சனி, 5 ஆகஸ்ட், 2023

எல்லோரும் நல்லவரே மற்றும் நான் படிச்ச கதை

 


===========================================================================================================


==================================================================================================


================================================================================================


=================================================================================================


நான் படிச்ச கதை (JKC)


முன்னுரை

இன்று சிங்கை எழுத்தாளர் சே.வெ.சண்முகம் எழுதிய கதை போட்டார்களே ஒரு போடு! இப்பகுதியில் இடம் பெறுகிறது.

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டவர் என்பது அறிந்ததே. எல்லோரும் ஒரே போல் இருக்க மாட்டார்கள். குணம், நடை, பழக்கம், என்று பலவிதங்களிலும் வேறுபடுவார்கள். ஆனால் எல்லோரும் “எனக்கு மட்டும்” என்று சொல்லுவதில் வேறுபடமாட்டார்கள். அது எல்லோருக்கும் பொது. இந்த ‘எனக்கு மட்டும்’ மகிழ்ச்சி, துக்கம், வெறுப்பு, ஆச்சர்யம், கோபம், என்று நவரசங்களையும் வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகத் திலங்குகிறது .

இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் கீழை ஆசிய நாடுகளை ஒவ்வொன்றாக கைப்பற்றி அடக்கி ஆண்டது உங்களுக்கும் தெரியும். 1942 முதல் 1945 வரை சிங்கப்பூரும் சீயோநான் (ஷோநோண்) என்ற பெயரில் ஜப்பான் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது.

ஆசிரியர் சண்முகம் 1951ஆம் வருடத்தில் சிங்கப்பூரில் குடியேறியவர். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர். அவருக்கு ஜப்பான் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் எப்படி இருந்தது என்று தெரியாது. அதை

//ஜப்பானியர் இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த காலத்தில் இங்கு இல்லாதவர்கள் கதை கேட்பதற்கென்றே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்!

அப்போது இங்கு இருந்தவர்கள் கதை சொல்லப் பிறந்தவர்கள்!//

என்று பகிடியாகக் கூறுகிறார்.

அவர் மூவரைப் பேட்டி கண்டதாகவும் மூவரும் அவரவர் அனுபவங்களை, விவரித்ததை, புனைவும் சேர்த்து கதையாகத் தருகிறார். அனுபவங்கள் வேறுபட்டாலும் மூவரும் ஒன்றுபடுவது இந்த ‘எனக்கு மட்டும்’ என்று தனித்தன்மையில் தான் (வேற்றுமையில் ஒற்றுமை???)

இனி கதை(களை) வாசியுங்கள்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு


சே. வெ. சண்முகம் (பிறப்பு 1933) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1951 ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்தார்.

ஆரம்பத்தில் துறைமுகத்தில் பணியாளராகவும் பின்னர் 1961ல் கிடங்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி 1991ல் ஓய்வுபெற்றார். இவர் மனோகரன் எனும் இதழின் துணையாசிரியராகவும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.



போட்டார்களே ஒரு போடு!
கதையாசிரியர்: சே.வெ.சண்முகம்


ஜப்பானியர் இந்நாட்டை ஆக்கிரமித்திருந்த காலத்தில் இங்கு இல்லாதவர்கள் கதை கேட்பதற்கென்றே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்!

அப்போது இங்கு இருந்தவர்கள் கதை சொல்லப் பிறந்தவர்கள்!

படம் உதவி இணையம். 1950இல் சிங்கப்பூர்.

ஜப்பான் காலத்திலே அவர்கள் பட்ட அவதிகள், அடைந்த இன்னல்கள், அனுபவித்த தொல்லைகள், சுமந்த துன்பங்கள்……

ஜப்பான்காரன் படுத்திய பாடுகள், சித்திர வதைகள், படுகொலைகள், பயங்கர கொடுமைகள்……. எல்லாவற்றையும் கதை கதையாக அவர்கள் இன்னமும் சொல்கிறார்களே!

நம் விழிகளில் நீர் கசியவைக்கும் சோகம் நிரம்பிய அக்கதைகளையெல்லாம் தொகுத்துப் பிறகு ஒரு பெருங் கதையாக்கலாமே என்று எனக்கு நீண்டகால நினைப்பு.

சமீபத்தில் தான் என் நினைப்பைச் செயலாக்கத் துணிந்து காரியத்தில் இறங்கினேன்.

ஒரு முரட்டு நோட்டுப் புத்தகமும் பேனாவும் எடுத்துக் கொண்டு கதை திரட்டப் புறப்பட்டேன்,

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இந்நாட்டில் வெகுகாலம் இருப்பவர்களாகப் பலபேரிடம் கதை கேட்பது என் திட்டம்.

