செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

சிறுகதை : சக்கரவியூகம் - கீதா ரெங்கன்


சக்கரவியூகம்

 

“ஓ! இன்னிக்கு உங்க ஸ்கூலை நடத்தினவர் போய்ட்டாராமே லீவோ? அதான் கோவிலுக்கு தாமசமா போறியா?” எதிர்த்த வீட்டு பாட்டியின் விஷயம் கறக்கும் டெக்னிக்! புன்னகைதான் பதில்.

கோயிலில் அம்மனுக்குப் பூஜை முடிந்து பிரசாதம் விநியோகிக்கும் நேரம் எட்டியிருக்குமோ? மொபைலில் நேரத்தைப் பார்த்தேன் நல்லகாலம். இன்னும் நேரம் இருக்கு. கடைசி தை வெள்ளி தாமதமாகும்.

தினமும் வாசலிலும், கொடிமரத்தின் கீழும் சன்னதியிலும் பெருக்கிக் கழுவி கோலம் போட்டு ப்ராகாரத்தில் இருக்கும் நவக்கிரகத்தைச் சுற்றிக் கழுவி துடைத்து விடுவது வழக்கம். ஆறுதலும் ஆத்ம திருப்தியும் தரும் விஷயம் இது ஒன்றுதானே. நின்று கண்ணை மூடி ஒரு நிமிடப் பிரார்த்தனை அவ்வளவுதான். அதன் பின் நித்ய கடமைகள். கர்ம யோகம்!

வேகமாக நடந்தேன். மனம் அதை விட வேகமாக ஓடியது. அதற்கு மூச்சிரைக்கவில்லை. அட்லீஸ்ட் இப்போதுவரை.

இன்று விடியும் போதே பிரச்சனைகள் தொடங்கியது. என்றைக்குத்தான் இல்லை? இன்று அலுத்துக் கொள்ள.

அம்மைக்கு காய்ச்சல் போல இருக்கு. இப்ப யாரு அழுதா நீ கோவிலுக்குப் போகலைன்னுமெத்தப் படித்திருந்தும் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் வறட்டு வேதாந்தம் பேசிக் காலத்தை ஓட்டும் தறுதலைக் கணவன். இப்படிச் சொல்வதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். கணவனை இப்படி எல்லாம் சொல்லலாமோ, பாவத்தைக் கட்டிக் கொள்றியே என்கிறீர்களா? பரவாயில்லை. எனக்குத்தானே. உங்களுக்கு இல்லையே!

அக்கம்பக்கத்தினருக்கோ அவர் அறிவு ஜீவி. “அண்ணா, வேதாந்தம் வியாக்கியானம், பகவத்கீதை ஸ்லோகம் அர்த்தம் எல்லாம் எப்படிச் சொல்றார்ன்றேள். வித்வத். ஞானம், Wow! Highly Knowledgeable, Great! Amazing” இப்போதைய ட்ரெண்டி வார்த்தைகள். என் ஞான யோகம் வேறு.

அந்த வேதாந்தம் பேசிக் கூட சம்பாதிக்கறவா இருக்காளே அது இவா கண்ணுல படலை போல. குடும்பஸ்தனுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” சொல்ல முடியுமோ? முடியாது. அவர்களுக்குப் புரியாது. புரிய வேண்டாம். பல விஷயங்கள் புரியாமல் இருப்பதே நல்லது. Ignorance is bliss.

மனம் யதார்த்தத்திற்கு வந்தது. எதற்கும் டோலோ ஒன்றை எடுத்துக் கஞ்சியுடன் வைத்துவிட்டுச் சாப்பிடச் சொல்லிவிட்டுக் கிளம்பிய போது மீண்டும் கணவனின் குரல்.

அப்பாக்கு வயிறு சரியில்லை போல. படுக்கையிலயே போயிருக்கார்” ஸ்மெல் வரது. மூக்கைப் பிடித்துக் கொண்டு இருந்த இடத்திலிருந்தே ஏவல்.

ஏன் நீங்க க்ளீன் செய்யலாமே…” என்று தொண்டை வரை வந்ததை விழுங்கிவிட அதுவோ ஜீரணம் ஆகாமல், எரிமலை சுனாமியை விட ஆபத்தாகக் குமிறி கொந்தளிக்க வைத்தது.  

முந்தைய நாள் தவலை அடையின் விளைவுதான் மாமனாரின் அஜீரணக் கோளாறு. எத்தனை வருடங்களாகக் குழந்தைகளுக்கு இந்த வயதில் அவர்கள் விரும்புவதைச் செய்து கொடுக்க முடியாமல்…..செய்தால் வயதானவர்களுக்குக் கொடுக்க வேண்டுமே. அதன் விளைவுகளை யார் அனுபவிப்பது என்று. இதோ நான் தானே!

நாக்கெல்லாம் செத்துப் போச்சு….உப்புச் சப்பில்லாம சாப்பிட்டு….” என்று குற்றம் சொல்லும் அடங்காத நாக்குகள். இப்படிச் சாப்பிட்டு மறு நாள் மருத்துவமனைச் செலவில் கொண்டு நிறுத்தும். டாக்டரும் என்னைத்தான் முறைப்பார். நீ டீச்சரா இருக்க! நான் சொன்ன கட்டுப்பாடுகளை ஃபாலோ பண்றதில்லையா…..வரிசையாக நீளும்…’யா’க்கள்.

அதனாலேயே எல்லோருக்கும் பொதுவான சாப்பாடு என்று எத்தனை நாட்கள், வருடங்கள்தான் குழந்தைகள் பொறுத்துப் போவார்கள்? ஏதோ முந்தைய நாள் சின்னவள் ஆசையாகக் கேட்டாளே என்று செய்தால்…..இதோ வினை.

பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த பெரியவள் உதவிட சுத்தப்படுத்திவிட்டு, மருந்தும் கொடுத்துவிட்டு கோயிலை நோக்கி நடந்தேன். மனதின் ஆற்றாமை கண்களில் உடைந்துவிடும் நிலை. 10 நிமிட நடையில் ஒரு சரித்திரக் கதையையே படைத்திடும் திறனுடன் குதிரைப் பாய்ச்சலில் ஓடும் மனம்.

நான் காலையில் எழுந்த போது நன்னாதானே இருந்தா, அம்மா என்றுஅருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். படுத்துக் கொண்டே இருப்பதால் உடம்புச் சூடு போலத்தான் இருந்தது. வழக்கமான வயதுப் பிரச்சனைகளான கொழுப்பு, இனிப்பு இத்யாதிகள்தான். வாய்க்கொழுப்பை விட இந்தக் கொழுப்பு ஒன்றும் மோசமில்லை. மற்றபடி திடகாத்திரமான உடம்பு. ஆனால், ‘மாட்டுப்’ பெண் இருக்கறப்போ நான் எதுக்கு எழுந்து நடமாட வேண்டும்?’

ஆனால் மகள்கள் வந்தால் அந்த சரீரம் நடமாடும். வேலை செய்வது போல், வீட்டையே நிர்வகிப்பது போல்…. மகள்களும்பாவம் அம்மா” என்று கரிசனம் காட்டுவது போல் காட்டி இங்கு என்னவோ கொட்டிக் கிடப்பது போல் இங்கிருந்து எல்லாம் அள்ளிக் கொண்டு செல்வார்கள்.

மகள்கள் அந்தப் பக்கம் போனதுமே உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு. நாக்கையாவது அடக்கிக் கொள்ளலாம். சாப்பாட்டையும், வார்த்தைகளையும்தான் சொல்றேன். வயதானாலும் விவேகம் வளராத  ‘……..’ வேண்டாம்அதற்கு மேல்… மீண்டும் “பாவத்தைக் கட்டிக் கொள்ளாதே” என்ற குரலைக் கேட்க விரும்பவில்லை. கோயிலுக்குப் போறப்ப நல்லதை நினை. ஆனா மனசு விடுமா? எமகாதக மனசு.

