வெள்ளி, 12 மார்ச், 2010

கேரளத் திருமணம்.


  • தமிழ் நாட்டில் ஏராளமான திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன். மேடை அமைப்பு எல்லாத் திருமணங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். உயரமான இடம் அல்லது சாதாரணமான இடம் ஏதோ ஒன்றில் சுற்றிலும் பூ, பழங்கள், தட்டுகள் தாம்பாளங்கள் நிறைந்திருக்க, ஹோமம் வளர்க்கப் பட்டு திருமணம் நடைபெறும்.

சமீபத்தில் சென்று வந்த திருவனந்தபுரம் திருமணத்தில் பார்த்த மேடை வித்யாசமாக இருந்தது. மேடையிலேயே ஒரு வட்ட மேடை அமைக்கப் பட்டிருந்தது. அது இருந்த வடிவத்துக்கு எந்த நிமிடமும் சுழலக் கூடிய சுழல் மேடை போலக் காட்சி அளித்தது. பூவினால் அலங்காரம் செய்யப் பட்டு வட்டமாக இருந்த அதில்தான் ப்ரோஹிதர் அமர்ந்து திருமணம் நடத்தத் தயாராய் இருந்தார்.

மேடைக்கு முன் நின்று பார்த்தால் வலப் புறமும் இடப் புறமும் மூன்று மூன்று கேரளத்து குத்து விளக்குகளை வைத்தும், முன்புறம் நடுவில் வழி விட்டு, இடப் புறமும் வலப் புறமும் இரண்டிரண்டு குத்துவிளக்குகள் வைத்து அதன் மேல் அரணாய் பூ வேலி அமைத்து, கீழேயும் இயற்கைப் பூக்களாலும் செயற்கைப் பூக்களாலும் அழகு படுத்தி இருந்தார்ர்கள். முதல் செவ்வக மேடை ஏற மூன்று அலங்கரிக்கப் பட்ட படிக்கட்டுகள். நடுவில் உள்ள வட்டமேடையில் எம்பிதான் ஏற வேண்டும்! அதன் இரு புறமும் தாழம்பூ வைத்து அலங்காரம்.



இன்னும் ஒரு விஷயம் கவர்ந்தது. மேலே ஒரு சிறிய அண்டா போன்ற பாத்திரம், ஈரிழை தாம்புக்கயிறால் இணைக்கப் பட்டு கயிற்றின் முனையை மேடைக்கு வலது புறம் சற்றே ஒதுங்கி நின்று ஒருவர் பிடித்து தயாராய் நிற்கிறார். அந்த அண்டாவில் (அண்டா என்றும் சொல்ல முடியாது. சுற்றிலும் ஆட்டும்போது விழும் வகையில்) வழிய வழிய பூவிதழ்கள் நிரப்பி, தாலி கட்டும் நேரம் மற்றும் முக்கிய நேரங்களில் அதை அசைத்து அசைத்து பூவிதழ்கள் மணமக்கள் மேல் விழும்படி வைத்திருக்கிறார்கள். நல்ல ஏற்பாடு என்று தோன்றியது.

மேடையில் காணப் பட்ட இந்த கெண்டி வித்யாசமாய் தெரிந்தது. அகத்தியர் கை கெண்டி போல காணப் படும் இதை தமிழ்நாட்டுத் திருமணங்களில் கண்ணில் பட்டதில்லை! எனவே அது ஒரு ஸ்நேப்!

வித்யாசங்கள்:
சாப்பிடும் இடத்தில் இலையில் பல்வேறு புதிய பதார்த்தங்களுடன் ஒரு எலுமிச்சம் பழமும் வைத்திருந்தார்கள். அந்த ஊர் வழக்கமாம். வைலட் நிறத்தில் கூட ஒரு பச்சடி இருந்தது. ரசத்துக்கும் மோர் அல்லது தயிருககும் முக்கியத்துவம் கிடையாது போலும். முதலில் பருப்பு பரிமாறப் பட்டு சப்பிட்டான பின் சாம்பார். அது முடியும் போது பாயசம், அடுத்து என்ன என்று பார்த்தால் மீண்டும் பாயசம், சரி அடுத்து நிச்சயம் வேறு ஐட்டம் என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் மூன்றாம் வகைப் பாயசம்...("நாயர் வீடுகள்ல ஏழு வகைப் பாயசம் வைப்பார்கள் சார்!") சரி இனியாவது ரசம் வரும் என்று பார்த்தால் .....வந்தது... எல்லோரும் கையைக் குவித்து ரெடியாகக் காத்திருக்க கையில் ஒரு ஒரு கரண்டி ஊற்றி மறைய அதே போல மோரும்! பாயசம் போட்ட உடனேயே விருந்து நிறைவுக்கு வந்து விடுகிறதாம். அருகில் இருந்தவர் தகவல். சீரகம் போட்டுக் காய்ச்சிய செந்நிறக் குடி தண்ணீர். சிகப்பு அரிசி சாதம் , வெள்ளை அரிசி சாதம் இரண்டும் சாய்ஸ் தந்தார்கள் என்பது ஆறுதல்.

