சனி, 19 ஆகஸ்ட், 2023

​விடாமுயற்சி மற்றும் நான் படிச்ச கதை

 

 


=========================================================================================================

நான் படிச்ச கதை (JKC)



முன்னுரை


பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் ஆகவே பொறுமை வேண்டும். கதை உரையாடலாக செல்வதால் கதைச் சுருக்கமாக வெளியிட விரும்பவில்லை.

கீதா ரங்கன் தெரியும். கீதா சாம்பசிவம் தெரியும். கீதா பென்னெட்டைத் தெரியுமா? ஓ தெரியுமே என்கிறீர்களா! மதராச பட்டணத்தில் 1950இல் பிறந்து மதுரைநகரில் வளர்ந்து அமெரிக்க மருமகளாய் 40 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து 2018ஆம் வருடம் மறைந்தவர். கதை ஆசிரியர் மட்டுமல்லாது சிறந்த வீணை விற்பன்னரும் ஆவார். ‘வீணைக் கதைஞர்’ என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவர. அமெரிக்கர் ஃப்ராங்க் பென்னட் இவரது கணவர். மகன் ஆனந்த் ராமசந்திரன்.

இவரது கதைகள் குமுதம், விகடன் போன்ற வார பத்திரிக்கைகளில் வெளி வந்தன. சிறுகதை தொகுப்புகளையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க, மற்றும் இந்திய கலாச்சாரம், நாகரிகம், வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியற்றை நன்கு அறிந்தவர். அவற்றின் அடிப்படையிலேயே இவரது கதைகள் பெரும்பாலும் அமைந்திருக்கும். கதைகளில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையும் ஊடாகச் செல்லும். கதையின் போக்கு சிறிதளவும் பிறழாது வழுகிச் செல்லும். இது போன்ற பல சிறப்புகளை எடுத்துக்காட்டாக மொழியலாம்.

பல கதைகள் இருந்தாலும் நான் படிச்ச கதையாக இன்று ஆராய வித்தியாசம் என்ற இக்கதையை தேர்ந்தெடுத்தேன். காரணம் இரண்டு. ஒன்று; நானும் இது போன்று அனுபவிக்க எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலை. இரண்டு: கடைசியில் விதிப்படி நடப்பது ஒன்றே என்ற முடிவு.

இக்கதை மனைவியை இழந்த ஒரு அமெரிக்கருக்கும் மனைவியை இழந்த ஒரு தமிழ் இந்தியருக்கும் இடையில் நிகழும் உரையாடலாக உள்ளது. கடைசியில் அவர்கள் அறிந்து கொண்டது வித்தியாசங்கள் பல என்றாலும் தீர்வு ஒன்றே என்பது.

//ஜனார்த்தனன் சொன்னார். அமெரிக்கா, இந்தியா என்று வித்தியாசம் இல்லை. அப்பாடா! கடைசியாக ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடித்து விட்டோம் இல்லையா?”//

அந்த ஒற்றுமையை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



கதையாசிரியர்: கீதா பென்னெட்


ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது. ஜனார்த்தனன் கழுத்தை சுற்றியிருந்த ம·ப்ளரை இன்னும் இழுத்து விட்டுக் கொண்டார். கம்பளி குல்லாயைத் தடவிக் கொண்டார்.

"கல்யாணம் ஆன உடனேயே தேன்நிலவுக்கு ராஜியோடு இங்கே வந்ததுதான். அப்போதும் இதே மாசம் தான். இதே குளிர்தான். ஐம்பது வருஷங்களுக்கு மேல் ஆகிறது என்றால் நம்பவே முடியவில்லையே…….”

ஜனார்த்தனன் பழைய நினைவுகளை அசை போட்டார். இருபது வயது இளம் மனைவி குளிரால் வெடவெடவென்று நடுங்கும்போது அவர் அவளை இழுத்து அணைத்துக் கொண்டார். அவள் வெட்கத்தில் சிணுங்கினாள். ”வேணும்னுட்டு தானே இந்த மாதிரி குளிர் இடத்துக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க…. சே… ரொம்ப பொல்லாதவர்ப்பா நீங்க….” என்றாளே தவிர, அவளும் இன்னும் அவரை நெருக்கிக் கொண்டாள்.

"ம்….. ராஜி! என்னை இப்படி தனியா விட்டு விட்டுப் போக உனக்கு எப்படியடி மனசு வந்தது? ஐ மிஸ் யூ ஸோமச்… இன்னும் எனக்கு இங்கே எத்தனை நாள் வாழ்க்கையோ? அந்த பக்கத்தில் எனக்காக காத்திருக்கிறாயா?”

ஜனார்த்தனன் கண்ணை மறைத்த நீர்திவலைகளைத் துடைத்துவிட்டுக் கொண்டார். கடைசி முறையாக ராஜியின் நினைவாக போட்டிங் போகலாம் என்று வரிசையில் நின்றிருந்தவர் தோளை யாரோ தொட்டார்கள். அவர் திரும்பிப் பார்த்தார்.

அப்படி தோள் தொட்டவர் ஒரு வெள்ளைக்காரர். அந்த குளிரிலும் பர்ம்யூடா ஷாட்ஸும், காட்டன் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தார். அவருக்கு ஜனார்த்தனன் மாதிரியே வயது எழுபதுகளில் தான் இருக்கும்.

தலை தொப்பியை சரி செய்துக் கொண்டு "ஹாய் ….. ஐயாம் ஏரன். சியாட்டில், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன். நீங்க மட்டும் தனியா வந்திருப்பது போல் தெரிகிறதே?” என்று கையை நீட்டினார்.

ஜனார்த்தனன் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி "ஆமாம். நான் ஜனார்த்தனன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன்” என்றார்.

"நாம ரெண்டு பேருமா போட்டிங் ஷேர் பண்ணிக்கலாமா? நானும் தனியாள் தான்….”

