வியாழன், 24 ஆகஸ்ட், 2023

​குற்ற உணர்வு

 இந்த பால்கார தம்பதிக்கு ஒரு குழந்தை.  தவழும் நிலை. நடைப்பயிற்சிக்கு செல்லும்போது இந்தக் குழந்தை ஒரு அபார்ட்மெண்ட் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  குழந்தையை கீழே விட்டு விட்டு திருமதி பால்காரர் மாடி ஏறி பால் போடச் சென்றிருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது.

 அந்தத் தெருவில் வளரும் ஒரு நாய் எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்தது.  அதுவும் குழந்தையை கவனித்தது.  எனக்கு லேசான பயம், தொடங்கும் முன்னரே அணைந்து, அது ஆச்சர்யமாக மாறியது.  அழும் குழந்தையை கவனித்த நாய் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி நடனம் போன்ற நடையுடன் குழந்தையிடம் சென்றது.  ஒரு குரல் கொடுத்து (குலைக்கவில்லை) குழந்தையின் முன்புறம் நின்று தன் உடம்பை முன்புறமாக வளைத்து நின்று நிமிர்ந்து விளையாட்டு காட்டியது.  குழந்தை அழுகையை நிறுத்தி, இதனைத் தொட முயன்ற போது சட்டென விலகி நின்று வாலாட்டியபடி மீண்டும் வேடிக்கையான ஒரு குரல் கொடுத்தது.  நான் செல்லில் கேமராவை உயிர்ப்பிப்பதற்குள் இத்தனையும் நடந்து விட சற்றே ஏமாற்றத்துடன், அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த குழந்தையின் அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி ஆச்சர்யப்பட்டு விட்டு நடையைத் தொடர்ந்தேன்.  அம்மா இறங்கி வந்து விட்டதைக் கண்ட அந்த நாய் சற்றே விலகி நின்று வாலாட்டியபடியே லேசான அழுகுரலில் ஏதோ பேசி விட்டு மெல்ல அகன்றது.

அடுத்த ஏரியா...  சே..  அடுத்த தெரு..

இதோ இந்த இரண்டில் கறுப்பை எனக்கு கொஞ்சம் அதிகமாகப் பிடித்தது. விளையாட்டுட்டுத்தனமாகவோ, சிறுபிள்ளைத்தனமாகவோ அந்த வெள்ளை இருந்த இடத்தில் இது ஒரு பெரிய மனிதத் தோரணையுடன் நடந்து கொள்வதை  கவனித்திருக்கிறேன்.  முதல் சில நாட்கள் தாண்டும்போது அதை கண்ணோடு பார்த்து இலேசாக கை நீட்டி அதற்குமட்டும் கேட்கும் குரலில் 'என்னடா..  என்ன பண்றே' போன்ற ஒற்றை வாக்கியங்களுடன் தாண்டிச் செல்வேன்.  அடுத்தடுத்த நாட்களில் நான் வருவதை தூரத்திலேயே பார்த்து, படுத்து, தலையை தரையில் வைத்தபடியே நான் இன்று பேசுகிறேனா என்று லேசாக புருவத்தை உயர்த்தி, காதுகளை கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்து, அடுத்த கட்டமாய் வாலை லேசாய் அசைத்து அக்நாலட்ஜ் செய்தது.  நானும் அடுத்த கட்டமாய் இரண்டு பிஸ்கட் போட,  தினமும் என் வருகையைப் பார்த்ததுமே  வாலாட்டியபடி எதிர்கொண்டு கூடவே நடந்து தெருமுனை வரை டிராப் செய்து போகும்.  இது என் கையிலிருந்தே பிஸ்கட்டை நேரடியாக வாங்கும் அளவு பழகியபோதும், அந்த இன்னொரு வெள்ளை சந்தேகப் பிராணியோ தூர நின்றே, பிஸ்கட்டை கீழே போடவைத்து, எடுத்துக் கொள்ளும்.  



ஆனால் போதிய இடைவெளி விட்டு வாலாட்டியபடி கூட வருவதில் குறைச்சல் ஒன்றும் இல்லை!

அடுத்த தெருவில்தான் நீண்ட தெருவில் இரண்டு பாகமாய்ப் பிரித்து இந்தியா பாகிஸ்தான் போல இரண்டு குழுக்களாய் செல்லங்கள்.  நான் போகும்போதெல்லாம் இரண்டும் எதிரெதிர் திசையில் சிறு குழுவாய் நின்று நின்று காரசாரமான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்.  நான் பார்த்த வரை உடன்பாடு ஏற்படவில்லை என்றே நினைக்கிறேன்.  பேச்சுவார்த்தையில் 'இவ்வளவு கண்டிஷனும், இவ்வளவு முறைப்பும் தேவையா என்பது போல இரண்டு சமாதான செல்லங்கள் குறைப்பில் பங்குகொள்ளாமல் இங்குமங்கும் முனகியபடி ஓடிக்கொண்டிருக்கும்.  தினசரி காட்சியாய் இது இருந்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை என்றே நினைக்கத்தோன்றியது!  என்ன எல்லைத் தகராறோ....  ஏற்பதில் சிரமமாய் என்ன கண்டிஷன்களோ...!

இந்த இரண்டு டீமிலும் சேராத ஒரு தனி ஜீவன்..  தனிமையிலே இனிமை!








இதில் ஒரு குழுவில் இருக்கும் செல்லங்களுடன்  முதல் சிலநாள் பேசியபின் ஓரிரு நாட்கள் பிஸ்கட் போட்டிருக்கிறேன். அந்த நன்றியில், பாசத்தில் ஒரு வெள்ளைச் செல்லம் என்னுடன் கூடவே ஓடி வந்தது ஒரு நாள்.  





எல்லை தாண்டியதும் அதற்கு ஆபத்து ஆரம்பமானது.  ஒரொரு தெருவிலும் இருக்கும் அந்தந்த ஏரியா செல்லங்கள் இதைத் துரத்த, வாலை இரு கால்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த எல்லையைத் தாண்டும் இந்த செல்லம்.  சில சமயம் எனக்கு முன்னால், சில சமயம் எனக்கு பின்னால் நிகழும் இந்தச் சம்பவம்.  அப்படியாவது கடிவாங்கிக் கொண்டு என்னுடன் வந்து விட்டதே என்று நான் நினைத்த நேரம் எங்கள் தெரு முனையுடன் விடைபெற்றுக் கொண்டது. 

