புதன், 9 ஆகஸ்ட், 2023

பள்ளித் தேர்வில் காப்பியடித்ததுண்டா?

 

நெல்லைத்தமிழன்: 

பள்ளித் தேர்வில் காப்பியடித்ததுண்டா? திருட்டுத்தனம் செய்ததுண்டா? பிட் போன்று.

# அதற்கு அவசியமே நேர்ந்ததில்லை. சாதாரணமாக 50 முதல் 65 வரை எந்த பாடத்திலும் மார்க் வாங்கி விடுவது எனக்கு சாத்தியமாக இருந்தது. அந்த காலத்தில் 60 மார்க் வாங்கி பாஸ் செய்தால் அரசு வேலை நிச்சயம் என்கிற நிலை இருந்ததால் காப்பி அடிக்க தேவையோ, எண்ணமோ இல்லாமல் போயிற்று.

& ஐந்தாம் வகுப்பு, மற்றும் ஏழாம் வகுப்பு படித்தபோது, சும்மா 'கிக்'குக்காக காப்பி அடித்து, பிட் அடித்து? மாட்டாமல் தப்பியது உண்டு. 

ஐந்தாம் வகுப்புப் பரிட்சையின்போது - சமூக பாட பரிட்சை அன்று எல்லோரும் ராதாகிருஷ்ணன் என்ற பையனிடம் (பரிட்சை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர் இல்லாத சமயத்தில்) கேள்விகளுக்கு பதில் கேட்டு, கேட்டு எழுதினார்கள். நான் அவனிடம், பரீட்சையில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வியான, " நம்முடைய ஜனாதிபதியின் பெயர் என்ன? " என்பதற்கு பதில் கேட்டேன். அவன் " என்  பெயர்தான்" என்றான். நான் என்னுடைய விடைத்தாளில் " என் பெயர்தான்" என்று எழுதினேன். 

ஏழாம் வகுப்புப் படித்தபோது - ஆங்கிலப் பரீட்சையில் மாவீரன் அலெக்சாண்டர் பற்றிய கட்டுரை கேட்டிருந்தார்கள். பையன்கள் எல்லோரும் ஒரு தாளில் எழுதியிருந்த கட்டுரையை ஒவ்வொருவராக பார்த்துப் பார்த்து, பிட் அடித்து, அந்தத் தாள் என்னிடமும் வந்தது. படித்துப் பார்த்தால், அந்தத் தாளில் எக்கச்சக்கமாக spelling mistakes - முடிந்தவரை சில திருத்தங்கள் செய்து அதை அடுத்த மாணவனிடம் கொடுத்தேன். 

பார்க்கவேண்டிய நல்ல சீரியல்கள் ஓடிடி எந்தத் தளத்தில் என்ன சீரியல்கள், தொடர்பகுதிகள் என்று சொல்ல இயலுமா?

# சீரியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  பார்ப்பதே இல்லை.  காமெடி படங்கள், முக்கியமாக, மலையாள காமெடி படங்கள் மட்டுமே பார்க்கப் பிடிக்கிற ரகத்தில் சேர்ந்து விட்டேன்.

& # சொன்னதை வழிமொழிகிறேன். தமிழ் காமெடி படங்கள் மட்டுமே எனக்குப் பிடித்தவை. 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

& நீங்கள் அனுப்பிய இந்தப் படத்தில்தான் பார்த்தேன்! எங்கள் குடியிருப்பில் மரங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நிலா என் பார்வைக்கு சிக்கவில்லை! 

சென்ற வார வாரிசு நடிக, நடிகையர் கேள்வியில் யாருமே நடிகவேளின் வாரிசுகளை குறிப்பிடாதது ஆச்சர்யமாக இருந்தது. அவர்களில்  யார் சோடை போயிருக்கிறார்கள்? துல்கர் சல்மானை எப்படி மறந்தார்கள்?