ஜனார்த்தனன் யோசித்தார். ஏன் கூடாது – ”ஓகே…. ஆனா நான் தான் டிக்கெட் எடுப்பேன்….”

இருவருமாக சிறிது நேரத்தில் தாங்களே ஓட்டிக் கொண்டு செல்லும் படகில் ஏறிக் கொண்டனர். ஏரன் ஜனார்த்தனன் கையிலிருந்து துடுப்புகளை பிடிவாதமாக வாங்கி வலிக்க தொடங்கினார். படகு மெல்ல நகர ஆரம்பிக்க காற்று சுகமான குளிரை சுமந்து கொண்டு நரம்புகளைத் தொட்டது.

"இதற்கு முன் இந்தியா வந்திருக்கிறீர்களா?” ஜனார்த்தனன் கேட்டார்.

"இல்லை. இதுதான் முதல்முறை. என்னுடைய மனைவி ஜூலியாவுக்கு இந்தியா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவள் சமீபத்தில் இறந்து போனாள். தான் எரிக்கப்பட்டு சாம்பலை பனாரஸில் கங்கையில்தான் கரைக்க வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். அதற்காக இந்தியா வந்தேன். அவளுடைய டயரியில் இந்த ஏரியைப் பற்றி எழுதியிருக்கிறாள். அதனால் இங்கேயும் வரவேண்டும் என்று தோன்றியது.”

”ஐ அம் சாரி…. உங்கள் மனைவியை இழந்து தனியாகத் தான் இருக்கிறீர்களா?”

"ஆமாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஜூலியாவின் மறைவினால் நான் தனியாக இருக்கவில்லை. அவளை விவகாரத்து பண்ணி விட்டு அதற்குப் பிறகு நான்குமுறை கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டேன். என் மேல் குற்றமா அல்லது அவர்கள் தான் காரணமா என்று தெரியாது. அவர்கள் ஐந்து பேருமே என்னிடம் விவகாரத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். உங்களுக்கு எத்தனை மனைவிகள்?”

ஜனார்த்தனன் சிரித்தார்.

‘எனக்கு ஒரே ஒரு மனைவி தான். ஐம்பத்தி மூன்று வருடங்கள் என்னுடன் ஒற்றுமையாகக் குடித்தனம் பண்ணினாள். போன வருடம் தான் இறந்து போனாள்….”

"ஐ அம் சாரி…. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், பெண்கள்? க்ராண்ட் சில்ரன் உண்டா?”

"எங்களுக்கு ஒரு பெண். ஒரே ஒரு பிள்ளை மட்டும் தான். பெண் திருமணமாகி ஒரு பையனுடன் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறாள். அவளுடைய கணவன் அங்கே ஸ்டீல் ப்ளான்டில் வேலை பார்க்கிறான். என் பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு பேரக் குழந்தைகள். அவர்கள் கூட அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள். உங்களுக்கு?”

ஏரன் மஞ்சள் பற்கள் தெரிய சிரித்தார். "என்னுடைய ஒவ்வொரு மனைவிக்கும் என்னால் குறைந்தது இரண்டு குழந்தைகள். மற்ற கணவன்மார்களுடன் வேறு சில. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்… எங்கள் திருமணங்களில் உன் குழந்தைகள், என் குழந்தைகள், நம் குழந்தைகள் என்பது சர்வ சாதாரணம். எனக்கு பதினெட்டு பேரப் பிள்ளைகள். ஏழு பேத்திகள்…”.

"அம்மாடியோவ்…. அது சரிதான். நீங்களும் நானும் ரொம்பவே வித்தியாசமான பின்னணியில் வந்தவர்கள் தான். நான் காலேஜில் ப்ரொ·பஸராக இருந்தேன். சம்பாதித்ததெல்லாம் என் பெண்ணை நிறைய வரதட்சிணை கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கவும், என் பையனை என்ஜினியரிங் படிக்க வைக்கவுமே சரியாகப் போய்விட்டது…”

"ஏன்? உங்கள் மனைவியும் வேலைக்குப் போகவில்லையா?”

”யார்? என் ராஜியா? அவள் என்னையே நிமிர்ந்து பார்த்து பேசமாட்டாள். அவளாவது? வெளியே போய் நாலு பேருக்கு முன்னாடி வேலை பார்ப்பதாவது?”

"எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது மிஸ்டர் ஜனார்த்தனன். நாம் இருவரும் ஒரே ப்ளானட்டில் தானே இருக்கிறோம்?”

"ஏன் கேட்கிறீர்கள்?” ஜனார்த்தனன் நெற்றி புருவங்களை சுருக்கிக் கொண்டு விட்டார்.

"இல்லை…. நம் இருவரும் பனிரெண்டாயிரம் மைல்கள் தான் தள்ளி வாழ்கிறோம். உலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது என்கிறார்கள். ஆனால் நமக்குள் தான் எத்தனை வித்தியாசங்கள்? என்னுடைய குழந்தைகளுக்கு நான் எதுவுமே செலவழிக்கத் தேவையிருக்கவில்லை. பெண்கள் கல்லூரியோ பள்ளிப் படிப்போ முடிந்த கையோடு வேலைக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள். தாங்களாகவே வேலைக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள். தாங்களாகவே துணையைத் தேடிக் கொண்டார்கள். தங்கள் கல்யாணத்தைத் தாங்களே செலவழித்து ஜாம் ஜாமென்று பண்ணிக் கொண்டார்கள். என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்கள். அவ்வளவுதான். பிள்ளைகளோ, தாங்களே ஸ்காலர்ஷிப்பில் ஸ்டேட் காலேஜ்களில் படித்து வேலை தேடிக் கொண்டு பெண்ணையும் தேடிக் கொண்டு கல்யாணம் செய்துக் கொண்டார்கள்.”

"அப்போ நீங்கள் சம்பாதித்ததை என்ன செய்தீர்கள்?”

"நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் என்னை விவகாரத்து செய்த மனைவிகள் ஜீவனாம்சம் என்ற பெயரில் எடுத்துக் கொண்டார்கள். நான் ஒரு பெயிண்டர். சம்பாதிப்பதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்வேன். வருடாவருடம் ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும், பல நாடுகளுக்கும் சென்று அங்கேயுள்ள ஓவியங்களைப் பார்த்து மகிழ்வேன். வீட்டில் இருக்கும் போது வாரம் இரண்டு நாட்கள் வெளியே போய் பல தினுசான ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடுவேன். ஒரு நாள் இத்தாலியன், ஒரு நாள் தாய், ஒரு நாள் இந்தியன்…..”

"ராஜி உயிரோடு இருந்தவரை நான் ஓட்டலில் சாப்பிட்டதேயில்லை.. அவள் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவாள். அவள் போடுகிற காபி மாதிரி நீங்கள் எந்த ரெஸ்டாரண்டிலும் சாப்பிட்டிருக்க முடியாது. நான் எழுந்துவிட்டது அவளுக்கு எப்படித்தான் தெரியுமோ? நான் மாடி இறங்கி வரும்போது அவள் கையில் காபியுடன் நின்றிருப்பாள். முகமெல்லாம் சிரிப்புடன் என் கையில் டம்ளரை வைப்பாள். அவள் எழுந்திருப்பதற்கு முன் ஒரு நாளாவது நான் எழுந்து அவளுக்கு என் கையால் காபி போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஒருநாள் கூட அப்படி நடந்ததில்லை….”

ஜனார்த்தனன் கண்களில் பனித்த நீரை துடைத்துக் கொள்ளக்கூட முயற்சிக்கவில்லை.

ஏரன் பேசினார். "என்னுடைய எந்த பெண்டாட்டியும் எனக்கு எந்த பணிவிடையும் செய்ததேயில்லை. நானே தான் காலையில் எழுந்தவுடன் டீ போட்டுக் கொள்வேன். சமையலிலும் எப்போதும் பக்கத்தில் இருந்து முக்கால்வாசி பார்த்துக் கொள்வேன். காய்கறிகளை அழகாக நறுக்குவதில் நான் எக்ஸ்பர்ட் தெரியுமா? அத்தோடு என்னுடைய மூன்றாவது பெண்டாட்டிக்கு சமையலறை என்றாலே ஒரு வெறுப்பு, அவெர்ஷன். அதனால் அவளுடன் குடித்தனம் பண்ண மூன்று வருடங்களும் தினம் நான்தான் மூன்று வேளையும் சமைப்பேன்…. அவள் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட மட்டும் செய்வாள்.”

"நாம் இருவரும் ஆல்மோஸ்ட் ஒரே வயசுதான். ஆனால், நம் இருவருடைய வாழ்க்கை முறையும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. இல்லையா?”

"ஆமாம்….. நம் வாழ்க்கை முறையில் எந்த ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்கிறார் என்கிறீர்களே, அங்கே வந்திருக்கிறீர்களா?”

"மொத்தமாக இரண்டு முறை வந்திருக்கிறேன். கரெக்ஷன்….. வந்திருக்கிறோம். என் மனைவியும் நானும்…..”

"உங்களுக்கு அமெரிக்கா பிடித்ததா?”

ஜனார்த்தனன் இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல் யோசித்தார். ஏரனிடம் அமெரிக்கா பிடிக்கவேயில்லை என்று சொன்னால் அவருடைய மனம் வருத்தப்படலாம். என்னிடத்தில் யாராவது உங்கள் இந்தியா எனக்குப் பிடிக்கவேயில்லை என்று சொன்னால் நான் எவ்வளவு வருத்தப்படுவேன்?” என்று நினைத்துப் பார்த்தார்.

"என் பிள்ளை இருப்பது சான்·ப்ரான்ஸிஸ்கோவிற்கும் லாஸ்ஏஞ்சல்ஸக்கும் இடையே இருக்கிற ஒரு குக்கிராமத்தில். அங்கே கார் ஓட்ட தெரிந்தால் மட்டுமே வெளியே போக முடியும். எனக்கு அது தெரியாது. என் மருமகளும் வெளியே வேலை பார்க்கிறவள். அதனால் என் மனைவியும் நானும் கொட்டு கொட்டு என்று வாரம் முழுவதும் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருப்போம். சனி, ஞாயிறு மட்டும் தான் என் பிள்ளை எங்களை எங்கேயாவது கூப்பிட்டுப் போவான். அதுவும் மனசிருந்தால்….”

ஏரன் சட்டென்று ஆச்சரியமாக கேட்டார்.

"யூ மீன்… உங்களக்கு கார் ஓட்ட தெரியாதா? நான் பதினாறு வயதான அன்றே போய் லைசன்ஸ் வாங்கிவிட்டேன். அதுவும் அந்த இளம் வயதில் ஹைஸ்கூலில், கூடப் படிக்கும் அழகான பெண்களைக் கவர வேண்டுமானால் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அப்பாவிடமிருந்து கடன் வாங்கியாவது நல்ல கார் வைத்திருக்க வேண்டும். அப்போது தான், சனிக்கிழமை மாலைகளில் தனியாக வீட்டில் உட்காராமல் தியேட்டருக்கு போய் மேக் அவுட் பண்ணலாம்…..”

"மேக் அவுட் என்றால்?” ஜனார்த்தனன் கேட்டார்.

ஏரன் வாய்விட்டு ஓவென்று சிரித்தார்.

"நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா? ஒரு பெண்ணுடன் மேக் அவுட் பண்ணுவதுதான் டீன் ஏஜ் பிள்ளைகளுடைய தலையாய காரியம்…. அதாவது உதடுகளோடு உதடு பொருத்தி நிமிடக் கணக்கில் முத்தமிடுவது, அதற்கும் மேலே கூட சில சமயம் போய்விடுவோம். அப்படி போகாவிட்டாலும் போனதாக மறுநாள் பள்ளிக்கூடத்தில் பீற்றிக் கொள்ள வேண்டியது….”

