செவ்வாய், 13 அக்டோபர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :  ஓவியம் -  துரை செல்வராஜூ 

ஓவியம்
துரை செல்வராஜூ 
========

1970 ஜூன் மாதம்.. ஆறாம் தேதி...

அந்த அழகான சிற்றூர் மாதத்தின் முதல் நாளில் இருந்தே பரபரப்பாக இருந்தாலும் அன்று மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது...

காரணம் - அவ்வூரின் அரசினர் உயர்நிலைப் பள்ளி கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படுகின்றது....

கடலை, உளுந்து, பயறு - விற்று சிறுவாடாக சேர்ந்திருந்த காசு எல்லாம்
பேனா பென்சில் புத்தகம் என்றும் வெள்ளைச் சட்டை காக்கி டிராயர் என்றும் வெளிர் நீலப் பாவாடை என்றும் தாவணி என்றும் மஞ்சக் கலர் ரிப்பன் என்றும் மாறிக் கொண்டிருந்தன...

பதினொன்றாம் வகுப்புப் பசங்களில் ஒரு சிலர் புத்தம் புதிய சைக்கிளுடன் 
...

புது சைக்கிள் வாங்கணும்... ன்னா இந்தப் பக்கம் கும்மோணம்.. அந்தப் பக்கம் .. மாயவரம்...

இங்கேயே ஒரு சைக்கிள் ஸ்டோர் இருந்தாலும் புது சைக்கிளின் விலை  இருபது முப்பது ரூபாய் கூடுலாக இருக்கும்...

அதனால ஜனங்கள் சைக்கிள் டயர், டியூப், டைனமோ பல்ப், பிரேக் கட்டை, சீட் கவர் - இதுகளை மட்டும்  இந்த கிராமத்தில் வாங்கிக்கிட்டு புது சைக்கிளை மட்டும் கும்மோணத்தில் இருந்து வாங்கிக்கிட்டு வருவாங்க...

" டே.. மச்சான்...  சைக்கிள் சீட்டு ஒரிஜினல் புரூக்ஸ் இல்லேடா... நல்லா ஏமாந்துட்டே... இதுக்காகவா அங்கே நீ போனது.. காசு தெண்டமாயிடுச்சே... டா!... "

அவ்வப்போது இப்படியான பரிகாசங்களும் நடக்கும்...

" தம்பி... எங்க பொழப்பு தான் வாய்க்கா வரப்பு தோட்டம் துரவு..ந்னு ஆகிப் போச்சு... நீயாவது நல்லா படிச்சு ஆபீசு வேலைக்குப் போவணும்... "

" சரிப்பா!... "

தன்னருகில் பேசிக் கொண்டே வருபவர்களைப் புன்னகையுடன் நோக்கினான் சரவணன்...

அந்தப் பையன் நடுநிலைப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்று ஹைஸ்கூலுக்கு வருகிறான் என்பது நன்றாகத் தெரிந்தது..

இருந்தாலும் கேட்டான்...

" எந்தக் கிளாஸ்?... "

" ஒம்பதாப்பு!... "  - அந்தப் பையனின் கண்களில் கொஞ்சம் மருட்சி...

" அதெல்லாம் பயப்படக்கூடாது!... தைரியமா இருக்கணும்... நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்!... "   - மறுபடியும் சரவணன் முகத்தில் புன்னகை...

" தம்பி.. நீங்க என்னா படிக்கிறீங்க?.. "  அந்தப் பையனின் அப்பா கேட்டார்...

" இந்த வருசம் எஸ்ஸெல்சி... பதினொண்ணாவது!... "

" யப்பா... இந்தா இருக்கு நோட்டுப் புத்தகம் விக்கிற கடை!.. "

ஆவலுடன் அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டதும் சரவணன் குறுக்கே புகுந்தான்..

" இப்போதைக்கு ரெண்டு நோட்டு மட்டும் வாங்கிக்குங்க... ஸ்கூல்ல சார் சொல்றதைக் கேட்டுக்கிட்டு அப்புறமா வாங்கிக்கலாம்!... "

" இதுவும் நல்ல யோசனைதான்..  சரி... தம்பி நீங்க முன்னால போங்க... ரெண்டு நோட்டு வாங்கிக்கிட்டு பின்னாலயே வர்றோம்... "

- என்றார் அந்தப் பையனின் தந்தை..

