வியாழன், 2 டிசம்பர், 2021

உலகம் பெரிது சாலைகள் சிறிது...

 ஆபீஸிலிருந்து வீடு திரும்ப, சிக்னலில் யு டர்ன் எடுக்கக் காத்திருந்த வேளையில், எதிர் திசையிலிருந்து சினிமாவில் வருவதுபோல வாகனங்களுக்கு மத்தியில் சிறு இடைவெளியில் திடீரென வளைந்து திரும்பியது ஒரு பைக். 

நல்ல வேகம்.  எங்களை புயலென விஷ் என கடந்து சென்றது.  தாண்டிச் செல்லும் வழியில் ஒரு ஆட்டோவையும் ஒரு ஸ்கூட்டி வாலாவையும் தடுமாற வைத்து சென்று மறைந்த பைக்கை, தாண்டிச் சென்றபின் ஓடிச்சென்று பார்த்து நின்றார் *வழியில் கேஸ் பிடிக்க நின்ற டிராஃபிக் போலீஸ்காரர்.

ஹெட்செட்டில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த என் ஆட்டோக்காரரும் பேசுவதை நிறுத்தி விட்டு அவனைப் பார்க்கும் வண்ணம் இருந்தது அந்த நிகழ்வு.

"சிசி டிவில பார்த்து பிடிச்சுடுவாங்க ஸார்...   இப்போ நான் உங்களை பிக்கப் செய்ய வரும்போது ஒரு விபத்து நடந்தது.  அதிலும் இதே மாதிரி ஒரு பைக் காரன்தான் காரணம்.  செம்...ம ஸ்பீட்ல ஃபோன் பேசிகிட்டே தாண்டிப்போனான்.  ஸ்கூட்டி ஒட்டிக்கிட்டிருந்த ஒரு பொண்ணு கன்ஃபியூஸ் ஆகி நேரா போய் பக்கத்துல போயிக்கிட்டிருந்த ஒரு பைக்கை இடிக்க, அந்தப் பொண்ணு மேல மோதாமல் இருக்க, பக்கத்திலோ பின்னாலோ வந்த இன்னொரு பைக் காரன் வண்டியை கன்னா பின்னான்னு திருப்ப, மொத்தமா ட்ராஃபிக்கே கன்ஃபியூஸ் ஆகி  ஏழெட்டு வண்டி ஒண்ணோட ஒண்ணு மோதி ஆக்சிடன்ட்.  ஒருத்தனுக்கு வலது கால் அப்படியே மொத்தமா எதிர்ப்பக்கம் திரும்பி, ஒரே ரத்தம்.  திருவனந்தபுரத்திலிருந்து ஒரு இன்டர்வியூவுக்கு சென்னை வந்தானாம்.  அந்தப் பொண்ணு மயக்கமாயிடுச்சு.  எங்க ஃபிராக்சர்னே தெரியல.  நாற்பது நிமிஷம் கழிச்சு ஒரு ஆம்புலன்ஸ் வந்து அந்தப் பொண்ணை அள்ளிக்கிட்டு போனாங்க...  ஒருமணி நேரம் கழிச்சு இன்னொரு ஆம்புலன்ஸ் வந்து மத்தவங்களை தூக்கிகிட்டு போனாங்க...  இத்தனைக்கும் காரணமான அந்த பைக் காரன் நிக்கவே இல்லை.. சீக்கிரம் அவனைக் கண்டு பிடிச்சுடுவாங்க...  இதோ போனவன்  மறுபடி அவன்தானோன்னு பார்த்தேன்"

நீளமாய் பீதியூட்டும் கதையைச் சொன்னார் ஆட்டோக்காரர்.  ஆனால் மறுநாள் எந்த செய்தித்தாளிலும் இந்த விபத்து பற்றிய செய்தியே நான் பார்க்கவில்லை.

இதே ஆட்டோவில் நாங்கள் கடந்தவாரம் ஒரு விபத்தைச் சந்தித்திருந்தோம்.  என் இரண்டாவது ஆட்டோ விபத்து.  இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அளவு பயமுறுத்தும் அளவு இல்லை.  இதே மாதிரி ஆபீஸ் விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பயங்கர டிராஃபிக்.  அன்று ஆட்டோக்காரர் ஏனோ சற்று டென்ஷனில் இருந்தார்.  முன்னால் செல்பவரை முறைத்தபடி, பின்னால் ஹாரன் அடிப்பவரை கடுப்படித்தபடி இருந்தவருக்கு தொடர்ந்து ஃபோன்  ஒன்று வந்த வண்ணம் இருக்க,  அதை அட்டென்ட் செய்யாமல் கட் செய்தபடியே வந்தார்.  எத்தனை முறை கட் செய்தாரோ அத்தனை முறையும் மறுபடி அடித்தார்கள் எதிர்முனைக்காரர்கள்!  

ஒருமுறை அட்டென்ட் செய்து "வண்டி ஓட்டச் சொல்றியா, உன்கூட பேசச் சொல்றியா...  ஹெவி டிராஃபிக்" என்று  சள்ளென்று விழுந்து விட்டு ஃபோனைக் கட் செய்தார்.

இந்நிலையில் போக்குவரத்திலிருந்து விலகி வீடு செல்லும் சாலையில் செல்கையில், எதிரே நாங்கள் போகும் திசையிலேயே, ஆனால் ராங்சைடில் வலது பக்கமாக  டபுள்ஸில் சென்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனர் முன்னறிவிப்பின்றி சட்டன இடதுபுறம் திருப்ப, வேகமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் ஆட்டோவுக்கு சுதாரிக்கக் கூட நேரமில்லை.  "டமார்"

அப்புறம் அரை மணி நேரம் பஞ்சாயத்து.  அவர்கள் பார்க்கும்போது என் ஆட்டோக்காரர் (அப்போதுதான் ஒரு நொடி) ஃபோனைப் பார்த்திருந்திருக்கிறார்.

ஏனோ எங்கள் ஆட்டோக்காரர் தணிந்துதான் போனார்.\அவர் கொஞ்சம்..  கொஞ்சம் என்ன, நிறைய விஷயங்களில் ரொம்பவே நியாயவான்.

எங்கள் இருவருக்கும், அல்லது நால்வருக்கும் ஒன்றும் அடி இல்லை.  ஆட்டோக்காரருக்கு எதிர்பார்ட்டி வண்டியை சரிசெய்யும் செலவு ஆட்டோக்காரர் தலையில் விழுந்தது.  இவர் ஆட்டோவின் ஒரு சிறு நசுங்காய் அவர்கள் சரி செய்வதாய் வாக்களித்தனர்.  நாம் சரியாய்ப் போனாலும் முன்னால் பின்னால் அருகில் வருபவர்கள் ஒழுங்காய் வரவேண்டுமே...

சாலையில் செல்லும்போது சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்தால் என் ஆட்டோக்காரர் சட்டெனப் பதறி, பின்னால் பார்த்து ஆம்புலன்ஸ் எந்தப் பக்கம் வருகிறது  என்று கணித்து, உடனே அது வரும் திசைக்கு எதிர்திசையில் ஓரமாக பாதிப்பில்லாமல் வண்டியைக் கொண்டு சென்று பம்மி விடுவார்.  நியாய உணர்வு!   அந்த நியாய உணர்வை சிக்னலைக் கடக்கும்போது காட்டமாட்டார்.  வண்டி எதுவும் க்ராஸ் செய்ய இல்லையென்றால் சவாரி விட்டு விடுவார்!  

ஆம்புலன்ஸ் தாண்டிச் செல்கையில் சில வாகன ஓட்டிகள் என்ன செய்வார்கள் தெரியுமா...  தங்கள் வண்டியை வேகம் கூட்டி அந்த ஆம்புலன்ஸ் பின்னாலேயே விரைவார்கள்.  எளிதாக வழி கிடைக்குமே...  

*சிக்னல் கடப்பது பற்றிச் சொன்னேன் இல்லையா...  மேலேயும் நட்சத்திரக் குறியிட்டிருக்கிறேன்.  சென்னையில் நான் சென்று வரும் வழியில் இரண்டு மூன்று இடங்களில் சிக்னல் தாண்டி ஓரிடத்தில் போக்குவரத்துக் காவலர்கள் சற்றே மறைவாகக் காத்திருப்பார்கள்.  சிவப்பு விளக்கு விழுந்தும் சட்டென்று தாண்டிச் சென்று விடலாம் என்று தாண்டி வரும் இருசக்கர, மூன்றுசக்கர , நான்கு சக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்து கேஸ் எழுதுவார்கள்.  நிறைய பேர் இப்படி மாட்டுவார்கள். இது நான் தினசரி பார்க்கும் காட்சி.

