ஞாயிறு, 25 அக்டோபர், 2009

இலக்கிய ரசனை

அந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் இலக்கிய ரசனைக்காக ஓரிரு பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும்.  கம்பர் தரும் காட்சி, சித்திர ராமாயணம் என்று ரசிகமணி டி.கே.சி.  அல்லது பி.ஸ்ரீ சுவைபட எழுதுவர். இப்போது குற்றுடை தரித்த சிற்றிடை செல்விகள் படங்கள் போடவே இடம் போதவில்லை. இலக்கியத்தைக் கட்டிக் கொண்டு யார் அழுவர்? 

ஆனாலும் நம் பாரம்பரிய செல்வம் ஆகிய இலக்கியங்களில் இளைய தலைமுறைக்கு இன்ட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப போர் அடிக்காமல் கொஞ்சம் ரசிக்கலாமா?  சில செய்திகள் பலருக்கும் தெரிந்தும் வெகு சிலருக்கு தெரியாமலும் இருக்கும். தெரிந்தோர் புரிந்தோர் தெரியாதோர் நலன் கருதி பொறுத்தருள்க.  அவ்வப்போது இப்படியாக எழுதலாம் என்று எண்ணம்.  பிடிக்காவிட்டால் உரிய முறையில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும்!! 
  •  ***
ஆரை என்று ஒரு சிறு செடி. மூன்று அங்குல உயரம் இருக்கும். வெந்தயக் கீரை அளவினது.  மேலே சரியாக நான்கே நான்கு இலைகள் சமதளத்தில் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும்.
 
அவ்வையாருக்கும் வேறு ஒரு புலவருக்கும் சதா போட்டி.  ஓட்டக் கூத்தர் அல்லது கம்பர் என்று கர்ண பரம்பரையாகச் சொல்வர். 
 
அவ்வையைக் கண்டு அந்தப புலவர்
 
"ஒற்றைக் காலடி நாலிலைப் பந்தரடி"
 
 என்று இளக்காரமாக விடுகதை போட்டாராம். 
 
அவ்வை சொன்ன பதில் பாட்டு இதோ:
 
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேல்
கூரை இல்லா வீடே குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது.
 
 
தமிழ் எழுத்துக்களில் எண்களை எழுதும்போது அ என்று எழுதினால் எட்டு. வ என்று எழுதினால் கால்.  அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் அட அவலட்சணமே என்று பொருள்.
 
எமனேறும் பரி எருமை மாடு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
 பெரியம்மை என்றால் மூதேவி. ஸ்ரீதேவி (நடிகை அல்ல மகாலக்ஷ்மி) தங்கை என்றும் மூதேவி அக்கா என்றும் சொல்வர்.  மூதேவியின் வாகனம் கழுதை.
 
முட்டம் என்றால் வீட்டின் மேல் பகுதியில் ஓடு வேயப் போடப் படும் கூரைப் பகுதி. முட்டம் மேல் கூரை இல்லா வீடு குட்டிச் சுவர்தான்.
 
ஆரையடா சொன்னாய் என்றால் ஆரைக் கீரையை சொன்னாய் என்றும் யாரைப் பார்த்தடா இப்படிப் பேசினாய் என்றும் கொள்ளலாம்.
 
அட அவலட்சணக் கழுதையே, எருமை மாடே யாரைப் பார்த்து சொன்னாய், நீ சொன்னது ஆரைக் கீரையை என்று பதில் தந்தாளாம் அவ்வை. 
 

 

5 கருத்துகள்:

  1. ஔவையாரோடு விவாதித்த அந்தப் புலவர் எனதபிமான காளமேகம். சிலேடைக்கும் குசும்புக்கும் பெயர் போனவர் அவர்தான்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. விவாதங்கள் ,சிலேடைகளைக்கூட இலக்கியத்தில் நடத்தியிருக்கிறார்களே !

    பதிலளிநீக்கு
  3. //"அந்தப் புலவர் எனதபிமான காளமேகம். சிலேடைக்கும் குசும்புக்கும் பெயர் போனவர் அவர்தான்"//

    அகோ வாரும் காளமேக ரசிகரே... உங்கள் இதயம் இன்னும் காளமேகத்தின் அடுத்த கவிதையை ஆராயவில்லையே....எப்போ...

    வரும் ஹேமா.... ஒவ்வொன்றாய் கொடுக்க எண்ணியுள்ளோம்....அடிக்கடி வருக...ஆதரவு தருக... உங்கள் "சேமித்த கணங்களில்" எங்களுக்கும் கொஞ்சம் தருக....

    பதிலளிநீக்கு
  4. ௮ ௧/௪ -- ஹி ஹி -- எட்டேகால் என்று கூகிள் தமிழில் அடிச்சுப் பாத்தேங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!