செவ்வாய், 6 மார்ச், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன்



     நெல்லைத்தமிழன் நம்ம ஏரியா வுக்கு எழுதி அனுப்பிய கதையை அவர் அனுமதியுடன் இங்கு கேட்டு வாங்கிப் போடும் கதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

     நன்றி நெல்லை.  



கதை முன்னுரை

முன்னால (அக்டோபர்னு 2017னு ஞாபகம்) வல்லி சிம்ஹன் அம்மா அவங்க தளத்துல (http://naachiyaar.blogspot.com) ஒரு இடுகைல ஒரு சம்பவம் எழுதியிருந்தார். (அவரது மைலாப்பூர் வீட்டுக்கு அருகில் உள்ளவர், தினமும் நடக்கிறார், Keeps himself busy என்பதுபோல). அதைப் படித்தபின்பு, ஒரு கதைக்கரு மனசுல தோன்றியது. அதை அப்போ அப்போ டெவலப் செய்துவந்தேன். அப்புறம் 2-3 மாசம் ரொம்ப பிஸியாகிவிட்டேன். கதையைத் தொடரும் சந்தர்ப்பமே கிடைக்கலை. என்னன்னு தெரியலை, ஒரே வாரத்தில் மூன்று கதைகளையும் பூர்த்தி செய்து (ஸ்ரீராம் அவர் கருத்தைச் சொன்னவுடன், கொஞ்சம் மாத்தி எழுதி) எனக்குத் திருப்தி வந்தவுடன் ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். சில சமயம், ஒன்றைச் செய்தவுடன் நமக்கு ‘திருப்தி’ உண்டாகும். இந்தக் கதையை முடித்தவுடன் எனக்கும் அப்படிப்பட்ட திருப்தி மனசுல உண்டாச்சு. படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க.


கடமை  
நெல்லைத் தமிழன்

‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’  வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

‘வேணாம்டா.  இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். பானுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.




‘******

அப்பா எப்போதும் அறிவுரை சொல்லுபவர் கிடையாது. ஒரு தடவை, வாசு வேலை பார்க்க ஆரம்பித்தபின், அவரிடம் கேட்டான்.

‘ஏம்பா.. இப்படிப் பண்ணு, இதைப் பண்ணாதே’ன்னு மத்தவங்க மாதிரி எங்கள்ட சொன்னதே இல்லை.

‘ஏண்டா சொல்லணும். நாம முதல்ல வாழ்ந்து காண்பிக்கணும்டா. அப்புறம் தானாவே பசங்க பார்த்துக் கத்துப்பாங்க. நம்மளால முடியாததை அவங்களுக்கு எதுக்குச் சொல்லணும்? எப்போ தேவை ஏற்படுதோ, அப்போ அவங்களே நம்மகிட்ட வந்து, என்ன செய்யலாம்னு நம்மளைக் கேட்கும் நிலையில வச்சுண்டா போதாதா? நம்ம அனுபவப்படி என்ன தோணறதோ அதைச் சொல்லப்போகிறோம். அப்புறம் அவங்க முடிவெடுத்துப்பாங்க. வாழ்க்கையே அடிபட்டு கத்துக்கற விஷயம்தானே’”

அப்பா சொல் ஒன்று செயல் இன்னொன்று என்று வாழ்ந்தவர் அல்ல. மைலாப்பூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். அவர்கள் சின்னவர்களாக இருந்தபோதே ஒரு வீட்டை நடேசன் பார்க் அருகில் வாங்கியிருந்தார். எளிமையான வாழ்க்கை.என்ன முடியுதோ அதையெல்லாம் ரெண்டுபேருக்கும் செய்தவர் அவர். அதைவிட முக்கியமா, வாசுவுடனும் வானதியோடும் நிறைய நேரம் செலவழித்தார். வாசுவுக்கும் அவன் தங்கைக்கும் எப்போதுமே, தங்களுக்கு அது இல்லை, இது இல்லை என்ற எண்ணமே கிடையாது. எது இருந்ததோ இல்லையோ, அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

-*-*-*-*
அப்பாவைப் பற்றி நினைக்கும்போது, வாசுவால் ரெண்டு சம்பவங்களை மறக்கமுடியாது. ஒண்ணு, பத்தாவதில் நடந்தது. அடுத்தது, பிளஸ் 2வில், அப்பாவுடன் சமையல் செய்யக் கற்றுக்கொண்டது.

பத்தாவது படிக்கும்போதுநல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதால் வகுப்பு ஆரம்பித்ததிலிருந்தே ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை டெஸ்ட் வைப்பார்கள். முதல் டெஸ்ட் பிஸிக்ஸுக்கு முந்தைய நாள்தன்னிடம் டியூஷன் வரும் மாணவர்களுக்கு டெஸ்டில் எந்தக் கேள்விகளெல்லாம் கேட்பேன் என்று பிஸிக்ஸ் சார் சொல்லிவிட்டார். அதைத் தெரிந்துகொண்ட வாசுஇரவோடு இரவாகபரீட்சை பேப்பரில் எல்லாக் கேள்விகளுக்கும் பக்கத்துக்கு ஒன்றாககேள்வியையும் பதிலையும் எழுதிக்கொண்டுபனியனில் மறைத்துக் கொண்டுபோனான். சொன்னதுபோல் கேள்விகள் வந்திருந்தன. மெதுவாக பேப்பரை உருவிவிடைத்தாள்களாகக் கட்டிக்கொடுத்துவிட்டான். அடுத்த வாரத்தில் வகுப்பில் பிஸிக்ஸ் சார்அவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிவிட்டான் என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார். இதைத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் காட்டிக்கொடுக்கவில்லை என்றாலும் அவனுக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. அன்று இரவு அப்பாவிடம் போனான் வாசு.

“என்னடா... என்ன வேணும்?”

“அப்பா.. நான் ஒரு தவறு செஞ்சுட்டேன்பா. வகுப்பு எக்ஸாமுக்கு விடைகளை முன்னமேயே எழுதிக்கொண்டுபோய் விடைத்தாள்களில் சேர்த்துவிட்டேன். வாத்தியார்நான் முதல் மார்க் என்று சொல்லிப் பாராட்டினபோது மனசுல ரொம்ப வெட்கப்பட்டேன்பா. இனி இதைச் செய்யமாட்டேன்”

“ஏன்டா உனக்கு எங்கிட்ட சொல்லணும்னு தோணித்துஏன் வாத்தியார்கிட்ட போய்ச் சொல்லலை?”

“அப்பா.. வாத்தியார்கிட்ட இப்போ சொன்னாஎப்போ நான் நல்ல மார்க் வாங்கினாலும் அவருக்கும் என்னோட படிக்கறவங்களுக்கும் என்மேல நம்பிக்கையே இருக்காதுப்பா. உங்கள்ட சொன்னேன்னாஎன் மனசும் தெளிவாயிடும். நீங்க தண்டனை கொடுத்தால்செய்த தவறுக்குப் பரிகாரமாயிடுத்துன்னும் தோணும்பா”

அப்பா சிரித்துக்கொண்டே தட்டிக்கொடுத்தார்.

*****

வாசு.. இன்னைக்கு நாம ரெண்டுபேரும் சமைப்போம்டா. அம்மாவுக்கு ரெஸ்ட். என்ன சொல்ற.

நான் ரெடிப்பா. வானதி வேண்டாமா?

வேண்டாம். அவ என்னைக்குனாலும் சமைக்கவேண்டியிருக்கும். அவதான் எப்போவோ உங்கம்மாட்ட கத்துண்டுட்டாளே. ஆண்கள்தாண்டா சமையலை முனைஞ்சு கத்துக்கணும். வா.

“அம்மா.. இன்னைக்காவது எனக்கு அந்த எம்பிராய்டரி வேலை கத்துக்கொடும்மா. அவங்க அடுப்படில இருந்து வர ரெண்டுமணி நேரமாயிடும்’. வானதி அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

‘சரி..வா வா. வாசூ.. அப்பாவுக்கு ஹெல்ப் வேணும்னா என்னைக் கூப்பிடு’

அன்னைக்கு ரெண்டுபேரும் சேர்ந்து சமையல் செய்தது கூடுதல் நெருக்கத்தை உண்டாக்கியது. அப்பா எப்போதுமே இப்படித்தான். அவருக்கு அதிகாரமா பேசறதோ இல்லை கத்துக்கொடுக்கறேன்னு டாமினேட் பண்றதோ கிடையாது. பிளஸ் 2 படிக்க ஆரம்பித்ததிலிருந்து 1 வருடத்துக்குள் வாசு சமையல் செய்வதை முழுமையாகக் கற்றுக்கொண்டான். அப்புறம் எப்பவாவது தோணும்போது, அவனே சமையல் செய்வான். அப்பாவும் தோழன் போன்று காய் வெட்டித் தருவதிலிருந்து, கடைசியில் பாத்திரத்தை அலம்பி வைப்பது வரை உதவுவார்.

*****
ஏம்பா சாப்பிடறதுக்கு முன்னால என்னமோ சொல்றயே. சமையல் பண்ணினதைத்தான் அம்மா பெருமாள் சன்னதில வச்சு கடவுளுக்குக் காட்டிட்டாளே. நீ என்ன சொல்ற?

‘தட்டுல என்ன இருக்கு வாசு’

‘தோசை.. தேங்கா சட்னி, வெங்காயச் சட்னி, பத்தாததுக்கு மிளகாய்ப்பொடி எண்ணெய்’.