என் ஒருத்தியின் சம்பளத்தில் 5 பேரின் ஜீவனம். படியளந்து கொண்டிருந்த சங்கரனார், பள்ளி நிறுவனர் கண்ணை மூடிவிட்டார். நல்ல சம்பளம். ஆனால் 6 பேர்! இனி என்னாகுமோ? ஒவ்வொரு பிரச்சனையாக…….18 வருடங்கள் கடந்தாயிற்று. கையில் தூக்குவது கூட பாரமில்லை ஆனால் மன பாரம் அதிகம்தான்.

முதல் நான்கு வருடங்கள். கணவன் வேலை, என் வேலை என்ற சந்தோஷத்தில் இரண்டு பெண் குழந்தைகள். அதன் பின் திடீரென்று நல்ல வேலையை விட்டு வாழ்வே மாயை என்று வறட்டு வேதாந்தத்தில் மூழ்கி வீட்டிலேயே இருக்கத் தொடங்கி...உலகமே தவறு, சமூகம் அவலம், யாரும் ஒழுங்கில்லை என்று திட்டிக் கொண்டிருக்கும் வேலை ஜரூராய் இதோ இது வரை… மருத்துவம் பார்க்கலாம் என்றால் உடன்படவில்லை. உச்சபட்ச ஈகோ.

குழந்தைகள் என் வாழ்க்கையைக் கண்கூடாகப் பார்த்து வருபவர்கள். படிப்பில் கெட்டி. லட்சியங்கள் நிறைந்த இளம் வயசு. அதை விட வீட்டுச் சூழலை நன்கு புரிந்து கொண்டவர்கள். அவர்களின் லட்சியங்களாவது நிறைவேறுமா என்ற கவலையுடனான கேள்விக் குறிகள் என் தலைக்குள்.

“வாழ்க்கையில் மேடு பள்ளம் சகஜம்” – தத்துவம். பள்ளத்திலிருந்து உயரே இருக்கும் மேட்டை நோக்கி பிரயாசத்துடன் ஏறும் போது மேட்டை அண்ணாந்து பார்க்கையில் கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்கிறது. மனம் திடகாத்திரம்தான் அதான் இவ்வளவு தூரம் ஏறியாகிவிட்டது. திடகாத்திரத்திற்கும் தளர்ச்சிக்கும் இடையில் மனம் பெண்டுலம் போல் ஆடத்தான் செய்கிறது.

10 நிமிடம் நடை ஒரு மாமாங்கம் போல் இருந்தது. மன ஓட்டத்திற்கு ஒரு நிமிடம் போதுமே 44 வருடத்துக் கதையையும் ஓட்டிவிடும்.

கோயிலில் அப்போதுதான் திரை போட்டிருந்தார்கள். மனப் பெண்டுலம் கொஞ்சம் நேரம் அசையாது. அப்படி நம்பினேன்.

கோயில் வாசல், கொடிமரம் கீழ் எல்லாம் முந்தைய நாள் கோலச் சிதறலுடன், வாடிய பூக்களுடன் இருந்தது. நவகிரஹம் சுற்றியும் எண்ணை, தண்ணீர் மினுமினுப்பு. வழுக்கிவிடும். ஊர்ப்பெரியவர் 85 வயதுக் கிழம் அமைதியாக இருந்தார். ஆச்சரியம்.

“ஒரு நாள் அந்தப் பிள்ளை வரலைனா, உம்ம கோயில் பக்தர்கள்னு சொல்லிக்கிட்டு இம்புட்டு பேர் நிக்கால்லா அதுல ஒரு ஆளு கூட வாசலை தூத்து கோலம் போடல... நவகிரகத்தை தண்ணி, எண்ணைனு கொட்டி பூவ போட்டு, சுத்தி நடக்க இடமெல்லாம் எண்ணையாக்கி வைக்கா...ஆனா கழுவி தொடைக்க இந்தக் கூட்டத்துல ஒரு ஆளில்ல...இது என்னவே பக்தி?”

“சாமி நம்பிக்கை இல்லாத்தவரு எதுக்குக் கோயிலுக்குள்ளார வரணும்? தலையிடணும்” கூட்டத்தில் ஒருவர் குரல் உயர்த்தினாராம். நான் கோவிலுக்குக் செல்ல முடியாத அன்று இது நடந்ததாகக் காதில் விழுந்தது.

இறை நம்பிக்கையைப் பற்றிய தவறான புரிதல். பெரியவர் தொழ மாட்டார்தான் ஆனால் ஊருக்கு நல்லது செய்து வருபவர்.

“பாரு, அங்க நேத்து பிரசாதம் சாப்பிட்ட தொன்னை, பேப்பர் ப்ளேட்டு எல்லாங் கெடக்கு. நானும் வாரேன் அள்ளிப் போட்டுருவம்” 85 வயதுக் கிழம்!

குருக்கள் அழைத்தார்.

“அம்மா கொஞ்சம் இங்க வாம்மா.....அம்பாள் அபிஷேக தீர்த்தம் ப்ரோஷணம்.”........“அம்பாளோட அனுக்ரஹம் நோக்கு எப்பவும் உண்டு. சகல சௌபாக்யமும் ப்ராப்திரஸ்து.” மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

சிறு வயது முதலே விடியற்காலையில் கோவிலுக்குச் சென்று சுத்தம் செய்து கோலம் போட்ட பழக்கம் திருமணமாகி வந்த பிறகும் தொடர்கிறது. திருமணம் ஆன போது ஊர் குருக்கள் சொன்னதும் இதேதான்... “நீ இப்படி கைங்கர்யம் செய்யற பாரு, நீ வாழ்க்கைல அமோகமா இருப்பேன்னு அம்பாள் அருள்வாக்கு. சாட்சாத் அந்த அம்பாளோட அனுக்ரஹம் உன் கூடவே இருக்கும்...வேணா பாரு...”

“நான் அப்படி எதுவும் அம்பாள்கிட்ட எதிர்பார்த்து இதைச் செய்யலை மாமா”

“நீ குறிச்சு வைச்சுக்கோ. அப்புறம் நீ வந்து சொல்லுவே, மாமா நீங்க சொன்னது சரின்னு”

இப்போதைய நிலையைச் சொன்னால் அவர் பதில் என்னவாக இருக்கும்? வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். பெரியவர் திரும்பிப் பார்த்தார். சமாளித்தேன்.

வாயிலிலும் கொடிமரத்தின் கீழும் கோலம் போட்டுவிட்டு பிராகாரத்தில் நவகிரகங்களின் கீழ் சுத்தம் செய்யச் சென்ற போது, பெரிய ருத்ராஷ மாலையை அணிந்து கொண்டு பாராயண, வியாக்யான வகுப்பு நடத்தும் ருத்ராஷ பாட்டியின் தற்போதைய சிலபஸ் பீஷ்ம பர்வம் நடந்து கொண்டிருந்தது. வழக்கமான 4 சிஷ்யைகள்.

பீஷ்மர் அம்புப் படுக்கை என்று பொதுவான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகள் போதுமே! மனம், நவகிரஹ மேடையைச் சுற்றிலும் கீழும் மேலும் துடைத்துக் கொண்டே, நழுவியது.

