செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

சிறுகதை : நியாயங்கள் - ஸ்ரீராம்

 ஃபேமிலி பென்ஷன் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கியூ வரிசை நீளமாக இருந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பேங்க் இன்றுதான் திறந்தது காரணமாக இருக்கலாம்.

இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருக்கலாம். ஆனால் கையில் பணம் இல்லை. இதை எடுத்தால்தான் சரிப்படும். 
                                 
கௌண்டரில் யார் என்று பார்த்தேன். அந்த சிடுமூஞ்சிப் பெண்தான் அமர்ந்திருந்தாள். மெல்லதான் வேலை செய்வாள். சென்ற முறை வீட்டுக்குப் போய் எண்ணிப் பார்க்கும் போது நூறு ரூபாய் குறைந்தது தெரிந்தது. எரிக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாது மீண்டும் 'வேகு வேகு' என்று நடந்து வந்து இவளிடம் சொன்னபோது 'சள்'ளென விழுந்தாள்.


  
"எப்போ வாங்கினீங்க பாட்டிம்மா?"

"இப்போதாம்மா... ஒரு மணி நேரம் முன்னால இருக்கும்...  வீட்டுக்குப் போய் ஒண்ணுக்கு மூணு வாட்டி, நாலு வாட்டி எண்ணிப் பார்த்தேன்.. குறையுதும்மா...நீ கூட கணக்கு பாரும்மா....பார்த்துட்டுக் கூட குடு...."

"ஆமாம்..'கூட'தான் குடுக்கணும்..இங்கயே எண்ணிப் பார்த்துட்டுதானே பாட்டிம்மா நீ போகணும்...  அப்போதான் கிளைம் பண்ண முடியும்...  இப்போ வீட்டுல வச்சிட்டு வந்து கேட்டியானா நான் எப்படித் தர முடியும்..?

"அப்படிச் சொல்லாதேம்மா...  நான் நூறு ரூபாய்க்கு பொய்யா சொல்லப் போறேன்..." என் கண்களில் நீர் நிறைந்தது...  நூறு ரூபாய்க்கு மட்டுமல்ல, அவள் பேச்சுக்கும்தான்.

அந்த நூறு ரூபாய் குறைவதற்கு என்னென்ன பதில் யார் யாருக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணிய போதே அலுப்பாக இருந்தது.

"இதோ பாரு பாட்டி அம்மா.. அப்படி எல்லாம் நீ கேட்டதும் எடுத்துத் தர முடியாது. சாயங்காலம் கணக்குப் பார்க்கும்போதுதான் தெரியும். சாயங்காலம் வா...  இல்லைன்னா நாளைக்கோ ரெண்டு நாள் கழிச்சோ வா..."

அவள் பேச்சிலிருந்தே மாலையோ நாளையோ என்ன பதில் கிடைக்கும் என்று தெரிந்து விட்டாலும், என்னுடைய நிலைமை காரணமாக அன்று மாலையே வந்து அவள் பதிலில் நொந்து, ஏமாந்து போனது நினைவு வந்தது.

அவள்தான் இன்றும் இருக்கிறாள். நியாயமாய் எனக்குதான் கோபம் வர வேண்டும். ஆனால் அவள்தான் என்னைக் கண்டதுமே கடு கடுவென முகம் மாறுவாள்.

வரிசை மெல்ல நகர்ந்தது. தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது.

ம்..ஹூம்..பக்கத்தில் வந்தாயிற்று..இப்பொழுது நகர வேண்டாம்..

என் முறை வந்தது..பாஸ் புத்தகத்துக்குள் வித்ட்ராயல் ஸ்லிப்பைப் பொதித்து நீட்டினேன்.

நிமிர்ந்து வாங்கியவள், என்னைப் பார்த்ததும் முகபாவம் மாறி, 'சட்'டென வேலையில் மும்முரமானாள்.

கம்ப்யூட்டரில் அவள் ஏதோ தட்டத் தொடங்க, அவளாக ஏதாவது சொல்வாளா என்று நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது டிப் டாப்பாக உடை அணிந்த நபர் என்னருகில் தோன்றினார்.

"ஹலோ மேடம்...  என்னைத் தெரியுதா? நான் காலைல வந்து பணம் டிரா பண்ணிக் கொண்டு போனேனே..."

கௌன்ட்டர் பெண்மணி அவரை லேசான எரிச்சல் கலந்த கேள்விக் குறியுடன் நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் அவள் கண்கள் என்னையும் பார்த்து மீண்டன. 'மறுபடியும் இன்னொரு கேசா..' கேள்வி கண்களில் தெரிந்தது போலத் தோன்றியது.

நான் பணம் வாங்கும்போது குறுக்கிட்ட அந்த நபரை பொறுமையிழந்து பார்த்தேன்.