"உங்கள் பெயர் கெட்டுப் போய்விடாதா?”

"கெட்டுப் போவதா? ஸ்கோர் பண்ணினால் தான் ஹீரோவாக மற்ற மாணவர்களுக்கு நடுவில் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு ”என்னைப்பார்… நான் ரொம்ப மாச்சோ ஆண்பிள்ள….” என்று பெயர் வாங்கலாம். மற்ற பெண்களும் அப்போது தான் துரத்திப் பிடித்து டேட் பண்ண ஆசைப்படுவார்கள்".

ஜனார்த்தனன் பெருமூச்சு விட்டார். "அப்பாடியோ? அந்த வயதில் நான் ஏதாவது பெண்ணை ஓரக்கண்ணால் பார்ப்பது கூட யாருக்கும் தெரியாமல் தான் செய்ய வேண்டும் என் அம்மா, அப்பாவுக்கு நான் ஏதாவது பெண் பின்னால் போனேன் அல்லது பேசினேன் என்று தெரிந்தால் போதும்! அப்புறம் அப்பா நேரிடையாக ஏதும் பேச மாட்டார். அவருடைய பெல்ட்டுதான் பேசும்….”

"அப்புறம் எப்படி உங்களுக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்வீர்கள்?”

ஜனார்த்தனன் சிரித்துக் கொண்டே சொன்னார். "என் துணையை நானே தேடிக் கொள்வதா? அம்மா அப்பா பார்த்து வைத்த பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது எங்கள் புத்தகங்களில் எழுதாத சாஸ்திரம். அட்லீஸ்ட் எங்கள் காலத்தில்.”

"யூ மீன் …. உங்கள் மனைவியை நீங்களாகத் தேடிக் கொள்ளவில்லையா? ஏரன் ஆச்சரியமாகக் கேட்டார்.

"நானே தேடிக் கொள்ளாதது மட்டும் இல்லை. கல்யாணத்திற்கு முன் அவள் வீட்டுக்கு என் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அத்தை, பாட்டி, தாத்தா என்று ஒரு பட்டாளமே போனோம். அவள் – அது தான் என் வருங்கால மனைவி ராஜி – ஒரே ஒரு நிமிடம் வெளியே வந்தாள். எங்கள் எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் பண்ணினாள். உள்ளே போய் விட்டாள். அவளை நான் அப்போது பார்த்தது ஒரு நிமிடத்திற்குக் குறைவுதான். அந்த அளவு கூட அவள் என்னைப் பார்க்கவில்லை என்று பிற்பாடு ராஜி என்னிடம் கூறினாள்…”

"அடடா….. இது எவ்வளவு புதுமையாக இருக்கிறது தெரியுமா? நான் பதின்மூன்று வயதிலிருந்தே டேடிங் பண்ணினேன். என் முதல் மனைவி ஜூலியாவை கல்லூரியில் சந்தித்தேன். அதற்குப் பிறகு அவளோடு நான்கு வருடங்கள் வாழ்ந்தேன்.”

"கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலா?”

"ஆமாம். எங்கள் இருவருக்குமே கல்யாணம் என்ற வார்த்தையே பயமாக இருந்தது. யூ ஸீ…… எங்கள் பெற்றோருமே இரண்டு மூன்று முறை டிவோர்ஸ் பண்ணியவர்கள். அதனால் முதலில் சேர்ந்து வாழ்வது, ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று பேசிக் கொண்டோம்”.

"பிடிச்சிருந்ததா?”

"அப்கோர்ஸ் நாங்கள் திருமணம் என்ற பந்தம் இல்லாமல் வாழ்ந்தபோது எங்களுக்குள் சண்டைகளே வரவில்லை. ஏனென்றால் இருவருமே சுதந்திரப் பறவைகளாக எங்களை உணர்ந்தோம். ஆனால் திருமணம் ஆன உடனேயே நான் தான் மிகவும் பொஸஸிவ் மனிதனாக மாறிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவளை யார் பார்த்தாலும், அல்லது அவள் யாருடன் பேசினாலும் எனக்கு கோபம் வந்தது. எங்களுக்குள் இதனால் நிறைய சண்டை வர ஆரம்பித்து விட்டது……

"என் மனைவி ராஜி எனக்குக் கிடைத்தது என்னுடைய அதிருஷ்டம் என்று தான் சொல்லுவேன். ஒருநாள் கூட நாங்கள் சண்டை போட்டதில்லை. தினசரி காய்கறி வாங்குவதிலிருந்து பிள்ளை எந்தப் படிப்பு படிக்க வேண்டும், பெண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடுவது என்ற எந்த விஷயத்திலும் அவள் என் கருத்துக்கும் அபிப்ராயத்துக்கும் மறுப்பு சொன்னதில்லை. அது ஏன்? மழை வரும் போல இருக்கிறது. குடை எடுத்துக் கொண்டு போ என்று நான் சொன்னால் தான் அவள் குடை எடுத்துக் கொண்டு வெளியே போவாள் என்றாள் உங்களால் நம்ப முடிகிறதா?”

"நம்ப முடியவில்லை தான். எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய பேச்சைக் கேட்டுத்தான் நடக்கிறாள் என்றால் அவளை உசத்தியாக எண்ண மாட்டார்கள். நீ என்ன அவனுக்கு அடிமையா என்று கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவார்கள் என்பது தான் உண்மை…….”

ஜனார்ததனனும் ஏரனும் அதற்கப்புறம் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் படகை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார்கள். குளிர், காற்று, மற்ற படகுகளிலிருந்து அவ்வப்போது வரும் சத்தம் தவிர வேறெதுவும் அங்கில்லை. இருவரும் அவரவர் வாழ்க்கையைப் பற்றி அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.