பீஷ்மர் உணர்வுகளின் உச்சத்தில் எடுத்த சத்தியப் பிரமாண சபதங்கள் அதைக் காப்பாற்ற வேண்டியதனால், விரும்பாத நிகழ்வுகளைத் தடுக்க இயலாத நிலைமை…. மாபெரும் வம்சம், குடும்பத்தைக் காக்க வேண்டியவர், அது பிளவுபட்டு அழிய தானும் ஒரு காரணமாகிவிட்டோமே என்ற உணர்வுகள்தான் கேள்விக் கணைகள் அவரை வாட்டி நாம் சொல்வோமே முள் மேல இருக்காப்ல இருக்குன்னு அப்படி அதுதான் அம்புப் படுக்கையோ என்று தோன்றும்.

ஒரு வகையில் நானும் அப்படித்தானோ? கல்யாணத்தின் போது… “புகுந்த வீட்டுல என்ன சொன்னாலும் பொறுத்து, சுமூகமா நடந்துக்கணும், பொசுக்குனு இங்க வந்து நின்னுடக் கூடாது, இருக்கறதுக்கு ஏத்தாப்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என் குணம் தெரிந்த உறவுகள் - அம்மா, அப்பா அண்ணாவின் அட்வைஸ். கண்டிஷனிங்க்! எங்கேனும் நான் அவர்களை அண்டி வந்துவிடுவேனோ அல்லது பிரிந்துவிடுவேனோன்னு பயம்.

உணர்சிக் குவியலில் நான் விட்ட சபத வசனங்கள் “என்ன கஷ்டம் வந்தாலும் பொறந்தாத்து வாசலைத் தட்டமாட்டேன். புகுந்த வீட்டை விட்டுப் பிரிந்து செல்லமாட்டேன்… அன்றைய சத்தியப் பிரமாணம். அதைக்காப்பாற்றும் வைராக்கியம். இயலாமையினால் பயத்தினால் சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல்….இப்போது வரை....

“முட்டாள்தனமான சத்தியப் பிரமாணம், வைராக்கியம். ஏன் உன் சம்பாத்தியத்துல தனியா வந்து வாழ்ந்திருக்க முடியாதா” –என் பெரிய பெண்ணின் இடித்துரைத்தல். தான் மேஜர் ஆகிவிட்டேன் என்பதை ஸ்தாபித்தல். இருக்கலாம். வேலைக்கும் சென்று, பொங்கிக் கொட்டி, உபரியாக ட்யூஷனும் எடுத்து, செலவுகளைச் சமாளித்து, கணக்குப் பார்த்து சேமித்தல், பெரியவர்களின் ஆரோக்கியம் மருத்துவத்தைக் கவனித்து, நிர்வகித்து......மனம் விரக்தியில் தளரத்தான் செய்கிறது.

சுத்தம் செய்து நிமிர்ந்த போது “இங்க வாம்மா,” பாட்டியின் குரல் என் மன ஓட்டத்தைக் கலைத்தது. யாரைக் கூப்பிடுகிறார் என்று பார்த்தேன் என்னைத்தான்.

“போன தடவை அபிமன்யூ சக்கரவ்யூகத்துக்கு ஏதோ வியாக்யானம் நீ புரிஞ்சுண்டதுன்னு சொல்ல வந்தியே அதை இவாளுக்குச் இப்பச் சொல்லேன்”

“ஓ! அதுவா! பாட்டி! எனக்கு அவ்வளவு வித்வத்லாம் கிடையாது, நான் மஹாபாரதத்தை இதிகாசம்னு எல்லாம் பாக்கலை. கதைல வர ஒவ்வொரு கேரக்டர்... மனரீதியா, அதுல நாம கத்துக்கறதுன்னு பார்க்கறேன். ஏதோ நானா கற்பிச்சுண்டத எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்...அபிமன்யுக்கு சக்கரவியூகத்துக்குள்ள போகத் தெரிஞ்சுது ஆனா வெளில வரத் தெரியலை. கிருஷ்ணர் சக்கரவ்யூகம் பத்தி சொல்றதுல உள்ள போறது அபிமன்யுவுக்குத் தெரியும் அதுலருந்து வெளில வர யுக்தி தெரியாமல் போறதோட ஒருத்தர்னு இல்லாம அத்தனை பேரும் ரவுன்ட் கட்டி தாக்கறா

அப்படித்தானே நம்ம வாழ்க்கைச் சக்கரமும்! அதன் வ்யூகமும்! பிறக்கும் போதே வாழ்க்கைச் சக்கரத்துக்குள்ள வந்துடறோம். அப்பலருந்தே நம்மைச் சுத்தி எத்தனைச் சிக்கல்கள், பிரச்சனைகள் நம்மைத் தாக்கறது? வளர வளர பேராசை, சொத்துக்குச் சண்டை, ஈகோ, சூழ்ச்சி, பகை, கோபம், குரோதம், பொறாமை, நம் நாக்கு, நம் செயல்கள்னு வாழ்க்கைச் சக்கரவ்யூகம்.

அதுவா வர சிக்கல்கள், பிரச்சனைகள்.....பீஷ்மர் மாதிரி உணர்ச்சிகள்ல எடுக்கற சபதம், முடிவுகள்னு நாமளே ஏற்படுத்திக்கற பிரச்சனைகள் எல்லாம் நம்மைச் சுத்தி சுழற்றித் தாக்கறது. ஒண்ணா ரெண்டா? நிம்மதி இல்லாம மீண்டு வரத் தெரியாம தவிக்கறோம்.

மீள்றதுக்கான நல்ல விஷயங்கள் இருக்குதான். ஆனா நாம வறட்டு வேதாந்தம் பேசிண்டு நிலைக்காத வெளி சந்தோஷத்தை தேடறோம். நிரந்தரமான உள் சந்தோஷத்தைத் தேடறது லேசுபட்ட காரியமில்லை. அதை அடையறதுக்குப் பிரயத்தனப்பட்டாலும் மனசு முழுசும் வேண்டாத பொதிகள்னா நிறைஞ்சுருக்கு! ஒவ்வொண்ணா துரத்தி துரத்தி அழுத்தறதே! அப்புறம் எப்படிச் சக்கரவ்யூகத்துலருந்து..............

ஃபோன் குறுக்கிட்டது.

பெரிய பெண்ணிடமிருந்து அழைப்பு. “அம்மா, அப்பா டென்ஷன். நீ இன்னும் வரலைன்னு... தாத்தாக்கு இன்னும் லூஸ் மோஷன், வாமிட்டிங்க் வேற... சீக்கிரம் வா...”

59 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்.

    கீதா ரங்கன்(க்கா), கமலா ஹரிஹரன் மேடம் இவங்களோட சிறைகதையை சட்னு படித்துவிட முடியுமா? நெடுங்கதையாக இருக்குமேன்னு யோசித்தேன். படிக்கும் அளவிலான கதை. இதோ படிக்கிறேன். (By the by கமலா ஹரிஹரன் அவர்கள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கீதா ரங்கன்(க்கா), கமலா ஹரிஹரன் மேடம் இவங்களோட சிறைகதையை சட்னு படித்துவிட முடியுமா? /

      ஹா ஹா ஹா. சிறைகதை....! யாருக்கு சிறை? படிக்கிறவர்களுக்கா? :))) சிறையில் மாட்டிக் கொள்வது போல படிக்கிறவர்கள் வேறு வழியின்றி கட்டுண்டு படிக்கிற மாதிரி எழுதினால் நல்லதுதானே.. ஹா ஹா ஹா. ஆனால். சகோதரி கீதாரெங்கன் அவர்கள் எழுதும் கதை உணர்வு பூர்வமாக நன்றாகவே சுவாரஸ்யமாக நகரும். என்னைப் போல் வளவளவென்று எழுத மாட்டார். கொஞ்ச நேரம் சென்று கதையை படித்து விட்டு வருகிறேன். நேற்றும் எந்த பதிவுகளுக்கும் கருட பஞ்சமி காரணமாக வர இயலவில்லை. .மன்னிக்கவும்.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா நெல்லை!!!

