் கௌரவமும் ஆகும். இப்போது அது அடுத்தவர் சாயலில் இருக்க நேர்ந்தது விபத்துக்குத்தானா அல்லது விபரீதமேவா ? ”

“ புரியலை ” என்றது ஜான்ஸி.

“ யோசிக்கிறவர்களுக்குப் புரியும். ”

“ எங்களுக்கு எல்லாம் யோசிக்கத் தெரியாது. நாங்கள் மக்குகள். ”

‘ இவர்கள் முட்டாள்கள் இல்லை. சிந்திக்கப் பயிலாதவர்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், பயிற்சியின்மையா அல்லது தவறான பயிற்சியா ? சமூகத்தின்பால் அன்பும் வாழ்வின்பால் காதலும் அற்ற, சுயகௌரவமோ லட்சியங்களோ அற்ற இந்தப் பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் சினிமாக்களுக்கு இவர்கள் முற்றாகப் பலியானார்களோ ? ’

“ நீங்கள் எழுதறது எல்லாமே உங்கள் கற்பனையா ? ”

ஜான்சி எழுந்து முதல் கேள்வியை வீசிற்று. எல்லோர் கண்களும் எழுத்தாளர் மீது திரும்பின. கல்லூரித் தமிழ்மன்றம் அந்த நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பல நாவல்கள் எழுதிப் பிரபலமான எழுத்தாளர் வந்திருந்தார். மேடையில் பக்கத்தில் ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர்.

“ என்னோட எழுத்துக்களைக் கொண்டு நீங்கள் என் மனத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாது ” என்றார் எழுத்தாளர், ஹாஸ்யமாக.

“ அவற்றைக் கொண்டு உங்களோட குணத்தை எடை போடலாமா ? என்றான் சிவராமன்.

“ அப்படின்னா … ? ”

“ நீங்க அதிகமா விபசாரிகளைப் பற்றியும் சோரம் போகிற பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கீங்க. அது உங்களுடைய மனத்தைக் காட்டவில்லையென்றால், உங்களுடைய குணத்தைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்கிறேன் ? ”

“ என்னை அவமானப்படுத்தறதா நினைச்சுக்கிட்டு இந்தக் கேள்வியை கேட்கிறீங்க. நான் உண்மையைச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா வாசகர்களாகிய நீங்கதான் சார் அவமானப்படுவீங்க. நான் காசுக்குத்தான் சார் எழுதறேன். விபசாரிகள் கதைதான் சீக்கிரம் வித்துப்போவுது. வாசகர்களுக்கு, சோரம் போகிற பெண்களைத் தான் பிடிக்குது, அதனால்தான் எழுதறேன்.

“ நீங்க ஏன் புனைப்பெயரில் எழுதறீங்க ? ”

“ நான் வருமானத்துக்காகத்தான் எழுத ஆரம்பிச்சேன். எழுத ஆரம்பிச்சபோது அரசாங்க உத்தியோகத்திலே இருந்தேன். அதனால புனைபெயர் வச்சுக்கிட்டேன். ”

“ அரசாங்கத்திலே சம்பளம் கொடுத்தாங்கல்ல ? அப்புறம் ஏன் இப்படி எழுதிச் சம்பாதிக்கணும்னு தோணிச்சு உங்களுக்கு ? ”

“ எனக்கு தேவைகள் அதிகம் சார். ”

“ தேவைகள் அதிகம், மேல் வருமானம் வேணும்னா திருடப் போவீங்களா ? போதை மருந்து விற்பீங்களா ? விபசாரம் செய்வீங்களா ? ”

கேள்வியில் இருந்த கடுமை கண்டு கூட்டம் திகைத்தது. சட்டென்று கனமான மௌனம் நிலவியது. எழுத்தாளர் வெடித்துப் பொங்கி விடுவார் என்ற பயம் எல்லோர் முகத்திலும் ஒளிர்ந்தது.

எழுத்தாளர் கோபப்படவில்லை. சிரித்தார். வழக்கமான முறுவல் இன்னும் சற்று பெரிதாய் விரிந்தது.