அவர்கள் அங்கேயே நின்று கொள்ள அந்த வேளையில் சக்திவேல் புத்தம் புது சைக்கிளில் வந்து காலை ஊன்றினான்...

சக்திவேல்.. சரவணனின் கூட்டாளி..  பக்கத்துக் கிராமத்தில் இருந்து வருபவன்...

ஆறாம் வகுப்பில் இருந்தே ஒன்றாகப் படிப்பவன்...

" டே.. சக்தி!... "  உற்சாகமானான் சரவணன்..

" மதுரைக்கெல்லாம் போய்ட்டு என்னைக்குடா வந்தே!... நான்  முந்தா நாள் உன் வீட்டுக்கு வந்தேன்.. தெரியுமா?... "

சரவணன் சக்தியின் தோளைத் தழுவிக் கொண்டான்..

" நீ வந்துட்டுப் போனதை அம்மா.. சொன்னாங்கடா... நான் நேத்து மத்தியானமா மதுரையில இருந்து வந்தேன்.. விடிகாலைல கிளம்பி தஞ்சாவூர் வர்றதுக்கே பதினோரு மணி ஆச்சு... அங்கேருந்து கும்மோணம் வந்து நம்ம ஊர்  பஸ்ஸைப் புடிச்சு... வீட்டுக்கு வந்தப்போ ஒன்ற மணி... "

" மதுரையில ஜாலியா ஊர் சுத்தியிருப்பே!... "

பேசிக் கொண்டே இருவரும் நடந்தார்கள்..

" ஆமாடா... மீனாட்சியம்மன் கோயிலுக்கே மூணு நாள் போனோம்..  அவ்ளோ பெரிய கோயில்... அப்புறமா மஹாலுக்குப் போனோம்.. திருப்பரங்குன்றம் அழகர் மலைக்குப் போனோம்... வைகை அணைக்கும் போனோம்... அங்கே எடுத்த போட்டோ..ல்லாம் ஆல்பமா வைச்சிருக்கேன்.... கிளாஸ்க்குப் போய் பார்க்கலாம்... "

நண்பர்கள் இருவர் முகத்திலும் சந்தோஷ வெள்ளம்...

" சைக்கிள் எப்படா வாங்குனது?... "

" நா மதுரையில இருக்குறப்பவே மாமா இங்கே அம்மாவுக்கு பணம் அனுப்பி வச்சிட்டாஙக... அப்பா மாயவரத்துல இருந்து வாங்கிட்டு வந்துருக்காஙக!... "

" சைக்கிள் நல்லா இருக்கு... அது சரி!.. ஆயுத பூஜை மாதிரி இது என்ன பூச்சரம் பொட்டு எலுமிச்சம் பழம் எல்லாம்!... "

புன்னகைத்தான்..

" தாத்தா தான்டா... முதல் நாள் ஸ்கூல்..ந்னு பூவெல்லாம் போட்டு எலுமிச்சம் பழம் குத்தி விட்டாங்க... "

" டே.. சக்தி.. கணக்குல தான் எனக்கு மார்க் குறைஞ்சிடுச்சாம்...  சேகர் சார் அப்பாகிட்ட கொளுத்திப் போட்டிருக்கார்... வீட்ல ஒதைக்காத குறை!... "

" எப்படியோ நானும் தப்பிச்சேன்...  இந்த வருசம் எஸ்ஸெல்சி... ஊரச் சுத்தாம ஒழுஙகாப் படிச்சு நல்ல மார்க்.. எடுத்துடணும்டா சரவணா!.. "

பேசிக் கொண்டே பள்ளி வளாகத்துக்கு வந்து விட்டார்கள்..

ஒரே ஆரவாரம்.. சந்தோஷமும் பதற்றமும் விரவிக் கிடந்தன.. நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகள்..

