வியாழன், 20 மார்ச், 2025

உலகத்தின் கடைசி மனிதன்

 

ஒரு பக்கக் கதை என்பது குமுதத்தில்தான் தொடங்கியது என்று பெரியோர் சொன்னதை நானும் நம்பி இருந்தேன்!  இல்லையாம்.  அதற்கு முன்னரே விகடனில் இந்த முயற்சி இருந்திருக்கிறது.  சிறு சிறுகதைகள் என்கிற புத்தகத்தில் சுஜாதா சொல்லி இருப்பதை கவனியுங்கள்....

தமிழில் சின்னஞ் சிறு கதைகளின் முன்னோடி என்றால் ஐம்பதுகளில் விகடனில் எழுதிய 'சசி' என்பவரைத்தான் சொல்லவேண்டும். ஆனந்த விகடனில் ஒரே ஒரு பக்கத்தில் வாரா வாரம் ஒரு கதை எழுதுவார். நகைச்சுவையும் எதிர்பாராத முடிவும் இருக்கும். நாற்பத்தைந்து வருடங்கள் கழிந்தும் சசியின் ஒரு கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது. ரயிலில் ஒருவருக்கு திக்குவாய். அவர் சா சா சா என்று ஏதோ சொல்ல வருவார். சக பயணி, "நான் சாகமாட்டேன் சார் கவலைப்படாதீங்க" என்று அவரைக் கிண்டலடிப்பார். பொ... பொ என்பார். "எப்படி சார் ஓடற ரயில்லருந்து போக முடியும்" என்பார். மற்றவர்கள் அட்டகாசமாகச் சிரிப்பார்கள். டி...டி என்பார். "ஸ்டேஷன் வரட்டும் டீ வாங்கித் தரேன்."

கடைசியில் அவர் சொன்னதை ஒருவர் ஒட்டவைத்துப் பார்த் தால் கேலி செய்தவரின் பெட்டியை போன ஸ்டேஷனில் யாரோ எடுத்துக் கொண்டு இறங்கிவிட்டான் என்று சொல்கிறார் என்பது தெரியும்.

'குமுதம்' இதழ் ஒரு பக்கக் கதைகளை எழுபதுகளில் துவங்கி யது. அவை பெரும்பாலும் கதைச் சுருக்கங்களாக இருந்ததால் சிறுகதை வடிவம் தேய்ந்து தேவாங்காகி காணாமற் போய்விடுமே என்ற கவலையில் 'தூண்டில் கதைகள்' என்று நீண்ட கதைகள் எழுத விரும்பினேன். எஸ்ஏபி அதையும் அனுமதித்தார்.

படித்தீர்களா?  அடுத்து உடனடி கதைகள் என்று அவர் சொல்லி இருப்பதைப் படியுங்கள்.

உடனடி கதைகள்

Sudden fiction என்பதற்கு உடனடியாக தமிழ் தேவை, திடீர்க் கதை என்பதைவிட 'உடனடிக்கதை' பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஸடன் ஃபிக்ஷன் என்பது தற்போது மேல்நாடுகளில் மிகப் பிரபலமாகியுள்ள கதை வடிவம். இதை ஜான் அப்டைக்கி லிருந்து துவங்கி பலரும் எழுதியுள்ளார்கள். பெர்க்லி பல்கலைக் கழகம் மாதாந்திர போட்டி ஒன்று நடத்துகிறது. ஆறு டாலர் செலுத்தி ஒரு கதையைச் சமர்ப்பிக்கலாம். அதை அவர்கள் படித்துப் பார்த்து பதிப்பிக்கிறார்கள். சிறந்ததற்கு 200 டாலர் அறிவிக்கிறார்கள். நான் எழுதிப் பார்க்கலாம் என்றால் எனக்கு இங்கிலிஷ் போதாது. முதலில் உடனின் விதிகளைச் சொல்லிவிடலாம்.

எளிமையானவைதாம். கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதை எழுதுபவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அனைத்தை யம் வாசகர்களுக்குக் காட்ட மாட்டான். ஒரு பகுதியைத்தான் காட்டுவான். அதிலிருந்து மற்ற பகுதிகளை வாசகன் உணர வேண்டும்."விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".

இதையும் படித்தீர்கள்தானே?  இப்போது இதை வைத்து நான் எழுதிய 'அருண்' கதை பற்றி கொஞ்சம்.

தங்கையும் ஓடிப்போயிருக்கிறாள்.  அந்த அதிர்ச்சியே பெற்றோருக்கு இருக்கும்.  அவர்கள் ஏன் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, செய்து வைக்கவில்லையா, அமையவில்லையா, பணமில்லையா, சுயநலமா, மாற்றாந்தாய் பிள்ளைகளா,   அக்கா இருக்க, தங்கை அவசரப்பட்டு யோசிக்காமல் ஓடிவிட்டாளே.. இல்லை அதற்கும் ஒரு காரணம் இருக்குமா, என்ன விளைவு...  முதல் இரண்டு வரிகளுக்குள்ளேயே எவ்வளவு சாத்தியக்கூறு பாருங்கள்...

நான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்!  தாண்டிச் சென்று விடுவோம்.

இந்த வகையில் அந்த அக்கா ஏன் புன்னகைத்தாள், ஏன் அதிகப்படியான மாவு அரைத்தாள், அம்மா மேலும் அன்பு / அக்கறை இருக்கிறது, முன்னர் ஏன் கோபப்பட்டாள், தம்பியுடன் எப்படி சண்டை போடுவாள், அருண் யார், இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டிருக்கும், அவன் நிலைமை என்ன,,,   
உண்மையில் புத்திசாலி வாசகனுக்கு இபப்டியெல்லாம் கோனார் நோட்ஸ் போடவும் கூடாதுதான்!

சுஜாதா ஒரே வரியில் ஒரு திகில் கதை சொல்லலாம் என்று சொல்லி ஒரு கதை சொல்லியிருப்பார்.  கதை அவருடையதா,  ஆங்கிலத்திலிருந்தா நினைவில்லை.  ஒருவரிக் கதை இதுதான். "உலகத்தின் கடைசி மனிதன் வீட்டில் தனித்திருக்கையில் நள்ளிரவு அவன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது"  அவ்வளவுதான்.  

நான் இதற்கு தலைப்பு 'கடவுள் வருகை என்று வைத்துப் பார்த்தேன்.  திகில் போய்விட்டது!

இன்னொன்று 

தலைப்பு "கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்.  கதை : "ஐயோ.... சுட்டு விடாதே...."

சுஜாதா இன்னொரு சின்னஞ்சிறுகதை சொல்லி இருப்பார்...  அது என்ன என்றால்...

இடைவேளை... 

"டாய்லெட்ல ஒரே அடிதடிப்பா..."

"என்னவாம்..."

"ஏதோ சண்டை...  ஒருத்தனுக்கு மூஞ்சியெல்லாம் ரத்தம்"

"என்ன தகறாராம்?"

"ரௌடி கும்பலோ பொம்பளை சமாச்சாரமோ...இல்லை கம்யூனிட்டி தகராறோ..  சரியா தெர்ல...  போய்ட்டான்னு நெனைக்கிறேன்..."

"ஐயோ..  அப்புறம் என்ன ஆச்சு?"

"பார்க்கலை..  படம் திரியும் ஆரம்பிச்சிடும்னு வந்துட்டேன்.."

64 வார்த்தைகளில்

என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன.