சென்ற வாரம் இப்படித்தான்..  சிக்னல் விழுந்ததும் கிளம்ப யத்தனிக்கையில் எதிரே சற்று முன்னரே சென்று போ. காவலரால் ஒரு கார் 'நிறுத்தப் பட்டிருந்தது'.  நல்ல விலையுயர்ந்த கார்.  நிறுத்திய காவல்காரருக்கு, இன்று நல்ல வேட்டைதான் என்று தோன்றி இருக்கும்!  அந்தக் கார் சாலையின் வலது பக்கமாய் இருந்ததால் அதை கேஸ் எழுதுமிடத்துக்கு வரவழைக்க இடதுபுறமாய் இழுக்க வேண்டும்.  ஒரு காவலர் எங்களையும் மற்ற வண்டிகளையும் ஒரு கையால் முன்னேறி வரவிடாமல் தடுத்து நிறுத்தி, இன்னொரு கையால் அந்தக் காரை தங்கள் பக்கம் வர, முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு  சைகை காட்ட, இன்னொரு காவல்காரர் தானே அந்தக் காரின் அருகே கோபமாகச் சென்றார்.  ஏனென்றால் அந்தக் கார் நின்றிருந்தது.  ஆனால் திருப்பிக்கொண்டு வரமுயலவில்லை.

காத்திருந்த காவல்காரருக்கு தங்களை மதிக்காத அந்தக் கார்காரர் மீது கோபம் உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க, அருகே சென்ற காவல்காரர் பேயைக்கண்டது போல ஓடி வந்தார்.  இவரிடம் ஏதோ காதைக் கடித்தார்.  இவர் முகமும் இ தி கு ஆக மாறியது.  தோல்வி ப்ளஸ் அசட்டுப் புன்னகையுடன் கைகாட்ட, அந்தக் கார் கிளம்பி தன் வழியே சென்றது.

அந்தக் காரில் தங்க நிறத்தில் பார் அஸோஸியேஷன் என்று எழுதி அதன் எம்ப்ளத்துடன் ஒரு படம் ஒட்டப்பட்டிருந்தது.

சுண்டல் கலெக்ஷனின் போது மறுபடி ஒரு சம்பவம்.  பைபாஸில் எங்கள் கூடவே  படுவேகமாக வந்தது ஒரு ஆட்டோ.  தடங்கல் இல்லாமல் வேகமாகச் செல்லக்கூடிய இடம்.  இரவு நேரம்.  எங்கள் ஆட்டோவும், அதுவும் மாறி மாறி போட்டியில் இருக்க, ஒரு கட்டத்தில் அது முன்னேறிச் செல்ல, எங்கள் ஆட்டோ அதைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது முன்னால் ஆட்டோ சட்டென கிரீச்சிட்டு பிரேக் அடிக்க, எங்கள் ஆட்டோவும் தடுமாறி பிரேக் அடித்து சற்றே வலதுபுறத்தில் அதைத்தவிர்த்து... 

பிழைத்தோம்.  எங்கள் ஆட்டோக்காரர் அந்த ஆட்டோக்காரனை "பைத்தியக்காரா..." என்று பெரிய்ய எழுத்துகளில் திட்டி விட்டுத் தாண்டி வந்தார்!

=========================================================================================================

ஆதலினால்... - இது வேற மாதிரி!

சுண்டல் முறுக்கு விற்க முடியாது
மிளகாய் பஜ்ஜியும் விலைபோகாது
பிட்சா கடைகள் காற்றாடும்
பைக்குகளும் அனலடிக்கும் 
பார்க்குகளும் பசுமையிழக்கும்
ஐஸ்க்ரீம் விற்பனை உருகிவிடும்
கதைஞர்களும் கவிஞர்களும்
எழுதுபொருள் இன்றி
சோர்ந்து போவார்கள்.
திரைப்படங்கள் வழக்கொழிந்துவிடும்
அழகுநிலையங்கள் அருகிவிடும்
கடற்கரையில் ஆளரவம் இருக்காது
இத்தனை பிழைப்பும் 
கெட்டே போகும் காதலில்லாவிட்டால்

ஆதலினால் காதல் செய்வீர்

===============================================================================================================

அதென்ன பிறவா ப்ரம்மா?!!  அது ப்ரோவபாரமா!

அந்தப் பக்கத்தின் இணைப்பு இதோ....

.......  பாடல் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டோம். இளையராஜா இசையில் ‘பிறவா பிரம்மா…’ என்று தொடங்கும் கீர்த்தனைப் பாடல். அதை ஜேசுதாஸ் அருமையாக பாடியிருந்தார். படத்தில் சிவாஜி குடும்பத்துடன் பாடுவதுபோல காட்சி. அந்த ஆடியோ டேப்பையும், பாடலையும் எடுத்துக்கொண்டு அண் ணன் சிவாஜியைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன். ‘

‘ஜேசுதாஸின் பாடலில் ஆலாபனை, சங்கதிகள் எல்லாம் வித்தி யாசமாக வந்திருக்கு. நீங்க ஒருமுறை கேட்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கேன்?’’ என்றேன். பலமாக சிரித்தவர், ‘‘முத்து… லிப் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் சரியா வரணும்னு நான் ஒத்திகை பார்க்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கியா? நீ எடிட்டரா இருந்து இயக்குநர் ஆனவனாச்சே. நாளைக்கு ஷூட்டிங்ல நீ சரியா பார்த்துக்க’’ என்று கூறினார். மறுநாள் ஷூட்டிங்கில், ஒரு மனிதன் உண்மையாக பாடினால் அந்த பாவனைக்குத் தகுந்த மாதிரி எப்படி அவருடைய நரம்புகள் துடிக்குமோ அப்படி படப்பிடிப்பில் அண்ணன் சிவாஜிகணேசனின் லிப் மூவ்மெண்ட்ஸ் இருந்தது....


அந்தப் பாட்டை ஜேசுதாஸ் பாடினாரா… சிவாஜிகணேசன் பாடி னாரா என்ற சந்தேகமே வரும். பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், ‘‘என்ன முத்து சரியா பாடுறேனா?’’ என்றார். ‘‘நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியா இருக்குண்ணே’’ என்று கூறி மகிழ்ந்தேன். அப்போது சிவாஜி அவர்கள் சின்ன வயதில் நாடகத்தில் நடிக்கும்போது வசனம், பாட்டு, நடனம் இதையெல்லாம் சரியாக செய்யவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார்களாம். ‘‘அந்த நாடகப் பயிற்சிதான் எங்களை வாழ வைக்கிறது’’ என்று நினைவுகூர்ந்தார். நாடகப் பயிற்சி பெற்று சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் அனைவரும் அந்த நாளில் சினிமாவிலும் உச்சியைத் தொட்டார்கள்....

============================================================================================================

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் சிறு இடைவெளிதான்!  எங்கேயோ ஒரு புள்ளியில் இரண்டும் இணையும்போது எதோ ஒன்று மதிப்பிழந்து போகும்!  ஸ்டீபன் ஹாகிங் என்ன சொல்லி இருக்கார் பாருங்க...!



===============================================================================================


மதன்...  மதன்..   வீட்டு ப்ரோக்கர் புண்ணியகோடி!


தொப்பை விழாமலிருக்க... செவ்வாய் கிரகவாசிகள்...


நான் மலையாள நாயர் டீக்கடையை எதிர்பார்த்தேன்!


மதன் ஒரு தீர்க்கதரிசி என்று இரண்டாவது முறை நிரூபித்திருக்கும் ஜோக்!  முன்னது என்ன என்று நினைவிருக்கிறதா?!


கோட்டை மாதிரி வீடு...  எடுக்காம சறுக்கிடாதீங்க....!


டெமோ வேற காட்டுகிறார் பு.கோ!


174 கருத்துகள்:

  1. வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மைக்கு காரணம் யார்? சிங்கப்பூர் போன்று தனியார் வாகனங்களை மட்டுப்படுத்தி பொது வாகனங்களை உபயோகித்தால் பெட்ரோல் செலவும் குறையும், விபத்தும் குறையும் மாசு குறையும். 

