சனி, 16 ஜனவரி, 2010

பட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும்




பட்டம் பெறுதலும் பட்டம் வழங்குதலும் சாணக்கியத் தனமான வெற்றித் தந்திரங்கள்.  அழகிய மூக்கன் என்று ஒரு பட்டத்தை விழா எடுத்துக் கொடுத்தால் அதை வாங்க ஆயத்தமாக இருக்கும் ஐம்பது தலைகளை நான் உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியதில்லை.  சிறந்த  சினிமா நடிக நடிகை இயக்குனர் தொகுப்பாளர் உணவு உபசரிப்பாளர் ப்ளோர் பெருக்குபவர் என்று தேடித் தேடி பட்டம் வழங்கி விழா நடத்தி அதை படம் எடுத்து அதை பகுதி பகுதியாக ஷாம்பு  சீயக்காய் தூள் சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களுடன் பரவலாகக் கலந்து அளித்து நம்மை வாழ வைக்கும் தெய்வங்களைப்  பற்றி தனியாக சொல்ல வேண்டுமா என்ன?
 
பெறுபவருக்குத் தெரியாமல் வழங்கப்படும் பட்டங்களும் உண்டு.  வாத்தியார்களில் நொண்டி சார்,  பொடி மூக்கன், சபக் டிஜின்  (இது எதோ ஒரு முகலாய முற்றுகை யாளர் பெயர்.  சற்று கால் தாங்கிதாங்கி நடப்பதால் அந்த ரிதம் கருத்தில் கொள்ளப் பட்டு வைக்கப் பட்ட பெயர் - இது குறித்து பலமுறை நான் பின்னாளில் வெட்கப் பட்டிருக்கிறேன்.)  என்று கற்பனை வளத்துடன் சூட்டிய பட்டங்கள் கொஞ்ச நாளில் பட்டத்துக்கு உரியவருக்கே தெரிய வரும்.  என்ன செய்வது! பழகிப் பழகி பட்டமும் நிலை கொண்டு விடும். 
 
தெருப் பெண்களுக்கு பட்டப் பெயர்கள் இன்னும் அதிக ரசனையுடன் வைக்கப் படும்.  வெள்ளைக் காக்கை என்று ஒரு யுவதிக்கு பெயர் வைத்தோம்.   காரணம் அவள் நல்ல அழகி.  ஆனால் வாயைத் திறந்தால் போதும் கலவரப் பட்ட காக்கைக் குஞ்சு போல் இருக்கும் குரல்.  இறைவன் ஏன்தான் வரத்தையும சாபத்தையும் ஒரு சேர அளிக்கிறானோ என்று வியக்க வைக்கும் கலவை.  பொருத்தமாக உடை உடுத்தும் ஒரு ஹீரோயினுக்கு சப் ஸ்டேஷன் என்று பெயர் வைத்தார்கள் எங்கள் தெரு ஹீரோக்கள்.  அது என்ன சப் ஸ்டேஷன்?  சப் ஸ்டேஷனுக்கு  சுருக்கம் எஸ். எஸ்.   பெண் Simply Superb ஆம்.  எனவே எஸ். எஸ்.  எனவே சப் ஸ்டேஷன்.  எப்படி இருக்கிறது கற்பனை வளம்?
 
பையன்களுக்கு பெண்கள் என்ன பெயர் என்ன அடிப்படையில் வைப்பார்களோ அதை பெண் வாசகர்தாம் சொல்லவேண்டும்.  பையன்களே பையன்களுக்கு வைக்கும் பெயர்கள் எளிதில் புரியக் கூடிய காரணப் பெயர்கள்.  ஒட்டடைக் குச்சி சாரங்கன், புளிமூட்டை சிதம்பரம், குள்ளச் சாமியார் இப்படிப் பலப் பல.
 

திருவாரூரில் நான் படிக்கும் போது இரண்டு சாமிநாத அய்யர்கள் இருந்தனர். ஒருவர் முடிகொண்டான் வேங்கட ராம அய்யர் என்ற மகா வித்வானின் புதல்வர். இன்னொருவர் எப்போதும் பாண்ட்டும் புஷ் கோட்டும் அணிந்து நவ நாகரிகமாக இருப்பவர்.  ஒரு சமயம் எங்கள் வகுப்பு ஆசிரியர் இல்லாமல் அமளி துமளிப் பட்டுக் கொண்டு இருந்தது.  கையில் பிரம்புடன் தலைமை ஆசிரியர் ராஜாராமய்யர் வந்தார்.  " என்ன இங்கே இரைச்சல் ? யார் கிளாஸ் எடுக்கணும்? " என்று அதிகாரமாக கேட்டார். 
 
"சாமிநாத அய்யர் சார்  " என்று பையன்கள் கோரஸ் ஆக கத்தினார்கள்
 
"ஸ்டைல் சாமிநாத அய்யரா பூனைக்கண் சாமிநாத அய்யரா " என்று இயல்பாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்! முடிகொண்டான் ஐயர் நல்ல சிவந்த மேனி. கண்கள் பச்சை விழியுடன் வெளிநாட்டு பூனைக் கண்ணாக ஜொலிக்கும்.
 