# M R ராதா நடிப்பு மிகவும் மிகை ரகத்தை சேர்ந்தது என்று நான் நினைக்கிறேன். அவரது வாரிசுகள் வெற்றி பெற்றவர்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

துல்கர் சல்மான் எல்லாம் எனக்குப் பரிச்சயம் இல்லாத நடிகர். என் கவனத்தில் வராதது வியப்பில்லை.

& அந்தப் பதிவு பற்றி facebook ல லிங்க் கொடுத்தபோது இருவர் பதில் சொல்லியிருந்தனர். 

அதைப்போல இசை வாரிசுகளின் எம்.எஸ்.ஸின் பேத்திகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா வை யாராவது குறிப்பிடுவார்கள் என்று நினைத்தேன்.

# MS did not have any child.

தற்கால இளைஞர்களில் சிலர் DINK(Double Income No Kids) என்னும் கொள்கையையும், இன்னும் சிலர் Double N, Double K(NNKK - No Kitchen, No Kids) என்னும் பாலிஸியையும் பின்பற்றுகிறார்களாமே? இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

# இன்றைய நிலையில் இரட்டை வருமானம் விரும்பப்படுவதற்கான நியாயங்கள் நிறையவே இருக்கின்றன.  ஆனால்  பிள்ளைகள் வேண்டவே வேண்டாம் என்று இருப்பவர் அரிது.  இப்போது வேண்டாம், ஒன்று போதும், வீடு அல்லது கார், அல்லது இரண்டுமே வாங்கினபின் யோசிக்கலாம் என்று எண்ணுபவர்கள்தாம் அதிகம் . 

மக்கள் தொகை என்னவோ பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.  சொந்தமாக பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன, இரண்டு குழந்தைகளை சுவீகாரம் எடுத்து வளர்ப்போம் என்கிற மனப்பான்மை பெருகினால் நல்லதுதான்.  சில மதக் கோட்பாடுகளில் தத்து எடுத்து வளர்ப்பது அனுமதிக்கப் படுவதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் இது பெரிய பிரச்சினையாக இருக்கலாம். 

அடிப்படையில் மக்கள் அன்பு, நீதி , நேர்மை சார்ந்த வாழ்க்கை முறையை விரும்பி ஏற்றால் இதெல்லாம் மிக அற்பமான பிரச்சினையாகிவிடும்.

= = = = = = = =

KGG பக்கம் : 

ஆறாம் வகுப்பு சேரந்தவுடன், முதல் நாள், முதல் வகுப்பு. எங்கள் வகுப்பின் ஆசிரியர் வைத்யநாதய்யர், மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். " நீங்கள் எல்லோரும் ஆரம்பப் பள்ளி படிப்பு முடித்து, பெரிய கிளாஸ் வந்துவிட்டீர்கள். இங்கே வந்த பிறகு, அடிக்கிறான் சார், கிள்ளறான் சார் என்றெல்லாம் .. " 

அப்போது ஒரு மாணவன், பக்கத்து மாணவனைக் காட்டி பெரிய குரலில் " சார் - அடிக்கிறான் சார் " என்று கத்தினான்! 

ஆசிரியருக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. 

*** *** *** 

ஆறாம் வகுப்பில் பல மறக்கமுடியாத சம்பவங்கள், மற்றும் மாணவர்கள்! 

வாரத்தில் ஒருநாள், craft பீரியட் உண்டு. க்ராஃப்ட் ஆசிரியர் சம்பந்தம், 'எல்லா மாணவர்களும் ஆளுக்கொரு தக்ளி வாங்கவேண்டும் - ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு முழு பஞ்சுப் பட்டை கொண்டுவந்து, வகுப்பில் நூல் நூற்கவேண்டும்' என்று முதல் வகுப்பிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நாகை காதி கடையில், எனக்காக ஒரு தக்ளி வாங்கினோம்.  