    2015இல் வெளியிட்ட ஹாக்கிங் பற்றிய பதிவை தற்போது மீண்டும் வெளியிட காரணம்? 

    காதல் கவிதை ஈர்க்கவில்லை. 

    மதனும் முன்னோடி சுஜாதாவும் தான். ஆனாலும் செவ்வாய்கிரக வாசிகள் சனிகிரகத்து பெல்ட்டில் ஓடுவது கொஞ்சம் முரணாக தெரிகிறது. 
    படகு ஜோக்: 

     ஒரு ராகவா முனிவர் சென்னையில் தெருக்களில் படகு செல்லும் என்று கூறியபோது  வந்தது என்று நினைக்கிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதுமான தண்டனை இல்லாததுதான் வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மைக்கு காரணம்.  மாட்டினால் நூறு ரூபாய் அழுத்தினால் போதும், தப்பி விடலாம் என்கிற மனோபாவம்.  ஒரு வீட்டுக்கு ஒன்றிரண்டு கார் , இரண்டு பைக் என்று இருந்து ஆலும்மொடு வண்டியில் புறப்படுவது வாடிக்கையாகி விட்டது.  அவர்களை சொல்லியும் குற்றமில்லை.  ஒவ்வொரு இடத்தில் வேலை.  எல்லா இடங்களுக்கும் நினைத்த நிறத்துக்கு பொதுப்போக்குவரத்து சரிவராது!

      ஹாக்கிங் பதிவு வெளியிட்டதற்கு பெரிய காரணம் எதுவுமில்லை.

      காதல் கவிதை ஈர்க்கவில்லையா, சரி..  

      செவாய்க் கிரக வாசிகள் நிஜத்தில் (இருந்தால்) அப்படி ஒரு சுற்றில் ஓடமுடியுமா என்ன?  சும்மா ஜாலியான கற்பனைதான்!

      ராகவா முனிவரா, யாகவா முனிவரா?!! 

      சென்னையை இன்னும் சில வருடங்களில் கடல் கொள்ளும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  கிண்டி கத்திப்பாரா வரை கடல் வந்து விடுமாம்!

      நீக்கு
    2. //ராகவா முனிவரா, யாகவா முனிவரா?!! // 
      ஹா ஹா 

      நீக்கு
    3. //
      சென்னையை இன்னும் சில வருடங்களில் கடல் கொள்ளும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  கிண்டி கத்திப்பாரா வரை கடல் வந்து விடுமாம்!//

      அப்போது சென்னையும் ஒரு கபாடபுரம் ஆகிவிடும்? 

      நீக்கு
    4. இதைச் சொல்லியே சில வருடங்கள் ஆகின்றன!

      நீக்கு
    5. அதுக்கு முன்னால ஓஎம்ஆரிலிருக்கும் வீட்டை விற்றுடணும். என் கவலை எனக்கு

      நீக்கு
    6. சென்னை ஆதம்பாக்கத்தில் இது மாதிரியே ஒரு வீட்டின் மாடியில் படகு போல் கட்டி இருப்பார்கள். அது தண்ணீர்த் தொட்டி என நினைக்கிறேன். அந்த வீட்டை ஆட்டோக்காரர்களிடம் அடையாளம் சொல்லித்தான் பக்கத்தில் இருந்த எங்க உறவினர் வீட்டுக்குப் போவோம். போட் ஹவுஸ் என்றே பெயர். நான் சொல்வது சுமார் 30 வருடங்கள் முன்னர்.

      நீக்கு
    7. ஓ எம் ஆர் இல் இப்போது வீட்டின் விலை குறைந்திருக்கும்.  அங்கெல்லாம் மழைத்தண்ணீர் தேங்கி வெள்ளம்!

      நீக்கு
    8. //சென்னை ஆதம்பாக்கத்தில் இது மாதிரியே ஒரு வீட்டின் மாடியில் படகு போல் கட்டி இருப்பார்கள்.//

      நான் கூட பார்த்த ஞாபகம் இருக்கிறதோ என்று யோசிக்க நினைக்கிறேன்!

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் எந்நாளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம். நீங்களும் உங்கள் கண்களும் நலம்தானே?

      நீக்கு
  3. சாலைத் தொந்தரவுகள் அதிர வைக்கின்றன. பத்திரமாக இருங்கள். ஆதலினால் காதல் செய்வீர் அருமை. மெரினாவைக் காணோம் என்று வாட்ஸ்ஆப்பில் வந்தது. மதன் பார்வை மிக அற்புதம் தீர்ககதரிசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பத்திரமாக இருங்கள்//

      என் கையில் என்ன இருக்கிறது?  ன்னை வைத்து ஓட்டும் ஆட்டோக்காரர், ஊபர்க்காரர் பத்திரமாக ஓட வேண்டும்!!  கடவுள் காப்பாற்ற வேண்டும்!  வாட்ஸாப்பில் வந்த 'மெரீனாவைக் காணோம்' நானும் பார்த்தேன்.  கடல் கொஞ்ச தூரம் முன்னேறி உள்ளே வந்து விட்டது போல!

      நீக்கு
  4. பிறவா பிரம்மா கேட்டுப் பார்ககிறேன். அவருக்கென்னப்பா. நடித்து விட்டுப் போய் விட்டார்! அருமையான செய்திகள் மா. வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   அது ப்ரோவபாரமா அம்மா!

      நீக்கு
    2. ஹி ஹி - அது ப்ரோவ பாரமா - பாடல்தான்! https://youtu.be/qOswh4THW6M

      நீக்கு
    3. ஓ. நன்றி மா. அங்கு சென்று மிக ரசித்தேன்...

      நீக்கு
    4. ஆஹா...   ஹிந்து பத்திரிகையின் அந்தப் பக்கத்துக்கான இணைப்பைத்தர வேண்டும் என்று நினைத்து தராமல் விட்டிருக்கிறேன்!

      நீக்கு
    5. ஹிஹிஹி, நான் காலம்பரப் பார்த்தப்போவே இல்லையா? சரி நாம் தான் அவசரத்தில் இருக்கோம்னு நினைச்சு இப்போ வந்து இங்கே தேடினேன், தேடினேன்! கடைசிவரி வரை ஒன்று விடாமல் மறுபடிப் பார்த்தேன். அ.வ.சி. கடைசிலே பார்த்தா (ஆரம்பத்தில் இருந்தே) நீங்க இணைப்பையே இணைக்கவில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. இதனால் சகல நண்பர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அந்தப் பக்கத்தின் இணைப்பை ஒரு வழியாக இப்போது இணைத்து விட்டேன்....   டும் டும் டும் டும்....டும்...

      நீக்கு
    7. சரி, சரி, சாயங்காலம் சப்பாத்தி பண்ணும்போது சப்தம் கேட்டது. அப்போ வரமுடியலை. இப்போ வந்து பார்த்தால், இன்னமும் டும், டும், டும்! ஹிஹிஹி, பக்கத்துக் கல்யாணச் சத்திரத்தில் இருந்து! :)))))))

      நீக்கு
    8. கேட்டது சரி, இணைப்புக்குப் போய்ப் பார்த்தீர்களோ?

      சப்பாத்திக்கு ஸைட் டிஷ் என்ன?

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. சாலை போக்குவரத்தில் ஒழுங்கை எல்லாம் இனிமேல் எதிர்பார்க்க முடியாது.. சாலையோரத்தில் நடந்து செல்வது கூட பாதுகாப்பு அற்றதாகி விட்டது..

    சிங்காரச் சென்னையின் விபத்துகள் படித்த மூடர்களால் ஏற்படுத்தப் படுவது...

    இன்னும் சொல்லலாம்...
    ஊர்வம்பு நமக்கெதற்கு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! (சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு - - -கடைசியில் !! )

      நீக்கு
    2. கௌதம் சார் அதானிக்கு அண்ணனா இருப்பார் போல! எப்போதும் "அதானே" என்று பதில் எழுதுவார்.  