நான் அணுகிய ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வத்துடன் ‘ஜப்பான் காலத்துக் கதைகளை’ விவரித்து முடித்தார்கள் -நான் எதிர்பார்த்தபடியே.

ஆனால், கதையை முடிக்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் ‘போட்டார்களே ஒரு போடு’ அதுதான் நான் சற்றும் எதிர்பார்க்காத தாயிருந்தது!

கதைகளைக் காட்டிலும் மிக மிகச் சுவையான விஷயமும் அதுதான்!

என்ன ‘போடு’ அது என்கிறீர்களா? இதோ, கதைகளைக் கேளுங்கள்.
****************

முதலாம் ஆசாமி ஒரு படகுத் தொழிலாளி. முப்பது வருசங்களுக்கு முன் இந்நாட்டுக்கு வந்ததிலிருந்து அவருக்கு இதே தொழில் தானாம். அவர் சொல்கிறார்:

‘ஜப்பான் காலத்துக் கதையை ஏனய்யா கேட்கிறே? கஷ்டம்னா அப்போ நாங்க அனுபவிச்சதுதான் கஷ்டம். உடுத்துறதுக்குத் துணி கிடைக்காதய்யா. சாக்குகளைத் தான் கட்டிக்கிட்டிருந்தோம். அந்தச் சாக்குகள் எங்கேயிருந்து கிடைச்சதுன்னு ஜப்பான்காரன் விசாரிப்பான். ‘பட் பட்’டுனு பதில் சொல்லணும். இல்லாட்டிம். அந்த அநியாயத்தை ஏன்யா கேட்கிறே? ஓங்கிக் கன்னத்திலெ அறைவான் பாரு…அறைன்னா எப்பேர்ப்பட்ட அறை? கன்னம் பிச்சுக்கிட்டு போயிடும்! அப்பேர்ப்பட்ட அறையை வாங்கிச்கிட்டு அசையாமெ நிக்கணும், அழக்கூடாது. அலறக்கூடாது. இது ஜப்பான்காரன் சட்டம். மீறினால்…தொலைஞ்சோம். என் கூட்டாளி ஒருத்தன் செத்தே போயிட்டான் அய்யா, அறை தாங்க முடியாமல்!”

ஜப்பான்காரனின் ‘அறை மகிமை’யை அதற்கு மேல் நீட்ட விடாமல் இடைமறித்தேன்; ‘அப்போ துணிக்குப் பதிலாக நீங்களும் சாக்கைத்தான் உடுத்தினீர்களா?

‘இல்லைங்க’ என்றார்.

“எப்போதாவது ஜப்பான்காரனிடம் அறை வாங்கினீர்களா?”

‘அதுவுமில்லைங்க’ என்று மறுத்த அவர் தொடர்ந்து சொன்னார்: ‘நான் வேலை செய்கிற படகிலே அப்போது கப்பல்களிலிருந்து துணி ‘பேல்’களை இறக்கிக் கரைக்கு இழுத்து வருவோம். அந்தச்சமயம் எனக்கு வேணும்கிற துணிமணிகளை அதிலேயிருந்து எடுத்துக் கொள்வேன், அதனாலே எனக்கு மட்டும் துணிக் கஷ்டம் ஏற்பட்டதில்லை!’

‘நீங்க அப்படி எடுத்தது ஜப்பான்காரனுக்குத் தெரிஞ்சாத் தொலைச்சிருப்பானே?’ என்றேன்.

‘எங்களுக்கு மேலதிகாரியாயிருந்த ஜப்பான்காரன் எனக்கு ரொம்பச் சிநேகம். நான் என்ன செய்தாலும் எதைத் திருடினாலும் சிரிச்சுக்கிட்டே போயிடுவான்’ என்றார் பெருமையோடு!

‘ம்…நாட்டிலே மற்றவர்கள் எல்லாரும் கட்டத் துணியில்லாமல் கஷ்டப்பட்டபோது நீங்கள்மட்டும்..’ என்று நான் கேட்டு முடிப்பதற்குள் அவர் முந்திக் கொண்டு பதில் கூறினார். ‘என்னுடைய நல்லநேரம், நான் மட்டும் துணிக்குக் கஷ்டப்படவில்லை!’

************

உத்தியோகத்திலிருந்து-மன்னிக்கவும். ‘அடிக்கடி உத்தியோகம் என்பார். அதை அலுவல் என்றுரைத்திடு தம்பி’ என்கிறார் பாரதிதாசன். ஆகவே, ‘அலுவலிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரிடம் அடுத்து கதை கேட்டேன். அவர் சொல்கிறார்:

‘ஜப்பான் காலத்துக் கஷ்டங்களில் ‘தலைசிறந்த’ கஷ்டம் சாப்பாட்டுக்குப்பட்ட கஷ்டம்தான். கோதுமையோ அரிசியோ கிடைப்பது குதிரைக் கொம்பு தான். நவதானியங்களையோ, புளி, மிளகாய், எண்ணெய் முதலிய சாமான்களையோ கண்ணால் காணவும் முடியாது. ரொட்டிகள், பழங்கள் எல்லாம் சொப்பனத்தில் கூடத் தென்படமாட்டா. அப்புறம் ஜனங்கள் எதைச் சாப்பிடுவார்கள்? என்ன செய்வார்கள்?

