வியாழன், 10 ஆகஸ்ட், 2023

மயிலையிலே கபாலீஸ்வரா

 சமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது.  நாங்கள் சென்றது ஆடிப்பூரம் அன்று என்பதால் செம கூட்டம். 

ஏனோ என் மகன் எனக்கு சென்னை தெருக்கள் வழிகள் கொஞ்சமாவது பழக்கம் என்பதை நம்புவதில்லை.  மந்தைவெளி தாண்டி இடதுபுறம் திரும்பி மயிலைக்குள் நுழைந்து சித்திரக்குளம் கண்ணில் பட்டதுமே பிரதட்சணமாக அதன் அடுத்த பக்கத்தில் திரும்பச் சொன்னதைக் கேட்காமல் கூகுள் மேப்பை நம்பினான்.  அது அந்த வழியைத் தாண்டி ஒரு உடனே முடிந்து விடும் குட்டிச்சந்தில் திரும்பச் சொன்னதும் என் வழிக்கு வந்தான்.

ஆனால் கோவிலுக்கு வருபவர்களுக்கு கார் பார்க்கிங் என்று ஒரு நிரந்தர இடம் கிடையாது.  ஆங்காங்கே கடைகளுக்கு முன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.  நீண்ட நேரம் தயங்கி விட்டு நாங்களும் அதேபோல நிறுத்தி விட்டு சென்றோம்.  வந்து பார்க்கும்போதுதான் அது சகஜம், அதுதான் வழி என்று தெரிந்தது.


மயிலையில் புகழ்பெற்ற டப்பா செட்டி கடை!  என் தங்கை, என் மன்னி, என் பாஸ் எல்லோருக்கும் இங்கிருந்துதான் பிரசவ நடக்காய லேகியம் வாங்கி கொடுப்பார் அப்பா.


கபாலீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் இந்தக் கூட்ட நெரிசலிலும் மிக அருகே தரிசிக்க முடிந்தது ஒரு அதிருஷ்டம்.  உள்ளே குடிதண்ணீர் என்று எழுதி டம்ளர் வைத்து குழாய் அமைத்திருக்கிறார்கள்.  அதைக் குடிநீராக பயன்படுத்துவோர் மிகவும் குறைவு.  வாசலில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வந்து கைகழுவுமிடமாகவே அதை பாவிக்கின்றனர் பொறுப்பான பொதுஜனம்.



இந்தமுறை மயிலையில் நான் கண்டது நிறைய்ய யாசகர்கள்.    கோவில் உள்ளே மண்டபத்தில் அமர்ந்திருந்தவர் திடீரென வரிசையில் அமரவும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.  மதிய உணவு அன்னதானத்துக்கான டோக்கனாம்.  வந்திருந்த ஜனங்கள் டோக்கனைவிட அதிகமாக இருந்தனர்.  டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாந்து ஓரமாக நின்றனர். ஒரு நாளைக்கு இத்தனை பேர்களுக்குதான் அன்னதானம் என்று வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை.  சிலர் மடப்பள்ளியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கேயே ஒரு சிலர் சாப்பாடு வாங்கித்தரச் சொல்லி என்னிடம் கையேந்த, நான் அன்னதானக்  கூடத்தை கைகாட்டினேன்.  அவர்கள் சொல்லிதான் டோக்கன் தீர்ந்த விவரம் எனக்குத் தெரிந்தது.

வெளியில் வந்து மாடவீதியை நோக்கி நடக்கையில் ஓரமாக நின்றிருந்த, படித்தவர் போலிருந்த, ஒரு கௌரவமான பெண் - சுமார் 25 வயது மதிக்கத் தக்கவர் - எங்கள் அருகே நெருங்கி முந்தானையை மடிப்பிச்சை கேட்பது போல பிரித்து தான் அனாதை என்றும், ஆதரிக்க ஆள் இல்லை என்றும் திருமணத்துக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.  சற்றுத் தள்ளி நடந்ததும் ஒரு நடுத்தர வயது தம்பதி பசிக்கிறது என்றும் காசு கொடுங்கள் அல்லது சாப்பாடு வாங்கித் தாருங்கள் என்றார்.  போகப்போக சாப்பாடு வாங்கித்தாருங்கள் என்று நிறையபேர் எதிர்ப்படத் தொடங்கி விட்டனர்.

ஒருவர் இவர்களுக்காக ஹோட்டலில் (நித்ய அமிர்தம்) சாப்பாடு வாங்கித்தர சென்றார்.  ஆனால் அரைமணி நேரம் ஆகும் என்று ஹோட்டல்காரர்கள் சொன்னதாக திரும்பி விட்டார்.  இவரும் கூட வந்து தொடர்ந்து நச்சரிக்க, 'உங்களுக்காக நாங்கள் இங்கேயே அரைமணி காத்திருக்க முடியுமா?" என்று உதவ நினைத்தவர் கோபப்பட்டார்.  அப்போதுதான் நாங்கள் நித்ய அமிர்தத்திலிருந்து இறங்கி இருந்தோம்.  எனக்குத் தெரிந்து சாப்பாடு தயாராகவே இருந்தது.  ஏன் அப்படிக் சொன்னார்கள் என்று யோசித்தால், இந்த மாதிரி யாசகர்கள் எல்லாம் சாப்பாட்டு டோக்கன் வாங்கி அவர்களிடமே அதைத் திருப்பிக் கொடுத்து அதற்குரிய பணத்தையோ, குறைவாகவோ பெற்றுச் செல்வார்கள் என்றே தோன்றியது.  

இதோ இந்தப் பெண்ணும், 


அதோ உட்கார்ந்திருக்கிறாரே அந்தப் பெண்ணும் 


சேர்ந்துதான் பையோடு சுற்றி வருகிறார்கள்.  பையில் என்ன வைத்திருக்கிறார்களோ..  இரண்டு  பேர் 'சாப்பாடு வாங்கி கொடுத்த பின்னும்' இன்னும் தாண்டிச் செல்வோரிடமெல்லாம் சாப்பாடு வாங்கி கொடுக்கச் சொல்லி கேட்கிறார்கள்.  யாசகம் கேட்டு கைநீட்டினால் ஐந்தோ பத்தோ...   இப்படி வாங்கினால் நூற்றுக் கணக்கில்...  முறையை மாற்றிக் கொண்டு விட்டார்கள் போலும்!  உ இலாபம்!


அதோ உட்கார்ந்திருக்கிறாரே..  அவர் மீண்டும் மீண்டும் 'வேயுறு தோளிபங்கன்' என்னும் ஒரே வரியை மட்டும் சொல்லிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார்.  பாஸ் கல்யாணி கவரிங்கில் நுழைய, நான் வெளியே காத்திருந்த வேளையில் என்னைத் தாண்டியவர் என்னிடம் அந்த ஒரு வரியை சொல்லிக்கொண்டே கைநீட்டினார்.  நான் திரும்பிக் கொண்டதும் அந்த ஒரு வரியை உச்சரித்தபடியே தாண்டிச் சென்று அங்கு அமர்ந்து விட்டார்.  அடுத்த வரி இன்னும் உபதேசம் ஆகவில்லை போல...
==================================================================================================

கோராவில் கீழ்க்கண்ட கேள்வி பதில் வந்திருந்தது.  சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன்..