      நீக்கு
    3. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில் சாலைப்போக்குவரத்து எப்போது ஒழுங்காய் இருந்திருக்கிறது?  நேற்று ஒரு சம்பவம்.  நேற்று மாலை அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன் - ஆட்டோவில்தான்!  பின்னாலிருந்து நாராசமாய் அவ்வப்போது விடாமல் ஹார்ன் சத்தம்.  பார்த்தால் ஒரு கல்லூரி பஸ்.  காலி பஸ்ஸில் பாட்டு கேட்டுக்கொண்டே ஹார்ன் அடித்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்த டிரைவரை, எங்கள் ஆட்டோ டிரைவர் மட்டுமல்ல, இன்னும் சிலரும் அவனைத் திட்டி விட்டுச் சென்றனர்.

      நீக்கு
  7. பிறவா பிரம்மா.... ஒருவேளை தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவரோ இந்த முத்துராமன்? நல்லவேளை சகோதர்ரைப் பாரும்மா (ப்ரோ-ப்ரதர்) என்று மொழிபெயர்க்காமல் விட்டாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அந்த கீர்த்தனை பற்றி அறியாதவரோ என்னவோ!

      நீக்கு
    2. முத்துராமனுக்கு எஸ்.பி. தானே? கர்நாடக சங்கீத அறிவு இருந்திருக்குமா? சந்தேகமே!

      நீக்கு
    3. //கர்நாடக சங்கீத அறிவு இருந்திருக்குமா// - அது இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் என்ன பாட்டு என்பது கூடத் தெரியாத இயக்குநர்... ஹா ஹா. காலத்தின் கோலம்

      நீக்கு
    4. கட்டுரையை எழுதும்போது என்ன ஞாபகமோ...   அல்லது அவர் சொல்லச் சொல்ல கேட்டு எழுதிய நிருபரின் தவறோ...

      நீக்கு
  8. கவரிமான் படத்தில் அந்தப் பாடல் அப்போதே இல்லையே!..

    மேலும் வரலக்ஷ்மி அம்மா பாடிய சொல்ல நீ வல்லாயோ!.. என்ற பாடலும் இல்லை என்று நினைக்கின்றேன்..

    திரிசூலம் படத்துக்கு அடுத்ததாக வந்த படம் கவரிமான்.. இளையராஜா இசை.. Tms புறக்கணிக்கப்பட்டிருந்தார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அந்தப் பாடலை படத்தில் பார்த்திருக்கிறேனே...   தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் பார்த்தேன் என்று ஞாபகம்.

      நீக்கு
  9. சென்னைப் போக்குவரத்தை நினைத்தால் பயமும்/கவலையும் தான் வருகிறது. கொஞ்சமும் ஒழுங்கோ/கட்டுப்பாடோ இல்லாத பயணிகள்! பண வசூல் ஒன்றையே நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள். விபத்துக்குப் பஞ்சமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் போக்குவரத்துக்கு காவலர்கள் சிலரில் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள்.  அதில் ஓரிருவர் எனக்கு நண்பர்களும் கூட.  முடிந்தால் போகும் வழியில் கண்ணில் சிக்கும் அவர்களில் ஒருவரை நைஸாக போட்டோ எடுத்துக் போடுகிறேன்!!

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம் கொடுங்க கொடுங்க. ஆனால் அதனால் பிரச்னை வராமல் பார்த்துக்கோங்க.

      நீக்கு
    3. எப்போது கண்ணில் படுகிறாரோ அப்போதுதான் முடியும். முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  10. கவரிமான் படம் பார்த்தேனோ? தொலைக்காட்சி தயவில்? இந்தப் பாடல் கேட்டதாக நினைவில் வரலை. ஆனாலும் "ப்ரோவ பாரமா" வைப் பிறவா பிரம்மா என ஆக்கியதற்குக் கண்டனம் யாரும் தெரிவிக்கவில்லையா? இருந்தாலும் நம் தமிழ் மக்களுக்கு உச்சரிப்பைப் பற்றிக் கவலையே இல்லை. அவங்களுக்கு வாயில் என்ன வருதோ அதான் சரி! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு டியூன் வாயில் வந்தால் போதும். வரிகளுக்கென்ன!

      நீக்கு
    2. //நம் தமிழ் மக்களுக்கு உச்சரிப்பைப் பற்றிக் கவலையே இல்லை// ஜேசுதாஸ் சரியாகத்தான் பாடியிருக்கிறார். மீண்டும் ஒரு முறை கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டேன். எஸ்.பி.எம்.தவறாக சொல்லியிருக்கலாம்.

      நீக்கு
    3. யேசுதாஸ் சரியாகத்தான் பாடி இருக்கிறார்.  அதிலும் அது கீர்த்தனை வேறு.  எப்படி தவறாகப் பாடுவார்?  எஸ் பி எம் தவறாகச் சொல்லி இருந்ததற்கு யாரும் ஆட்சேபிக்கவில்லையா என்று கீதா அக்கா கேட்டிருப்பதாய் நினைத்தேன்.

      நீக்கு
    4. @ஸ்ரீராம், அதே, அதே, சபாபதே! எஸ்பிஎம் தப்பாய்ச் சொன்னதைத் தான் கேட்டிருக்கேன்.

      நீக்கு
  11. மதன் நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாமும் பார்த்த நினைவு இருக்கு. ஸ்டீஃபன் ஹாகிங்கின் இந்தக் கருத்தைப்படிச்ச மாதிரியும் இருக்கு. ஆனாலும் தொழில் நுட்பம் வளர்ந்திருப்பதால் இப்போதெல்லாம் ஏழைகள் விகிதாசாரம் குறைந்து தான் இருக்குனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.  தொழில் நுட்பம் வளர்வதற்கும் ஏழைகள் விகிதாச்சாரம் குறைவதற்கும் என்ன தொடர்பு?  அபுரி.

      நீக்கு
    2. ஏன் புரியலை ஶ்ரீராம்? தொழில் நுட்பம் வளர்ந்து இப்போது அநேகமாகக் குப்பத்து மக்கள் கூட ஸ்மார்ட் ஃபோன், அன்ட்ராய்ட் போன்றவை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்திருந்தால் இவை எல்லாம் வாங்க முடியுமா? ஒரு சித்தாளாக வேலை பார்க்கும் பெண்ணிடம் கூட ஸ்மார்ட் ஃபோனைப் பார்க்க முடிகிறது. அவளால் வாட்சப்பைப் பயன்படுத்த வருகிறது. சாப்பாட்டுக்கே இல்லாத ஏழைகள் தனி! பொதுவான ஏழைகள் விகிதாசாரம் தமிழ்நாட்டில் குறைவு தான். தினசரிகளில் கூட ஏழைகள் விகிதாசாரம் குறைவாக இருப்பதான கணக்கெடுப்பில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பிடிச்சிருக்குனு நினைக்கிறேன். கேரளா, பஞ்சாப் முறையே முதல் இரு இடங்கள், தமிழகம் மூன்றாவது இடம்.

      நீக்கு
    3. ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் முறையே உ.பி., பிஹார்., ஜார்கண்ட் ஆகியவை.

      நீக்கு
    4. கேபிள் கனெக்‌ஷன் வைத்திருக்கும் எல்லோரும் பணக்காரர்கள்தான். அவர்களுக்கு ரேஷன் சலுகை அரிசி, பணம் கொடுக்கக்கூடாது என்பது என் கருத்து.

      நீக்கு
    5. இன்னும் என்னென்னவோ விதிமுறைகள் சொல்லலாம்!

      நீக்கு
  12. கோயில்களும் அது சார்ந்த திருவிழாக்களினாலும் எத்தனை மக்களின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கு என்பதைப் போல நீங்க காதலினால் பிழைப்பவர்களைப் பற்றிக் கவிதை பாடி இருக்கீங்க! கவிதை நன்று.

    @ஶ்ரீராம், ஆட்டோவில் பயணிப்பது குறித்து எனக்கும் கொஞ்சம் கவலையாகவே இருக்கு. கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு கவிதையைப் படித்ததும் அந்த பாணியில் இப்படி எழுத தோன்றியது!  கடைசி வரி மட்டும் பாரதி வரி!

      ஆட்டோவில் போவது - வேறு வழியில்லை கீதா அக்கா.  அது இல்லாவிட்டால் மிகவும் சிரமப் படுவேன்.

      நீக்கு
    2. உங்களிடம் வண்டி இல்லையா?