“மரவள்ளிக் கிழங்குதான் கிடைக்கும். பசி தாங்காமல் அதை அவித்துத் தின்றவர்களுக்குக் கால், கையெல்லாம் வீங்கி விறைத்துப்போகும். அந்த வீக்கம் அப்போது ஒரு வியாதியாகவே பரவிவிட்டது. எங்கே பார்த்தாலும் கால், கை வீங்கிய மனி தர்கள் சுருண்டு விழுந்து கிடப்பார்கள். ஒரு மாதிரியான துர் நாற்றம் வேறு மூக்கைத் துளைக்கும்.

“இந்த வியாதியாலும், பசியாலும், பட்டினியாலும் அலைந்து திரிந்து தவித்துத் துடித்துச் செத்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்……”

கொடும் பசியின் கோரக் கதையை இதற்குமேல் செவி மடுக்க எனக்குப் பொறுமையில்லை. மனம் உரு கியது. ‘அத்தகைய பயங்கரப் பஞ்சத்தில் நீங்கள் தப்பிப் பிழைத்தது கடவுள் செயல்தான். இல்லையா?’ என்று உண்மையான பரிவுடன் கேட்டேன். அதற்கு அவர் கூறிய மறுமொழி என்னைத் தூக்கி வாரிப் போட்டது!

“என்னுடைய குடும்பத்தை மாத்திரம் அப்போது பஞ்சம் நெருங்கவில்லை. பசியின் நிழலோ, பட்டினியின் சாயலோ படவில்லை.”

“அப்படியா? ஜப்பான் காலத்தில் நீங்கள் ‘மாத்திரம்’ சகல வசதிகளுடனும் வாழ்ந்தீர்களா?” என்று வியப்புடன் கேட்டேன், என் கேள்வியில் ‘மாத்திரம்’ என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தேன். ‘ஆமாம்’ என்று பதிலுக்கு அவரும் அழுத்தமாகவே சொல்லிக் கதையை மேலும் தொடர்ந்தார்:

‘அந்தச் சமயத்திலே நான் ஸ்டோர் கீப்பரா’க வேலை பார்த்தேன். என்னுடைய ஸ்டோரில்தான் உணவுப் பொருள்கள் எல்லாம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அரிசி என்ன, பருப்பு என்ன, தானிய வகையறாக்களென்ன, ரொட்டிகளென்ன, டின்னில் அடைத்த இறைச்சிகளென்ன, பழங்கள் என்ன, இன்னும் என்னென்னவோ எல்லாம் இருக்கும்.

“எனக்கு மேலதிகாரியான ஜப்பானிய ஆபீசருக்கு என்மீது அபார நம்பிக்கை. ரொம்பப் பிரியம். ஆகவே, ஸ்டோரிலிருக்கும் எந்தப் பொருள் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி அனுமதி அளித்திருந்தார்.

‘நான் எடுத்துக் கொள்வது போதாதென்று சில சமயங்களில் அவராக எவ்வளவோ தருவதும் உண்டு. ஒரு சமயம் பாருங்கள்; என் ஐந்து வயது மகன் அந்த ஜப்பான்கார ஆபீசருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆபீசர் கொஞ்சம் அரிசியை அள்ளி என் மகனுடைய சட்டைப் பையிலே போட்டார். இவன் மற்றொரு பையைக் காட்டி அதிலும் அரிசி போடச் சொன்னான். ‘ஏண்டா பயலே, வீட்டில் அரிசி கிடையாதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டார் ஆபீசர், ‘இல்லை’ எள்றான் பயல். அதைக் கேட்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. உடனே ஒரு லாரியில் முப்பதுமூட்டை அரிசியை ஏற்றி என் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பையன் கன்னத்தைத் தட்டிக்கொண்டே ‘போதுமா பயலே?’ என்றார்!

‘என் வீட்டில் அப்போது மூட்டை மூட்டையாக அரிசி குவிந்து கிடக்கும். எத்தனையோ வீடுகளுக்கு நான் அரிசி வழங்கியுமிருக்கிறேன்!’ என்று கதைத்து முடித்தார்.

‘நாடு முழுவதும் கடும் பஞ்சம். கொடிய வறட்சி. பசி பட்டினி. ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும் வளமாக வாழ்ந்திருக்கிறீர்கள், இல்லையா?’ என்று பொடி வைத்தே கேட்டேன் நானும்.