“ அப்படியெல்லாம் செஞ்சா போலீஸ்ல மாட்டிக்க வேண்டி வருமே. இதிலே அப்படி இல்லை பாருங்க. எழுத்தாளர்ங்கிறது சட்டப்பூர்வமா அங்கீகரிக்கப்பட்ட தொழிலாச்சே ? ”

கூட்டம் படபடவென்று கைதட்டியது. சிவராமன் சோர்ந்து போனான். கண்ணை மூடிச் சுவரில் சாய்ந்தான். மனத்தில் பரபரவென்று கரப்பான் பூச்சி ஓடிற்று. விரல் நீளத்துக்குக் கரும் பழுப்பில், மீசையை இடமும் வலமும் அலைத்துக் கொண்டு நகர்கிற கரப்பான் பூச்சி. பார்க்கவே அருவருப்பூட்டுகிற கரப்பான் பூச்சி. ‘ கரப்பான் பூச்சியை லேசில் அழிக்க முடியாதாம். புகை, விஷம், மருந்து, வெந்நீர் எல்லாவற்றிற்கும் தப்பித்துக் கொள்ளுமாம். அணு யுத்தம் நிகழ்ந்து கதிர் வீச்சுகள் ஏற்பட்டால் கூட பூமியில் உயிரோடு தப்பிவிடக் கூடிய ஜீவிராசி அதுதானாம். கரப்பான் பூச்சியை அழிக்கணும்னா ஒரே வழி. ஓங்கி மிதிக்கணும்.

பத்திரிகை ஆசிரியர் பேசுவதற்கு எழுந்தார். “ கழுத்தில் சுருக்கு மாட்ற மாதிரி நண்பர் வீசிய கேள்விகளுக்கெல்லாம் நம்ப எழுத்தாளர் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டார்…” கூட்டம் மறுபடி வியந்து குதூகலித்தது. “ என்கிட்டே அந்த சாமர்த்தியம், மோகனப் புன்னகை எல்லாம் கிடையாது. நான் கிழவன். அதனாலே கொஞ்சம் கருணையோடு உங்கள் கேள்விகளைக் கேளுங்கோ … ”​ 

"பத்திரிகைகளுக்குனு கொள்கை லட்சியங்கள் எல்லாம் இருக்கணுமா வேண்டாமா?"


"இருக்கு சார். இருக்கு என்ன லட்சியம் ஏழு லட்சம்!" கூட்டத்தில் மறுபடி சிரிப்பு.

"அடுத்த வேளைச் சோற்றுக்காக ஏழு ரூபாய்க்குப் பெற்ற குழந்தையை விற்ற  தேசத்தில், நடிகனுடைய வைப்பாட்டி பிள்ளை பெறுவது பற்றிக் கட்டுரை போட உங்களுக்குக் கூசலையா?"

"சார், நாங்க பண்றது வியாபாரம்.  இன்னிக்குத் தேதியில நியூஸ் பிரிண்ட் என்ன விலைனு தெரியுமோ உங்களுக்கு?  வறுமையைப் பற்றி நாங்க எழுதிண்டு இருந்தோம்னா நாங்க எங்க பிள்ளைகளை விற்றுச் சாப்பிடற நிலைமைக்கு வந்திடுவோம். பத்திரிகை விக்கணும்னா சினிமாக்காரனைப் பற்றி எழுதிதான் ஆகணும். காதலைப் பற்றி எழுதணும்னா செக்ஸ் பற்றி எழுதணும்.' 

"இரண்டு தனி மனிதர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அந்தரங்கம் செக்ஸ். அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக சாவு வீட்டில் சம்போகம் செய்வது நீசத்தனமானதில்லையா?" 

''என்னவோ முத முதல்ல செக்ஸ் எழுத ஆரம்பிச்ச மாதிரி பேசறேளே...  வள்ளுவன் எழுதியிருக்கான் சார் காமத்துப் பால்"

"நீங்கள் ரிஷிகளாக இருக்கிற பட்சத்தில் காமசூத்திரம் கூட எழுதலாம். ஆனால், நீங்கள் வியாபாரிகள்.  யூ ஆர் ட்ரேடர்ஸ் ஆன் செக்ஸ்! இதன் விளைவுகளை எப்போதேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் வக்ரப் பார்வை மூலம் எத்தனை மனங்கள் திரிந்து போயிருக்கின்றன?"

"இதென்ன சார் வம்பாய் இருக்கு. சினிமா பார்த்துக் கெட்டுப் போறதை விடவா பத்திரிகை படிச்சுக் கெட்டுபோயிட்டா?"