"வீட்டுல போய் எண்ணிப் பார்த்தா ரெண்டு ஐநூறு ரூபாய் கூட இருந்தது. ஒரு தடவைக்கு நாலு தடவை எண்ணினேன். கூட இருந்ததால எடுத்துட்டு வந்துட்டேன்..நீங்க கஷ்டப் படுவீங்களே... "

லேசான திகைப்புடன் அதை வாங்கிக் கொண்டாள் கௌன்ட்டர் பெண்மணி. "ஓ...தேங்க்யூ...  தேங்க்யூ..சார்... எப்படி நன்றி சொல்றதுன்னே....." தடுமாறினாள்.

அவர் சென்று விட்டார்.

வரிசையில் ஓரிருவர் நேர்மை, உண்மை பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தனர். எனக்கு வேறு மாதிரி எண்ணம் வந்தது இப்போது என் பணம் பற்றிக் கேட்டால் என்ன..? என்ன சொல்வாள்?

கௌன்ட்டர் பெண்மணி என்னைப் பார்க்க மறுத்தாள். குனிந்தவாறே பணத்தை எண்ணி என்னிடம் கொடுத்து விட்டாள். கேட்கலாமா கூடாதா என்ற எண்ணத்துக்கு நடுவே பணத்தை வாங்கிக் கொண்டு ஓரமாக நின்று பணத்தை எண்ணத் தொடங்கினேன்.

இப்போதெல்லாம் இங்கேயே எண்ணிப் பார்த்து விட்டுதான் கிளம்புகிறேன்.

நூறு ரூபாய் கூட இருந்தது. திரும்பத் திரும்ப எண்ணினேன். ஆமாம் கூடத்தான் இருந்தது. இப்போது அதிகமாகக் கொடுத்திருக்கிறாள் என்று சொல்ல வேண்டுமா? அல்லது நம் பணம் வந்து விட்டது என்று சென்று விடலாமா?

அல்லது ஒரு வேளை என்னை சோதிக்கிறாளோ?

பணத்துடன் மீண்டும் கௌன்ட்டரை நெருங்கினேன்.

"மேடம்...இதுல நூறு..."

என்னைத் தொடர விடாமல் இடை வெட்டினாள் கௌன்ட்டர் பெண்மணி.

"சரியாய்த்தான் இருக்கு.. போ பாட்டியம்மா.. எண்ணிதான் கொடுத்தேன்.." அவள் கண்கள் காத்திருந்த கூட்டத்தையும் என்னையும் மாறி மாறி பார்த்தன.

"போயிட்டு வாங்க பாட்டியம்மா..."

வேறு ஒன்றும் சொல்லவில்லை அவள். 

-மீள்-

76 கருத்துகள்:

  1. 'மீள்' means மீள் பதிவா?

    இது கூட நல்ல ஏற்பாடு தான். செவ்வாய் கதைத் தட்டுப்பாடு ஏற்படும் தருணங்களில் பழைய ஏற்கனவே பிரசுரமான நல்ல கதைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எபி ஆசிரியர் குழாமிற்கு எந்த அளவுக்கு அது பற்றிய ரசனை இருக்கும் என்று தெரியவில்லை.
    பிரசுரமானவற்றை மீள் பார்வைக்கு உட்படுத்தவே இந்த பேங்க் கவுண்ட்டர் பெண்மணி போல கடுகடு முகத்துடன் சலித்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // 'மீள்' means மீள் பதிவா? //

      ஆம்.

      //பிரசுரமானவற்றை மீள் பார்வைக்கு உட்படுத்தவே இந்த பேங்க் கவுண்ட்டர் பெண்மணி போல கடுகடு முகத்துடன் சலித்துக் கொள்ளலாம். //

      நல்லது.

      நீக்கு
  2. கதை பிடித்திருந்தது, ஸ்ரீராம். செய்த தவறை உணர்ந்து பிராயச்சித்தம்
    பெறும் மனம் அடையும் நிம்மதிக்கு ஈடு இணை இல்லை. உணர்ந்தவர்களாலேயே
    உணர முடிகிற பேறு இது.
    என்னைக் கேட்டால் இந்த
    நிர்மல மன உணர்வைப் பெறுவதற்காகவே ஒரு தவறைச் செய்து இந்தக் கதை பேங்க் பொன்மணி மாதிரி திருத்திக் கொண்டு அந்த மன நிம்மதியை அனுபவித்துப் பார்க்கலாம் என்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.. ஹா..  தவறு செய்யாதோர் யார்?  எங்காவது ஒரு இடத்தில, ஏதாவது ஒரு வகையில் நம்மை அறியாமல் கூட தவறி இருப்போம்.  அவைகளை வாய்ப்பு கிடைத்தால் மாற்றிக் கொள்ளலாம்!  இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்ய இவரேயன்றி வேறொருவர் வந்து செய்கிறார்.  மனமாச்சர்யம் இன்றி திருந்துவது எளிதாகிறது!  நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  3. பாட்டியின் கேரக்டர் பிரமாதம். தான் இழந்த அந்த நூறு ரூபாய் இறைவன் அருளால் அதே நபரால் சரி செய்யப் பட்டு விட்டதாக மனச்சாந்தி பெற்று திருப்பிக் கொடுக்க முனையாமல் செல்ல வில்லையே!