பொடி வைக்காமல் பதில் அளித்தார் அவர். ‘என்னுடைய நல்ல நேரம்தான் அதற்குக் காரணம்!’

***************

நான் கதை கேட்ட மூன்றாம் மனிதர் ஒரு காரோட்டி.

பலசரக்குக்கடை முதலாளியாயிருந்த இவர் காரோட்டியாக மாறியதே ஜப்பானியரால் தானாம்.

ஜப்பானியச் சிப்பாய்கள் ஒருநாள் திடு திடு’ வென்று ஊருக்குள் பிரவேசித்தார்களாம். அவர்களில் சிலபேர் இவருடைய பலசரக்குக் கடைக்கு முன்னால் வந்து நின்று கொண்டு இவரை வெளியில் வரும்படி கை அசைத்துக் கூப்பிட்டார்களாம். என்ன செய்யப் போகிறார்களோ என்று பயந்த இவர் சற்றுத் தயங்கவே, ஜப்பானியச் சிப்பாய்கள் துப்பாக்கிச் சனியனை இவருடைய மார்புக்கு நேராகப் பிடித்துக்கொண்டு ‘நட’ என்றார்களாம். சாவி கொடுத்த பொம்மை மாதிரி இவரும் நடந்தாராம். சாலை ஓரம் நின்ற ஒரு காருக்குள் அந்த ஜப்பான் சிப்பாய்கள் ஏறி அமர்ந்து கொண்டு இவரை நோக்கிக் ‘காரை ஓட்டு’ என்று சைகை காட்டினார்களாம்.

கார் ஓடும் என்பதைத் தவிர அது எப்படி ஓடும். எப்படி ஓட்டுவது என்பதெல்லாம் கடுகளவும் தெரியாதவர் இவர்! அதோடு, இவரை ‘ஜன்ம விரோதி’ யாகப் பாவிக்கும் எதிர்த்த கடைக்காரருடையதாம் அந்தக் கார்! அதை ஓட்டும்படி துப்பாக்கி முனையில் ஜப்பான் காரன் உத்தரவு!

ஆசாமியின் நிலைமை எவ்வளவு பயங்கரமாகவும் பரிதாபகரமாகவுமிருந்திருக்கும்?

மேல் மூச்சு கீழ்மூச்சு இழுக்க, வியர்வை ஆறாய்ப் பெருக, கண்கள் இருள, கைகால்கள் வெடவெட வென்று நடுங்க…… ‘கடவுளே’ என்று கதறியபடி ஏறினாராம் காருக்குள்!

‘எதை இழுத்தேனோ, எதைத் திருகினேனோ, எதை மிதித்தேனோ, எதைத் திறந்தேனோ, என்ன தான் செய்தேனோ…எனக்கு எதுவும் தெரியாது! ஆனால் அந்தக் கார் ஒரு துள்ளுத் துள்ளி ஒரு குதி குதித்துக் குமுறி இரண்டு மூன்று தரம் பாய்ந்து, எகிறி ஏழெட்டு முறை தாவி, குலுங்கு குலுங்கென்று குலுங்கிப் பிறகு நின்று அப்புறம் கிளம்பியதுதான்-ஒரே ஓட்டமாக அது எப்படியோ எங்கெங்கோ ஓடியது…” என்று தன் அனுபவத்தை விவரித்தார் முன்னாள் பல சரக்குக் கடை முதலாளியும் இந்நாள் காரோட்டியுமான அவர்.

‘எவ்வளவு முட்டாள் தனமான கொடுங்கோலர்கள் அந்த ஜப்பான்காரர்கள். சே!’ என்றேன் அனுதாபம் தொனித்த குரலில்.

மற்றவர்களுக்கு ஜப்பான்காரர்கள் கொடுங்கோலர்கள் தாம், சித்திரவதைக்குத் சிறிதும் அஞ்சாதவர்கள் தாம். ஆனால், எனக்கு அவர்கள் எவ்வளவோ நல்லவர்கள்’ என்று கடைசியில் ஒரு ‘ஜப்பான் குண்டையே’ தூக்கிப் போட்டார் காரோட்டி.

துள்ளி நிமிர்ந்தேன், ‘எப்படி அது?’ என்று கேட்டுக்கொண்டு.