மறுபடியும் கரப்பான்பூச்சி.

சிவராமன் ஹாலை விட்டு வெளியே வந்தான். மையை உலர்த்தின மாதிரி வானம் இருண்டிருந்தது. வயிற்றுக்காக அழுக்கைத் தின்று, இருட்டில் திரிந்து, இருட்டிலேயே சந்ததி பெருக்கும் கரப்பான்பூச்சிகள்! யுகம் எத்தனை ஆனாலும் அழிக்க முடியாத கரப்பான் பூச்சிகள்!

பின்னால் திபுதிபுவென்று யாரோ ஓடி வருகிற சப்தம் கேட்டது. சிவராமன் திரும்பிப் பார்த்தான். ஜான்சிதான். தாவணித் தலைப்பை இழுத்துச் செருகியபடி. மூச்சுவாங்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.

"கிளம்பிட்டீங்களா?"

"ம்.... ஒண்ணும் பிடிக்கலை."

"பிடிக்கலையா? இல்லை, நம்பளை நல்லா மடக்கிட்டாங்களேனு கோபமா?"

சிவராமன் சட்டென்று திரும்பிப் பார்த்தான். கண் முழுக்கச் சிரிப்புத் ததும்பிற்று.

பதில் பேசாமல் நடையை எட்டிப் போட்டான்.

நான் ஒருத்தி கூட வந்துகிட் டிருக்கேன்லே. விசுக்விசுக்னு நடையை வீசிப் போட்டா?  தப்பிச்சுக்கலாம்னா?  அப்படி எல்லாம் என்கிட்டேருந்து முடியாது. ஆயுசு பூரா முடியாது. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?  இனி நாம் இருவர் இல்லை. ஒருவர்: இது தெரியுமா?"- பாட்டு கலகலவென்று சிரிப்பில் முடிந்தது.

"இன்னும் வாய்விட்டுக் கெஞ்சணுமா?"  

சிவராமன் ஒன்றும் பேசாமல் நடந்தான். ஜான்சி எட்டி அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

''ராம்! ஐ லவ் யூ!"

"சீ!" என்று சீறினான் சிவராமன்.  கையைப் பிடுங்கிக் கொண்டான்.

"பதினைஞ்சு வயசிலே காதல்! வெக்கமா இல்லை உனக்கு?"

ஸ்தம்பித்துப் போய் நின்றாள் ஜான்சி. அரை நிமிடத்துக்குப் பின் எழுந்த மெல்லிய விசும்பல் இருளில் துல்லியமாய்க் கேட்டது.

திகாலையில் அம்மா பதறியடித்துக் கொண்டு எழுப்பினாள்.

''சிவா! சிவா! எழுந்திருடா. பக்கத்து வீட்டு ஜான்சி பாலிடாலைக் குடிச்சுடுத்துடா!"

''என்னது?"

சிவராமன் போனபோது உடம்பைச் கூடத்தில் படுக்க வைத்திருந்தது. விழிகள் கூரையைப் பார்த்து நிலை குத்தியிருந்தன. வாயில் நுரை பூத்திருந்த ஈரம், உடம்பில் மெலிதான நீலம்.

அழக்கூட முடியாமல் திகைத்துப் போய் அவள் அப்பா சுவரில் சரிந்திருந்தார். வெறித்த பார்வையாய் உடம்பையே பார்த்தபடி சாய்ந்திருந்தார். சிவராமன் சுவர் அருகில் போய் உட்கார்ந்தான். மெல்லத் தோளைத் தொட்டான். முகத்தைத் திருப்பின அவர். இவனைக் கண்டதும் உடைந்தார். குலுங்கிக் குலுங்கி அழுதார்.

ந்த அழுகைக் குரலும். நிலை குத்தின பார்வையும் சிவராமனைத் துரத்தித் துரத்தி அடித்தன. இப்போதும்கூட மனத்தில் சன்னமாய் அது ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஒலியின் எதிரொலியாய் கேள்விகள் மனத்தைக் கொட்டிக் கொட்டித் தலைகுனிய வைத்தன.

============================================================================================

விகடனில் இந்தக் கதைக்கு நடுவே வந்த துணுக்கையும் வெளியிடுகிறேன்!!