வேப்ப மரத்து நிழலில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களோடு இந்த சைக்கிளையும்  நிறுத்திப் பூட்டி விட்டு அந்தப் பெரிய மாமரத்தை நோக்கி நடந்தார்கள்..

தலைமை ஆசிரியர் அறைக்கு எதிரில் இருந்த மா மரத்தின் கீழ் நாலைந்து போர்டுகளை வைத்து அவற்றில் மறுபடியும் தேர்ச்சிப் பட்டியல்களை ஒட்டியிருந்தார்கள்...

அருகிலேயே தங்கமணி டீச்சரும் மாலதி டீச்சரும் - புதிதாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்...

மாலதி டீச்சரும் சரவணனும் ஒரே தெருவாசிகள்... அவஙக அப்பா உள்ளூர் போஸ்ட் மேன்...

இங்கே சரவணனின் அப்பா எண்ணெய்க் கடையும் அரிசி மண்டியும் நடத்திக் கொண்டிருந்தார்...

" வாங்க துரைங்களா!.. எப்படியோ தப்பிச்சிட்டீஙக!.. வீட்ல மண்டகப்படி நடந்திருக்குமே!... "

மாலதி டீச்சர்  கேள்வியுடன் சிரித்த போது ' You too?.. ' என்று தோன்றியது...

" டீச்சர்... எல்லாக் கணக்கும் நல்லாதான் போட்டிருந்தேன்!... "

சரவணன் பரிதாபமாகச் சொன்னான்...

" அப்போ சேகர் சார் மார்க் போடலைங்கறியா?.."

" இந்த அல்ஜீப்ரா தான்!..." - சக்தி தனது பங்கிற்கு ஆரம்பித்ததும் -

" உனக்கென்ன!... வாய்க்கால் வரப்பு தோட்டம் துரவுன்னு ஏகத்துக்கும் நீ வசதியானவன்... இவனைச் சொல்லு...  எண்ணெய்க் கடைக்கு முதலாளியா உட்கார்ந்தாலும் தொழிலாளியா நின்னாலும் கணக்கு வழக்கு தெரிஞ்சாகணுமே!.. "

தங்கமணி டீச்சர் நிஜமாகவே வருத்தப்பட்டார்...

" டீச்சர்.. ரெட்டை ஜடை ஜானகி ஸ்கூலுக்கு வரலையா!... "

" கேட்டீங்களா டீச்சர்... பசங்க பேசறதை!..."  மாலதி டீச்சரின் முகத்தில் இளநகை..

" மீசை முளைக்க ஆரம்பிச்சாச்சு இல்லே..  அதான்!... போங்க... போய் லெவன்த் - ஏ க்ளாஸ்ல உட்காருங்க எருமைகளா!.. "

தங்கமணி டீச்சரும் புன்னகைத்தார்...

ஒரு வழியாக வகுப்பறைக்குள் வந்தாயிற்று...

உள்ளிருக்கும் வானரங்களின் சத்தத்தோடு சத்தமாக நடு வரிசை டெஸ்க்கில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்..

சக மாணவர்கள் சூழ்ந்து கொள்ள புத்தகப் பைக்குள் இருந்து போட்டோ ஆல்பத்தை எடுத்து விரித்தான் சக்திவேல்.....

பளிச் - என கறுப்பு வெள்ளைப் படங்கள்...

அவனிடமிருந்து ஆல்பத்தைப்  பிடுங்கி தங்களுக்குள் புரட்ட ஆரம்பித்தனர் நண்பர்கள்..

" இன்னொண்ணும் இருக்கே!.. " - என்றபடி ஒரு சிறு பெட்டியை எடுத்து விரித்தான்..

வெள்ளைப் பீங்கான் தட்டில் நேர்த்தியாக வரையப்பட்ட அக்ரிலிக் ஓவியம்...

இலைகளும் மொட்டுகளுமாகத் தண்ணீரில் தத்தளிக்கும் தாமரை..  அதனருகில் துள்ளிக் குதிக்கும் வெள்ளி நிற மீன்...