‘இது ஒண்ணொண்ணும் எங்க இருந்து வருது தெரியுமா? அரிசி, உளுந்து ஒவ்வொரு நிலத்திலிருந்து. தேங்காய் கேரளாவோ கோயமுத்தூரோ. வெங்காயம் பெல்லாரிலேர்ந்து. மிளகாய், எள், அதுலேர்ந்து எடுத்த நல்லெண்ணெய், கடுகு.. இது எல்லாமே ஒவ்வோர் இடத்துலேர்ந்து ஒவ்வொரு விவசாயி விளைவிக்கறான். அதைச் சுத்தம் செய்யறது, கடைகள் வரை அதைக் கொண்டு வரது என்று எத்தனையோ மக்களோட உழைப்பு இருக்கு. நாம ஒரு வாய் சாப்பிடறதுக்கு எத்தனை பேரோட உழைப்பும் உதவியும் தேவையா இருக்கு பார். அவங்க எல்லோருக்கும்தான் நான் மனசுல நன்றியும், அவங்க நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறேன்.  அதுனாலதான் எதையும் வீணாக்கும்போது, அவங்க உழைப்பை நான் மதிக்கலைன்னு என் மனசு என்னைக் குத்திக் காண்பிக்கும்.

‘இதெல்லாம் நீ காசு கொடுத்துத்தானே வாங்கற. அப்போ அந்தப் பலன் அவங்களுப் போகுதில்ல’

‘ஆமாண்டா. உண்மைதான்.  நீதான் பேப்பர்ல படிச்சிருப்பயே.. புயல், மழை, தண்ணி இல்லைன்னு எத்தனை பிரச்சனைனால விவசாயி நஷ்டப்படறான். அவன் நல்லா இல்லைனா, நமக்கு எப்படி உணவுக்குத் தேவையானதுலாம் கிடைக்கும்’

‘அண்ணா… அதுக்குள்ள ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ குறளை மறந்துட்டயே’… வானதி வாசுவுக்கு வலிப்பு காட்டினாள்.

-*-*-*-*

அப்பா… உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்பா’

‘சொல்லு’

‘என் ஃப்ரெண்ட்ஸ் சிலபேர் வீட்டுல, வேற மதத்தைச் சேர்ந்தவங்களை வீட்டுக்குள்ள வரச் சொல்றதில்லை. நீங்க மட்டும் இதைப் பத்தி எப்போதும் ஒண்ணும் சொன்னதில்லையேப்பா’

‘வாசு..நம்ம கடவுள், சாப்பாடு, டிரெஸ் பழக்கவழக்கம்கறது குடும்பத்தோட பழக்கவழக்கம்டா. நம்ம கம்யூனிட்டியோட பழக்கவழக்கம். அதேமாதிரி மத்தவங்களுக்கு அவங்க அவங்க குடும்பம் கம்யூனிட்டினு பழக்கவழக்கங்கள் மாறலாம். அத வச்சு, நாம எதுக்கு பேதம் பார்க்கணும்? நாம தப்பு, இது நம்ம வழக்கமில்லைனு நினைக்கறதை கத்துக்காமல் இருந்தால் போதாதா? நமக்குத் தேவை நல்ல நண்பர்கள் மட்டும்தான். அவங்க என்ன கம்யூனிட்டின்னு பார்க்கவேண்டாம். எல்லோரும் மனுஷங்கதானடா”

‘அப்புறம் எப்படிப்பா நிறைய மதங்கள்லாம் இருக்கு’

‘நமக்கு மீறி ஒரு பெரிய சக்தி இருக்கு. அதைத்தான் கடவுள்னு சொல்றோம். அதுக்குப் போற பாதைகள்தான்டா மதங்கள். அந்த அந்த நேரம் வரும்போது இதெல்லாம் உனக்குப் புரிபடும். எந்தப் பாதைல போறான்னு பார்த்து ஒருத்தரை வெறுக்கவேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கு ப்ராக்டிகல் இருக்குன்னு சொன்னயே. ஸ்டீபன்டேர்ந்து நோட்டு வாங்கிட்டு வந்தயா?’

***

வாசு, அவனுக்கே உரித்தான வேகத்தில் கவனமாகப் படித்தான். கம்யூட்டர் சயின்ஸைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். காலமும் விரைந்து ஓடியது.கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் சில வருடங்கள் பணிபுரிந்து ஆஸ்திரேலியாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்றுவிட்டான். சில வருடங்களிலேயே அவனுக்கு அதுதான் அவனுடைய புதிய தேசம் என்று தோன்றிவிட்டது. அப்பாவிடம்,ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக இருக்கும் வண்ணம் குடியுரிமை எடுத்துக்கொள்ளப்போவதாகச் சொல்லிவிட்டான். அதற்குள் வானதியும் எம்.சி.ஏ படித்துமுடித்துவிட்டாள். வானதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் சமயம்அமெரிக்காவில் வேலைபார்க்கும் வரன்கள் வந்தபோதும்வானதிக்கு அண்ணன் இருக்கும் தேசத்திலேயே தன் வாழ்க்கையும் இருக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. அதற்கேற்றபடி ஆஸ்திரேலியாவில் வேலைபார்த்த நடேசனையே நிச்சயம் செய்து திருமணம் நடந்தது. நடேசனுடைய தந்தை சிவராமன்சுவாமினாதனின் தூரத்துச் சொந்தம் என்பதே சுவாமிக்கு மனதில் நிம்மதியைத் தந்தது.

ஒரு திருமணம் இன்னொரு சொந்தத்தையும் கொண்டுவரும் என்பதற்கேற்பவானதியின் திருமணத்தின்போதே வாசுவுக்கும் பானுமதியோடு திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அடுத்த ஒரு வருடத்தில் வாசு-பானுமதியின் திருமணம் நடந்தது. இதற்கிடையில் சுவாமினாதன் ஓய்வு பெற்றார்.

சுவாமிக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம். ஓய்வு பெற்றார் என்றுதான் பெயர். தன்னை முழுமையாக சமூக சேவைக்கு உட்படுத்திக்கொண்டார். காலையில் இருவரும் பூங்காவில் நடப்பதும்வாரம் இரண்டுவேளை சமையல் செய்வதும்சேர்ந்து சாப்பிடுவதும்தான் சுவாமி தன் மனைவியோடு சேர்ந்திருக்கும் நேரம். மதியம் சாப்பிட்டதும் ரெண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக்கொள்வார். மற்ற எல்லா நேரமும் அவர் நண்பர்களோடு அல்லது ஏழைக்குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதுசமூக சேவை என்றே செலவழித்தார்.

வாரம் ஒரு முறையாவது இருவரும் வாசு/பானுமதியோடும்வானதி/நடேசனோடும் பேசுவார்கள். வாசுவுக்கு அப்பாவோடு பேசும்போதெல்லாம்,வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒன்று கற்றுக்கொள்வதாகவே தோன்றும்.

*****



பானுமதி, வாசு மனம் கலங்குவதைப் பார்க்க வருத்தமுற்றாள். அவர்கள் இந்த முறை சென்னை வந்ததன் காரணம், மாமனாரை ஆஸ்திரேலியாவுக்கே அழைத்துச் செல்வதற்காகத்தான். ஒரு வருடத்துக்கு முன்பு மாமியார் மறைந்தபோது அவர்கள் வந்திருந்தனர். மாமா, தான் கலங்கினாலும், மற்றவர்களைக் கலங்கவிடவில்லை. அவங்க அவங்க ஸ்டேஷன் வந்தால் இறங்கித்தானே ஆகவேண்டும் என்று சாதாரணமாகச் சொன்னார். தினமும் ஒரு மணி நேரம் நடேசன் பூங்காவில் நடப்பதையோ, அல்லது சனி,ஞாயிறு அன்று நண்பர்களுடன் பொதுச் சேவை செய்யப்போகும் வழக்கத்தையோ அவர் நிறுத்தவில்லை.

பானுமதிக்கு திருமணமாகும் முன்பு, ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்லப்போகிறோமே என்று அவளுக்கு மனதில் கொஞ்சம் கலக்கம்தான். திருமணமான புதிதில், வாசு மட்டும் ஆஸ்திரேலியா சென்றுவிட்டான். அவளுக்கு விசா தயார் செய்து அனுப்புவதாகச் சொல்லிச்சென்றான். வாசுவின் தங்கை வானதி கூட, ஒரு வாரம் இருந்துவிட்டு அவள் கணவனுடன் திரும்பிச்சென்றுவிட்டாள்.

திருமணம் முடிந்து வந்த முதல் வாரமே பானுமதியால் புகுந்த வீட்டில் ஒன்றிவிட முடிந்தது. தான் மருமகள், அவர்கள் மாமா, மாமியார், வானதி-நாத்தனார் ஸ்தானம் என்ற பேதமில்லாமல், தன் வீட்டைப்போலவே அவளால் பாவிக்கமுடிந்தது. இயல்பாகவே அப்பா, அம்மா என்று அவளால் அவர்களை அழைக்கமுடிந்தது. வானதியும் அவளுக்கு நல்ல நண்பியாகிவிட்டாள். சிரிப்பும் கும்மாளமுமாகவே அவளது வாழ்க்கை புகுந்தவீட்டில் ஆரம்பித்தது. வாசு சென்றபிறகு, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் அவள் மயிலாப்பூரில் தங்கியிருந்தாள்.. வாசுவுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுமட்டுமல்ல, மாமியே அவளுக்கு நிறைய சமையல் முறைகளைக் கற்றுக்கொடுத்தார். வாசுவுக்குப் பிடித்தவைகளை மாமியாரிடமிருந்து அவள் செய்முறைக் குறிப்புகள் எடுத்துக்கொண்டாள். கொஞ்சம் வயது முதிர்ந்த தோழி ஸ்தானத்தையே அவள் மாமியாரிடம் உணர்ந்தாள்.