என்னால்தானே இது இத்தனை கடிகள் வாங்கியது என்கிற குற்ற உணர்வு மனதுக்குள்!  பத்திரமாக அதன் இடத்துக்கு மீண்டிருக்குமா என்ற கவலை மறுநாள் அதை அதன் வழக்கமான இடத்தில் பார்க்கும் வரை இருந்தது.  முந்தைய நாள் அனுபவத்தால் மறுநாள் அது கூட வராது என்றுதான் நினைத்தேன்.  ஆனால் அது அடுத்தடுத்த நாளும் தொடர்ந்தது.  சில நாட்களில் பிற ஏரியாக்களில் அதற்கான எதிர்ப்பும் குறைந்து போனது.  நான்தான் நெகிழ்வு காரணமாக அவ்வப்போது எக்ஸ்டரா பிஸ்கட் வாங்கிப் போடுவதும் வழக்கமானது!

சில நாட்களாக முதல் தெருவில் கண்ட கருப்பு, மற்றும் வெள்ளை செல்லங்கள் கண்ணில் படவில்லை.  அது பள்ளி கொள்ளும் இடத்தில் கோணலாக சற்றே எதிரெதிராக இரண்டு கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அந்தத் தெருவில் இருந்த வடநாட்டு வேலைக்காரரை விசாரித்தேன்.  அவர் மர்மமான புன்னகையுடன் கட்டிடம் கட்டும் இடத்தைக் காட்டினார். ஏதோ சொன்னார்.  அரைகுறையாகப் புரிந்து கொண்டதை நான் நம்ப விரும்பவில்லை.

===================================================================================================

வெங்கட் இந்த வகை ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி அவர் தளத்தில் சொல்லி இருந்தார்.  தென்னாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார்.  அங்கேயே சொல்லி இருந்தேன், சென்னையில் நான் பார்த்தேன் என்று!  இது ஜூன் 2022 ல் ஒரு கல்யாண நிகழ்வில்...




=============================================================================================

பழைய அலுவலக நண்பர்..  தினமும் காலை அவர் பணிக்கு வரும்போது அவர் பின்னாலேயே ஒரு காக்கைக் கூட்டம் பறந்து வரும்.  அவர் வண்டியை நிறுத்தியதும் அவர் எதிரே அசெம்பிள் ஆகிவிடும்.  அவர் அவைகளுக்கு உண்பதற்கு தினமும் ஏதேனும் கொண்டு வருவார்.  கூடவே வந்து இழைந்துகொண்டு "எனக்கு கிடையாதா" என்று கொன்ஹும் நாலு கால் செல்லங்களுக்கும் உண்டு!  அப்போதெல்லாம் நான் தினசரி காலை ரசிக்கும் காட்சி.


பழைய படம்தான்.  இணையத்தில் நான் ரசித்த படம் ஒன்று.  தலைமுறைகளை வரிசையாக கையில் ஏந்தியபடி..


========================================================================================================

ஜீவி ஸார் கீழே உள்ள இந்தப் படத்தை சென்ற வாரமே வியாழனில் பகிரக் கோரியிருந்தார்.  எனக்கும் வாட்ஸாப்பில் வந்திருந்ததுதான்.


====================================================================================================
 
 
                                   நியூஸ் ரூம் 

                                            பானுமதி வெங்கடேஸ்வரன் 
 
நாடு முழுவதும் 10,000 இ-பஸ்கள் இயக்க அரசு நிதி.

மின்சார கொசு விரட்டி உருகி நான்கு குழந்தைகள் பரிதாப மரணம்.

காதலிப்பதாக கூறி மோசம் செய்ததாக 72 வயது ஆண்மகன் மீது, 63 வயது பெண்மணி போலீசில் புகார். இந்த கேஸை எப்படி அணுகுவது என்று போலீஸ் குழப்பம்.

அ.தி.மு.க மாநாட்டிற்குச் சென்ற அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் டோலில் பணம் கட்ட மறுத்ததால், அவர்களைத் தொடர்ந்து வந்த சரக்கு லாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டுனர்களும் டோல் கட்டணம் செலுத்த மறுத்ததால் பலகோடி ரூபாய் நஷ்டம்.- மோசமான முன்னுதாரணம்!

முதல்முறை செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் அது வெற்றிகரமாக நடந்ததால் கோவிலில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு கோவிலிலிருந்து திரும்பும் பொழுது போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

ஜி.எஸ்.டி. செலுத்துவோர்க்கு பரிசு, செப்.1 முதல் நான்கு மாநிலங்களில் அறிமுகம்.
பிரதமர் மோடிக்கு முப்பது ஆண்டுகளாக ராக்கி கட்டி வரும் பாகிஸ்தானிய பெண் டில்லி வருகை.  
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
பொக்கிஷம் :







================================================================================================================

104 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் அருமை.

    நாய்களை மிகவும் பிடித்தவர்கள் வரிசையில் நான் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   செல்லங்களைக் கண்டு விலகிச் செல்பவர் நீங்கள் என்று தெரியும்.  பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. காலைல காம்பவுண்ட்ல நடக்கும்போது மூணு நாய்கள் அவங்க இடத்துக்காக அவங்களுக்குள்ளேயே கத்தாம பாஞ்சிக்கிட்டிருந்ததுகள். ஏற்கனவே நிறைய கம்ப்ளெயின்ட் இருக்கு. இதுல ஓரிரண்டு பேர், ஏதோ உயிர்களிடத்தில் அதீத அன்புன்னு அவங்களாகவே நினைச்சுக்குட்டு சப்பாத்தியை பாலகனில இருந்து, கீழே நடைபாதையில் தூக்கிப் போட்டுடறாங்க. ஒருத்தர் பால் பாக்கெட்டைக்கூட போட்டிருந்தார். பறவைகளுக்குன்னு பொட்டுக்கடலையை லானில் தூக்குப்போடுவது என்ற பைத்தியக்காரத்தனமெல்லாம் சொல்லிச் சொல்லி அடங்கிடுச்சு. விலங்குப் பிரியர்களே தனிதான். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஆமாம்.  எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட மனிதர்களின் செயல்கள் அடுத்தவருக்கு திருப்தி அளிக்காது.

      நீக்கு
  2. இந்தவகை ஐஸ்கிரீம் எந்த ரிசப்ஷனில்்பார்த்தீர்கள்? என்னவென்று சொல்லி நெட்டில் தேடுவது? எனக்கு உபயோகமாக இருக்கும், ஏப்ரலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என் நண்பர் வீட்டுத் திருமண விழாவில் ஏற்பாடு செய்து வைத்திருந்த வகை.  வெங்கட் தளத்தில் இந்த வகை ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி படித்திருப்பீர்கள்.

      நீக்கு
    2. இந்த வகை ஐஸ்க்ரீம் பழசாச்சே. 2007லேயே திருச்சியில் நடந்த என் தோழியின் பெண் திருமண வரவேற்பில் வைத்திருந்தார்கள்.

      நீக்கு
    3. நான் 2021 ல்தான் பார்த்தேன்!