      கமலாக்கா அப்படில்லாம் ஒன்னுமில்லை...நீங்களும் நல்லா எழுதறீங்க..

      ஓ கருட பஞ்சமி? அதுக்கு என்ன செய்வீங்க அக்கா?

      மிக்க நன்றி நெல்லை அண்ட் கமலாக்கா..

      ஒரு 4, 5 நாளைக்கு வேலைப்பளு...ஏதோ நம்மாலானது வீட்டுக்கு...ஓட றேன் கருத்துகொடுத்து

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி.

      /ஓ கருட பஞ்சமி? அதுக்கு என்ன செய்வீங்க அக்கா?/

      வீட்டிலேயே நாகருக்கும், கணபதி விக்கரங்களுக்கும் அபிஷேகம் செய்வித்து, பழம் தேங்காயுடன் நம்மால் இயன்ற நேவேத்தியங்களை வைத்து வழிபட்டு நோன்பு கயிறை கைகளில் கட்டிக் கொள்வோம். . இது எங்களுக்கு உடன் பிறந்தான் நோன்பு. முன்பு அருகிலிருக்கும் கோவில்களிலுள்ள அரசமரத்தடிக்குச் சென்று அங்கிருக்கும் நாகர், விநாயகரை வழிபடுவோம். இப்போது அப்படியெல்லாம் இயலவில்லை.

      "வீடு பேறு" எப்படி கிடைத்தாலும் சரியென விட்டு விட்டு வீடுதான் சொர்க்கமென்று நினைத்து நிறைய வருடங்கள் ஆகி விட்டது. ஹா ஹா ஹா. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. ஓ! அப்படியா கமலாக்கா...நன்றாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      வீடுதான் சொர்கம் - ஹாஹாஹா அக்கா கடமைகள் இருக்கறப்ப..... அதெல்லாம் இறைவன் கோபித்துக்கொள்ள மாட்டார். கடமைகள் முதலில்னுதானே! சொல்லப்படுகிறது.

      தகவலுக்கு மிக்க நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
  2. கஷ்டப்பட்டு வரைந்தால் யாரும் கருத்துக் கூறுவதில்லை என்பதால் கௌதமன் அவர்கள் படம் போடவில்லை போலிருக்கு.

    மீண்டும் நடிக்க வந்துள்ள அனுஷ்கா, ஜெயிலர் மிர்னா மேன்ன் போன்றவர்களின் படங்களையாவது இணையத்திலிருந்து கோர்த்திருக்கலாம் (அதற்காக ஜெயிலர் பட தமன்னா பாட்டியா -வேணும்னுதான் B உபயோகிக்கலை, படத்தைப் போட்டுடக் கூடாது சொல்லிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் படித்தேன். இதுக்கு கமலா காமேஷ் (80 களின்) படம்தான் சரிப்பட்டு வரும்.

      நீக்கு
    2. நீங்க ஒன்னு அவர் தோசை வரையரதில் மும்முரமாக இருக்கார்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் உங்களுக்கு மிக்க நன்றி...கடைசில அந்த ஃபோன் குறுக்கிட்ட வரி சேர்த்ததுக்கு.....எனக்கு லேட்டா தோணிட.....நீங்களோ அழகா சேர்த்துட்டீங்க...நன்றியோ நன்றி

      கதை வெளியிட்டதுக்கும் எபிக்கும் உங்களுக்கும் நன்றி

      கீதா

      நீக்கு
    4. பாவம் கௌ அண்ணா....அவருக்கு வரைய நேரம் கொடுக்கவே இல்லையே நான்....................ஹாஹாஹாஹா...நான் அனுப்பியது லாஸ்ட் மினிட்....பாவம் ஸ்ரீராம்...கௌ அண்ணா....இதுவே தட்டி கொட்ட நேரமில்லாமல் பாதி இருந்ததை முடிச்சு அனுப்பினேன்

      கீதா

      நீக்கு
  3. ஓ இன்னுமொரு அம்பையா? வாழ்க்கையை சக்கர வியூகம் ஆக உருவகப்படுத்தி ஒரு கரு கிடைத்தது. ஆனால் அந்தக் கருவை நோக்கி செல்லும் பாதை கரடுமுரடான ஒன்று என்று பல எதிர்மறை சிந்தனைகளை கொட்டியிருக்கிறீர்கள். எதிர்மறை நேர்மறை ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதைக்கு ஒரு படமும் சேர்த்திருக்கலாம்.

    மொத்தத்தில் கதை என்னவோ ஒரு முழுமை அடையாமல் பாதியில் தொங்கி நிற்பதாக தோன்றுகிறது.. இப்படி நக்கீரன் போல் சொல்வதற்கு மன்னிக்கவும். மன்னிக்கவும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா.

      கதை முடிவு இருக்கே...

      ஜஸ்டிஃபிக்கேஷன் அல்ல ஒரு சிறு விளக்கம் ......அதாவது இப்படியான வாழ்க்கை தொடர்கிறது.....முடிவு என்பது திரைப்படமா அண்ணா? 2 1/2 மணி நேரத்தில் சுபம் போட? அதுவும் சுபமா ? டக்குனு வாழ்க்கையில் சுபம் வந்திடாதே. சுபம் என்பது அவரவர் மன நிலையில் இருக்கு. அதைத்தான் இங்கு சொல்ல ஒரு முயற்சி
      ...பலருக்கும் at some point in life ஒரு விர்க்தி வரலாம் அது நீடிக்கலாம்...சுபமாக முடிக்க வேண்டும் என்றால் திணிப்பாக இருக்கும் ...என்று நினைத்தேன்

      அதாவது ஒவ்வொருவரது வாழ்விலும் சிக்கல்கள் உண்டுதான் அதை நாம் ஏதோ ஒரு தத்துவத்தைக் கொண்டு கடந்து சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா அப்ப அது நெகட்டிவா? அப்படி இந்த கேரக்டருக்கும் ஒரு கற்பிதம்...அவள் மீண்டும் வர முயலலாம் அது இப்ப தெரியாதே!!!!!!!!!!!!!!

      ஸோ வியூகத்திலிருந்து அவள் வெளிவரவில்லை என்ற முடிவு a temporary!!

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. சிறுகதை பிடித்திருந்தது.

    வாழ்வு என்பது சக்கரவியூகமல்ல. அப்படி நினைத்து யாரும் திருமணம் செய்துகொடுப்பதில்லை. இரட்டை மாட்டு வண்டின்னு நம்புகிறார்கள். ஒரு மாடு சள்ளையோ இல்லை நொண்டியாகவோ ஆயிடுச்சுன்னா இன்னொன்றுதான் பாரம் சுமக்கணும். வண்டிக்காரன், நல்ல மாட்டுக்குத்தான் அடியும், வேகமாகப் போ என்ற அதட்டலும் கொடுப்பீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை

      திருமணத்துக்கும் வியூகத்துக்கும் தொடர்பு இல்லையே....தனியா இருந்தாலும்தான் சிக்கல்கள்.

      ஒரு மாடு சள்ளை - என்றால் அதன் கஷ்டம் அந்த ஷூவுக்குள் இருந்தால்தான் தெரியும்னு எனக்குத் தோன்றும்.