எங்கள் வீட்டில் நூல் நூற்கும் இராட்டை இரண்டு இருந்தன. அம்மா, அக்கா, அண்ணன் எல்லோருமே அதில் ஓய்வு நேரங்களில் நூல் நூற்பது வழக்கம். நானும் நூல் நூற்கக் கற்றுக்கொண்டேன். நாங்கள் நூற்ற நூல்களை சிட்டம் போட்டு, எடுத்துக்கொண்டுபோய் நாகை காதி கடையில் கொடுத்து அதற்குரிய பணம் வாங்கி வருவது என்னுடைய வேலை. அப்படி வாங்கிவரும்போது அடுத்து நூல் நூற்பதற்கு பஞ்சுக் கட்டு  ஒன்று அல்லது இரண்டு  வாங்கி வருவேன். 

க்ராஃப்ட் பீரியட் இருக்கின்ற நாட்களில், அந்தப் பஞ்சுக் கட்டிலிருந்து ஒரு பஞ்சுப் பட்டை எடுத்து, புத்தகத்தின் நடுவில் வைத்துக்கொண்டு செல்வேன். 

வகுப்பில் பத்துப் பதினைந்து பேராவது பஞ்சுப் பட்டை, எடுத்து வருவார்கள். சிலர் வகுப்புக்கு தக்ளி மட்டும் எடுத்து வருவார்கள். பஞ்சு கொண்டு வராத மாணவர்கள், ஒரு யுக்தி செய்வார்கள். பஞ்சு கொண்டு வருகின்ற மானவர்களிடமிருந்து பாதி பஞ்சு பட்டையை பிய்த்து எடுத்து, அதை முழு பஞ்சு பட்டை போல நீட்டிக்கொள்வார்கள். பார்ப்பதற்கு முழு பஞ்சுப் பட்டை போல இருந்தாலும் அது தொய்ந்து போய் காட்சி அளிக்கும். 

இன்னும் சில மாணவர்கள் ஒரு சூப்பர் ஐடியா கடைபிடிப்பார்கள். பஞ்சுப் பட்டை ஓர் அங்குல நீளத்திற்கு கடன் வாங்கி, அதன்மீது ஒரு பேப்பர் சுற்றி, 'அது முழு பஞ்சுப் பட்டை, விரல் பட்டு அது அழுக்காகாமல் இருப்பதற்காக பேப்பர் சுற்றி வைத்துள்ளேன்' என்று ரீல் விடுவார்கள். 

க்ராஃப்ட் வகுப்புக்கு வருகின்ற சம்பந்தம் சார், வந்த பத்து நிமிடங்களுக்குள் மாணவர்கள் கொண்டு வந்துள்ள தக்ளி மற்றும் பஞ்சுப் பட்டை ஆகியவற்றை அவசரமாக இன்ஸ்பெக்ஷன் செய்துவிட்டு - பிறகு அக்கம்பக்கத்து ஆசிரியர்களுடன் அரட்டைக் கச்சேரி செய்யப் போய்விடுவார். 

வகுப்பில் ஆசிரியர் இருக்கும்வரை அமைதியாக, பூனை போல இருந்த வால் பையன்கள், ஆசிரியர் அகன்றதும் க்ராஃப்ட் வகுப்பை கிஷ்கிந்தாபுரி ஆக்கி ஆட்டம் போடுவார்கள். 

ஒருவன் அங்கே இருக்கும் பெரிய குடைராட்டினம் போன்ற மர சுற்றுருளையின் ( கைத்தறிக்கு நூல் சுற்றி வைக்கும் உருளை) மீது ஏறி நிற்பான், இரண்டு பேர் அதைச் சுற்றி விடுவார்கள். 

சண்முகம் என்ற நண்பன், தன்னுடைய பஞ்சுப் பட்டையை நீளமாக இழுத்து, அதை தொங்கு மீசை போல மூக்குக்குக் கீழே இடுக்கிக் கொண்டு, ஆசிரியரின் நாற்காலியில் மன்னர் போல உட்கார்ந்து, " கஜ மார்த்தாண்டே !" என்று வீராவேசமாக முழக்கமிடுவான். எல்லோரும் ரசித்துச் சிரிப்போம். 

 எவ்வளவு சந்தோஷமான, கவலை இல்லாத நாட்கள்! 