படகை வாடகைக்கு எடுத்த நேரம் முடிவடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

அவர்களின் மெளனத்தைக் கலைப்பதாய் முதலில் ஏரன் தான் கேட்டார்.

"ஊருக்குத் திரும்பிய பிறகு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

ஜனார்த்தனன் ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். ”என் பெண் மைதிலியுடன் நான் போயிருக்க முடியாது. எங்கள் கல்சரில் அது அவ்வளவாக சாத்தியம் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் என் மகன் கிரண் என்னை அங்கே கூட்டிக் கொள்ள பயப்படுகிறான். ப்ளட்ப்ரஷர், சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் எல்லாம் தான் வயசோடு சேர்ந்து வந்து விடுகிறதே…. எனக்கு ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் கிடைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டான். அங்கே அது இல்லாமல் இருக்க முடியாதாமே. அதனால் அவனும் என்னைத் தன்னுடன் வந்து இரு என்று கூப்பிட்டுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக…..

ஜனார்த்தனன் மேலே பேச முடியாமல் நிறுத்தினார், அவர் குரல் லேசாக நடுங்குவது போல் இருந்தது.

"ப்ளீஸ் டெல் மீ…. அதற்குப் பதிலாக என்ன செய்தான்?” ஏரனின் குரலிலும் ஒருவித அவசரம் தெரிந்தது.

"சென்னையில் இருக்கிற ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான். டாடி….. அது தான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது என்று போன் செய்து சொல்கிறான். அங்கே போவதற்கு முன் என் உயிருக்குயிரான ராஜியுடன் தேன்நிலவை கொண்டாடிய இடத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என்று தான் இங்கே வந்தேன்….”

இப்போது ஏரன் மெல்லிய குரலில் பேசினார். "கேன் யூ பிலீவ் இட்? ஐயாம் இன் தி ஸேம் போட்! என்னுடைய குழந்தைகள் எல்லோரும்… ஐ அம் சாரி… ஒருவருமே இப்போது குழந்தையில்லை… அவர்கள் எல்லோரும் தன்னுடைய அம்மா, ஸ்டெப் ·பாதரோடு வசிக்கிறார்கள். அதனால் இனி நான் அவர்களுக்குத் தேவையில்லை. எனக்கு ப்ராஸ்டேட் கான்ஸர் இரண்டாவது ஸ்டேஜ் தாண்டிவிட்டதாம். சீக்கிரத்திலேயே யாராவது எப்போதும் என்கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை. அதனால் என்னுடைய கடைசி மனைவியுடைய கடைசி பையன் மட்டும் பரிதாபப்பட்டு என்னை ஒரு ஓல்ட் ப்யூபின் ஹோமில் சேர்த்து விட்டிருக்கிறான். நான் ஸியாட்டில் திரும்பிய உடனே அங்கே தான் போய் தங்க வேண்டும்…..”

படகு கரை திரும்பியது.

ஜனார்த்தனன் சொன்னார். "ஏரன்… உங்களுக்கும் எனக்கும் கலாச்சாரத்தில் எவ்வளவு வித்தியாசங்கள் என்று இவ்வளவு நாழி பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா? வயதான நாம் இருவருமே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். நமக்கு அதில் விருப்பமா இல்லையா என்று யாரும் கவலைப்படவில்லை……”

ஆமாம்….. நாம் பெற்ற குழந்தைகளே… நாம் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளே நம்மை வேண்டாம் என்று ஓல்ட் ப்யூப்பின் ஹோமில் கொண்டு விடுகிறார்கள். இதில் மட்டும் அமெரிக்கா, இந்தியா என்று வித்தியாசம் இல்லை. அப்பாடா! கடைசியாக ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடித்து விட்டோம் இல்லையா?”

ஜனார்த்தனனும் ஏரனும் வாய்விட்டு சிரித்தபடி படகைவிட்டு இறங்கினார்கள். ஆனால் இருவர் சிரிப்பிலும் சோகம் இருந்தது.

[2000 ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை.]


பின்னுரை

ஜனார்த்தனன் "மகன் சென்னையில் இருக்கிற ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான்.”

ஏரன் "கேன் யூ பிலீவ் இட்? ஐயாம் இன் தி ஸேம் போட்!"

ஜனார்த்தனன் சொன்னார். “கடைசியாக நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா? வயதான நாம் இருவருமே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். நமக்கு அதில் விருப்பமா இல்லையா என்று யாரும் கவலைப்படவில்லை……”

வேற்றுமையில் ஒற்றுமை !!!!

கதையைப் படித்து முடித்தபோது எனக்கு சில சம்சயங்கள் (doubts) எழாமலில்லை. (டவுட் இல்லாமல் JK இல்லை என்று முணுமுணுப்பது கேட்கிறது.).

ஆசிரியர் ஏன் இந்தியாவைக் கதைக் களமாக தேர்ந்தெடுத்தார். அதுவும் ஏற்காடு?

படகில் பயணம் செய்துதான் உரையாட வேண்டுமா ?

சிந்தித்துப் பார்த்தபின் தான் ஆசிரியர் எவ்வளவு கச்சிதமாக கதைக்களத்தையும் படகு சவாரியையும் கதைக்குப் பொருந்தும் விதமாக தேர்ந்திருக்கிறார் என்பது உரைத்தது.

ஜனார்த்தனனுக்கு அமெரிக்காவிற்கு செல்லும் விருப்பம் இல்லை. ஆகவே இந்தியா கதைக்களம் ஆகியது.