முருகனுக்கு முற்பட்டது தமிழ் மொழி. பிறகு எப்படி முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள்? முருகன் தமிழுக்கு செய்த சேவை என்ன? இல்லை முருகனும் தமிழும் ஒன்று என்றால், முருகனின் தாய் தந்தையர் பேசிய மொழி எது? வேதத்தைக் கொண்டு விளக்குக.

உண்மையை கூறினால் கோபிக்கக்கூடாது. முருகனை தமிழ்க்கடவுளாக கூறுவதற்கு காரணம் ஆயுத எழுத்து ஃ.

இந்த ஃ எழுத்தை கோலம் போடுவது போல் கோடு போட்டு சேர்த்தால் முருகனின் ஆயுதமான வேல் போல் தெரியும்.

இந்த ஃ எழுத்தை தமிழைத் தவிர வேறு எந்த தென்னிந்திய மொழியிலும் ஏன் எந்த ஒரு மொழியிலும் யான் கண்டதில்லை.  ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு ஆயுதம் இருக்கும். முருகனின் ஆயுதமாக ஏன் வேலை வைத்தார்கள்? இனி தான் பதிலே ஆரம்பமாகிறது.

யோகத்தில் மனித உடம்பில் ஏழு சக்கரங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அவை முறையே -

  1. மூலாதாரம் (Base of spine)
  2. சுவாதிட்டானம் (Procreation spot)
  3. மணிபூரகம் (Navel or தொப்புள்)
  4. அநாகதம் (Heart centre)
  5. விசுத்தி (Throat centre)
  6. ஆக்ஞை (Forehead or நெற்றிப்பொட்டு)
  7. சகஸ்ராரம் (Crown or உச்சிமண்டை )

சக்கரம் என்றால் நம் காரில் இருக்கும் tyre போல சுற்றும் பொருள் இல்லை. நம் உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன.  இந்த மூன்று நாடிகளும் பல்வேறு நாடிகளுடன் சேர்ந்து மேற்கூறிய இடங்களில் சங்கமிக்கின்றன.

மேலே உள்ள படத்தில் இரண்டு பாம்புகள் முடிச்சு போட்டது போல் இருப்பதை பார்த்தியிருப்பீர்கள். நாம் அதை பாம்பு என்று நினைக்கிறோம். ஆனால் அவற்றில் ஒன்று இடை நாடி, இன்னொன்று பிங்கலை நாடி.

மூன்று முடிச்சுகள் உள்ளன. கீழுருந்து முதல் முடிச்சு நம் தொப்புளில் உள்ள முதல் முடிச்சு. பிரம்ம முடிச்சு என்பார்கள். பிரம்மன் விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வந்தார் என்பது அங்கே படைப்பு நடப்பது, அதாவது கருஉருவாவது, எல்லாம் நடக்கும் எனர்ஜி centre. படைப்பின் சூட்சமம் இந்த சக்கரத்தில் குண்டலினி சக்தி நின்றால் புலப்படும்.

இங்குள்ள முடிச்சை அவிழ்த்து மேலே செல்ல, இதய சக்கரத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு தட்டுப்படும். இந்த சக்கரத்தில் குண்டலினி நின்றால் அன்பு பீறிட்டு வெளிப்படும். எல்லோரிடத்திலும் அன்பாய் இருப்பர்.

அடுத்த முடிச்சு தொண்டையில் உள்ள ருத்ர முடிச்சு. இந்த நிலையில் குண்டலினி நின்றால் விசேஷமான தெளிவு, விசுத்தி (special clarity) கிடைக்கும்.

இந்த சிலையை நீங்கள் உற்று நோக்கினால் முதல் முடிச்சில் தாமரையும் இரண்டாம் முடிச்சின்மேல் விஷ்ணுவும், மூன்றாம் முடிச்சின்மேல் லிங்கமும் இருக்கும்.

மூன்று முடிச்சும் அவிழ்ந்தபின் நெற்றிப்பொட்டில் உள்ள ஆறாவது சக்கரத்தில் முருகன். Pituitary gland, pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள். அவைகளை சேர்த்தால் வேல் போல இருக்கும். இங்கே குண்டலினி நின்றால் ஞானசுடர் ஒளிரும். இந்த நிலை அடைந்தவர் முகத்தில் ஒரு ஒளி இருப்பதுபோல் தோன்றும். இதையே தேஜஸ்-ah இருக்கிறார் என்று கூறுவோம்.

குண்டலினி மூலாதாரத்தில் ஓஜஸ் எனவும் ஆறாம் சக்கரத்தில் சேர்ந்தால் தேஜஸ் எனவும் கூறுகிறோம். ஆறாம் சக்கரத்தில் புலப்பட்டதால் முருகன் ஆறுமுகன் எனப்படுகிறார்.

இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாக உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள்.

ஞானபண்டிதன் என்று முருகனை கூறுவதும், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று கூறுவதும் - ஞானம் ஆறாம் சக்கரத்தில் புலப்படுவதால்.

மிகப்பெரிய யோக விஞ்ஞானத்தை அதாவது ஒரு abstract ஆன விஷயத்தை மக்களுக்கு எளிமையாக உருவம் உருவகம் கொண்டு புரியவைக்க நம் முன்னோர்கள் செய்து வைத்த symbolism மற்றும் கதைகள்.

அதை மெய்ஞ்ஞான அறிவியலாக பார்த்தால் உண்மையான விடை கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு கடவுளுக்கு எதுக்கு ரெண்டு பொண்டாட்டி, யானை மூஞ்சி, சரஸ்வதி நாக்கில் உட்கார்ந்தால் பாத்ரூம் போக எங்கே போவாள் என்று அறிவுச்சுடர் ஒளிர்விடும் சிலரும், தமிழனின் முப்பாட்டன் முருகன் தான், மற்றைய கடவுள்களை ஒருக்காலமும் ஏற்கமாட்டோம் என்று கூறுவோரும் ஒரே ரகம் தான்.

நான் ஆன்மிகவாதி. நான் சொல்கிறேன் முருகன் தமிழ்க்கடவுளே இல்லை. In fact முருகன் கடவுளே இல்லை. முருகன் என்பது ஆன்மிகத்தில் ஒரு நிலை.

அதைப்போலவே ருத்ரனும், சக்தியும், விஷ்ணுவும், ஐயப்பனும்…. எல்லாமே நாம் யோகத்தில் அடையக்கூடிய வெவ்வேறு நிலைகள்.

அப்படி நான் சொல்வது பொய் என்றால்…. காடு மலை என்று பல கடந்து உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் கொண்டு மேலே போய் ஐயப்பனை தரிசித்தால் அங்கே "தத் த்வம் அசி" அதாவது "நீ தான் அது" அல்லது "நீயும் அதுவாகிறாய்" என்று ஏன் எழுதிவைத்திருக்கிறார்கள்?

Spirituality is always an act of becoming. ஆன்மிகத்தின் குறிக்கோள் நம்முள் இருக்கும் இறைநிலையை அடைவதே. சும்மா எந்தக்கடவுளை தரிசித்தால் எந்தக்கோவிலுக்கு சென்றால் எனக்கு car பங்களா பணம் புகழ் குழந்தை அது இது கிடைக்கும் என்று உலக விஷயங்களுக்காக அல்ல. ஒருவரின் கர்மாவிற்கேற்ப இவையெல்லாம் நடக்கும். கோவிலுக்கு செல்வதால் மட்டும் தான் வந்தது, விளக்கு போட்டேன், வேலை கிடைத்தது என்று சொல்வது அந்த இறைநிலையை அற்ப விஷயங்களுக்காக பயன்படுத்துவது போல.