= = = == = 

அப்பாதுரை பக்கம் : 

(ஒரு வித்தியாசத்துக்கு எண்ண ஓட்டத்திலிருந்து... ) 

லாட்டரி

தொண்ணூறுகளில் என் நண்பனாக இருந்தான் ஷான். என்னை விட பத்து வயது மூத்தவன். தொடர்பு விட்டுப் போனாலும் அவனை அடிக்கடி நினைப்பதுண்டு. 

ஷானுக்கு ஒரு அதீத பழக்கம் இருந்தது. மாத சம்பளத்தில் 10% சதவிகிதம் தவறாமல் லாட்டரி சீட்டில் செலவழிப்பான். பாஸ்டனில் இருந்து பக்கத்து மாநில நகரங்களுக்குச் சென்று அங்கங்கே வாரா வாரம் லாட்டரி சீட்டு வாங்குவான்.  கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பின் ஜாக்பாட் ஜெயித்தான். நாலு கோடி டாலரோ என்னவோ.  மறுநாள் ஆபீஸ் வந்து வேலையைத் துறந்தான். எங்கள் மேனேஜர் முகத்தில் துப்பினான். எனக்கு ஒரு பெரிய கேக் வாங்கித் தந்தான். வெளியேறினான். அப்புறம் அவனை நான் பார்க்கவில்லை.  போன வாரம் காலமானான் என்று வாட்சப் குழுவில் செய்தியாகப் பார்த்தேன். 

வாட்சாப்பு வம்பாப்பு ஆச்சே? ஷானைப் பற்றி நிறைய விவரங்கள் வரத்தொடங்கின. லாட்டரி பணம் எல்லாம் செலவாகி ரிடையரான காலத்தில் பாஸ்டன் துறைமுகம் பக்கம் கத்தோலிக்க ஏழைகள் அடைக்கல விடுதியில் சர்ச் பெஞ்ச் துடைத்து காலம் தள்ளினானாம்.  வருத்தமாக இருந்தது.

கொஞ்சம் கூகிலில் சாரித்துப் பார்த்தேன். அமெரிக்காவில் பிரதானமான இரண்டு லாட்டரி நிறுவனங்களுக்கு வருடத்துக்கு நூறு பிலியனுக்கு மேல் வருமானமாம்.  சென்ற 30 வருடங்களில் லாட்டரியில் கோடி டாலருக்கு மேல் வென்றவர்களில் 36% சதவிகித பேர் மொத்தத்தையும் ஐந்து வருடங்களுக்குள் தொலைத்து ஓட்டாண்டியானார்களாம்.  

நான் கண்ட சில விவரங்கள் சுவாரசியமானவை:

 - லாட்டரி வென்றவர்கள் வீட்டு வாசலில் தூக்கு போட்டு சாவோம் என்று அச்சுறுத்தி பணம் பறிப்பதற்கு ஒரு சங்கமே இருக்கிறதாம்.  சங்கத்துல் உறுப்பினராக பத்தே டாலர் கட்டணம். உங்கள் மாநிலத்தில் லாட்டரி வென்றவர்கள் முகவரியை சங்கத்தில் வாங்கிக்கொள்ளலாம். தூக்கு போடும் அச்சுறுத்தலுக்கு அரை நாள் இலவச பயிற்சி முடிந்ததும் உங்கள் வசதிப்படி லாட்டரி வென்றவர்களை அச்சுறுத்தலாம்.  போலீசில் மாட்டாமல் சம்பாதித்த பணத்தில் முப்பது சதவிகிதம் சங்கத்துக்குத் தர வேண்டும். அம்புட்டுதான்.  போலிசில் மாட்டினால் சங்கம் பாதி ஜாமின் பணம் கட்டும்.  இது எப்படி இருக்கு!  இவர்களின்  பிடுங்கலுக்கு அஞ்சி லாட்டரி வென்றவர்கள் ஆயிரம் டாலருக்கு மேல் பணம் கொடுப்பார்களாம்!