முதல் நாள் பெண் வீட்டில் வரவேற்பு என்று சொன்னார்கள். அழைத்த மாதிரி தெரியவில்லையே, இப்போது சொல்கிறார்களே என்று யோசித்தபடி போய்ப் பார்த்தால் மாப்பிள்ளையைக் காணோம். எங்கே என்று கேட்டால் அவர் வரமாட்டார் என்றார்கள். "இந்த ஊர் வழக்கம் சார், பொண்ணு வீட்டு ரிசப்ஷன்..மாப்பிள்ளை வரமாட்டார்.." நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை இல்லை என்பதைத் தவிர வித்யாசம் இல்லை. விருந்து, ஃபோட்டோ இத்யாதி இத்யாதி..

17 கருத்துகள்:

  1. புகைப்படங்கள் அருமை! உட்கார்ந்திருப்பவர்கள் பார்வை தடைபடாமலிருக்க உயரமென்று நினைக்கிறேன். நடுவில் இருக்கும் வட்டமேடை மேல் ஏறி இறங்குவது awkwardஆக இருக்கும் போலிருக்கிறதே? கெண்டி சமாசாரத்தைக் கொஞ்சம் விவரித்திருக்கலாம் - நம்ம ஊர் பஞ்சபாத்திரத்துக்கு substituteஆ?

    பதிலளிநீக்கு
  2. It is interesting to know about different customs, traditions and culture.

    பதிலளிநீக்கு
  3. புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில் கொடுத்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி நண்பா..

    பதிலளிநீக்கு
  4. புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில் கொடுத்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி நண்பா..

    பதிலளிநீக்கு
  5. நானும் போயிருக்கேன் ராம் ஆனால் எனக்கு ரெண்டு வகைப்பாயாசம்தான் போட்டாங்க சாதம் ரொம்ப வேகல ஆனா அவியல் தயிர்பச்சடி எல்லாமே அருமை

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்சி..இது போல் பலர் பாரம்பரியங்களை எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  7. ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு .கொஞ்சம் அழகான கேரளா பெண்களையும் சேர்ந்தாற்போல் படம் பிடித்து இருக்கலாம் .வேறொன்னும் இல்ல நாங்க அந்த நகை டிசைன்ஸ் எல்லாம் பார்த்திருப்போம்

    பதிலளிநீக்கு
  9. . ரொம்ப சூப்பர், மேடையில் உள்ள மலர், கலர் காம்பினேஷன் சூப்பர்

    பதிலளிநீக்கு
  10. படங்களும் பதிவும் அருமை. இனிப்பாய் விருந்து சாப்பிட்ட நிறைவு! உங்களுக்கு ரசமும் மோரும் பத்தவில்லையா:))? ஒவ்வொருவர் வழக்கங்கள் ஒவ்வொரு மாதிரி! கேரள அவியல் எப்போதும் அருமைதான்.

    பதிலளிநீக்கு
  11. புதுமை இது புதுமை ரொம்ப ரொம்ப பிரமாதம் சார். அடுத்து கன்னடம் தெலுங்கு என ஒரு ரவுண்ட் வருவது தானே.

    புதுகை ஜி விஆர்

    பதிலளிநீக்கு
  12. வட்ட மேடை, பூ அண்டா, கெண்டி என்று எல்லாமே புதுசு. நல்ல ரசனைக்காரர்கள் போல!! நிகழ்ச்சிகளையும் விவரித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி துரை..
    உயரத்தின் உபயோகம் அதுதான். கெண்டி..பஞ்சபாத்திர உபயோகமே அங்கு இல்லை. அது ஒரு வித்யாசத் திருமணம்!

    நன்றி சித்ரா.

    நன்றி திவ்யாஹரி. ஒரு முறை சொன்னா நம்ப மாட்டோமா..!

    நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.

    நன்றி வானம்பாடிகள்.

    நன்றி புலிகேசி..இது நேரில் பார்த்தது.. வித்தியாசமாய்ப் பார்த்தால் எழுதலாம்.

    நன்றி சைவகொத்துபரோட்டா.

    நன்றி பத்மா. உங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டோம். முயற்சிக்கிறோம்..!

    ரசனைக்கு நன்றி ஜலீலா.

    நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் எடுக்கும் படங்களை விடவா? படம் எடுக்கும்போது உங்கள் ஞாபகம் வந்தது என்றால் நம்புவீர்களா?

    வாங்க புதுகை ஜி.வி.ஆர்.,
    கிடைத்தால் எழுதுகிறோம்.

    நன்றி ஹுசைனம்மா, விவரித்திருக்கலாம்தான்...

    பதிலளிநீக்கு
  14. என்ன போட்டோ எடுத்து என்ன பிரயோசனம் - கேரளா மணப்பெண் / அவள் நண்பிகளை எடுக்க தெரியவில்லை - என்னத்தை எழுதி என்னத்தை சொல்ல ?

    அட போங்கப்பா

    பதிலளிநீக்கு
  15. ஆஹா சாய், இடுகையிட்டு இவ்வளவு நாள் கழித்து இது என்ன ஏக்கம்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!