" மதுரை பஸ்டாண்டுல ஒருத்தர் உடனுக்கு உடனே வரைஞ்சு கொடுத்துக்கிட்டு இருந்தார்...  முப்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன்.. "

"மீனும் தாமரையும் அழகா இருக்குடா!..  நம்ம வசந்தியும் தான் இந்த மாதிரி அக்ரிலிக் படமெல்லாம் வரைவாளே.. உனக்குத் தெரியாதா!... "

சரவணன் மெதுவாகச் சொன்னான்...

" ஆமால்லே!... மறந்தே போய்ட்டேன்!.. வசந்தி எங்கடா?.. " - ஆவலுடன் தேடினான் சக்திவேல்...

வசந்தி - ரெவினியூ இன்பெக்டரின் மகள்...

அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்பர்!... குடும்பத்தோட சீர்காழிக்குப் போய்ட்டாங்க!..

" வசந்தி தான் டா..  டிராயிங்ல பெஸ்ட்!..  இந்த ஸ்கூல்லயே அவ தானே பர்ஸ்ட்!..  அவ கிட்டே ஆட்டோக்ராப் வாங்குறதுக்கு மறந்து விட்டேன்!... "

வருத்தம் பரவியது சக்தியின் முகத்தில்...

பெரிய கண்ணாடியில் பச்சைப் பசுந்தளிர்களுடன் ரோஜாப்பூவும் அதைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சியுமாக  வசந்தி வரைந்த ஓவியம் அவன் நினைவுக்கு வந்தது..

சக்திவேல் முணுமுணுத்த வேளையில் சரவணன் சொன்னான்....

" வசந்தி வரைஞ்ச ரோஜாப்பூ  அக்ரிலிக் எங்கிட்ட... இருக்கு!... "

*****

55 கருத்துகள்:

  1. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது ஆக்கத்தினை அன்புடன் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கும் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையினை வாசிப்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. அன்பு ஶ்ரீராம், அன்பு துரை மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் நலமுடன் இருக்க
    பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு துரையின் கதை அப்படியே பசுமையான பள்ளி நினைவகள். பசங்க வழிக் காட்சி. அவர்கள் நினைவுகள் குட்டிப் பையனின மருட்சி.. டீச்சர்களின். அக்கறை. புது சைக்கிள் பெருமை.
    முதல் நாளுக்கான உற்சாகம் எல்லாமே இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      எனது பள்ளி நாட்களை மனதில் கொண்டு எழுதினேன்...

      ஆசிரியர்களின் அன்பும் பரிவும் எங்களை முன்னேற்றின... அப்படிப்பட்ட் ஆசிரியர்களை இப்போது காண்பது அரிது.

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் பிரார்த்தனைகளுடன் வாழ்க வையகம்...

      நீக்கு
  7. “வசந்த வரைந்த அக்ரிலிக் ஓவியம் என்னிடம் இருக்கிறது”” என்று சொல்லும் சரவணனிடம் அவள் சொல்லி விட்டு சென்றிருப்பாளோ. சீர்காழிதானே. சைக்கிளை மிதித்ததால் ஓரெட்டில் போய் வரலாம் அனு சொல்ல ஆசை. பாராட்டுகள் அன்பு துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரவணனிடம் ஓவியத்துடன் ஒருசேர உள்ளத்தையும் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள் வசந்தி...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் பெருகி மன மகிழ்ச்சி அதிகரிக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வாழ்த்துகள், பிரார்த்தனைகளுடன் வாழ்க வையகம்...