      நீக்கு
  3. காக்கைக் கூட்டம், செல்லங்கள், உணவு..... இப்படி பூனைகளுக்காக உணவு கொண்டுவந்து எல்லாப் பூனைகளுக்கும் போடும் ஒரு பெண்மணியை பஹ்ரைன் பார்க்கில் பார்த்திருக்கிறேன். சுற்றுப் பாதையில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் பூனைகளுக்கு உணவளிப்பார். இவர் பார்க்கில் நுழைந்ததுமே ஆங்காங்கிருக்கும் பூனைகள் இவரை நோக்கி ஓடிவரும். அது நினைவுக்கு வந்தது. படங்கள் இருந்தால் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நாய்களுக்கு என்று உணவு சமைத்துக் கொண்டு வரும் பலபேர் எல்லா நகரங்களிலும் இருக்கிறார்கள்.  ஏன், என் பழைய அலுவலகத்திலேயே மின்சார அடுப்பில் ரேஷன் அரிசியில் இறைச்சிக் கடையில், தூக்கிப்போடும் தேவை இலலாத இறைச்சித் துண்டுகளை வாங்கி, சாதத்தோடு சமைத்து அந்த காம்பவுண்டில் இருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் இன்னொருவரும் இருக்கரியார்!

      நீக்கு
  4. செல்லங்களின் படமும் கட்டுரையும் நன்றாக இருந்தது. ஒரு பாமரேனியன் செல்லம் 12 ஆண்டுகள் வளர்த்தோம். அந்த நினைவு கொஞ்சம் நிரடியது.

    ஐந்து தலைமுறை போட்டோ நல்ல ஐடியா.

    ஜோக்கில் உள்ளது போலவே ஒரு எலக்ட்ரிக் சேவர் பரிசாக தம்பி கல்யாணத்தில் கிடைத்தது. அப்போது பேட்டரி ஷேவர் ஒரு புதிய பொருள்.

    ஜலஜாவுடன் ஜாலி அடிச்சா ஜலதோஷம். சுலோ வோட சும்மா பேசினால் சுரம் வருமோ?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் இரண்டு செல்லங்கள் வளர்த்தோம்.  இரண்டும் உயிர் திறந்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.  கொஞ்சம் இடைவெளி விட்டு இன்னொரு செல்லம் வளர்த்தோம்.  அதை நாங்களே பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  அது குறித்து கதை போன்ற ஒரு நிகழ்வை இங்கு முன்னர் எழுதி இருக்கிறேன்.  தைத்தவிர வெளியிலிருந்தே எங்களுடன் செல்லமாக இருந்த சில ஜீவன்கள் பற்றியும் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன்.

      ஆம் அந்த தலைமுறை போட்டோ ஐடியா எவர் கற்பனையில் உதித்ததோ..  அபாரம்.

      சுரம் வர சுலோதான் வேண்டுமா?!

      நீக்கு
  5. தலைமுறைகளை வரிசையாக கையில் ஏந்தியபடி..
    ///

    ஒரு ஆம்பிளயையும் காணோமே. வம்சம்-கிறது ஆண் வழிங்கறது டிஜிட்டல் காலத்துல மாறிப்போயிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணுக்குப் பெண்
      பெண்ணுக்கு ஆண்..

      வம்சாவளியில ஆணுக்கு பங்கில்லையோ என்னவோ!...

      சந்தேகம் ரெண்டு மூனு இருக்கு.. இருந்தாலும் நமக்கெதுக்கு ஊர் வம்பு?..

      கம்பீட்டர் காலத்துல இப்படியும் நடக்கும்!..

      நீக்கு
    2. வம்சாவளி என்பது வம்சம் - ஆவளி என்ற
      இரண்டு சமக்கிருத (!) வார்த்தைகள்.. இதை நாங்க ஒத்துக்கவே மாட்டோம்.. இதுக்கு டமுள் இல்லையா!..
      பரம்பரை ன்னு வெச்சுக்கலாமா..

      பரன், பரை - தற்பரன், தற்பரை
      என்று.. சிவம் சக்தி...

      அடடா!..
      அதுவும் நம்பிள்கி புடிக்காது.. ங்கோ..

      ஆய்.. ஊய்!..

      இது ஆரிய சதி...
      உருட்டுவோம்!..

      நீக்கு
    3. ஆம்பிளைகள் வம்சத்துல வரமாட்டாங்க. பல தலைமுறைகள் என்றால் பெண்ணால்தான் சாத்தியம். அவங்களுக்கு சிறிய வயதில் திருமணமாகி 22-24 வயசுலயே குழந்தை பிறந்திடும். பசங்கன்னா 32 வயசு ஆகிடும். அவன் பையனைக்கு கல்யாணம் ஆக இன்னும் 35 வருஷமாகிடும். பொண், பொண்ணோட பொண், அவளோட பொண் என்று எடுத்தால்தான் தலைமுறை கணக்கு காண்பிக்க முடியும்.

      நீக்கு
    4. நெல்லை சொல்வதை ஆமாம் என்று சொல்லி அமைகிறேன்.

      நீக்கு
    5. மீ டூ டிட்டோ டு நெல்லை!!!

      கீதா

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. ஆஹா செல்லமோ செல்லம்!!!! ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம். நீங்க எழுதிய விதமும்

    வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் அந்தக் குழந்தை அழும் போது அந்தச் செல்லம் செய்தது போல இங்கு ஒரு செல்லம்...எங்கள் தெரு செல்லம். நீங்கள் குறிப்பிட்டிருப்பது பெண் செல்லமா? எங்கள் தெரு செல்லம் பற்றி எழுதி வைச்சிருக்கேன் சில்லு சில்லாய் ல....உதவி செய்தது.

    வெளிநாட்டு காணொளிகளில் உதவுவ்தைப் பார்த்திருக்கிறேன்...ஆனால் இங்கு நேரில் கண்டேன். பாருங்க கைல மொபைலும் இல்லை கேமராவும் இல்லை.

    கீதா



    பதிலளிநீக்கு
  9. எனக்கும் செல்லங்களுக்கு பிஸ்கெட் போட ஆசை, ஆனால் பயம். பிஸ்கெட் வாங்கி யாரிடமாவது கொடுத்து போடச் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  10. கூடவே வருதல் - அதேதான். நமக்குப் பாதுகாப்பாம். இங்கு ஒன்று ஒருகுண்டு இருக்கு பின் வீட்டில் வளர்ப்பவங்க இரண்டு வீடுகளுக்கும் ஒரு ஆள் இடைவெளிதான். க்ரில் வழி செல்லத்தோடு பேசுவதுண்டு. திடீரென்று எங்களோடு வாக்கிங்க், வீட்டவர் ஆஃபீஸ் செல்லும் போது கூடவே சென்றிருக்கிறது. என்னை அழைத்து ஒரு இடம் சொல்லி அங்கு வரச் சொல்லி செல்லம் என்னோடு வர வைத்து அவங்க வீட்டுல கொண்டு விட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவங்க 9 மணி வரை எழ மாட்டாங்க!

