செவ்வாய், 6 அக்டோபர், 2009

பிரசுரத்துக்கு ஏற்றதல்ல...

பிரபல பத்திரிகைகளுக்கு படைப்புகள் அனுப்புவோம். எல்லா(ர்) படைப்பும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. திருப்பி அனுப்ப போதிய தபால்தலை இணைத்து அனுப்பவும் என்று எழுதி இருப்பார்கள். நாம் அனுப்பியதை பிரித்து படிக்கிறார்களா அல்லது Just பிரித்து உள்ளே உள்ள தபால் தலையை வெளியே எடுத்து ஒட்டி நமக்குத் திருப்பி அனுப்பி விடுவார்களோ...உடனே வந்து விடும்.
இந்தப் பிரச்னை பிரபல எழுத்தாளர்களுக்கு இருப்பதில்லை என்று தோன்றும். அவர்கள் அனுப்பினாலே உடனே பிரசுரித்து விடுவார்கள் என்றும் தோன்றும். ஆனால் அந்தக் காலத்தில் அசோகமித்திரன் போன்றோரின் படைப்புகளை புரிந்து கொள்ளாமல் திருப்பிய அனுபவங்கள் உண்டாம்.
தினத்தந்தி, ராணி புத்தகங்கள் முதல் ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு குங்குமம் புத்தகங்கள் என்று படிப்போர் உண்டு. கலைமகள், மஞ்சரி என்று படிப்போர் உண்டு. பத்திரிகை ஆசிரியருக்கு புரிந்து ஏற்றுக் கொண்டால்தான் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப் படும். குங்குமத்தில் ஒரு முறை பாலகுமாரன் - சுப்பிரமணிய ராஜு ஆசிரியர் பொறுப்பு ஏற்ற வாரம் அசோகமித்திரன் கதை ஒன்றை பிரசுரத்துக்கு ஏற்றதாய் பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லி உள்ளார்.
அவருடைய கதை ஒன்றே கூட அந்த அனுபவத்துக்கு ஆன கதை ஒன்றையும் அவர் தன் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார். தன்னுடைய 'காயத்ரி' கதையை ஆரம்பித்திருந்த நேரம். மிக உயர்ந்த வர்ணனைகளுடன் அட்டகாசமாக காயத்ரி என்ற பெண்ணின் பார்வையிலிருந்து தொடங்கும் நாவல் அது. அழுத்தப் பட்ட பெண்ணின் உணர்வுகளை சொல்லி வேறொரு தளத்தில் கொண்டு போக திட்டமிடப் பட்ட கதையாம் அது. அந்த வீட்டில் ஏதோ மர்மமாக நடக்கிறது என்ற வகையில் மட்டும் சொல்ல திட்டமிட்டிருந்த வேளையில் ஆசிரியர் சாவி மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதி இருந்தாராம் திரு சுஜாதாவுக்கு. அந்தக் கடிதத்தில் கதை மிக ஆபாசமாகப் போவதாகவும், அவருக்கு அளிக்கப் பட்ட சுதந்திரத்தை அவர் (சுஜாதா) தவறாகப் பயன் படுத்துவதாகவும் எழுதி இருந்தாராம். சாவி அந்தக் கதையை நிறுத்துமளவு போனாராம். அதன் பிறகு சுஜாதா அந்தக் கதையின் போக்கை மாற்றி (ஒரு பழி வாங்கும் நோக்கத்துடனேயே!) Blue Film என்றெல்லாம் மாற்றி எழுதினாராம்.அதன் பிறகு ரத்தம் ஒரே நிறம் கதையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நமக்குத் தெரியும்.
இந்த வெகுஜனப் பத்திரிகைகளால் வெறுப்புற்ற சிலர் சில சிற்றிதழ்களை நடத்தினர். அதில் வெகுஜனப் பத்திரிகைகள் மீதான அவர்கள் கோபம் வெளிப் படும். அதே நேரம் மேற்படி வெகுஜனப் பத்திரிகை ஒன்றிலிருந்து இவர்களிடம் ஏதாவது எழுதித் தர சொல்லி கேட்டால் மிக்க சந்தோஷத்துடன் உடனே எழுதிக் கொடுப்பார்களாம். இப்போதெல்லாம் அந்தக் கவலை இல்லை என்று நினைக்கிறேன். இப்படி ப்ளாக் ஆரம்பித்து எழுதி விட்டுப் போய் விடலாமே...!