    எழுதியவர்களின் நல்ல மனம் அவர்களின் எழுத்துக்களில் பிரதிபலிப்பது இயல்பு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  என்னை நல்லவனாக ஏற்றுக்கொள்ள என் மனமே இடம் தராது!  எல்லோருமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான்!  பாராட்டுக்கு நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
    2. தெரியாமல் அல்ல தெரிந்தே பாட்டி அடைந்த இழப்பீடை சமன் செய்ய அந்த பேங்க் பெண்மணி நூறு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தார் என்று என் மனம் எனக்குச் சொன்னது.

      இது திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை மாதிரி. வள்ளுவரே இதை இப்படி நினைத்து எழுதியிருப்பாரா என்று எண்ணும் அளவிற்கு தெய்வப்புலவர் எழுத்தை மிக உன்னதமாகப் புரிந்து கொண்ட பேரறிவாளர் அவர்.

      நீக்கு
    3. // நூறு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தார் என்று என் மனம் எனக்குச் சொன்னது. //

      ஆம்.  அதுதானே உண்மை!

      நன்றி பரிமேலழகர் ஸார்...   ஹிஹிஹி  நான் திருவள்ளுவர் ஆயிட்டேன்!

      நீக்கு
  4. பாட்டியைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தப் பாட்டி இழந்த நூறு ரூபாய்
    பழங்கணக்கு குற்றச்சாட்டு நினைவுக்கு வந்தே பேங்க் பெண்மணி மலர்ந்த.முகம் மாற்றத்திற்கு உள்ளாகியது.

    அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்.

    இனி நிச்சயம் பளிங்கு போல நிர்மலமாக பளிச்சென்று இருக்கும் அவர் முகம். மடி கனத்தை இறக்கி வைத்து விட்டார் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  சிலசமயங்களில் இதுபோன்ற தருணங்களில் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே....

      நீக்கு
    2. ஆமாம். அடுத்த தடவை அவர் அந்த பாட்டி அம்மாவைப் பார்க்கும் பொழுதே
      மலர்ச்சியுடன், "வாங்க, பாட்டியம்மா.." என்பார்.
      இருவர் மனம் மட்டுமே அறிந்த இரகசியம் இது.
      இந்த நல்லதுக்காக இறைவன் நடத்திய திருவிளையாடல் தான் அந்த இன்னொருவர் திருப்பிக் கொடுத்த அந்த இரண்டு ஐனூறு ரூபாய் நிகழ்வும்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கதை அருமையாக உள்ளது. உதவி தொகை பணம்பெற வந்த பாட்டியின் மனநிலையை மனதை தொடர்கிறது. தான் செய்த தவறுக்கு அந்த பணம் பட்டுவாடா செய்யும் பெண் பிராயச்சித்தம் செய்து விட்டாள். இறைவன் நம் நிழலாக இருந்து உடன் வருவார் என்பதற்கு அன்றைய நிகழ்வு ஒரு சாட்சி. உங்களின் நல்ல மனம் போலவே அமைந்த ஒரு கதை. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பிழை திருத்தம் ... பாட்டியின் மனநிலைமை மனதை தொட்டது. என வந்திருக்க வேண்டும்.

    நான் உங்கள் கதை என்றதும் ஆர்வத்துடன் விரைவாக படித்து கருத்திடுவது போல், கருததிடும் போது வார்த்தைகளும் வேகமாக தப்பு தவறுமாக வந்து விழுந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விடுகின்றன. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. நியாயத்தை சரி செய்து விட்டாளோ கௌண்டர் பெண்மணி.

    பதிலளிநீக்கு
  9. இடுங்கிய கண்களுடன்
    அழகுக் குவியலாய் வங்கி காசாளர் பெண் ஓவியம்! கோட்டை விட்டு விடாமல் நூறு ரூபாய் நோட்டுகளை படத்தில் பதித்த KGG- க்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். வாழ்த்துகள். முன்பு படித்த நினைவு இல்லை.

    இப்போது பணத்தை மிஷின் எண்ணுகிறது, பக்கத்தில் திரையை பார்க்க சொல்கிறார்கள். முன்பு பணத்தை எண்ணி கொடுத்த போது உள்ள காலத்து கதை . டிப் டாப் மனிதர் அதிக பணத்தை திரும்ப கொடுத்தது அவரின் நல்ல மனதை காட்டுகிறது.