 - இதே போல் கொலை மிரட்டல், கடத்தல் மிரட்டல், யேசு அவதாரம் என்று பணம் பறிக்க பல முறைகள் உள்ளனவாம். லாட்டரி வென்றவர்களிடமிருந்து பணம் பறிப்பதே ஒரு தொழில் போல இருக்கிறது.

பெயர் தெரிந்த உலக நாடுகள் அனைத்திலும் லாட்டரி நடக்கிறது. சில நாடுகளில் அரசாங்கமே லாட்டரி நடத்துகிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடி இந்தியாவில் லாட்டரிப் பித்து அதிகமாம். ஜப்பானில் லாட்டரி வாங்க ஆளிருக்கிறார்களா என்ன?

தமிழ்நாட்டில் லாட்டரி இருந்த நினைவிருக்கிறது. என் வீட்டில் மாதா மாதம் ஒரு சீட்டு வாங்கி வருவார் என் அப்பா.  பரிசே விழாது. "பரிசு விழலே, சீட்டு எதுக்கு வாங்கறிங்கப்பா"னு கேட்டா உதை விழும். 

இப்போ தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டு மறுபடி அரசாங்கமே எடுத்து நடத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அமெரிக்க பவர்பால் லாட்டரி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசிலிருந்து ஒரு குழு டல்லஸ் வந்திருக்கிறது. லாட்டரி என்பது அரசுக்கு ஒரு வருமானம் என்பதால் இது சாத்தியம் என்று படுகிறது.  விடியல் அரசாங்கம் வாரி வழங்கும் சலுகைகளுக்குப் பணம் வேண்டுமே?

= = = = =

63 கருத்துகள்:

  1. ஆடிக் கிருத்திகை
    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. KGG மற்றும் அப்பாதுரை இருவருமே பழைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள். இரண்டும் நன்றாக உள்ளன. ஆனால் KGG சார் சின்ன வயதில் திருடியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. KGG அவர்களின் தக்ளி அனுபவம் நன்று.

    அப்பாதுரை அவர்களின் எழுத்தும் ரசனை. அதிகப் பணத்தைச் சமாளிக்க முடியாத்தே அவர்களின் தோல்விக்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக அரசுகள் இலவசமாக பஞ்சப்படி குறைந்த பட்ச ஊதிய ஈடு என்று இப்போது நிறைய கொடுக்கின்றன. அரசாங்கம் நிறைய இலவசம் வழங்குவதாலோ என்னவோ - உழைத்து பிழைப்பதில்லை என்ற குறிக்கோளுடன் வாழும் வழக்கம் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. அல்லது முழு நேர உழைப்பிலிருந்து முழு நேர ஓய்வுக்குப் பயணிக்கும் என் போன்றவர்கள் கண்களில் இப்போது தான் படுகிறதோ என்னவோ.

      நீக்கு
  5. இப்போதே ஓயெம்மார் உருட்டல்கள் மாமூல் மிரட்டல்கள் இன்னபிற
    அட்டூழியங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன..

    கூடிய சீக்கிர்மே லாட்டரி அரக்கன் வரட்டும் டமுள் நாட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  6. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்பதெல்லாம் கரடு முரடான கற்காலத்தில்!..

    இங்கே சில கருத்துகள் இனிமேல் வரும்..

    இது நவநாகரிக காலம்.. பொழுது விடிந்ததில் இருந்து பண்பலையில் அவனவனும் பிழைப்புக்குக் கத்திக் கொண்டு இருக்கின்றானுங்க.. ஆடித் தள்ளுபடி... அண்ட டாயர் தள்ளுபடி...ன்னு..

    பஞ்சமா பாதகத்தின் வழியில் பட்டவர்த்தனமா போகட்டும் நாடு!..

    கலி புருசனுக்குக் கொண்டாட்டம் தான்!..