      நீக்கு
    3. பற்பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் வைத்திருந்தேன்.  ஒட்டி இருக்கிறேன்.  மதுரையிலிருந்து வத்ராப்புக்கு திமுக ஆட்சி கலைக்கபப்ட்ட சமயம் வண்டியிலேயே சென்றிருக்கிறேன்.  சென்னை வந்து இல்லை.  பழக்கம் விட்டுப் போச்!

      நீக்கு
  13. //நாம் சரியாய்ப் போனாலும் முன்னால் பின்னால் அருகில் வருபவர்கள் ஒழுங்காய் வரவேண்டுமே//

    இதுதான் நமது நாட்டில் உள்ள பிரச்சனை ஜி.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். சாலையில் மட்டுமா டிராஃபிக்? எ.பி.யிலும்தான்.

    பதிலளிநீக்கு
  15. இப்போது தான் குழாயடியில் கவரிமான் படத்தின் படலைக் கேட்டு விட்டு வருகின்றேன்.. சொல்ல நீ வல்லாயோ கிளியே!.. பாடலும் இருக்கின்றது.. என்ன தான் சிறப்பாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடாத படிக்குக் காட்சியமைப்பு..

    ஆனாலும் சொல்ல நீ வல்லாயோ என்ற பாடலை நீக்கியதன் காரணம் புரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் நீக்கி இருந்தார்களா?  எனக்கு என்னவோ பார்த்த ஞாபகமாகவே இருக்கிறதே...

      நீக்கு
  16. கவரிமான் படத்தின் தோல்விக்குக் காரணம் -

    அதெப்படி கதாநாயகி (கதைப்படி) காமக் களவாணியா இருக்கலாம்?.. - என்ற ரசிகர்களின் கோபம் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  ஆனால் அபப்டி எல்லாம் யோசிப்பார்களா என்ன தமிழ் ரசிகர்கள்?

      நீக்கு
    2. கவரிமான் கதைப்படி கதாநாயகி ஸ்ரீ தேவிதான். பிரமீளா கதாநாயகனின் மனைவி, ஒரு துணை கதா பாத்திரம்.

      நீக்கு
    3. சினிமா பாஷையின்படி "கௌரவ" வேடம்!

      நீக்கு
  17. ஸ்ரீராம் நீங்க சொல்லியிருப்பதுபோல் நம்மூரில் நாம் ஓட்டுவதில் கவனம் என்பதோடு பின்னாடி முன்னாடி சைட்ல வரவங்களையும் கவனிக்கனும். அவர்க்ளால் ஏற்படும் விபத்து நிறைய.

    நம்மூர் சாலை விதிகள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்ய.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் விதிகளை மக்கள் ஒழுங்காய்க் கடைப்பிடித்தாலே போதும் கீதா...  வாங்க...

      நீக்கு
  18. உங்க ஆட்டோக்காரரை கவனமாக ஓட்டச் சொல்லுங்க அவர் ஓட்டினாலும் லகான் உங்கள் கையில் இருக்கட்டும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற... பாதி எல்லாம் வராமல் அம்போ என்று விட்டு விடுகிறார். ஊபர் போட்டுக்கொண்டு (இப்போதெல்லாம் அவர்கள் சரி என்று வருவதே இல்லை தெரியுமோ?) ஓட வேண்டி இருக்கிறது.

      நீக்கு
  19. ஆட்டோக்காரரை மொபைலை சைலன்டில் போடச் சொல்லுங்க ஓட்டும் போது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊ..ஹூம்...   அவர் ஒரு பிஸி மேன்!  மேலும் ஓலா, ஊபர் சவாரி அமைந்தால் மொபைலில் பேச வேண்டுமே...

      நீக்கு
  20. மறைந்திருந்து வசூல் செய்யும் காவலர்கள் எங்கும் உள்ளனர்...

    அத்தனை பிழைப்பும் கெட்டு விட்டாலும் காதல் உருவாகும் - அது தான் காதல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போக்குவரத்து விதிகளை அப்படி...   அப்படி பாதுகாக்கிறார்களாம்!!!!!

      நீக்கு
  21. ஆதலினால் காதல் செய்வீர் //

    ஹாஹாஹா சிரித்துவிட்டேன். நல்லாருக்கு. வித்தியாசமாதான் எழுதியிருக்கீங்க. கொஞ்சம் நகைச்சுவை, கேலி இழையோட!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஆதலினால் காதல் செய்வீரில் பலரும் காதல் செய்வதால் இத்தனை பேருக்கு நஷ்டம்!

    அது சரி கவிஞரும் எழுத்தாளர்களும் கற்பனையில்தானே எழுதறாங்க இல்லையோ?!! அது எப்படினாலும் வந்துவிடுமே!!!!!! இவங்க கற்பனையில் எழுதறப்ப திரைப்படங்களும் வந்துவிடாதோ!!!

    கடல் கூட ச்சே என்னப்பா இது ஒரு ஜோடி கூடக் காணக் கிடைக்கலைனு அலைகளை ரொம்ப மெதுவா கரைக்குத் தள்ளுமோ?! உற்சாகம் இழந்து!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் காதல் செய்வதால்//

      தப்பாகிடுச்சு ஸ்ரீராம். காதல் செய்யலைனா....என்று அடித்திருக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. கொரோனா லாக் டவுன் நேரத்தில் இது பொருத்தமாய் இருந்திருக்குமோ!

      நீக்கு
    3. நானும் அந்த வகையில்தான் நினைத்தேன் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  23. அதென்ன பிறவா ப்ரம்மா?!! அது ப்ரோவபாரமா!//

    அட! நல்லாருக்கே.

    எஸ் பி முத்துராமன் சொன்ன தகவல் சுவாரசியம். சிவாஜியின் லிப் சிங்க் நன்றாகப் பொருந்தும். அது போல பல காட்சிகளில் உடல் மொழியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக் நினைவூட்டலில் இப்போதுதான் இதே மாதிரி தி மோ பற்றி படித்தேன்!

      நீக்கு
    2. இஃகி,இஃகி,இஃகி, தி.மோ? :))))) சரிதான்! ரொம்பவே செயற்கையான காட்சிகள். :( கதையின் ஜீவன் எங்கே?

      நீக்கு
  24. ஹாகிங்கின், "அறிவியலின் வளர்ச்சி அழிவை நோக்கி'' என்பது சரியே. அதீதமான அறிவியல் வளர்ச்சி ஆபத்தைதான் விளைவிக்கும்.

    தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றால் வேலயில்லாதவர்கள் ஏன் அதிகரித்துள்ளார்கள்? காரணம் பலரும் தங்களை வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்திக் கொள்ளாதது. இது தொழில்நுட்பம் படித்தவர்களிலிருந்து சிறிய வேலை செய்பவர்கள் வரை பொருந்தும்.

    தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் வேலை கிடைக்கவில்லை என்று புலம்பி அரசின் மீதும் சமூகத்தின் மீதும் பழியைப் போட்டு வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் தாம்
      வாசிப்பவரை யோசிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. @தி/கீதா! அறிவை வளர்த்துக் கொண்டால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகம் ஆகிவிடுமே! அதற்கெல்லாம் நம் தலைவர்கள் விடுவார்களா? அதனால் தானே தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளவே முடியாதபடிக்கு எல்லோரும் பாஸ்! முக்கியமாய் மருத்துவப் படிப்புக்குத் தகுதியும், தரமும் வேண்டும் என நினைக்காமல் கண்ணை மூடிக் கொண்டு "நீட்" தேர்வை எதிர்க்கிறார்களே!

      நீக்கு
    3. நாம்தான் ஏதோ முன்னேறி இருப்பது போலவும், முன்னோர்கள் எல்லாம் இந்தத் தொழில் நுட்ப அறிவில் பின் தங்கி இருந்தார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.  நிறைய விஷயங்களில் அவர்கள் கையாண்ட முறைகளை நாம் மறந்து விட்டோம்.  ராவணன் ஏரோபிளேனில் வந்துதான் சீதையைக் கடத்திச் சென்றிருக்கிறான்!