60 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. கதையின் கருத்து வித்தியாசமாக இருக்கிறது சாதாரணமாக பப்பி லவ் `பசங்களிடம் தான் தென்படும். `அவர்கள் தான் மாய்ந்து மாய்ந்து காதல் என்ற பெயரில் கவிதையும் எழுதுவார்கள். ஆனால் இக்கதை அந்த பார்முலாவை உடைக்கிறதே.

    எசப்பாட்டு

    ​நினைவுகள் கவிதையானால்
    கனவுகள் என்னவாகும்.

    Jayakumar

    P S ஸ்ரீராம் வீட்டு கரப்பான் பூச்சிகள் எல்லாம் சவுக்கியமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டு கரப்பான் பூச்சிகள் காணாமல்போய் நான்கரை ஆண்டுகள் ஆகின்றன.  மறுபடி ஒன்றிரண்டு கண்ணில் படத் தொடங்குகின்றன.  Pest Control ஆளை அழைக்க வேண்டும்!

      நீக்கு
    2. // எசப்பாட்டு

      ​நினைவுகள் கவிதையானால்
      கனவுகள் என்னவாகும். //

      இப்படி எல்லாம் எசகுபிசகாய் கேட்கக் கூடாது.  அக்கவிதை எழுதினால் அனுபவிக்கனும், ஆராயக் கூடாது!!!  ஆனால் மாலன் கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. 

      கனவுகள் காதலாகும், அல்லது காணாமல் போகும்!

      நீக்கு
    3. ​நினைவுகளின் கவிதைகள்
      கனவுகளின் காட்சியாய் மாறும்
      வெள்ளித்திரையில்
      கனவு சீன்

      Jayakumar

      நீக்கு
    4. கடைசி இரண்டு வரிகள் வேண்டாம்.  முதலிரண்டு வரிகளும் டாப்.

      நீக்கு
  3. ​கதைக்கும் பொன்மொழிக்கும் ஒரு சம்பந்தமும் காணவில்லையே? பொன்மொழி "எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான்." கதை infatuation பற்றியது. ஆக பொன் மொழி என்பது கதையின் ஒரு ஆபரணம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே...  சம்பந்தம் வருகிறதே...  அந்தப் பொன்மொழிக்கு ஜான்சி, சிவராமன், ஜான்சியின் அப்பா ஏன், எழுத்தாளர், பத்திரிகாசிரியரைக் கூட சொல்லலாம்!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பொக்கிஷ பதிவு கதையின் முன்னுரை (முன் குறிப்பு) செய்திகள் அருமை. மீண்டும் பராசக்தி என்ற திரைப்படம் அப்போது கேள்விப்பட்ட பெயராகத்தான் உள்ளது. தவிர அதிலிருந்து ஒரு பாடலோ, அதன் கதையோ அறிந்ததில்லை.

    பொன்மொழி கதைகள் தலைப்பே வித்தியாசமாகத்தான் உள்ளது மாலன் எழுதிய கதை என்றால் நன்றாகத்தான் இருக்கும். கதையின் முதலில் வந்த பொன்மொழியையும், கவிதையையும் படித்து ரசித்தேன். கதைக்கு இனி செல்லப் போகிறேன். படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கமெண்ட் படிக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கையில் 'மைக்'குடன் பேசிக்கொண்டே சம்பவ இடத்துக்கு செல்வது போல இருக்கிறது!!!

      நீக்கு
    2. முன்னுரையையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  6. ஹப்பா ஒரு வழியா வருஷத்தைக் கண்டுபிடிச்சிட்டீங்க, ஸ்ரீராம். நானும் இப்படித் தொகுப்பில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்து வருஷத்தைக் காண முயற்சி செய்வேன்.. மாமனார் தொகுப்பில். ஆனால் சிலது கடினமாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அது ஒரு கஷ்டம். பொன்னியின் செல்வன் பைண்டிங்கே இருந்தால் கூட, அது மூன்று குறைகளுக்கும் மேல் கல்கியில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. எது என்று கண்டுபிடிப்பது சிரமம்.

      நீக்கு
  7. மீண்டும் பராசக்தினு படமா!! கேள்விப்படவே இல்லையே. பராசக்தி தெரியும்.