    கலி புருசன் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைகள் வேண்டாம் என்ற எண்ணம் இந்தியாவின் பெரிய நகரங்களில் வாழும் இளம் தம்பதியரிடையே பரவி வருவதாக நானும் படித்தேன். இது என் எனக்குத் தோன்றவில்லை என்று நானும் எண்ணியதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்ததி வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் என் பிள்ளைகள். கேட்டால் "உங்களை விட சிறந்த பெற்றோர்களாக நாங்கள் இருக்க வேண்டுமே?" என்கிறார்கள். 'அட பரவாயில்லையே?' என்று நினைத்து முடிக்குமுன் "உங்களை விட சிறந்த பெற்றோர்களாக இருப்பது ரொம்ப சுலபம். நோ சேலஞ். அதனால் தான் பிள்ளைகள் வேண்டாம் என்கிறோம்" என்று மண்டையில் தட்டுகிறார்கள்.
      காலம்.

      நீக்கு
    2. நான் பசங்கள்ட சொல்லுவேன், கன்சர்வேடிவ்வா நிறைய செலவழிக்காமல், ரொம்ப சுபமா உங்களை வச்சிக்கலைனு நீங்க நினைச்சீங்கன்னா, அதுபற்றி குறையாச் சொல்லாம உங்க பசங்களை நீங்கள் எப்படி வளர்க்கப்படணும்னு நினைச்சீங்களோ அப்படியே வளங்க. நான் இந்த இந்தக் காரணங்களுக்காக என் அப்பா சொன்ன அட்வைஸ்கைப் பின்பற்றினேன் என்பேன்.

      பசங்க வேணாம்னு நினைக்கறவங்க, தங்கள் கடமையைத் தட்டிக் கழிப்பதாகத்தான் எனக்குத் தோன்றும். பசங்களை ஆளாக்குவதே செலவு பிடித்த, தன் சௌகரியங்களை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளும் வேலை

      நீக்கு
    3. வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம், எண் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் பெற்றோர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

      நீக்கு
    4. ..நான் பட்ட கஷ்டம், என் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் ..//

      அவர்கள் பட்ட கஷ்டத்தை அவர்களின் குழந்தைகள் படமாட்டார்கள்.

      வேறுமாதிரியாகப் படுவார்கள்....

      நீக்கு
    5. கஷ்டம் எப்போதும் தொடர்கதைகள்; முடிவே இல்லாதது!

      நீக்கு
  8. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது


    யார் அந்த வகுத்தான்...?

    பதிலளிநீக்கு
  9. நெல்லையின் முதல் கேள்வி - நெவர். காப்பி குடித்ததுண்டு ஆனால் அடித்ததில்லை!!! பிட் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ பிட் அடிப்பதை பஞ்சமா பாதகம்போலச் சொல்கிறாரே. பிட் அடிப்பது என்ன அவ்வளவு சுலபமா? எக்சாமினர் கண்ணில் அகப்படக்கூடாது. எந்தக் கேள்விக்கான பதில் என்று தெரியணும். ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வேகமாக எழுதணும், இன்னொரு கண்ணால் யாரேனும் பார்க்கிறார்களா என்று கவனிக்கவேண்டும். எழுதிட்டேன் அடுத்த பக்கம் திருப்பு என்று யாருக்கும் கேட்காத குரலில் சொல்லணும். அதிலும் குறிப்பா, நாம பார்த்து எழுதற பையன், நம்ம பேப்பரைத்தான் எழுதறானா என்ற basic knowledge நமக்கு வேண்டும். ஒருவேளை இவ்வளவு குவாலிபிகேஷன் நமக்கில்லை என்று நினைப்பவர்கள்தாம் பிட் அடிப்பதில்லையோ?

      நீக்கு
    2. வித்தியாசமான சிந்தனை!!

      நீக்கு
  10. சூப்பர் மூனா? அப்படி ஒன்று தெரிந்ததா? என்ன விசேஷம் அது பற்றி? நான் பார்க்கலையே...இங்கு பானுக்கா அனுப்பிருக்கும் புகைப்படத்தில்தான் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தற்கால இளைஞர்களில் சிலர் DINK(Double Income No Kids) என்னும் கொள்கையையும், இன்னும் சிலர் Double N, Double K(NNKK - No Kitchen, No Kids) என்னும் பாலிஸியையும் பின்பற்றுகிறார்களாமே? இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

    ஆஆஆஆஆ....இதன் அடிப்படையில் ஒன்று எழுதத் தொடங்கினேன்..கதைதான், ஹிஹிஹி...NK NK என்று No kitchen, No kids ...ஆனால் வழக்கம் போல நான் எழுதி முடிச்சு வெளியிடுறப்ப இந்த concept மாறி வேறு பேசப்படும்....

