திங்கள், 7 ஆகஸ்ட், 2023

'திங்க'க் கிழமை : மோர் கீரை : சியாமளா வெங்கட்ராமன் ரெஸிபி

 

மோர் கீரை. 

மொளைக்கீரே, அரைக்கீரே, பொன்னாங்கண்ணிக் கீரே என்ற கீரைகாரர்குரல்கேட்டதும், 'ஆஹா ஆறு மாதம் ஆயிற்று இந்த குரலை கேட்டு'  என்று வேகமாக வாசலுக்கு வந்தேன்.  " கீரை இங்க வாப்பா" என்று கூப்பிட்டேன். 

கீரைக்காரர் வண்டியை தள்ளிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார். " உன்ன காணோம்னு எதிர் வீட்டு அம்மா கிட்ட கேட்டேன் நீ லண்டன்  போனதா சொன்னாங்க. நீ எப்ப ஊர்ல இருந்து வந்த"  என்று கேட்டுக் கொண்டே முளைக்கீரை எடுத்து  கொடுத்தார். பச்சை பசேல் என்ற அந்த கீரை கட்டை ஒரு குழந்தையை தடவு போல் தடவிக் கொண்டு உள்ளே செல்லத்  திரும்பினேன். 

அப்பொழுது எதிர் flat விமலா, "இன்னைக்கு என்ன கீரை மசியலா" என்று கேட்டாள். 
" இல்லைஇன்று மோர் கீரை பண்ணுவதாக இருக்கிறேன். இந்தியாவில் செய்து வருட கணக்காய் விட்டது"  என்று கூறினேன். 

" அது என்ன மோர் கீரை?"  என்று கேட்க, நான் உடனே, "எங்கள் பிளாக்கில் எழுதுகிறேன் பாத்துக்கோ"  என்று கூறினேன்.  

இதோ அதைப்பற்றி எழுதுகிறேன் நீங்களும் பாருங்கள்...,.

மோர் கீரைசெய்வதற்கு 
தேவையான பொருட்கள்: 

முளைக்கீரை ஒரு கட்டு (அரைக்கீரை பாலக்கீரை எதுவானாலும் சரி)
தேங்காய் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் 
சீரகம் ஒரு ஸ்பூன்  
காய்ந்த மிளகாய் ரெண்டு
கடுகு ஒரு டீஸ்பூன்
தயிர் ஒரு கப் கடைந்தது. 
அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
எண்ணொய்ஒரு டீஸ்பூன். 

செய்முறை: 
கீரையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். 

அப்போது தேவையான உப்பு போட வேண்டும்.  தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து, அத்துடன் தயிர், அரிசி மாவு கலந்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் கீரையில் கொட்டி, நன்றாக கலக்க வேண்டும்.  

இரண்டு  கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும். எண்ணெயில் கடுகு மிளகாய் வெடிக்க விட்டு அதை அதில் கொட்ட வேண்டும்.  

இப்பொழுது அபார ருசியுடன் மோர் கீரை தயார். 


= = = = = =

14 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மோர்க்கீரை நல்ல ரெசிப்பி. நன்றாகச் சொல்லியிருக்கீங்க.

    இங்கும் வீட்டில் செய்வதுண்டு. மோர்க்கீரை. இதே போன்றும்...மாக்கூட்டு என்றும் நம் வீட்டில் சொல்வதுண்டு. நான் பெரும்பாலும் அரிசி மாவு சேர்க்காமல்தான்செய்வதுண்டு. அதற்குப் பதில் கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து பொடி செய்தது சேர்த்தும் செய்வதுண்டு சில சமயம்.

    மோர்க்குழம்பு கீரை என்றும் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மோர்க்குழம்பில் கலக்கிய கீரைக்கூட்டு போன்றதொரு ரெசிப்பி. நன்று.

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இது மாதிரி எல்லாம் செய்ததில்லை..

    தயிருடன் கீரைக் கடைசல் சேர்த்து சாப்பிட்டதுண்டு..

    கிராமத்து உணவு முறையில் தயிரும் மோரும் கீரைக் கூட்டும் சர்வ சாதாரணம்..

    இப்போது கீரையும் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா, உங்க தளத்துல என் கருத்துகள் எங்கேயாவது ஒளிந்திருக்கான்னு பாருங்க. நேத்து கூட ரெண்டு கொஞ்சம் பெரிய கருத்துகள் போட்டேன் ரயிலடிக்கு....

      ஆனா போட்டது மாலை/இரவில்

      ஒளிந்துகொண்டிருக்கான்னு பாருங்க...தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கிறேனே...கருத்தும் போடுறேன்...

      கீதா

      நீக்கு
    2. வந்திருக்கு பார்த்துவிட்டேன் துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  5. வித்தியாசமான நல்லதொரு குறிப்பு. அவியல் செய்முறை மாதிரி இருக்கிறது. அரிசி மாவு மட்டும் தான் வித்தியாசம்! கீரை செய்முறைகளில் தயிர் சேர்க்கும்போது மிகவும் ருசியாக இரூக்கும்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய திங்களில் தங்கள் செய்முறையாக மோர்க் கீரை ரெசிபி நன்றாக உள்ளது. படங்கள் அருமை. நானும் இவ்விதம் செய்வேன். தேங்காய் தவிர்த்து தாளிப்பில் கொஞ்சம் வெந்தயம் கலந்து சேர்ப்பேன். மோருடன் அரிசிமாவு சிறிது கலக்கும் போது தயாரிப்பு சேர்ந்து ஒன்றாக வரும். அதனால் இதற்கு அரிசிமாவும் சேர்மானத்திற்கு உகந்த ஒரு பொருள்ததான்
    தங்கள் செய்த அருமையான இந்த மோர்க்கீரை பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. மோர் கீரை நன்றாக உள்ளது .
    அரிசிமா சேர்த்ததில்லை இம் முறையில் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கீரை மசியல் பிடிக்காதவர்களுக்குக் கூட மோர்க்கீரை பிடிக்கும். நான் தாளிக்கும் பொழுது கடுகோடு, உ.பருப்பும், மிளகாய் வற்றல் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  9. மோர் கீரை நன்றாக இருக்கிறது. செய்முறை குறிப்பும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. மோர்க்கீரை எல்லாம் எழுதி அனுப்பலாம்னு சொல்லி இருக்கக் கூடாதோ? நான் பிறந்த வீட்டில் தான் அதிகம் விதவிதமான கீரைகள் சாப்பிட்டேன். இங்கே எப்போவுமே கீரை மசியல் தான். எப்போவானும் எனக்குத் தோன்றும்போது மோர்க்கீரை பண்ணுவேன் சீரகம், மி.வத்தல் இல்லாமல். பொதுவாக் கீரைக்கே உளுத்தம்பருப்பு மட்டுமே தாளிப்பது உண்டு. கடுகு அவ்வளவாய்ப் போட மாட்டாங்க. சாதாரணக் கீரை மசியலில் கூட உளுத்தம்பருப்போடுக் குழம்பு வடாமும் தாளித்தால் வாசனையும் ருசியும் அள்ளிக் கொண்டு போகும்

    பதிலளிநீக்கு
  11. சிலர் அவியலுக்குக் கூட மாவு கரைத்து விட்டு ஜீரகமும் வைத்து அரைக்கின்றனர். நான் வத்தக்குழம்பு, சாம்பார், பொரிச்ச குழம்புனு எதுக்குமே மாவு விடமாட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!