“பானு…. இன்னிக்கு உனக்குப் பிடித்த சமையல் செய்யேன்”

“அப்பாக்கு என்ன பிடிக்கும்? இன்னைக்கு அதைப் பண்ணறேம்மா”

“பானுமதி… அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உனக்குப் பிடித்ததைப் பண்ணு. புதுசு புதுசா நானும்தான் சாப்பிட்டுப்பார்க்கறேனே.. என்ன சொல்ற”, சுவாமினாதன் சொன்னார்.

புகுந்த வீட்டில், எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கமாக இருந்தது. அதுவும் இரவு உணவு, கண்டிப்பாக எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். சமைத்தவற்றை உணவு மேசையில் கொண்டுவந்து வைத்து, எல்லோரும் தங்களுக்கு வேண்டியதைப் போட்டுக்கொண்டு சாப்பிடணும். பானுமதி வீட்டில், பெண்கள், ஆண்கள் சாப்பிட்டபிறகு சாப்பிடும் வழக்கம். .

***
‘வாசு.. எனக்கு நம்ம வீட்டில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவதுதான் பிடிச்சிருக்கு. எங்க வீட்டுல, அம்மா, பாட்டிலாம் எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் சாப்பிடுவா’

‘பானுமதி,  சாப்பிடறதைவிட, எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடறதுதான் முக்கியம்னு எங்க அப்பா எப்போதும் சொல்லுவார். அப்போதான் ஃபேமிலில எல்லாருக்கும் ஒரு அன்யோன்யம் ஏற்படும். நீதான் கவனிச்சிருப்பயே.. சாப்பாட்டைப் பத்தி குறைவா யாரும் சொல்லமாட்டாங்க.’. 

‘அதைத்தான் முதல் நாள்லேயே தெரிஞ்சுக்கிட்டேனே. குழம்புல உப்பு சரியில்லை, கறில ஜாஸ்தி காரம். ஆனா யாரும் ஒண்ணும் சொல்லலையே. நான் சொன்னப்போதானே, அதுனால என்ன, அடுத்தமுறை சரியாயிடும்’னு சொல்லிட்டாங்களே.

வாசுவுடன் சாப்பாட்டைப் பற்றிப் பேசியது பானுமதிக்கு நினைவுக்கு வந்தது.

****

‘பானுமதி… விசாதான் வந்துடுத்தே. நீ வேணும்னா உங்க வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வா. அப்புறம் ஒரு வாரத்துக்குள்ள வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டு ஆஸ்திரேலியா கிளம்ப சரியா இருக்கும்’

‘வேணாம்பா. நான் வேணும்னா அவங்களை இங்க ஒரு வாரம் வரச் சொல்லவா? ஏதும் வாங்கணும்னாலும் என் கூட வருவாங்க. உங்களோடயும் கிளம்பும்வரை இருந்த மாதிரி இருக்கும்’

‘இல்லைமா. உங்க ஊர் கோவிலிலும் ஊருக்குப் போறதுக்கு முன்னால் உத்தரவு கேட்டுண்டமாதிரியும் இருக்கும். எல்லார்ட்டயும் சொல்லிண்டமாதிரியும் இருக்கும். நாங்க கொண்டுவந்து விடறோம்’.

மூணு மாசத்துல புகுந்த வீட்டில் அவ்வளவு அன்னியோன்யம் ஏற்படுமாஎதுவும் மனுஷங்களோட குணத்துலயும் பழகற விதத்துலயும்தான் இருக்கு. பானுமதிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

****



‘அப்பா.. எனக்கு நீங்க எங்களோட வரதுதான் சரின்னு படறதுப்பா. எங்களோட குழந்தைகள் தாத்தாவோட இருக்கவேண்டாமா? அங்க எந்தக் கவலையும் கிடையாதுப்பா. நீங்க நடக்கறதுக்கோ, இல்லை சமூக சேவைக்கோ எதுக்கும் இடைஞ்சல் வராது. வாரம் ஒரு தடவை, குழந்தைகளுக்கு தமிழ் மன்றத்துல தமிழ் சொல்லித்தரலாம். வானதிக்கும் அவ பசங்களுக்கும் உங்க அருகாமை இருக்கும். உங்களை இங்க இனியும் தனியா இருக்கச் சொல்றதுல எங்களுக்கு இஷ்டமில்லைப்பா. வாசுவுக்கும் மன நிம்மதி வேணும் இல்லப்பா. அவருக்கு உங்களை நினைத்து ரொம்பக் கவலை. முன்ன மாதிரி கலகலப்பு இல்லை. எனக்கும் உங்களை தனியா விட இஷ்டமில்லை. அம்மா போனதே எனக்கு ரொம்ப வருத்தமா தனியா உணர வச்சுது’

‘பானு… நீ சொல்றது சரிதான். ஆனா இந்த ஊரிலேயே வாழ்ந்துட்டேன். இந்த வீடே முழுக்க அவ, பசங்க, உங்க நினைவெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்கு. அக்கம் பக்கத்துல என்னோடவே இருந்த 30 வருஷ நண்பர்கள். எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட கடைசி காலத்துல வரணும்னு தோணலம்மா. நீங்கள்லாம் அன்போட சொல்றச்சயே என் மனசு நிறைவடைஞ்சுட்டது. இருபது வருஷங்களுக்கு மேல் வளர்த்த அப்பா அம்மா, உன்னை எங்க வீட்டுக்கு சந்தோஷமா அனுப்பி வைக்கலையா? நானும் வானதியை அப்படித்தானே அனுப்பிச்சிருக்கேன். அவங்க அவங்க ஸ்டேஷன் வரும்போது இறங்கித்தானமா ஆகவேணும்’.. நிறையப் பேசினதால் ஆயாசமாகத் தோன்றியது சுவாமிக்கு.

வாசலில் காலிங்க் பெல் அடித்தது. பானுமதி கதவைத் திறக்கச் சென்றாள்.

‘என்ன பானு.. சுவாமி எப்படி இருக்கான். உங்களோட வரேன்னு சொன்னானா?’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் சுவாமியின் அத்யந்த நண்பர் சுந்தரேசன்.

‘இப்போவும் அப்பாட்ட சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன். வரேன்னு இன்னும் சொல்லலை மாமா. இன்னும் பத்து நாள்ல கிளம்பணும். நீங்களும் சொல்லுங்கோ’.

‘ஏம்மா.. நாங்கள்லாம் இல்லயா? ஒண்ணுத்துக்கும் கவலைப்படாம போய்ட்டுவாங்க. நாங்க பாத்துக்கறோம். இப்போ எனக்கும் சுவாமிக்கும் சூடா காபி எடுத்துண்டுவா’

‘சுவாமி.. அடுத்த வாரம் திருத்தணி போறோம்.. நீயும் எங்களோட வர்றியா’ 

பதில் இல்லாததால் சுந்தரேசன் சுவாமியின் கையைப் பிடித்தார்.  கை குளிர்ந்திருந்தது.


குறிப்பு: படங்கள் ‘சுடப்பட்டவை’. வரைந்த ஓவியர்களுக்கு நன்றி

66 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஆஜர் காலை வணக்கம் ஸ்ரீராம்....துரை அண்ணா, கீதாக்கா,பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா நெல்லையின் கதை....வருகிறேன் வாசிக்க...இப்ப கொஞ்சம் கடமை பாக்கியிருக்கு அதை ஆத்திட்டு வரேன்...கொஞ்சம் முன்னாடி தான் வெங்கஜி தளம் போய்ட்டு வந்தேன்...ஸோ இப்போதைக்கு இவ்வளவு...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நெ.த. அவர்களின் கதை..

    ஆர அமர வாசிக்க வேண்டும்...
    பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. அப்படியே எல்லாரும்
    கறிவேப்பிலை புராணம் படிக்க வாங்க...

    பதிலளிநீக்கு
  8. அதைச் சுத்தம் செய்யறது, கடைகள் வரை அதைக் கொண்டு வரது என்று எத்தனையோ மக்களோட உழைப்பு இருக்கு. நாம ஒரு வாய் சாப்பிடறதுக்கு எத்தனை பேரோட உழைப்பும் உதவியும் தேவையா இருக்கு பார். அவங்க எல்லோருக்கும்தான் நான் மனசுல நன்றியும், அவங்க நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறேன். அதுனாலதான் எதையும் வீணாக்கும்போது, அவங்க உழைப்பை நான் மதிக்கலைன்னு என் மனசு என்னைக் குத்திக் காண்பிக்கும்.//

    வாவ்!! ஹைஃபைவ்!!!! இதே போன்ற கருத்தை என் மகனுடன் சிறிய வயதில் பேசியிருக்கேன்...அவன் உணவி வீணாக்கினால்...சொல்லியதுண்டு....இன்னும்....உணவு உண்ணும் முன்நும் இறைவனுக்கு நன்றி சொல்லுவது என்பதிலிருந்து நான் பள்ளியில் எனது ஆசிரியர்கள் மேரிலீலா, ஸ்டெல்லா மேரி அவர்களிடம் கற்றுக் கொண்டது. அதை அப்படியே மகனுக்கும்....