    அபப்டி ஒரு குழுவே இங்கு இருக்கு. இதோ நாங்கள் இருக்கும் வீட்டின் முதல் தளத்தில்...ஒரு ஜோடி இருக்காங்க.

    இதற்குக் காரணங்கள் பல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதிய உடனேயே எங்களுக்கு அனுப்பிவிடவேண்டும்.

      நீக்கு
    2. அதுவரை வரும் 2000 செவ்வாய்களுக்கு கதைகள் இருக்கிறதா கௌதமன் சாரிடம்?

      நீக்கு
  12. மக்கள் தொகை என்னவோ பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. சொந்தமாக பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன, இரண்டு குழந்தைகளை சுவீகாரம் எடுத்து வளர்ப்போம் என்கிற மனப்பான்மை பெருகினால் நல்லதுதான். //

    # ஆசிரியரின் கருத்து நல்ல விஷயம். எங்கள் உறவுகளில் இப்படி இருக்கறவங்க இருக்காங்க. இதே எண்ணத்துடன். செய்யவும் செய்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சொந்தமாக பிள்ளைகள் இல்லாவிட்டால் என்ன,// இது என்னாங்க கருத்து? பிள்ளைகள் இருந்தால் தங்கள் சந்தோஷத்தை இழக்கணும் என்பதற்காகத்தான பசங்க வேண்டாம்னு நினைக்கறாங்க. இயற்கையாகவே குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு இது சரிப்படும். மற்றபடி நமக்கு குழந்தைகள் வேண்டாம், தலைவலி என்று நினைப்பவர்களுக்கு இந்த அட்வைஸ் சரிப்படுமா?

      நீக்கு
  13. அடிப்படையில் மக்கள் அன்பு, நீதி , நேர்மை சார்ந்த வாழ்க்கை முறையை விரும்பி ஏற்றால் இதெல்லாம் மிக அற்பமான பிரச்சினையாகிவிடும்.//

    சூப்பர். மிகவும் பிடித்தது இந்தக் கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அப்போதெல்லாம் craft வகுப்புகள் எங்கள் காலத்திலும் இருந்தன. அதன் பின் தான் எல்லாம் போய்விட்டன. அருமையான வகுப்புகள். படிப்பிக்கிடையில் இதெல்லாம் தெரிந்துகொண்டால் கைவசம் தொழில்,...கூடவே மனதிற்கு relaxation.

    நம் வீட்டிலும் ராட்டை இருந்தது கையால் சுற்றியிருக்கிறேன். அதன் பின் மெஷின் ராட்டையும் பாட்டி வாங்கினார். அதிலும் நூல் நூற்றதுண்டு. அதுலதானே பள்ளிச் சீருடைகள் வாங்கணும்...என்பதால்

    எவ்வளவு சந்தோஷமான, கவலை இல்லாத நாட்கள்! //

    உண்மைதான். எனக்குப் பள்ளியில், கல்லூரியில் இருக்கும் வரை நட்புகளுடன் சந்தோஷமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கேரளத்தில் லாட்டரி ரொம்ப ஃபேமஸ்.

    இங்க இலவசம்னு ஒரு பக்கம் கொடுத்துட்டு விலை வாசிய ஏத்தி மறுபக்கம் இலவசப் பணம் எல்லாம் போறாப்ல இருக்கே. உழைப்பை நம்பினா மக்கள் பொழப்பாங்க..இலவசத்த நம்பினா துண்டு விழும்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஆடித் தள்ளுபடியில வாங்குன அண்ட டாயரையும் தள்ளுபடி செஞ்சுட்டு -
    ஓகே ஜாலி..
    ஒரே நாள் ல காலி!..