‘அன்றைக்கு என்னைப் பயமுறுத்திக் காரோட்ட வைத்த அந்தச் சிப்பாய்கள் அவர்களுடைய மேலதிகாரிகளிடம் என்னைக் கூட்டிப் போய் நிற்கவைத்து அவர்கள் மொழியில் என்னைப் பற்றி ஏதோ சொன்னார்கள். பிறகு அவர்களாகச் சிரித்துக்கொண்டார்கள். அன்று முதல் அவர்களுக்குக் காரோட்டியாக என்னை அமர்த்திவிட்டார்கள். ஜப்பான்காரர்களிடம் வேலை செய்தவர்களுக்கு அப்போது ஒரு குறையுமில்லை. துணிப் பஞ்சம் ஏது? சோற்றுப் பஞ்சம் ஏது? இதெல்லாம் மற்றவர்களுக்குத்தான், சொல்லப்போனால் அந்த ஜப்பான் காலத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவன் நான்’ என்று கதையை முடித்தார் காரோட்டி.

சொல்லொண்ணாக் கொடுந்துயரில் மக்களெல்லாம் துவண்டபோது இவர் வாழ்ந்தது வெறும் போகமில்லை-ராஜபோகம்! எப்படியிருக்கிறது கதை!

***************

ஒரு பானைச் சோற்றுக்கு மூன்று சோறு பதம் பார்த்தால் போராதா?

நான் கதை கேட்ட நபர்கள் அனைவருமே இப்படித்தான் சொல்கிறார்கள்-‘நான் மட்டும் கஷ்டப் படவில்லை’ என்று!

ஜப்பான் காலத்திலே குடிக்க நீரின்றித் தவித்தவர்கள், உண்ணச் சோறின்றிச் செத்தவர்கள், உடுத்தத் துணியின்றி அலைந்தவர்கள் யார் யாரென்றால் நம்மிடம் கதை சொல்கிறவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாருமாம்!

ஜப்பான்காரர்களின் கொடுமைக்கு இலக்கானவர்கள், படுகொலைக்குப் பலியானவர்கள், அடி உதைக்கு ஆளானவர்கள் யார் யாரென்றால் நமக்கு அந்தக் காலத்துக் கதை சொல்லும் ஆசாமிகளைத் தவிர மற்றவர்கள் தாமாம்.

ஆயிரம் பேரை விசாரித்துப் பார்த்தாலும் சரி தான். மற்றவர்கள் எல்லாரும் படாத பாடுபட்டார்கள். நான் மட்டும் சுகமாக இருந்தேன்’ என்று தான் ஆயிரம் பேரும் சொல்கிறார்கள்!

மனிதர்களின் சுய கௌரவம் எப்படியெல்லாம் விசித்திரமாகப் புளுக வைக்கிறது பாருங்கள்!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.


எனக்கு மட்டும்

ஆசிரியர் JK


ஆமாம். உணவுப்பஞ்சமும், ‘எனக்கு மட்டும்’ பாதகம் இல்லை என்ற அனுபவமும் எனக்கும் ஏற்பட்டது.

எழுபதுகளின் பிற்பகுதி.

கேரளம் அன்றும் இன்றும் உணவு தன்னிறைவு இல்லாத மாநிலம். உணவு பிற மாநிலங்களில் இருந்து வந்தால் தான் பற்றாக்குறை சரியாகும். அவ்வாறு இருக்கும்போது இந்தியா முழுதும் அரிசி உற்பத்தி குறைவு ஏற்பட்டது. ஆகவே மாநில அரசுகள் அந்த மாநிலங்களில் உற்பத்தியாகும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்தன. இது கேரளத்தில் ஏற்பட்ட அரிசிப் பஞ்சத்திற்கு முதல் காரணம்.

FCI மட்டுமே உணவுப் பண்டங்களின் கொள்முதல், விநியோகம், மொத்த விற்பனை என்பவற்றில் ஏக உரிமை பெற்றதாக இருந்தது.. அப்போது கேரளத்தில் ரேஷன் முறை இருந்தது. FCI இடம் இருந்து ரேஷன் கடைக்காரர்கள் மொத்தமாக வாங்கி கடையில் பதிந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள். வேறு வெளிச்சந்தையில் அரிசி விற்பனை இல்லை. இது தட்டுப்பாட்டிற்கு இரண்டாவது காரணம்.

எனக்கு திருமணம் ஆகி இருவரும் தனிக்குடித்தனம் தொடங்கிய புதிது. வசிப்பிட சான்று (ஆபீஸ் கடிதம்), திருமண அழைப்பிதழ், மற்றும் வார்டு கவுன்சிலர் பரிந்துரை போன்றவற்றை சமர்ப்பித்து ஒரு ரேஷன் கார்டு வாங்கிவிட்டேன். ஆனால் ரேஷன் அரிசி, தமிழ் நாட்டில் இருந்து சென்ற எனக்கு வாயில் வைக்க முடியாததாக இருந்தது. பசை பச்சரிசி என்று சொல்லப்படும் பர்மா பச்சரிசி பிடிக்கவில்லை.