6 கருத்துகள்:

  1. உங்களுடைய படைப்புகள் நிறைய ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை என்று நினைகிறேன்..இருப்பினும் பத்திரிகைகளுக்கு பலர் எழுதிக் கொண்டுஇருகிறார்கள்.. சில ப்ளாக்லில்லும் படைப்புகள் நிறைய ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை என்று நினைகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. வலைப் பதிவில் ஒரு சௌகரியம் - போஸ்ட் அல்லது கமெண்ட் - எழுதுபவரே பிரசுரித்து, உடனே உலகெங்கும் அனுப்பி வைத்துவிடலாம். உலகளாவிய வலைப் பின்னலில் சென்ற நிமிடம் பதிவானது, இந்த நிமிடம் பழையதாகி விடுகிறது!

    பதிலளிநீக்கு
  3. பத்திரிகை அந்த ஒருவாரத்து வரைக்கும் தான் பேசப்படும்

    பிளாக்கில் எழுதுவது இணையம் உள்ளவரை பேசப்படும்

    பதிலளிநீக்கு
  4. பதிவுலகில் ஒரு சௌகரியம்!

    இங்கு நாமே எழுத்தாளர்! நாமே எடிட்டர்! நாமே பதிப்பாளர்!

    அங்கீகாரத்தை எண்ணி ஏங்காதவர்கள் அனைவருக்கும் பதிவுலகம் பொன்னுலகம்.

    பதிவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய மூத்த நண்பர் பிரபல பத்திரிகையில் முப்பது வருடங்களுக்குமேல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கில் படைப்புகள் வருமாம் - அவற்றை எங்கே படிப்பது? பிரபல எழுத்தாளராக இருந்தால் கூட, தானாகவே வந்த படைப்புகளின் முதல் பத்து வரிகளுக்கு மேல் படிக்க மாட்டார்களாம். பத்து வரிகளில் கொக்கி இருக்க வேண்டும். சமூகக் கதையானாலும் அதே நியதி தான்.

    'ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில்..' எப்படி சாத்தியம் என்று நினைப்பேன். இன்றைய blogs பற்றிய comfort கருத்தைப் படிக்கும் போது அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. தமிழ்ப் பதிவுகள் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறதாமே?

    பதிலளிநீக்கு
  6. சாவி தான் சொல்லக் கூடாத ஜோக்குகள் என்ற தலைப்பில் அளவாக ஆபாசம் கலந்து ஜோக் அடிக்க ஆரம்பித்தவர். அவரே ஆபாசம் என்று விமரிசனம் செய்தார் என்றால் நம் சுஜாதா என்னதான் எப்படித்தான் எழுதினாரோ. இது உண்மையா என்று கூட சந்தேகம் வருகிறது. இருக்கலாம் தான்.

    பிரசுரத்துக்கு ஏற்றவை அல்ல என்று நிராகரிக்கப் பட்ட மிக நல்ல படைப்புகள் ஏராளம். பத்திரிக்கை ஆசிரியரின் அந்த நிமிஷ மூடைப் பொறுத்து நல்ல படைப்புகள் நரகத்துக்குச் செல்லலாம்.

    இதற்கு மாறாக ஒன்று சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அசோகா மித்திரன் ஒரு கதை எழுதிப் பிரசுரம் ஆகி இருந்தது. நாடக நடிகை ஒருத்தியை வேறு ஆள் கிடைக்க வில்லை என்று நாடக இயக்குனர் அழைத்துச் செல்வதாக மிகச் சாதாரண கதை. அதைப் பிரசுரம் செய்யும் அளவுக்கு அதில் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்றாலும் அசோகமித்திரன் என்ற பெயருக்காக மட்டுமே அது பிரசுரம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது. சுஜாதா எழுதிய வண்ணான் கணக்கு கூட பிரசுரம் ஆகும் என்று யாரோ சொல்லப் போக சாவியில் அவர் எழுதிய லாண்ட்ரி கணக்கு பிரசுரம் ஆனது. கைக்குட்டை மூன்று ரத்தக் கறை இல்லாதது என்று தமாஷ் செய்திருந்தார்கள்.

    ராஜா சொன்ன ஜோக்குக்கு சபையோர்கள் கைதட்டும் போக்குதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!