சிவன் - Nothingness - ஏதுமற்ற நிலை - சவம்

சக்தி - Energy - எல்லாவிதமான எனெர்ஜியும் சக்தி

விநாயகன் - குண்டலினியின் பாதுகாவலன் - மூலாதார சக்கரத்தில் இருக்கும் முதல் இறைநிலை. சிவனும் சக்தியும், அதாவது ஒன்றும் இல்லாத சவத்தில் சக்தி குண்டலினியாக வந்ததும் உணரப்படும் முதல் கடவுள் or இறைநிலை

பிரம்மா - படைப்பு நடக்கும் கருவறையில் இருக்கும் இறைநிலை

விஷ்ணு - இருதய சக்கரத்தில் அன்பின் வடிவமாய் இருக்கும் இறைநிலை. அன்பு ஓங்கிநிற்பதால் தான் இதய சக்கரம் கனக்கிறது சோகமாக இருக்கும் பொழுது. ஆனந்தமாக இருக்கும் பொழுது இதயம் லேசாகிறது. அன்பும் பக்தியும் நிறைந்த நிலை. அந்த பக்தி எந்த மூர்த்தியாக வேண்டுமாக இருக்கலாம், அது இயேசுவாக அல்லது அல்லாஹ் வாக கூட இருக்கலாம். பக்தி என்பது ஒன்றுதான்.

முருகன் - ஞான நிலை

எலி - விநாயகனின் வாகனம், முடிச்சுகளை ஓட்டை போட்டு மேலே செல்ல.

இப்படி மெஞ்ஞான தேடல் கண்ணோட்டத்தில் பார்த்தால் உருவ வழிபாட்டின் சூட்சமம் புரியும்.

கடைசியில் microcosm macrocosm இரண்டும் ஒன்று தான் என்று நாமே அது என்று ஆகும் நிலை.

ஏதேனும் தவறு இருப்பின் என்னுள் இருந்து இயங்கும் இறைநிலை தண்டிக்கட்டும்


======================================================================================


ரசித்த படம் - இணையத்திலிருந்து 



============================================================================================


வெங்கட் சில மாதங்களுக்கு முன்னால் தன் பக்கத்தில் ஒரு படம் வெளியிட்டிருந்தார்.  அதை சேமித்து வைத்திருந்தேன்.  அதற்கு எழுதியது கீழே...  வேறு மாதிரி எழுதலாம் என்று வைத்திருந்தேன்.  எழுத எண்ணம் ஓடவில்லை.  அதையே வெளியிடுகிறேன் 



வெய்யில் காலத்திலும் 
வேனிற்காலம் போல இருந்தது 
உன்னோடு இருந்தபோது 

கசப்புகளை 
கடக்க முடிந்தது 
காதல் நினைவுகளால் 

கஷ்டங்களை ஏற்றுக்கொண்டோம் 
இருவராய் இருந்து 
இஷ்டத்துடன் 

தொடக்கம் முதலே 
பேசிப் புரிய வைக்க 
அவசியமில்லை 

நீ என்ன நினைப்பாய் என்று 
எனக்கும் 
நான் என்ன நினைப்பேன் என்று 
உனக்கும் தெரியும்.

மகன்கள் -
கடைசிக் காலம்...
கடவுளைக் காட்டுகிறேன் என்று 
அழைத்து வந்து 
காசிக்கருகில் கடாசி 
காணாமல் போனார்கள் 

நாம் தேவைப்பட்டபோது 
அவர்கள் அனைவரும் 
சுற்றி வந்தார்கள் 
அல்லாதபோது காணாமல் போனார்கள்.

எத்தனையோ இழப்புகளை 
தாண்டி வந்திருக்கிறேன்
உன் துணையோடு 
உன்னையே இழந்ததை 

யார் துணையுடன் கடப்பேன். 

================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினம், திருக்கண்ணபுரத்திலிருக்கும் மூத்த மகன் வீட்டிலிருந்து அம்பத்தூரில் வசிக்கும் இளைய மகன் வீட்டிற்கு செல்வதற்காக நாகையிலிருந்து ரயிலில் வந்த மல்லிகா என்பவர் அம்பத்தூர் செல்லும் புறநகர் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக புனே செல்லும் ரயிலில் ஏறி விட்டாராம். புனே சென்ற அவர் மொழி பிரச்சனையால் புனாவிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார். யாரோ இவரை ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். அங்கு அன்னதானம் செய்ய வந்த சில ஐ.டி. இளைஞர்கள் தமிழில் பேசுவதைப் கேட்டு அவர்களிடம் இவர் தன் பிரச்சனையைக் கூற, அந்த இளைஞர்களில் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, புனே போலீஸ் சென்னை போலீஸை தொடர்பு கொண்டு,தொலைந்து போன தாய் மீட்கப்பட்டு மகனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார் - தான் தவறான திசையில் பயணிக்கிறோம் என்ற சந்தேகமே இந்த பெண்ணுக்கு வரவில்லையா? ரயிலில் டி.டி.இ. என்று ஒருவர் வருவாரே? அவர் கண்ணில் இவர் படவில்லையா? என்ற சந்தேகங்களும் வருகின்றன, சிறுகதை எழுத செம மேட்டர்.

யானைகள் முகாமில் தாயைப் பிரிந்த இரண்டு யானைக் குட்டிகளை பராமரித்த பழங்குடி பாகன் தம்பதியருக்கும், அந்த யானைக் குட்டிகளுக்கும் இடையேயான பாச உறவையும் வைத்து 'தி எலிஃபெண்ட் விஸ்பர்ஸ்' என்னும் ஆவணப் படம் ஆஸ்கார் விருது வென்றது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தின் இயக்குனர் தங்களுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று புகார் கூறியிருக்கிறார்கள்.

மற்றொரு யானை செய்தி: கேரளாவின் சாலக்குடி-அதிரப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த கேரள மாநில பேருந்து ஒன்றை கபாலி என்னும் ஒரு யானை வழி மறித்தது. அந்த ஓட்டுனர் பதட்டமடையாமல் வண்டியை நிறுத்தி விட்டு, யானையிடம், "டேய் கபாலி, நான் உன் அண்ணன்டா, எங்களுக்கு போக வழி விடுடா" என்று நைச்சியமாக பேசினாராம். அதைக் கேட்டு அந்த யானை வழிவிட்டு ஒதுங்கி நின்றதாம். ஓட்டுனரின் இந்த சாதுர்யத்தை பயணிகள் பாராட்டியிருக்கிறார்கள்.