அமெரிக்காவில் மத்யமர் நகரத்திற்கு வெளியே சிறு நகரங்களில் வசிப்பவர்கள். இச்சிறு நகரங்கள் ஒரு ஏரியை மையத்தில் வைத்து சுற்றிலும் டவுன்ஷிப் ஆக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆக அமெரிக்க சுற்றுச்சூழலை கொண்டு வர ஏற்காடு ஏரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அமெரிக்கர்கள் பொதுவாக எல்லோருடனும், அறிமுகமில்லாமல் இருந்தாலும் அறிமுகப்படுத்திக் கொண்டு தயக்கமின்றி பேசுவார்கள். அவ்வாறு ஏரன் பேச்சைத் துவக்குகிறார்.

இரண்டாவது டவுட்டிற்கு விடை : இருவர் மட்டுமே படகுப் பயணம் செய்யும்போது மற்றவர்களின் கழுதைக் காதுகளுக்கு இவர்கள் பேசுவது கேட்காது. கடைசியில் ‘வி ஆர் இன் தி சேம் போட்' என்று ஒரு சொலவடை சிலேடை ஆக மிளிர்கிறது.

ஆனாலும் எரனின் முதல் மனைவியின் தகனம், காசியில் அஸ்தி கரைத்தல், அங்கிருந்து ஏற்காடு வருதல் போன்ற கதையை அர்த்த பூர்வமாக ஜீரணிக்க முடியவில்லை.

21 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்தி அருமை. அம்மாவும், மகளுமாக ஒன்றான குறிக்கோளோடு சேர்ந்து படித்து தேர்வில் வெற்றி பெற்று வேலைகளில் சேர்ந்தது மகிழ்ச்சியை தருகிறது. இருவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். ஒரே ஒரு செய்தியாக இருந்தாலும், மனதுக்கு நிறைவாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. இவரது கதைகளை படித்திருக்கிறேன். எந்த கதைகள் என சொல்ல தெரியாவிடினும், கீதா பென்னெட் என்ற இந்த ஆசிரியர் எழுதிய கதைகளை படித்திருக்கிறேன். இவர் ஒரு வீணை இசை கலைஞர் என்பதையும் செய்தியில் படித்துள்ளேன். இதையெல்லாம் ஆசிரியர் குறிப்பில் சகோதரர் நினைவு படுத்தியதும் இவர் கதைகளை ஏற்கனவே படித்தது நினைவுக்கு வந்து விட்டது.

    இந்தக் கதையும் நன்றாக உள்ளது. உரையாடல்களில் ஒருவரைப்பற்றி ஒருவர் பேசிக் கொள்வதிலேயே கதையின் சாராம்சத்தை நிறைவாக கொண்டு வந்து விட்டார் ஆசிரியர்.

    கதையின் இறுதி பகுதி மனதை கனக்க வைக்கிறது. இருவருக்கும் இடையில் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தும் இறுதியில் உண்டான ஒற்றுமை உலகத்தின் பொது நியதியை சுட்டிக் காண்பிக்கிறது.

    பின்னுரையும், கதையை சிலாகித்த விதமும் நன்றாக உள்ளது. எனக்கும் ஒரு சிறு சந்தேகம். அமெரிக்கர்கள் இறந்த பின் தகனம் செய்வார்களா? முதல் மனைவிக்குப் பிடித்தமான இந்தியாவுக்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கலாமோ? ஆனாலும் கதை சுவாரஸ்யமாக இருந்தது. நல்லதொரு கதையை இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  4. கீதா பென்னட்டின் கதை மிகச் சிறப்பாகவும் இப்போதும் பொருந்துவதுபோலும் இருந்தது.

    வாழ்க்கைல இரண்டு விதமான பாதைகளை, தன் பசங்க எதிர்க்குரல் எழுப்பாதபடித் தேர்ந்தெடுக்கலாம். அவங்களுக்கு ரொம்ப எதிர்பார்ப்புகள் இல்லாமல் கன்சர்வேடிவாகவே வளர்த்து, இந்தியாவுக்குள் வேலை, எங்கு போனாலும் ரிடையர் ஆனபின் அவர்களோடே இருந்து, முற்றிலும் உதவிகள் செய்து உபத்திரவங்களே இல்லாமல் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிடுவது, விசேஷங்களுக்குச் சேர்ந்தே செல்வது என்றெல்லாம் குறைந்த எதிர்பார்ப்புகளோடு கூட்டுக்குடும்ப பாணியில் ஆனால் பெற்றோரும் பையன் குடும்பமும் மாத்திரம், என வாழ்வது. பையனை வெளிநாடு அனுப்பாமலிருப்பது. இப்படியும் பல உதாரணங்கள் என் உறவினர்களிடையே உண்டு.

    இரண்டாவது, நம் வாழ்க்கை நம் விருப்பத்தில் நடந்தது. பையனின் வாழ்க்கையை அவன் விருப்பத்தில் விடுவது என, வெளிநாட்டுப் படிப்பு, அங்கேயே வேலைக்குப் போனால் அதிலும் தலையிடாமல், நேரம் வரும்போது அவனுக்குப் பெண் பார்த்து, இல்லை அவன் தேர்ந்தெடுத்தால் அவன் வாழ்க்கையை அங்கீகரித்து... என்று வாழ்வது. நம் முடிவும் நம் கையில்தான். இறந்தபோது அவனால் வரமுடிந்தால் சரி, நாம் தனியாக ஆகிவிட்டால் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் வாழ்வது, மனைவி தனியாகிவிட்டால் அவள் கௌரவமாக வாழ வழி செய்து வைப்பது.

    இந்த இரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு அவற்றைப் பற்றி ஆராய்ந்து, வருத்தப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது.