    ஓஹோ இப்ப எஸ் கே யும் பராசக்தினு படம் செய்கிறாரா?! இதுவும் புதிய செய்தி. அதானே டைட்டில் பிரச்சனை வரலையோ? இல்லைனா டைட்டில் கீழ - புது அவதார் னு சின்ன எழுத்துல போடுவாங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இது போதாதுன்னு விஜய் ஆண்டனியும் அதே பெயரை சொன்னார்.  அது என்ன ஆனதோ...

      நீக்கு
  8. பொன்மொழிக் கதைகள் - அட இதுவே வித்தியாசமா இருக்கிறதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வித்தியாசமாய் முயற்சித்திருக்கிறார்கள்.  என்னிடமுள்ள பைண்டிங்கில் முதல் கதை சுஜாதா!  நட்பு.  படித்திருக்கிறீர்களோ?

      நீக்கு
    2. சுஜாதா வின் கதை நட்பு வாசித்ததில்லை, ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. தண்ணீருக்கு உருளும் ராட்டை
    உன்னைப் போல் முரடாய் பேசும்//

    வித்தியாசமான கற்பனை - ஜான்சியின் மனம் வழி மாலன்!

    உனக்கென்ன புத்தகம் கவிதையொன்று//

    கவிதையென்று?

    வரிகள் சூப்பர் ரொம்ப ரசித்தேன்...மாலன் அருமையாக எழுதுகிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உனக்கென்ன புத்தகம் கவிதையொன்று//
      கவிதையென்று? //

      ஆம்.  சரிதான்.  மாற்றி விட்டேன்.  அப்புறம் இதே போல பாலகுமாரன் கவிதை ஒன்று இருக்கிறது...  

      "உனக்கென்ன கோவில் குளம்
      சாமி பூதம் ஆயிரமாயிரம்
      இனிமையாய்ப் பொழுதும் போகும்
      வலப்பக்கம் கடல் மணலை
      இடப்பக்கம் இறைத்திறைத்து
      நகக்கணுக்கள்
      வலிக்கின்றன
      அடியே
      நாளையேனும் மறக்காமல்
      வா

      நீக்கு
    2. ஸ்ரீராம், சூப்பராக இருக்கு இக்கவிதையும்...கூடவே புன்னகையும் எழுகிறது!

      கீதா

      நீக்கு
    3. பாலகுமாரனின் ரொம்ப பேமஸ் கவிதை இது. நான் சொல்லாமல் விட்டிருந்தால் பானு அக்கா வந்து சொல்லி இருப்பார்.

      நீக்கு
    4. பா கு கவிதையை முன்னர் சொல்லியிருக்கீங்கன்னு நினைவு கடைசி நான்கு வரிகள் நினைவுபடுத்துகின்றன

      கீதா

      நீக்கு
  10. ரகசியம் முடிச்சவிழ்ந்து போய்விடப் போகிற குறு குறுப்பைத் தாங்க முடியாத தவிப்பு முகத்தில் படர்ந்தது.//

    ஆஹா!!

    பத்திரிகைகளில் வருகிற தொடர்கதைகளைக் கிழித்துத் தொகுத்த புத்தகங்கள். இரண்டு மூன்றாய்ச் சேர்த்து பைண்ட் செய்த மாத நாவல்கள்.//

    அட! அப்ப இப்படியான பழக்கங்கள் நிறைய உண்டே! பெரியவர்கள் பலரும் இதைச் செய்திருப்பார்கள்.

    //சினிமாப் பாட்டை அலசி ஆராய்ந்தபடி, புத்திசாலிப் பெண்டாட்டியும், பெருந்தன்மைக் கணவனும் கட்டிப் புரண்டு வாழ்க்கை பற்றி யோசிப்பதாக போதிப்பதாக எழுதும் புது எழுத்தாளர்தான் ஜான்ஸியின் ஆதர்சம்.//

    இதில் அப்போதைய ஏதேனும் எழுத்தாளர் மறைந்திருக்கிறாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலைமதி, மோனா, போன்ற மாத இதழ்களில் வந்த சுஜாதா கதைகளை நானும் பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்!

      // இதில் அப்போதைய ஏதேனும் எழுத்தாளர் மறைந்திருக்கிறாரோ? //

      அல்லது ஒரு எழுத்தாளரின் பாணியை சொல்லி இருக்கலாம்.  பாலகுமாரன், இவர் சுப்ரமணியராஜு, இந்துமதி எல்லோரும் நண்பர்கள்.