    இதுவரைதான் வாசித்திருக்கேன்...கதை அருமையாக உள்ளது...மீதியும் வாசித்துவிட்டு வருகிறேன்....பின்னர்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  10. முடிவில் ஏதேனும் திருப்பம் இருக்குமோ என எதிர்பார்த்தேன். ஆரம்பமும் கொஞ்சம் திருப்பத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்த்தேன். ஒருவேளை இந்த எதிர்பார்ப்போ கதையின் வெற்றியோ? சாதாரண சம்பவங்கள்! நிகழ்வுகள்! கோர்வையாகச் சொன்னதில் இருந்து மனதைக் கவர்கிறது. மற்றபடி நெ.த. இன்னும் சிறப்பாகக் கதையைக் கொண்டு போவார் என எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன். :))))) முடிவு கொஞ்சம் சினிமாத்தனமாகத் தோன்றியது!

    பதிலளிநீக்கு
  11. வானதியைக் கைவிடாதே எனக் குறிப்பிட்டுச் சொன்னதில் இருந்து வானதிக்கும் வாசுவுக்கும் உள்ள உறவுமுறை பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்தியது! :) அண்ணன், தங்கையாகவே இருந்தாலும் உறவு நெருக்கம் இல்லையோ என்றும் தோன்ற வைத்தது. ஆனால் வெகு சாதாரணமாக வானதிக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் கடந்து போக வைத்துவிட்டது கதை!

    பதிலளிநீக்கு
  12. மாமியார் மறைந்தபோது அவர்கள் வந்திருந்தனர். மாமா, தான் கலங்கினாலும், மற்றவர்களைக் கலங்கவிடவில்லை.//

    வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்.

    //நாம ஒரு வாய் சாப்பிடறதுக்கு எத்தனை பேரோட உழைப்பும் உதவியும் தேவையா இருக்கு பார். அவங்க எல்லோருக்கும்தான் நான் மனசுல நன்றியும், அவங்க நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறேன். அதுனாலதான் எதையும் வீணாக்கும்போது, அவங்க உழைப்பை நான் மதிக்கலைன்னு என் மனசு என்னைக் குத்திக் காண்பிக்கும்.//

    உண்ணுங்க்கால் எண்ணு

    உண்ணும் உணவு உனக்குக் கிடைத்தவகை,
    எண்ணி யுண்ணிடல் என்றும் உன் கடன்.

    உணவுக்கு பதில்

    உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு,
    உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.

    உன்ணும் போது ஒரு பாடல் அது தனியாக பகிர்கிறேன் பெரிய பாடல்.

    எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்
    ந்ல்லதோர் உணவினை நமக்கே அளித்தோர்
    வாழ்க வளமுடன் ! உலக உயிர்களெல்லாம்
    வாழ்க! வாழ்க! வாழ்க வளமுடன்!

    என்ற வேதாத்திரி மகரிஷி கவிதைக்கு நினைவுக்கு வருது.

    //‘வாசு..நம்ம கடவுள், சாப்பாடு, டிரெஸ் பழக்கவழக்கம்கறது குடும்பத்தோட பழக்கவழக்கம்டா. நம்ம கம்யூனிட்டியோட பழக்கவழக்கம். அதேமாதிரி மத்தவங்களுக்கு அவங்க அவங்க குடும்பம் கம்யூனிட்டினு பழக்கவழக்கங்கள் மாறலாம். அத வச்சு, நாம எதுக்கு பேதம் பார்க்கணும்? நாம தப்பு, இது நம்ம வழக்கமில்லைனு நினைக்கறதை கத்துக்காமல் இருந்தால் போதாதா? நமக்குத் தேவை நல்ல நண்பர்கள் மட்டும்தான். அவங்க என்ன கம்யூனிட்டின்னு பார்க்கவேண்டாம். எல்லோரும் மனுஷங்கதானடா”//

    என் அப்பாவின் நினைவு வருது.


    //சுவாமிக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம். ஓய்வு பெற்றார் என்றுதான் பெயர். தன்னை முழுமையாக சமூக சேவைக்கு உட்படுத்திக்கொண்டார்.//

    குடும்பம் செட்டில் ஆகி விட்டது இனி சமுதாய கடமை செய்யலாம் தான்.
    என் மாமா அவர்களும் ஓய்வு பெற்ற பின் நங்கு படிக்கும் ஏழை
    குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி பணம், இலவசமாய் தேவார பாடல்கள் சொல்லி கொடுத்தார்கள் மாமாவும் ஆசிரியர் பணி ஆற்றியவர்கள்.

    //அவங்க அவங்க ஸ்டேஷன் வரும்போது இறங்கித்தானமா ஆகவேணும்’.. நிறையப் பேசினதால் ஆயாசமாகத் தோன்றியது சுவாமிக்கு//

    கடைசி முடிவு இனி யாருக்கும் பாரமாய் இருக்க கூடாது என்று வாழ்ந்தவரை போதும் என்ற நிறைவு ஏற்பட்டு விட்டது போலவே!

    கதை அருமையாக இருக்கிறது.


    குழந்தைகளுக்கு அப்பாவை தனியாக விட்டு விட்டு அங்கு இருக்கிறோம் என்ற
    குற்ற உணர்ச்சி வராமல் தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டார்.















    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாக ஸ்மூத்தாக போகிறது. பாஸிட்டிவ் குடும்பம்....பிரச்சனைகள் பெரிதாகப் பேசப்படாத குடும்பக் கதை....சுவாமிநாதனைப் பற்றிய விவரணங்கள் கொஞ்சம் உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தவற்றை நினைவுபடுத்தியது.

    பழக்கவழக்கங்கள், பிற மதத்தார் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவது குறித்துச் சொன்னவை எல்லாம் நன்றாக இருக்கிறது. அப்பா/ஸ்வாமிநாதன் ஒரு ஓபன் மைண்டட் பெர்சன் என்பதும் அழகாகச் சொல்லியிருக்கீங்க...நிகழ்வுகள் அப்படியே விவரிக்கப்பட்டு பிரச்சனைகள் தலைதூக்காமல் பாசிட்டிவாகக் கொண்டு போகப்பட்ட கதை....இப்படி ஒரு குடும்பம் அமைந்துவிட்டால் இறைவன் கொடுத்தவரம் என்று எண்ண வைத்தது....ம்ம்ஸ்பைசியாக இல்லாத இதமான கதை....வாழ்த்துகள், பாராட்டுகள் நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வானதியைக் கைவிடாதே எனக் குறிப்பிட்டுச் சொன்னதில் இருந்து வானதிக்கும் வாசுவுக்கும் உள்ள உறவுமுறை பற்றிக் கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்தியது! :)//

    கீதாக்கா நெல்லை அப்படி எங்கும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லையே.....ரெண்டாவது வானதியும் அண்ணன் இருக்கும் தேசத்திற்குத்தான் தானும் மணமாகிச் செல்ல வேண்டும் என்று நினைப்பதாகத்தான் சொல்லியிருக்கார். அதுவே சொல்லுதே வானதிக்கும் வாசுவுக்கும் இடைப்பட்ட பாசத்தை...பல வார்த்தைகள் சொல்லாதததை....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. //‘வாசு..நம்ம கடவுள், சாப்பாடு, டிரெஸ் பழக்கவழக்கம்கறது குடும்பத்தோட பழக்கவழக்கம்டா. நம்ம கம்யூனிட்டியோட பழக்கவழக்கம். அதேமாதிரி மத்தவங்களுக்கு அவங்க அவங்க குடும்பம் கம்யூனிட்டினு பழக்கவழக்கங்கள் மாறலாம். அத வச்சு, நாம எதுக்கு பேதம் பார்க்கணும்? நமக்குத் தேவை நல்ல நண்பர்கள் மட்டும்தான். அவங்க என்ன கம்யூனிட்டின்னு பார்க்கவேண்டாம். எல்லோரும் மனுஷங்கதானடா”//

    எங்கள் வீட்டுப் பழக்கம்....அப்படியே!!

    //நாம தப்பு, இது நம்ம வழக்கமில்லைனு நினைக்கறதை கத்துக்காமல் இருந்தால் போதாதா?// பிற வீட்டுப் பழக்கமாக இருந்தாலும் அது நல்ல பழக்கமாக இருந்தால் அது நம்ம வீட்டு பழக்கமில்லைனில்லாம அதையும் கற்கலாமே நு எனக்குத் தோணும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. உயர்ந்த எண்ணங்களும்,கருத்துக்களும் பூரணமாக நிறைந்த,கையாளப்பட்ட தலைமை அப்பா. நிகழ்ச்சிகள் நல்ல விதமாகவே நடந்து தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. தவறு நடந்தாலும் திருந்தும் விதம் ஸரியானது.பெண்,பிள்ளை என்று யாரும் அயல்நாட்டு வாஸத்தைத் தவிர்க்கவில்லை. அது ஒரு குறையில்லை என்று நாம் வாதாடினாலும் வயதானவர்களுக்கு சூழ்நிலையால் அங்கு போய் இருக்கும்படி நேர்ந்தால் பல விதங்களில் மனது சிலருக்குப் பாதிக்கிறது. அம்மாதிரி எதுவும் நேராமல் பெரியவர், அமரராகிவிட்டார். இதைப் படித்தபோது கண்கள் சில துளி நீரைச் சிந்தியது.ஏன்? நாமும் ஒரு வயதான பெண்மணி என்பதால் இருக்கலாம். கதை அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. அப்படியே மனதில் இருப்பதை எல்லா நேரமும் எல்லா இடத்திலும் எல்லாரிடமும் சொல்லி விட முடியாது...ஆனா இதைப்படிக்கிற ப்ப......இப்டில்லாம் கூட இருப்பாங்களா என்ன என்றுதான் தோன்றியது. ஹ, கட்டுக்கதை ன்னு மனசு உதடு கோணி பழிச்சுத்தான் காட்டியது. வெறும் கதை தானே, முடிவு மட்டும் ஏன் யதார்த்தமா இருக்கணும் ன்னு எதோ ஒரு குறை கண்டுபிடிச்சு சமாதானப்படுத்திக்கொண்டது... !