"நான் சொல்வதுதான் சரி. கடவுள் இல்லை. கடவுளை நம்பினவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது."

இதை நிரூபிப்பதற்கு என் துப்பாக்கியை வெளியில் எடுத்தேன். அதன் முனையை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். அதன் விசையை அழுத்தினேன். என் மூளை வெடித்துச் சிதறியது. இன் னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்கிறது. அதை மட்டும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நான் சொன்னது சரியென்றால் எப்படி என்னால் இதை எழுத முடிகிறது?

இதை எழுதியது ஸ்டான்லி புபியன் என்பவர்.

சிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன.  புதிது புதிதாக யோசிக்கிறார்கள்.  நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!

==========================================================================================

தண்டேல் -  தெலுங்கு - தமிழ்த் திரைப்படம் - நெட்ப்ளிக்ஸ் - சாய்பல்லவி, நாகசைதன்யா 


ரீல்ஸில் அடிக்கடி பார்த்த சாய் பல்லவியின் 'டான்ஸ் - பிட்'டைப் பார்த்து ஏமாந்தேன். தெலுங்குப் பட இயக்குநரைவிட ரீல்ஸில் அந்த டான்ஸ் ஸீனை இளையராஜா பாட்டுடன் அழகாய்க் காட்டி இருந்தார்கள்.
ம்...ஹூம்...
நெட்ஃப்ளிக்சில் 'கடந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட படம்' என்று இந்தப் படத்தின் பெயரைப் போட்ட தூண்டிலில் சிக்கினேன்.
பல இடங்களில் தூங்கி விழுந்து, ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தும் படம் முடிவதாய் இல்லை.
படகிலிருந்து விழும் சிறுவனைக் காக்கும் காட்சியெல்லாம் ஓவர். ஒரு வருட தாடியுடன், ஒருவித அசட்டு சிரிப்புடன் குளிக்காமலேயே வரும் ஹீரோவை ஆக்ஷன் ஹீரோவாக நினைக்க முடியவில்லை. ரொம்பக் கடுப்பேற்றியது படத்தில் ஹீரோ, சாய் பல்லவியை செல்லமாகக் கூப்பிடும் பெயர்.
அதைக் கேட்டால் அந்தக் காதலிக்கே கடுப்பாகும்.
அந்த டான்ஸ் பாடலின் இறுதியில் சாய்பல்லவி சிவனுக்கு முன் ஆடும் டான்ஸ் பார்த்து என் பாஸ் "சிவன் எழுந்து எப்பவோ ஓடியிருப்பார்" என்றார்!
தண்டேல் என்றால் தண்டம் என்று நினைத்திருந்தேன்.
இல்லையாம். நாட்டாமை மாதிரியாம்.
படத்தில் நான் ரசித்த ஒரே காட்சி ரயில்வே ஸ்டேஷனில் சாய் பல்லவி நம்மூர் கருணாகரனிடம் "நான் போகட்டுங்களா?" என்று கேட்குமிடம்தான். "நீங்க இங்கேயிருந்து போய் ரொம்ப நேரமாச்சுங்க" என்கிறார் கருணாகரன்.
எனக்கு கண்ணீர் வந்தது.
பாவம் , அவரையும் ஏமாற்றி இருக்கிறார்கள்!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


9 கட்டில்கள்

பயிற்சியில் இருந்த நாங்கள் ஒன்பது பேரும் கல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தபோது எங்களுக்கு தங்குவதற்கு சரியான ஒரு ஓட்டை கட்டிடத்தில் நிர்வாணமாக இருந்த அறையைக் கொடுத்திருந்தார்கள். அறையை திறந்து காட்டியவர் எங்கள் லக்கேஜை பார்த்துவிட்டு "படுத்துக்கொள்ள கட்டில் இல்லையா?" என்று கேட்டார். "இல்லை" என்றோம்.
"அப்போது கார்பாலிக் ஆசிட் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். "ஏன்" என்றோம்.
"பாம்பு கடிக்கு நல்லது. வாயில் நுரை வராது" என்றார்.
துணுக்குற்ற நாங்கள் உடனே உடை மாற்றிக் கொண்டு விமான நிலையத்தில் ஒரு பெரிய மூன்று டன் லாரியை எடுத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு கட்டிலை வாங்கிக் கொள்ள கடிதில் கிளம்பி விட்டோம்.
கல்கத்தா நகரத்தின் ஒரு பெரிய தெருவில் லாரியை நிறுத்திவிட்டு சந்து பொந்துகள் எல்லாம் தேடி கடைசியில் கட்டில் விற்பனை செய்யும் கடை ஒன்றை கண்டுபிடித்தோம்.
கயிற்றுக்கட்டில்கள் தான். சற்று அடர்த்தி குறைவாக பின்னப்பட்டிருந்தாலும், ஒரு ஆள் தனம் தாங்கும். விலை வேறு சரசமாக இருந்தது. ஆளுக்கு ஒரு கட்டில் வாங்கிக் கொண்டோம். என் நண்பன் தன் மாமனாருக்கும் சேர்த்து ஒன்று வாங்கிக் கொண்டான். கட்டில் விற்பவன் எங்களை ஒரு மாதிரி பார்த்தான்
அந்த கட்டில்களை தூக்கிக்கொண்டு நாங்கள் லாரி நோக்கி நடந்த போது அந்த தெருவே ஸ்தம்பித்து எங்கள் கட்டில் ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஜிலேபி நின்று கொண்டிருந்தவர்கள் வாய் நின்று விட்டது. சவரம் செய்து கொண்டிருந்தவர்கள் கத்தி நின்று விட்டது. எல்லோரும் எங்களை வெறித்துப் பார்த்து ஒருவரிடம் ஒருவர் செய்கை செய்து பேசிக் கொண்டிருந்தார்கள். கட்டில் வாங்குவது அவ்வளவு அசாதாரண நிகழ்ச்சியா என்ன? புரியவில்லை.
திரும்ப நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு வந்து அந்த கட்டில்களை இறக்குகையில், அருகில் ஒரு குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனையையும் உதறிப்போட்டு விட்டு எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்.
முன் சீட்டிலிருந்து இறங்கிய டிரைவர் நாங்கள் இறக்கும் கட்டில்களை முதல் தடவை பார்த்ததும் அவர் வாயில் இருந்த பீடி கீழே விழுந்து விட்டது. மறுபடி கூட்டம் கூடிவிட்டது.
அதில் ஆங்கிலம் தெரிந்த ஒருவர் "இந்த கட்டில்களை எதற்கு வாங்கி வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்கவும், "படுத்துக்கொள்ள" என்றோம்.
அதை பக்கத்தில் தன் நண்பரிடம் பெங்காலியில் மொழிபெயர்த்து சொல்லிவிட்டு, இரண்டு பேரும் கைகுலுக்கி கொண்ட அட்டகாசமாக சிரித்தார்கள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றோம்.
"இந்தக் கட்டில்களை எதற்கு வாங்குவார்கள் தெரியுமா?"
"எதற்கு?"
"பிணங்களை தூக்கிச் செல்லுவதற்கு"
- 1977 ல் குமுதத்தில் வெளியான சுஜாதாவின் ஒரு பக்கக் கட்டுரை. -

இதற்கு வேணுகோபால் R ன் பதில்... அதாவது சேட்டைக்காரன்..