      நீக்கு
    2. எழுத்தாளரின் பாணியைத்தான் சொன்னேன் ஸ்ரீராம்...அப்படி எழுத்தாளர் யாரையேனும் என்று...

      கீதா

      நீக்கு
    3. மாலைமதி, மோனா, போன்ற மாத இதழ்களில் வந்த சுஜாதா கதைகளை நானும் பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்!//

      ஆஹா! லவட்டணுமே!!! ஹிஹிஹிஹி

      ஆமாம் அவங்க எல்லாரும் நண்பர்கள்

      கீதா

      நீக்கு
  11. “ என்னோட எழுத்துக்களைக் கொண்டு நீங்கள் என் மனத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாது ”//

    இது கொஞ்சம் உண்மைதான்.

    குணத்தைப் பற்றி சிவராமன் கேட்கும் தொடர் கேள்விகளின் இடம் - எனக்கு புதது வை நினைவுபடுத்துகிறது!!!!!!

    மாலனும் எழுத்துத் துறையில் இருப்பதால் தடையில்லாமல் அதை பேஸ் செய்து கதை தடையில்லாமல் பயணிக்கிறது.

    தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எழுத்து!!! எழுத்துத் திறமைக்காக, எழுதும் ஆர்வத்திற்காக இல்லை என்பது போல் போகிறதே! எழுத்தாளர்கள் அப்படித்தானா இல்லை இரண்டையும் கலந்து கட்டியோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சிவராமனுக்கு வாழ்நாள் முழுவதும் கரப்பான் பூச்சி உள்ளே ஓடிக் கொண்டிருக்கும். இரவில் தூக்கம் கெட்டு...

    பொன்மொழி சிவராமன் கதாபாத்திரத்திற்குப் பொருந்து போகிறது.

    எண்ணங்களில் சிந்தனைகளில் வித்தியாசமாக இருப்பதில்குறையில்லை நல்லதுதான். சுற்றிப் பார்த்து அதையும் புரிந்து கொள்ள வேண்டும். நக்கலாகப் பார்க்காமல் நையாண்டி அடிக்காமல்....ஆனால் தான் வித்தியாசமானவன் இந்தச் சமூக எண்ணங்களிலிருந்து என்று காட்டிக் கொண்டு சுற்றிலும் பார்க்காமல் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது சமூகம் நகைக்கும்.

    சிவராமனுக்கும் அவள் மேல் பிரியம் இருப்பது போல் தான் கதையில் முதலில் சொல்கிறார் ஆசிரியர்.

    அன்று அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் அவன் மூடைக் கெடுத்திட அந்த மூடில் அவன் ஜான்சியிடம் எரிந்து விழுகிறான். ஜான்சிக்கு அதைப் புரிந்து கொள்ளும் வயதும் இல்லை மனப்பக்குவமும் இல்லை. சபருவ வயதின் உணர்வுகள்..சிவராமனுக்கும் அவன் இருக்கும் உலகமெ வேறு.....ஜான்ஸுக அதனால் அந்த முடிவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜான்சியின் அந்த அறியாத வயதில் அவளைக் கெடுப்பது இதுபோன்ற பத்திரிகைகள், எழுத்துகள்! - சிவராமன் எண்ணம்.

      நீக்கு
    2. ஆமாம், அதேதான்....சிவராமன் இவ்வளவு பேசுபவன்,

      //“ எனக்கு, உன் நினைவே கவிதையாகும். ”

      “ ம். அவதான். அவளேதான். ”

      ரகசியம் முடிச்சவிழ்ந்து போய்விடப் போகிற குறு குறுப்பைத் தாங்க முடியாத தவிப்பு முகத்தில் படர்ந்தது.

      “ அது கற்பனையா ? நிஜமா ? ”

      “ நிஜங்க. நாலடி, பதினொரு அங்குலத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற நிஜம். நீங்க தினம் பார்க்கிற நிஜம். உங்க கூட பஸ்ஸிலே வருகிற நிஜம். ”

      “ அப்படியா, யாரு ? ” – முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு கேட்டான் சிவராமன்.//

      இப்படிப் பேசியவன்....

      ஜான்சியைப் புரிந்து கொண்டு கொஞ்சம் யோசித்துப் பொறுப்போடு பதில் அளித்திருந்தால்....ஜான்ஸி முடிவு எடுத்திருக்கமாட்டாள்.