காதலியிடம் தான் ஒரு ரவுடி என்று கெத்து காண்பிக்க அப்பாவி இளைஞரைக் கொன்ற இளைஞன். கல்லூரியில் பி.யூ.சி. படிக்கும் ஆகாஷ் என்னும் இளைஞ ன் தன்னை ஒரு பெரிய ரவுடி என்று காதலியிடம் சொல்லியிருக்கிறான்(என்ன ஒரு பெருமை!) அதை காதலி நம்பவில்லை. தான் ஒரு கொலை செய்தால் அவள் தன்னை ரவுடி என்று நம்புவாள் என்று நினைத்த ஆகாஷ், அவனைப் போல் ரவுடியாகும் ஆசையில் சுற்றிக் கொண்டிருந்த இன்னும் நான்கு விடலைப் பையன்களை கூட்டு சேர்த்துக் கொண்டு, அப்பாவிடம் பொய் சொல்லி காரை வாங்கிக் கொண்டு, வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஹேமந்த் என்னும் அப்பாவி இளைஞரின் பைக் மீது வேண்டுமென்றே காரை மோதி, கீழே விழுந்த அவரை சரமாரியாக தாக்கி கொன்றதோடு நிற்காமல், உடனே காதலியை வீடியோ காலில் அழைத்து ஹேமந்தின் உடலை வேறு காட்டியிருக்கிறான். திரும்பத்திரும்ப சினிமாக்களில் ரவுடிகளையே கதாநாயகர்களாக காண்பிப்பது காரணமாக இருக்குமோ? 

இந்த செய்தியை மட்டும் படித்து விட்டு இந்தக்கால இளைஞர்கள் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட வேண்டாம். 
உ.பி.யிலிருந்து பெங்களூருக்கு வேலை தேடி வந்த அந்த இளைஞருக்கு ஸ்விக்கியில் டெலிவரி பாயாக வேலை கிடைத்தது. பேட்டரியில் இயங்கும் இரு சக்கர ஊர்தியில் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யும் இவர் ஒரு நாளைக்கு அறநூறு ரூபாய் சம்பாதிக்கிறாராம், அதில் இருநூறு ரூபாய் பேட்டரி வண்டிக்கு செலவானது போக மிச்சமிருப்பதில் தன் செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செலவு செய்து, ஊரில் இருக்கும் பெற்றோர்களுக்கும் பணம் அனுப்புகிறாராம். இதில் முக்கியமான விஷயம் அந்த இளைஞர் சிறு வயதிலேயே வலது கையை இழந்தவர். ஒரு கையோடு இத்தனை வேலை! இவ்வுலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.


=====================================================================================================================

115 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. வியாழன் ஶ்ரீராம் எழுத்து சிறப்பு. யாசகம் கேட்போரில் பலரும் ஏமாற்றுக்கார்ர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  யாரசகர்களில் பெரும்பாலும் எல்லோரும் செல்வர்களே!

      நீக்கு
  3. தமிழ்பாட்டன் முருகன் பகுதி தலை சுற்றல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் எதுவும் சுத்தலை. மிக அருமையாக எழுதி இருக்கார். ரசிச்சு இரண்டு, மூன்று முறை படிச்சேன். படிக்கும்போதே கந்த சஷ்டி கவசமும் அதிலுள்ள ஆன்மிகப்
      த் தேடலுடன் கூடிய பொருளும் நினைவில் வந்தன.

      நீக்கு
    2. இவ்வளவு விஸ்தாரமாயும், தெளிவாயும் இதை எழுதினவர் யார் என்றே சொல்லலையே ஸ்ரீராம்.

      நீக்கு
  4. டப்பாசெட்டி கடை விரைவில் மறையும் அல்லது ஓனர் மாறியிருப்பார். அந்த இடங்களெல்லாமே அபகரிக்கப்பட்ட இடங்கள் என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய டப்பா செட்டி கடைதான் இன்னமும் இருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கும்!

      நீக்கு
  5. கட்டுரையின் முதல் வரியே யோசயைக் கிளப்பி கேள்வியாய் கேட்டுத் தெளியச் சொன்னது.

    கோயிலுக்குக் கூட அதற்கான சந்தர்ப்பம் வந்தால் தான் செல்கிறோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு என்னைப்பொறுத்தவரை, என் கேஸில், ஆம்!

      நீக்கு
  6. படத்தில் காணும் அந்த ஒயிட் கார் தான் உங்களதா?

    எனக்குத் தெரிந்த டப்பா செட்டி நாட்டு மருந்துக் கடை பலசரக்குக் கடை மாதிரி ரொம்ப சின்னது ஆயிற்றே! கச்சேரி தெருவில் இன்னொரு ட.செ. கடை உள்ளதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, அது எங்கள் கார் இல்லை.  டப்பா செட்டிக்கு வேறு கிளைகளுண்டோ..

      நீக்கு
    2. //கச்சேரி தெருவில் இன்னொரு ட.செ. கடை உள்ளதோ?//எனக்குத் தெரிந்த டப்பாச் செட்டிக் கடையும் கச்சேரி ரோடில்தான் இருக்கிறது அல்லது இருந்தது.

      நீக்கு
    3. //கச்சேரி தெருவில் இன்னொரு ட.செ. கடை உள்ளதோ?// ஆமாம், எனக்குத் தெரிந்த டப்பாச் செட்டிக் கடையும் கச்சேரி ரோடில்தான் உள்ளது.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  8. பிச்சை ஒரு மாபியா கட்டுப்பாட்டில் வந்து விட்டது. புதிதாக யாராவது கோயில் போன்ற இடங்களில் பிச்சை எடுக்க வந்தால், அங்கு ஏற்கனவே உள்ளவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சாப்பாடு பொட்டலங்களை சுழற்சி செய்வதை நானும் பல கோயில் வாசல்களில் பார்த்திருக்கிறேன்.

    முரண்பட பேசுவது, மற்றும் எழுதுவது என்பது பிரபலமாக ஆவதற்கு ஒரு குறுக்கு வழியாக பலர் பயன்படுத்துகின்றனர். 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று ஜக்கி போன்றவர்கள் தொடங்கி வைத்த குறுக்கு வழி இது. இவர் முருகன், சிவன் விஷ்ணு ஆகியோர் கடவுளே இல்லை என்ற ஒரு புதுப் புரளியை கையில் எடுத்திருக்கிறார். அவ்வளவே. யார், பெயர் என்பதை குறிப்பிடவில்லையே ? சாதாரண மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போதும். ஆராய்ச்சி அவசியமில்லை.

    படத்திற்கும் கவிதைக்கும் பொருத்தம் இல்லை.
    //காசிக்கருகில் கடாசி //
    சரியில்லை. படம் காசியல்ல. இரண்டாவது
    //உன்னையே இழந்ததை
    யார் துணையுடன் கடப்பேன். //
    படத்தில் துணை மடியில் . இழப்பு எங்கிருந்து வந்தது?

    காத்திருப்போம்
    காத்திருப்போம்
    காலன் வரும்வரை
    காலன் வரும் வரை
    உறங்கிடம்மா நீ மடியில்
    தூங்கம்மா கவலை இன்றி.

    கோவில் பிச்சையே ஜோக் ஆனதால் இந்த வாரம் ஜோக் பொக்கிஷம் இல்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஃபியா என்றெல்லாம் இல்லை.  எல்லோரும் தனித்தனியாக செயல்படுகிறார்கள்.  அவரவர் ஏமாற்றுவது அவரவருக்கு!

      சிதம்பரம் கோவில் பற்றியும் இப்படி சில குறிப்புகள் கொடுப்பர்.

      கவிதையின் படம் காசியில் எடுக்கபப்ட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.  மண்டபம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!!  மடியில் இருப்பவர் உயிருடன் இல்லை என்ற பொருளில் எழுத முயற்சித்த கவிதை! காளான் வரும் வரை காப்போம் தூரத்தை முன்னரே வேறொரு கவிதை முயற்சியில் எழுதி இருந்தேன்.  தேடி, கிடைத்தால் பகிர்கிறேன்.