      நீக்கு
  9. இன்று துரையின் கதையாக இருக்குமோ என்னும் எண்ணம் நேற்றே! அதே போல் துரையின் கதை! விடுமுறை முடிந்து முதல்நாள் பள்ளி திறக்கையில் ஏற்படும் ஆரவாரக் கூச்சல்கள் காதில் வந்து விழுகின்றன. தங்கள் நண்பர்களை நினைக்கும் மாணவர்கள், பிரிவினால் ஏற்படும் வருத்தம் ஆகியவை மனதில் ஏற்படும் தாக்கம், நல்ல சிநேகிதத்தை இழந்துவிட்டோமே என்னும் துக்கம், கடைசியில் ஒரு கையெழுத்துக் கூட வாங்காமல் போனதை எண்ணி வருந்தும் இளம் உள்ளங்கள்! அந்தக் காலப் பள்ளி வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்துவிட்டார் துரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கணிப்புக்கு மகிழ்ச்சியக்கா..
      எனது பள்ளி நாட்களின் நினைவுகளுடன் தான் எழுதினேன்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  10. தஞ்சை ஜில்லாவில் பெரும்பாலான பள்ளிகள் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளாகவே 50,60 வருடங்கள் முன்னர் இருந்திருக்கின்றன. மதுரையில் நான் ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரை மட்டுமே. அதன் பின்னர் படித்ததுஎல்லாம் பெண்கள் பள்ளியில். நம்மவர் படிச்ச சிதம்பரம், கும்பகோணாம் பாணாதுறை பள்ளி, விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி எல்லாப் பள்ளிகளும் இருபாலாரும் படிக்கும் பள்ளி என்பார். மதுரையில் முன்னாலெல்லாம் சேதுபதி உயர்நிலைப்பள்ளி இருபாலார் படிக்கும் பள்ளியாக இருந்ததாகவும், பின்னர் மாற்றி விட்டார்கள் எனவும் அப்பா சொல்லுவார். இப்போதெல்லாம் அதிகம் இருபாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளாகவே உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விஷ்ணு புரம் பள்ளியில் நான் சிறு வயதில் படித்திருக்கிறேன்... திருவீழிமிழலை சுகாதார நிலையத்தில் என் தந்தை பணிபுரிந்திருக்கிறார்...
      அருகில் அரசலாறு... அரசலாற்றைக் கொண்டுதான் மூங்கில் பாலம் என்னும் கதையை எழுதினேன்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. அந்த மூங்கில் பாலம் தான் நான் என் கதையில் குறிப்பிட்டதும். அதில் நடக்க நான் பயந்த பயம்! காலை வைக்கவே பயந்தேன். முறிஞ்சு விழுந்துடுமோனு! பின்னாட்களில் பழகி விட்டது. இப்போ அந்தப் பாலம் இல்லை. கல்பாலம் போட்டாச்சு என்றாலும் அந்த அழகு வராது தான்!கீழே வெண்ணிற மணலோடு காட்சி அளித்த சுத்தமான அரசலாற்றை இனி பார்க்க முடியாது.

      நீக்கு
    3. உண்மை தான்...

      பளீரென்ற வெள்ளை மணற் பரப்பை இன்றைக்கு அரசலாற்றில் பார்க்க முடியாது..

      நீக்கு
    4. துரை செல்வராஜூ சார் - நீங்க விஷ்ணுபுரம் பஷீர் டெண்டு கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா? திருவீழிமிழலை விவசாய டிப்போவில்தான் என் அண்ணன் முதன் முதலில் (அரசாங்க அலுவலகம்) எழுத்தராக பணியில் சேர்ந்தார். ( 1965 / 66 என்று ஞாபகம்) அப்போது அவருடைய அறை நண்பர்களாக ஒரு பார்மசிஸ்ட் இருந்தார் என்று ஞாபகம். உங்கள் தந்தை பெயர் என்ன?

      நீக்கு
    5. திருவீழிமிழலை - விஷ்ணு புரத்தில் மூன்றாம் வகுப்பு படித்தேன்.. விஷ்ணு புரம் டெண்ட் டாக்கீஸ் நினைவில் இல்லை.. அப்போது திருவீழிமிழலையில் வள்ளலார் மடத்துக்கு அந்தப் பக்கம் ஒரு டாக்கீஸ் இருந்தது.. என் தந்தை யின் பெயர் துரைராஜன்..

      நீக்கு
    6. நன்றி. என சகோதரருக்குத் தெரியுமா என்று கேட்கிறேன்.

      நீக்கு
    7. என் மாமா கோவையில் விவசாயப்பட்டப்படிப்பை முடிச்சுட்டு முதல் முதல் வலிவலத்தில் அதிகாரியாகச் சேர்ந்தார். பி.எஸ். பாலசுப்ரமணியம் என்று பெயர்.