    இரண்டிலுமே அதிருஷ்டம் உருந்தால் பையன் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

    ஆனால் வாழ்க்கையில் மிக முக்கியமானது, நம் பணம் சொத்து நம் கையில் இருக்கும்படியாக அதற்கு உழைப்பது. இருக்கும் காசையெல்லாம் மகன் படிப்பிலும் திருமணத்திலும் செலவு செய்துவிட்டேன் என்று அசடு வழியாமல் இருக்கணும்ய

    ரொம்ப நீண்ட பின்னூட்டம். ஆனால் இது வாழ்க்கையின் யதார்த்தம் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. இரு நாட்டு மக்கள் வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உபயோகப்படுத்திக் கொண்டு அதை ஒரு கதை ரூபமாக்கிய கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.
    அதற்காக அவர் தேர்ந்தெடுத்தக் கதைக்களமும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் தற்கால அமெரிக்க வாழ்க்கை முறை பல விஷயங்களில் இந்திய குடும்பங்களின் வாழ்க்கை போக்கில் மாறி வருவதையும் உணர முடிகிறது.

      அதே நேரத்தில் இந்தியத் தந்தை முதியோர் இல்ல வாழ்க்கைக்குத் தயாராவது கதைக்காக வலிந்து எழுதப்பட்டது போல மனதளவில் தோற்றம் கொள்கிறது. நடைமுறை வாழ்க்கையில் கதைகளில் கதைக்கப் படுவது போல இல்லை என்பதே என் அனுமானமும் கணிப்பும் ஆகும்.

      நீக்கு
    2. சனிக்கிழமைக்காக
      ஜெஸி ஸாரின் சமீப கால தேர்வுக் கதைகள் சிறப்பாக இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

      அவை எந்த மாதிரியான சிறப்பு என்றால் வெவ்வேறான மாறுபட்ட கதைக் களன்கள், கதைகளை எழுத்தில் வடிக்கும் பாங்கு, , பத்திரிகைகளுக்கு ஏற்பவான எழுத்து நடை இவையெல்லாம் எபி வாசகர்களுக்கு ஒரு மாறுபட்ட வாசிப்ப் அனுபவத்தைக் கொடுக்கக் கூடும் என்று
      நினைக்கிறேன்.

      இரண்டாவதாக சிறுகதைகள் எழுத முயற்சிப்போருக்கு
      சனிக்கிழமை கதைகள் பாடப்புத்தகங்கள் மாதிரி.

      சனிக்கிழமை கற்ற அனுபவங்கள் செவ்வாய்க்கிழமை
      இதே எபியில் புதுப் புது கதைகள் எழுத முயற்சிப்போருக்கு சோதனைக் களமாக நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

      அதற்காக ஜெஸி ஸாருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

      நன்றி, நண்பரே.

      நீக்கு

    3. நான் அந்தக்காலத்தில் கீதா பென்னெட்டின் கதைகளை வாசித்திருக்கிறேன். அவருடைய கதைகளில் ஒரு யதார்த்தம் இருக்கும். அதன் விளைவு இக்கதை தேர்ந்தெடுப்பு. பாராட்டுகளுக்கு நன்றி.

      சுஜாதா கூறியதாக படித்தது. தற்போது சிறுகதைகள் என்பன ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணத்தில் உட்படுவதில்லை. கட்டுரை, உரையாடல், அனுபவக்குறிப்புகள், ஓரங்க நாடகங்கள் போன்றவையும் சிறுகதையாகின்றன.

      நீக்கு
  6. பாசிட்டிவ் செய்தி சூப்பர். 47 வயதில் அரசுத் தேர்வு எழுதலாமா? புது விஷயம் எனக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நெல்லை ஐயா நீங்கள் கூறிய 2 கருத்துக்களும் பிள்ளை உள்ளவர்களுக்கு. ஆண் பிள்ளை இல்லாதவர்க்கு வேறு வழிகளும் உள்ளன என்று அடுத்த சனி பதிவில் காணலாம். கருத்துறைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகள் இல்லாதவர்களும் இருக்காங்களே ஜெ கே அண்ணா. எனக்குத் தெரிந்து, திருவனந்தபுரத்தில் நான் இருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்த மாமா மாமி - அவர்களிடமும் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் உண்டு. என் மனம் பக்குவம் என்பதுஇப்படியானவர்களிடமிருந்து வந்தவைதான். என்னை அவர்கள் மகள் போல பார்த்துப்பாங்க. நானும் அவங்ககிட்ட அப்படியே. அப்போதைய என் கஷ்டங்கள் அனைத்தும் அறிந்தவர்கள். என்னவோ நான் அங்கேயே நிரந்தரமாக இருப்பேன் என்ற கற்பனையில், உணர்ச்சியில், யதார்த்திற்கு மனம் பக்குவப்படாத நிலையில், அவர்களிடம், 'நானிருக்கேன்...உங்களுக்கு உதவியாகக் கடைசிவரை என்று...டயலாக் எல்லாம் விட்டு நானோ ஊர் ஊராகச் சுற்றி....அவர்களும் எவ்வளவோ உடல்நலன் கஷ்டப்பட்டு..மாமா இறந்துவிட மாமி தனியாகவே உடல் உபாதைகளுடன் இருந்து அவரும் இப்போது இல்லை. இத்தனைக்கும் மைத்துனர் வீடும் இவர் வீடும் ஒரே வளாகத்துள் பொதுவான கிணற்றுடன்!

      கீதா

      நீக்கு
  8. கீதா பென்னட்டின் எழுத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அருமையான எழுத்து. பல திறமைகள் கொண்டவர் ஆனால் மரணம் விரைவில் தழுவிட்டது.

    இக்கதையைப் பார்த்ததும் வாசித்தது போல இருக்கே என்று தோன்றிட வருடத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. அந்த வருடத்தில் சென்னை வாசம் எனக்கு. எனவே மாமியார் மாமனாரின் புத்தக வாசிப்பில் ஆவி வாசித்த போது வாசித்த நினைவு வந்தது. ரீகேப் பண்ணிக் கொண்டேன்.

    அப்போது வாசித்த போது மனம் கலக்கம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அதை மீண்டும் வாசித்த போது வேறு சிந்தனை. மனம் பக்குவப்படல்.