      நன்றி JKC சார்..

      நீக்கு
    2. படத்திற்கு ஏற்ற கவிதை என்பது வேறு. கவிதைக்கு படம் என்பது வேறு. நீங்கள் குறிப்பிட்டது படத்திற்கு ஏற்ற கவிதை. படத்தில் காசி இல்லாதபோது கவிதையில் காசி தேவை இல்லை.
      Jayakumar

      நீக்கு
    3. சரி, விடுங்க.. அபப்டியே வச்சுக்குவோம்!

      நீக்கு
    4. மகன்கள் -கடைசிக் காலம்...
      கடவுளைக் காட்டுகிறேன் என்று
      அழைத்து வந்து
      காசிக்கருகில் கடாசி
      காணாமல் போனார்கள் //

      ஜெயக்குமார் ஸார்..  காசி உங்களை நெருடுவதால் காசிக்கருகில் என்னும் வார்த்தையை மாற்றி கருணையில்லாமல் என்று போட்டுக்கொள்கிறேன்!

      மகன்கள் -
      கடைசிக் காலம்...
      கடவுளைக் காட்டுகிறேன் என்று
      அழைத்து வந்து
      கருணையில்லாமல் இங்கே கடாசி
      காணாமல் போனார்கள் 

      நீக்கு
  9. பொருப்பான ஜனம்.
    பொருப்பான கோயில் நிர்வாகம் என்றும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

    நான் ஒவ்வொரு தடவையும் பதிலளியைக் கிளிக்கி அடுத்த பின்னூட்டத்தைப் போடுவதில்லை.
    சமீப கால அனுபவங்களின் படி எனது சென்ற பின்னூட்டத்திற்கும் இந்த பின்னூட்டத்திற்கும் இடையே யாரும் நுழையாதிருக்க வேண்டும்.

    ஹி..ஹி.. எல்லாம் ஒரு தொடர்ச்சிக்காகத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து கண்ணியாய் பின்னூட்டமிட்டால் பதில் அளிப்பவர்களுக்கு சிரமம்!

      நீக்கு
  10. /// நான் ஆன்மிக வாதி. நான் சொல்கிறேன் முருகன் தமிழ்க் கடவுளே இல்லை.. ///

    இப்படிச் சொன்னவர் யாரென்று தெரியவில்லை..

    ஆனால்
    வெற்றுக் குடம் என்று புரிகின்றது..

    ஆன்மிகம் என்பது நிறைகுட நிலை..

    சளச் சள - என்று ததும்பாத நிலை!....

    பதிலளிநீக்கு
  11. இங்கு இரவு 9.30 இப்போது. பாக்கிக்கு நாளை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. கடமை அழைக்கிறது... மற்ற பதில்கள்... பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. /// காளான் வரும் வரை காப்போம் தூரத்தை முன்னரே..///

    !?...

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. உவமை உவமேயங்களால் கட்டமைக்கப்பட்டது நமது சமயம்..

    இதற்குள் ஆப்பிரிக்க அரேபிய ஐரோப்பிய வழிநடைகள் வருவது ஏன்?..

    பதிலளிநீக்கு
  16. முருகன் தமிழ்க்கடவுளா, இங்கிலீஷ் கடவுளா, ஒருவேளை இந்தி அல்லது உருதுக் கடவுளாக இருக்கக்கூடுமோ என்பதெல்லாம் இருக்கட்டும் ஒருபக்கம். ஆனால் அவன் ’அந்த ஆளோட’ முப்பாட்டன். இது க்ளியர்! அந்த ஆசாமியின் கணக்கில் சிவன் ஒரு வந்தேறி! விஷ்ணுவும், ப்ரம்மாவும், மற்ற சாமிகளும் வராத ஏறிகளாக இருக்கலாம். (கோராவில் கிடைக்காத விஷயங்கள்!)

    இப்படியாகத்தானே... பலப்பல மொழி, ஆன்மீக வித்தகர்கள், அறிஞர்கள், பேரறிஞர்கள் வாழ்ந்த நாடு, வாழும் நாடு, இந்த நாடு.

    பதிலளிநீக்கு
  17. நம்மோடு இருப்பவர்களால தான் முடியும் - அது அது அல்ல!.. இது அது அல்ல!..
    - என்றெல்லாம் சொல்லியும் எழுதியும் வயிறு வளர்ப்பதற்கு..

    நமது சமயநெறி நமக்கு விளங்குவதற்கு சுனா சீனாவே தேவையில்லை எனும் போது இந்த மாதிரி பினாத்துறதுக்கு வேறு வேறு முக மாற்றிகள் ( கிரிப்டோக்கள்) எதுக்கு?..

    பதிலளிநீக்கு
  18. என்னடா இது காலையிலேயே கலவரம்!.. என்று

    இன்றைய பதிவைப் படித்து விட்டு தவித்துக் கொண்டிருந்த போது

    தன்னை அறிய தனக்கொரு கேடில்லை - என்ற திருமந்திரம் மனதுக்குள் ஓங்கி ஒலித்தது..

    நமக்குள் ஞானத் தவிப்பு ஏற்படும் போது அதற்கான குரு அவராகவே வந்து நிற்பார் என்பது ஆன்றோர் வாக்கு..

    அதை சிந்தித்துக் கொண்டிருந்த போது அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக சீர் வளர் சீர் சிவாக்கர தேசிக ஸ்வாமிகளின் சிற்றுரை ஒன்றும் திருவாசகப் பாடல் ஒன்றும் fb ல் வந்து முன்னே
    நின்றன..

    ஆகா!..

    மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பால் எதுக்கடி குதம்பாய்!..

    நுரைத் தவளைகள் சத்தம் போட்டு விட்டுப் போகட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்களுக்கு பதில் சொல்லாமல் வந்து சேரும்.

      நீக்கு
  19. /// மூன்று முடிச்சும் அவிழ்ந்த பின் நெற்றிப்பொட்டில் உள்ள ///

    இதுக்கு ஔவையாரின் விநாயகர் அகவல் படிக்கணும்.. விநாயகர்
    அகவல் சித்தி ஆகி விட்டால் லலிதாவே முடிச்சுகளை அவுத்து விட்டுடுவா!..

    மூலாதாரைக நிலயா ப்ரஹ்ம க்ரந்தி விபேதினீ
    மணிபூராந்த ருதிதா விஷ்ணு க்ரந்தி விபேதினீ 38
    ஆக்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ர க்ரந்தி விபேதினீ
    ஸஹஸ் ராராம் புஜாரூடா ஸுதாஸாராபி வர்ஷிணீ!..  39

    இது மாதிரியான விஷயங்கள் இல்லாத ஆப்பிரிக்க ஐரோப்பிய வழிநடைகளை நாம் யோசிக்கவே வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  20. விநாயகர்
    அகவல் சித்தி ஆகி விட்டால்.. சித்தப்பா யாரு .. ன்னு கேக்கப்படாது!..

    :)))

    பதிலளிநீக்கு
  21. லலிதாவே முடிச்சுகளை அவுத்து விட்டுடுவா!..

    வாட்டீஸ் திஸ்?..

    லலிதா - தாங்க உண்மையில முடிச்சு அவுக்குறவ!..

    முடிச்சவிக்கி!..

    பதிலளிநீக்கு
  22. ஐயா.. அபிராம பட்டரே.. நீங்க என்ன சொல்றீங்க?..