இப்போதுதான் இந்த ‘எனக்கு மட்டும்’ உதவி செய்தது.. அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு கேரள சிவப்பு அரிசி சோறு, சாம்பார், அவியல், பொரியல், தயிர், ஊறுகாய் என்ற தாலி மீல்ஸ் மதிய உணவாக கிடைக்கும். அது ஒரு பெரிய உதவி.

திருவனந்தபுரத்தில் வெள்ளாள பிள்ளைமார் பலர் உண்டு. இவர்களில் பலருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் வயல்கள் இருந்தன. அவற்றில் விளையும் நெல்லை/அரிசியை சொந்த உபயோகத்திற்காக திருவனந்தபுரம் கொண்டு வர அவர்களுக்கு அனுமதி உண்டு. அப்படி அவர்கள் கொண்டு வருவதில் தேவை போக மீதியை அறிந்தவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் விற்பனை செய்வது உண்டு. அவர்களிடம் இருந்து கோட்டார் சம்பா எனப்படும் சிவப்பரிசி விலைக்கு கிடைக்கும். நானும் அவர்களிடம் வாங்கிக் கொள்வேன்.

அப்படியாக கேரளம் அரிசிப் பஞ்சத்தில் தவித்தாலும் ‘எனக்கு மட்டும்’’ ஒரு பாதகமும் இல்லாமல் இருந்தது. யார் கஷ்டப்பட்டாலும் ‘நான் மட்டும் கஷ்டப் படவில்லை’

26 கருத்துகள்:

  1. திருச்சி நவீன்குமாரும், நகைச்சுவை நடிகர் பாலாவும் பிரமிக்க வைத்த மாமனிதர்கள்.

    இப்படி நடிகர்கள் முதல்வராக வரலாம் ஆனால் கூமுட்டை சமூகம் எள்ளி நகைக்கும்.

    இத்தனை கோடி வைத்துள்ள ரஜினியின் பணம், பாலா கைக்கு போனால் ?

    ஆஹா.... நல்ல மனசு யாரிடம் இருக்கிறது என்பதை கணிக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  2. நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்கள் சாதாரண செய்திதாளை படித்து இவ்வளவு முயற்சியில் இறங்கியது பாராட்டுக்குரியது.

    திரு, ஸ்ரீதர் வேம்பு அவர்கள் போற்றும்படியான மனிதர்.
    இவர்தானே கொரோனா காரணத்தால் இங்கு கொண்டு வந்தது ?

    பதிலளிநீக்கு
  3. நான் படித்த கதை வித்யாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.

    சிலருக்கு அவர்களின் மேலதிகாரிகளால் உணவுக்கு ஒரு குறையும் இல்லாமல் இருந்தது விதிப் பயன்தான். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. அலுவலகங்களில், குறிப்பாக தொழிற்சாலைகளில் சலுகை விலையில் உணவு வழங்கப்படுவது சகஜம்.

    நானும் மேட்டூர் கெம்ப்ளாஸ்டின் ருசியான மூன்று வேளைக்குமான உணவைப் பல மாதங்கள் ருசித்திருக்கிறேன்.

    பஹ்ரைனில் இருக்கும்போது, மட்டா அரிசி சாப்பிட்டார் எடை கூடாது என ஒரு முறை அதை முயற்சித்தேன். அது என்ற்குப் பிடிக்கவில்லை. பாஸ்மதி அரிசி நெடுங்காலம், பிறகு சில நாட்கள் மட்டா பிறகு சோனா மசூரி என்று மாறிவிட்டேன். கடைசி சில வருடங்கள் கோலம் அரிசி. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நடிகர் பாலா வித்தியாசமானவர். கடவுள் நம்பிக்கையுடன், இந்தச் சமூக சேவையை முன்பு படித்தபின் அவர் மீதான பிரமிப்பு அதிகமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீதர்வேம்பு மற்றும் நவீன், நகைச்சுவை நடிகர் பாலா மூவரும் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்கள்! இவங்க சத்தமில்லாம உருப்படியா நல்லது செய்யறாங்க. இப்படி நிறையப் பேர் இருக்காங்க என்பதும் தெரிகிறது. பிரமிக்க வைக்கும் மனிதர்கள்

    முதல் செய்தி ஏற்கனவே பார்த்ததோ? என்றாலும் நல்லதை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீதர் வேம்பு பற்றி முன்னரே அறிந்த நினைவு. 2,3 வருடங்கள் இருக்கும். அது போல பாலா பற்றியும். பாலா எளிமையாக இருந்து கொண்டு நல்லது நிறைய செய்கிறார். அவருக்கு இன்னும் நிறைய செய்யும் ஆசை இருப்பதாகவும் அறிந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் படிச்ச கதை - புதிய ஆசிரியர் . அனுபவக் கதை விவரணம் போன்றது. இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. இக்கதையில் வருவது போன்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கேட்கிறேன்.