      எத்தனை குடும்பங்கள் ஒரு ஊதியத்தில் காலம் தள்ளறாங்க...ஊதியமே இல்லாம கூட....என் நெருங்கிய சொந்தத்தில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்....எப்படி இப்படி தானாக வரவழைத்துக் கொண்ட சிக்கல்கள்....அதிகமோ அதிகம்....இப்ப ஊதியமே இல்லாம அக்கா தங்கைகள் உதவிட ...என்னவோ ஓட்டுகிறார் அவர்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. கோவிலைப் பற்றி (பக்தர்கள், தரிசனம் ஆனால் கோவிலுக்கான சேவைகள் செய்யாத்து) நிறைய எழுதலாம். இன்று கொஞ்சமா எழுதப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்க நெல்லை.

      நானும் சொல்ல நினைபப்துண்டு....எழுதியும் வைத்தேன் அதில் ஒரு சின்ன பிட் இக்கதையில்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. வீட்டில் மனைவிக்குத்தான் வேலைகள் ஏராளம். மற்றவர்களின் அதிருப்திக் குரல்களும். இதுதான் நிலைமை. இதை மனம் எண்ணிப் பார்க்கும்போது வருத்தமுறும். இன்னும் நாகரீகமாக. சாஃப்டாக, புரிந்துகொண்டு நடந்திருக்கலாம், பேசியிருக்கலாம் என்று. வெளியில் வாய்விட்டு மன்னிப்பு கேட்டால் (தினமும்... ஹா ஹா ஹா), பண்றதையும் பண்ணிட்டு மன்னிப்புன்னு சொன்னால் ஆச்சா... என்ற பேச்சு வரும். மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  8. வீட்டில் மனைவிக்குத்தான் வேலைகள் ஏராளம். மற்றவர்களின் அதிருப்திக் குரல்களும். இதுதான் நிலைமை. இதை மனம் எண்ணிப் பார்க்கும்போது வருத்தமுறும். இன்னும் நாகரீகமாக. சாஃப்டாக, புரிந்துகொண்டு நடந்திருக்கலாம், பேசியிருக்கலாம் என்று. வெளியில் வாய்விட்டு மன்னிப்பு கேட்டால் (தினமும்... ஹா ஹா ஹா), பண்றதையும் பண்ணிட்டு மன்னிப்புன்னு சொன்னால் ஆச்சா... என்ற பேச்சு வரும். மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....அதான் இஅங்க ரெண்டு தடவை கூகுள் போட்டு டுச்சே!!!!

      மன்னிப்பு எல்லாம் தேவையே இல்லை நெல்லை....புரிந்து கொண்டு உதவியாக அல்லது அம்பு போலான வார்த்தைகள் சொல்லாம இருந்தாலே போதும்...ஆனா இங்க வர நீங்க எல்லாருமே வீட்டில் உதவுபவர்கள்தான்.

      ஆனா இன்னொரு தத்துவம்/உளவியல்ல சொல்ற ஒரு பாயின்ட் இங்க வந்துரும்.....மற்றவர்களால் உன்னை புண்படுத்த முடியாது உன் மனம் உன் கையில்னு...

      மிக்க நன்றி நெல்லை....கருத்துக்கு

      கீதா

      நீக்கு
    2. //அம்பு போலான வார்த்தைகள் சொல்லாம// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மன்னிப்பு இதற்கும் சேர்த்துத்தான் (அதுவும் தினமும் ஹா ஹா ஹா)

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா நெல்லை....ஓ அதான் இங்க ரெண்டு தடவை!!! ஓகே ஒகே!!!

      கீதா

      நீக்கு
  9. கதைக்குள் நுழைந்ததும் எல்லாம் புரிந்தது மாதிரியான நினைப்பு..

    நேரம் ஆக ஆக நன்மைச் சுற்றி ஏதேதோ பிரச்னைகள்.. எண்ணங்கள்..

    இதுதான் சக்கர வ்யூகமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா துரை அண்ணா....என்னவோ எனக்குத் தோன்றியதை எழுதினேன் அம்புட்டுத்தான்...

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அழுத்தமான கதை..

    இம்மாதிரியான கதைகளின் வழக்கப்படி
    வாசகனை -

    கதையின் நிறைவில் அண்ணாந்து பார்க்க வைப்பது வழக்கம்..

    அதுவே நடந்திருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா. இதன் அர்த்தம் டக்குனு எனக்குப் புரியலைனாலும்....

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    2. துரை அண்ணா, புரிந்தது. மிக்க நன்றி அண்ணா உங்க பாராட்டுக்கு!

      கீதா

      நீக்கு
  12. பல குடும்பத்து பெண்களின் மனக்குமுறல் இங்கு கதை வழியாக வெளியேறி இருக்கிறது.

    நினைவுச் சிதறல்களை சொன்ன விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி, கதையைப் புரிந்து கொண்டமைக்கு....

      கீதா

      நீக்கு
  13. //மனதின் ஆற்றாமை கண்களில் உடைந்துவிடும் நிலை. 10 நிமிட நடையில் ஒரு சரித்திரக் கதையையே படைத்திடும் திறனுடன் குதிரைப் பாய்ச்சலில் ஓடும் மனம்.//
    உண்மை தான்! ராஜ பாட்டையில் நாலு கால் பாய்ச்சலில் பறந்து செல்லும் குதிரையாய் பயணிக்கிறது கதை!
    ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பொங்கித்ததும்பும் வரிகள்! சக்கர வியூகத்திலிருந்து வெளியே வர விரும்பாத, முந்தைய காலத்துப்பெண்ணின் மனச்சிதறல்களை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா!! இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பொங்கித்ததும்பும் வரிகள்!

      ஆ! மனோ அக்கா !!! பெரிய வார்த்தையோ!! மிக்க நன்றி ஆனால் சந்தோஷமாக இருக்கு

      முந்தைய காலத்து என்றாலும்....இப்போதைய தலைமுறையைத்தவிர்த்து 50 களில் அதற்கு மேலும் இருக்கும் பெண்கள் உட்படத்தான்.

      வியூகத்திலிருந்து வர விரும்பாத என்பதை விட வரத் தெரியாமல் என்று சொல்லலாமோ...பலருக்கும் அதுதானே கடினமாக இருக்கு. இல்லையா..

      உங்கள் பாராட்டுக்கு, ஊக்கமான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி மனோ அக்கா.

      கீதா

      நீக்கு
  14. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அவ்வளவு எளிது இல்லை...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி.

    அருமையான கதை. சில வரிகளை படிக்கும் போதே மனதை நெகிழ வைத்து விட்டீர்கள். பெண்களுக்கென (அதிலும் திருமணமான, அதிலும் மனதில் பொறுமையாக புகுந்த வீட்டினர் அனைவருக்கும் விட்டுத் தரும் மன இயல்புடைய ) ஏற்படும் வீட்டு பிரச்சனைகளை அழகாக விவரித்து காட்டியது தங்களின் அருமையான நடையமைப்பை கொண்ட கதையின் எழுத்துக்கள். .கதையின் சில இடங்களில், ஒன்றி படிக்கும் போது கண்களுகிடையே கண்ணீர் எட்டிப் பார்த்தது. (அனுபவங்களின் பாடம் தந்த வலியாக இருக்குமோ?)

    இப்போது மாறிய காலங்கள் , ஒரு வகையில் இந்த மாதிரியான குணநலத்தை கொண்ட பெண்களுக்கு ஒரு மாறுபட்ட தீர்வைத்தான் தந்துள்ளது. ஆனாலும், தெய்வம் (விதி) ஏதோ ஒரு வகையில் சோதனைகளை தந்தபடியும் இருக்கிறது.

    கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. வாழ்க்கையும் ஒரு போரின் குணநலன்களை கொண்டதுதான் என சக்கர வியூகத்தைப் பற்றி அருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே வியூகத்தின் ஊடேயே ஒரு அம்பு வந்து தாக்குகிறது மாதிரி கதையை முடித்துள்ளீர்கள். கதையின் உண்மையான முடிவுக்கு பாராட்டுக்கள்.நல்ல எழுத்து வளம். வாழ்த்துகள் சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா எனக்குத் தெரியும் கமலாக்கா....நான் நெல்லைக்கும் ஜெ கே அண்ணாவுக்கும் கருத்து கொடுக்கும் போது குறிப்பிட நினைத்துச் சொல்லவில்லை வேண்டாம் என்று.

      போராட்டங்கள்தானே பலருக்கும் ஆனால் அதிலிருந்து மீண்டு வரத் தெரியாம தவிக்கும் கேரக்டர்கள் அதுதான் கதை.. தொடர்ந்துகொண்டுதானே இருக்கு இல்லையா?

      கதையை புரிந்துகொண்டு பாராட்டி கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி கமலாக்கா...

      இப்போதைய தலைமுறை பெண்களுக்கான சிக்கல்கள் பெரும்பாலும் அவங்களாகவே வரவழைத்துக் கொள்பவை என்று எனக்குத் தோன்றும் கமலாக்கா.

      துஷ்யந்த் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் சொன்னது - முன்ன எல்லாம் வயசானவங்க தத்துவ, உபன்யாசங்களுக்கு வருவாங்க ஆனா இப்பல்லாம் இளம் தலைமுறையினரும் வரத் தொடங்கியிருக்காங்கன்னு. ஸோ வாழ்க்கைல ஏதோ ஒரு தத்துவார்த்தம் தேவைப்படுகிறது வாழ்க்கையைக் கடந்து செல்ல...மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ள. ஏற்க முடியாதவங்க அவஸ்தைப் படறாங்க...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. /துஷ்யந்த் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் சொன்னது - முன்ன எல்லாம் வயசானவங்க தத்துவ, உபன்யாசங்களுக்கு வருவாங்க ஆனா இப்பல்லாம் இளம் தலைமுறையினரும் வரத் தொடங்கியிருக்காங்கன்னு. ஸோ வாழ்க்கைல ஏதோ ஒரு தத்துவார்த்தம் தேவைப்படுகிறது வாழ்க்கையைக் கடந்து செல்ல...மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ள./

      உண்மைதான் சகோதரி. அப்படி மனதை சமாதானப்படுத்திக் கொண்டால்தான் ஒவ்வொரு நாட்களாக நம்மை கடக்கும் நம் வாழ்க்கை "கையூன்றியபடி" நகரும்.

      நீக்கு
    3. ஆமாம், எனக்குத் தெரிந்த நட்பு, அவர் வீட்டில் நெருங்கிய உறவுகள் வந்து, உதவியாளர் வேறு வரலை. எல்லாரும் வெளியில் போய்விட, நட்பு அவங்கதான் வீட்டில் எல்லா வேலைகளும் செய்ய வேண்டியதானது. சாப்பிட்ட தட்டு கூடக் கழுவாம அடுத்த வேளைக்குத் தட்டு வேண்டுமே எல்லாம் க்ளீன் செய்து கால் கடுக்கிறது என்று பாவம்..

      உங்களுக்கும் பொறுப்புகள் உண்டு என்று தெரியும் ..

      கீதா

      நீக்கு
  16. //உணர்சிக் குவியலில் நான் விட்ட சபத வசனங்கள் “என்ன கஷ்டம் வந்தாலும் பொறந்தாத்து வாசலைத் தட்டமாட்டேன். புகுந்த வீட்டை விட்டுப் பிரிந்து செல்லமாட்டேன்… அன்றைய சத்தியப் பிரமாணம். அதைக்காப்பாற்றும் வைராக்கியம். //என்னை நானே திரும்பிப் பார்த்துக்கொள்ள வைத்த இடம். இதே தான் என் சபதமும். ஒரு வழியாகப் பெண் கல்யாணத்தில் நிறைவேறியது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா கீதாக்கா உங்களையும் நினைத்துக் கொண்டேன். நீங்க சில கருத்துகள்ல சொல்லிருக்கீங்க.
      இப்படி பலருக்கும் நடந்திருக்கும் தான். என்ன கஷ்டமனாலும் பொறுத்துப் போணும்...என்ற அட்வைஸ், நாம அங்க போகமாட்டோம்னு...

      இப்ப சமீபத்துல என் தங்கை பென் திருமணம் நடந்ததே அப்ப கூட என் தங்கை அவ பெண்ணுக்கு, இங்க கத்தறா மாதிரி அங்க போய் கத்தக் கூடாது, அவாகிட்ட அமைதியா மரியாதை கொடுத்து நடந்துக்கணும் இப்படி ஏகப்பட்ட அட்வைஸ். இத்தனைக்கும் குழந்தை ரொம்ப நல்ல பொண்ணு. பாட்டி தாத்தா பெரியப்பா அத்தை என்று உறவுகளோடு வளர்ந்த பெண். அதுவும் பாட்டி தாத்தா....அப்படியும் என் தங்கை அட்வைஸ் செய்துதான் அனுப்பினாள்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது கீதா. எழுத்து நடை திருமதி .லட்சுமி அவர்களை நினைவு படுத்துகிறது. அவர் கதையில் வரும் கதாநாயகிகளை நினைவூட்டுகிறது.

    “என்ன கஷ்டம் வந்தாலும் பொறந்தாத்து வாசலைத் தட்டமாட்டேன். புகுந்த வீட்டை விட்டுப் பிரிந்து செல்லமாட்டேன்… அன்றைய சத்தியப் பிரமாணம். அதைக்காப்பாற்றும் வைராக்கியம். இயலாமையினால் பயத்தினால் சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல்….இப்போது வரை...//

    இப்படித்தான் சில பெண்களின் வாழ்க்கை இருக்கிறது.

    //முட்டாள்தனமான சத்தியப் பிரமாணம், வைராக்கியம். ஏன் உன் சம்பாத்தியத்துல தனியா வந்து வாழ்ந்திருக்க முடியாதா” –என் பெரிய பெண்ணின் இடித்துரைத்தல். தான் மேஜர் ஆகிவிட்டேன் என்பதை ஸ்தாபித்தல். இருக்கலாம். வேலைக்கும் சென்று, பொங்கிக் கொட்டி, உபரியாக ட்யூஷனும் எடுத்து, செலவுகளைச் சமாளித்து, கணக்குப் பார்த்து சேமித்தல், பெரியவர்களின் ஆரோக்கியம் மருத்துவத்தைக் கவனித்து, நிர்வகித்து......மனம் விரக்தியில் தளரத்தான் செய்கிறது.//

    குடும்பத்திற்கு உழைத்து குடும்ப நன்மைக்காக தன்னை அர்பணித்து கொண்டாலும் சில நேரங்களில் மனம் தளரத்தான் செய்யும்.

    //மீள்றதுக்கான நல்ல விஷயங்கள் இருக்குதான். ஆனா நாம வறட்டு வேதாந்தம் பேசிண்டு நிலைக்காத வெளி சந்தோஷத்தை தேடறோம். நிரந்தரமான உள் சந்தோஷத்தைத் தேடறது லேசுபட்ட காரியமில்லை. அதை அடையறதுக்குப் பிரயத்தனப்பட்டாலும் மனசு முழுசும் வேண்டாத பொதிகள்னா நிறைஞ்சுருக்கு! ஒவ்வொண்ணா துரத்தி துரத்தி அழுத்தறதே! அப்புறம் எப்படிச் சக்கரவ்யூகத்துலருந்து.........//

    அதுதானே! எப்படி இந்த சக்கரவ்யூகத்திலிருந்து மீள்வது?