      நீக்கு
    4. நான் முன்னோர்களை இங்கே இழுக்கவே இல்லையே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உண்மையில் அந்தக்காலத்தில் கட்டி இருக்கும் ஒரு கட்டிடம்/கோயில் மாதிரி இப்போ இவங்களால் கட்ட முடியுமா என்பது சந்தேகமே! ராவணன் வந்தது விண்ணில் பறக்கும் விமானம் என்பதும் அதர்வ வேதத்தில் இந்த விமானம் செய்முறை/பறக்கும் முறை ஆகியன இருக்கிறது என்பதும் தெரியும். இது பற்றி முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் எழுதினேன். தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    5. @தி/கீதா! அறிவை வளர்த்துக் கொண்டால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகம் ஆகிவிடுமே! அதற்கெல்லாம் நம் தலைவர்கள் விடுவார்களா? அதனால் தானே தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளவே முடியாதபடிக்கு எல்லோரும் பாஸ்!//

      கீதாக்கா உண்மை உண்மை. அதை ஏன் கேட்கிறீர்கள். இதோ இப்போது இப்படிப் பாஸ் ஆன ஒரு 9 ஆம் வகுப்பு டு 10 ஆம் வகுப்பிற்கு வந்த மாணவனுக்கு (கற்றுக் கொள்ள வீட்டிற்கு வருகிறான்) சி பி எஸ் ஸி சிலபஸில் படிப்பவனுக்கு அடிப்படைக் கணிதமே இல்லாமல் தடுமாறுகிறான். எந்த சிலபஸ் படித்தாலும் மாணவர்கள் உழைக்காமல் முன்னேறுவது கடினம். பள்ளியில் கல்லூரியில் வேண்டுமானால் பாஸ் என்று போட்டுவிடலாம் ஆனால் வேலைக்கு வரும் போது திணறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. பெற்றோரும் பாஸ், மதிப்பெண் என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள் என்ன படித்திருக்கிறான்/ள் எப்படிப் படித்திருக்கிறான்/ள் என்பதைக் கவனிப்பதில்லை என்பதும் வருத்தமான விஷயம். பல பெற்றோரைக் கண்டுவருகிறோம்

      கீதா

      நீக்கு
    6. ஸ்ரீராம் முன்னோர்கள் மிக மிக அழகாக முன்னேறியிருந்தார்கள். உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன். ஆனால் தற்போதைய வளர்ச்சிக்கும் அந்த வளர்ச்சிக்கும் நிறைய நிறைய வித்தியாசம் இருக்கிறதே.

      அப்போதைய வளர்ச்சி அறிவுப்பூர்வமானது. நன்மையின் அடிப்படையில் இயங்கியது என்றே நினைக்கிறேன். இப்போதைய வளர்ச்சி வியாபாரமானது சுயநலமானது போட்டி உலகம், நியாயம் நேர்மை, பொதுநலன் உலகன் நலன் ஒழிந்த வளர்ச்சி என்பது என் புரிதல்.

      கீதா

      நீக்கு
    7. நீங்கள் முன்னோர்களை இழுத்தீர்கள் என்று சொன்னேனா நான் கீதா அக்கா?  

      கீதா..   உங்கள் கருத்தை நானும் டிட்டோ செய்கிறேன்.

      நீக்கு
  25. மதன் ஜோக்ஸ் செம.

    படகு ஜோக் போல சென்னையில் ட்ராஃபிக் கூடி வானில் சின்ன சின்ன பறக்கும் வண்டிகள் ஹெலிகாப்டர் போல போட்டிருந்த நினைவு.

    அதுவும் இன்னும் சில வருடங்களில் நிஜமாகலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பறக்கும் வண்டிகள் அல்லது இரண்டு மூன்று அடுக்கு சாலைகள்!

      நீக்கு
  26. புரோக்கர் புகோ..ஹாஹாஹா வெள்ளம், கயிறு கூட நிஜமாகிவிட்டது!

    நிஜமாகவே தீர்க்கத்தரிசிதான் மதன்!

    எல்லாமே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. முதல் பகுதிக்கு விட்டுப் போன கருத்து...

    நடப்பவர்களும் கூட இனி ஹெல்மெட் போட்டு நடக்க வேண்டும்! (இது முன்னரே எப்போதோ கருத்தில் நான் சொன்ன நினைவு...)

    ஏனென்றால் நடைபாதையில் நடப்பது கூட சிரமம் தான். இங்கும் அப்படித்தான் பல இடங்களில். நடைபாதை சிமென்ட் டைல்ஸ் இடையில் பெரிய ஓட்டை வேறு!!!

    வாக்கிங்க் செய்யறப்ப லாங்க் ஜம்ப்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றோ ன்று முதல் நாளோ ஒரு விலாபுரம் பார்த்தேன்.  இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் போடாதிருக்கிறார்கள்.  அவர்கள் சுற்றிலும் பார்க்கையில் பஸ்ஸில், ஆட்டோவில், காரில் எல்லோரும் ஹெல்மெட் போட்டிருக்கிறார்கள்!   இவர்களை அவர்கள் குறுகுறுவெனப் பார்க்கிறார்கள்!

      நீக்கு
    2. அட! அபப்டி எல்லாம் விளம்பரம் வந்திருக்கா!!

      கீதா

      நீக்கு
  28. சுண்டல், முறுக்கு, வடை மிளகாய் பஜ்ஜிகள் பிழைத்துப் போகட்டும்..

    ஆனால் ஐஸ்க்ரீம், பிஸ்ஸா ஐட்டங்கள் வாழ்றதுக்காக காதல் பண்றதாவது?.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் பாகுபாடு பார்பபதில்லை!!  நேரத்தைக் கடத்த ஏதோ ஒன்று!

      நீக்கு
  29. மதன்..மழை...அப்போது பார்த்த நினைவுகள் மனதிற்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  30. சமீபத்து ஆட்டோ விபத்தில் இன்னும் என் இடது கை சுவாதீனத்திற்கு வரவில்லை. வாசிக்கவே சங்கடமும் ஆத்திரமுமாக வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். ஒரு கையால் தட்டச்சுவது சிரமமான ஒன்று. :(

      நீக்கு
    2. அண்ணா..
      தங்களுக்கு விரைவில் நலம் விளைவதற்கு இறைவன் அருள் புரிவானாக..

      நீக்கு
    3. ஜீவி ஸார்..   மன்னிக்கவேண்டும்.  நானும் உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொன்னதோடு சரி..   வாய்ச்சொல் வீரனானேன்.  ஏதேதோ வேலைகள்..

      நீக்கு
    4. விரைவில் குணமடைவீர்கள் ஜீவி சார்.

      ஆட்டோ காரர்களால் எத்தனையோபேர் விபத்துக்குள்ளாகிறார்கள்

      நீக்கு
  31. 50 பின்னூட்டங்கள் தாண்டியாச்சு. அந்த இதிகு யார் கண்ணிலும் படவில்லை பாருங்கள். ஒரு விஷயத்தைச் சொல்லிச் செல்வதில்
    எத்தனை எழுத்து சாமர்த்தியங்கள்?
    வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஞ்சி தின்ற குரங்கை நான் காலம்பரவே கவனித்தேன். குறிப்பிடவில்லை. அவ்வளவே! :)

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஹாஹாஹா, இந்த விவிசி, அவசி, வவாபி என ஆரம்பிச்சு வைச்சதே மீ த க்ரேட்! ஆகவே நான் பாராட்டலைனாலும் ஶ்ரீராம் கோவிச்சுக்க மாட்டார். இதெல்லாம் நாங்க எழுதும்போது அடிக்கடி பயன்படுத்துவதே! :))))))

      நீக்கு
  32. ஹையா. ஜேசுதாஸ்!
    அச்சில் இருப்பதால் எபியில் யேசுதாஸ் ஆகாமல் தப்பித்தார்!

    பதிலளிநீக்கு
  33. ஸ்டீபன் ஹாக்கிங்கின் 2015 ஆண்டு கருத்து இன்றும் மெருகு குலையாமால் பளபளவென்று இருப்பதே அவர் சொன்னதின் சத்தியத்தை உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது. முதல் பகுதி பயமுறுத்துகிறது. உண்மைதான்.. இப்போதைய பயணங்கள் ஓரிடத்திற்கு சென்று சேரும் வரை பயத்திலேயே கழிகிறது. உங்கள் ஆட்டோக்காரர் விவரித்த டிராபிக் விபத்து காட்சிகள் பயங்கரமாக உள்ளது. அவ்வளவு நேரங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தால் அடிபட்டவரின் மன/உடல் நிலை எவ்வளவு கவலைக்குரியது என எண்ணும் போது பயணிக்கவே இன்னமும் கலக்கமும் வருகிறது.