    எழுத்தாளரின் நையாண்டியை ரசித்தேன். அதேதான் எனக்கும் தோன்றும்.

    இப்படிச் சொல்வதும் அது போல எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று சொல்வதும் இரண்டுமே தவிர்க்க வேண்டியவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. J K எனும் எழுத்தாளரின் அனுபவம் போன்று எங்கள் வீட்டிலும் உண்டு. ஒரு காலத்தில் கேரளப் பேருந்துகளில் அல்லது கேரளத்துக்குச் செல்லும் பேருந்துகளில் அரிசி கொண்டு செல்ல முடியாது. கோயம்புத்தூரிலிருந்து/பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கும் ஒரு 5, 6 வருடங்கள் முன்பு கூட....அரிசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதை நான் பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் பேருந்தில் ஏறிய போது அறிந்தது.

    ஜெ கே அண்ணா சொல்லும் வருடங்களில் என் மாமா திருவனந்தபுரத்தில். (அங்குதான் அவர் ஆரம்பக்கால வேலை முதல்) அப்போது அவர்கள் வீட்டிற்குப் போறப்ப எல்லாம் அரிசி ஒரு வாசனையுடன் சரியா வேகாமல் இருக்கும். ரொம்பத் தட்டுப்பாடு. மாமா ஊருக்கு வார இறுதியில் வந்துவிடுவார். அவர் குழந்தைகள் நாங்கள் இன்னொரு மாமா குடும்பம் எல்லோரும் பாட்டியின் கீழ் ஊரில். அப்போது மாமா செல்லும் போதும் கூட இங்கிருந்து அரிசி எடுத்துச் செல்ல மாட்டார். செக்போஸ்டில் பிடித்துவிட்டால் என்று...

    இப்போது எப்படி என்று தெரியவில்லை.

    ஆனால் கேரளத்துக்குப் பொருட்கள் எல்லாமே மற்ற மாநிலங்களில் இருந்துதான் போகின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து. அப்படி நம்மூர் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் சொல்லும் குற்றங்கள் நம்மை...விருத்திகெட்டவர்கள், பொருட்கள் எல்லாம் கலப்படம்....ரசாயனம் கலந்த பொருட்கள் என்று...தமிழ்நாட்டின் பல வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டே....என் காதுபடவே கேட்டிருக்கிறேன். எனக்கு வருத்தமாக இருக்கும்..ஆனால் பக்குவமற்றவங்கன்னு கடந்து விடுவேன். தானம் கொடுக்கும் மாட்டின் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது என்பார்களே அது போல

    அவர்களுக்கோ நிறைய நல்ல நிலங்கள் இருக்கு. பலர் வீடுகளிலும் நிலத்தோடுதான் வீடு இருக்கும் அந்த நிலங்களில் காய்கறிகளை வளர்க்க வேண்டியதுதானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. 3+1 = நான்காக ஜமாய்த்து விட்டீர்கள்.

    நான்கிலும் 'எனக்கு மட்டும் தான்' பிரதாபம் இருந்தாலும் வேறொரு ஒற்றுமையைக் கவனித்தீர்களா?

    அந்த நான்கு 'எனக்கு மட்டும் தான்' பேர்வழிகளும் தங்களுக்கு மட்டும் என்ற அந்தஸ்த்தைத் தந்த அருளார்களை மரியாதையுடன் கருணை பொங்க நினைத்துப் பார்க்கிறார்கள்.

    பல நேரங்களில் இந்த எனக்கு மட்டும் தான் தன் சாமர்த்தியத்தால் விளைந்ததாகச் சொல்வது தான் உலக இயல்பாக இருக்க இந்த நால்வர் மட்டும் அந்த சொந்தப் பெருமையிலிருந்து விலகியிருந்தது பாராட்டுக்குக்குரியது.

    அதில் ஒருவரான நீங்களும் தங்களுக்குத் தாங்களே ஒரு 'ஷொட்டு' கொடுத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த நான்கு 'எனக்கு மட்டும் தான்' பேர்வழிகளும் தங்களுக்கு மட்டும் என்ற அந்தஸ்த்தைத் தந்த அருளார்களை மரியாதையுடன் கருணை பொங்க நினைத்துப் பார்க்கிறார்கள்.//

      உலகத்தோடு ஓட்ட ஒழுகல் இதுதான். நன்றி அய்யா.

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. சிங்கப்பூரில் இருந்த காலத்தில் ஜப்பானியர் அடக்குமுறை பற்றிய சம்பவங்களைக் கேட்டதுண்டு..

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. முதல் செய்தியை ஏற்கனவே படித்திருந்தும், இப்போதும் படிப்பதும் மனமகிழ்வை தருகிறது. நல்ல மனம் கொண்டவர்கள் வாழ்க என வாழ்த்துவோம்.