    பிள்ளைகள் வெளிநாட்டில் என்றில்லை இங்கு இருந்தாலுமே பார்த்துக் கொள்வது என்பது இரு தரப்பு புரிதலிலும் இருக்கிறது. இதில் பேச நிறைய இருக்கு. விட்டுக் கொடுத்தல் என்று இருதரப்பிலும்.

    எனக்குத் தெரிந்து பெரியவங்க பிள்ளைகள் வைத்துக் கொள்ள, பார்த்துக் கொள்ள ரெடியாக இருந்தாலும் போகமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. எங்கள் குடும்பத்திலேயே....இருக்கு...இவர்களுக்காகப் பிள்ளை தன் வேலையை விட்டு வர முடியுமா? அப்படிப் படிக்க வைத்ததும் பெற்றோர்தானே!

    குழந்தைகள் இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி, நாம் தனியாக வாழும் காலகட்டம் வரலாம். எனக்குத் தெரிந்த வயதான பாட்டி, அவர் வயது 90. குழந்தைகள் இல்லையா என்று கேட்டால். சந்ததிகளே இல்லாத இரு குழந்தைகளும் எல்லாரும் போய்ச்சேர்ந்தாச்சு. தாத்தாவும் போய்ச் சேர்ந்தாச்சு. ஆனால் இவர் தனியாக நல்ல மனோதிடனுடன் இருக்கிறார். மனப்பக்குவம் அசாத்தியம். நான் அவரிடம் கற்றுக் கொண்டவை ஏராளம். அது போல என் மாமி. அவர் வயது 80 தாண்டியாச்சு. தனியாக....அவரிடம் யதார்த்தத்தைக் கற்றுக் கொள்கிறேன்.

    இது கஷ்டமான விஷயம்தான் ஆனால் நாம் நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டுவிடுவது நல்லது இதுதான் யதார்த்தம். புலம்பி, வருத்தப்பட்டுப் பயனில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அப்போதைய காலகட்டத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் கதைக் கரு பொருத்தம் என்றாலும் நிலைமை நிறைய மாறியிருக்கிறது. அப்போது முதியோர் இல்லம் என்பது ரொம்ப மனதிற்குக் கஷ்டம் கொடுக்கும் விஷயமாக இருந்தது. இப்போது பலரும் தாங்களாகவே - அதாவது ஓரளவு பணம் இருப்பவர்கள் - தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொண்டு இப்படி இல்லத்தில் சேர்ந்துகொள்கிறார்கள். அங்கு கம்யூனிட்டி இருக்கு. பல சேவைகள் இருக்கு.

    அபார்ட்மென்டிலேயே - இப்போது என் தங்கை பெண் இருக்கும் அபார்ட்மென்ட் - ;அது எல்லொரும் வசிக்கும் பகுதி ஆனால் அங்கு பெரியவர்கள் மட்டும் தனியாக இருபப்வர்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பாகவும் இருக்காங்க.

    இப்பொதைய காலகட்டத்தில் இதுதான் யதார்த்தம் என்று தோன்றுகிறது. அதை நாம் ஏற்க வேண்டிய நிலைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ..கீதா ரங்கன் தெரியும். கீதா சாம்பசிவம் தெரியும். கீதா பென்னெட்டைத் தெரியுமா?//

    என்ன ஒரு அதிரடி ஆரம்பம்.. சனிக்கிழமையே அதிருதே.. நடுங்குதே...!

    பதிலளிநீக்கு
  11. கீதா பென்னட் எழுதியிருப்பதில் ஒரு சில முரணாகப் பட்டது எனக்கு. இது அப்போதைய காலகட்டம். இப்பொது என் மகன் சொல்வதைப் பார்க்கும் போது அங்கும் நிலைமை மாறி வருகிறது என்பதாகத்தான்.

    இரண்டாவது - முதல் மனைவியின் இந்திய ஈர்ப்பு அதை நிறைவேற்ற என்பது கதையில் ஏனோ பொருந்தவில்லை என்று தோன்றுகிறது. அதற்காக வந்திருப்பதாகச் சொல்லப்படுவது...ஏனென்றால் அவருக்கு பல மனைவிகள்!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கீதா ரங்கன் தெரியும். கீதா சாம்பசிவம் தெரியும். கீதா பென்னெட்டைத் தெரியுமா? /

    சிரித்துவிட்டேன் ஜெ கே அண்ணா. எதுக்குன்னா? கீதா சாம்பசிவம், கீதா பென்னட் இருவருமே பலராலும் அறியப்பட்டவங்க....என்னை உங்களுக்கு இங்கு வருபவர்களுக்குத் தெரியுமாக இருக்கலாம் ஆனால் பலருக்கும் தெரியாது என்பதே உண்மை!! எனக்கென்று எந்த ஒரு Identity யும் இல்லமல் இதோ இது வரை ஓட்டியாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. தாயையும், மகளையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  15. வருகை புரித்தோர்க்கும் கருத்துக்கள் கூறியவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. 47 வயசிலும் டி என் பி எஸ்ஸி எழுதலாம் என்பது புது விஷயம். தாய், மகள் இருவருக்கும் வாழ்த்துகள். கீதா பென்னெட்டின் இந்தக் கதையைப் படித்ததில்லை. ஏனெனில் அப்போதிருந்தே ஆனந்த விகடன் வாங்குவதை நிறுத்தியாச்சு. அவரின் இளவயதுக் கதைகள் அநேகமாக அவர் பென்னெட்டிடம் காதல் கொண்டது, கல்யாணம் ஆனது ஆகியவற்றைச் சுற்றியே இருக்கும். பல கதைகள் படிச்சிருக்கேன். இந்தக் கதை இப்போதைய நிலவரத்தைச் சொல்லிப் போகிறது. ஆனால் நான் அம்பேரிக்காவில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் எனக்குடும்பமாக இருப்பதையும் பார்த்திருக்கேன். பெரும்பாலும் மெக்சிகோகாரங்களும், பெரிய குடும்பமாக வசிப்பது உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!