    //நூறு ரூபாய் கூட இருந்தது. திரும்பத் திரும்ப எண்ணினேன். ஆமாம் கூடத்தான் இருந்தது. இப்போது அதிகமாகக் கொடுத்திருக்கிறாள் என்று சொல்ல வேண்டுமா? அல்லது நம் பணம் வந்து விட்டது என்று சென்று விடலாமா?//

    பாட்டியும் அன்று குறைந்த 100 ரூபாய் பணம் இன்று கிடைத்து இருக்கு என்று போகாமல் அதிகம் 100 இருப்பதை கொடுக்க நினைப்பது எல்லாம் அருமை.

    அடுத்தவர் பணத்துக்கு ஆசை படாமல் இருக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் .

    கௌன்ட்டர் பெண்மணி தன் தவறை சரி செய்து விட்டார்.
    கதைக்கு பொருத்தமான படம்.
    நான் போகும் பேங்க்கிலும் இப்படி சிடு சிடு பெண் இருக்கிறார்.
    ஒரு நாள் கூட சிரித்து அன்பாய் பேச மாட்டார், அவருக்கு என்ன கஷ்டமோ என்று நினைத்து கொள்வேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனேகமாக இப்போது இருப்பவர்கள் யாரும் முன்பு இந்த கதையைப் படித்து கருத்திடவில்லை என்றே நினைக்கிறேன் நன்றி கோமதி அக்கா

      நீக்கு
  12. கதையும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் வங்கியில் இப்படி நடப்பதற்கான சாத்தியக,கூறுகள் இல்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அன்றன்றைக்கு கணக்கு சரிபார்க்கப்பட்டு, கூட குறைய இருப்பதை ஒப்படைக்கவேண்டும் (மேலதிகாரி இதற்குப் பொறுப்பு)

    ஆவணங்கள் இல்லாமல் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க முடியாது, வேறு ஒருவருக்கு நூறு ரூபாய் குறைந்தாலொழிய.

    கதையின் கான்சப்ட் ஓகே. படமும் நன்று. ஆனால் நடைமுறை சாத்தியக்கூறு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாத்தியம் இருந்தது நெல்லை ...
      இன்னொரு விஷயம் சொல்லவா ? அதே கவுண்டரில் பணம் வாங்கி பக்கத்து கவுண்டரில் பணம் கட்டுகிறேன்
      என்னிடம் வேறு பணம் கிடையாது. ஆனால் அதில் ஒரு நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டு என்னுடைய கணக்கிலிருந்து பின்னர் கழித்துக் கொண்டார்கள்.

      நீக்கு
    2. ஓ.... ஆச்சர்யம்தான். அப்போல்லாம் 'நடைமுறை'யைவிட நியாய தர்மங்கள் கோலோச்சியிருக்கும்.

      நீக்கு
  14. நான் மிஷின் எண்ணினாலும் கவுன்டரில் எண்ணி வாங்கும் ஆள். பஹ்ரைனில் ரமதான் சமயத்தில், எண்ணாமல் 6000 தினார் வித்டிரா செய்து, பணம் இந்தியாவுக்கு அனுப்பும் எக்சேன்ஜுக்கு வந்து பணத்தைக் கொடுத்தால், அவர் எண்ணி 170 தினார் குறைகிறது என்றதும் எனக்கு அதிர்ச்சி. (வங்கி 15 கிமீ தொலைவு). உடனே வங்கியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னால், கவலைப்படாதீங்க, நாளை காலையில் வாங்க என்றார்கள் (ரமதான் சமயத்தில் 2 மணிக்கு வங்கி மூடிவிடும். நான் எஆலையில் பணம் வாங்எஇ, ஆபீசிலிருந்து நாலு மணிக்கு வந்து எக்சேன்ஜ் சென்றிருந்தேன்). மறுநாள் காலையில் வங்கிக்குச் சென்றால், ஒரு கவரில் அந்த ரூபாயை வைத்திருந்தார்கள். டிரைனி கிளெர்க் பண்ணிய கவுன்டிங் மிஸ்டேக் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தார் வங்கி மேனேஜர். இந்தியாவில் கனவில்கூட இப்படி நடப்பதைக் கற்பனை செய்ய இயலாது.

    பதிலளிநீக்கு
  15. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் கதை செம. அழகான எழுத்து. இதையா நீங்க குறை சொல்லிக்கிட்டீங்க!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்ன அழகா எழுதியிருக்கீங்க!

    பணம் எண்ணும் கவுண்டரில் இருப்பவங்க பெரும்பாலும் டென்ஷன்லதான் இருப்பாங்க போல...ஏன்னா பணம் எண்ணுவது கொடுப்பது கொஞ்சம் டென்ஷனான காரியம்தான். அதுவும் ஒரு நாளில் பலருக்கும். ஒரு சிலர் மட்டுமே ஜாலியா செய்வதைப் பார்த்திருக்கிறேன். என் அக்கா ஒருவர் பேங்கில் காஷ் கவுண்டரில் இருந்தப்ப ரொம்ப டென்ஷன் ஆவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அந்த நூறு ரூபாய் குறைவதற்கு என்னென்ன பதில் யார் யாருக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணிய போதே அலுப்பாக இருந்தது.//

    பாவம் பாட்டிம்மா...ஒந்த ஒரு வரி பல விஷயங்களைச் சொல்கிறது.