    பதிலளிநீக்கு
  18. நம் நெல்லைத் தமிழன் அவர்கள் எழுதியுள்ள ‘கடமை’ என்னும் ’நெடுங்கதை’யை இன்று நான் படிக்க நேர்ந்தது.

    மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ’நல்லதொரு குடும்பம் .... பல்கலைக் கழகம்’ என்பதை இந்தக்கதையின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

    இந்த இவர் எழுதியுள்ள சற்றே பெரிய நீண்ண்ண்ண்ட கதையை எத்தனை பேர்கள் முழுவதுமாகப் பொறுமையாகப் படித்துப் புரிந்துகொள்வார்களோ .... என்ற சந்தேகம் எனக்கு மிக அதிகமாக உள்ளது.

    கதை ஒருபுறம் கிடக்கட்டும். அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், அவரவர் விருப்பம் போல எழுதி முடிக்கலாம்தான்.

    ’நெல்லைத் தமிழன்’ அவர்களைப்பற்றியும், அவரின் விசேஷ குணாதிசயங்கள் பற்றியும், அவரின் ஆழமாக அறிவினைப்பற்றியும், வியக்கத்தகுந்த ஆற்றல்களைப்பற்றியும், எதையும் ஆழ்ந்து வாசித்து, மிக இனிமையாகக் கருத்துக்கள் சொல்லும் தனித்திறமைகள் பற்றியும், நான் ஏற்கனவே உங்கள் அனைவரையும்விட மிகத் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளேன். பதிவுலகம் தாண்டி எங்களுக்குள் மிக நெருக்கமான தினசரி தொடர்புகளும் இருந்து வருகின்றன.

    மஹா பாரதத்தில் ’தரும புத்திரர்’ என்ற கதாபாத்திரத்தின் கண்களுக்கு மட்டும், அவர் உலகினில் பார்க்கும் எல்லாமே நல்லவைகளாகவும், எல்லோருமே நல்லவர்களாகவும் மட்டுமே தெரிவார்களாம்.

    அதே போல இந்த நம் நெல்லைத் தமிழன் எழுதியுள்ள கதையினில் வரும் அனைத்துக் கதை மாந்தர்களும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

    என்னுடைய ஒருசிலக் கதைகளிலும்கூட நான் இதே டெக்னிக்கைக் கையாண்டுள்ளேன். அதற்கு ஓர் மிகச் சிறந்த உதாரணமாக ‘முதிர்ந்த பார்வை’ என்னும் கதையைச் சொல்லலாம். New Link: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html [ Old Links: (1) http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html (2) http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_05.html ]

    இந்த இவர் எழுதியுள்ள ‘கடமை’ என்ற கதையின் முடிவு நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்றே என்றாலும், வாழ்க்கையில், பொதுவாக, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவரான, தந்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் அல்லது எப்படி நடந்துகொண்டால் அது அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல படிப்பிணையாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்லும் ‘சுவாமினாதன்’ என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

    கதாசிரியரும் என் இனிய நெருங்கிய நண்பருமான நெல்லைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். தங்களிடம் உள்ள வியத்தகு ஆற்றலுக்கு தாங்கள் தனியாக ஓர் வலைத்தளம் ஆரம்பித்து எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக்கூறிக்கொண்டு முடிக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    தங்கள் கோபு
    🙏🤗🙏

    பதிலளிநீக்கு
  19. REVISED

    http://engalblog.blogspot.com/2018/03/blog-post.html

    மேற்படி இணைப்பினில் நம் நெல்லைத் தமிழன் அவர்கள் எழுதியுள்ள ‘கடமை’ என்னும் ’நெடுங்கதை’யை இன்று நான் படிக்க நேர்ந்தது.

    மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ’நல்லதொரு குடும்பம் .... பல்கலைக் கழகம்’ என்பதை இந்தக்கதையின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

    இந்த இவர் எழுதியுள்ள சற்றே பெரிய நீண்ண்ண்ண்ட கதையை எத்தனை பேர்கள் முழுவதுமாகப் பொறுமையாகப் படித்துப் புரிந்துகொள்வார்களோ .... என்ற சந்தேகம் எனக்கு மிக அதிகமாக உள்ளது.

    கதை ஒருபுறம் கிடக்கட்டும். அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், அவரவர் விருப்பம் போல எழுதி முடிக்கலாம்தான்.

    ’நெல்லைத் தமிழன்’ அவர்களைப்பற்றியும், அவரின் விசேஷ குணாதிசயங்கள் பற்றியும், அவரின் ஆழமான அறிவினைப்பற்றியும், வியக்கத்தகுந்த ஆற்றல்களைப்பற்றியும், எதையும் ஆழ்ந்து வாசித்து, மிக இனிமையாகக் கருத்துக்கள் சொல்லும் தனித்திறமைகள் பற்றியும், நான் ஏற்கனவேஉங்கள் அனைவரையும்விட மிகத் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளேன். பதிவுலகம் தாண்டி எங்களுக்குள் மிக நெருக்கமான தினசரி தொடர்புகளும் இருந்து வருகின்றன.

    மஹா பாரதத்தில் ’தரும புத்திரர்’ என்ற கதாபாத்திரத்தின் கண்களுக்கு மட்டும், அவர் உலகினில் பார்க்கும் எல்லாமே நல்லவைகளாகவும், எல்லோருமே நல்லவர்களாகவும் மட்டுமே தெரிவார்களாம்.

    அதே போல இந்த நம் நெல்லைத் தமிழன் எழுதியுள்ள கதையினில் வரும் அனைத்துக் கதை மாந்தர்களும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

    என்னுடைய ஒருசிலக் கதைகளிலும்கூட நான் இதே டெக்னிக்கைக் கையாண்டுள்ளேன். அதற்கு ஓர் மிகச் சிறந்த உதாரணமாக ‘முதிர்ந்த பார்வை’ என்னும் கதையைச் சொல்லலாம். New Link: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html [ Old Links: (1) http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html (2) http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_05.html ]

    இந்த இவர் எழுதியுள்ள ‘கடமை’ என்ற கதையின் முடிவு நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்றே என்றாலும், வாழ்க்கையில், பொதுவாக, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவரான, தந்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் அல்லது எப்படி நடந்துகொண்டால் அது அவருக்கும், அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல படிப்பிணையாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்லும் ‘சுவாமினாதன்’ என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.


    கதாசிரியரும் என் இனிய நெருங்கிய நண்பருமான நெல்லைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். தங்களிடம் உள்ள வியத்தகு ஆற்றலுக்கு தாங்கள் தனியாக ஓர் வலைத்தளம் ஆரம்பித்து எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக்கூறிக்கொண்டு முடிக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    தங்கள் கோபு
    🙏🤗🙏

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. நகர்த்திச்சென்ற விதமும் அருமை.கடைசியில் யாருக்கும் தொந்தரவாய் இருக்க கூடாதென்ற எண்ணம் அவர் அடிமனதில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தான் இறங்குமிடம் வந்ததும் சத்தமில்லாமல் இறங்கிச் சென்று விட்டார். பாசமுள்ள.குடும்பங்களில் இந்த நிகழ்வுகள் சாதரணமாக நிகழும் போலிருக்கிறது.(நிஜ வாழ்விலும்) மனதை நெகிழ செய்த கதை. கதை எழுதிய நெல்லை தமிழன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. ஆஆஆஆஆஆஆஆ... இது நெல்லைத்தமிழன் வாரமோ... எங்கே என் செக்:)) ஓடியாங்கோ.. முஸ்தபா அங்கிள் கடையில நல்ல பெரீய நீத்துப் பூசணியாப்பாஅர்த்து வாங்கியாங்கோ... கொண்டு வந்து கீதாவிடம் குடுங்கோ... ஆங்ங்ங்ங் கீதா.. “தேவர்”கோட்டை:) ச் சந்தியில டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உடையுங்கோ.... கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரூஊஊஊஊஊ:) ஹா ஹா ஹா ஹா....

    சரி சரி நேக்குக் “கடமை” :) முக்கியம்.. இருங்கோ கதை படிச்சிட்டு வாறேன்ன்...

    பதிலளிநீக்கு
  22. நெல்லைத் தமிழன் அவர்களுடைய கைவண்ணத்தைப் பற்றி ஏது சொல்வது!?...

    இன்னும் பலபேருக்கு மண்வாசனையைப் பிரிந்து இருப்பது கஷ்டம் தான்..
    ஆனாலும் இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க இயலாமல் போகின்றது..

    சுவாமிநாதன் யாருக்கும் எவ்வித கஷ்டமும் தரவில்லை..
    அவருடைய ஸ்டேஷன் வந்து விட்டது!..

    மனதை நெகிழச் செய்த கதை...

    பதிலளிநீக்கு
  23. அப்பாடா பொறுமையாக வாசிச்சு முடிச்சேன். ஒரு குடும்பத்தில் பல ஆண்டுகளாக நடக்கும் கதையை சுருக்கி ஒரு குட்டிக் கதையாகக் காட்டியுள்ளமை மிக அருமை. முடிவு கொஞ்சம் கவலைக்கிடம்தான்.. கஸ்டமாகி விட்டது. இருப்பினும் இதுவும் நல்ல முடிவுதான்.. மகன் மருமகள் புறப்பட முன்பே நடந்ததும் நல்லதே.. அவர் சந்தோசமாக வாழ்ந்து முடித்து விட்டார்.. இனி என்ன கவலை..