    பதிலளிநீக்கு
  23. ஐயா அபிராம பட்டரே.. நீங்க இன்னா சொல்றீங்க?..

    பதிலளிநீக்கு
  24. ஐயா அபிராமி பட்டரே நீங்க இன்னா சொல்றீங்க?..

    பதிலளிநீக்கு
  25. மூட்டை முடிச்செல்லாம் அவுத்து தூரப் போட்டுட்டு -

    அஞ்சேல் என்று வளைக்கரம் அசைப்பவள் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அஞ்சால் அலுப்பு மருந்துதான் தெரியும்!

      நீக்கு
  26. மூட்டை முடிச்செல்லாம் அவுத்து தூரப் போட்டுட்டு - அஞ்சேல் என்று வளைக்கரம் அசைப்பவள் அவள் தானே!..

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம், ஏன் மந்தைவெளி தாண்டி போய் மயிலைக்குப் போணும்....அதுவும் நீங்க இடப்புறம் திரும்பின்னு எழுதிருக்கறதுனால, நீங்க லஸ் சிக்னல் வழியா வந்தீங்கன்னு நினைக்கிறேன். அப்படி வந்தா சிக்னல்ல வலப்பக்கம் திரும்பி கொஞ்ச தூரத்துல மயிலை இடப்பக்கம் திரும்பிருக்கலாமே சரவணபவன்? இருக்குமே அந்தத் தெருல....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த தெரு விஷயத்துல கொஞ்சம் குழப்பமுங்க..

      நீக்கு
  28. ஆ இந்தத் தெருல நிறுத்தினீங்களா ஆமாம் இங்கதான் பலரும் நிறுத்துவாங்க....ஹையோ அது கோயில் முன்னவும் நிறுத்த இடம் உண்டு. இல்லைனா கற்பகாம்பாள் மெஸ் பக்கத்துல Parallel Parking செய்யலாம். ஆனால் எல்லா இடங்களும் நெருக்கடியான இடங்கள்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத்தெருல சென்று வலது புறம் திரும்பி..  அங்கே!

      நீக்கு
  29. ஆஹா டப்பா செட்டி....நானும் இதன் நிரந்தர வாடிக்கையாளராக இருந்தேன்!!!!

    பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் இடம்...இருக்கே தனியாக....ஆனா மக்கள் ...ம்ம்ம் என்ன செஞ்சாலும அறிவு வராத ஜனங்க...

    மடப்பள்ளி, பிரசாதம் வாங்கும் இடம் அங்கெலலம் நம்மிடம் யாசிப்பவங்க நிறைய ஸ்ரீராம். பிரசாதம் வாங்கிக் கொடுத்தா வேண்டாம்பாங்க.
    மயிலையில் யாசகர்கள் அதிகம் ஸ்ரீராம். நான் அங்கு இருக்கறப்பவே....மயிலைக்குத் தினமும் போவேனே! ரயிலில் போய் நடந்து சென்று.....அது ஒரு காலகட்டம். கடந்து வந்தாச்சு. அதெல்லாம் நினைவுக்கு வந்தது. பல அனுபவப் பாடங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பதிவு எழுத விஷயம் கொடுத்த தர்மவான்கள்!

      நீக்கு
  30. யாசிப்பவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட பெரும்பாலோர் ஏமாற்றுக்காரர்கள் மட்டுமல்ல அவ்னகளுக்கு ஒரு குழு தலைவன் என்றெல்லாம் இருக்கு அதான் பாலா ஒரு படத்துல காட்டுவாரே அது என்ன படம்? நான் கடவுள்? அது போலத்தான். அதன் ஒரு பாகம் தான் பிள்ளை கடத்தல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நீங்க சொல்லிருக்கறவங்க எல்லாம் தனி தனி கேஸ் போல!!! ஆனா பாருங்க ஸ்ரீராம் சாப்பாடு வாங்கி வைச்சுட்டு மீண்டும் கேட்டிட்டிருந்தாங்கன்னு சொல்லியிருக்கீங்க இல்லையா? இதுதான் நான் மேலே சொன்னது. அவங்க ஒரு இடத்துல கூடி, யாரு பிச்சை எடுத்துட்டு வரச் சொன்னாங்களோ அவங்களுக்கு இதுல ஒரு பங்கு உண்டு! குழுவாகவும் இருக்காங்க. ரோட்டில் தெரியாது. அவங்க இப்படி பிரிச்சுக்கறதை பார்த்திருக்கேன். பெரும்பாலும் பாலம் அடில..இல்லைனா மயிலை, மந்தைவெளி ஸ்டேஷன் ஒதுக்குப் புறத்துல. அங்க ஒரு ஒதுக்குப் புறம் உண்டு. நான் அப்ப ரயிலில்தானே போவேன். இப்ப ஒதுக்குப் புறம் எல்லாம் இருக்கா இல்லை மாறிடுச்சான்னு தெரியலை

      கீதா

      நீக்கு
    2. இந்த அளவு நான் யோசிக்கவில்லை. விவரமும் தெரியாது. நான் அக்கடவுள் படம் (நல்லவேளையாக) நான் பார்க்கவில்லை.

      நீக்கு
  31. கோரா விஷயம் - சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இணையத்திலிருந்து படத்தின் வாசகம் ஹாஹாஹா நான் சொன்ன டயலாக்!!!!ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்வேன்...பின்னாடிருந்து யாராச்சும் குய்யோ முய்யோன்னு ஹார்ன் அடிச்சாங்கனா...யோவ் நிறுத்துயா முன்னால உள்ளவங்க போனாதானே நான் நகர முடியும்னு!!!.சில சமயம் இறங்கிச் சென்றும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீராம், கவிதை மனதை என்னவோ செய்துவிட்டது. ரசித்தாலும்....

    விமான நிலையங்களில் கழற்றி விடப்படும் தாயும், பெற்றோரும் நினைவுக்கு வந்தனர்! அதாவது பணம் இருந்தும் இல்லாமலாய்!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ரயிலில் டி.டி.இ. என்று ஒருவர் வருவாரே? அவர் கண்ணில் இவர் படவில்லையா? என்ற சந்தேகங்களும் வருகின்றன, சிறுகதை எழுத செம மேட்டர்.//

    ஆமாம்....எனக்கும் இந்த சந்தேகங்களுடன், சென்னை மகனும் மூத்த மகனும் தேடிருக்க மாட்டாங்களா? அவங்களுக்குத் தெரியாமலா திருக்கண்ணபுரத்திலிருந்து கிளம்பினாங்க? செய்தி என்னவோ மிஸ் ஆகுதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே!  என்ன மிஸ் ஆகுது... எஸ்..  அன்பும், பண்பும் மிஸ் ஆகுது!

      நீக்கு
    2. சென்னையில் இருந்த அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸின் முனைப்பு அவ்வளவுதான். அந்தப் பெண்மணி அடிக்கடி தனியாக நாகையிலிருந்து சென்னைக்கு வருவாராம். கண்ணைக்கட்டிக்கொண்ட குதிரை போல் வந்து சென்றிருக்கிறார். வழக்கமாக அவர் ஏறும் வண்டி நிற்கும் பிளாட்ஃபார்மில் புனே செல்லும் வண்டி நின்றிருக்கும், தான் வழக்கமாக ஏறும் வண்டி என்று நினைத்து ஏறியிருப்பார். புனேயில் இறங்கியதும் ஸ்டேஷன் மாஸ்டரை அணுகியிருந்தாலே பிரச்சனை தீர்ந்திருக்கும். அதை வீட்டினர் அவருக்கு சொல்லித்தரவில்யோ?