இதற்கு ஒரு வரலாற்று காரணம் உண்டு. சுதந்திரத்துக்கு முன்பு அதிகப்படியான கலவரங்கள் நடந்து நூற்றுக்கணக்கில் பிணங்கள் விழுந்தது வங்காளத்தில்தான். அத்தனை பேருக்கும் உரிய இறுதிச்சடங்கு செய்ய முடியாத காரணத்தினால் இதுபோன்ற மலிவு விலை கட்டில்களை உபயோகித்ததாக வங்காளிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், அதை சொல்லுகிற துணிவு சுஜாதாவுக்கு இல்லை. அவ்ளோ தான்.

=====================================================================================

நியூஸ் ரூம் 

மங்களூரு, தேர்வில் அதிக மதிப்பெண் பெற அழுத்தம் கொடுத்ததால் வீட்டில் இருந்து வெளியேறிய கல்லுாரி மாணவர், மீண்டும் பெற்றோருடன் செல்ல மறுத்த சம்பவம், கர்நாடக மக்களை வேதனை அடைய வைத்தது.

-  கராச்சி, பாகிஸ்தானில் பயணியர் ரயிலை சிறைபிடித்த பயங்கரவாதிகள் 33 பேரும், ராணுவத்தால் கொல்லப்பட்டனர். பயணியர் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

பாட்னா, ''அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் சபைக்கு வருகிறார்,'' என, முன்னாள் முதல்வரும், சட்டமேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான ரப்ரி தேவி குற்றஞ்சாட்டினார்.

சென்னை: 'சார் என்ற நபர் யாரும் இல்லை; மாணவியை மிரட்ட ஞானசேகரன், சம்பவ இடத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்' என, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

-  புதுடில்லி: இணையத்தில் தேடுவதற்காக 'குரோம்' எனப்படும் கூகுள் பிரவுசரின் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

-  'குடிக்க தண்ணீர் தரலை' ....   நின்று போன திருமணம்.  சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில், குடிநீர் விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், திருமணமே நின்று போனது.


கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூபாய் 400 கோடி வரி கட்டியுள்ளதாக அந்த அறக்கட்டளையின்  செயலர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.


-  விண்ணில் 287 நாட்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

-  கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக்  கூடாது என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசின் கடன் பத்து லட்சம் கோடியை நெருங்குகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தனி நபர் கடன் 1.32 லட்சமாகும்.

- மாண்டியா: மலவெள்ளி தாலுகாவில் ஒரு தொழிலதிபர் வீட்டிலி ஹோலிக்காக சமைத்ததில் மீதியான உணவு அங்கிருக்கும் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். ஆறாம் வகுப்பு படிக்கும் கெர்லாங் என்பவர் சிகிச்சை பலனன்றி மரணமடைந்தார். 

- சென்னை: 24 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி சேரா ஆந்திராவில் சிக்கினார்.

- இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயிலை கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாக்.ராணுவ வாகனங்கள் மீது 'பலுச்' விடுதலைப்படை கிளர்ச்சியாளர்கள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில் 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

- குவாலியர்: ம.பி. குவாலியரில் அரசு மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டின் ஐ.சி.யு.வில் இருந்த ஏ.சி. திடீரென தீப்பற்றி எரிந்து பரவத் தொடங்கியது. அங்கிருந்த பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து நோயாளிகள் காப்பாற்றபட்டனர்.


- ஷிவமொக்கா நகரின் பாபுஜி நகரில் வசிக்கும் நூர் ஆலிம், சபிஹா பானு தம்பதியரின் பத்து வயது மகன் சையத் ஆஷாஜ் இரண்டரை நிமிடங்களில் ஆங்கில அகர வரிசைப்படி 195 நாடுகளின் பெயர்களை ஒப்பித்து அசத்துகிறார். அது மட்டுமல்லாமல் இந்த நாடுகளின் கொடிகளையும் அடையாளம் பார்த்து கூறுகிறார். இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இவர், இப்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க தயாராகி வருகிறார். 

- கர்நாடகாவில் 2024ல் மட்டும் 3397 போக்சோ புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி.

- பெங்களூரு: பறவைக் காய்ச்சல் பீதியால் அரசு பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை சாப்பிட மாணவர்கள் தயங்குகின்றனர். முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் கேட்கின்றனர்.

- உத்தர கன்னடா: அடுத்தடுத்த வீடுகளில் வசித்த இருவர் தங்கள் வீடுகளில் பூனைகளை வளர்த்து வந்திரூக்கின்றனர். அதில் ஒன்று ஆண் பூனை மற்றது பெண் பூனை. அந்த ஆண் பூனை பக்கத்து வீட்டு பெண் பூனையின் பின்னால் சுற்றியிருக்கிறது. இதனால் அதன் உரிமையாளர்களிடையே அடிக்கடி தகராறு வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அப்படி வந்த தகராறு வெட்டு குத்தில் முடிந்ததுதான் சோகம்.

- சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ.சி. எஃப். முடிவு.

ஆமதாபாத்: 19-3-25 -ஆமதாபாத்தில் பூட்டிய வீடு ஒன்றில் இருந்து ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள், வெளிநாட்டு கைக்கடிகாரங்களை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

'குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக செலுத்தப்படும், 'ஹெபடைடிஸ் பி' தடுப்பூசி விலை, 300 மடங்கு வரை உயர்த்துள்ளதால், விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், தடுப்பூசியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்' என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

==========================================================================================

ஒரிஜினல்!  இதை வியாழனுக்கு என்று வைத்திருந்தேன்.  செவ்வாய்க்கு கதை இல்லை என்றதும் இதை கதையாக்கி செவ்வாயில் போட்டு விட்டேன்!

நண்பனோடு பேசிக்கொண்டிருந்தபோது பேச்சு பல்வேறு திசையிலும் திரும்பி சாப்பாட்டு விஷயத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

பிடித்தது, பிடிக்காதது, சைவ, அசைவ வேறுபாடுகள், காம்பினேஷன்ஸ் இப்படி பேச்சு போய்க்கொண்டிருந்தது.

அவன் சொன்ன விஷயம் ஒன்று..   யார்மேல் தவறு என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

அவன் சகோதரன் வீட்டுக்குச் சென்றிருக்கிறான்.  அது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்.  சப்பாத்தியும் குருமாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  சனிக்கிழமை என்பதால் சைவம்தான்.

'சாப்பிடுங்க என்று அண்ணி இவனை உபசரித்திருக்கிறாள்.  இவன் வேண்டாம், என்று மரியாதையாக மறுத்திருக்கிறான்.  இன்னொரு முறை உபச்சாரம், இன்னொருமுறை மறுப்பு.  மறுபடி கேட்கவும் 'சரி, கொடுங்க...  டேஸ்ட் பார்க்கிறேன்' என்று சொன்னவனிடம்  தட்டில் ஒரு சப்பாத்தியை போட்டு, குருமாவையும் இட்டுக் கொண்டு வந்து தந்திருக்கிறார் அண்ணி.

இவன் சாப்பிட்டிருக்கிறான்.  எதிர்பாராதவிதமாக சுவை நன்றாக இருக்கவே இன்னொன்று போடுவார்களா என்று எதிர்பார்த்திருக்கிறான் போல..  அவன் அதைச் சொல்லவில்லை.  அவன் பேச்சில் அப்படி புரிந்து கொண்டேன்.