      நீக்கு
    8. வலிவலத்தில் எனக்குத் தெரிந்த ஒரே பிரமுகர் மனைத்துணைநாத தேசிகர் அவர்கள்தான். (எங்கள் 'வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்' நிறுவனர்). அவருடைய காரியதரிசியாக ராமசுப்ரமணியன் என்று ஒருவர் இருந்தார் என்று ஞாபகம்.

      நீக்கு
    9. மாமா இப்போ இல்லை. நாகையில் தங்கி இருக்கலாம், ஏனெனில் அங்கே வீராசாமி ஐயர் ஓட்டலில் தான் கணக்கு வைத்துக் கொண்டு சாப்பிட்டதாகச் சொல்லுவார். அவர் மூத்த மகள் எங்கள் உறவு. ஆனால் மாமாவின் வேலை வலிவலத்தில் தான் இருந்தது.

      நீக்கு
  11. பள்ளியில் படிக்கையில் கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும் பெரியவங்க, "இந்த நாட்கள் இனி திரும்பி வராது!" பின்னால் ஏங்குவீர்கள் என்பார்கள். இப்போது இந்தக் கதை அத்தகைய ஏக்கத்தைக் கொடுத்துவிட்டது. ஒரு கதாசிரியராக துரை இந்தக் கதையில் தானும் ஒரு பள்ளி மாணவனாக உணர்ந்து அனுபவித்துச் சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பள்ளி நாட்களின் நினைவுகள், சில நிகழ்வுகள் இவற்றின் கோர்வைதான் இந்தக் கதை...

      அப்போது 1970 ல் மதுரை - தஞ்சாவூருக்கு இடையே இயக்கப்பட்ட பேருந்தில் கட்டணம் 5ரூபாய் 02 காசு..

      5 ரூபாய் 5 காசு கொடுத்தால் மீதம் மூன்று காசை திரும்பக் கொடுத்து விடுவார்கள்...

      அப்படியான காலம் இனி வராது...

      நீக்கு
  12. நான் படித்த போது இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளிகள் இருந்ததில்லை.

    இப்போது அனேகமாக இது போலப் பள்ளிகளைத்தான் காண்கிறேன்.
    குழந்தைகளின் உணர்வைத் துல்லியமாகப்
    பதிந்திருக்கிறார் துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியம்மா..

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. பள்ளி கால வாழ்க்கை வேறெந்த கவலைகளுமின்றி மிகவும் ஆனந்தம் தருவதுதான்.நான் படித்தது பெண்கள் உயர்நிலைப்பள்ளிதான். பால்ய கால நினைவுகளுடன்,தானும் கதையுடன் ஒன்றி இக்கதையை எழுதியிருக்கும் சகோதரருக்கு பாராட்டுக்கள். கதையை படிக்கும் போது அந்த பழைய நட்புணர்வுகளை நினைத்தபடி எங்களையும் இப்போதைய சூழலை மறக்க வைத்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... பள்ளி நிகழ்வுகளை மனதில் கொண்டுதான் கதையை எழுதினேன்...

      நண்பர்கள் எப்படியிருக்கின்றார்களோ.. என்றிருக்கிறது..

      பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  14. பள்ளி நினைவலைகள், வார்த்தைகள் அருமை ஜி.

    பதிவு மனதுள் தாளம் போட வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  15. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிக்கு திரும்பும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் உணர்வுகளை உணர வைத்திருக்கிறார் கதாசிரியர். //" வசந்தி வரைஞ்ச ரோஜாப்பூ  அக்ரிலிக் எங்கிட்ட... இருக்கு!... "// என்னும் முத்தாய்ப்பு இது சிறுகதை அல்ல, தொடர் கதை என்கிறது. பாராட்டுகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... தங்களது கருத்துரை கதையை மேலும் தொடரலாம் என்றிருக்கிறது.. நன்றி..