    அதென்னவோ அது இங்கு இருப்பதையே விரும்புகிறது. மகன் சொன்னான் நம்ம் மனசை படிக்கும் சக்தி அவற்றிற்கு உண்டாம் உள்ளுணர்வு. அதில் யார் ஓகே யார் ஓகே இல்லை என்று தெரிந்துவிடுமாம் அதான் இங்க இருக்க விரும்புதுனு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பு என்று சொல்வதைவிட பொஸசிவ்னெஸ் என்று சொல்லலாம்.

      நீக்கு
  11. தனிமையில் இனிமை காண்பது - பெண்ணான்னு பாருங்க. இல்லைனா ஆண் என்றால் அங்கிருக்கும் ஆண்களிடம் வம்பு வைச்சுக்க வேண்டாம்னு தனியா இருக்கும்.

    இந்த ஏரியா எதிர்ப்பு எல்லாம் ஒன்று உணவு. இன்னொன்று பெண் செல்லம் அந்த க்ரூப்பில் இருக்கலாம். வாய்க்கா வரப்பு சண்டை. பங்காளிச் சண்டை. ஆனா பாருங்க இந்தியா எல்லை ஆண் செல்லம் ஏரியாவை எப்படியோ க்ராஸ் பண்ணி பாகிஸ்தான் பெண் செல்லத்தோடு தலைமுறையை வளர்த்துரும். நிஜமாவே எல்லைல இப்படித்தானே இருக்கும் கிராமங்கள் ல இப்படித்தான் இருக்கும்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்றும் அந்த இரண்டு சண்டைக் குழுவிலும் சேர முயற்சிக்கவில்லை!

      நீக்கு
  12. ஹையோ ஸ்ரீராம் குற்ற உணர்வு தேவையே இல்லை. அதுக்கு இதெல்ல்லாம் ஜூஜுபி. நீங்க அந்தப் பக்கம் போகலனாலும் கடி வாங்காம எல்லாம் இருக்காது! நமக்குத்தான் மனசு கஷ்டப்படும் உண்மைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் நம்ம மனசு கேக்கறதில்லை பாருங்க..

      நீக்கு
    2. ஆஅமாம் உண்மைதான் நான் சொல்றேனே தவிர அப்புறம் அதுக்குக் கடி என்னாச்சுன்னு பார்ப்பதும் உண்டு!!!

      கீதா

      நீக்கு
  13. நாம் பேசினால் அவை பேசும் ஸ்ரீராம். கம்ப்ளெயின்ட் சொல்லும் குறை சொல்லும். நிறைய தன் உணர்வுகளை வெளிப்படுத்தும். நமக்குப் பாதுகாப்பாம்...மத்த செல்லங்களை கூட அருகே விடாமல் நம்மை கூட்டிச் செல்லும்.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அழுத குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிய 'செல்லம்' நிஜமாகவே செல்லம்தான்.
    வித்வான் ஜோக்கிற்கு சிரிக்க முடியவில்லை. மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
    ஹிப்பி கிராப், பெரிய கிருதா, 70களின் மாப்பிள்ளை பெல்பாட்டம் அல்லவா அணிந்திருக்க வேண்டும்?டைட் பேண்ட் தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய குமுத்துக்கு இப்போது லெட்டர் எழுத முடியுமானால் தவறு என்று சொல்லி விடலாம்! ஆனாலும் பெல்பாட்டம் 80 களில்தான் முழு அளவில் வந்தது.

      நீக்கு
  15. நாய்களை கண்டாலே எனக்கு அலர்ஜி ஆனால் வெறுப்பதில்லை.

    இந்த தலைமுறைகள் புகைப்படம் சூப்பர் இதேபோல் முன்பு நானொரு படம் வைத்து இருந்தேன் அதில் திரு.பாலகுமாரன் மட்டும் இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தில் சப்ஷன் ஒவ்வொரு படத்திலும் அதற்கு முந்தைய தலைமுறை.  மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துச் சேர்க்கும் படம் அது.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வியாழன் கதம்பம் அருமை. செல்லங்களை பற்றிய முதல் பகுதி நன்றாக உள்ளது. நீங்கள் செல்லங்களின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் என்பது தெரியும். எனக்கும் அவைகளை பார்க்கப் பிடிக்கும். ஆனால் அதன் அருகில் செல்ல கொஞ்சம் பயமாக இருக்கும்.

    அம்மா வீட்டில் இருந்த போது எதிர் வீட்டில் உள்ள உறவுகாரர்கள் இந்த மாதிரி ஒரு செல்லம் வளர்த்தார்கள். அது எங்களையெல்லாம் பாதுகாக்கும் விதமாக நாங்கள் எங்கு சென்றாலும் அதுவும் உடன் வரும். திரும்பி அவர்கள் வீட்டிற்கு பத்திரமாக சென்று விடுமா என எனக்கு சென்றவிடத்தில் தங்கி இருக்கும் போதெல்லாம் கவலையாக இருக்கும். ஆனால், அது எப்படியோ சென்ற வழியோடு திரும்பி வந்து அவர்கள் வீட்டுக்குப் போய் விடும். சமயத்தில் அவர்களோடு நாங்களும் ஒரு கோவிலுக்கோ , சினிமா தியேட்டருக்கோ , சென்றிருந்தால், உள்ளிருந்து நாங்கள் வெளியே வரும் வரை வாசலிலேயே காத்திருக்கும். மிகவும் நன்றியுள்ள ஜென்மம்.

    அந்த காலங்களுக்கு பிறகெல்லாம் செல்லங்களை பார்த்தால் பயந்தான். கடித்து விட்டால், போடப்படும் ஊசிகளை நினைத்து தெனாலி மாதிரியான நிறைய பயங்களுடன் அந்த பயங்களும் உடன் வந்து விட்டன. தாங்கள் தெருக்களில் வசிக்கும் அவற்றுடன் தைரியமாக அன்பு பாராட்டுவது சாலச் சிறந்த ஜீவகாருண்யசெயல். பாராட்டுக்கள்.

    ஐஸ்க்ரீம் தயாரிக்கும் படங்கள் நன்றாக உள்ளது. சிறு வயதிலிருந்தே சாப்பிடும் ஆசையிருந்தும் அவ்வளவாக சாப்பிட்டதில்லை. பிறகு எங்கள் குழந்தைகளின் நலம் கருதி சாப்பிட்டதில்லை. தவிரவும் அது வீட்டில் கேட்டதும் கிடைக்காத ரகம் வேறு. இப்போது பற்களின் பலம், இனிப்பின் கருத்து கணிப்பு முதலியவை அதைப் பார்த்தவுடன் எழும் ஆசையை கட்டுப்படுத்துகிறது. ஆனால், எப்போதாவது "அதிசயமாக" ஆசை பலப்பரீட்சையில் வென்று விடும்.:))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதி பயத்துடனேயேதான் செல்லங்களை அணுகுவீர்கள் போல...  முழு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!!