    //பெரிய பெண்ணிடமிருந்து அழைப்பு. “அம்மா, அப்பா டென்ஷன். நீ இன்னும் வரலைன்னு... தாத்தாக்கு இன்னும் லூஸ் மோஷன், வாமிட்டிங்க் வேற... சீக்கிரம் வா...”//

    மீண்டும் கடமை அழைக்கிறது, நினைவுகளை துரத்திவிட்டு கடமையை செய்ய தயார் ஆகி விட்டார்.



    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம், என்னதான் வீராப்பாக சொல்லிக் கொண்டாலும் பல நேரங்களில் மனம் தளரத்தான் செய்யும். செய்கிறது. நம்ம மனசு சும்மாவா இருக்கு!!!! என்னென்னவோ எண்ணங்கள்....என்னென்னவோ முடிவுகள் என்று...பழசு புதுசு என்று.....சுற்றி சுற்றி...அழுத்தம்தான்.

      ஆமாம் கடமைகள் இருந்து கொண்டேதானே இருக்கும் இப்படியான கேரக்டர்களுக்கு.

      மிக்க நன்றி கோமதிக்கா உங்கள் பாராட்டுகளுக்கும். நீங்கள் இது வரை பிசி. நான் இன்னும் 4 நாட்களுக்குப் பிசி. பணி வந்திருக்கு.

      மிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்துக்கு

      கீதா

      நீக்கு
  18. தினமும் வாசலிலும், கொடிமரத்தின் கீழும் சன்னதியிலும் பெருக்கிக் கழுவி கோலம் போட்டு ப்ராகாரத்தில் இருக்கும் நவக்கிரகத்தைச் சுற்றிக் கழுவி துடைத்து விடுவது வழக்கம்.//

    முன்பு சிறு வயதில் நீங்களும் இப்படி செய்து இருக்கிறீர்கள் அல்லவா கீதா?

    கதைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிkக்கா..திருமணம் ஆகும் வரை..அதன் பின் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே. இப்ப இருக்கற பகுதிக்கு முன்ன இருந்த பகுதில செய்ததுண்டு.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  19. எனக்கு ஒரு குறை. இவ்வளவு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு சிறுகதைக்கு ஏன் கதையை அலசும் விதத்தில் வித்தியாச கோணங்களில்
    பின்னூட்டங்கள் வரவில்லை என்று. காத்திருந்தேன். எபி வாட்ஸாப் குழுவிலும் இந்தக் கதையை ஒற்றிப் போட்டும் பலனில்லை.
    எழுதுவோரிடம் உற்சாகம் அதிகரிக்க இந்த விஷயத்தில் குறை வைக்கக் கூடாது என்ற கோரிக்கையோடு என் பார்வையில் சகோதரி கீதா ரெங்கனின் கதைச் சிறப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. பெண்போராளி எழுத்தாளர் போல வர்ணிக்கப்பட்ட அம்பை பற்று ஜெஸி ஸார் குறிப்பிட்டிருந்தார். அவர் கால எழுத்தெல்லாம் சமையலறைக்குள்ளேயே முடங்கிப் போயிற்று. மாமியார் - மருமகள் கருத்து மோதல் என்றால் வரிந்து கட்டும் பின்னூட்ட காலமும் பழசாச்சு.

      இந்தக் கதையை வாசித்து முடித்ததும் தான் தொடரும் துவந்த யுத்தத்தின் இன்னொரு வகை பரிமாணம் புரிந்தது.

      நீக்கு
    3. தான், தன் புருஷன், தன் குழந்தைகள் மட்டும் தான் தன் குடும்பம் என்று லஷ்மணக் கோடு போட்டுக் கொண்ட
      மகளிர் குழாமிடமிருந்தும் விடுபட்ட கதையின் வாசிப்பு இது வரை யாருமே தொடாத ஒன்று.

      நீக்கு
    4. மிக்க நன்றி ஜீவி அண்ணா விரிவான அலசல் கருத்திற்கு.

      சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் மனதில் பதியும். சில மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும். அல்லது பாதிக்கும். அதைக் கொஞ்சம் உளவியல் ரீதியில் சென்று பார்ப்பது வழக்கம். அப்படித்தான் பெரும்பாலும் எழுதுவதும்.

      அப்படி உருவான ஒன்றுதான். என் தலைமுறை வரை அல்லது என்னைவிடக் கொஞ்சம் பின்னாடி 50களில் இருக்கும் பெண்கள் வரை பார்க்கலாம் இப்படி.

      நாம் பொதுவாகவே நகரத்து வாழ்க்கையை மட்டும் பார்ப்பதால்தான் பல பரிமாணங்கள் கருத்துகள் அதன் படிப்டையிலேயே பேசிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சாம் சிறிய ஊர்களுக்குப் போனால் பல குடும்பங்களில் தாத்தாபாட்டிகளைக் காணலாம். நான் போகும் ஒவ்வொரு சிறிய ஊரிலும் இதை நோட் செய்வதுண்டு.

      இங்கும் பங்களூரைச் சுற்றி உள்ள சிறிய ஊர்களிலும். நான் முன்பு இருந்த பகுதி புறநகர் பகுதி என்று சொல்லபபட்டாலும் வளர்ந்த பகுதிதான். அங்கு பல குடும்பங்களைப் பெரியவர்களுடன் பார்க்கலாம். அட்லீஸ்ட் கீழே பெரியவர்கள் மாடியில் மகன் அலல்து மகள் என்று. அல்லது அருகிலேயே.

      //தான், தன் புருஷன், தன் குழந்தைகள் மட்டும் தான் தன் குடும்பம் என்று லஷ்மணக் கோடு போட்டுக் கொண்ட
      மகளிர் குழாமிடமிருந்தும் விடுபட்ட கதையின் வாசிப்பு இது வரை யாருமே தொடாத ஒன்று.//

      அப்படியா என்ன? பல புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதியிருபபங்களே அண்ணா. அவங்க எழுதாததையா நான் எழுதிடப் போறேன்!

      மீண்டும் மிக்க நன்றி ஜீவி அண்ணா விரிவாகச் சொல்லி சிலாகித்ததற்கும் ஊக்கம் கொடுத்தமைக்கும்.

      கீதா

      நீக்கு
  20. நன்று. தரமான சிறுகதை.
    வாட்சப் பக்கம் அனுப்பி வைத்த ஜீவி சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அப்பாதுரை ஜி! எதிர்பார்க்காமல் கிடைத்த பூரிப்பு!

      ஆமாம் க்ரூப்பில் ஜீவி அண்ணா பகிர்ந்திருந்ததையும் பார்த்தேன்.

      சமீபகாலமாக பல கதைகள் பாதியிலேயே இருக்கின்றன. ஓரிரண்டு முடித்து வைத்தவற்றைக் கூட எபி க்கு அனுப்பவில்லை. ஏதோ ஒரு தயக்கம் சமீபகாலமாக எபிக்கு அனுப்புவதில். ஸ்ரீராமும் பாவம் கேட்டு கேட்டு அலுத்துப் போயிருப்பார்!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா....எனக்கும் ஒரு சுணக்கம்.

      அப்படி அனுப்பியதுதான்...கடைசி நிமிடத்தில். ஏற்கனவே இருந்ததை முடித்து...

      மீண்டும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி.