      நீக்கு
  16. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ...
    ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ...
    காத்தில் ஆடும் தனியாக...
    என் பாட்டு மட்டும் துணையாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது. கதையில் உரையாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    புதிதாக பள்ளிக்கு சேர்க்க வரும அப்பா, மகன் உரையாடல். அவர்களுடன் சரவணன் பேசுவது , சரவணன் , சக்தி நட்பு உரையாடல், ஆசிரியர்கள் பேசுவது என்று கதையை இயல்பாய் உரையாட்ல்கள் மூலம் நகர்த்தி சென்ற விதம் மிக அருமை.

    //நம்ம வசந்தியும் தான் இந்த மாதிரி அக்ரிலிக் படமெல்லாம் வரைவாளே.. உனக்குத் தெரியாதா!... //
    சரவணன் சொன்னதும் ,

    //சரவணன் சொன்னான்....

    " வசந்தி வரைஞ்ச ரோஜாப்பூ அக்ரிலிக் எங்கிட்ட... இருக்கு!... "//

    கடைசியில் சரவணன் சொன்னதற்கும் இடையில் நட்பை பிரிந்த சோகம் இருக்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      சரவணனின் மகிழ்ச்சியை சக்தியின் வருத்தத்தைச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை..

      ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் சொன்னதைப் போல கதையைத் தொடரும் சூழ்நிலை அமைந்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  18. கதை நன்று. கதாசிரியர் துரை செல்வராஜூ ஐயாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  19. இளமைக் கால துள்ளல் போல கதையும் செல்கிறது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  20. சொல்லப்போனால் வசந்தி அவள் வரைந்த அகிரிலிக் ஓவியம் ஒன்றை சக்திக்கும் கொடுத்திருக்கிறாள் தான். தனக்கு மட்டும் தான் அவள் தன் ஓவியத்தை ஸ்பெஷளாகத் தந்திருக்கிறாள் என்று அவன் இதுகாறும் நினைத்திருந்தான். இப்பொழுது சரவணன் சொல்வதிலிருந்து அவனுக்கும் அவள் தந்திருக்கிறாள் என்று தெரிந்து மனம் பொசுக்கென்று போய்விட்டது.

    -- என்று கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்.

    பதினொண்னாவது வகுப்பிலேயே காதல் கத்திரிக்காய் என்று ஆரம்பித்தால் உருப்பட்ட மாதிரி தான். அதனால் அந்த பாலின கவர்ச்சி பக்கம் போகாமல் ஜாக்கிரதையாக வேறு பக்கம் திசை திருப்பி கதையைத் தொடருங்கள் தம்பி.

    உங்களைப் பொருத்தமட்டில் கதையை முடித்து விட்டோம் என்ற உணர்விருந்தால்
    இந்தளவே போதும். இதன் தொடர்ச்சியான கற்பனைஹில் வேறு ஒரு கதை எழுதினால் போச்சு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அன்பின் அண்ணா...
    தங்கள் வருகையும் விமர்சனமும்/ கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...

    அந்தக் காலகட்டத்தில் காதல் அல்லது love என்ற வார்த்தைகள் கூட எங்கள் வாயில் இருந்து வந்ததில்லை.. பசங்க கெட்டுப் போய் விடுவார்கள் என்று டூரிங் டாக்கீஸில் அவ்வப்போது வெளியாகும் தேய்ந்து போன திரைப்படங்களுக்குக் கூட விட மாட்டார்கள்..

    கண்டிப்பு என்றால் கண்டிப்பு அப்படியொரு கண்டிப்பு... அதனால் விளைந்த நல்ல பலன்கள் அனந்தம்...

    ஆக,
    அந்தப் பொண்ணு வசந்தி என்ன நினைத்துக் கொண்டு கொடுத்தாளோ...
    சரவணன் என்ன நினைத்துக் கொண்டு சக்தியிடம் உளறிக் கொட்டினானோ!..

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!...

    அன்பின் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //டீச்சர்! ரெட்டை ஜடை... எருமைகளா..//

    எந்த திசையில் எண்னம் போகிறது என்று தெரிந்து தான் அந்த திசை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. இளமைக்கால நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன
    நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!