      அந்த ஐஸ்க்ரீம் எனக்கு சாப்பிடத்தோன்றவில்லை.  என்னதான் கையுறை போட்டிருந்தாலும் அவர் கையால் தடவிதடவி சுற்றி விட்டது ஒரு மாதிரி இருந்தது!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    முதல் பகுதியில் தாங்கள் எடுத்த செல்வங்களின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இங்கும் பால்கனி வழியாக பின்பக்க தெருவை பார்க்கும் போது இவைகளின் பாசங்களையும், சண்டைகளையும் காண்கிறேன். அடுத்த சந்தில் இருக்கும் பல செல்லங்களுடன் அதற்கு ஏனோ மனஸ்தாபங்கள் வந்து விடும்.

    காக்கைகள் கூட்டம் தங்கள் அலுவலக நண்பருடன் தினமும் வருவது வியப்புத்தான். அந்த அளவிற்கு அவர் அவைகளுடன் அன்பு பாராட்டியிருக்கிறார். அந்த படமும் நன்றாக உள்ளது. எவ்வளவு காகங்கள். இங்கு காகமே கண்களில் படமாட்டேன் என்கிறது. எல்லாம் கழுகு, புறா மயம்.

    இங்கும் ஒருவர் இந்த மாதிரி தினமும் வண்டியில் வந்து புறாக்களுக்கு உணவு தருவதை பார்த்திருக்கிறேன். அவரைச் சுற்றி ஒரே புறா கூட்டம். பறவைகள் இடத்தில் அன்போடு இருக்கும் இவர்களை வாழ்த்துவோம். இந்தச் செய்தியை படித்ததும் எனக்கு சகோதரி கோமதி அரசு அவர்கள் நினைவுக்கு வந்தார். அவரும் பறவைகளின் மீது மிகவும் அபிமானம் கொண்டவர்.

    குடும்ப போட்டோ வித்தியாசமாக தயாரித்த விதம் அருமை. முன்பு அனைவரும் ஒன்றாக கூடி நின்று இந்த மாதிரி தலைமுறையாக சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பத்திரிக்கை ஒன்றில் பார்த்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. நாய்கள் உள்ளிட்ட சிறு ஜீவன்கள் இறைவனால் நம்மை நம்பி அனுப்பப்பட்ட ஜீவன்கள். நாம்தான் அவற்றை பாதுகாக்க வேண்டும்.

      நீக்கு
    2. ஶ்ரீராம்... உங்கள் பதில் சட் என்று மனதை நெகிழ்த்திவிட்டது.

      நீக்கு
  18. ஸ்ரீராம் இந்த ஐஸ்க்ரீம் 15 வருஷம் முன்னரே சென்னையில் கல்யாணத்தில் வைச்சிருங்காங்க. இப்ப கடைகளில் வந்திருக்கும்னு நினைக்கிறேன் அதுவும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய உருளை....வெனிலா பேஸ் அதுல சாக்கலேட் நா அந்த உருளையின் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி ஸ்கூப் பண்ணி கொடுப்பாங்க..மேலே நட்ஸ் தனியா போட்டு வேணும்னா இல்லைனா ப்ளெயின். அப்புறம் ஃப்ரூட்ஸ் போட்டு என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.   எனக்கென்னவோ அதை சாப்பிடத்தோன்றவில்லை.  வேடிக்கை பார்த்ததோடு சரி!  வீடியோ எடுத்திருந்தேன்.  காணோம்!

      நீக்கு
    2. ஆமாம் வெங்கட்ஜி தளத்திலும் சொல்லியிருந்தீங்க.

      கீதாக்கா கீழே சொன்னது போல் வாடிலால் போல வராது. வாடிலால் சுவையே தனிதான். ஆனால் அதெல்லாம் ஒரு காலம்....இப்பல்லாம் ரொம்ப வருஷமா (25 வருஷமா) ஐக்ஸ்க்ரீமே சாப்பிட முடியலையே!!!! ஆசைப்பட்டு சாப்பிட்டால் வேறு உணவுகளுக்குக் கட்! கூடுதல் நடை, அலல்து வொர்க்கவுட்!!

      கீதா

      நீக்கு
  19. உங்கள் பழைய அலுவலக நண்பர் வாழ்க! காக்கை குருவி எங்கள் ஜாதி!

    இப்படி இங்கும் செய்கிறார்கள். நம் வீட்டுக்கு நாங்கள் இப்ப வளர்க்காத வெளிச் செல்லங்கள் எங்களோடு உறவாடுகின்றன பூனைகள், பைரவ/விகள், மாடுச்செல்லம் என்று. போகும் பகுதிகளில் இப்படி.

    டாட்டா இப்போது இந்தச் சேவையிலும் இறங்கியிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவரை அமைதியாக இருக்கும் அந்த ஏரியா அவர் வரும்போது அப்படியே மாறும்.  எங்கிருந்து கிளம்பின என்று தெரியாமல் ஒரு காக்கைக் கூட்டம் அவரைத் தொடரும்.

      நீக்கு
    2. அதுங்களுக்கு நல்லா தெரியும் ஸ்ரீராம். தூரத்தில் வரும் போதே மற்றும் அந்த நேரம்...மணியடிச்சா சோறு என்பதான விஷயம்

      கீதா

      நீக்கு
  20. தலைமுறை ஃபோட்டோவும் அந்த டெக்னிக்கும் மிகவும் ரசித்தேன்...நல்ல ஐடியா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் எடுப்பது, எடுத்து சேர்ப்பது ரொம்பச் சிரமம்.  கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

      நீக்கு
  21. ஜோக்கில் முதல் ஜோக் ஜோக் போல இல்லையே. சோகம்

    மற்ற ஜோக்ஸ் ம்ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மிருதங்கத்தை வித்தவர் மனதை வேதனைப் படுத்தி விட்டார். மற்ற நகைச்சுவைத்துணுக்குகளும் சுமார் ரகம் தான். அதிலே ஜலஜா ஜோக் ஏனோ எரிச்சலைத் தருது. பழைய சுதந்திர நாள் தினசரிகளைப் போட்டதும் நன்றாக இருக்கு. இன்றைய கூகிள் டூடுல் சந்திரயான் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கியதைக் கொண்டாடிக் கொண்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைய நிகழ்வு சரித்திர நிகழ்வு. கொண்டாடுவோம். ஜோக்ஸ் எது கிடைக்கிறதோ அதுதான்!