      கீதா

      நீக்கு
  21. செய்த வேலையை விட்டு விட்டு பொய் ஜம்பத்துடன் சோம்பேறியாய் வலம் வரும் கணவ ஜன்மங்கள் எல்லாம் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாம்.
    "அம்மைக்குக் காய்ச்சல் போலிருக்கு. இப்ப யார் அழுதா நீ கோயிலுக்குப் போகலே'ன்னு அவன் சொல்லும் பொழுது கூட பெரிதாக விகற்பமாகப் படவில்லை.
    இது மருமகள்-- மாமியார் உறவு பற்றியது என்று நினைப்பில் வாசித்துக் கடக்கும் பொழுது தான் அடுத்த அஸ்திரம் ஏவப்படுகிறது.
    " அப்பாவுக்கு வயிறு சரியில்லை போலிருக்கு.
    படுக்கைலேயே போயிருக்கார். ஸ்மெல் வருது." என்று மூக்கைப் பிடித்துக் கொண்டே சொன்னவன் தான் தாலி கட்டிக் கூட்டி வந்தவளை
    சுத்தம் செய்ய ஏவும் பொழுது தான் எரிச்சலாக வருகிறது.
    மாமனார் தள்ளாமை வயதுக்காரர் அல்ல, படுக்கையில் விழுந்த நீடித்த நோயாளியும் அல்ல என்று தெரியும் போது தான் நம் எரிச்சல் இன்னும் கூடுகிறது.
    தண்டமாய் நெடுமரம் போல நிற்கும் ஒரு ஆம்பிளை, மனைவி என்ற ஒருத்தி விதிவசத்தால் பந்தமாகி விட்டால் அவளிடம் என்னவெலாம் எதிர்பார்க்கிறான் என்று நமக்கும் எரிச்சல் கூடத் தான் செய்கிறது.
    கடைசியில் வயது வந்த தன் பெண்ணுடன் அந்த பாவப்பட்ட மனைவி படுக்கையை சுத்தம் செய்தாளாம். கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியானவர்களைப் பார்த்ததில் நம் கற்பனையையும் ஆங்காங்கே கண்டதையும் சேர்த்து வந்த கதை. நம்மைச் சுற்றி நடப்பதைக் கண்டால் பல கதைகள் பிறக்கும். பிறக்கின்றன. அதுவும் உளவியல் சைட் அப்பப்ப செல்வதால் நிறைய கிடைக்கின்றன. ஆனால் எழுதத்தான் முடிவதில்லை. பொறுப்புகள்! வேலைகள்.

      மிக்க நன்றி ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
  22. எந்த நேர்மறை -- எதிர்மறை வரையறைகளுக்குள்ளும் உட்படாத கொடுமை இது.
    வாழ்க்கையை முறித்துக் கொள்ளக் கூடாது, அனுப்பி வைத்த பிறந்த வீட்டிற்கு பழியேற்பட்டு விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணின் நிலையை எழுத்தின் வன்மையுடன் கதையாக்கியிருக்கும் சகோதரி கீதா பாராட்டுக்குரியவர்.

    ஒரு கதையின் வாசிப்பு நேர்த்திக்காக கோயில் சுற்றுப்பட்ட சங்கதிகள் என்பனவான சேர்க்கைகளும் கதை நிகழ்வோட்டத்திற்கு பொருத்தமாக அமைத்திருக்கும் பாங்கு அருமை.

    இந்தக் கதையில் இன்னொரு புதுமை.
    எந்த கதாபாத்திரத்திற்கும்
    பெயர் என்ற ஒன்றைச் சூட்டாமலேயே கதை ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.

    சகோதரி மனோ சாமி நாதனின் பின்னூட்டம்
    மனத்திற்கிசைவாக
    அமைந்திருந்தது கூடுதல் சந்தோஷமாக அமைந்திருந்தது.
    நல்லதொரு சிறுகதையை வாசிப்புக்கு கொடுத்த எபிக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே பல பெண்களுக்கும் போதிக்கப்படுவதுதான் இது. என்ன கஷ்டம் வந்தாலும் புகுந்த வீட்டிலேயே இருக்கணும்ன்றது. இப்போதைய தலைமுறையில் வளரும் சூழலைப் பொருத்து இப்படியானவை மாறுகின்றன.

      நான் கொஞ்சம் பயந்துகொண்டேதான் இக்கதையை அனுப்பினேன். எதிர்பார்க்காத கருத்துகள்.

      பாராட்டுமிக்க கருத்துகள் ஒவ்வொன்றிற்கும் மிக்க நன்றி ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
  23. என்ன கஷ்டம் வந்தாலும் பொறந்தாத்து வாசலைத் தட்டமாட்டேன்.//

    பொறந்தாத்து வார்த்தையைத் தட்டமாட்டேன் என்றல்லவா இருக்கவேண்டும்?

    ’85 வயதுக் கிழம்’ என ஒரு இடத்தில் வந்தாலே அதன் பிம்பம் படிப்பவனிடம் படிந்துவிடுமே. மூன்று பாரா தள்ளி மீண்டுமா ’85 வயதுக் கிழம்’? நாசூக்கான வாசகரை இப்படி டெர்ரரைஸ் செய்யலாமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஏகாந்தன் அண்ணா, நோட்டட்! உங்க பாயின்ட்ஸ்.

      மிக்க நன்றி அண்ணா,

      கீதா

      நீக்கு
  24. ..ஆனால் மகள்கள் வந்தால் அந்த சரீரம் நடமாடும்.//

    அகத்துக்கு அகம் நடக்கறதாச்சே இது. நடமாடுமா.. நடனனமல்லவா ஆடும் சரீரம், தான் பெற்றதுகளக் கண்டுட்டா!

    பதிலளிநீக்கு
  25. வாசித்துக் கொண்டே வரும்போது 90 களில் நான் படித்த அம்மாவின் சேமிப்பில் இருந்த லக்ஷ்மி அனுராதாம்மா சிவசங்கரி ஆகியோரின் யதார்த்த நடை உங்கள் கை எழுத்து வண்ணத்தில் தெரியுது . 
    சில நேரங்களில் எடுத்த சபதத்தில் உறுதியாய் இருப்பதும் சிறந்த வைராக்கியம் .
    பொறுத்து போ // இப்படிலாம் இங்கே சொன்னா அது Coercive control , abuse  கணக்கில் வரும் .
    //கண்டிஷனிங்க்! எங்கேனும் நான் அவர்களை அண்டி வந்துவிடுவேனோ அல்லது பிரிந்துவிடுவேனோன்னு பயம்.//ஹ்ம்ம் சிலருக்கு வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்க ஆசைபோல 

    நான்லாம் சபதத்தை எடுத்துட்டு சாமீ என் சபதத்தை உடைக்கிறாப்ல எதுவும் நடக்கக் கூடாதுன்னு வேண்டிப்பேன்  நமக்கு சபதம்  வெற்றி பெறணும்னு வெறி :) முக்கியம் , 
    பேரே இல்லைன்னாலும் கதை நாயகி மனசுக்குள் ஆணி அடித்தாற்போல் நிலைச்சுட்டார் .ஆனா இப்படிலாம் வாயில்லாப்பூச்சியாக இருக்கக்கூடாது இதுக்குனே  இப்படிப்பட்ட அப்பாவிகளான இவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்கலாமோன்னு தோணுது .
    கதை மாதிரி தோணல. நிஜ நிகழ்வாய் இருக்க கூடாதுன்னு வேண்டிக்கறேன்.உண்மையில் மிகவும் பாவப்பட்ட பெண். விரைவில் சக்கர  வியூகத்தில் இருந்து வெளிவர தன்னை நோக்கி வரும் அம்புகளை பூமராங்காய் திருப்பி அனுப்ப அவருக்கு வலிமை தர வேண்டுகிறேன் .அடுத்த கதை இதன் தொடர்ச்சி அவர்  அம்புகளை உடைத்து வியூகத்திலிருந்து மீண்டு வருவது போல் எழுதுங்க .




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!