    கவிதை வித்தியாசமாக நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள். காதலுக்கு இத்தனை பொருட்கள் உதவியாக இருந்திருகின்றன என்பதை காதலிக்காமல் கல்யாணம் செய்த பின் தங்கள் வாழ்க்கை துணைகளை காதலிப்பவர்கள் உணரும் போது கண்டிப்பாக அவர்களுக்குள் இதையெல்லாம் நாம் மிஸ் பண்ணி விட்டோமே என்றவொரு வருத்தம் எழும் போலும்.. அருமையான சிந்தனை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் படித்து, ரசித்து பாராட்டியிருப்பதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நீங்கள் சொன்னாலும், நான் அனைத்தையும் ரசித்து கருத்திடவில்லையே..என மறுபடி வந்தேன். சிவாஜியின் உதட்டசைவு உச்சரிப்புக்கு முன் எவருமே தோற்று விடுவார்கள். பாடல் வந்த கதை அருமை. மதன் ஜோக்குகள் அனைத்தும் இன்றைய காலத்திற்கென பொருத்தமாக உள்ளது. ஒருவேளை அவர் அப்போதைய அந்த மழை வெள்ள காலத்திலேயே இந்த ஜோக்குகளை வடிவமைத்திருக்கிறாரோ. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      தங்கள் பாஸ் முற்றிலும் ஜலதோஷத்திலிருந்து குணமடைந்து விட்டாரா? நலமடைய பிரார்த்தனைகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. இப்போது சிவாஜி பற்றிய கட்டுரையின் பக்க இணைப்பைத் தந்திருக்கிறேன்.  அதையும் படிக்கலாம் கமலா அக்கா.

      பாஸுக்கு ஜலதோஷம் இல்லை, முதலில், குளிர் ஜுரம், பின்னர் வயிற்றுப்போக்கு.  இன்று அது உச்சகட்டத்தை அடைந்து ஒரு கலக்கு கலக்கி பெரியவர் அருளால் இப்போது தேவலாம்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      உங்கள் பாஸின் உடல்நிலை தற்சமயம் குணமடைந்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். வயிற்றுப் போக்கு என்றால் பாவம் மிகவும் களைப்படைந்திருப்பார். நன்கு ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள்.கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பூரண குணமாக நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      தாங்கள் தந்த அந்த இணைப்புக்குப் சென்று படித்து ரசித்தேன். இந்த பாடல் கேள்விப்பட்டதில்லை. கவரிமான் படமும் பார்த்த நினைவில்லை. ஆனால் "பூப்போலே" என்ற பாடல் கேட்ட நினைவிருக்கிறது. அந்த இணைப்பிலும் இறுதியில் வேறு ஒரு படத்தின் கிளைமாக்ஸில் நடிக்க வேண்டிய சூழலில் இருந்த பிரமிளாவுக்கு நடிகர் திலகம் என்ன பதில் தந்தார் என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லையே.. அவரின் அப்போதைய நிலையறிந்து நல்லபடியாகத்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. @ஶ்ரீராம், வயிற்றுப் போக்கு எத்தனை வேதனை என்பதைப் பூரணமாய் உணர்ந்திருக்கேன். கவனமாக இருக்கச் சொல்லுங்க சுஜாவை! வெந்நீராகக்குடிக்கச் சொல்லுங்க. இப்போதைய சென்னை நீர் குடிக்க லாயக்கில்லை என முகநூலில் சிலர் சொல்லி இருந்தார்கள். இந்த ஸ்டமக் பக் (stomach bug) ஆங்காங்கே பரவிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். அனைவருமே கவனமாகச் சாப்பிடுங்கள். வெந்நீரே குடியுங்கள். காய்களை நன்றாகக் கழுவிப் பயன்படுத்துங்கள். கூடியவரை சூடாகச் சாப்பிடவும்.

      நீக்கு
    6. இன்று சற்று தேவலாம்.  நேற்று என்னை அலுவலகமே செல்ல வேண்டாம் என்று அரற்றியபோது கஷ்டமாக இருந்தது.  என்னால் போகாமல் இருக்க முடியாத நிலை.  நல்லவேளை பெரியவா அருள்.

      நீக்கு

  35. @ ஜீவி அண்ணா..

    // அந்த இதிகு யார் கண்ணிலும் படவில்லை பாருங்கள். ஒரு விஷயத்தைச் சொல்லிச் செல்வதில்
    எத்தனை எழுத்து சாமர்த்தியங்கள்?.. //

    ஈனா தீனா கூனா வை நானும் கவனித்தேன்..

    குரங்காரின் மனோபாவம் இருப்பதால் வேறு விசயத்துக்குத் தாவி விட்டது மனசு...

    ஆனாலும் இப்படியான வர்ணனைகள் எல்லாம் ஸ்ரீராம் அவர்களுக்கு தூசு மாதிரியான சமாச்சாரங்கள்..

    பதிலளிநீக்கு
  36. @ ஸ்ரீராம்..

    // இருக்கலாம். ஆனால் அபப்டி எல்லாம் யோசிப்பார்களா என்ன தமிழ் ரசிகர்கள்?.. //

    தமிழ் ரசிகர்கள் அல்லர்..
    அன்றைய ரசிகர்கள்!.. அது சரி..

    தமிழ் என்று நடிகை யாரும் இல்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை..  இல்லை...  தமிழ்ப்பட ரசிகர்கள் என்று சொல்லலாமோ!

      நீக்கு
  37. சென்னை போக்குவரத்து நினைத்தாலே நடுக்கம்தான்.
    இங்கும் பைக் ஓட்டுபவர்களால்தான் கூடிய விபத்துக்கள்.

    'பஜ்ஜி ஐஸ்கிரீம் காதலர்களால்தான் வியாபாரம்ஆதலால் காதல் செய்வோம்.' நிஜமே .

    பதிலளிநீக்கு
  38. கேரளத்திலும் பல சாலைகள் அகலம் குறைவாகத்தான் இருக்கும். ஹைவே தவிர. ஆனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் (திருவனந்தபுரத்திலும் தற்போது அப்படியாகிவிட்டது. மகன் அங்குதான் படிப்பதால் போய்வரும் போது தெரிகிறது) கண்டதுண்டு. பலரும் தாறுமாறாக ஓட்டுவதையும் கண்டதுண்டு. சென்னை என்றல்ல எல்லா ஊர்களிலும் சாலை விதிகள் சட்டத்திற்குட்பட்டு, என்ஃபோர்ஸ்டாக இருந்தால் விபத்துகள் கணிசமாகக் குறையும்.

    உங்கள் கவிதையை ரசித்தேன். மாறுபட்ட சிந்தனை. ஆதலால் காதல் செய்வீர் பக்குவப்பட்ட காதல் என்றால் பெற்றோர் பிழைத்தனர். இல்லை என்றால் பெற்றோருக்குக் கலக்கமே!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  உங்கள் மகன் சென்னையில்தான் படிக்கிறாரா?  சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் நெரிசல் மிகுந்தவை.

      நீக்கு
  39. //நாம் சரியாய்ப் போனாலும் முன்னால் பின்னால் அருகில் வருபவர்கள் ஒழுங்காய் வரவேண்டுமே...//

    ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.
    என் அண்ணன் வாகனத்தை பின்னால் வந்தவர் மோதியதால் என் அன்பு அண்ணனை இழந்தோம்.

    உறவினர் நின்று கொண்டு இருந்த வாகனத்தில் தெரியாமல் மோதியதால் அவர் இறந்தார்.

    சாலையில் பயணம் செய்யும் போது வேகத்தை விட விவேகமாக ஓட்ட வேண்டும்.
    அப்புறம் இறைவன் விட்ட வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..   நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டு தயாரா சம்பவங்களுமே தவிர்த்திருக்கக் கூடியவை என்று சொல்ல வேண்டும்.  விதி வலியது.

      நீக்கு
    2. வேதனையான செய்திகள். ஈடு செய்ய முடியாத இழப்பு.

      நீக்கு
  40. காதல் கவிதை, பாடல் விளக்கம் அருமை.

    மெய்ஞ்ஞானத்தோடு இணந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம் காக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் ஞானிகள்.
    மதன் தீர்க்கதரிசி என்பதை விட அன்று முதல் இன்று வரை மழை பெய்தால் நிலமை இப்படித்தான் இருக்கிறது என்று தெரிகிறது.