      நீக்கு
  23. எனக்குக் கல்யாணம் ஆகும் முன்னர் இந்தத் தெருநாய்கள்/ செல்லங்கள் ஆகியவற்றோடு பழக்கமே இல்லை. அப்போதெல்லாம் மதுரைத் தெருக்களில் அதிகம் நாய்களைப் பார்த்ததும் இல்லை. கல்யாணம் ஆகி வந்தப்புறமாச் சில நாட்கல் கிராமத்தில் இருக்கையில் வேளைக்கு ஒரு நாய் வந்து உணவு சாப்பிட்டுச் செல்லும். அங்கேயே உட்கார்ந்திருக்கும். கொல்லையில் மாட்டுக்கொட்டிலுக்குப் போகவே பயம்மா இருக்கும். எருமை மாடுகள் விடும் பெருமூச்சு அவ்வளவு சப்தமா இருக்கும். இந்த அழகில் நாய்களை எப்படிக் கொண்டாடுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எருமை மாடுகள் விடும் பெருமூச்சு அவ்வளவு சப்தமா இருக்கும்.//

      ஆமாம்.  நானும் கேட்டிருக்கிறேன்.  என்ன நினைத்து பெருமூச்சு விடும் என்று மனதில் ஆச்சர்யம் தோன்றும்!

      நீக்கு
  24. நாங்க தனிக்குடித்தனம் வந்ததுமே பக்கத்து வீட்டு நாயைப் பழக்கிக் கொண்டு விட்டார் நம்மவர். அதுக்குச் சாப்பாடெல்லாம் வைக்கச் சொல்லுவார். எனக்கோ உள்ளூற பயம்மா இருக்கும். சின்னமனூரில் சித்தி வீட்டில் வளர்ந்து வந்த அல்சேஷனுக்குச் சாப்பாடு வைத்த அனுபவங்கள் உண்டெனினும் அது திடீரென "லொள்" என்று மேலே பாயுமா? இதுவும் பாய்ந்துடும்னு பயப்படுவேன்.

    பதிலளிநீக்கு
  25. பெண் பிறந்து நான் திரும்ப அம்பத்தூர் வந்ததும் குழந்தைக்குக் கூடவே விளையாட வேண்டி ஒரு நாய்க்குட்டியை எங்கிருந்தோ வாங்கி/கொண்டு வந்தார். எனக்கோ திக், திக், திக். எல்லோரும் பொம்மைகள் வாங்கி வருவாங்க! இவர் நிஜமான ஒரு நாய்க்குட்டியையே கொண்டு வந்துட்டார். அதுவும் ரொம்பச் சின்னதா? பெண்ணுக்குச் செய்யும் எல்லா சிசுருஷைகளையும் அதுக்கும் செய்ய நேர்ந்தது. ஆனாலும் எனக்கென்னமோ பிடிக்கலை. ஆனால் முழு நேரமும் என் கவனிப்பில் இருந்ததாலோ என்னமோ நான் எங்கே போனாலும் கூடவே வந்து காவலுக்கு உட்காரும். குளிக்கப் போனால் குளியலறைக்கு ஏறும் படிகளில் உட்கார்ந்து கொண்டு யாரையும் வர விடாது. எங்க பெண்ணிடம் போய் உட்காரு என்றால் உட்கார்ந்து கொண்டு என்னையும் அவரையும் தவிர்த்து யாரும் அவளைத் தூக்க முடியாது. ஒரு தரம் குழந்தையைச் சுத்தம் செய்யணும்னு என் அண்ணா தூக்கப் போய் இது பாய்ந்த பாய்ச்சல்! நல்லவேளையாக பயத்தில் அண்ணா குழந்தையைக் கீழே போடலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் மோதியை வாசல் கதவருகே உள்ள ஜன்னலில் கட்டி இருந்தும்.  பாஸின் சித்தப்பா (எனக்கும் அவருக்கும் அவ்வளவா ஆகாது என்பது வேறு விஷயம்!) வெளியிலிருந்தே சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.  அவர் ஓங்கி குரல் கொடுத்த அளவிலேயே அதிருப்தி அடைந்திருந்த மோதி சரியாக அவர் உள்ளே நுழையும்போது அவர்மேல் பாய, நல்லவேளையாக கட்டியிருந்த கயிற்றின் எல்லாம் ஆபத்து எதுவும் நேராமல் காத்தது.

      நீக்கு
  26. ஒரு நாள் யாரோ விருந்தினர் வந்துட்டாங்கனு நான் பால் வாங்க வேலியைத் தாண்டிப் போகும்போது இது எங்கிருந்தோ என்னைப் பார்த்துட்டுக் கூடவே ஓடி வந்திருக்கு. அது வந்தது தெரியாமல் நான் பாட்டுக்குப் போக ஓடி வந்த இது ஒரு வண்டியில் அடிபட்டுச் செத்தே போய் விட்டது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...  வேதனை.  நான் இந்த வகையில் இழந்தது எங்கள் அருமையான அழகான பூனாச்சுவை!  கீழ் வீட்டுக்காரியின் சதிச்செயல்.

      நீக்கு
  27. அதுக்கப்புறமா எங்கே மாத்திப் போனாலும் சில/பல நாய்கள். எண்பதுகளில் வீடு கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு நாய்க்குட்டி ப்ரவுனி எனக் குழந்தைகள் அழைப்பார்கள். நன்றாக விளையாடும். கிரஹப்ப்ரவேசம் ஆகி ஒரு வாரத்தில் எப்படியோ செத்து விட்டது. அதன் பின்னர் 2 நாய்கள் கொண்டு வந்ததில் ஒன்று மாமனாரைக் கடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தி விட்டு வயிற்றில் 21 ஊசிகள் போட்டுக் கொள்ளும்படி ஆச்சு. ஆகவே சில வருடங்கள் ஏதும் இல்லை. பின்னர் தொண்ணூறுகளில் மகளின் பிடிவாதத்தால் வந்தது தான் மோதி. மறக்கவே முடியாத செல்லம். அதுவும் 98 ஆம் ஆண்டில் டிசம்பர் 16 ஆம் தேதி திடீரென இறந்து விட்டது. :( அது ஏற்படுத்திய சோகத்துக்குப் பின்னர் இனி செல்லமே வேண்டாம்னு முடிவு செய்துட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ப்ரவுனிக்கு அப்புறம் மோதி வளர்த்தீர்கள்.  நாங்கள் மோதிக்கு பிறகு ப்ரவுனி வளர்த்தோம்!

      நீக்கு
    2. நம் வீட்டிலும் ப்ரௌனி இருந்தாளே....9 வயதில் இறந்துவிட்டாள். ரொம்பச் சமத்து. கண்ணழகி பன்னிரண்டரை வயது வரை இருந்தாள்.

      இப்ப பின் வீட்டு ப்ரௌனி ரொம்பப் பாசக்காரனா இருக்கான். என்ன செக்யூரிட்டி எங்களுக்கு!!!!