சங்கரன் என்று எங்களுக்கு ஒரு மேற்பார்வை பொறியாளர் இருந்தார்.  காலை ஆபீஸ் திறந்ததும் நிதானமாக ஒரு சுற்று ஆபீசை வலம் வருவார்.  ஒவ்வொருவராக குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பார்.  அவர் வரும்போது கவனிக்காத ஒரு தோழரை சக தொழிலாளி ரகசியமாக எச்சரிக்க,  பக்கத்தில் வந்து நின்ற சங்கரன் " தெரியுமய்யா நீ என்ன சொல்லி இருப்பே என்று.  கிங்கரன் வந்துட்டான்னு தானே." என்று விளம்பி தனக்குத் தானே ஒரு சரியான பட்டப் பெயர் சூட்டிக் கொண்டார்.   

9 கருத்துகள்:

  1. இன்னும் "பட்டத்தை" விடலையா?!

    பறக்கவிடுங்க! சுதந்திரமா, ஜாலியா இருங்க!

    பதிலளிநீக்கு
  2. /கலவரப் பட்ட காக்கைக் குஞ்சு/
    பள்ளிக்கூட நாட்களில் இந்த வகையில் பலரைத் தெரிந்து வைத்திருந்தேன். குறிப்பாக கொலு நாட்களில் சுண்டலை முதலிலேயே எடுத்துக் கொடுத்தாலும் 'பாடியே தீருவேன்' என்று அடம்பிடித்த அழகுப் பெண்கள் நினைவில் இந்த மறுமொழி.

    பதிலளிநீக்கு
  3. பனைமரம், குள்ளக்கத்திரி, பேபர் ரோஸ்ட், மஞ்சக்குருவி, சித்தானை, மேஸ்திரி, டமாரம், வயலின் போன்ற காரணம் தொட்ட பட்டப் பெயர்கள். இச்சு, சூப்பி, மியா, லொக்கு, டங்கா போன்ற காரணம் புரியாத பட்டப்பெயர்கள் சில (நியூகாலனி டங்கா இப்போ எங்கே எப்படி இருக்கிறாரோ?). மீனம்பாக்கம் கல்லூரி லாஜிக் புரபசர் எங்கள் வகுப்பிலிருந்த எந்த மாணவனையும் நிஜப்பெயர் கொண்டு அழைத்த நினைவில்லை. அடென்டென்ஸ் எடுக்கும் போது கூட student number, பெயர் சொல்லிக் கூப்பிடாமல் என்னை _______ என்ற தான் வைத்த பட்டப்பெயரைச் சொல்லித் தான் அடன்டென்ஸ் எடுப்பார். நாள் தவறாமல் எப்படி ஒவ்வொரு மாணவனின் பட்டப்பெயரை இவரால் நினைவில் வைக்க முடிகிறது என்று வியந்திருக்கிறோம்.
    ம்ம்ம்ம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  4. அருமையான இடுகை, ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புல கலக்குறீங்களா.. ரைட்டு.

    பதிலளிநீக்கு
  5. பல பெரிய இடங்களை... பட்டம்-ங்கிற பேருல உள்ளே வச்சு குத்திருக்கீக... வாழ்க உங்க தொண்டு.

    பதிலளிநீக்கு
  6. நயன்தாரா ரஜினி விட்ட "சந்திரமுகி" பட்டங்கள் பற்றி சொல்லாமலே ஒரு பட்டம் கட்டுரை வெளியிட்டமைக்கு ஒரு பாட்டம் பாராட்டுக்களை வழங்கக் கடமைப் பட்டுள்ளேன். காட்டம் கம்மி என்றாலும் வாட்டம் அதிகம் தரவில்லை. இதற்கு மேல் ஏதும் சொல்ல மாட்டம். எனக்கு அடுக்கு மொழிக் குடுக்கை என்று பட்டம் குடுக்காமல் இருந்தால் கோட்டம் எதுவும் இராது.

    பதிலளிநீக்கு
  7. கிருஷ் சார் - பட்டத்தை கவிதையுடன் இன்று நிறைவு செய்வோம்.
    அப்பாதுரை - கொலு நாட்கள் கண்ணுக்கும் காதுக்கும் வாய்க்கும் நல்ல விருந்துதான் - ஆனா என்ன - நீங்க சொன்னாப்புல - எல்லாம் ஒரே இடத்தில் எப்பவும் கிடைக்காது. நியூ காலனி டங்கா வா ? எழுபத்து மூன்றாம் ஆண்டும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகளும் நாங்க அங்கே இருந்த சமயத்தில் கேள்விப் பட்டதே இல்லை!
    பாராட்டுக்கு நன்றி சரவணகுமார், ரோஸ்விக் ..

    பதிலளிநீக்கு
  8. நியூ காலனி டங்காவுக்கும் சர்வோதயா பள்ளியின் ஒரு பிரபல ஆசிரியைக்கும் ..ங்கா என்று கிசுகிசு. எழுபதுகளில் சம்ஸ்க்ருதப் பள்ளியில் படித்தவர்களுக்குத் தெரியும். அட்லீஸ்ட் கிசுகிசுவாவது தெரியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!