      ஆனால் கதை வேறு விதமாகியிருக்குமோ?.

      ஆனால் அவன் இப்ப பள்ளத்தில். அவன் மனமே அவனை நகைப்புள்ளாக்கியிருக்கும்
      1985 ல் சிவராமனின் எண்ணம் போல இப்பவும் அதேதானே சொல்லிக் கொண்டிருக்கிறோம் இல்லையா? எண்ணற்ற மீடியாக்கள் விரிந்த நிலையில்.

      சிவராமன் போன்றவர்கள் இப்பவும் இருக்காங்க. அது சமூகக் கோபம்...இது கொஞ்சம் எல்லை மீறும் போது மனநிலை பாதிக்குமே!

      கீதா

      நீக்கு
    3. ஆனால் அவன் இப்ப பள்ளத்தில். அவன் மனமே அவனை நகைப்புள்ளாக்கியிருக்கும்//

      எதுக்குனா, பெரிசா நீ மட்டும்தான் வித்தியாசமா உன்னை உயர்வாக எண்ணினாயே பார்த்தியா இப்ப வினையைன்னு!!

      கீதா

      நீக்கு
  13. கவிதை ரசனையாக இருந்தது.

    கதை இடையிடை படிக்கும்போது எங்கெங்கோ சென்று வந்ததுபோல் இருந்தது.

    கடைசி மூன்று பந்திகள் ஜான்சியின் முடிவு உதைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜான்சியின் முடிவு சிவராமனின் பொறுப்பின்மையால்...

      நன்றி மாதேவி.

      நீக்கு
  14. ஜான்சியிடம் மன முதிர்ச்சி இல்லை சிவராமனும் புரிந்து கொள்ளவில்லை. அவனுக்கும் மன முதிர்ச்சி இல்லை தன்னைத் தானே உயர்த்தியாய் நினைத்துக் கொள்கிறான்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  எனக்கும் அப்படிதான் தோன்றியது.  அவனும் கல்லூரி மாணவன்தானே!

      நீக்கு
  15. ஆனாலும் இந்த முடிவு அநியாயம். :(

    பதிலளிநீக்கு
  16. மனதைத் தொட்ட கதை. பல யுவன்/யுவதிகளுக்கு இன்றைக்கு இப்படித்தான் காதல் என்கிற பெயரில் infatuation.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அவசரக்காதல், ஹார்மோன் காதல். இனக் கவர்ச்சி.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. ஆனால், முடிவு யாருக்குத் தரும் தண்டனை...! புரியவில்லை.

    /எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான்."/

    இதில் அவன் நகைப்புக்குள்ளாவதில்லை. அவனின் மனம் தரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறான்.

    /நீங்க அதிகமா விபசாரிகளைப் பற்றியும் சோரம் போகிற பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கீங்க. அது உங்களுடைய மனத்தைக் காட்டவில்லையென்றால், உங்களுடைய குணத்தைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்கிறேன். /

    இது போன்ற பல இடங்களிலும், அதற்கு முன்பே அவர்கள் இருவருக்கிடையே உண்டான பேச்சு தர்க்கத்திலும் சிவராமின் முரட்டுத்தனத்தை உணர்ந்து கொண்டவளாக காட்டப்பட்ட ஜான்சி இறுதியில் அவனை, அவனின் சுபாவத்தை கலாய்க்கும் மனப்பக்குவத்தை பெற்ற ஜாள்சி இந்த முடிவை சட்டென எடுத்திருக்க வேண்டாம். தன் வழியிலேயே ஸ்திரமாக நின்று அவனை திருத்த முயன்றிருக்கலாம். இல்லை அவனை மறக்க முயற்சித்திருக்கலாம்.

    எழுத்தாளர் மாலனின் எழுத்தில் பல சிறுகதைகளை கொண்ட ஒரு சிறுகதை தொகுப்பை முன்பு படித்துள்ளேன். இது பொன்மொழிக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதால், நாம் சிவராமனை அவனின் முரட்டுத்தனமான கொள்கைகளுக்காக எள்ளி நகையாடலாம் என்ற அவரின் எண்ணம் புரிகிறது. நன்றாக எழுதியுள்ளார்.முடிவுதான் மனதை வருத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அலசல் கமலா அக்கா. என் அபிப்பிராயமும் மாறுகிறது.