      கீதா

      நீக்கு
    3. கீதா உங்க செல்லங்கள் சுப்புக்குட்டி உட்பட தெரியுமே!!! சொல்லியிருக்கீங்களே!

      கீதா

      நீக்கு
  28. குஜராத் வாடிலால் ஐஸ்க்ரீம் இப்படி வைச்சிருப்பாங்க. சுவை அருமைனா அருமை. இப்போல்லாம் அவ்வளவு சுவையான ஐஸ்க்ரீமைத் தேடித்தான் பிடிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நான் படமெடுத்ததோடு சரி..  சுவைக்கவில்லை.

      நீக்கு
  29. Geetha Sambasivam "​குற்ற உணர்வு ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    பெண் பிறந்து நான் திரும்ப அம்பத்தூர் வந்ததும் குழந்தைக்குக் கூடவே விளையாட வேண்டி ஒரு நாய்க்குட்டியை எங்கிருந்தோ வாங்கி/கொண்டு வந்தார். எனக்கோ திக், திக், திக். எல்லோரும் பொம்மைகள் வாங்கி வருவாங்க! இவர் நிஜமான ஒரு நாய்க்குட்டியையே கொண்டு வந்துட்டார். அதுவும் ரொம்பச் சின்னதா? பெண்ணுக்குச் செய்யும் எல்லா சிசுருஷைகளையும் அதுக்கும் செய்ய நேர்ந்தது. ஆனாலும் எனக்கென்னமோ பிடிக்கலை. ஆனால் முழு நேரமும் என் கவனிப்பில் இருந்ததாலோ என்னமோ நான் எங்கே போனாலும் கூடவே வந்து காவலுக்கு உட்காரும். குளிக்கப் போனால் குளியலறைக்கு ஏறும் படிகளில் உட்கார்ந்து கொண்டு யாரையும் வர விடாது. எங்க பெண்ணிடம் போய் உட்காரு என்றால் உட்கார்ந்து கொண்டு என்னையும் அவரையும் தவிர்த்து யாரும் அவளைத் தூக்க முடியாது. ஒரு தரம் குழந்தையைச் சுத்தம் செய்யணும்னு என் அண்ணா தூக்கப் போய் இது பாய்ந்த பாய்ச்சல்! நல்லவேளையாக பயத்தில் அண்ணா குழந்தையைக் கீழே போடலை.

    பதிலளிநீக்கு
  30. Geetha Sambasivam "​குற்ற உணர்வு ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    ஒரு நாள் யாரோ விருந்தினர் வந்துட்டாங்கனு நான் பால் வாங்க வேலியைத் தாண்டிப் போகும்போது இது எங்கிருந்தோ என்னைப் பார்த்துட்டுக் கூடவே ஓடி வந்திருக்கு. அது வந்தது தெரியாமல் நான் பாட்டுக்குப் போக ஓடி வந்த இது ஒரு வண்டியில் அடிபட்டுச் செத்தே போய் விட்டது. :(

    பதிலளிநீக்கு
  31. Geetha Sambasivam "​குற்ற உணர்வு ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    அதுக்கப்புறமா எங்கே மாத்திப் போனாலும் சில/பல நாய்கள். எண்பதுகளில் வீடு கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு நாய்க்குட்டி ப்ரவுனி எனக் குழந்தைகள் அழைப்பார்கள். நன்றாக விளையாடும். கிரஹப்ப்ரவேசம் ஆகி ஒரு வாரத்தில் எப்படியோ செத்து விட்டது. அதன் பின்னர் 2 நாய்கள் கொண்டு வந்ததில் ஒன்று மாமனாரைக் கடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தி விட்டு வயிற்றில் 21 ஊசிகள் போட்டுக் கொள்ளும்படி ஆச்சு. ஆகவே சில வருடங்கள் ஏதும் இல்லை. பின்னர் தொண்ணூறுகளில் மகளின் பிடிவாதத்தால் வந்தது தான் மோதி. மறக்கவே முடியாத செல்லம். அதுவும் 98 ஆம் ஆண்டில் டிசம்பர் 16 ஆம் தேதி திடீரென இறந்து விட்டது. :( அது ஏற்படுத்திய சோகத்துக்குப் பின்னர் இனி செல்லமே வேண்டாம்னு முடிவு செய்துட்டோம்.

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. செல்லங்கள் பற்றிய பகிர்வு அருமை. அழும் குழந்தைக்கு விளையாட்டு காட்டிய செல்லம் அருமை.
    //அப்படியாவது கடிவாங்கிக் கொண்டு என்னுடன் வந்து விட்டதே என்று நான் நினைத்த நேரம் எங்கள் தெரு முனையுடன் விடைபெற்றுக் கொண்டது. //

    கடிவாங்கியும் தொடர்ந்து வந்தது நெகிழ்வு. நன்றி உள்ள ஜீவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு அதெல்லாம் பழகி விட்டது போல...  வாலை ஒடுக்கி தனது சரண்டரை தெரிவித்தபடியே வந்தது.

      நீக்கு
  34. காகங்களுக்கும் , செல்லங்களுக்கும் உணவு கொடுக்கும் உங்கள் நண்பர் வாழ்க வளமுடன். படம் அருமை.

    பதிலளிநீக்கு
  35. என் அம்மா, நான், மகள், பேத்தியுடன் நான்கு தலைமுறை படம் எடுத்து கொண்டு இருக்கிறேன்.
    என் கணவரும் அப்பா, மகன் பேரனுடன் நான்கு தலைமுறை படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
    இந்த படம் மேலும் சிறப்பு 5 தலைமுறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.  எங்கள் வீட்டிலும் என் பாட்டி, அம்மா, என் தங்கை, அவளது மகள் எல்லோரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இது வேறு ரகம்.  அவர் கையில் ஒன்றுக்குள் ஒன்றாய் அடுத்தடுத்த தலைமுறை!

      நீக்கு
  36. தங்களை நேசிப்பவர்களை உள்ளுணர்வாலேயே நாய்கள் அறிந்து கொள்ளும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிய செல்லம், தங்கள் பேச்சுக்காகக் காத்திருந்த கறுப்புச் செல்லம், கடி வாங்கியும் கூட ஓடி வந்த செல்லம் மனதில் நிற்கிறார்கள்.

    சிறப்பான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  37. இன்றைய பதிவு சிறப்பு..

    மனிதனின் ஆதி தோழனைப் பற்றிய செய்திகள் அருமை..

    அதனுடன் அனுபவக் குறிப்புகளும் அருமை..

    வளர்ப்பதில்லை எனினும்
    ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன..

    எதையும் பதிவில் எழுதுவதற்கு இன்றைய சூழல் அமையவில்லை..