"அண்ணன்தானே..  ஒரு சப்பாத்தியைப் போட்டுக் கொண்டு வந்து தருகிறார்கள்..  நாமாய் இருந்தால் என்ன செய்வோம்?  முதல்லயே தட்டுல இரண்டாவது போட்டுத் தருவோம் இல்ல?"

"நீ வேணாம்னுதான மறுபடி மறுபடி சொன்னே?"

"கரெக்டுதான்..  போன உடனே சாப்பிட்டுகிட்டிருக்காங்கன்னா எவ்வளவு இருக்குமோ, அவங்களுக்கே சரியாய் இருக்குமான்னு தோணும் இல்ல..  அதுக்கு சொல்றேன்...  பார்த்தா ஹாட் பாக்ஸ்ல தேவைக்கும் அதிகமாவே இருக்கு..  அதையும் காட்டறாங்க..  "

"சரி.  நீ வாயைத் திறந்து கேட்க வேண்டியதுதானே?  உன் அண்ணன் வீடுதான?"

"அதேதான் நானும் கேட்கிறேன்...   நான் தம்பிதானே?  அண்ணனுக்கோ, அண்ணிக்கோ தெரியாதா?  அதுக்கு சொல்றேன்...   எங்களுக்குள்ள மிஸண்டர்ஸ்டேண்டிங் கூட எதுவும் இல்ல.....  ஒத்தைச் சப்பாத்தியை கைல கொடுத்துட்டு  அண்ணன், அண்ணி அவங்க பையன் மூணு பேரும் சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க..   என் பக்கம் கூட திரும்பவில்லை...  ஒரு பேச்சுக்கு கூட 'இன்னொன்னு போடவா தம்பி' ன்னும் கேட்கலை..  இவங்க சாப்பிட்டு முடிச்சாலும் ஹாட் பாக்ஸ்ல எப்படியும் அஞ்சாறு மிஞ்சும்..  அதுக்கு சொல்றேன்."

"உன் மேலயும் தப்பு இருக்கு"

"இருக்கலாம்..  ஆனா உன் வீட்டிலோ, என் வீட்டிலோ இப்படி செய்வோமா..  சொல்லு...  அதுக்கு சொல்றேன்...  உங்கள் வீட்டுல தேவைக்கும் அதிகமா ரெண்டு வேணா போடுவீங்களே தவிர இப்படி செய்ய மாட்டீங்க..  எங்க வீட்லயும் அப்படிதான்.."

"உனக்கு பசி இருந்ததாடா?"

"பசின்னு இல்லடா..   ருசி....  ஓரளவு இன்னொண்ணு போடவான்னு கேட்பாங்கன்னு எதிர்பார்த்திருக்கேன்னு எனக்கே தெரியுது..  கேன மாதிரி தட்டோட கொஞ்ச நேரம் அவங்கள பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்தேன்...  "

இந்த விஷயத்தை என் மனத்திலும் போட்டுக்கொண்டேன்..  பாஸிடமும் பேச்சு வாக்கில் பகிர்ந்து கொண்டேன்.  அவன் சொன்ன மாதிரிதான் நாங்களும் பரிமாறுவோம், உபசரிப்போம் என்றாலும் எப்போதாவது நாங்கள் கூட இப்படியொரு தர்மசங்கடத்தில் மாட்டக் கூடாது அல்லவா?

==============================================================================================




இருள் 


வெளிச்ச இடங்களில் 
பதுங்கியது 
வெறும் இடங்களில் 
பாய்ந்தது 

=====================================================================================

பொக்கிஷம் :   ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்ஸ்...   இணையத்தில் ஒரு காணொளியிலிருந்து எடுத்தேன்.






கும்பமேளா சமயத்தில் நடந்ததை நினைவூட்டவில்லை?!!


95 கருத்துகள்:

  1. இன்றைக்குப் படிக்க இயலவில்லை. அயோத்தியிலிருப்து நேபாள் பொகாரா வரை பயணம். இரவு 11:30க்குத்தான் வந்து சேர்ந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்...ஹூம்... (பெருமூச்சு) பதிவைத்த திறந்து படிக்க முடியவில்லை என்று சொல்லி விட்டு சென்று விட்டீர்கள்.  

      நேபாள் வந்து சேர்ந்திருக்கிறீர்களா, அயோத்தியா...?

      நீக்கு
  2. இந்த வாரம் சுஜாதா ஸ்பெசல்?
    ஒரே ஒரு வார்த்தையிலும் கதை சொன்னவர் சுஜாதா. அவருடைய பலம் மற்றும் பலவீனம் மத்யமர்கள் எனப்படும் மிட்டில் க்ளாஸ் மாத சம்பளக்காரர்கள் தான்.
    ஒன்று மட்டும் சரி. அவரால தான் சங்கப்பாடல் போன்ற சுருங்க சொல்லி நிறைய உணர்த்தும் சிறுகதைகள் பரவலாக வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றன.

    நியூசிறூமில் இருந்து பல செய்திகளை அறிந்துகொண்டேன். முக்கியமாக 'அந்த சார் யார் சார் ? கேள்விக்கு விடை, தண்ணீர் இல்லாமல் நின்ற திருமணம், வாய் பூட்டு (MASK) இல்லாத நாய்கள் நடைப்பயிற்சிக்கு தடை போன்றவை.
    பாட்டுக்கு பாட்டு

    இருள்
    ஒரு திருடன்.
    வெளிச்சம் இருந்தால்
    பதுங்கும்

    இந்த வார பொக்கிஷ ஆ விகடன் அட்டைப்பட ஜோக்குகள் அபாரம்.
    ஒரு சந்தேகம் பாஸோட பிறந்த நாள் இந்த வாரமா? (சுஜாதா ஸ்பெசல்!)


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒரு சந்தேகம் பாஸோட பிறந்த நாள் இந்த வாரமா? (சுஜாதா ஸ்பெசல்!) //


      ஹா..  ஹா..  ஹா...   இல்லை.  இப்போது இல்லை.  இது தற்செயல்.  ஆனாலும் உங்களுக்கு அபார ஞாபக சக்தி!

      நீக்கு
  3. கதையே இல்லாத கதை என்று கூடத் தலைப்பிட்டு.....
    முயற்சியுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ எனில்,அதன் பெயர் கதை அல்ல,கட்டுரை!​ எனில்,அதன் பெயர் கதை அல்ல, கட்டுரை!

      நீக்கு
  4. வெளிச்ச இடங்களில்
    வெதும்பியது
    அது இல்லாத இடங்களில்
    பிதுங்கியது.

    பதிலளிநீக்கு
  5. கடைசி ஜோக் கருத்துள்ள ஜோக்.

    அந்த Mail Van எழுத்தை ஹிந்தியில் எழுதியிருந்தால்.....

    நம்மூர்களில் அப்படித் தான் கேட்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. // அது இல்லாத இடங்களில்
    பிதுங்கியது. //

    பிதுங்கியதா?  எப்படி?

    பதிலளிநீக்கு
  8. //  அந்த Mail Van எழுத்தை ஹிந்தியில் எழுதியிருந்தால்.....
    நம்மூர்களில் அப்படித் தான் கேட்கத் தோன்றும். //

    கருத்தான கருத்துக்கு நன்றி ஜீவி ஸார்.