      நீக்கு
    3. புனே வரை போன பெண்மணியின் கதை கொஞ்சம் கூட நியாயமாய் இல்லாமல் இருக்கிறதே! புனே செல்லும் வண்டியில் ஏற இவர் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் கிளம்பும் பிரதானமான கட்டிடத்திற்கு வந்தால் தான் ஏறி இருக்க முடியும். புற நகர் ரயில்களின் வண்ணமும் வேறு மாதிரியா இருக்கும். புனே ரயிலில் கடந்து சென்ற ரயில் நிலையங்கள்/கடந்து சென்ற ஊர்கள்/ கூடவே பயணம் செய்த மக்கள்னு எத்தனையோ பேரை அந்த அம்மா பார்த்தும் கூடவா சந்தேகம் கொள்ளாமல் இருந்தார். சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர் செல்ல அரை மணி நேரம் தான் ஆகும். இவங்க கிட்டத்தட்ட ஒன்றரை நாளல்லவோ பயணம் செய்திருக்கணும்? நம்ப முடியவில்லை. ம்ப முடியவில்லை. ப முடியவில்லை. முடிய வில்லை/டிய வில்லை/ய வில்லை/வில்லை/ல்லை/லை லை லை லை லை!

      நீக்கு
    4. கொஞ்ச தூரம் போனதுமே ரயில்வே ஊழியர்களை அணுகி இருக்கலாம். குறைந்த பட்சம் அரக்கோணதிலாவது இறக்கி விட்டு அம்பத்தூர் போகும் ரயிலில் ஏற வைச்சிருக்கலாம்.

      நீக்கு
  35. ஆனை பற்றிய செய்தி - முதல் செய்தி ஓ என்று சொல்ல வைத்தது. இரண்டாவது செய்தி - ஆஹா அட! என்று..

    அடுத்த செய்தி - நம் சினிமாவின் தாக்கம் சமூகக் கேவலம். ஆனால் பொறுப்பான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அடுத்த செய்தி அதைச் சொல்லிவிட்டது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. சில மாதங்களுக்கு முன்னர் கபாலீஸ்வரர் கோயில் சென்றிருந்தேன். அப்போது தொடர்புடைய மயிலாப்பூர் பகுதியில் உள்ள மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்களுக்கும் சென்று, விக்கிப்பீடியாவில் பதிந்தேன். ஒரு மறக்கமுடியாத அனுபவம். அந்நாள் இப்போது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு

  37. //..தன்னை அறிய, தனக்கொரு கேடில்லை - என்ற திருமந்திரம் மனதுக்குள் ஓங்கி ஒலித்தது..//

    வாசிக்க ஆனந்தமாகத்தான் இருக்கிறது. ஆனால்.. தன்னை ‘அறிய’, யாருக்கு ஆசை இங்கே! பிறரை நோண்டத்தான் பிறந்திருக்கிறோம் என்றுதானே ஒவ்வொருவனும் அலைகிறான். அடுத்தவீட்டு ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்து ஆனந்தமடைகிறான் –அடுத்தவீட்டுக்காரன் துன்பத்திலிருந்தால். அல்லது பொறாமைப்பட்டுச் சாகிறான், அவன் ஆனந்தமாக இருப்பதைக் கவனித்துவிட்டால்! பெரும்பாலான மனிதரின் மனோநிலை இப்படித்தானே..

    //.. நமக்குள் ஞானத் தவிப்பு ஏற்படும்போது, அதற்கான குரு அவராகவே வந்து நிற்பார் என்பது..//

    யாருக்குள் இருக்கிறது இவ்வுலகில் ஞானத் தவிப்பு? கோடியில் ஒருசிலரே இப்படி இருக்கக்கூடும்..

    ஆனால், பணங்காசுத் தவிப்பு, பங்களா கார் தவிப்பு, பதவி, ப்ரமோஷன் தவிப்பு, செல்வாக்கு, அதிகாரத் தவிப்பு என்றெல்லாம் ’வாழ்ந்து.. அனுபவித்து’ காலப்போக்கில் நகருகையில், கண் மங்கி, கால்துவண்டு, காது மந்தமாகி, மனமும் தளர்ந்துபோய் வாழாமல் வாழ்வோரே பலர்..

    இப்படியான தாறுமாறு ராஸ்தாவில் மனித இனம் வேகவேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கையில், ஞானமாவது, தவிப்பாவது.. குருவாவது, திருவாவது… என்ன ஸ்வாமி இதெல்லாம்….!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஏகாந்தன்..

      /// தாறுமாறான ராஸ்தாவில் மனித இனம் வேக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கையில், ஞானமாவது, தவிப்பாவது.. குருவாவது, திருவாவது… என்ன ஸ்வாமி இதெல்லாம்!..///

      என்ன ஸ்வாமி இதெல்லாம்!.

      இதெல்லாம் தான் வாழ்க்கை.. இதெல்லாம் இல்லை என்றால் அப்புறம் எதற்கு ஞானம்?...

      ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    2. வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அதோடேயே வாழ்ந்துவிட்டு போவது யதார்த்த சித்தர் வழி!

      நீக்கு
  38. @ ஏகாந்தன்..

    ///என்றெல்லாம் ’வாழ்ந்து.. அனுபவித்து’..///

    ஆனானப்பட்ட யயாதியே காதலும் காமமும் அடங்காமல் தான் தவித்திருக்கின்றான்...

    ஆனாலும் இன்றைக்கு காதல் காமத்துடன் பனத்தின் மீதுள்ள பற்றும் சேர்ந்து கொண்டு பேயாட்டம் ஆடுகின்றது..

    நேற்றைய செய்தி..

    செத்துப் போன ஒருவனின் பெண்டாட்டி என்று சொல்லி பத்து வருடங்கள் ஓய்வூதியம் வாங்கியிருக்கின்றாள் செத்துப் போனவனின் மகள்!..

    காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கு - என்பதை அறியாத கபோதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்கு மீறி எத்தனை கோடிகோடியாய் பணம் சேர்க்கிறார்கள்?  எதற்கு?  யாருக்கு?

      நீக்கு
    2. மகள் நிராதரவாக இருக்கும் பக்ஷத்தில் அந்தப் பெண்ணிற்குத் தகப்பனின் ஓய்வூதியம்பெறத் தகுதி உண்டு. ஆனால் அந்தத் தந்தை அவரைத் தனக்குப்பின்னால் வரும் வாரிசு என அலுவலக ஆவணங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இயன்றால் ஓர் உயில் தயார் செய்து அதை ஹைகோர்ட் மூலமாக ப்ரொபேட் பண்ணிப் பதிவும் செய்திருக்கலாம். எப்படியோ ஒன்பது வருஷங்கள் சமாளித்து விட்டார்.

      நீக்கு
  39. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  40. //கூகுள் மேப்பை நம்பினான். அது அந்த வழியைத் தாண்டி ஒரு உடனே முடிந்து விடும் குட்டிச்சந்தில் திரும்பச் சொன்னதும் என் வழிக்கு வந்தான்.//

    ஆமாம், சில நேரம் முட்டுசந்தையும் காட்டும்.