    அந்த டிப் டாப் ஆள் வந்ததும் அதுவும் கூடுதல் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்ததும் அவளுக்குத் தோன்றியிருக்கும். மனதுள். ஒரு குற்ற உணர்வு!

    வங்கிக் கணக்கிலிருந்து 100 ரூபாய் கொடுத்திருந்தால் அன்றைய கணக்கு உதைக்குமே கடைசில டேலி பண்ணும் போது....அப்ப அந்தப் பெண் தன்னிடம் இருந்துதான் அந்த 100 ரூபாயைக் கொடுத்திருப்பாள். அல்லது அன்று 100 ரூபாய் குறைத்துக் கொடுத்தப்ப அன்றைய டேலியில் அது தெரிந்திருக்குமே....இல்லையா...

    என் அக்கா இப்படித்தான் சில சமயம் தன் கையிலிருந்து போட்டுக் கொடுத்திருக்கிறாள். டேலி செய்யும் போது அட்ஜஸ்ட் செய்துப்பாங்களாம்.

    அந்த டிப் டாப் ஆளுக்குக் கூடுதல் கொடுத்தது போல யாருக்கேனும் கூடுதல் ஆகிடுச்சுனா அவங்க திரும்ப கொண்டு கொடுக்கலைனா டேலி ஆறப்ப உதைக்குமே அப்ப இவங்க கைலருந்து போட்டுக்குவாங்களாம் எந்த கஸ்டமருக்குப் போச்சோன்னு தெரியாதே. இப்படி அக்காக்குப் பல சமயங்கள் ல டென்ஷன் காஷ் கவுண்டர்னாலே வந்தது. ஒரு தடவை பெரிய அமௌன்ட் இப்படி ஆக டேலி யில் கணக்கு உதைக்க....வேறொரு காஷியர் அன்று இருந்திருகார் அனால் அக்கா மேல பழி வர...பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டு கேஸை டீல் செய்து அப்புறம் வாலன்ட்ரி ரிட்டையர்மென்ட் வாங்கிய பிறகும் கேஸ் தொடர்ந்து கை விட்டு நஷ்டமானது, ஆனால் அப்படி ஆட்டைய போட்டது மற்றொருவர்!!!! அப்புறம் அக்காவிடம் கேட்கவில்லை என்ன ஆச்சுன்னு ரொம்ப டிப்ரெஸ்ட் ஆகிட்டாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீர்களா அனுபவம் இருப்பவர்கள் மட்டுமே நம்புவார்கள்

      நீக்கு
    2. நாங்கள் கணிணி ப்ரோக்ராம் கற்றுக்கொண்ட 88களில், கேஷியருக்கு மாத்திரம் ரிஸ்க் அலவன்ஸ் உண்டு என்பதைத் தெரிந்துகொண்டேன். நம்ம கோபு சார் (அதுதான் வை.கோபால கிருஷ்ணன் சார்) கேஷியராக இருந்தவர்தாம். வேலை நேரத்தில் ஒரு பயலும் வெட்டிப் பேச்சாக வந்து நிற்பதையோ வேலைக்கு இடைஞ்சலாக இருந்தாலோ விரட்டி விடுவார் என்று படித்திருக்கிறேன். பணத்தைக் கையாள்கிறார் இல்லையா, அதனால் அவருக்கு ரொம்பவே முன் ஜாக்கிரதை இருந்திருக்கும். (இவங்கள்லாம் வலையுலகை விட்டுவிட்டு வாட்சப் மெசேஜுகளிலும் யூடியூபுகளிலும் காலத்தைக் கழிக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும்)

      நீக்கு
  18. "சரியாய்த்தான் இருக்கு.. போ பாட்டியம்மா.. எண்ணிதான் கொடுத்தேன்.." அவள் கண்கள் காத்திருந்த கூட்டத்தையும் என்னையும் மாறி மாறி பார்த்தன.//

    ஆமா கூட்டத்துக்குத் தெரிஞ்சுருச்சுனா!!!!!! அந்தப் பயமும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இன்று திருவோணம். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. மஹாபலிக்கு நல்வரவு.

    பதிவைக் கண்டவுடன் வியாழன் எப்படி செவ்வாயில் வந்தது என்று திகைத்தேன். பின்னர் தான் இது கதை, கட்டுரை அல்ல என்பதும் புரிந்தது. இது கதையாகவே இருக்கட்டும்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைதான் 90களில் நடந்தது!!!

      நீக்கு
    2. இந்த ஓணம் பண்டிகைக்கான ஓணம் சத்யா - அடையாறு சங்கீதாவில் 800 ரூபாய்க்கும் மேல். அதுவே ஆன்லைன் ஆர்டர் என்றால் 1250 ரூபாய். கட்டுப்படியாகுமா?