    பதிலளிநீக்கு
  38. யார் என்ன சொன்னாலும்
    ஹிந்து தர்மம் ஆண் வழி
    வம்சாவளியைத் தான் வகுத்திருப்பதாகக் கருதுகிறேன்.

    கல்யாணம் ஆகும் அந்த மணமேடையிலேயே இத்தனை வருடம் இருந்த தந்தை சார்ந்திருந்த கோத்திரத்திலிருந்து கணவன் கோத்திரத்திற்கு பெண் மாறிவிடுகிறாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கோத்திரம் நிரந்தரமானது.

    திருமணத்திற்குப் பிறகு மனதளவில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றம் பிரமிக்க வைப்பது. நேற்று வரும் வரலெஷ்மி விரதம் பற்றி ஏதோ பேச்சு வந்த பொழுது, "இல்லேப்பா.. எங்கள் வழக்கம் அதான்" என்று என் பெண் ஒரே போடாகப் போட்டாள் பாருங்கள், மனத்தில் ஆழ வேறூன்றி விட்ட 'அந்த' குடும்பச் சாய்வு பார்த்து பிரமித்துப் போனேன்.

    பெற்றோர்களே! பெண் குழந்தைகளை நம் வீட்டில் இருக்கும் வரை கண்ணின் மணி போல
    காத்து பாசம் பொழிந்து வளர்த்து அவளுக்கு செய்ய வேண்டியதைச் செய்து திருமணம் செய்து கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெற்றோர்களே...//... இவ்வளவு வருஷம் கழித்துச் சொல்லறீங்களே.... (என் பெண் இதைப் படித்தால், சொல்லிட்டாலும்... எனச சொல்லிடுவாள்)

      நீக்கு
    2. நம் வீட்டில் பிறந்து வளர்ந்த பெண் வேறு வீட்டு மகாராணியாகும்போது அதை இயல்பாய் ஏற்றுக்கொண்டு விடுவது வழக்கமாகி விட்டது.  ஏன், சகோதரன் ஒரு வீட்டில், இன்னொரு சகோதரன் இன்னொரு வீட்டில் என்று திருமணத்துக்குப்பின் பிரிவதையும் குறித்து மட்டும் வருத்தப்படுகிறோமா என்ன!  மனைவி, குழந்தைகள், கணவர் என்று வந்தபின் வட்டம் குறுகி விடுகிறது.  புதிய குடும்பத்தில் மீண்டும் அதே வட்டம் சில காலம் பிரித்து நீண்டு பிரிகிறது...  தலைமுறைகளை சொல்லும்போது ஆணென்ன, பெண்ணென்ன...   ஒருவர் வேர், இன்னொருவர் நீர்!

      கொடியோடு தோன்றிய மலர்கள்
      குழலோடு சேருவதென்ன
      ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
      மறு வீடு தேடுவதென்ன  - கண்ணதாசன்.

      நீக்கு
  39. பத்திரிகைகளில் கடைசி நிமிஷ செய்திக்காக அச்சுக்குப் போகும் முன் வரை கொஞ்சம் இடம் பாக்கி வைத்திருப்பார்கள். எபி வியாழனுக்கும் அந்த முறையைக் கைக்கொள்ளுங்கள்.

    சுதந்திர தினக் கொண்டாடமும் பழசாச்சு.
    அட! சந்திரயான் பரபரப்பு? அடுத்த வியாழனுக்கு இதைப் பழசாக்க இன்னொன்று நிச்சயம் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திராயனைவிட... இப்போல்லாம் அதை அனுப்பியவர் என்ன ஜாதி, எந்த ஏரியா, எங்கே படித்தார்னு..இஷ்டத்துக்கு எழுதி அதைத்தான் பாராட்டறாங்க. நம்ம ஊரில் டி.என்.பி.எஸ்.ஸி தலைவராவதற்கே ஜாதி தேவையாக இருக்கிறது.

      நீக்கு
    2. நேற்று நியூஸ் ரூமில் சந்திரயான் செய்தி இடம்பெறாதது வருத்தத்துக்குரியதுதான்.  ஆனால் எல்லோரும் அறிந்த செய்தியை விடுத்து அதிகம் கண்ணில் பட்டிராத செய்திகளைத்தானே அங்கு பகிர்கிறோம்!

      நீக்கு
    3. சந்திரயானை நியூஸ் ரூமில் செய்தியோடு செய்தியாகப் போட்டு அடைப்பதா? தனிப்பட்ட அந்தஸ்து கொடுக்க வேண்டாமோ?

      நீக்கு
    4. கீழே தம்பி துரை சொல்வதைக் கவனியுங்கள். மேலே நெல்லை சொல்வதும் சுவாரஸ்யமாக இருக்கும் தான். ஆஹா.. ஒரு வழியாக அடுத்த வியாழன் கலகல தான் போலிருக்கு.

      நீக்கு
    5. அடுத்த வாரம் வேறு 'லகலக' காத்திருக்கும்! இது மறந்து விடும்.

      நீக்கு
  40. சந்திரயான் அரதப் பழசாகி வெகு நேரம் ஆயிற்று..

    வழக்கம் போல ஆரம்பிச்சாச்சு..

    பதிலளிநீக்கு
  41. 'வழக்கம் போல ஆரம்பிச்சாச்சு....'

    விடியல் மகாத்மியம் தானே! ..

    ஹஹ்ஹ்ஹா.. சிரிப்பை அடக்க முடியாமல் பீரிட்டுச் சிரித்தேன்!
    இப்படி தன்னை மீறி சிரிப்பது ஆரோக்கியமானதாம்.

    நன்றி, தம்பி.

    பதிலளிநீக்கு
  42. செல்வங்களின் அரவணைப்பு படங்கள் அழகு.
    எனது அண்ணாவின் மகள் அனாதரவாக வரும் நாய் பூனை இரண்டையும் வீட்டிற்கே அழைத்து உணவூட்டுவாள்

    ஜோக்ஸ் ரசனை..

    பதிலளிநீக்கு
  43. அவர் மர்மமான புன்னகையுடன் கட்டிடம் கட்டும் இடத்தைக் காட்டினார். ஏதோ சொன்னார். அரைகுறையாகப் புரிந்து கொண்டதை நான் நம்ப விரும்பவில்லை.//

    இதுக்கான க்ருத்தை நேற்று சொல்ல விட்டுப் போச்சு ஸ்ரீராம். மறந்தே போய்ட்டேன் சொல்ல நினைத்து. அப்புறம் வந்தப்ப கூட மறந்து போயிருக்கிறேன். இதை நான் எழுதறப்ப சொல்றேன். ஆனால் அது உண்மையாக இருந்தால் வருத்தம். வெளில போனீங்கனா அதுங்க இருக்கான்னு நோட் பண்ணுங்க ஸ்ரீராம். பாவம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா.  நான் அதை அபப்டி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!