    திருச்சி நவீன் குமாரும், நடிகர் பாலா அவர்களும் செய்யும் நல்ல செயல்கள் மகத்தானது. அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவ்விதம் இளகிய மனம் கொண்டவர்கள் எப்போதும் நன்றாக இருப்பார்கள்.

    திரு. ஸ்ரீதர் வேம்பு எனும் எளிய மனிதரும் பிரமிக்க வைக்கிறார். அவரின் எளிமையோடு அவர் செய்யும் பலனுள்ள செயல்கள் பிரமிப்பை தருகின்றன. அவர் நல்ல மனிதருக்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணம். அவருக்கும் பாராட்டுக்கள். தங்களது இன்றைய அத்தனை நல்ல பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜெயகுமார் சந்திரசேகரன் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு அருமை. மூன்று கதைகளும் வித்தியாசமாக இருந்தது. அறியாத எழுத்தாளரைப்பற்றி அறிந்து கொண்டேன். அவர் கேட்டறிந்த கதைகள் என வந்த மூன்றும் நன்றாக உள்ளன.

    உலகம் தோன்றியதிலிருந்து மனிதருக்குள் "எனக்கு" என்ற எண்ணம் இருப்பதும், இருந்து வருவதும் சகஜந்தானே....! இதிலிருந்து தான் "தனக்குப் போக தானம்" என்ற பழமொழி கூட பிறந்தது என்னவோ..!

    ஆயினும் இரண்டாவது கதையில் வருபவர் தன் வீட்டில் மூட்டை மூட்டையாக குவிந்திருக்கும் அரிசியை தனக்கு தெரிந்த வீடுகளுக்கு பசியாற தந்திருக்கிறார். இவ்விதம் தரும் மனதையும் இறைவன் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பொதித்துத்தான் அனுப்பியிருக்கிறார். ஆக மனிதருக்குள் வரும் நல்ல சிந்தனைகளும் அவனை உயர்த்த காரணங்கள் ஆகின்றன.அந்த நல்ல சிந்தனைகளுக்கும் இறைவன்தான் காரணமாகிறார்.

    தங்களது அப்போதைய அரிசி பற்றாக்குறை நிலைமையையும் படித்து உணர்ந்தேன். இறைவன் அருளால் எந்த பிரச்சனைக்கும் காலம் தாழ்த்தியாவது ஒரு தீர்வு கிடைத்து விடுகிறது. இடைப்பட்ட அந்த காலங்கள் நம் பூர்வ ஜென்ம விதிப்பயன்கள். அப்போது சகிக்கும் பொறுமையும் அவன் அருள வேண்டும்.

    கதையின் சுட்டிக்கும் சென்று படிக்கிறேன். இன்றைய அருமையான கதைப்பகிர்வை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  19. இரக்கம் கொண்ட உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. இன்றைய செய்திகள் எல்லாம் நல்ல செய்திகள்.
    மனித நேயம் மிக்க மனிதர்கள்.நவீன்குமாருக்கும், பாலாவுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. கதை நன்றாக இருந்தது. கதை சொன்னவர்கள் எல்லாம் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
    கதை நன்றாக இருக்கிறது.

    //அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு கேரள சிவப்பு அரிசி சோறு, சாம்பார், அவியல், பொரியல், தயிர், ஊறுகாய் என்ற தாலி மீல்ஸ் மதிய உணவாக கிடைக்கும். அது ஒரு பெரிய உதவி.//

    ஆமாம், பெரிய உதவிதான். ஒரு ரூபாய்க்கு இந்த உணவு வியப்பாக இருக்கிறது. காலம் எவ்வளவு மாரி இருக்கிறது, இந்தக்காலத்தில் ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்!


    //கேரளம் அரிசிப் பஞ்சத்தில் தவித்தாலும் ‘எனக்கு மட்டும்’’ ஒரு பாதகமும் இல்லாமல் இருந்தது. யார் கஷ்டப்பட்டாலும் ‘நான் மட்டும் கஷ்டப் படவில்லை’//
    உதவும் மனம் படைத்தவர்கள் இருந்தது தெரிகிறது.

    உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூறியிருப்பது 1977-78 காலம். அன்றைய 1 ரூபாய் இன்று 40 ருபாய்க்கு சமம். கருத்து கூறியமைக்கு நன்றி.

      நீக்கு
  23. கதை நன்றாக இருக்கிறது.
    மனித நேயங்கள் வாழட்டும்.

    அரிசி தட்டுப்பாடு எங்கள் நாட்டிலும் பல வருடங்கள் முன்பும் இருந்தது. பின் சண்டைக் காலத்திலும் இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!