    இதுவே அகில பாரத கல்லிக் ( கல்விக்) கொள்கையா ஆயிடும்..

    ஜ(இ)னப் பெருக்கம் இல்லாம இருந்த எடத்தல இருந்தே கைலாசம் தான்!..

    வாளுக நவீன கலபிக் (கல்விக்) கொள்கை!..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய கேள்வி பதில்கள் வழக்கம் போல அருமை.
    காப்பி அடித்தது உண்டா என்ற கேள்விக்கு பதில்கள் நன்றாக உள்ளது.

    /ஐந்தாம் வகுப்புப் பரிட்சையின்போது - சமூக பாட பரிட்சை அன்று எல்லோரும் ராதாகிருஷ்ணன் என்ற பையனிடம் (பரிட்சை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர் இல்லாத சமயத்தில்) கேள்விகளுக்கு பதில் கேட்டு, கேட்டு எழுதினார்கள்.....அவன் " என் பெயர்தான்" என்றான். நான் என்னுடைய விடைத்தாளில் " என் பெயர்தான்" என்று எழுதினேன். /

    ஹா ஹா ஹா. ஏழாம் வகுப்பிலேயே விடைத்தாளில் spelling mistakes க்கை வேறு திருத்தி அப்போதே ஆசிரியராகி விட்டீர்கள்.

    அந்த சூப்பர் மூனை நானும் பார்க்கவில்லையே... சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் அனுப்பிய அந்த புகைப்படம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. பள்ளி அனுபவ பதில்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. கேள்விகளும் பதில்களும் அருமை.
    KGG சாரின் பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.
    எவ்வளவு சந்தோஷமான, கவலை இல்லாத நாட்கள்!//

    ஆமாம் , மகிழ்ச்சியான பள்ளி பருவம்.

    பதிலளிநீக்கு
  21. அனுபவ பகிர்வுகள் நன்று.
    லாட்டரி படுத்தும் பாடு .

    பதிலளிநீக்கு
  22. என்னது இது? ஒருத்தருக்குக் கூடவா சூப்பர் மூன் பற்றி தெரியவில்லை? சந்திரன் பூமிக்கு அருகில் வரும்பொழுது வழக்கமான அளவை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். நானும் கூட பௌர்ணமி அன்று சந்திரனை பார்க்கவில்லை. அன்று மேக மூட்டமாக இருந்ததால் தெரியாது என்று நினைத்து விட்டு விட்டேன். இந்த புகைப்படம் மறுநாள் பிரதமை அன்று எடுத்தது. அதுவும் நிலவு சற்று மேலே ஏறி விட்டது. இருந்தாலும் பிரதமை என்பதற்கு பெரியதாகத்தான் இருந்தது. ஆகஸ்ட் 31, ப்ளூ சூப்பர் மூன் தெரியுமாம். தவற விடாம பார்த்து, முடிந்தால் புகைப்படம் எடுத்து பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  23. சுரண்டல் லாட்டரி என்று ஒன்று இருந்ததே? நினைவு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  24. கேள்வி, பதில்கள் நன்றாக உள்ளன. நானும் பள்ளியில் எப்படியும் 80%த்துக்கும் மேல் எல்லாப் பாடங்களிலும் எடுத்துடுவேன் கணக்குத் தவிர்த்து. கணக்கில் 60% 70% வருவதே என்னைப் பொறுத்தவரை சாதனை தான். ஒரு தரம் கணக்கில் 48% தான் வந்தது. அப்பா ப்ராக்ரஸ் ரிபோர்ட்டில் கையெழுத்துப் போட மாட்டேன்னு சொல்லிட்டார். அப்புறமா ஆசிரியையே அப்பாவுக்கு என் கணக்கு நோட்டுப் புத்தகத்தில் அடுத்த தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்குவானு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்/. :(

    பதிலளிநீக்கு
  25. தற்கால இளைஞர்களின் பாலிசி பற்றி அதிகம் அறியவில்லை. ஆகவே இது பற்றி எப்படிக் கருத்துச் சொல்வது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!