    அருமையாக இருக்கிறது நெல்லைத்தமிழன்.

    இன்று கும்மி அடிக்க முடியவில்லை.. கதையிலே வசனம் எடுத்துச்.. சண்டைபோட முடியவில்லை எனத்தான் கொஞ்சம் கவலையா இருக்கு ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  24. அடடா.. இது என்ன இது என்றுமில்லாதவாறு ஸ்ரீராம் இவ்ளோ பெரிய கொமெண்ட் போட்டிருக்கிறாரே என்னாச்சோ ஏதாச்சோ என பதறிக்கொண்டு படிச்சேனா.. அது கோபு அண்ணன்.. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  25. சிறு கதைகள் எழுதும்போது அவரவர் கருத்துகள் அறியாமலேயே வந்து விழும் ரயில் புற[[அட இன்னும் ஐந்தே நிமிடங்கள்தான் இருக்கின்றன என்று எண்ணும் மனிதரிடையே அவரவர் ஸ்டேஷன் வந்தால் இறங்கித்தானே ஆக வேண்டும் என்று நினைப்பது சிறப்பாகத்தெரிகிறது

    பதிலளிநீக்கு
  26. எத்தனை முயன்றும் என்னால கதை எழுத முடியலியே! ஏன்?! என்னவா இருக்கும்?

    பதிலளிநீக்கு
  27. அருமையான கதை . அற்புதமாக கையாளப்பட்டு உள்ளது.
    பாலுமகேந்திரா படம் பார்த்த உணர்வு.
    மனதில் வலி. என் அப்பாவை நேரில் பார்த்த உணர்வு.
    ஆனால் இவ்வளவு தெரிந்தும் ...அன்பும் பாசமும் மட்டுமே எல்லாம் ..என்று அறிந்த பின்பும் ஏன் விட்டு கொடுத்து வாழ முடியவில்லை ?
    இங்கு கருத்து பதிந்தவர்களில் 90 விழுக்காடு ஒன்றுமே இல்லாத ..விசயத்திற்கு படும் துன்பம்தான் அதிகம் என்று மனதில் படுகிறது .
    அப்படி இல்லையேல் மிக்க மகிழ்ச்சி .
    படைப்பாளருக்கு எனது வணக்கங்கள் .

    பதிலளிநீக்கு
  28. மனதோடு லயிக்க வைத்த கதை.
    அதுவும், எனக்கு ஒரு குட்டி விளம்பரம் கொடுத்துவிட்டீர்கள். அருகில் இருக்கும் நாகேஸ்வரராவ் பார்க்கில் நடக்க வரும் பெரியோர்களில்
    மனைவியோடு வருபவர்களும் இருப்பார்கள்.
    காலை ஐந்தரை மணிக்குப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
    திடும் என்று மனைவியோ கணவனோ இருக்க மாட்டார்.
    கதவைத் திறந்து ஓடிப்போய் உங்க மனைவி வரவில்லையான்னு கேட்கத் தோன்றும் பைத்தியக்கார மனம். நன்றி நெ.த.

    மிக அமைதியான பெற்றோர், புத்திசாலிக் குழந்தைகள்.
    அருமையான முடிவு. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. நெகிழ்ச்சியாக இருந்தது
    செல்லிலிருந்து....

    பதிலளிநீக்கு
  30. நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு. கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். திறமையான எழுத்தாளர்கள் சிற்சில உரையாடல்களிலேயே மொத்த கதையையும் புரிந்துகொள்ள வைத்துவிடுவார்கள், சொல்ல வந்ததற்கு சட் என்று வந்துவிடுவார்கள் (ரிஷபன் சார் போன்றவர்கள்). எழுத ஆரம்பித்திருக்கும் எனக்கு 'வள வள' என்றுதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  31. வாங்க கீசா மேடம். உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

    கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மனுஷ மனம், கஷ்டத்தையோ அல்லது திடுக்கிடும் திருப்பத்தை எதிர்பார்க்கிறது. ஒரு கூட்டத்தைப் பார்த்தவுடனே, அங்கு ஏதாவது ஆக்சிடன்ட், யாரேனும் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்க ஆரம்பிக்கிறது. அப்புறம், கூட்டத்தின் நடுவில் ஒரு குரங்கு இருப்பது தெரிந்ததும், 'சப்' என்றாகிவிடுகிறது.

    அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு ஏர்போர்ட்டில் வழியனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த சுவாமினாதன் 'இறந்தார்' என்று சொன்னால் நல்லாவா இருக்கும்? இல்லை, அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க, இங்க சுவாமி தனியாக இருக்கிறார் என்று முடிக்கமுடியுமா? நல்ல பிள்ளைகளை வளர்த்தார், நல்ல குடும்பச் சூழ்னிலையைக் கொடுத்தார், அவர் கடமை முடிந்ததும் போய்ச்சேர்ந்தார் என்று முடிவதுதானே நல்ல முடிவாக இருக்க முடியும்? இதற்கு மசாலா எல்லாம் போட்டு எழுதினால், படிக்கும் நண்பர்கள் நிறையபேர், இந்த மாதிரி குழந்தைகள் வெளி நாட்டில், தாங்கள் உள்ளூரில் என்று இருப்பவர்கள். அவர்களுக்கு மன நிறைவாக இருக்கவேண்டாமா?

    பதிலளிநீக்கு
  32. கோமதி அரசு மேடம்... உங்கள் நெடிய பின்னூட்டம் மகிழ்ச்சி அளித்தது. நன்றி.

    குழந்தைகளுக்கு அப்பாவை தனியாக விட்டு விட்டு அங்கு இருக்கிறோம் என்ற
    குற்ற உணர்ச்சி வராமல் தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டார். - இதுதான் கதையின் அடி'நாதம். தங்களை பட்டுப் போல் வளர்த்த பெற்றோர் தவித்திருக்க விடுவது எவ்வளவு கொடுமையான மன பாரமாக இருந்திருக்கும் குழந்தைகளுக்கு? அப்பா அவர்களோடு செல்ல ஏங்கக்கூடாது (அது இயல்பல்ல). அவர்கள், அப்பாவைத் தனியாக விடக்கூடாது என்று ஆதங்கப்படவேண்டும். கதை நிகழ்வுகள் பலருக்கு ஏதாவது ('நல்ல) அனுபவத்தைக் கிளற வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
  33. கீசா மேடம் - 'வானதியைக் கைவிடாதே' - இது அப்பா அவர், தன் மகளைப் பார்க்கும் பார்வை. அப்பாவுக்கு தன் மகள் மீது எப்போதும் வாஞ்சை இருக்கும். பையன்'களைக் காட்டிலும். கேட்டுப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  34. காலைலேருந்து ரொம்ப பிசி இப்போதான் கணினி வந்தேன் .சூப்பரா இருக்கு நெல்லைத்தமிழன் ஒரே மூச்சில் வாசித்தேன் .எனக்கென்னமோ கொஞ்சம் காட்சிகள் அதாவது ஸ்கூல் நாட்கள் பார்ட் நீங்களும் உங்க அப்பாவுடனும்,ஆன காட்சிகள் போல இருந்தது :).
    உணவுக்கு நன்றி சொல்வது நாங்கள் தவறாமல் செய்வது .grace at mealtimes .

    முடிவு மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது ..ஆனால் இப்படித்தான் ஒருவர் bye சொல்லணும் சந்தோஷமா இருந்தார் சந்தோஷமா சென்றார் .

    பதிலளிநீக்கு
  35. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். ஸ்பைஸ் இல்லாமல் எழுதுற கதைதான் எனக்குப் பிடித்தது. நாம என்ன சீரியலா எழுதறோம், முறையற்ற வாழ்க்கையின் பக்கங்களைக் காண்பிக்க.

    என் மாமா ஒருத்தர் இருந்தார். அவருக்கு பிறருக்குப் பிடித்தவாறு உணவு, போதும் போதும் என்று சொல்லும்வரை, உணவளிக்கும் குணம். ஆனால், அவர், ஒரு பருக்கை தூர எறிந்தாலோ, தட்டைவிட்டு வெளியே வந்தாலோ, ரௌத்திரம் ஆடிவிடுவார்.

    பரீட்சை காப்பியடிப்பது நான் செய்தது. நானே போய் father warden (Asst HM அவர்தான்) இடம் போய்ச் சொன்னேன். அவர் ப்ராம்ப்டா, என் பெரியப்பாட்ட (அவர் கல்லூரி கணிதப் ப்ரொஃபசர். அவர் கீழ்தான் பெரும்பாலான brothers,fathers படிப்பாங்க) சொல்லிட்டார். உண்மை வாழ்க்கையில் கதைபோல் நிகழ்வது அபூர்வமல்லவா?

    //எங்கள் வீட்டுப் பழக்கம்....அப்படியே// - எங்கள் குடும்பத்தில் எங்க அப்பா மட்டும் இப்படி இருந்தார். ஆனாலும் நண்பர்களைக் கண்காணிப்பார் (கூடா நட்பாக இருந்துவிடக்கூடாதே என்று)

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. காமாட்சியம்மா - உங்கள் வருகையும் பின்னூட்டமும் என் மனதைத் தொடுகிறது.