    பதிலளிநீக்கு
  9. ஐம்பதுகளில் சசி என்பவர் எழுதிய சிறு கதை அசாத்தியம் இல்லையா? எத்தனை எத்தனை திறமையான படைப்பாளர்கள் இருந்திருக்காங்க, இப்பவும் இருக்காங்கன்னு பிரமிப்பாக இருக்கிறது. அப்படியான கதைகளைத் தேடிப் பார்க்க வேண்டும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இன்னமும் புத்தகச்சந்தையில் பழைய எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் விலைபோகின்றன.

      நீக்கு
  10. "விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".//

    யெஸ், இதை நீங்க போன ரெண்டுகதைகளிலும் அப்ளை செய்திருந்தீங்க....இப்படி எழுதி வைத்துவிட்டு அடுத்ததை வாசிக்க வந்தா நீங்களும் அருண் என்று....ஆஹா!!!!! பரவால்லியே நமக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதேன்னு!!

    எனக்குப் பிடித்த உத்தி இது. எல்லாவற்றையும் கதையில் சொல்லக் கூடாது புட்டு புட்டு ....சிலவற்றை வாசகர்களின் புத்திக்கு விட வேண்டும் என்று தோன்றும்.

    பரிசு வென்ற கதைகளில் ஒன்று நீங்க சொன்ன அருண் கதை போல ஆனால் அதில் முடிவு வேறு. நான் எழுதியதில் வாசித்திருப்பீங்க. உண்மைய சொலல்ணும்னா நான் அங்கு அருண் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எழுதிவிட்டு பதிவு வெளியிடும் போது கட் பண்ணினேன். ஒரு வேளை ஒப்பீடு ஆகிவிடுமோ என்று...நான் என் வரியைக் குறிப்பிட்டிருந்ததால். எனக்குஇப்படி மறைமுகமான முடிவுகள், அதிலிருந்து பிறக்கும் கிளைக்கதைகள் என்று பிடிக்கும் என்பதால் அதையும் சொல்லியிருந்தேன். கட்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென பிடித்துக் கொண்டீர்கள். 

      'அந்த' வரிசையில் அருண் கதையையா..  நியாயமா இது!

      நீக்கு
    2. இல்லை கண்டிப்பாக 'அந்த' வரிசை என்றில்லை. நான் ஒரு ஒப்பீட்டைச் சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாகாது என்று எடுத்துவிட்டேன். அது போட்டிக்கான கதை என்பதால் எல்லாம் விலாவாரியாக எழுதியிருப்பாங்க போலும். ஆனால் எனக்குப் பிடித்த உத்தி "அருண்"!!!

      கீதா

      நீக்கு
    3. நன்றி. நீங்கள் இந்த ஒப்பீடுகளையும் உங்கள் எண்ணங்களையும் அங்கு தனிப்பதிவாக்கலாம்.

      நீக்கு
  11. நான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்! தாண்டிச் சென்று விடுவோம்.//

    டிட்டோ டிட்டோ....

    ஸ்ரீராம் நீங்க தைரியமாக எழுதறீங்க. அதுக்கு உங்களுக்குப் பாராட்டுகள். உண்மையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனென்றால் எனக்கு அந்த தைரியம் இல்லை, வெளியிட்டால் ஏகப்பட்ட கேள்விகள் அப்ஜெக்ஷன்ஸ் வரும் என்ற தயக்கம். ஏற்கனவே நான் எழுதினப்ப இங்கு வந்திருக்கின்றன...உங்ககிட்டவும் இதைச் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      அதை எதிர்க்கொள்ளும் தயக்கம் பயம். காரணம் தன்னம்பிக்கை இல்லாமை...இன்னும் சுருங்கிவிடுவேனோ என்ற பயம். அதிலிருந்து மீளத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஏனென்றால் எனக்கு அந்த தைரியம் இல்லை, வெளியிட்டால் ஏகப்பட்ட கேள்விகள் அப்ஜெக்ஷன்ஸ் வரும் என்ற தயக்கம். ஏற்கனவே நான் எழுதினப்ப இங்கு வந்திருக்கின்றன...உங்ககிட்டவும் இதைச் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      அதை எதிர்க்கொள்ளும் தயக்கம் பயம். காரணம் தன்னம்பிக்கை இல்லாமை...இன்னும் சுருங்கிவிடுவேனோ என்ற பயம். அதிலிருந்து மீளத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!!!!!!

      கீதா

      நீக்கு
    3. இன்னுமா?  இந்நேரம் அதிலிருந்து வெளியில் வந்திருக்க வேண்டாமோ...

      போற்றுவார் போற்றலும்
      தூற்றுவார் தூற்றலும்
      போகட்டும் கண்ணனுக்கே...

      நீக்கு
    4. இன்னுமா? இந்நேரம் அதிலிருந்து வெளியில் வந்திருக்க வேண்டாமோ...//

      ஆகியிருக்கணும். கொஞ்சம் பெட்டர்....இங்கு முன்பு நிறைய எழுதியிருந்தேன் இல்லையா..படத்துக்குக் கூட டக்குனு எழுதி...உங்கள் அப்பாவின் கடைசி முடிவு இப்படி இருக்கணும் என்று சொல்லி எழுதியவை என்று....

      இடையில் ஏனோ இப்படி. இப்ப கொஞ்சம் எழுந்து வருகிறேன். வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை.

      கீதா

      நீக்கு
    5. ஆல்ரெடி வந்துட்டீங்க... சரியா பாருங்க...

      நீக்கு
  12. அருண் கதையில் ஜோதியின் அக்காவின் செயல்பாடுகள் நன்றாகவே புரிந்தது. என்னவோ இருக்கு அதில்...ஏதோ ஒரு வாசனை வீசுதே என்று புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஒரே வாசனையாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது 

      நீக்கு
    2. முடிவு வாசிக்கும் முன் வேறு வேறு வந்தன ....யோசித்தேன் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  13. "உலகத்தின் கடைசி மனிதன் வீட்டில் தனித்திருக்கையில் நள்ளிரவு அவன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது"

    இதை வாசித்திருக்கிறேன்.

    நான் இதற்கு தலைப்பு 'கடவுள் வருகை என்று வைத்துப் பார்த்தேன். திகில் போய்விட்டது!//

    ஸ்ரீராம், கடவுளே வந்து தட்டியிருந்தாலும், கதவைத் திறக்கும் முன் அவன் மன ஓட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதே நமக்குள் எழுமே. இதில் நிறைய சொல்லலாம் இல்லையா...

    உலகின் முதல் மனிதன்னு சொன்னா அது இன்னும் வேறு வகையில் சொல்லத் தோன்றும் இல்லையா.

    முன்பு சுஜாதாவின் இந்த ஒரு வரிக்கதையை வாசித்தப்போ தோன்றியது ...உலகின் முதல் மனிதன் என்று இருந்திருந்தால் எப்படி அது போகும் என்று...கற்பனை விரிந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் (இரண்டுமே) சரிதான்!

      நீக்கு
    2. உலகத்தின் கடைசி மனிதன் ஏன் கதவை தாள் போடவேண்டும்? கடைசி கரடி உள்ளே வந்துடும் என்று பயமா?

      நீக்கு
  14. கரடியும் வாசித்திருக்கிறேன்.

    ஆனால் அந்தச் சின்னஞ்சிறு கதை வாசித்த நினைவு இல்லை. சின்னஞ்சிறு கதை சூப்பர்ல?