    இன்று ஒரு வீட்டில் பெரிய சதுரமாக வெடிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகி தண்ணீர் வேகமாய் ஓடுவதை காட்டினார்கள். வீடு கட்டி 9 வருடங்கள் தான் ஆகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று ஒரு வீட்டில் பெரிய சதுரமாக வெடிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகி தண்ணீர் வேகமாய் ஓடுவதை காட்டினார்கள்.// ஊரப்பாக்கத்திலா? அங்கு ஒரு கால்வாயை ஆக்கிரமித்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டியிருக்கிறார்கள். தரை தளம் உள்வாங்கி அடியில் கால்வாய் ஓடியதாம்.

      நீக்கு
    2. ஆமாம்.  ஊரப்பாக்கம் சம்பவம்!  வீடு கட்டுபவர்கள் / வாங்குபவர்களும் யோசிப்பதில்லை - நான் உட்பட.  நான் வயலில்தான் வீடு வாங்கி இருக்கிறேன்!  விற்பவர்களைக் கேட்கவே வேண்டாம்.  வியாபாரம்!

      நீக்கு
    3. ஶ்ரீராம், அம்பத்தூரில் எங்க வீடு இருந்த இடம்/இப்போது அடுக்குமாடிக்குடியிருப்பாக இருக்கும் இடம் ஒரு காலத்தில் வயல் தான். நெல் பயிரிட்டுக் கொண்டிருந்திருக்காங்க.

      நீக்கு
    4. ஜனத்தொகை பெருகப் பெருக வேறு வழியுமில்லை போல...!

      நீக்கு
  41. மதன் ஜோக்ஸ் ரசித்தேன். சென்னையில் போட், கேரளத்தில் வெள்ளத்தின் போதும் போட் எல்லாம் நனவாகியிருக்கிறதே. தீர்க்கதரிசிதான்.

    எஸ் பி முத்துராமன் சொல்லியிருக்கும் பாட்டு படத்தில் இருக்கிறதா? படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாட்டு கர்நாடக சங்கீதம் தானே? படத்தில் இருந்ததாக நினைவில்லை. ஒரு வேளை நான் மறந்திருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரோவபாரமா காட்சி படத்தில் இருக்கிறது.

      https://www.youtube.com/watch?v=Am656D_4uk0

      நீக்கு
  42. இவர் முகமும் இ தி கு ஆக மாறியது. தோல்வி ப்ளஸ் அசட்டுப் புன்னகையுடன் கைகாட்ட, அந்தக் கார் கிளம்பி தன் வழியே சென்றது.

    அந்தக் காரில் தங்க நிறத்தில் பார் அஸோஸியேஷன் என்று எழுதி அதன் எம்ப்ளத்துடன் ஒரு படம் ஒட்டப்பட்டிருந்தது.//

    மறுபடியும் காலையில் விட்டுப் போன கருத்து. (வேர்டில் அடித்து வைத்து விடுவதால் மிஸ் ஆனாலும் மீண்டும் எடுத்துவிடலாம்!! முஜாமு!)

    அடப் பாவிங்களா. சட்டமே சட்டத்திற்கு டிமிக்கி! இந்த நபர் எல்லாம் சட்டத்தின் காவலர்! நற நற.....வர கோபத்துக்கு...கர்ர்ர்ர்ர்ர்...போ கா எதுக்கு இதிகு ஆகணும்? வீ வே அல்லது பா பு அல்லது சீபாசி ஆக வேண்டாமோ? ஹூம். அப்புறம் அவர் சிக்னலில் நிற்க முடியாதோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயும் புலியும் சீறிப்பாயும் சிங்கமும் சரி... வீ வே வீறு கொண்ட வேங்கை என்பது மெதுவாக மனதுக்குள் வந்தது!

      நீக்கு
  43. பிழைத்தோம். எங்கள் ஆட்டோக்காரர் அந்த ஆட்டோக்காரனை "பைத்தியக்காரா..." என்று பெரிய்ய எழுத்துகளில் திட்டி விட்டுத் தாண்டி வந்தார்!//

    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது! நல்லகாலம்.

    நாமே ஓட்டினாலும் பக் பக். வீட்டில் சொல்வதுண்டே நீ எதுக்கு வண்டி எடுத்து ரிஸ்க் எடுக்கறே பேசாம ஊபர் ஓலா டாக்சி அல்லது ஆட்டோ ல போனா டென்ஷன் இல்லாம போலாமே...சுகமாய்ட்டு!! இது பலரும் சொல்வது

    ஆ ஆ விவரம் இல்லாம அட்வைஸ். டென்ஷன் இல்லாம என்று....நாம ஓட்டறத விட ரிஸ்க் இன்னும் ஜாஸ்தி வண்டில ஏறி இறங்கும் வரை வயிற்றில் அமிலம் விளையாடுமே.
    அதுவும் ஓட்டுநர்களை அவர்கள் ஓட்டுவதைப் பார்த்தால் எனக்குத் தோன்றும் யப்பா எங்கிட்ட லைசன்ஸ் இருக்கு..ஓட்டவும் செய்வேன்... கொஞ்சம் அப்பால நகருங்க நானே ஓட்டிடறேன் என்று சொல்லத் தோன்றிய தருணங்கள் பல. அதுவும் சமீபத்திய பயணத்தில் லக்கேஜ் இருந்ததால் கால் டாக்சி. ஆட்டோ வைத்துக் கொள்ள வேண்டியதானதால்...

    எனக்கு எப்பவாச்சும்தான் ஆனால் ஸ்ரீராம் உங்களுக்குத் தினமுமே டென்ஷன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் டென்ஷன் எல்லாம் ஆறதில்லை கீதா...   பழகி விட்டது.  மெட்ரோ காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொறுமையை சோதித்து பிபியை ஏற்றுகிறது!

      நீக்கு
  44. சென்னை மட்டுமல்ல, பெங்களூர், திருச்சி போன்ற ஊர்களிலும் பொறுப்பில்லாமல்தான் ஓட்டுகிறார்கள். திருச்சி வாகன ஓட்டிகளுக்கு திரும்பும் பொழுது சிக்னல் போட வேண்டும் என்பது தெரியாதோ என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டி நேரா போயிகிட்டே இருப்பாங்களா?!!

      நீக்கு
  45. தொழில் நுட்ப வளர்ச்சி, சமுதாய வீழ்ச்சி இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விதத்தில் பானுமதி சொல்வது உண்மையே! தொழில் நுட்பம் முக்கியமாய் ஐடி கலாசாரம் நாட்டின் அடிப்படையான கலாசாரத்தையும் பண்புகளையும் உலுக்கி விட்டது! மெல்ல மெல்ல நாட்டின் அடிப்படைக் கலாசாரமஏ காணாமல் போயிடுமோ எனக் கவலையும் வருகிறது.

      நீக்கு
  46. 'ஆதலினால் காதல் செய்வீர்' குயில் பாட்டின் வரிகள். இந்த தலைப்பில் சுஜாதா ஒரு அருமையான நகைச்சுவை தொடர்கதை குமுதத்தில் எழுதினார். அதைப் பற்றிதான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வார்த்தையை மட்டும் களவாடி கவிதை முயற்சியில் கலந்து கட்டி எழுதினது!

      நீக்கு
  47. சமீபத்தில் யூ ட்யூபில் கார்டூனிஸ்ட் மதனின் நேர்காணல் பார்த்தேன். ஆ.வி.ஆசிரியர் "பாலன் அவர்களுக்கு நகைச்சுவை மிகவும் பிடிக்கும், எனக்கு ஜோக்காக கொட்டும்" என்றார்.

    பதிலளிநீக்கு
  48. கவரிமான் படம் வெளியான புதிதில் 'ப்ரோவ பாரமா' பாடல் இருந்தது. படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருந்ததாலும், நீளம் கருதியும் வெட்டப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி பாடல்களை தமிழ் ரசிகர்கள் ரசிப்பதில்லை.  சிந்துபைரவி விவி.

      நீக்கு
  49. இளைஞர்கள் சாலையில் அதிவேக பைக்கில் பறப்பதைப் பார்க்கும்போது, மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நெரிசலான சாலைகளிலும் ரேஸ் விடுகிறார்கள். குறிப்பாக பணக்கார இளைஞர்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!