    //இதைப் படித்தபோது கண்கள் சில துளி நீரைச் சிந்தியது.ஏன்?// - நான் உங்களைப் பற்றி எண்ணும்போது, சிறு பெண்ணாக 'வளவனூர் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்து', எங்கெங்கோ வாழ்க்கையில் சென்று வாழும் பாதை உங்களுக்கு அமைந்திருக்கிறதே என்று ஆச்சர்யப்படுவேன். நானுமே, 9ம் வகுப்பு வரை இருந்த விதமென்ன, எம்.எஸ்.சி படித்துவிட்டு சென்னைக்கு வந்தபோது, பெண்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியாமல் கூச்ச சுபாவத்தோடு இருந்தேன். அப்புறம் என்ன என்னவோ அனுபவங்கள்.. வெளிநாட்டு வேலை, பல பயணங்கள்... 'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும்' என்ற உமர் கய்யாமின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

    உங்களுக்கு கதை பிடித்திருந்தது என அறிந்தது என்னுள் சந்தோஷத்தை வரவைத்தது.

    பதிலளிநீக்கு
  38. / நானே போய் father warden (Asst HM அவர்தான்) இடம் போய்ச் சொன்னேன். அவர் ப்ராம்ப்டா, என் பெரியப்பாட்ட//

    நினைவிருக்கு அந்த வாசல் முன் கிடைச்ச 27 ரூபாய் ..தொலைத்தவர் வரும்வரை திண்ணையில் இருக்க சொன்னார் உங்க அப்பா னு சொன்னது .

    அப்புறம் அந்த 27 ரூபாயை கொடுத்தீங்களா தொலைத்தவர் கிட்டே ..இதை கீதாக்கா கூட கேட்டிருந்த நினைவு :) பதில் வரல இல்லை என் கண்ணில் படலை

    பதிலளிநீக்கு
  39. வருகைக்கும், கதை உங்களுக்கு கொடுத்த எண்ணத்தை அப்படியே வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி மாலா.

    இந்த மாதிரி அப்பாக்களும் இருக்கின்றனர். (சுஜாதா தேசிகன், அவர் அப்பாவின் குண நலனாக சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார்). இன்னொன்று மாலா... 10-20 வருடங்களாகவே, குழந்தைகள் வெளிநாட்டுக்கு migrate ஆவதும், பெற்றோர் இந்தியாவில் இருப்பதும் (அவ்வப்போது போய்வந்தாலும்), கொஞ்சம் அதீத வயதானபின்பு 'என்னவாகும்' என்ற கேள்வி இருபக்கத்து மனத்திலும் இருந்துகொண்டே இருக்கும். நான் பாசிடிவ் ஆக நினைத்தேன், அது அபூர்வம் என்றபோதும்.

    நான் ஆபீஸ் வேலையா (இன்டர்வியூ செய்து ஆட்களை எடுக்க) பிலிப்பைன்ஸ் போவதற்கு எல்லாம் ரெடி. மறு நாள் கிளம்புகிறேன். அங்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. அது ஒரு 5 நாள் பயணம். கிளம்புவதற்கு பேக் பண்ணி ரெடியாகிட்டேன். முந்தின நாள் இரவு என் தந்தை சென்னையில் காலமானார். நடு இரவில் புறப்பட்டு மறு நாள் மதியம் 12 மணிக்கு போய்ச்சேர்ந்தேன். மாலையில் காரியங்கள் ஆனது. இதுவே மறு நாள் நடந்திருந்தால், நான் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எதுவுமே நம் கையில் இல்லை. அதனை 'விதி' என்றுதான் நாம் அழைக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. கோபு சார்.. உங்கள் வருகைக்கும், ஸ்ரீராமுக்கு அனுப்பிய நெடிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்களுக்குக் கிடைத்த ரிஷபன் சார் போல், எனக்கு ஊக்கப்படுத்த நிறையபேர் இருக்கிறார்கள். அதனால், 'கதை' எழுத தைரியம் வருது. ஸ்ரீராம், ஆரம்பத்தில் ஊக்கப்படுத்தவில்லை என்றால், இந்த வேலையை நான் செய்திருக்கமாட்டேன்.


    //சற்றே பெரிய நீண்ண்ண்ண்ட கதையை// - ஆமாம். வரும் மாதங்களில், நிஜமான 'சிறுகதை' ரிஷபன் சார் ஸ்டைலில் முயலப்போகிறேன்.

    உங்கள் மனக் கணிப்பு (என்னைப் பற்றி), அனேகமாக 'காக்காப் பொன்'னை, தங்கச் சிதறல் என்று எண்ணியதுபோல்தான் ஆகிவிடப்போகிறது. ஆனாலும், என் 'உள் குணம்' வெளிக்காட்டாமல், என் பிம்பத்தை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ளும் இயல்பு எனக்கு உண்டு.

    இந்த மாதிரி கதையை எழுதும்போது, எனக்கு, 'திடுக்கிடும்' திருப்பங்கள் வைப்பதில் இஷ்டமில்லை. வாழ்க்கைலதான் இதுமாதிரி நல்லவர்களை அதிகம் சந்திக்கமுடியாது என்பதுதான் அதன் காரணம்.

    //தனியாக ஓர் வலைத்தளம்// - அப்படி ஒரு எண்ணம் இல்லை. கதையைப் படித்தமைக்கும். நெடிய கருத்திட்டமைக்கும் நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  41. சிலருக்கு தாங்கள் நினைக்கிற மாதிரியே தான் நடக்கணும். அப்படியான அவங்க நினைப்புக்கு உடம்பும் ஒத்துழைக்கும். நினைப்புக்கு மாறா நடக்கற சூழ்நிலை வந்து விட்டால் உடம்பும் ஒத்துழைக்காது போலிருக்கு.

    தடக்கென்ற முடிவு.

    எங்கங்கையோ இருக்கற சந்து பொந்தெல்லாம் நுழைந்து ஊர்வலம் வந்த சாமி கோயில் நெருங்குகையில் சடக்கென்று உள்ளே நுழைந்து விட்ட உணர்வு.

    நேரேஷன் கான்வர்ஷேஷனில் முக்குளித்திருக்கிறது. சாங்கோபாங்கமான நேரடியான கதை சொல்லல். சின்னதாய் மெல்லிசாய் அடுத்து என்ன என்று வாசிக்கறவங்களை எதிர்பார்க்க வைக்கிற ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ?..

    'லாம்' என்று நினைக்கிறவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். 'லாமோ', 'லாம்'மோ கதாசிரியருக்கு நினைச்ச மாதிரி முடிச்சிடணும்ன்னு தோணியிருக்கு. முடிச்சிட்டார்.

    இது சுவாமிநாதனின் கதை. அதனால் தான் சுவாமிநாதனோடையே முடிச்சிட்டார். யோசித்துப் பார்த்தால் அதுவும் சரிதான்.

    பதிலளிநீக்கு
  42. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன். 'நல்லது செய்யும்போது நல்ல முடிவுதானே வரமுடியும்'? பொதுவா, அப்பாக்கள், தங்கள் பசங்களின் நிழலில் ஒதுங்க விருப்பப்பட மாட்டார்கள். இது பொது குணம் என்று நினைக்கிறேன். அவர்கள் பசங்களை வளர்த்து ஆளாக்குவது, 'கடமை' என்பதால்தான்.

    பதிலளிநீக்கு
  43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. நான் கடந்த 3 வாரங்களாக டர்புலன்ட் பீரியடில் இருக்கிறேன். சாதாரண சமயமாக இருந்திருந்தால், 'புதன் புதிர்' சுடச் சுட அனுப்பி, முதல் முறையாக 3 நாட்கள் தொடர்ந்து இடுகை வரவைத்திருக்கலாம் (இதற்கு முன் அப்படி முயற்சித்தேன்... சிறிய டெக்னிக்கல் தவறு.. அதனால் நிறைவேறவில்லை. எப்படியும் ஞாயிறு ஸ்லாட் யாருக்கும் கிடைக்காது என்பது தெரிந்ததுதானே)

    கதை பிடித்திருந்தது என்றதற்கு நன்றி. 'கலாய்ப்பதற்கு' வாய்ப்பு வராமலா போய்விடும்?

    பதிலளிநீக்கு
  44. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை செல்வராஜு சார்.

    //மண்வாசனையைப் பிரிந்து// - உங்கள் பார்வையில் இதன் அர்த்தம் வேறு. என் பார்வையில் இதன் அர்த்தம் வேறு. எனக்கு 'மண்' நெல்லை (அங்கு குழந்தைமுதலே வளராவிட்டாலும்). ஆனால் அதைவிட்டு சென்னை வந்தாச்சு. வெளி'நாட்டிலும் 25 வருஷம் இருந்தாச்சு. பின்பு பெங்களூரில் செட்டில் ஆகவும் செய்யலாம். இருந்தாலும், 'நெல்லை மண்'-அது தனிதான். அங்கு எப்போவாவது போகும்போது, எந்தச் சொந்தமும் அங்கு இல்லை என்றாலும், தனியாக நடப்பேன். அது ஒரு தனி உணர்வு.

    எனக்குக் கூட, அப்போ அப்போ, பேசாமல் மயிலாடுதுறையில் வீடு வாங்கி அங்கேயே இருந்துவிடலாமா என்று எண்ணம். என் மனைவியிடம்கூட பலமுறை சொல்லியிருக்கேன். (ஏன் மயிலாடுதுறை? அங்கிருந்தால், சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட கோவில்களை, சிரமமில்லாமல் தரிசித்துவிட்டு வரலாம், எளிய வாழ்க்கை, ஆனால் சௌகரியத்தோடு வாழலாம் என்ற எண்ணம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயிலாடுதுறையை விட்டு வந்து இருக்கும் எங்களை மீண்டும் அங்கேயே இருந்து இருக்கலாம் என்று நினைக்க வைத்து விட்டீர்கள்.