    //மயிலையில் புகழ்பெற்ற டப்பா செட்டி கடை! என் தங்கை, என் மன்னி, என் பாஸ் எல்லோருக்கும் இங்கிருந்துதான் பிரசவ நடக்காய லேகியம் வாங்கி கொடுப்பார் அப்பா.//

    பழமையான கடை இன்றும் இருப்பது மகிழ்ச்சி.

    //இந்த மாதிரி யாசகர்கள் எல்லாம் சாப்பாட்டு டோக்கன் வாங்கி அவர்களிடமே அதைத் திருப்பிக் கொடுத்து அதற்குரிய பணத்தையோ, குறைவாகவோ பெற்றுச் செல்வார்கள் என்றே தோன்றியது. //

    வயிற்றுப்பாட்டுக்கு எப்படி எல்லாம் பிழைப்பு நடத்துகிறார்கள். !
    அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் வாங்கி கொடுக்க நினைத்தாலும் இவர்களுக்கு வயிறு நிறைந்தவுடன் வேறு செலவுகளுக்கு இப்படி செய்கிறார்கள்.
    வடலூரில் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது அங்கும் யாசகம் கேட்பவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதும் என்று சொல்வதே வயிறு மட்டும்தான் என்று சொல்வார்கள்.  அதுவும் இங்கே நடப்பதில்லை.

      நீக்கு
    2. எங்க வீட்டில் பிரசவ லேஹியம் எல்லாம் அம்மா ப்ண்ணியது தான். அதற்கடுத்துப் பெண்ணுக்கும் நான் தான் பண்ணிக் கொடுத்தேன். நாத்தனாருக்கும் செய்து கொடுத்தது உண்டு. தாத்தா வரையிலும்(அப்பாவின் அப்பா) வைத்தியம் தான் முழு நேரத் தொழிலாக இருந்தபடியால் அப்பாவழி உறவினர்களுக்கு இவை எல்லாம் இயல்பாக வரும்.

      நீக்கு

  41. மகன்கள் -
    கடைசிக் காலம்...
    கடவுளைக் காட்டுகிறேன் என்று
    அழைத்து வந்து
    காசிக்கருகில் கடாசி
    காணாமல் போனார்கள் //


    உங்கள் கவிதை மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  42. நியூஸ் ரூம்
    பானுமதி வெங்கடேஸ்வரன் பகிர்ந்த செய்திகளில்
    உடல் ஊனமுற்ற ஸ்விக்கியில் டெலிவரி பாயாக இருப்பவரை வாழ்த்த வேண்டும். கஷ்டபட்டு உழைத்து பெற்றோர்களை கவனித்து கொள்வதற்கு.
    நல்லவர்களும் உண்டு உலகில்.

    பதிலளிநீக்கு
  43. கை முடியாத நிலையிலும் உழைத்து, பெற்றவருக்கு பணம் அனுப்பி காப்பவரை வாழ்த்துவோம்.
    ஆண்டவன் அவருக்கு அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியில் மயிலாப்பூர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் தரிசனம் தங்களுக்கு அருகில் இருந்து பார்க்க முடிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் மனக்கண்ணால் பார்த்து தரிசனம் பெற்றுக் கொண்டேன். மயிலை சாலைகள் முன்பு 80- ல் இருந்ததை விட நிறைய மாறி விட்டதை நாங்களும் ஒரு எட்டு ஆண்டுக்கு முன் ஒரு தடவை சென்னை சென்ற போது பார்த்தோம்.

    யாசகம் கேட்பவர்களின் தொந்தரவுகள் இந்த மாதிரி எல்லா பிரபலமான கோவில்களுக்கருகே நடக்கிறது. சுற்றி சுற்றி வந்து நம்மை விடாமல் தொந்தரவு செய்கிறார்கள்.

    ஆன்மிகம் குறித்த கட்டுரை படிக்க நன்றாக உள்ளது.

    "இடைகலை, பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் . இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான் மனதை அடக்க வழியொன்றும் அறிகிலேன். முருகா உன் திருவடியை சிக்கெனப்பற்றினேன். செப்பிடுவீர் உபதேசம்.

    " சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்.. சிவயோகியாக எனை செய்திடும் குருநாதா .. " என்ற கந்தகுரு கவசம் மனத்துள் (ஓடியது.) வந்தது.

    படத்திறகேற்ற கவிதை அருமை. வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் ஒரு இனம் புரியாத வேதனை வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயிலை கோவில் நீங்கள் பார்த்து அவ்வளவு வருடங்கள் ஆகிறதா?  ஸ்கந்தகுரு கவசம் வரிகள் நினைவுக்கு கொண்டு வந்து பகிர்ந்தது சிறப்பு.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவில் மீதியை ரசித்த கருத்து சொல்லாமல் போய விட்டேனே.. .. ஹாரன் சத்தம் குறித்த செய்தி போன்ற எழுத்துக்களை நானும் ரசித்தேன்.

    இன்றைய செய்தி அறையில் முதல் செய்தியில் அந்த காணாமல் போன அம்மாவை குறித்து எந்த மகனும் கவலையே கொள்ளவில்லையே என எனக்கும் தோன்றியது. தங்கள் கவிதைக்குப் பொருத்தமான பிள்ளைகள்தான் போலும்...!

    யானைகளைப்பற்றிய செய்திகள் அருமை. யானை கூட அன்பாகப் சொன்னால், சொல்வதை புரிந்து கொண்டு கேட்கிறது.

    தன் வீரப்பிரதாபங்களை இப்படி கீழ்த்தரமாக செய்து காண்பிக்கும் மனிதர்களுக்கிடையே ஒரு கை இல்லாத நிலையில் தன்னம்பிக்கையாக உழைத்து குடும்பத்தை காக்கும் அந்த இளைஞருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. கவிதை நன்றாக இருந்தாலும் படத்திற்கு பொருத்தமாக இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடியில் சாய்ந்திருக்கும் கிழவி ஜீவன் போய் கொஞ்ச நேரம் ஆகிறது. உணர்ந்திருக்கும் கிழவரின் கலக்கம்.

      நீக்கு
  47. நம் உடலில் உள்ள சக்கரங்கள், பாம்பு, முருகன், தத்துவார்த்தமான விளக்கம் அருமை. ஒரே ஒரு தவறு, அது ஆயுத எழுத்து அல்ல, ஆய்த எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்திலேயே பாட்டி இருக்கையில் தாத்தா ஏன் அப்படிப் புலம்புகிறார்? ஓஹோ! பாட்டி இறந்ததைக் கூடத்தாத்தா உணரவில்லையா?

      நீக்கு
  48. யாசகம் என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள், எதையாவது வாங்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துபவர்கள் என வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற தொந்திரவுகள் அதிகமாகி வருகின்றன. முடிச்சுப் போட்டது போன்ற நாகர் சிலை படங்கள் பல எடுத்துள்ளேன். அதைப் பற்றிய விளக்கங்கள் சுவாரஸ்யம். முதியவரின் நிலைமையும் கவிதை வரிகளும் நெகிழ்வு. நியூஸ் ரூம்: யானைகள் தின வாரத்தில் பொருத்தமான செய்திகள். தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைகள் தினம் வந்ததா? கவனிக்கவில்லை. நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
    2. ஆம். 12 ஆகஸ்ட், உலக யானைகள் தினம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!