      நீக்கு
  18. வியாபாரத்துக்காகச் செய்யும் செயல், பலரின் வாழ்க்கையை, எண்ணவோட்டத்தைப் பாதிப்பது வியாபாரிகளுக்குத் தெரியாது. கேட்டால், தங்களுக்குச் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுவார்கள். இதில் விகடன், தன்னைப் பெரிய ஆளாக எண்ணிக்கொண்டு, 'புகை, மது' விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளதில்லை என்று சொல்லிக்கொண்டது.

    இந்தக் கதையில் ஜான்சியும் முதிர்ச்சியற்றவள். அவளை எப்படி handle செய்வது என்று தெரியாத சிவராமனும் முதிர்ச்சி இல்லாதவன். வேறு என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இருவருமே பதின்ம பருவத்தைத் தாண்டாதவர்கள்.  அல்லது ஜஸ்ட் தாண்டுபவன்.

      நீக்கு
  19. அத்தா, அம்மை என்பதெல்லாம் இன்னமும் உபயோகப்படுத்தப்படும் சொற்கள். சில சமூகங்களில் அத்தா உபயோகிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  20. மனச்சாட்சியைக் கொன்ற வியாபாரிக்கு கோபம் சாத்தியமில்லைதான்.. கோபப்படாதஎழுத்தாளரின் பதில்கள் அருமை..அற்புதமான கதை..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபப்படாத எழுத்தாளரின் பதில்கள் அருமை என்பது வியக்க வைக்கிறது.  நன்றி ரமணி ஸார்.

      நீக்கு
  21. அச்சச்சோ செவ்வாய்க்கிழமையும் அதுவுமா இப்பூடிப் பொசுக்கென முடிஞ்சுபோச்சே கதை... சிவராம- ஜான்சி என்றாதும் பின்னாளில் பிரச்சனை வரும்.. தொடர்கதையாக இருக்கும் எண்டெல்லாம் ஓஒசிச்சுக்கொண்டே கதையைப் படிச்சேனா.. சே.. கர்ர்ர்ர்:)) எழுத்தாளருக்கு என்ன அவசரமோ.

    ஆரம்பப் பொன்மொழியும், க்விதையும் அழகு ..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்மாவே அந்த ஆரம்ப கவிதைதான் ரொம்ப அழகு அதிரா.  

      நீக்கு
  22. பழுப்பு நிறக் கரப்பான்... இப்படி நானும் பார்த்திருக்கிறேன், அது இருட்டில் வளரும் கரப்பான் என நினைப்பேன்... கொஞ்சம் வெள்ளைக்காரர்போல இருக்கும்..ஹா ஹா ஹா..

    இப்போ ஆருக்காவது க. பூ க்கு மருந்து தேவையெனில், அமேசனில் கிடைக்குது.. இந்தியாலயும்.... கரப்பான் பூச்சி ஜெல், அதை அங்கின அங்கின ஒட்டி விட்டால் போதும், பூண்டுடன் காணாமல் போயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைக் கரப்பானைக் கண்டால் குஷ்டரோகியைக் கண்டது போல இருக்கும்!  ரொம்ப அருவெறுப்பாய் இருக்கும்!

      நீக்கு
  23. எனக்கொரு டவுட் ஸ்ரீராம்... நீங்க கதையைப் படிச்சுப் படிச்சு ரைப் பண்ணி எடுக்கிறீங்களோ???

    பதிலளிநீக்கு
  24. 1985. எனவே விகடனில் பொன்மொழிக்கதைகள் வெளிவந்த ஆண்டு 1985. சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்!//

    எனக்கு படித்த நினைவே இல்லையே!

    15 வயது சிறு பெண்ணுக்கு வந்த காதலை அவளுக்கு புரிய வைத்து இருக்கலாம். யார் மேல் உள்ள கோவத்தை எல்லாம் இந்த சிறு பெண்ணிடம் காட்டி விளைவு .

    கதையின் நிறைவு மனதை கனக்க வைத்தது,

    விகடன் துணுக்கு அம்பை சொல்லி இருப்பது பகுதியை படித்த பின் கொஞ்ம் லேசாக்கியது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இந்தக் கதையில் எனக்கொரு நிறைவே இல்லை கோமதி அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!