    முதல்ல நீங்கதான் "அது என்னவென்றால்" நு அடுத்தாப்ல இடைவேளை விடுறீங்களோன்னு நினைச்சேன்.... இதை ரசித்தேன் ஸ்ரீராம், "அட! என்று... இந்த இடம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கப் படிக்க நிறைய ஐடியாக்கள் நமக்குள்ளும்!  எஸ்ரா படிக்கும்;போதும் எனக்கு அப்படி இருக்கும்.

      நீக்கு
    2. எஸ் எஸ்....எஸ் ரா படித்த போது எழுந்ததை வைத்து எங்கள் தளத்தில் ஒன்று எழுதிய நினைவு அப்ப எபிக்கு அனுப்பும் அளவு பரிச்சயம் ஆகும் முன்.

      கீதா

      நீக்கு
    3. அடடே...   எல்லோருக்கும் பொதுவா இந்த உணர்வு!

      நீக்கு
  15. சிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. புதிது புதிதாக யோசிக்கிறார்கள். நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!//

    ஆமாம் இதை நானும் நோட் செய்திருக்கிறேன், ஸ்ரீராம். அதுவும் ரொம்பவும் பழைய கதைகள் வாசிக்கறப்ப ஆச்சரியமா இருக்கு அப்பவே இப்படி அழகா யோசித்திருக்காங்களே என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பொதுவாகக் கதை எழுதப்பட்ட காலத்தை அறிய முயற்சி செய்வதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. ஆனால் இன்னமும் சிலர் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கிறார்கள்!

      நீக்கு
    3. ஆம்.  அப்படி யாரும் எழுத முன்வருவதில்லை என்பதுதான் அன்று மாலன் பேசிய பேச்சு.  அவர் வேறு கலவரம் பற்றி பேசினாலும் எனக்கு குல்சாரின் ராவி நதிதான் நினைவுக்கு வந்தது.  இவ்வகையில் நான் படித்தவை மிகச் சொற்பம்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் "பழைய பஞ்சாங்கம்" ஹையோ உண்மை

      கீதா

      நீக்கு
  16. தண்டேல் - தண்டால் எடுத்து தடி எடுத்து நாட்டாமை செய்யறதுனு எங்க வீட்டுல பேசிக் கேட்டிருக்கிறேன்.

    நீங்க அனுப்பியிருந்தீங்க ஒரு ரீல் பிட் செமையா இருந்துச்சு அவங்க மூவ்மென்ட்ஸ்.

    ஸ்ரீராம், உங்க விமர்சனம் பார்த்தா சாய்பல்லவியின் திறமையை வீணாக்கிட்டாங்கன்னு தோன்றுகிறது.

    சாய்பல்லவிக்கு நாம் ஒரு வேண்டுகோள் வைத்துவிடுவோம். செலக்டிவா பண்ணுவாங்கன்னு,,,,பார்க்கப் போனா அவங்க செலக்ட்டிவா பண்ணுவாங்கன்னு வாசித்த நினைவு.

    ஒரு வேளை இப்ப பாப்புலாரிட்டினால நிறைய கமிட் பண்ணிக்கறாங்களோ? நோ சாய்பல்லவி...ப்ளீஸ் பி கேர்ஃபுல்!! (ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை டோலிவுட் இதை மிக ரசித்திருக்கலாம்.  நமக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்!

      நீக்கு
    2. டோலிவுட் இப்படியானவற்றைதான் மிகவும் ரசிக்கும் ஸ்ரீராம். அவங்க ரசனை அது.

      கீதா

      நீக்கு
  17. நியூஸ் ரூமில்:

    //86 வயதான மூதாட்டி அபாரம்.//

    கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியில், சிறுகதைகளின் சிறப்புக்களை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

    சிறு கதைகளின் முன்னோடி சசி என்பவரின் ரயில் கதை அருமை. அதை சுஜாதா அவர்கள் சொன்ன விதம் நல்ல தெளிவு.

    ."விவரமா சொல்லாதே. கோடிகாட்டிட்டு இடத்தை காலி பண்ணு. எனக்கு புத்தி இருக்கிறது. நான் மற்றதைப் புரிந்து கொள்கிறேன்".

    உண்மை.. விபரங்களை வாசகனின் எண்ணங்களில் விட்டு விட வேண்டும். அவரின் எழுத்தே அப்படியானதுதான்.

    அவரின் பாணியில் நீங்கள் எழுதிய "அருண்" கதையை ரசித்தேன். நீங்கள் அதை விவரித்த விதமும் நன்று.

    /நான் இதுதான் என்று எதையாவது அங்கு காரணமாய்ச் சொல்லி இருந்தால் நம் கண்கள் குதிரையின் கடிவாளம் போல கட்டப்பட்டிருக்கும்! தாண்டிச் சென்று விடுவோம்./

    உண்மை. அதுதான் அதில் உங்களின் முதல் வரியே அந்த குடும்பத்தின் பல கதைகளை சொல்லியது. உங்களின் முயற்சியும் நல்ல முயற்சி. உங்களின் சுருக்க எழுத்தாற்றலுக்கு பாராட்டுக்கள்.

    சுஜாதா அவர்களின் ஒரு சில வரி கதைகளும் அருமை. எப்படித்தான் இப்படி வார்த்தைகளை மடக்கி.... பிரமிப்பு ஒருபுறம் என்றால், அதன் மறுபுறம் லேசான பொறாமை.. ஹா ஹா ஹா

    /சிறுகதை எழுதுவதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. புதிது புதிதாக யோசிக்கிறார்கள். நான் இங்கு புதிது புதிதாக என்று சொல்லி இருப்பதே முப்பது வருடங்களுக்கும் மேல் பழசு!/

    அடாடா..! அப்போ நா(ன்) ங்கள் எழுதுவதெல்லாம் அத்தர் பழசு.நானும் உங்களைப் போல சுருக்கி எழுத முயற்சிக்க வேண்டும். நடக்குமா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சுவையாக எழுதுகிறீர்கள் கமலா அக்கா.  அதுவும் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்.  வார்த்தைகளை புதிய பொருள்களில் கையாள்கிறீர்கள்.   உங்கள் சக்தி உங்களுக்கு தெரியவில்லை கமலா அக்கா.  

      நீக்கு
    2. தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  19. இரண்டு செய்திகள் ஒரே செய்திகள் - உங்களுடையது.... பானுக்காவும் அனுயிருக்காங்கன்னுதெரியுது.

    திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு சூப்பர்!!! 86 வயதான மூதாட்டி! வாவ்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த செய்தி?  சுனிதா வில்லியம்ஸ் என்றால் புறப்படப் போகிறார் என்று ஒரு செய்தியும், வந்து சேர்ந்து விட்டார் என்று ஒரு செய்தியும் இருக்கும்!

      நீக்கு
    2. சு வி பார்த்துவிட்டேன்.

      இன்னொன்று கராச்சி ரயில் விஷயம்.

      சார் - நம்பிட்டோம் நாங்க!!

      பாருங்க, எங்க மனசை எப்படி கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைச்சிருக்கு இந்த அரசியல்!

      கீதா

      நீக்கு
  20. நாங்களும் பரிமாறுவோம், உபசரிப்போம் என்றாலும் எப்போதாவது நாங்கள் கூட இப்படியொரு தர்மசங்கடத்தில் மாட்டக் கூடாது அல்லவா?//

    யெஸ் நம்ம வீட்டிலும்...எங்க வீட்டில் பொதுவாகப் பரிமாறும் வழக்கம் இல்லை. நாமே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுவது.

    இது சூப்பரா இருக்கு ஸ்ரீராம்.