      நீக்கு
  20. நல்ல கதை.

    இரு சம்பவங்களில் இருந்தும் காஷியர் பெண்மணி தனது வேலையில் கவனம் கொள்ளவில்லை . இரண்டாவது நபர் நேர்மை மனிதர் என்பதில் பெண் தப்பினார்.

    பாட்டியிடம் முன் விட்ட தவறை திருத்திக் கொண்டார் என்பதில் அவர் மனதுக்கு அமைதி கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  21. இப்படி எல்லாம் வங்கியில் நடக்காது என்பதை நெல்லையும், தி.கீதாவும் சொல்லிட்டாங்க. பாட்டிக்கு ஏற்கெனவே பணம் குறைஞ்சிருந்தால் அன்றே தெரிஞ்சிருக்கும். அந்தக் கவுன்டர் பெண் அதுக்குத் தலைமை காசாளர், வங்கி மேலாளர் ஆகியோரிடம் பதில் சொல்லணுமே! அதை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு விட்டு இப்போ இரண்டாம் முறை மனசாட்சி உறுத்த அந்தப் பணத்தை எடுத்துப் பாட்டிக்குத் திரும்பக் கொடுத்திருக்காளோ? லாஜிக் இல்லாத கதை! அதுவும் ஸ்ரீராமிடம் இருந்து! என்னதான் மனித நேயத்தையும், ஒருவரின் பண்பையும் சுட்டிக்காட்ட எழுதப் பட்டிருந்தாலும் சோபிக்கவே இல்லை. முன்னால் படிச்சாப்போலயும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா நீங்கள் முன்னர் படித்தால் போல எனக்கும் தோன்றவில்லை

      நீக்கு
  22. என்ன தான் மனித நேயம், பண்பு என்றாலும் ... 

    சரி.. சரி..
    இந்த வாரத்தை ஓட்டியாகி விட்டது.. நல்லது..

    பதிலளிநீக்கு
  23. வியாழக்கிழமை வித்தகம் காட்டிக் கொண்டிருந்த ஸ்ரீராம் கூடுதல் பொறுப்பு ஏற்கும் படியாகி விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தம்பி துரை...

      ஒரு கதை எழுதி வாசிக்கக் கொடுத்தோமென்றால் ....

      எழுத்து சரியில்லை
      காகிதம் கசங்கியிருக்கிறது...
      ஒரே பக்கத்தில் எழுதக் கூடாதோ?
      இப்படியா வாரத்தைக்கு வார்த்தை இடம் விட்டா எழுதுவார்கள்?

      --- என்று கதை வாசிப்பு சம்பந்தமில்லாத அத்தனை விஷயங்களையும் பேசினால் எப்படி?..

      இதைக் கேட்கவா எழுதுகிறவன் எழுதி வாசித்துப் பாரேன் என்று கொடுக்கிறான்?
      அவனுக்கு வேறே வேலை வெட்டி இல்லை?

      என்னவெல்லாம் இழுத்துக் கட்டி...

      இந்தக் காலத்தில் இப்படி நடக்காது..

      வங்கி நடைமுறைகளைப் பற்றித் தெரியாதா?

      கிழவி புகார் கொடுக்கவில்லையா?

      காசாளார் கூடப் பணம் கொடுத்தால் அதைத் திருப்பிக் கூட யாராவது தருவார்களா, என்ன?

      -- என்று அடுக்கோ அடுக்கென்று அடுக்கினால் எப்படி?

      ஸ்ரீரங்கத்து தேவதைகள் -- என்று சுஜாதா கதை தலைப்பு பார்த்து
      இது என்ன தேவதைகள் காலத்து புராணக்கதையா என்று இவர்கள் முணுமுணுத்திருப்பார்கள் போலிருக்கு..

      எபியின் வாசிப்புத் தரம் உயர பிரார்த்திப்போமாக
      .

      நீக்கு
    2. இல்லை ஜீவி சார்...கதையைப் படிக்கும்போது வாசிப்பவர்களுக்கு இந்த மாதிரிச் சந்தேகங்கள் வந்தால் எங்கு எழுதுவது? வெறும் நடையைப் பாராட்டினால் போதுமா? ஸ்ரீராமே தொடர்ந்து எழுத்துலகிலேயே பயணித்திருந்தால் நல்ல ரசனையான பல கதைகள் கட்டுரைகள் அவரிடமிருந்து வந்திருக்கும். நேரம் இல்லாததால் அவசர அவசரமாக எழுதும் வியாழன்களே மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றது.