      தினம் மாயவரம் பேச்சுதான் எங்கள் இருவருக்கும்.

      நீக்கு
  45. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.எம்.பி சார். இந்த வார்த்தைகளெல்லாம் எங்கேயோ படித்திருக்க வாய்ப்பு இருக்கு. இதுபோன்று, 'ஆட்டோ சங்கர்' (கொலைகாரன்) அவருடைய கதையை சிறையிலிருந்து எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடப்படும், 'ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பகல் உண்டு. யாருக்கும் பொழுது விடிந்தே ஆகும்' என்ற வரியும் என் மனதில் தங்கிவிட்டது. கஷ்டம் வந்தால், அதன் தீர்வும் அதைத் தொடர்ந்து வந்துதானே ஆகவேண்டும்?

    பதிலளிநீக்கு
  46. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    //ஏன்?! என்னவா இருக்கும்?// - அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்களும் ஒரு கதையை எழுதி எங்கள் பிளாக்குக்கு அனுப்புங்கள். ஸ்ரீராம் சிறு சிறு திருத்தங்கள் சொல்வார். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'தான்.

    இங்கு பல ஜாம்பவான்கள் (ஜீவி சார், கோபு சார் போன்ற பலர்) ஊக்கப்படுத்தித்தான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. வருக இளங்கோவன் ரங்கராஜன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    நம் எல்லோருக்கும் மீண்டும் வாழ்க்கையை குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பு வந்தால், நாம் நிச்சயம் நமது தவறுகளைக் களைந்துகொள்ளும் சந்தர்ப்பமாகவே அதனை நினைத்து, தவறுகளை முடிந்த அளவு நீக்க முயல்வோம். 'அனுபவம்' நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  48. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  49. வல்லிம்மா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    //திடும் என்று மனைவியோ கணவனோ இருக்க மாட்டார்.// - ஐயோ... ஒரு வரியில் இப்படித் திடுக்கிடச் செய்கிறீர்களே. வெகு அபூர்வமாகவே, இருவரும் ஒரே டெஸ்டினேஷனுக்கு டிக்கட் வாங்கி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், பெற்ற பிள்ளைகளுக்கு ஓரளவு ஆதரவாக இருவரோ அல்லது இன்னும் பயணிப்பவரோ இருந்தால்தான் அவர்களுக்கு ஓரளவு நிம்மதி, குழந்தைகளுக்கும் தங்கள் கடமையை ஓரளவாவது செய்ய வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  50. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  51. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  52. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின். 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது'.

    பதிலளிநீக்கு
  53. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார்.

    //நினைப்புக்கு மாறா நடக்கற சூழ்நிலை// - வித்தியாசமான பாயின்டைப் பிடிச்சிட்டீங்க. அந்த மாதிரி பிடிவாத குணம் உள்ளவரா சுவாமி சித்தரிக்கப்படலை. இருந்தாலும், பெரும்பாலான பெரியவர்கள், மாற்றத்தை ஏற்க மாட்டார்கள். எங்க அப்பா கிட்ட, நான் நங்கனல்லூரில் வாடகைக்கு நல்ல சௌகரியமான இடத்துக்கு மாறுங்க, நான் ஆர்கனைஸ் பண்ணறேன் என்று சொன்னபோதும், அவர் அசைந்துகொடுக்கலை. அவர் சித்தாந்தம், 'பாலம் வரும்போது எப்படி கடக்கறதுன்னு யோசிப்போம்' இப்போவே முன்னேற்பாடு செய்யவேண்டாம் என்பதுதான்.

    //ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ?// - இதைப் படித்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது, நாகேஷ், அவர் சினிமா எடுக்க எல்லாம் ரெடி, 'கதை கதை ஒண்ணுதான் கிடைக்கலை' என்று சொல்வடை நினைவுபடுத்திவிட்டது. இன்னும் நிறைய படிக்கவேண்டும், நிறைய எழுதிப் பார்க்கவேண்டும்.. அப்போதுதான் அது என் வசமாகும்.

    வல்லிசிம்'ஹன் அம்மா எழுதின வரிகளை அப்போது படித்தபோது, ஸ்கெலடனாக எனக்குத் தோன்றியது, பசங்க மைக்ரேட் ஆகறாங்க, அப்பாவை அழைத்துக்கொண்டுபோக விரும்பறாங்க, ஆனால் அது நடக்கும் வேளைக்கு சில நாட்கள் முன்பு அப்பா மறைந்துவிடுகிறார் என்பதுதான். இருவரும் (மகன் மருமகள்) வற்புறுத்தணும்னா, அப்பா அவ்வளவு நல்லவரா இருக்கணும், நண்பரா இருந்திருக்கணும்.. இதற்காகத்தான் 'வள வள' பாணி.

    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. கோமதி அரசு மேடம்... இப்போ எங்க இருக்கீங்கன்னு சட்டுனு ஞாபகத்துல வரலை. காரணம் இல்லாமல் எந்த இடத்துக்கும் யாரும் migrate ஆவதில்லை. காரணம் இல்லாமல் இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பும் இல்லை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  55. நெல்லைத் தமிழன் உங்களுடைய பின்னூட்டங்களும், அதன் பின் சில நிகழ்வுகளும் படிக்க விஷயங்கள். என்னுடைய பின்னூட்ட பதிலில் எழுதிய, எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதிஎழுதி மேற் செல்லும் என்ற உமர்கய்யாமின் வரிகள் என் மனதிலும் நன்றாகப் பதிந்து சிந்திக்க வைத்தது. என்னைப் பற்றிய ஞாபகங்களும், நல விசாரிப்புகளுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  56. நெல்லை! உங்கள் தொடர் யோசனைக்காக:

    ஒவ்வொரு தலைமுறையினரின் ஈடுபாடுகளும் வார்ப்புகளும் அவர்களின் நட்பு வட்டாரம், வாழ்க்கைச் சூழ்நிலை, சந்திக்கிற சவால்கள் இவற்றை ஒட்டியே அமைந்து விடுகிறதைப் பார்க்கிறேன். இதெல்லாம் மனிதனின் மேல் பூச்சுகள்.

    உள்பூச்சு என்று ஒன்று இருக்கிறது. அது தான் ஜீன்களின் சாரம்.
    வம்சம் பூராவும் உயிர்ப்பின் அடிப்படையாய் எந்த பங்கமும் இல்லாமல் தொடர்வது.

    இப்பொழுது கதைக்கு வருவோம்.

    சுவாமிநாதனின் தந்தைக்கு (கோபாலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இன்றைய சுவாமிநாதனின் குணங்கள் இருப்பதாகவும், தன் தந்தை கோபாலனுக்கு நேர் எதிர்மாறான குணங்களை சுவாமிநாதன் கொண்டிருப்பதாகவும், சுவாமிநாதனின் மகன் வாசுவிற்கு அவன் தாத்தா கோபாலனின் குணம் அப்படியே அச்சு அசலாக படிந்திருப்பது போலவும் ஒரு கதை பண்ணலாம் நீங்கள். இந்த குணங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் காலத்திற்கேற்ப வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மில் படியும் மேல் பூச்சுகள்.

    இத்தனைக்கும் நடுவே அந்த வம்சத்தின் ஜீன்களின் குணாம்சம் கோபாலனிலிருந்து வாசு வரை வாசுவைத் தாண்டியும் எந்த பங்கமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது அடிப்படை விஷயமாய் காப்பாற்றப் பட வேண்டும்..

    அது என்ன ஜீன்களின் குணாம்சம் என்பது தான் மிலியன் டாலர் கேள்வி.

    பதிலளிநீக்கு
  57. ஜீவி சார்... எனக்குப் புரிந்த அளவில் இந்த விஷயத்தைச் சொல்கிறேன்.

    'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்'

    ஆண் வாரிசாக இருக்கும் பரம்பரைக்கு, பொதுவா குணங்கள் அப்படியே கடத்தப்படும். (மிகச் சில விதிவிலக்குகள் இருக்கும், அது பொது நியதியாகாது). இதைத் தவிர, பெண்ணின் (அம்மா) பரம்பரை ஜீனும் கொஞ்சம் சேரும். இதுல எது எந்த அளவு என்பது கொஞ்சம் கணிப்பது அஷ்டம். (அதை 'விதி' என்ற கணக்கில்தான் சேர்க்கணும்). ஒரு அப்பா செல்ஃபிஷ். அம்மா சைடுல பரந்த மனம். இதுல பையன், பரந்த மனம் உடையவனா இருப்பதைப் பார்க்கிறேன். அதே சமயம், அப்பாவின் அப்பாவோட குணங்களும் இருக்கு. இதுலயும், மூத்ததாகப் பிறக்கும் குழந்தை (பெண்ணோ ஆணோ), அப்பாவின் பரம்பரையை ஒட்டிய குணங்களைக் கொண்டுள்ளதைக் காண்கிறேன்.

    ஆனா, குணத்தை, அடலசன்ட் வயதில் எடைபோடக்கூடாது. அந்த பதின்ம (ஆண்கள்னா 23 வரை) வயதில் பொதுவா ரிபெல்லியன் குணங்கள் சேரும்.

    அதுனாலத்தான் 'குலத்தளவே ஆகுமாம் குணம்' ('நீரளவே ஆகுமாம் நீராம்பல்...) என்ற சொல் வந்தது.

    பதிலளிநீக்கு
  58. மிகச் சிறப்பான கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  59. 'நன்றி பரிவை குமார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!