    உளவியல் கான்ஸ்டெல்லேஷன் படி பெரியவங்கதான் சின்னவங்களுக்குக் கொடுக்க வேண்டும். அண்ணன் அண்ணி வீடு என்பதால் அவங்கதான் கேட்டிருக்க வேண்டும்.... கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஓவராக மறுத்தால் போடுவதும் சிரமம். ஒரு வேளை நாம வற்புறுத்திப் போட்டுவிட்டு அது வினையானாள்?!!! ஹிஹிஹி ...எனவே ஃப்ரீயாக இருபப்து உத்தமம்.

    நல்லா பழகினவங்க வீட்டுக்கு எந்த வீட்டுக்குப் போனாலும் கூச்சம் பார்ப்பதில்லை. ஃப்ரீயா இருப்பது வழக்கம்.

    ஆனால் எல்லா வீடுகளிலும் இருக்க முடியாது. எங்க வீடுகளிலேயே சில வீடுகளில் கிச்சன் பக்கம் போகக் கூடாது. நானும் அடக்கி வாசித்துவிட்டு வந்துவிடுவேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நீங்கள் சொல்வது. எல்லா வீடுகளிலும் சுதந்திரமாக இருந்துவிட முடியாது.

      நீக்கு
  21. உங்க வீட்டில் கூட நான் உங்க புது வீட்டுக்கு வந்திருந்தப்ப நாம எல்லாரும் கிச்சன்ல கீழ உட்கார்ந்து அப்படிச் சாப்பிட்டோமே!

    எனக்கு அது பிடிக்கும். நாமே போட்டுக் கொள்வது. இதில் ஒரு சௌகரியம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இல்லைனா பழைய முறைப்படி என்றால், வீட்டில் பெரியவங்க பரிமாறுவாங்க....ஆண்களுக்குப் பரிமாறிவிடுவாங்க. பெண்கள் கிச்சனில் கடைசியாக உட்கார்ந்து சாப்பிடும் போது காய் இருக்காது அல்லது குழம்பு இருக்காது,,,..ஏதேனும் ஒன்று பற்றாக்குறை. அல்லது சமையல் செய்பவங்களுக்குக் கிடைக்காது.

    எனவே வீட்டு மட்டில் பழக்கம் கடைசி மைத்துனரால் மாற்றப்பட்டது.

    நம்ம வீட்டில் மைத்துனர்கள் எல்லாம் ரொம்ப ஃப்ரீ டைப். நாங்களும் ஃப்ரீ. கிச்சனுக்குள் வந்து எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடலாம். மகனின் நண்பர்கள் உட்பட...நீங்களே வந்தாலும் ஃப்ரீயாக எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

    ஸோ வீட்டுக்கு வரவங்கள் கேட்டுவிடுவாங்க இல்லைனா தாங்களே எடுத்துப் போட்டுக் கொண்டுவிடுவாங்க.

    ஆனால் விசேஷங்களில் பரிமாறப்படும் போது, பார்த்து பார்த்து இன்னும் எத்தனை பேர் இருக்காங்க, எதிர்பாராமல் வந்துவிட்டால் அப்படி யோசித்துப் பரிமாறுவந்து உண்டு... எல்லொருக்கும் வேண்டுமே...தர்மசங்கட நிலைகள் ஏற்படுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு மொட்டை மாடி, சிலருக்கு கிச்சன்லேயேவா? :))

      நீக்கு
    2. கீதா... நல்லவேளையாக ரொம்பப் பழமையான அந்தப் பழக்கமெல்லாம் எங்கள் வீட்டில் எங்குமே கிடையாது. எங்கள் உருவு வீடுகளில் எல்லா வேடுகளுமே ப்ரீதான்.

      நீக்கு
    3. // சிலருக்கு மொட்டை மாடி, சிலருக்கு கிச்சன்லேயேவா? :)) //

      கிரஹப்ரவேசத்துக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் மொட்டை மாடியில்தான் அரேஞ்சமென்ட்.  விசேஷமில்லாத சாதாரண நாளிலும் வந்த ஒரு சந்தர்ப்பத்தை கீதா சொல்கிறார்.

      நீக்கு
  22. நேற்றைய பதிவில்
    படங்கள் மிகவும் அழகு...

    பதிவைப் படிக்க வில்லை.. இயலவில்லை..
    இணையத்தை ஈர்க்காமல் கைத்தல பேசியில் கோளாறு..
    மன்னிக்கவும்

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  23. பொக்கிஷம் ஜோக்ஸ் - பொக்கிஷம் தான் சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  24. சுஜாதா அனுபவக் கட்டுரையில் முக்கியமான விஷயம் தெரிந்தது, நம்ம சேட்டைக்காரரின் கருத்தால்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர் அனுபவக் கட்டுரை என்றால் அதை அப்படியே நம்பிடறதா? அதில் கண்ணு, மூக்கு, காதெல்லாம் வைத்திருப்பது தவிர்க்க முடியதது, தெரியாதா?

      நீக்கு
    2. அந்த நாளையா ஆனந்தவிகடன் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் அருமை. நீங்கள் கதை பேசிக் கதையைக் கண்டு பிடிச்சு எழுதினதும் அதை விவரித்த விதமும் சிறப்பு. சுஜாதாவின் இந்த எழுத்துக்களை எல்லாம் நானும் ஓரளவுக்குப் படிச்சிருக்கேன். ஆனந்த விகடன் சசியின் கதைகள் தொகுப்புச் சித்தப்பாவின் பைன்டிங்க் கலெக்ஷனில் இருந்தது.

      நீக்கு
    3. உங்களுக்கு ஆனந்த விகடன் ஒரு பக்க கதைகள் நினைவிருக்கா கீதா அக்கா?

      நீக்கு
  25. திருக்குறளை மொழி பெயர்த்த அம்மையாருக்கு எனது வணக்கங்கள்..

    இன்றைய பொக்கிஷம் உண்மையில் பொக்கிஷம்
    நலம் வாழ்க ....

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    உங்களின் தற்போதைய கதையின் மூலக்கருவின் விளக்கமும் நன்றாக இருக்கிறது. (அண்ணன், தம்பிக்குள்ளான மன பேதங்களை அலசி ஆராய்ந்த விதம் அருமை. அதிலிருந்து நீங்கள் செவ்வாய்க்கென கதை திரட்டிய தங்களது சாமர்த்தியம் பாராட்டிற்குரியது.)

    உணவு பரிமாறும் போது ஒவ்வொருவரின் மன பேதங்களை நானும் பல விதங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் வீட்டிலும், சரி, வந்த விருந்தாளிகளையும் சரி, அனைவரையும் அதிகப்படியாக உணவை எடுத்துக்கச் சொல்லி, வறுப்புறுத்தும் போதும், சில பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன செய்வது? என்னிடம் சிலர் கையில் உணவை வைத்துக் கொண்டே, வேணுமா, போதுமா என கேட்கும் போது, வேண்டாமென்றுதான் முதலில் சொல்லி விடுவேன். என்னை மாதிரி யாரும் "கம்பெல் பண்ணி கூட இன்னும் கொஞ்சமாவது எடுத்துக்கோ" என சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரு வர் ஒவ்வொரு மாதிரி. நம் கையிலும், ஐந்து விரலும் ஒரே மாதிரியாகவா அமைந்துள்ளது.?