      //தேவைதைகள் காலத்து/// - இளம் பெண்கள் எல்லாமே இப்போதுமே என் கண்ணுக்கு தேவதைகளாகத்தான் தெரிகின்றார்கள் ஹி ஹி ஹி

      நீக்கு
    3. சந்தேகங்களா? இந்தக் கதையில் என்ன பொல்லாத சந்தேகங்கள்? சொல்லுங்கள். கதை வாசிப்பிலிருந்து விலகி யோசிக்கக் கூடாது. அந்த விலகல் இல்லாதிருந்தால் தான் வாசிப்பே சுவாரஸ்யப்படும்.


      நடு ராத்திரி நிசப்தம். ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது.
      ஒரு வழியாக பேங்க் உள்பக்கம் வரை போய் விட்டார்கள்.
      அடுத்த வளைவில் உள் திரும்பி நடைவழியைக் கடந்தால் லாக்கர் பிரதேசம் வந்து விடும். எல்லாம் பகலில் பார்த்து தரோவாகத் தீர்மானித்துக் கொண்டது தான் ---
      என்று வாசித்துக் கொண்டே வரும் பொழுது,

      "என்ன பேங்கோ, என்ன பாதுகாப்போ?
      ஒரு அலாரம் கூட இருக்காதா? துப்பாக்கியும் கையுமாக இருக்கும் வாட்ச் மேன் என்ன ஆனான்? -- என்ற கேள்விகள் எல்லாம் எழக்கூடாது. அதையெல்லாம் சமாளித்துத் தாண்டி உள் நுழைந்து விட்டார்கள் என்ற கன்வின்ஸோடு தான் வாசிப்பைத் தொடர வேண்டும்.

      இதையெல்லாம் விளக்கி விவரித்து எழுதினால் கதை, கதையாக இருக்காது.

      நீக்கு
    4. இதையெல்லாம் விளக்கி விவரித்து எழுதினால் கதை, கதையாக இருக்காது.//

      இது மட்டுமல்ல உங்கள் கருத்து முழுவதுமே ஜீவி அண்ணா யெஸ் அதேதான். முந்தைய கருத்து உட்பட.

      //கலைஞன் மனதே மென்மையானது. தொட்டாற்சுருங்கி ரகம் அவன். இந்த லட்சணத்தில் தான் எழுதியது குறித்த எதிர்பார்ப்புகளும் ஏராளம் இருக்கும் அவனுக்கு. எழுதியதில் இந்த இடத்தைப் பாராட்டி யாராவது சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்ப்பு ஏக்கம் கூட இருக்கும் அவனுக்கு.//

      ஆம். அதே தான் அண்ணா. அதுவும் எழுத்தின் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு இது ரொம்ப முக்கியம்.

      கீதா

      நீக்கு

  24. ஜீவி அண்ணா..

    நான் எழுதிய கருத்து - ஸ்ரீராம் அவர்களது எழுத்தை குறைத்து மதிப்பிடுவது என்று ஆகாது..

    இதுவும் ஒருவகை அன்பு தான்..

    எனது கருத்துகள் இரண்டும் தங்களது மனதைப் புண்படுத்தியிருக்கின்றது..

    மன்னிக்க வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  25. தம்பி,

    பொதுவில் சொன்னது அது.

    நீங்களும் எபிக்கு கதை எழுதுபவர் ஆதலால்,

    எந்த வாசக அனுபவத்தை எதிர்பார்த்து எழுதுகிறீர்கள் என்பது தெற்றென உங்களுக்குப்
    புரியும் என்பதினால் உங்களை விளித்துச் சொன்னேன்.

    கலைஞன் மனதே மென்மையானது. தொட்டாற்சுருங்கி ரகம் அவன். இந்த லட்சணத்தில் தான் எழுதியது குறித்த எதிர்பார்ப்புகளும் ஏராளம் இருக்கும் அவனுக்கு.

    எழுதியதில் இந்த இடத்தைப் பாராட்டி யாராவது சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்ப்பு ஏக்கம் கூட இருக்கும் அவனுக்கு.

    கல்யாண கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசிப்பவர் கண்ணில் படுகிற மாதிரி
    யாராவது தலையை அசைத்தோ தாளம் போட்டோ ரசிப்பது பார்த்தால் ரசனையோடு இன்னும் இரண்டு பாட்டுக்கு கூட வாசிப்பார் அவர். காசு முக்கியம் தான். இருந்தாலும் கலைஞனுக்கு தனதை இன்னொரித்தர் ரசித்து நாலு வார்த்தை புகழ்படச் சொல்வது அதை விட முக்கியம். இதுவே ஆத்மார்த்தமாக அவனில் இழைந்து போவது. அவனை மென்மேலும் உயர்த்துவது.

    நீங்கள் தஞ்சாவூர் ஜட்கா வண்டி என்று தான் எழுதினீர்கள். வண்டிக்கூட்டின் முன்பக்கம் பின்பக்கம் வளைத்து நீட்டி ஓவியமாய் தஞ்சைப் பகுதியின் பிரத்தேயகமான அந்த ஜட்காவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினாரே கேஜிஜி, இது தான் கலைஞனின் வெளிப்பாடு. எழுத்தாளன் எழுதியதை ஓவியன் உள்வாங்கிக் கொண்டு தன் அனுபவத்தில் உணர்ந்த தஞ்சை ஜட்காவை கண்முன் நிறுத்துகிறான்.
    இது தெரிந்த் வாசகன் இரண்டையும் ரசிக்கிறான். கலை இங்கே எல்லோருக்குமான இணைப்பு ஆகிறது

    பதிலளிநீக்கு
  26. உண்மை..
    உண்மையான கருத்து..

    நான் கூட தொட்டாற்சுருங்கி ர்கம் தான்...

    தொட்டால் சுருங்கி மாந்திரீகத்துக்கானது தெரியுமோ!..

    எழுத்தாளர்கள் ஓவியர்கள் இச்செடியைத் தொடக்கூடாது..

    பதிலளிநீக்கு
  27. சும்மா ஜாலிக்காக என்று ஸ்ரீராம் கூட சொல்வார். என்னைப் பொறுத்த மட்டில் இது கூட எனக்கு உடன்பாடில்லை. இரண்டு பாராவை கோர்வையாக எழுதி இன்னொருத்தரை படிக்க வைப்பதற்குக் கூட அசாத்திய திறமை வேண்டியிருக்கிறது. தன்னால் முடியாததை இன்னொருத்தன் செய்து தன்னை ஆட்கொள்கிறானே என்ற அனுபவ ரீதியான உணர்வு வாசகனுக்கு வந்து விடுதலே
    கலைஞனுக்கு சரிசமர் நிகராக வாசகனையும் கொண்டு வந்து நிறுத்துகிற நிலையாகும்.
    இன்னொருத்தன் செயலுடன் ஒன்றாமல் அவனை விட மேலானவன் என்ற நினைப்பில் கவனம் சிதறும் பொழுது தான்
    எந்த விஷயத்தையும் உருப்படியாக நம்மால் கணிக்க முடியாமல் போகிறது. வளர்ச்சிக்குத் தடை போடுகிறது. இந்த நிலையில் நம்மில் மாற்றம் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  28. ஆஆஆஆ என்ன இது புயுப் பயக்கம்... ஸ்ரீராம் கதை எழுதியிருக்கிறார்ர்.... இப்போதான் பார்க்கிறேன்...

    கியூ எண்டாலும் வரிசைதானே .. ஹா ஹா ஹா நானும் கியூவரிசை எண்டுதான் பேசுவேன்:))..

    விறு விறு அல்லது விறுக் விறுக் எண்டுதான் நடப்பதாக அறிஞ்சிருக்கிறேன்... இதென்ன வேகு வேகு .....என ஹா ஹா ஹா நீண்ட நாளைக்குப் பின் வந்ததால எனக்கு எல்லாம் புதுசாத் தெரியுது போலும்:).. எனக்கெதுக்கு ஊர் வம்பு.. கதையைப் படிப்போம்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ இதென்ன இது???.. அதிரா இல்லாத கொஞ்சக்காலத்தில ஸ்ரீராம் பதில்கள் குடுப்பதை நிறுத்திட்டாரோ? கர்ர்ர்ர்ர்ர்:), இப்படித்தானே ஆரம்பகாலமும் இருந்துது, பிறகு நான் சண்டைபோட்டது நினைவிருக்குது பதில்கள் போடோணுமென:)).. இப்போ திரும்படியுமோ?:).. அ நாவில இருந்தோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  29. நான் நல்ல தெளிவாகத்தான் கொமெண்ட் போட வந்தேன் ஆனா கதை படிச்சுக் கொயம்பிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்:)).. கதையில எனக்கு ஒண்ணும் பிரியவே இல்லை ஸ்ரீராம்:):)..

    அப்பெண் நல்லவரா? கெட்டவரா???:)

    பதிலளிநீக்கு
  30. அருமை.
    சுருக்கமான சுவையான கதை.
    குழும வாட்ஸப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. பணத்தை எண்ணிக் கொடுக்க மெஷின்கள் வந்து விட்டதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு முந்தையக் காலக் கட்டமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இளம் வயது காசாளருக்கு ஈகோ. தன் தவறை ஒப்புக் கொள்வதில் கெளரவக் குறைச்சல். ஆனால் வயதான அந்த வாடிக்கையாளப் பெண்மணியின் முன்னிலையிலேயே அவரது மற்றுமொரு தவறு தெரிய வந்து விடுவது சுவாரஸ்யமான நிகழ்வு. மனசாட்சி உறுத்தினாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள விரும்பாமல் தீர்வு தேடியிருக்கிறார்.

    மனிதர்களின் மனோபாவத்தைப் படம் பிடித்துக் காட்டும் அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழிந்து சாறாய் கொடுத்து விட்டீர்கள்.  நன்றி ராமலகஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!