    தங்களின் இருள் கவிதை அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. அங்கு மன பேதங்கள் என்பது இருக்கும் தான். அதே சமயம் இந்த மாதிரி நிகழ்வுகள் வேண்டுமென்றே நிகழ்ந்ததாகவும் நிச்சயமாக சொல்ல முடியாது. யதேச்சையான தற்செயலாக கூட இருக்கலாம்!

      நீக்கு
    2. சாப்பாடு பரிமாறும்போது பேதங்கள் காட்டுவதை நானும் நிறைய அனுபவிச்சிருக்கேன். அதிலும் மாமாவுடன் சாப்பிடப் போகும்போதெல்லாம். இத்தனைக்கும் அவங்க அழைப்பின் பேரில் தான் போவோம். நான் வரலை, இப்படி எல்லாம் நடக்கும்னால் மாமா வருத்தப்படுவார் என்பதால் ஒண்ணும் சொல்லாமல் போய் விட்டு அங்கே அவரே வருந்தும்படி ஆயிடும் மனிதர்கள் காட்டும் பேதத்தில்.

      நீக்கு
    3. ஸ்ரீராமுக்குப் பெரிய மனசு என்பதால் தற்செயல்னு சொல்கிறார். :)

      நீக்கு
    4. நான் இரண்டுக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்கிறேன்!

      நீக்கு
    5. சாப்பாட்டில் பேதம் காட்டுவது அபூர்வம் எனத் தோன்றுகிறது அது பெரிய பாவம் என்பதால்

      ஆனால் நம் மனதுதான் இந்த மாதிரி வித்தியாசங்களைக் கற்பிக்கிறது என நினைக்கிறேன்

      என் அப்பா சைடு சித்தி எனக்கு கேசரியோ இனிப்போ எனக்குப் பிடிக்கும் என்பதால் நிறைய பரிமாறுவார்கள். என் மனது அது அன்பின் காரணமாக என்று நினைக்கும். என் அம்மா, உனக்கு உடம்பு கெட்டால் தனக்கென்ன என்ற எண்ணம் என்பார்

      நீக்கு
    6. கஹ மேடம் ரொம்ப வற்புறுத்தி வற்புறுத்தி உணவைப் பரிமாறுவேன் என்றார். யாருக்கும் வேண்டாமோ? ஏன் இவ்வளவு வற்புறுத்துகிறார்? என்று சிலர் எண்ணவும் வாய்ப்புண்டு.

      அதனால் மற்றவர்கள் interpretation பற்றி நாம் கவலைப்படக்கூடாது. நம் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லணும்

      வெளிப்படையாக அவர்கள் இல்லை என்று சொல்லாதவரை பிரச்சனை நண்பருடையது

      நீக்கு
    7. உண்மை.  சாப்பாட்டில் பேதம் காட்டுவது மிகவும் அபூர்வம்.   தர்மசங்கட நிலைமையோ...  நடந்தது அதுதான்.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டொரு நாட்களாக வலைத்தளத்தில் எங்கும் பார்க்க இயலவில்லையே..? நலமாக உள்ளாரா? வெளியூர் பயணங்களில் இருக்கிறாரா? எபி க்ரூப்பில் தன் வருகையைப் பற்றி ஏதேனும் தகவல் தந்துள்ளாரா ? தெரிந்தால் தெரிவுக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு அக்காவின் கணவரின் சித்தப்பா பையன் ஆன எழுத்தாளர் நாறும்புநாதன் சமீபத்தில் காலமானார். அந்த துக்கத்துக்கு அவர் போயிருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை.

      நீக்கு
    2. செய்தியைப் பார்த்ததுமே நினைத்துக் கொண்டேன்.

      நீக்கு
    3. அப்படியா!! விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. இவரைப்பற்றி கூட சகோதரியின் பதிவில் சமயத்தில் தெரிவித்திருந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
  28. சையத் ஆஷாஜ் திறமைக்கு பாராட்டுகள்.

    வழமைபோல நியூஸ் ரூம் நன்று பலவித செய்திகளை அறியத்தந்தது.

    பிசாசு, ரெயில் ஜோக்ஸ் இரண்டு, எனக்குப் பிடித்திருந்தது.சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய பிற பகுதிகளும் அருமை. செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். சில ஏற்கனவே தெரிந்தவை. பொக்கிஷ பகிர்வில் அத்தனை ஜோக்குகளும் சிரிக்க வைத்தன. 65ல் 30 காசுக்கு ஒரு (வாரமா, மாதமா..?) பத்திரிக்கை கிடைத்துள்ளது. இப்போது அந்த 30க்கு என்ன மதிப்பு என மனம் யோசிக்கிறது.

      அம்மா வீட்டில் இருந்தவரை இந்த பத்திரிக்கைகளை எங்கள் அண்ணா தன் அலுவலக சர்க்குலேஷனில் கொண்டு வருவார். அதில் மாலைமதியில் நிறைய கதைகளை படித்துள்ளேன். அப்படி படித்தது மட்டும் நினைவு பெட்டகத்தில் இருக்கிறது. கதைகள் நினைவில் இல்லை. குமுதத்தில் ஒரு பக்க கதைகள் சற்று ஆ.... மாக வந்திருந்தால் கூட அந்த பத்திரிக்கை என் கைகளுக்கு வராது. (அம்மா, அண்ணா தடை போட்டு விடுவார்கள்.) இப்போது வரும் திரைப்படங்களை பார்க்க வேண்டும் அவர்கள். :))) இன்றைய பதிவு அனைத்தும் நிறைவாக உள்ளது. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  29. ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது உறவின் முறையில் துக்கம் நிகழ்ந்ததை அறிந்து வருந்துகின்றேன்...

    எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதாக...

    பதிலளிநீக்கு
  30. //ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது உறவின் முறையில் துக்கம் நிகழ்ந்ததை அறிந்து வருந்துகின்றேன்...

    எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதாக...//

    எங்கள் துக்கத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  31. //சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டொரு நாட்களாக வலைத்தளத்தில் எங்கும் பார்க்க இயலவில்லையே..? நலமாக உள்ளாரா? வெளியூர் பயணங்களில் இருக்கிறாரா? எபி க்ரூப்பில் தன் வருகையைப் பற்றி ஏதேனும் தகவல் தந்துள்ளாரா ? தெரிந்தால் தெரிவுக்கவும். நன்றி.//

    உங்கள் விசாரிப்புக்கு நன்றி கமலா. உங்களுக்கு ஸ்ரீராம் பதில் கொடுத்து விட்டார். ஞாயிறு அன்று என் கணவரின் சித்தப்பா மகன் "இயற்கை எய்தி" விட்டார் திருநெல்வேலியில் . கோவையிலிருந்து சாரின் உடன்பிறப்புகள் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள் அதுதான் வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பதிலில் அறிந்து கொண்டேன் சகோதரி. மனதுக்கு வருத்தமாக இருந்தது. உங்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

      நீக்கு
  32. ஸ்ரீராம், வலைத்தள அன்பர்கள் என்னைப்பற்றி விசாரிப்புக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. பதிவு அருமை. ஒருபக்க கதை பற்றியும், உங்கள் கதை பற்றியும் அலசல் அருமை.

    பதிவின் பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன.

    விகடன் அட்டைப்பட நகைச்சுவை பகிர்வுகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  34. நன்றி கோமதி அக்கா. உங்கள் மைத்துனர் மறைவுக்கு எங்கள் இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!